CJ for You: being with

being with

Showing posts with label being with. Show all posts
Showing posts with label being with. Show all posts

How long we need to travel with the Guru, the master in Yoga?


யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.





கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

பதில்:
மிகச்சிறந்த கேள்வி என்று கருதுகிறேன். பெரும்பாலான அன்பர்கள் குருவின் மீது பெரும்மதிப்பு கொண்டு, அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதுமே குருவோடு பயணிப்பார்கள் என்பது பொதுவானது. அது உண்மையும், இயல்பானதும் ஆகும். இத்தகைய மதிப்பு உலகில் உள்ள மற்ற எந்த தலைவருக்கும், பிற சிறப்பான மனிதருக்கும் ஈடு ஆகாத சிறப்பு பெற்றிருக்கும் என்பதும் உண்மை. என்றாலும் ஏறக்குறைய ஒன்றுபோல தோன்றும். மனிதர்களுக்கு என்றுமே தன்னை வழிநடத்தும் உயர்ந்த மனிதருக்கு, மதிப்பு தந்து, ஒழுங்குதல் இயல்பானது. அது யோகத்தில் இன்னமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வாழ்நாளில் நம்மை உயர்த்தி, பிறவிக்கடன் தீர்த்து, தன்னையறிதலையும், இறையுணர்வையும் பெற்றுத்தருபவர் ஆயிற்றே!

நாம் ஏதேனும் சுற்றுலாவிற்கு சென்றால் அங்கே ஒருவழிகாட்டி இருப்பார், அவர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் இருப்பார். தனியாக படிப்பறிவு இல்லாவிட்டாலும், பலமொழிகள் பேசி எல்லாமக்களுக்கும் வழிகாட்டியாக துணைசெய்து வருவார். இப்போது அதுவும் ஒரு கல்லூரி பாடமாகவும் உள்ளது. அந்த வழிகாட்டி, நாம் எங்கே ஆரம்பித்தோமோ, அங்கே வந்து முடிக்கும் வரை துணையாக இருப்பார், அதன்பிறகு அவர் பணி முடிந்துவிடும். அடுத்த நபர்களை நோக்கி அவர், நகர்ந்துவிடுவார். வேறு சில உலகியல், வாழ்வியல், மனித முன்னேற்ற தலைவர்களும் அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேலாக அவரின் துணை நகர்ந்து, வேறு சில புதியவர்களுக்கு நகர்ந்துவிடும்.

ஆனால் யோகசாதனையில், குருவின் துணை என்றுமே நகர்ந்தும் விடாது, அகன்றும் விடாது. ஒருவேளை நாம் குருவை கைவிட்டால் கூட, அவரின் வார்த்தைகளும், அக்கறைகளும் நம்மைவிட்டு பிரியாது என்பதே உண்மை. இதை நீங்கள் அனுபவமாகவும் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இதில், இந்த துணையிருப்பில், குருவும், மற்ற எந்த தலைவர்களும் நம்முடைய எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்னோடு இரு என்று கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். அங்கே ஒரு தனிமனித சுதந்திரமும் இருக்கும். சில உலகியல், வாழ்வியல் தலைவர்கள் விதிவிலக்கு.

அந்தக்கால யோகசாதனையில், குருவோடு பயணித்தல் என்பது, குருவின் காலம் முதல், அவருக்குப் பின்னாலும், அதை ஏற்று வழிநடத்தும் வகையில் இருந்தது. குரு என்ற உயர்ந்த தன்மை என்ற இடம், அடுத்து அடுத்து என்ற நிலையில் மட்டுமே இருந்துவந்தது. எனினும் காலமாற்றத்தில், ஒரு யோகசாதனையில் ஒரு குருவே தன் சீடரை தனக்கு நிகரான குரு அளவிற்கு உயர்த்தியும் வந்தார். இன்றோ, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, தன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு அன்பரையுமே தன்னைப்போல குருவாக உயர்த்தி மகிழ்கிறார். அதுவே அவருடைய நோக்கமாகவும் இருந்தது. அவர் தன்னை பிரபஞ்ச வான்காந்தத்தில் கலந்துகொண்ட பிறகும் அது தொடர்கிறது.

இந்த நிலையில், யோகசாதனையில், நம் உயிரோடு கலந்து நிற்கும் குருவானவரின் துணை, நம்முடைய வாழ்நாள் முழுவதுமே துணையாக வருகிறார் என்பதே உண்மை. நாம் குருவிடம், குருவோடு பயணிப்பது என்பது நம்முடைய நோக்கம், ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, அனுபவம் என்பதை கொண்டுதான் அமையும். எனவே யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

வாழ்க வளமுடன்
-

Why i not interested in yoga and no one do not follow this then why me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது? பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும்?


பதில்:

தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது போலவும் பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு, இந்த உலகில் மனோநிலை மாறிவிட்டது என்பது உண்மைதான். காரணம், மனிதன், தன்னையும், தன்னுடைய ஆதாரமூலம் எது? என்பதையும் ஆராயக்கூடிய நிலையில் இருந்து விலகிவிட்டான். அவனுக்கு, இந்த உலகில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் இவற்றில் கவனம் கொண்டு வாழ்வதற்கு பழகிவிட்டான். வாழும் வரை இதுவே போதும் என்ற நிலைக்கும் நிறைந்துவிட்டான்.

பிறந்த குழந்தைகூட இயல்பான நிலையில் வளர்கிறதா? என்பதை நீங்கள் பார்த்து பரிசோதிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளையே கவனிக்கலாம். மூன்று வயது வரைதான் அந்த குழந்தைத்தனம் என்ற இயற்கையோடு ஒன்றிய செயல்பாடு இருக்கும், மூன்றுவயதை தாண்டிவிட்டால், குழந்தைகளும் பெரியவர்களோடு போட்டிபோட பழகிவிடுகிறார்கள். பெரியவர்களையே அடக்கிடவும் பழகிவிடுகிறார்கள். இயற்கை குறித்து ஏட்டளவில் தான் உள்ளது, தன்னைப்பற்றிய அறிவும் அங்கே இல்லை. நான் யார்? என்ற தேடலுக்கும் இங்கே இடமில்லை. இயற்கையை மதிப்பதும் இல்லை, இறைநம்பிக்கையும் இல்லை. இதனால் பக்தியும், யோகமும் அவசியமற்று போய்விட்டது. செயல் விளைவு குறித்து அக்கறை இருந்தாலும், கர்மா என்ற வினைப்பதிவு குறித்தும் விளக்கமில்லை. இதனால் ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம், போய்ச்சேருவோம், இதுதான் மனித இயல்பும், வாழ்க்கையும் என்று வாழப்பழகிவிட்டார்கள்.

ஆனால், நாம், நமக்கு நம் முன்னோர்களால் ஏற்பட்ட உந்துதலால், துன்பம் தீர்க்கவும், தன்னை அறியவும், இயற்கையை உணரவும், இறையுணர்வு பெறவும் ஆர்வம் கொண்டு யோகத்தில் இணைந்திருக்கிறோம். அதை நினைவில் கொண்டு, மற்றவர்களை பார்க்காமல், அவர்களை அவர்கள்போக்கில் விட்டுவிட்டு, உங்கள் பாதையை மாற்றாமல், யோகத்தில் பயணியுங்கள். உண்மை உணர்ந்து, நிறைவான, முழுமையான மகிழ்ச்சியான உலக வாழ்க்கை வாழலாம். அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். வாழும் வாழ்வில் உயரலாம். மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கலாம். சமூகம் மதிக்கும் உயர் நிலையும் அடையலாம்.

வாழ்க வளமுடன். 


How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.