CJ for You: virus

virus

Showing posts with label virus. Show all posts
Showing posts with label virus. Show all posts

Can simplified exercise will solution for my all physical problems?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு சில உடல்பிரச்சனைகள் உள்ளது! வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் முழுமையாக தீர்வு கிடைத்துவிடுமா?


பதில்:

நமக்கு வரும் உடல் பிரச்சனைகள், தொந்தரவுகள் பெரும்பாலும் மனரீதியில் உருவானவையாகவே இருப்பதை நாம் அறியலாம். உதாரணமாக நாம் கவலைப்பட்டால் கூட அது மனதையும் உடலையும், உடல் உறுப்புக்களையும் பாதிக்கும். சினமும் அத்தகைய தன்மை கொண்டதே. ஆனால் பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையில் இருந்தால் அது ஆரம்ப நிலை என்று சொல்லலாம். அதுவே காலத்தால் நீண்டு, முற்றிப்போனால் அது, பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையை மீறி நோயாக மாறிவிடும். அந்தந்த உறுப்புக்களையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இதனால் உங்களுக்கு இருப்பது, உடல் பிரச்சனைதானா? அல்லது நோயா? என்பதை முதலில் தெளிவு செய்து கொள்ளுங்கள். இங்கே மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். பார்வைக்கு திடமாக இருக்கும் மனிதர்கள் பலர், நீண்டகால நோயை தன்வசம் பெற்றவராக இருப்பார் என்பதே நிகழ்கால உண்மை. மேலும் உடல் பருமனாக இருப்பது நல்லது என்றும், ஒல்லியாக இருப்பது நோய்தன்மை என்ற தவறான கணிப்பிலிருந்து மாறிவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி தந்த எளியமுறை உடற்பயிற்சி என்பது, உடலை, மனதை, உயிர் வளத்தை தக்கவைக்கவும், ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிடவும், உடலுக்குள்ளாக இயங்கும் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், ரத்தவோட்டம் ஆகிய சீராக பாய்ந்தோடவும், குறைவுபடாமல் இருக்கவும் உதவும் என்பதே உண்மையாகும். மேலும் நோய்தாக்கம் பெறாத விழிப்புணர்வும், தடுப்பு சக்தியும் தந்து காத்திடும்.

இங்கே ஏற்கனவே, உடலில் நோய் என்ற நிலை இருந்தால், அந்த நோய்தன்மையை கொஞ்சம் குறைத்திட வழி பிறக்குமே அன்றி, முழுதாக தீர்த்திட வழியில்லை. நோய் தன்மையை பொறுத்து, மருத்துவரின் வழிகாட்டலும், மருந்துகளும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இது உடற்பயிற்சி தானேதவிர, உடல் உறுப்புகளை திருத்திட, மாற்றி அமைக்க மருந்து அல்ல என்பதை புரிந்துகொள்க. அப்படியானால், ‘எளியமுறை உடற்பயிற்சி என்பது வீண் தானே?!’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், அது உங்களுடைய கருத்தேயன்றி உண்மையல்ல.

எப்போதுமே, வருமுன் காப்பதுதானே சிறப்பு, அதன்படி, நாம் இளமையில் நன்றாக இருக்கும்பொழுதே, அப்படி உணரும் பொழுதே, எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்தால், வாழும்நாள் வரையில், நோயின்றி சிறப்பாக வாழ வழியுண்டாகும். அதுதான் குருமகான் வேதாத்திரி மகரிஷி தந்த விளக்கமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.


Get ready to live now - Part 02


 



முந்தைய பதிவு செல்ல Part 01

வாழ்வதற்கு தயாராகுக - இரண்டு

கடந்த பதிவின் தொடர்ச்சி!


பொய் சூழ்நிலை

பிறக்கும்பொழுதே சில குழந்தைகள், தாயின் ஊட்டசத்து குறைபாடால், தசை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளால் நிற்க முடியாது, ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது, நாம் தூக்கி வைத்துக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் கொஞ்ச நேரத்தில் அவர்களின் தசை இறுகி அல்லது தளர்ந்து மிகப்பெரும் வலியை கொடுக்கும். இப்படியான குழந்தைகளுக்கு இயற்கை முறையில் சில சிகிச்சைகள் வழங்குவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று, மணலில் பள்ளம் தோண்டி, அக்குழந்தைகளை அதில் நிற்க வைத்து அல்லது உட்காரவைத்து, தலை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை எல்லாம் மண்ணால் மூடி விடுதல். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்துவிடலாம். இதில் என்ன நடக்கிறது என்றால், மண்ணில் இருக்கக்கூடிய சில சத்துக்களும், பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளும் உடலில் கலக்கின்றன. உடலை, சதையை பலப்படுத்துகின்றன. கூடவே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இந்த நவீன காலத்தில் மண்ணைத்தொட்டுப் பார்த்த குழந்தைகளை, விரல் விட்டு எண்ணி விடலாம். 

எதைத்தொட்டாலும் நோய் வரும் என்று பயந்து பயந்து வளர்த்து, அது கரோனாவால் உண்மையாகிப்போனதுதான் மிச்சம். இயல்பான எதிர்ப்பு உடலில் இல்லாமல் போய்விட்டது.

வருடம் முழுதும் சாராசரி வெப்பமான ஒரு நகரில், எந்நேரமும் சென்டர்லைஸ்ட் ஏர்கண்டிசனிங் வீட்டில், பளிங்கு தரையில், செருப்புக்காலோடு சிலர் வாழ்ந்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன ஒரு இயற்கை முரண்பாடு?! இந்த உடலுகென்று ஒரு வெப்ப நிலை இருக்கிறது. அதை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு இந்த உடல்படும் பாடு நமக்குத்தெரியாது. நமக்குத்தான் என்றைக்குமே உள்முக பார்வை இல்லையே. ஏற்கனவே தொழிற்சாலை, வாகன புகைகளால் குழப்பமடைந்த இயற்கை மனிதர்களின் சராசரி வெப்பத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு, தற்காலிக செயற்கை குளிருக்குள் அடங்குகிறார்கள். இது நிச்சயமாக உங்கள் உடலையும், உயிரையும் கெடுக்கும். இயல்பாக இந்த உடல், தனக்கு ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தகவமைத்துகொள்வதில் நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கிறீர்கள். இதனால் உங்கள் உடல் தேவையில்லாது தடுமாறுகிறது. அதுவே எல்லா நோய்க்கும் காரணமாகிறது. 


தீப்பெட்டி வீடுகள்

நமது தமிழ்நாட்டில் இருக்கிற வீடு கட்டிடக்கலை நிபுணர்கள், மேஸ்திரிகள், கொத்தனார்கள் இவர்களை கூட்டி வந்து “எப்படி வீடுகட்டுவது?” என்று யாராவது மறுபடி பாடம் நடத்தினால் நல்லது. ஏனென்றால் இவர்கள் கட்டுகிற எந்த வீட்டிலும், 

1) வெளிக்காற்று உள்ளே வராது. உள்காற்று வெளியே போகாது.

2) வீட்டின் எந்த அறையிலும் வெளிச்சம் வர வாய்ப்பு இருக்காது.

3) அறையின் வெப்பக்காற்று வெளியேற எந்த வழியும் தரப்பட்டிருக்காது.

4) ஓவ்வொரு அறையிலும் மேற்சுவற்றின் வழியாக வெப்பம் இறங்கும்

5) கதவு, ஜன்னல்களில் கண்ணாடி பதிக்கப்பட்டு, அதீத வெளிச்சமும், அதீத வெப்பம் வீட்டிற்குள் வரும்.

6) சமையல் அறையில் புகை, வெப்பம் வெளியேபோக முடியாது. மிளகாய், கடுகு தாளித்தால் வீட்டிலிருக்கிற எல்லோருக்கும் “காரத் தும்மல்” இலவசம்

7) ஜன்னலுக்கு வெளிப்புறம், மழை, வெயில் தடுப்பு வழியாகவும், தண்ணீர் வீட்டிற்குள் வரும், வெயிலும் வரும்.

8) வயிமுட்ட சாப்பிட்டு எழுந்து கை கழுவ நடக்க முடியாது என்பதால், அருகிலேயே கைகழுவும் தொட்டி இருக்கும், அவ்வப்பொழுது அது அடைத்து துர்நாற்றமும் தரும்.

9) குளியலறையும், கழிவறையும், சமயலறைக்கு அருகில் இருக்கும் அல்லது சாப்பாடு பரிமாறும் அறைக்கு அருகில் இருக்கும்.

10) குளியறையில் கை தூக்கி, கை நீட்டி சோப்பு போட முடியாது ஏனென்றால் கை சுவரில் இடிக்கும்

11) கழிப்பறையில் கொஞ்சம் குண்டான ஆட்கள் உள்ளே நுழையவே முடியாது,  நுழைந்தாலும் உடலை திருப்பி வெளியே வர முடியாது.

12) வெஸ்டர்ன் டாய்லெட் செட் தான் இருக்கும். நீங்களாக வயிறை முக்கினால், குடலிறக்க நோய் நிச்சய பரிசு உண்டு. 

13) சரி, கால் மடக்கியாவது உட்காரலாம் என்றால், கீழே விழுமளவுக்கு பாத டைல்ஸ் பதிந்திருக்கும். பிடிக்கவும் ஏதும் வசதியிருக்காது. 

14) ______________________________________ இதில் உங்க வீட்டை சுற்றிப்பார்த்து ஏதேனும் எழுதிக்கொள்ளவும். 

இப்படியான வீட்டில் மனுசன் குடியிருப்பானா? என்று கேட்கிறீர்களா? சரிதான்! இப்படி அரும், பெரும் வசதிகள் வீட்டில் இருந்தால், உடலும், மனமும் எப்படி நன்றாக இருக்கும்?!


நேரமில்லாத நிலை

குனிந்து நிமிரக்கூட நேரமில்லை என்பார்கள் பொதுவாக. நிஜமாகவே இக்காலத்தில் அப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணிவிடத்தோன்றுகிறது. எல்லோரும் தன்னை, கையடக்க கைபேசிக்குள் புதைத்துக்கொண்டுவிட்டார்கள். இவர்களாக எதுவுமே செய்வதில்லை. யாராவது சிரித்தால் சிரிக்கிறார்கள், யாராவது பாடினால் கேட்கிறார்கள், யாராவது அழுகாச்சி செய்தால் இவர்களும் அழுகிறார்கள், யாராது சண்டை போட்டால் குத்துடா, வெட்டுடா என்கிறார்கள். யாராவது உடற்பயிற்சி செய்தால் பார்த்து மகிழ்கிறார்கள். இப்படியாக எல்லாமே யாரோ அல்லது யாராவது செய்துகொண்டிருந்தால் இவர்களுக்கு போதுமானது. தானாக எதுவுமே செய்யமாட்டார்கள். உடற்பயிற்சி செய்வதா? அதற்கெல்லாம் நேரமில்லையே என்பதுதான் இவர்களின் பதில். 

கூட்டமாக இருக்காதீர்கள், தும்மும்போதும் இருமும்போதும் கைகளால் மறைத்து கொள்ளுங்கள் அல்லது துணி வைத்துக்கொள்ளுங்கள். எதையும் தேவையில்லாது தொடாதீர்கள், கைகளை 20 நொடி நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். மூக்கு, வாய், கண் அடிக்கடி தொடாதீர்கள். எங்கே சென்றாலும் முககவசம் அணியுங்கள், ஒரு அடி தள்ளி நின்றே பேசுங்கள். இப்படியெல்லாம் சொன்னால், யாருக்கோ சொல்வதாக நினைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை, அதில் அக்கறை கொள்வதும் இல்லை. இப்படியான துயர் சூழலில் பழகிக்கொள்வதும் இல்லை

இப்படியானவர்களைக் கண்டால் கரோனாவுக்கு குஷி ஏற்படாதா என்ன? 


தீர்வை நோக்கி

காலம் இன்னும் கடந்துவிடவில்லை. இன்று ஆரம்பித்தாலும்கூட நாளடைவில் உங்களை, உங்கள் உடலை பலப்படுத்திவிடலாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் படித்தது போதும். இனி அத்தவறுகளிலிருந்து விலகுங்கள். உங்களை, உங்கள் கவனத்தை திசை திருப்பும் எல்லாவற்றிலிருந்தும் வெளியே வாருங்கள். அடிப்படை தேவைகள் என்ன? எந்தெந்த வகையில் நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும், திருத்திக்கொள்ள முடியும் என்பதை வகைப்படுத்துங்கள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு நொடி கூட உங்களால் தக்கவைக்க முடியாது. 

நீங்கள் இன்னும் வாழ வேண்டும் என்றால், தப்பிக்க நினைக்காதீர்கள், உங்களை திருத்தப்பாருங்கள். உடலை வளப்படுத்தாமல் ஒருபோதும் உங்களால் வாழ முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடிக்கடி சொல்வது போல, இயற்கையின் உன்னத பரிசு இந்த உடல், அதை பாழாக்காதீர்கள்.

அல்லது உங்களுக்குள்ளாக நான் வாழ்ந்து முடித்துவிட்டேன், இனி வாழ்வில் ஒன்றுமில்லை என்ற நிறைவிலாவது திருப்தி கொள்ளுங்கள். உங்கள் மீத வாழ்க்கையை கரோனாவுக்கு கொடுத்து விடுங்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

அந்நிலை வேண்டவே வேண்டும். இன்றே தீர்வை நோக்கி நகர்க, 

வாழ்க வளமுடன். 


-----------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock

Get ready to live now - Part 01


 


வாழ்வதற்கு தயாராகுக

இது கரோனா நோய்தொற்றின் இரண்டாம் அலைக்காலம். தற்பொழுது ஜெர்மனி நாட்டில், மூன்றாவது அலைக்காலமும் வந்துவிட்டதாக தகவல். எல்லோருக்கும் கொஞ்சமாவது அடிவயிற்றில் பயம் இருக்கும் என்பது உண்மையே. ஏனென்றால், நம்மை பெற்றவர்களை. உடன் பிறந்தோரை, குடும்ப உறுப்பினர்களை, நம் நண்பர்களை, நமக்கு தெரிந்தவர்களை இழந்திருக்கிறோம் தானே! அதுமட்டுமல்லாது, சமூகத்தில் மிகப்பெரும் பெயர்பெற்ற நபர்களும் இந்த கரோனா நோய்க்கிருமியால் தாக்கப்பட்டும் அல்லது எதிர்பாராத, நிரூபிக்கபடாத பக்க விளைவுகளாலும் தங்கள் உயிரை பறிகொடுத்துவிட்டார்கள். 

 

கரோனா நோய்தொற்றின் எதிர்காலம்!

இந்த கரோனா நோய்தொற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, மருத்துவ அறிவியல் வல்லுனர்கள் பதில் சொல்லும்போது,

“கரோனா இன்னும் பரவும், மக்களிடையே இருக்கும் ஆனால் காலப்போக்கில் பலமிழந்துவிடும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

குரைக்கிர நாய் கடிக்காது என்பது எனக்கு தெரியும், அது அந்த நாய்க்கு தெரியுமா? என்பதுபோலவே “இது கரோனாவுக்கு” தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. 


தற்காப்பு இழந்த உடல்

உலக ஒரே சந்தை பொருளாதாரம் எல்லா நாடுகளிலும் திறந்துவிடப்பட்டு, சராசரி அல்லது கடைக்கோடி மக்களும் ஏற்று தன் எல்லா வழக்க பழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வைத்துவிட்டது. கிட்டதட்ட ஒரு 50 வருடம் என்று உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட, மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் உணவுப்பொருட்கள், நகரத்தில் கிடைப்பதில்லை. நகரத்தில் கிடைப்பது ஊர்களில் கிடைப்பதில்லை, ஊரில் கிடைப்பது கிராம சிற்றூரில் கிடைப்பதில்லை.

ஆனால் இக்காலத்தில் எங்கோ வெளிநாட்டில் கிடைக்கும் “குப்பை” உணவுப்பொருள், கிராம சிற்றூரில் கிடைக்கிறது. அதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். குப்பையை உலகமக்களெல்லாம் விரும்பு சாப்பிடுவதில் என்ன பெருமை இருக்கமுடியும்?

இப்படியாக, நானும் கெட்டேன், நீயும் கெட்டாய் என்று எல்லோருமே உடலின் குறிப்பிட்ட தற்காப்பு சக்தியையும், உடல் உறுப்புக்களின் நல்ல செயல்பாடுகளையும் கெடுத்துக்கொண்டோம் என்பது பொய்யில்லை. திடகாத்திரமான உடல் என்பது நூலிலும், அகராதியிலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் காலமாகவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு என்பது கேலியாகி விட்டது. அதுபோலவே இதைசொல்லியும் வியாபாரமாக்கும் “வியாபாரிகளும்” பெருகிவிட்டனர். 


அருகிவிட்ட சமைத்தல்

பசிக்கிறதா? சாப்பாட்டை கைபேசி வழியாக ஆர்டர் செய்க என்று என்று எல்லோரும் மாறிவிட்டனர். ஏன்? என்று கேட்டால், சமைக்க நேரமில்லை? ஏன் நேரமில்லை? வேறு நிறைய வேலையிருக்கிறது? அப்படி என்ன நிறைய வேலையிருக்கிறது? இதற்கு நீங்கள் தான் பதில் தரவேண்டும்.

ஒரு வீட்டில் சமையல் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லைதான். ஆனால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை, உங்களுக்கு பிடித்த உணவாக, நீங்களே அரிசி, காய் கறிகளை தொட்டு, சுத்தம் செய்து கழுவி, நறுக்கி, போதுமான வெப்பத்தில் சமைத்து, ருசிக்கு கூடுதாலக ஏதேனும் சேர்த்து, இறக்கி, குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து, கையால் சாப்பிட்டால், அது உங்களுக்கும், உங்கள் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பலன் அளிக்குமே.

ஒரு உணவை உங்கள் கைகளால் பிசைந்து சாப்பிடும் பொழுது, உங்களின் சக்தி அவ்வுணவுக்கு சென்று, உணவைக்கூட திருத்தி அமைக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அதுபோலவே, நீங்களே உணவை சமைத்தால் எப்படியான பலன் கிடைக்கும் என்று சிந்திக்கமுடிகிறதா?

இங்கே சமைப்பதில் ஆண், பெண் இருபாலருமே இணைந்து கொள்வதுதான் நல்லது. முடிந்தால் இதில் குழந்தைகளைக்கூட கொஞ்சம் பழக்கிக்கொடுக்கலாம் என்பது என் தீர்வு.

உணவால், சரியானபடி உடலை வளர்க்காமல், பாதுகாப்பு அளிக்காமல், வேறு எப்படித்தான் வாழப்போகிறீர்கள்?

பல்லாண்டுகாலமாக, தமிழர்கள் வாழ்வியலில் “உணவு” வியாபாரமாக்கபடவே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இன்றோ, இயற்கையின் கொடையான, தண்ணீரும் விலையாகிப் போனது. காற்றும் விலையாகிக் கொண்டிருக்கிறது ஆனால் இன்னும் பரவலாக்கப்படவில்லை. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் நகரத்தில் வேலையில்லை, உள்ளே வந்துவிட்டால் உணவு, நீர் வாங்குவதற்கு அவைகளிடம் பணமில்லை. பணமில்லா மனிதனுக்கும் உணவு, நீர், காற்று பணமின்றி கிடைக்காது என்றால், யோசித்துப்பார்க்கையில் பயமாக இருக்கிறது. 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்!

அடுத்த பதிவு செல்ல Part 02

--------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock