CJ for You: spirit

spirit

Showing posts with label spirit. Show all posts
Showing posts with label spirit. Show all posts

How connect with loved one who died, and I need Vallalar too?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

1. சுவாமிஜி! நாம் அதிகம் விரும்பியவர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய உயிர் நம்மோடு இணைய என்னென்ன செய்ய வேண்டும்? 

2. வள்ளலாரை நான் அதிகம் நேசிக்கின்றேன். அவர் உயிர் என்னிடம் இணைய முடியுமா? 

 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். யாரிடம் ஒத்த பதிவுகள் உள்ளனவோ அவர்களிடம் இறந்தவர்களுடைய உயிர் தானாகவே இணைந்து கொள்ளும். 

 உங்கள் உயிரைவிட வள்ளலார் உயிர் சிறந்த நுட்பம் வாய்ந்தது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது போல் இன்னும் 1000 பேர் 10,000 பேர் ஏற்றுக் கொள்ள விருப்பமுற்று முயன்று கொண்டிருப்பர். 

 எந்த உயிர் பொருந்துமோ, எந்த உயிரின் அறிவு பொருந்துமோ அவ்வுயிருடந்தான் அவரின் உயிர் இணையும். விரும்புகிற எல்லோருடைய உயிரோடும் இணைய முடியாது. எப்பொழுதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் – இயல்பூக்க நியதியின்படி – அவருடைய அறிவைப் பெறலாம். 

வாழ்க வளமுடன்.

-

அருட்பிரகாச வள்ளலார், வேதாத்திரி மகரிஷியோடு தன்னை இணைத்துக்கொண்ட அந்த நிகழ்வை பார்க்கலாமா?! குண்டலினி யோகம் கற்று, அதன் சிந்தனையிலேயே அன்றாடம் வாழ்ந்து, குறிப்புக்களை பதிந்துகொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள தன் வீட்டுத்திண்ணையில் படுத்திறங்கியுள்ளார். அந்த நாள் ஒரு பூரண சந்திரநாள் அதாவது பௌர்ணமி தினம். அந்த திண்ணைக்கு அருகே ஒரு பிரகாசமான ஒளி மிதந்து தெரிந்து கண்டு வியப்பில் ஆழ்ந்தார் வேதாத்திரி மகரிஷி. திடீரென்று அவருக்கு நா எழவில்லை, பேசவும், அசையவும் வழியின்றி அமைதியாக இருந்தார். வந்திருப்பது அருட்பிரகாச வள்ளலார் என்பதையும் உணர்வால் அறிந்துகொண்டார்.

‘நான் உன்னோடு பத்தாண்டுகள் இருக்கிறேனப்பா! இப்போது இதை யாரிடமும் சொல்லாதே’ என்று அருட்பிரகாச வள்ளலாரின் குரலாக, வேதாத்திரி மகரிஷிக்குள் ஒலித்தது.

அந்த நிகழ்வுக்குபிறகும் அந்த நாளுக்குப்பிறகும் பத்து ஆண்டுகள், தன் ஆராய்ச்சிக்கு விடைதரும் விதமாக, பலநூறு கவிதைகளை எழுதிக்கொண்டே வந்தார். அந்தக்கவிதைகள். ஞானக்களஞ்சியம் நூலிலும் பதிக்கப்பட்டது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த நிகழ்வை, தன் குரலால் சொல்லியும் உள்ளார். தன் வாழ்க்கை விளக்க நூலிலும் எழுதியுள்ளார். அன்பர்கள் கேட்டு, படித்து உண்மை அறிக, உணர்வில் தெளிக!

வாழ்க வளமுடன்! 

Is soul and life force (uyir) the same?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதானா? 


பதில்:

பொதுவான வழக்கத்தில் இரண்டும் ஒன்றே என்று புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. எப்படியென்றால், உலகில் வாழும் வாழ்க்கை வரை உயிர் என்றும், அதுவே இறந்துவிட்டால் ஆன்மா என்றும் சொல்லிவருகிறார்கள். ஆனால், உயிர் என்பதும், ஆன்மா என்பது வேறுவேறு என்பது உறுதியானது.

உயிர் என்பது நுண் துகளாகிய, விண் என்ற ஆகாஷ் துகள்கள் ஆகும். இவை நாம் கருவானது முதல், உடல் வளர்ந்து, அந்த உடலில் சிறைபட்டு, உடல்முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது தன்னுடைய சுழற்சியில் மாற்றம் கொள்ளும். அதாவது, மனிதனின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியேறிடவும் வாய்ப்பு உண்டாகிவிடும். இந்தக்குறையை உடனடியாக சரி செய்துவிட முடியாது எனினும், மன அமைதி, நற்சிந்தனை, தெய்வீக வழிபாடு, தவம், தியானம், தகுந்த உணவு முறைகள், மகான்களை சந்தித்து ஆசிபெறுதல் வழியாக சரி செய்யலாம்.

இந்த உயிரை அடிப்படையாகக்கொண்டே ஆன்மா செயல்படுகிறது. அதாவது உயிரின் படர்க்கை நிலையாக, மனமும் ஆன்மாவுமாக. மேலும் ஆன்மா என்பதே வாழும் பொழுதும், வாழ்க்கை முடித்த பிறகும், எக்காலத்தும் நிலைத்தும் இருக்கும் என்பதும் உண்மை. இந்த ஆன்மாவின் மேலோட்டமான இயக்க நிலையையே ஒவ்வொருவருடைய மனம் என்றும் சொல்லலாம்.

எனவே ஆன்மா என்பதும், உயிர் என்பது தனித் தனியானதுதான்.

வாழ்க வளமுடன்.

If we are died after spirit separated. so are we sprit?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் நம்மை விட்டு பிரிந்ததும் இறந்துவிடுகிறோம் என்றால், நாம் உயிரா? 


பதில்:

சிந்தனைக்குரிய கேள்விதான், வாழ்த்துகிறேன். முக்கியமாக நீங்கள் உடல் அல்ல என்ற உண்மையை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது நல்லது. நீங்கள் சொல்லுவது போல உயிர் நம்மைவிட்டுப் பிரிந்தால் நாம் இறந்துவிடுகிறோம். ஆனால் இந்த புரிதலில் தவறும் உள்ளது. உயிர் நம்மைவிட்டு என்று சொல்லும் பொழுதே, உயிரோடு நாம் என்று வாழ்வதையும் அறிந்துகொள்ளத்தானே வேண்டும். அதாவது உயிர், நாம் என்று இரண்டாக உள்ளது அல்லவா? அப்படியானால் நாம் தனியாக இருக்கிறோம்தானே?!

இங்கே இன்னும் தெளிவாக அறிய, உடல், உயிர், மனம், நாம் என்று நான்காக கலந்து இருக்கும் உண்மைதான் உள்ளது. இந்த உடல் நாம் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டீட்கள். இந்த உயிர் நாம் இல்லை என்ற உண்மையும் இப்போது விளக்கம் கிடைத்திருக்கும். அப்படியானால் மனம் என்பது நாமா? அல்லது அந்த நாம் என்பது யார்? என்று அறிந்துகொள்ள வேண்டும். 

மனதைக் கொண்டுதான் உலகில் வாழ்கிறோம், இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம் அல்லவா? அத்தகைய மனதின் துணைகொண்டுதான், நாம் யார் என்று அறிந்திட வேண்டும். இந்தக் கேள்விதான் ‘நான் யார்?’ என்று விசாரணையை உருவாக்குவதாக, பகவான் ரமணமகரிஷியும் சொல்லுகிறார். அவர்தான் இந்த கேள்வியை நமக்குள் விதைத்தவர் எனலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, அந்த கேள்வியை நோக்கியே பயணிக்கிறோம். முதலில் மனதை மனதால் அறிய தவம் இயற்றுகிறோம். பிறகு மனதை உயிரில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அடுத்ததாக, உயிருக்குள் அறிவாக இருக்கும் நிலையில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அதற்குப்பிறகுதான் பேராற்றலோடும், பேரறறிவோடும் துரியாதீத தவத்தில் விரிகிறோம். அந்த நிலையில்தான் உங்களுக்கான விடை கிடைக்கும். அதை நாம் வார்த்தையால் இங்கே விளக்கிடுவது கடினம்! தொடர்ந்து தவத்தில் நிலைத்து உண்மையை உணர்வாகப்பெற வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

Athma Goes to


 ஆத்மா எங்கே போகிறது?


ந்த கேள்வி குறித்து சிலர் கேட்டிருந்ததமையால், அதுகுறித்தும் சில உண்மைகளை அறியத்தருகிறேன். கடந்த பதிவுகளின் வழியாக, ஆத்மா என்பது குறித்து தொடர்ச்சியாக பார்த்திருப்பதால், இந்த பதிவும் சுலபமாக புரிந்துவிடும் என்று நம்புகிறேன். ஆத்மா என்பது நமது பிம்பம் என்று உதாரணமாக வைத்துக் கொள்வோம் எனில் நம்முடைய எண்ணங்கள், விருப்பம், வெறுப்பு, செயல்கள், கவலை, கோபம் இப்படி எல்லாமும் ஆத்மாவிலும் இருக்கும். ஆத்மா என்பது சுத்தமானது என்ற பொது கருத்துக்கு வந்துவிடக்கூடாது. நாம் எப்போதோ செய்த தவறுகளைக்கூட, நாம் மறந்திருந்தாலும் கூட, தானாகவே செயலுக்கு வந்து நம்மை ஆட்கொண்டுவிடும் தன்மை கொண்டது நம் ஆத்மா. எனவே உங்களினின் 100% முழுமையான பிரதி ஆனால் உங்களையும் இயக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


சரி, நல்ல ஆத்மா இல்லையா? கிடையாதா?

நல்ல ஆத்மா இருக்கிறது, யோக சாதனை முலமாக, தவத்தின் வழியாக, தன் சஞ்சித, பிராரப்த, ஆகாமிய (மும்மலங்கள்) (இருவினை என்று சித்தர்கள் சொல்லுவர்) கர்மங்களை, வினைப்பதிவுகளை தன் வாழ்நாளிலேயே போக்கி, இறைநிலையில் முழுமை அடைந்தவரே நல்ல ஆத்மா. அப்படியானால் வினைப்பதிகளை போக்க நாம் வாழும் இந்த பிறவிக்காலமே போதுமானது ஆகும். நாம் இந்த உலகில் பிறப்பதின் காரணமே வினைப்பதிவுகளை, போக்கிக் கொள்வதற்குத்தானே! ஆனால் பிறந்தபிறகு நாம் அதை மறந்துவிடுகிறோம்.


எனக்கு வினைப்பதிகள் இல்லை

இறை மறுப்பாளர்களும், பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. யாரோ செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பாளியா? எனவே எனக்கு வினைப்பதிவுகள் இல்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஒரு மனிதனை யாரும், இரசாயன ஆராய்ச்சி கூடங்களில், “ஒரு பொம்மைகள் போல” உருவாக்குவதில்லை. தாயும், தந்தையும் இணைந்து உறவின் மூலமாக, கருவாகி வளர்ந்து வருகிறோம். எனவே, அவர்கள் இருவரின் வினைப்பதிவுகள் நம் சொத்தாகி விடுகிறதே? கூடவே நாம் வாழும் பொழுது நாமாக சேர்த்துக் கொண்ட வினைப்பதிவுகள் உண்டு. இந்த விதை, நல்ல மாங்கனிகளை கொடுத்த மரத்தின் விதை என்ற எதிர்பார்ப்போடுதானே விதைக்கிறோம். அப்படியென்றால், மாங்கனியின் தன்மை விதையில் உள்ளடக்கமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே நமக்குள் வினைப்பதிவுகள் உண்டு.


வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை

இந்த உலகில், நமக்கு எப்படி வாழப்பிடிக்குமோ அப்படியே வாழ்ந்து, நினைத்ததை சாதித்து, நேர்மையாகவோ, பக்திமார்க்கமாகவோ, இறைமறுப்புடனோ, பகுத்தறிவுடனோ, இயற்கையை மதித்தோ, அவமதித்தோ, பொய், சூது, களவு, கொலை, செய்தும்கூட, மத, இன, ஜாதி பேதம் காட்டி சக மனிதர்களை, இயற்கை வளம், சமூகம், அரசியல் எல்லாம் கெடுத்து, நான் சுத்தமானவன், என்னிடம் தவறே இல்லை என்று இப்படி சொல்லித்தான் வாழ்ந்து, ஒரு நாள் செத்தும்போகிறோம். வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை. நமக்கும் தெரியவில்லை. யாரும் சொன்னாலும் தெரிந்துகொள்வதில்லை. அதுகுறித்து ஆர்வம் கொண்டதும் இல்லை. நிதம் தேடிச்சோறு தின்று, கை நிறைய, அலமாரி நிறைய, தேவைக்கு மீறிய காசும், ஒருத்தருக்கும் கடனோ, அன்பளிப்போ கொடுக்காது சேர்த்து,  நோய்பட்டு, மருத்துவத்திற்கே செலவு செய்து, கிழடுதட்டிப்போய், முரட்டு கௌரவத்தோடு, இன்னும் வாழ முடியவில்லையே, சுகம் அனுபவிக்கவில்லையே, காசு சேர்க்கவில்லையே, இப்படி ஆகிவிட்டதே எனும் வருத்தத்தோடு, செத்துவிடுவோம். நம் உடல் மண்ணோடு மண்ணாகவோ, மாநகராட்சி மின் மயானத்தில் சாம்பலாகவோ மாறிவிடும். ஆனால் நம்முடைய வினைப்பதிவுகளும், அதை தாங்கி நிற்கக்கூடிய ஆத்மாவும் (நாம் தான்) அப்படியே இருக்கும். அதாவது நம் வினைப்பதிவுகள் தீர்ந்து நாம் முழுமை அடையும் வரை.


வினைத் தீர்க்க வழி ஏது?

செத்தாகிவிட்டது. அமைதியாக இருந்தால் ஆத்மா, ஆர்ப்பாட்டமாய் இருந்தால் ஆவி. 

ஆட்டத்தில் அவுட் ஆனதுப்போல, வினைப்பதிவு தீர்க்க வந்த வாழ்வில், அதை தீர்க்காமலேயே வாழ்வு முடிந்துபோனது. இருந்த உடலும் இல்லை. ஆனால் வினைப்பதிவு சுமையால் “ஆத்மா” இயற்கையோடு ஒன்ற முடியாது. அது இயற்கையின் வினை விளைவு நீதியாகும். இப்போது உடல் வேண்டுமே? என்ன செய்வது?


இப்படி உடலுமில்லாத, குடலுமில்லாத ஆத்மாவுக்குத்தான், மகனோ, பேரனோ பணம் செலவு செய்து, விற்பனர்கள் மூலமாக பிண்டம் வைத்து, சாந்தி அளிக்கிறார்கள்.


இயற்கை, ஆத்மாவுக்கு உதவுகிறது

ஆனால் இங்கேதான் இயற்கையே, ஆத்ம சாந்தி அடைய, அந்த ஆத்மாவிற்கு உதவி செய்கிறது. அவ்வழியில் ஆத்மா, தனக்கு விருப்பமானவர்களோடு இணைகிறது. தன்னை பகிர்ந்து கொள்கிறது. தன்னுடைய வாழ்க்கை துணை, மகன், மகள், பேரன், பேத்தி இப்படியாக, அவர்கள் உயிரோடு தானுமாய் ஒட்டிக்கொள்கிறது. தான் பெற்ற வினைப்பதிவுகளை, இவர் மூலமாக தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைகிறது. அந்தோ பரிதாபம், இறந்துபோனவரின் வழக்கம், பழக்கம் தானே அவர் குடும்பத்தார்க்கும் இருக்கும்?! பிறகு எப்படி வினைப்பதிவுகளை தீர்ப்பார்கள்? பத்தோடு ஒன்றாகி, பதினொன்றாக வினைப்பதிவுகளின் சுமை இன்னும் ஏறிவிடும். பிறகு?! இப்படியே தொடர்கதைதான்.


இதன் பாதிப்பு என்ன? வினைப்பதிவு இருந்தால்தான் என்னவாம்?

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், வாகன விபத்துக்கள், கூடுதல் இறப்பு, நோய், மன நிம்மதியின்மை, வேலை, தொழில் கெடுதல் ஆகியன போல, ஓவ்வொன்றாக பெற்றுக்கொண்டே வாழ்ந்து, சாகவேண்டியதுதான்.


அப்படியானால் தீர்வு?!

ஆனால், இறந்தவருக்கு, பிண்டம் வைத்து சாந்தி அளிக்காமல், தன்னோடு அந்த ஆத்மா கலந்திருக்கிறது என்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையில் தன்னையும் திருத்தி, யோக சாதனைகளில் இணைந்து, தவம், தற்சோதனைகள் மூலம் வினைப்பதிவுகளை களைந்தால், தன் தகப்பனின் வினைப்பதிவு மட்டுமல்ல, இதுநாள் வரையில் தொடர்ந்திருந்த எல்லா வினைப்பதிவுகளும், தன் வினைப்பதிவுகளும் கலந்தே தீர்ந்துவிடும். அதோடு தான் மட்டுமல்லாது, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும்.


குரு மகான், வேதாத்திரி மகரிசி அவர்களின் வேதாத்திரியத்தின் வழி இக்கட்டுரை எழுதப்பட்டது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால், இந்த WhatsApp Group வழியாக கேட்கலாம். வாழ்க வளமுடன்.




வேதாத்திரிய இறையுணர்வு


----------------

Photo Thanks to: Miguel Bruna, @mbrunacr


Compansation and Athma Shanti


பரிகாரமும், ஆத்மா சாந்தியும்

Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India.


நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது.  அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற  வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.

வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,

“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. 

Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi


திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.

படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை. 

பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.

பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது. 

Tree around the snake stones and deities


பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை. 

இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி,  உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!

ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது  உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை. 

இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா? 

“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.  

பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.

“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”

பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. 

photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio