CJ for You: in life

in life

Showing posts with label in life. Show all posts
Showing posts with label in life. Show all posts

Why getting wrong result and difficulties as almost in every action in my life?


என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?

பதில்:

பெரும்பாலான அன்பர்களின் கருத்தாகவே இதை எடுத்துக் கொள்ளமுடியும். சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லிக்கொள்ளாமல் தனக்குள் புலம்பித் தவிப்பார்கள். சிலர்,  என் தலைவிதியே என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நாம் எதைச் செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறதா? அது உண்மைதானா? பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ‘முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுதான் அது. உங்களுடைய எந்த ஒரு செயலிலும், அதனுடைய தொடக்கம் சரியாக அமையவில்லை, மனம் ஒப்பவில்லை, குழப்பத்தோடு தொடங்குகிறது என்றால், அந்த செயலும், அதனுடைய விளைவும் நிச்சயமாக பிரச்சனைக்குரியதாகவோ, துன்பம் தருவதாகவோதான் அமையும் என்பது உறுதி. இயற்கையின் எந்த ஒரு செயலிலும், அதன் விளைவிலும் ஒற்றுமை, நேர்மை, ஒழுங்கு, காலம் என்பது அடங்கியிருக்கிறது. இதில் எல்லாவற்றிலுமே ‘துன்பம்’ எழுவதில்லை. ஆனால் நாம்தான் துன்பம் மட்டுமே எழுகிறது என்று புலம்பித்தவிக்கிறோம்.

இங்கே இரண்டு முக்கிய குறிப்புக்களை காணலாம். 1) நாமாக ஏதேனும் விளைவை நினைத்துக்கொண்டு, நம்முடைய செயலை செய்வது. 2) இதைச் செய்தல் இன்னதுதான் விளையும் என்ற எதிர்பார்ப்போடு செய்வது ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எப்படி ஒரு செயலை செய்வதற்கு ஆயத்தமாகிறீர்கள்? என்பதில்தான் உங்களுக்கான பதில் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை நீங்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பாகவும், சிந்தனை செய்துகொள்ளுங்கள். ‘இந்த இரண்டும் என்னிடம் இல்லை’ என்ற தெளிவான நிலையில் செயலை செய்ய தயாராகுங்கள்.

அடுத்ததாக, எப்போதும் ஒரு செயலை அனுபவமாக செய்யுங்கள். அனுபவம் இல்லை என்றால், அந்த செயலை செய்துவிட்டு, அதையே அனுபவமாக பெறுங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விளக்கம் பெற்று, தெளிவாக, கவனமாக, சிறப்பாக அடுத்தபடி செய்யுங்கள். இந்த இடத்தில் அந்த விளைவு தவறாக, துன்பமாக இருக்குமானல், அதை உடனடியாக திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தும் அதேபோல செய்யாதீர்கள்.

எந்த ஒரு செயல் செய்தாலும், உங்கள் உடல், மனம் விழிப்புணர்வோடும், ஒன்றுக்கொண்டு தொடர்புடையதாகவும் செய்யுங்கள். ஏனோதானோ என்று செய்யாதீர்கள். அசால்ட் என்று சொல்லப்படும் நிலையிலும் அச்செயலை செய்யாதீர்கள். மேற்கண்ட விளக்கங்களை நீங்கள் தெளிவு செய்துகொண்டால், ‘என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?’ என்று கேட்பதற்கு இடமிருக்காது.

வாழ்க வளமுடன்
-

Why I have a problems even nothing do not mistake and helping to others in life?


என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?


பதில்:

உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?

கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள்.  அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!

வாழ்க வளமுடன்

-

Why need yoga, we need to life like as others, who free from on yoga in life?


மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான சந்தேகம் தான். ஒரு நூறு அன்பர்களை எடுத்துக்கொண்டால், அதில் யாரேனும் ஒருவருக்குத்தான், நிச்சயமாக யோகத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பது உண்மையே. அந்த ஒருவரை மற்ற 99 அன்பர்களும் தடுத்து நிறுத்திவிடுவார்கள், சிலவேளை அவர்களை பார்த்து அந்த ஒருவரும், யோகத்தை விட்டுவிடுவார். பெரும்பாலும் இதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த ஒருநபர், இத்தனை பேரும் யோகம் என்பதே அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அதைக்குறித்து ஒரு விபரமும் தெரிந்து கொள்ளாமல், வழக்கமான உலக வாழ்க்கையில் வாழ்கிறார்கள். நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அந்த நிலையில் நான் மட்டும் ஏன்? எதற்காக? யோகம் வேண்டும், அதில் இணையவேண்டும்? என்று நினைக்கிறேன் என்று குழப்பம் எழுந்துவிடுகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தில் விருப்பமும், அதில் இணைந்து உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமும், தானாக, உங்களுக்குள்ளாக எழவேண்டும். அது உங்களுடைய மனதை, சிந்தனையை இயல்பாக தூண்டவேண்டும். யாரோ சொன்னார்கள், இவர் சொன்னார், அவர் சொன்னார், முயற்சிக்கிறேன் என்றெல்லாம் யோகத்தில் இணையமுடியாது, இணைந்தாலும் கூட அதை தொடரவும் முடியாது. ஒரு நாளோ, ஒருவாரமோ, ஒருமாதமோ செய்துவிட்டு முழுமையாக அதை கைவிட்டு போய்விடுவார் என்பதுதான் உண்மை.

உலகில் பெரும்பாலோர்க்கு கடவுள் நம்பிக்கையே, அவர்களுடைய சிதைந்து போய் இருப்பதால், யோகம் குறித்த எந்த நல்ல எண்ணமும் கருத்தும் இருக்காது என்றே கருதவேண்டும். உண்மையில் கடவுள் (கட+உள்) என்ற தத்துவமும், நம்பிக்கையும் உண்மையாகவேதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பகல் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று வாதாடும் அன்பர்களை நாம் என்ன செய்துவிடமுடியும்? அதுபோலவேதான் நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 99 அன்பர்களும் இருப்பார்கள். இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், உங்கள் வாழ்க்கையையும், அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பணம், பொருள், வசதி அதுவெல்லாம் கணக்கில் இல்லை. அது யார்வேண்டுமானாலும், தகுந்த காலத்தில் சம்பாத்தியமாக கொண்டுவரலாம். அதற்கு தேவை உழைப்பும், விழிப்புணர்வும், முயற்சியும், ஆர்வமும் மட்டுமே. பரம்பரையாக செல்வாக்கோடு இருப்பவர், இப்போதும் உங்களைவிட பணக்காரராக் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதனால் அந்த பொருள்நிலை செல்வாக்கை விலக்கிவிட்டு, அவர்களுடை எண்ணம், சொல், செயல், வழக்கம், பழக்கம், அணுகுமுறை, உதவும் குணம், நிறைவு, அமைதி என்பதெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நாளையும், தன்னோடு இருக்கும் ஒவ்வொரு நபரையும் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள். 

உண்மையாகவே, இந்த 99 அன்பர்களைவிட நீங்கள், வித்தியாசமாக, உள்ளுணர்வில் இருப்பதை மிக எளிதாக கண்டுகொள்வீர்கள். யோகத்தில் நீங்கள் இணைந்துகொண்டால், மிக எளிமையாக அளவு, முறை கண்ட வாழ்வில், தன்னை அறிந்து, இறை உண்மையும் அறிந்து, நிறைவாக, நிம்மதியாக, என்றும் மகிழ்வோடு வாழ்ந்து அதை பிறருக்கும் பகிர்ந்து வாழமுடியுமே?!

மேலும் பிறவி நோக்கமும் நிறைவேறிவிடும். இதுவரை இருந்துவந்த கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களும், உங்கள் வழி வரும் தலைமுறையினரும் கூட நிறைவடைவார்கள். இயற்கையின் உன்னதமும் உங்களுக்கு புரிந்துவிடும். எனவே, யோகம் குறித்தான சிந்தனையில், விழிப்பாக இருங்கள்.

உடனே யோகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன், கட்டாயப்படுத்தவும் மாட்டேன். அதை நீங்களே முடிவு செய்யலாம். காலமும் உங்களுக்கு துணை செய்யும்.

வாழ்க வளமுடன்.
-

Why do we have problems with our relationships?


நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


பதில்:

நீங்கள் சொல்வது ஓரளவில் உண்மைதான். நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுகிறது. எல்லோருடைய குடும்ப வாழ்விலும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லமாட்டார்கள். இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல், குடும்பம் என்ற அமைப்பும் சிதறி, கலைந்துபோனதும் உண்டு. இதனால் ஊரைவிட்டு விலகி வேறு ஊருக்குச் சென்று வாழ்பவர்களும் உண்டு. அதனால்தான் பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியவருகிறது.

உறவுகள், சொந்தம், பந்தம் என்பது ஏதேனும் ஒருவகையில், பாதுகாப்பும், அணுசரணையும் கிடைக்கும் என்பதற்காகவே முன்னோர்கள் உருவாக்கிய குடும்பம் என்ற வாழ்க்கை முறையில் அமைந்தது. அந்தக்காலத்தில் கூட்டுக் குடும்பமும் இருந்தது என்பதை மறவாதீர். இன்றைய கால திருமண விழா சாப்பாடு போலவே, ஒவ்வொடு கூட்டுக் குடும்ப வீட்டிலும் நிகழ்ந்து வந்தது என்று சொன்னால் நாம் வியந்து நிற்போம் என்பதே உண்மை.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால், அந்த வீடே அவருக்கு உதவும். ஒரு குழந்தைக்கு பிரச்சனை என்றால் எல்லோருமே கலங்கி தவிப்பார்கள். அப்படியான உறவுகள் சூழ்ந்த வாழ்க்கைமுறை அது. ஆனால் இன்றோ,  கணவன், மனைவி, குழந்தை என்ற மூவர் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட்டது. அந்த குழந்தை வளர்ந்து ஆளாகி நின்றால், அவரின் திருமணம் வழியாக ஒரு உறவு உருவாகிவிடும். ஆனால், அவரும், அவரின் வாழ்க்கைத்துணையும் தனிக்குடும்பமாக உருவாகிவிடுவார்கள். இப்படியான சிதறிய, சுருங்கிய குடும்ப வாழ்க்கையிலும்,  நம்மோடு இருக்கும் உறவுகள் சிக்கலை ஏற்படுத்துவதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் நாம்தான். அந்த அளவிற்கு அவர்களோடு நம்மை வெளிப்படுத்திக் கொண்டோம். அந்த வெளிப்பாடுகளில், நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, சமயம் பார்த்து நம் காலை வாருகிறார்கள்.

எனவே நாம் செய்யவேண்டியது, நம்மைக்குறித்து என்ன பிறரிடம் பகிரவேண்டுமோ, அதை மட்டுமே பகிரவேண்டும். மற்றதை ரகசியம் காக்கவும் வேண்டும். உங்கள் முடிவு சரியாக இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும்.  உங்கள் முடிவு சரியாக் இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும். உங்கள் செயல் தாமதிக்காது, உடனடியாக நிறைவேற்றிடவும் வேண்டும். இன்று நாளை என்று நாட்களை மட்டுமல்ல, நேரத்தையும் வீணாக கடத்தக்கூடாது.

இன்னொருவரின் துணை, உதவி தேவையில்லை என்பதை உங்கள் திட்டத்திலேயே உருவாக்கி இருக்கவேண்டும். ஆலோசனை கேட்கலாம் ஆனால் அவர்கள் முடிவில், உறவுகளின் முடிவில் பயணிக்கக் கூடாது. அதேநேரத்தில் ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று அவர்களை உதாசீனம் செய்யவும் கூடாது. ஏனென்றால் உறவுகள் எப்போதும் நமக்கு தேவைதான்!

இப்படியான உறவு சிக்கல் எழுந்தால், நீங்கள் அவர்களை ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்துங்கள். தனியாக சிக்கல் குறித்து ஆராயுங்கள். அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவாருங்கள். எளிதாக தீர்க்கலாம்!

வாழ்க வளமுடன்.

-

How we try to control who always do correction meaningless?


நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?


பதில்:

நம்மோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, நம் குடும்பத்தில் இருப்பவர்களே நம்மை குறை சொல்லுவார்கள் தானே?! அது இயல்புதான். பொதுவாகவே, நீ எனக்கு பின்னால்தான் பிறந்தாய், அதனால் உனக்கு அவ்வளவு அனுபவம் போதாது. என்னிடம் இருந்து கற்றுக்கொள் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். இல்லையென்றால், சில வயது கூடியவர்கள், படிப்பில் உயர்வு, பொருள் பணம் செல்வாக்கில் உயர்ந்தவர்கள் அப்படி மற்றவர்களை குறை கூறுவதை வழக்கமாகவே வைத்திருப்பார்கள். இவர்களின் அன்றாட வேலையே, யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அதுதான் அவர்களுக்கு திருப்தி அளிக்கும். ஒரு நீங்கள் உயர்ந்தால், அதாவது உங்கள் திறமையில் நீங்கள் உயர்ந்தால் கூட, உடனே, ‘பார்த்தாயா நான் சொல்லித்தான் நீ உயர்ந்தாய்’ என்று சொல்லுவார்கள். இதையே மற்றவர்களிடம் சொல்லியும் மகிழ்வார்கள்.

இவர்களை என்ன செய்யமுடியும்? நேரடியாக இவர்களிடம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஏனென்றால், நாம் சொல்லுவதையும், விளக்கம் தருவதையும் ஏற்க மாட்டார்கள். சில வேளைகளில் நாம் இவர்களை வேண்டவே வேண்டாம் என்று தவிர்க்கவும் முடியாது. அத்தகைய நிலையில், நீங்கள் அவர் சொல்லுவதை அப்படியே கடந்து போய்விட வேண்டியதுதான். காதால் கேட்டாலும் கேட்காதது போல விட்டுவிட வேண்டும். இப்படி சொல்லுகிறாரே என்று உங்கள் மறுமொழி இருக்கவேண்டியதில்லை. அவரைக்குறித்தும், அவரின் குறை வார்த்தைகளை குறித்தும் கவனம் கொள்ளத் தேவையில்லை. இதை அவருக்கு தெரியாமல், அறியாமல் செய்யவேண்டியது முக்கியம்.

இதுபோலவே நீங்களும் வேறு யாரையும், குறை சொல்லாமல் இருக்கவேண்டியது அவசியம். அந்த பழக்கத்தை உடனே தொடருங்கள். உங்களிடம் இருந்து பாராட்டு மட்டுமே கிடைக்கும் என்பதுபோல ஒரு பிம்பம் உருவாக்கிக் கொண்டால் நல்லதுதான். அது உங்களுக்கு நற்பெயரை உருவாக்கித்தரும். அப்படியில்லாமல், நீங்களும் மற்றவர்களை குறை கூற ஆரம்பித்தால், அவர்கள் உங்களை தனித்து இயங்கச் செய்துவிடலாம். தீடீரென்று ஏதேனும் உதவி கேட்டால் கூட எதும் செய்ய முன்வர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

இந்தமாதிரியாக குறை சொல்லுபவர்களை எப்படி சரி செய்வது என்று கேட்டீர்கள். அது உங்களால் முடியாது. யாராலும் முடியாது. சம்பந்தப்பட்ட அவரேதான் அவரை திருத்திக் கொள்ள முடியும். அவர் உங்களுக்கு மிக நெருக்கமானவர், வேண்டியவர், குடும்பத்தில் ஒருவர் என்றால், அவரை நீங்கள் பார்க்கும் பொழுதும், நினைக்கும் பொழுதும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி வாருங்கள். இந்த வாழ்த்து உள்முகமாக அவரை மாற்றியமைக்கும் என்பது உறுதி. ஏதேனும் ஒருவகையில் உங்களுக்கும் அவருக்குமான இந்த குறை சொல்லும் நிலையை மாற்றி அமைக்கும். உங்களைக் குறித்த ஒரு புரிதல் அவருக்கு கிடைத்துவிடும். அவராகவே குறை சொல்லுவதை விட்டுவிடக்கூடும். எனவே இதற்காக நீங்கள் வேறெதும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு பாதகமான விளைவையும் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.

-

Why unable to complete and get the obstacles on action based on thought?


நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?

பதில்:

நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.

உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம். 

இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.

வாழ்க வளமுடன்.

-

Nothing miracle not happen by joining and way of yoga, then way?


யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


பதில்:

இந்த கேள்விக்கு எதிர்வினையாக, நான் புன்முறுவல் செய்கிறேன். உங்கள் கேள்வியை, அதனுள் இருக்கும் ஏக்கத்தை வரவேற்கிறேன். அதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதையும், அதனால் எழுந்த ஏமாற்றமும் கலந்திருப்பதை அறிகிறேன். 

உங்கள் கேள்வியின் வழியாக, நீங்கள் மிகப்பெரும் உண்மையை, பிரமாண்டத்தை, ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை, மாயாஜாலத்தை அறியாமல் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதில் பயணிக்கிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள். ஆனால் பயணம் எத்தகையது என்று உங்களுக்கே புரியாமலும் இருக்கிறீர்கள். நேரிலே நாம் பார்த்துக் கொள்ளாததால் அந்த நிலையை என்னாலும் சொல்ல முடியவில்லை, எனினும் யூகிக்க முடியும்.

சரி, இப்போது உங்கள் அளவிற்கு நானும் இறங்கி நிற்கிறேன். உங்களுக்கு என்ன அதிசயம் நடக்கவேண்டும்? 

நினைத்த உடனே அந்தப்பொருள் உங்கள் கைகளில் தோன்றவேண்டுமா? ஒரு மலர் வேண்டுமென்றால், மலர் வேண்டும். பணம் வேண்டும் என்றால் பணம் வேண்டும். யாராவது வந்து உங்கள் கைகளில் திணித்துவிட்டு, 

‘இதை உங்கள் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள், திருப்பித் தரவேண்டாம்’ என்று சொல்லவேண்டுமா?

‘உங்களைப்போல ஒரு நல்ல மனிதர், உயர்ந்த மனிதர், என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’ என்று யாராவது பாராட்ட வேண்டுமா?

’உங்களை என் வாழ்க்கத்துணைவராக பெற்றது என் பாக்கியம்’ என்று வாழ்க்கைத்துணைவர் போற்றி வணங்க வேண்டுமா?

‘அப்பா, என் வாழ்வில் நீங்கள் பெரும் அதிசயம், உறுதுணை, நன்றி’ என்று பிள்ளைகள் பாராட்ட வேண்டுமா?

எனக்கு இருக்கும் நோய், துன்பம், பிரச்சனை உடனே தீரவேண்டும், அதுபோல மற்றவர்களின் நோய், துன்பம், பிரச்சனை என் மூலமாக தீர வேண்டும், அதன் வழியே உலகப்புகழ் பெறவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஊரும், உலகமும் உங்களுக்கு மட்டுமே உதவவேண்டும், போற்றவேண்டும், மரியாதை செலுத்தவேண்டும், வணங்கவும் வேண்டும் என்கிறீர்களா?

கோடிக்கணக்கான சொத்தும், எண்ணற்ற வைரம், தங்க கட்டிகளும், ஆபரணங்களும், நிலமும், வீடும், தோட்டமும், காரும், ஹெலிகாப்டரும், விமானமும், தனித்தீவும் வேண்டும் என்கிறீர்களா? இல்லை இந்த பூமி போல வேறேதும் உங்களுக்கென்று வேண்டுமா?

இப்படி எல்லாம் நடக்கவேண்டும், அதற்கு இந்த இறையாற்றல் உதவவேண்டும், அதற்காகவே நான் யோகத்தில் இணைந்துகொண்டேன். வேறெதும் எனக்கு தேவையில்லை என்று எதிர்பார்ப்போடுதான் நீங்கள் இங்கே, இந்த உலகில், இந்தப்பிறவியில் வாழ்கிறீர்களா?

போதுமா?

இப்போது இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள், பதில் தெரியவில்லை என்றால் சிந்தித்து பதிலை திரட்டுங்கள். கேட்கலாமா?

இந்த உலகில் எப்படி பிறந்தீர்கள்?

அதில் உங்கள் ஆர்வமும், முயற்சியும், உழைப்பும், விருப்பமும் என்ன?

வேறு எதற்காக பிறந்தீர்கள்?

பிறப்பதற்கு முன்னால் எங்கிருந்தீர்கள்?

பிறந்தபொழுது ஒரு முழம் இருந்த நீங்கள் இன்று கிட்டதட்ட ஆறு அடிக்கு வளர்ந்தது எப்படி?

நீங்கள் பிறந்தது, தவழ்ந்தது, நடக்கமுயற்சித்த மூன்று வயதுக்கு முன்னதான நினைவுகளை ஏன் சொல்லமுடியவில்லை?

உங்கள் தாத்தா, பாட்டி, அவர்களின் தாத்தா, பாட்டி இப்போது எங்கே?!

இதற்கு முன் பேரரசர்களும், மன்னர்களும், கோடீஸ்வர்களும், பெரும் உலக பணக்கார்களும் என்னவானார்கள்? எங்கே போனார்கள்? அவ்வளவு பெரிய நாட்டையும், பொன்னும், பொருளும்,  பணமும், தன் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டுதான் போனார்களா?

வாழும் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னவாக மாறப்போகிறீர்கள்? எங்கே போவீர்கள்?

இந்த அதிசயத்தை, மாயாஜாலத்தை நிகழ்த்துவது யார்? இதைவிட பெரிய அதிசயம், மாயாஜாலம் உங்களுக்கு வேண்டுமா?

சிந்தித்துப்பார்த்து விடை தேடுங்கள், விடை கிடைக்கவில்லை என்றால் ‘யோகத்தின்’ வழியாக முயற்சியுங்கள்.

உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வதுதான் யோகமா? என்று குறுக்கு கேள்வி கேட்காமல் மேலே கேட்டவற்றிற்கு முதலில் சிந்தனை செய்யுங்கள். அதிலே இந்த கேள்விக்கான விடையும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்.

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.