CJ for You: birth imprints

birth imprints

Showing posts with label birth imprints. Show all posts
Showing posts with label birth imprints. Show all posts

Why I can't understand the truth of Yoga? Please Explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் உண்மையை ஏன் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கமுடியுமா?


பதில்:

அந்த அளவிற்கு யோகத்திற்கான விளக்கம், மனிதர்களால் குழப்பமுற்று இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணம். நீங்கள் சாதாரணமாக யாரிடமாவது போய்

‘ஐயா, நான் யோகத்தில் இணைந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியுமா?’ என்று கேட்டுப்பாருங்கள்.

‘அதெல்லாம் காலம் போன கடைசியிலே போய்க்கலாம், இப்போ உன் பொழைப்பை பாருப்பா’ என்று பதிலளிப்பார்கள். இன்னும் கூடுதலாக,

‘உனக்குலாம் இன்னும் வயசு இருக்கு, நல்லா அனுபவிச்சுட்டு போ. நல்ல வயசுலயே ஏன் சாமியாரா போகனும்னு சொல்ற. அதுக்கெல்லாம் தனியா பிறப்புன்னு ஒன்னு அமையனும், அப்போ பாத்துக்கலாம் போ’ என்றும் சொல்லுவார்கள்.

ஏன் இந்த பிறப்பை அதற்காக, உபயோகப்படுத்திக்கொள்ள முடியாதா? ஏற்கனவே தாய் தந்தையால் முடியாத நிலையில்தானே, என்னுடைய பிறப்பும் நிழந்திருக்கிறது. அவர்களுக்காகவும், என் மூதாதையருக்காகவும், நான் என் வாழ்நாளில் யோகத்தில் இணையக்கூடாதா? இதற்குமேலும் விளக்கமறியாமல், என் பிள்ளைகளையும் பெற்று, அவர்களையும் இப்படி வாழ்விட்டு, இந்த உலகில் சராசரி இன்பதுன்பங்களில் வாழ்ந்துதான் சாகவேண்டுமா? இப்படியே என் பரம்பரை போய்க்கொண்டே இருந்தால் என்றைக்கு, கர்மா என்ற வினைப்பதிவை தூய்மை செய்து, நான் யார்? என்று தன்னையறிந்து உண்மை விளக்கம் பெற்று, பிறவிக்கடனை தீர்ப்பது? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

பிறந்தால் துன்பமும் இன்பமும் இருக்கும் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. துன்பம் என்பது இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேதாத்திரி மகரிஷியும், துன்பம் என்பது தனியாக இல்லை, இன்பத்தின் அளவு மீறும்பொழுது, ஏற்படும் பொருத்தமில்லாத உணர்ச்சி தான் துன்பம் என்று விளக்கமாக சொல்லுகிறார்.

எனவே யோகம் என்பது, நாம் வாழும் முறையை, வாழ்க்கையை, இன்பத்தை முறைப்படுத்திக்கொண்டு, அறநெறியோடு வாழ்கின்ற வழிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இந்தக்காலத்தில், அந்தக்கால சாமியார்களை உதாரணமாகச் சொல்லி, யோகத்தில் இணையாமல் இருப்பதும் முறையில்லை. யோகத்தில் இருந்தாலும் கூட, வழக்கமான உலக கடமைகளில் தவறாது, உழைத்து, பொருளீட்டி வாழ்வதில் தவறு ஒன்றுமில்லை. (இந்தக்கருத்துக்கு பலநூறு எதிர் பின்னூட்டங்கள் வரலாம்)

ஊருக்கும், உலகுக்கும் பாரமாக, மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதற்கு பதிலாக, தானாக உழைத்து பொருள் சம்பாதித்து, ஏழைக்கும், பொருளீட்ட முடியாதோர்க்கும், இப்படி பேசுபவர்களிடம்கூட கொடுத்து உதவி வாழலாமே!

எனவே யோகம் என்றால் வாழும் நெறியை கற்றுக்கொள்வதுதானே தவிர வேறு அர்த்தம் ஏதுமில்லை என்று அவர்களிடம் நீங்களே சொல்லி விளக்குங்கள்!

வாழ்க வளமுடன்.

Why always mislead with Karma? Being with positive is good in life! Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதானே? அப்போது ஏன் கர்மா குறித்து அடிக்கடி சொல்லி எல்லோரும் பயமுறுத்துகிறார்கள்?


பதில்:

ஆங்கிலத்தில் Positive x Negative என்பதை ‘மெய்மை x பொய்மை’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் யாரோ, நேர்மறை x எதிர்மறை என்று மொழி பெயர்த்துவிட்டார்கள். இனி அதை மாற்றிடவும் வழியில்லை. இனி உங்கள் கேள்விக்கு வரலாம், வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி வாழ்பவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது நீங்களே அனுபவித்தீர்களா? என்பதையும் சொல்லி விடுங்கள்.

தான் எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு, அதாவது நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு, அதன்படி வாழ்வதாக இருந்தால், உங்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும், மற்றவர்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம் ஆகிறது. இதில் கிடைப்பது, நடப்பது எல்லாமே ‘இன்னும் வேண்டும்’ என்ற நிலையில்தான் இருக்கும். அதாவது பற்றாக்குறை என்ற அளவில்தான் இருக்கும். எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு நிகழ்ந்தாலும் இன்னும் வேண்டும் என்ற தேவை அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை. ஏனென்றால் இங்கே முழுமையற்ற நிலைதான் நிகழ்கிறது, கிடைக்கிறது எனலாம்.

ஆனால் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து, மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறீர்கள். அது அவர்களின் வழக்கம். உங்களை பயமுறுத்தி அதன்வழியாக தங்களை நிலைநிறுத்திட முயற்சிக்கிறார்கள். நாம், வேதாத்திரியத்தில், கர்மா என்ற வினைப்பதிவு குறித்து விளக்கம் மட்டுமே தருகிறோம். புரிந்து கொண்டு, உங்களின் எண்ணம், சொல், செயல் வழியாக திருத்தம் பெறுக என்றுதான் வழிகாட்டுகிறோம். ஆனால் வேதாத்திரியமும் பத்தோடு பதினொன்று என்பதாக நீங்கள் நினைத்து ஒதுக்குகிறீர்கள். நல்லது அது உங்கள் உரிமையும், விருப்பமும் ஆகும்.

வாழ்கின்ற மனிதன், தனக்குள்ளாக, ஏற்கனவே வாழ்ந்த அவனின் முன்னோர்களின் வினைப்பதிவுகளை பெற்றிருக்கிறான். அவனின் எண்ணம், சொல், செயலில் அது விளைவாக வருகிறது. அது ஏன் எனக்கு வருகிறது? என்று கேட்கமுடியாது. காரணம், மனிதன் தனியாக உருவாகி, வந்துவிடவில்லை அல்லவா? இதை, இந்த வினைப்பதிவுகளை மிகச்சாதாரணமாக, நேர்மறை எண்ணம் கொண்ட வாழ்வால் மாற்றிவிட, தீர்த்துவிட முடியாது என்பதே உண்மை. முதலில் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்தான உண்மை விளக்கங்களை பெற்றுக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்,

வாழ்க வளமுடன்.

Horoscope research service for all



 எல்லோருக்குமான ஜோதிட / ஜாதக ஆலோசனை சேவை

வேண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு, ஜாதகம் வழியாக, கர்மா என்ற வினைப்பதிவு குறித்து சிலருக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த நிகழ்வு, ராகு கேது குறித்த, என் ஆராய்ச்சிக்காக நடத்தப்பட்டது. ஒருவாரம் மட்டும்தான் அதை செயல்படுத்தினேன். பிறகு அந்த சேவை நிறுத்திவிட்டேன். பல நாட்களாக மீண்டும் அதை செயல்படுத்துக என்று சில அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, வேதாத்திரிய சேவையை தரும் இந்த வேளையிலும், ஜாதக ஆலோசனையை தருவதற்கு முடிவு செய்துள்ளேன்.

இங்கே நாம் எதைப்பகிர்ந்து கொண்டாலும், அதற்கு எசப்பாட்டு பாடுவதற்கு நாலு அன்பர்கள் வந்துவிடுவார்கள். எதையுமே முழுதாக புரிந்து கொள்ளாமல், ஆராய்ந்து பார்க்காமல் உடனே எதையாவது மறுத்து பேச வேண்டும், தான் அறிவாளி என்று காட்டவேண்டும் என்று துடிப்பார்கள். ‘வேதாத்திரியத்தில் இருப்பவர்களுக்கு, ஜோதிடம், ஜாதகம் தேவையா?’ என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவதும், கேட்பதும் என்னவென்றால் ‘உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்களப்பா! துரியாதீத தவத்தில் ஏன் சந்திரன், சூரியன் என்று போகிறீர்கள்? டைரக்டா போக வேண்டியதுதானே?’ 

ஜாதக ஆலோசனை

நான் வழங்கும் இந்த சேவை, மற்ற ஜோதிட நிபுணர்கள் சொல்லும் நிலையிலிருந்து மாறுபடும். அதாவது அவர்கள் பரிபாசை பாடல்கள், ஆய்வு குறிப்புக்கள், பலவிதமான குறிப்பேடுகள், அனுபவம், பல ஜோதிட நூலகள் படிப்பறிவு, பல ஜாதக குறிப்பு ஆராய்ச்சி என்பதாக, இவற்றைக் கொண்டு பலன்களை, பரிகாரங்களை சொல்லுவார்கள்.

ஆனால், இங்கே நாம், வேதாத்திரியத்தில் இருப்பதால் அடிப்படையான, நேரிடையான விளக்கமும், அனுபவ குறிப்பும் கொண்டு சொல்லப்படும். காரணம் நமக்கு எது பஞ்சபௌதீக தோற்றங்களாக, நம் பிரபஞ்சத்தில், கிரகங்களாக, இயற்கையாக, பொருட்களாக, தனிமங்களாக, ஜீவன்களாக, மனித உயிர்களாக வந்திருக்கிறது என்ற உண்மை தெரியும். கிரகங்கள் என்ன தன்மையில் இருக்கிறது? எத்தகைய அலைகளை வீசுகிறது? எப்படி நமக்குள் பாதிப்பை, நன்மையை, சமநிலையை உருவாக்குகிறது? என்பதும் தெரியும். மேலும் குறிப்பாக, மனம் என்பது என்ன? அதன் தன்மை என்ன? எப்படி செயல்படுகிறது என்பதும் நாம் அறிவோம். முக்கியமாக, இருந்த இடத்திலிருந்தே, பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும் தெரியும். இதன்வழியாக, நம் பிறப்பு ஜாதக குறிப்பில் இருக்கும் உண்மையை இயல்பாக, தெளிவாக, வெட்டவெளிச்சமாக சொல்லிட முடியும்.

நமக்கு நாமே பரிகாரம்

குழப்பமில்லாத தானே தன்னால் தீர்த்துக்கொள்ளும் பரிகாரங்களும் தெரியும். கோவில் குளமென்று அலைய தேவையின்றி, தவத்தாலும், செயல்களாலும், திருத்தங்களாலும் நாம் அதை பரிகாரமாக தீர்க்கலாம். மேலும் நாம் கற்ற அகத்தாய்வும், தற்சோதனையும் உதவுமே! எனவே நமக்கு தெரியவேண்டியது என்ன? என் ஜாதகம் வழியாக, என் துன்பச் சிக்கலுக்கு தீர்வு தெரிகிறதா? என்பது மட்டுமே. அதைத்தான் இங்கே நான் வழங்கும் சேவை தருகிறது. இந்த இடத்தில் என்னுடைய நண்பரை (காலமாகிவிட்டார்), நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நானும் அவரும் பல ஆய்வு கட்டுரைகளை 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறோம். அவரும் பரிகாரத்தை, மற்ற சோதிட நிபுணர்கள் போல சொல்லாமல் ‘நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மூலமாக’ என்பார். 

வேதாத்திரி மகரிஷியின் கைரேகை

ஏதோ ஒரு நிகழ்வில், ஒருவர் மகரிஷியிடம், 

‘நான் உங்கள் கைரேகையை பார்க்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். மகரிஷியும் சிரித்துக்கொண்டே ‘சரி பாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். கைரேகைகளை ஆய்ந்து பார்த்துவிட்டு, விளக்கம் சொல்லிவிட்டு, 

‘ஐயா, ஐம்பத்திநான்கு ஆண்டுக்காலம் வாழ்வீர்கள்’ என்று சொன்னாராம். மகரிஷியோ ‘நான் வந்த வேலை இன்னும் முடியலையேய்யா? அது இன்னும் காலம் ஆகுமே? ஏதாவது இந்த ஐம்பத்திநான்கை நீடிக்கும் வழி இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த கைரேகை பார்த்தவர் ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, நீங்களேதான் எதாவது வழி தேடனும், இல்லைன்னா தெய்வத்துகிட்ட முறையிடனும்’ என்றாராம்.

நடந்தது என்ன? வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய 96 வயதில்தான் உடல், உதிர்த்து வான் காந்தத்தில் தன்னை நிறைத்துக் கொண்டார். தன்னுடைய 95 வயது நிறைவிலேயே ‘நான் வந்த வேலை முடிந்துவிட்டது, நான் போகிறேன், யாருக்கும் பாரமில்லாமல்’ என்று சொல்லிவிட்டார் என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

ஜாதக சேவைக்கு?!

இதன் வழியாக பெற்றப்படும் ஜோதிட, ஜாதக சேவைக்கு Rs. 2500/- (ஒரு நபர்/ ஒரு ஜாதக குறிப்பு) என்ற வகையில் செலுத்திட வேண்டும்.

கைபேசி App வழியாக செலுத்துக:

9442783450@UPI

வங்கி வழியாக செலுத்திட விபரம்:

AC Name: J.SUGUMARAN
SB Ac: 50100081694540
IFSC: HDFC0000058
Branch: THILLAINAGAR (Tiruchirappalli, Tamilnadu, INDIA)

பலன்கள் பெற

உங்கள் ஜாதகுறிப்பு அனுப்புக. அக்குறிப்பு உங்களுக்கு எழுதப்படவில்லை என்றால்,
1) பெயர்
2) தாய்/தந்தை பெயர்கள்
3) ஆண்/பெண்
4) பிறந்த தேதி/மாதம்/வருடம்
5) பிறந்த நேரம்
6) பிறந்த ஊர்/மாவட்டம்/நாடு
7) தற்பொழுது வசிக்கும் முகவரி
8) கைபேசி எண்
9) வாட்சாப் (WhatsApp)எண்
10) (ஆராய்ச்சி விளக்கம் பெற்றுக்கொண்ட பிறகு)ஏதேனும் 7 கேள்விகள்  ஆகிய முழு விபரங்களை அனுப்புக.

ஜாதக குறிப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்ப: checkmyhoroscope@gmail.com

ஜாதக குறிப்பு வாட்சாப் (WhatsApp) வழியாக அனுப்ப: wa.me/+919442783450

கூடுதலாக நீங்கள் நன்கொடை செலுத்திய விபரமும் தெரிவிக்க வேண்டும். நன்கொடை செலுத்தப்படாத ஜாதக குறிப்புக்கள், ஆலோசனைக்கும், ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அறிக.

விபரமான, விளக்கமான, ஆய்வு முடிவுகள், எழுத்து வடிவிலான PDF மின்னஞ்சல் வழியாக பெற, குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காத்திருக்கவும்.

இந்த சேவை சிறுது காலம் நீடிக்கும் என்பது உறுதி.

குறிப்பு: இந்த சேவை குறித்து, நேரடியாக கைபேசி அழைப்பு செய்வதை தவிர்க்கவும். வாட்சாப் (WhatsApp) மட்டும் தொடர்பு கொள்க!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

What is my journey in Vethathiriyam like?!


வேதாத்திரியத்தில் என்னுடைய பயணம் எப்படிப்பட்டது?!


நானும் வேதாத்திரியமும்

அருள்நிதி பயிற்சிக்காக, ஆழியாறில் 1991ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி மாலையில் அங்கே சென்றடடைந்தோம், அங்கே, முதலில் நாங்கள் கண்ட காட்சி இன்னும் அதே மலர்ச்சியோடு, ஆம், குருமகான் வேதாத்திரி மகரிசி, மாலை நடைப்பயணத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் குழுவோடு பேசிவிட்டு வாழ்த்தினார். மறுநாள்  28 முதல் 29, 30 ம் தேதிவரை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டோம். அவ்வப்பொழுது எனக்கு கிடைத்த உணவு இடைவேளை நேரத்திலும், அன்றைய நாள் பயிற்சி முடிவிலும், அருள்நிதி சான்று பெற்று, நான் வாழ்த்துகளை பெற்ற நேரத்திலும் ‘நான் தகுதியுள்ளவன் தானா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துவந்தது உண்மையே.

ஆனால், ஒரு தகுதி, ஏற்கனவே தகுதியுள்ள ஒருவரால் வழங்கப்படுகிறது என்றால், ‘நிற்க அதற்குத்தக’ என்பது தான் அதன் அர்த்தம். உண்மையாக, இந்த இயற்கையும், நம்மை அப்படித்தான் அரவணைத்து நடத்திச் செல்கிறது. தவறிவிட்டால், தண்டிக்கவும் செய்கிறது அல்லவா?

யார் வேண்டுமானாலும், வேதாத்திரிய தீட்சை பெறலாம் என்றாலும், நம்மில் சிலருக்கே அது கிடைத்தது. ஏன்? நாம் தகுதி பெற்றதினால் தானே? 

சராசரி நபர்களுக்கும மட்டுமின்றி தேடுவோருக்கும் கூட இன்னும் கிடைத்தபாடில்லையே?! அதுதான் இயற்கையின் நிகழ்வாகிறது. எனவே நீங்கள், வேதாத்திரியத்தில் இணைந்ததையும், தீட்சை பெற்றதையும், மகிழ்ந்து, வாழ்த்துங்கள். பிறவியில் கிடைத்த பெரும் பேறு என போற்றுங்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் தந்த ஆசிரியர்கள் அல்லது துணை செய்த நண்பரை நினைத்தும் வாழ்த்துங்கள்.

தடுப்பும் ஏற்பும்

ஒரு சராசரி நடுத்தரவர்க்க மனிதருக்கு நடக்கும் நிகழ்வான, படிப்பு, வேலை, வளர்ச்சி, உயர்வு என்று எல்லாவற்றிக்கும் போராட்டமும், தடுமாற்றமும், நமக்கு யார் உதவுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும். எனக்கும் அப்படித்தான். ஆனால், அப்படி நிகழும் பொழுது, ஏதோ ஒருவகையில் நீங்கள் செலுத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுதான் யோகத்தில் சிறப்பாகும்!

நீங்கள், ஏதேனும் ஒரு நாள், துணைக்கு யாருமற்று, தனித்து நின்று பழகும் பொழுதுதான்,
உலகியலில் பிறமனிதர்கள் எப்படி?
நம்மோடு ஏன் இப்படி பழகுகிறார்கள்?
இப்பொது இருக்கும் சூழ்நிலையை எப்படி ஏற்பது?
நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்வது?
அதை எப்படி அதை அணுகுவது?

என்ற அனுபவம் கிடைக்கும். அதன்வழியாகவே, ஒரு தனியனாக உங்களை நீங்கள் உணர்ந்தால்தான், நிஜமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதுகூட உங்களுக்கே தெரியவரும். அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 

ஆனால் இவை எல்லாம், இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒன்றுதானே? அதை விழிப்பாக, ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டால், நம்மை திருத்தும் ஒரு தடுப்பும், அதன்வழியாக ஏற்பும்   இயற்கையே நிகழ்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே நமக்கு நிகழ்கின்ற எதுவுமே காரணமின்றி நிகழ்வதில்லை. நாம் செல்லும் பாதையில், போக்குவரத்தை சரிசெய்வதைப் போல காலம் செயல்படுகிறது. விபத்து ஏற்படுகிறது என்றால் அது நம் கவனக்கோளாறே ஆகும்.

உண்மை விளக்கம்பெற உதவுவீர்

தனி மனிதன், நான் யார்? என்று தன்னை அறியவும், தன் மூலம் அறிந்து பிறவிக்கடன் தீர்க்கவும் ‘பிரம்மஞானம்’ போதும். ஆனால், அருள்நிதி பயிற்சி ஏன் பெறுகிறோம்? கற்றுக்கொண்ட விளக்கத்தில் ஆழ்ந்து, தேர்ந்து, உண்மையறிந்த பிறகு, நம்மைப்போலவே, துன்பத்தில் சிக்கித்தவிக்கும், சகமனிதரை நாம் உயர்த்துவதற்கு உதவலாம் அல்லவா? அதற்காகவே

ஆனால் வேதாத்திரியத்தில், இது கட்டாயமல்ல. உங்களுக்கு அப்படியான விருப்பம் இருந்தால் பிறருக்கு சொல்லித்தரலாம். மேலும் வேதாத்திரியத்தை, உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் வகையில் மனவளக்கலை  வழியாக. அருள்நிதி நிலையும், கூடுதலாக, துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளும் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்வது மட்டுமல்ல, சக மனிதருக்கும், காலம் காலமாக மறைந்திருக்கும் உண்மை விளக்கத்தை அறியத் தரவேண்டும் என்பது, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் திட்டம். அதன்படியே இன்று, வேதாத்திரியம் பரந்து விரிந்து இருப்பதை நாம் காணமுடியும்.

கர்மா எனும் வினைப்பதிவு தாக்கமும் கழிவும்!

எப்படியோ நாம் பிரம்மஞானம், பெற்று அருள்நிதி ஆகிவிட்டோம், இன்னும், துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்றும் ஆகிவிட்டோம். ஆனால் நாம், தன்னை அறிதலிலும், இறையுண்மை உணர்தலிலும் எப்படி இருக்கிறோம்? என்பது அவரவருக்கே தெரியும் உண்மையாகும்.

இதற்கு நம் கர்மா என்ற வினைப்பதிவின் பங்கு அளப்பறியது. என்னதான் வேதாத்திரிய சேவையில் இருக்கிறோம் என்றாலும் அதன் தாக்கம் ஒவ்வொருவரும் அறிவார். தனியாக இங்கே நான் விளக்கத் தேவையில்லை. நம் ஓவ்வொரு நொடி வெளிப்பாடிலும் கர்மா வரவும், பற்றும் இருப்பதை உணர்ந்தால் போதுமானது.  வரவில் கவனமாக இருப்பது முக்கியம். 

புலிவால் பிடித்த கதை

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் 50 வயது நிறைவில், உலக வாழ்வு போதும் என்ற முடிவோடு, முழுமையாக, எல்லாவற்றிலிருந்தும் விலகி, வேதாத்திரிய சேவையை ஏற்றுக்கொண்டார். 

1988 முதல், இத்தனை ஆண்டுகளாக, ஆர்வம், பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, முடிவு என எனக்கு வேதாத்திரியம் வழியாக, உண்மை வரவர, என் சூழல் மிகுந்த மாற்றம் நிகழ்ந்தது. தானாகவே 2017ம் ஆண்டில் அந்த உண்மைக்குள் நான் விழ ஆரம்பித்தேன். 2018 ல் நிறைப்பேறு நிலை என்பது புரிய ஆரம்பித்தது. எப்போதுமே எனக்குத் தெரிந்ததை, பிறருக்கு சொல்லும் பழக்கமும், சொல்லித்தரும் பழக்கமும் உண்டு.

அந்த வழியாக, வழக்கமான பணிகளோடு, வேதாத்திரியமும் பிறருக்குத் தரலாம் என்றெண்ணி ஆண்டு 2018 ல் ஆரம்பித்ததே ‘வேதாத்திரிய சானல்’ ஆகும். ஆண்டு 2019 ல் டிசம்பரில், பெரும் தொற்றான கோவிட் பரவ, என்னுடைய வழக்கமான பணிகள் பாதிக்கபட, முழுதான பணியாக வேதாத்திரிய சேனலில் பதிவேற்றம் செய்வது என வந்துவிட்டது. இன்று இந்த ஆண்டு 2023-லும், ‘நீ முழுமையாக இதில் இரு’ என்பதாகவே சூழல் அமைந்துவிட்டது.

ஆம் புலிவாலை சும்மா பிடிக்கப்போக அதில் சிக்கிவிட்டேன் என்ற பழமொழி போலத்தான் சொல்லவேண்டும். வேதாத்திரியத்தை நான் விட்டால்கூட, வேதாத்திரியம் என்னை விடாது. இப்பொழுது எனக்கு வேதாத்திரியம் தவிர வேறெதும் தெரியாது என்ற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் தான், வேதாத்திரியத்தில் வழக்கமான பதிவுகளோடு கூடுதலாக தனிப்பட்ட சேவையும் தரலாம் என்று முடிவெடுத்தேன். அதை நன்கொடை பெற்று நடத்தக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.

ஏனென்றால், முழுதாக வேதாத்திரியத்தில் இயங்கினால், உலகியல் பணிகளில் தொய்வு வருவது இயல்பானதே ஆகும். இதை நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அனுபவித்தும் இருந்தார். அவர் ‘அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று காலம் தள்ளிய நாட்கள் அவை’ என்கிறார். ஆனால், இறையுண்மையை, நான் யார்? என்ற தன்னையறிதலை, பிறவிக்கடன் தீர்க்கும் உன்னதத்தை, ஏளனமாக பார்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான்  இந்த சேவையில் ஈடுபடுபவர்களையும் ஏளனம் செய்வார்கள். அதுகுறித்து, தன்னை அர்ப்பணித்து சேவையில் இறங்கியவர்கள் வருத்தம் கொள்வதில்லை!

எதிர்பார்ப்பில்லை

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன், எல்லாம் வல்ல இறைநிலை, என்னை பார்த்துக்கொள்ளும்’ என்பது நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய சேவையில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும் சங்கல்பம். நானும் இந்த சங்கல்பத்தின் வழியேதான் வேதாத்திரிய சேவையில் இறங்கியுள்ளேன். நான் இறங்கினேன் என்பது தவறு, இறைநிலையே என்னை தன்னில் நகர்த்திக் கொண்டது என்று சொல்லலாம். ஆனாலும், யாருக்கு எப்பொழுது எது எங்கே கிடைக்கவேண்டும் என்பதை, காலமும், அதனோடு இருக்கும் பேராற்றலும், பேரறறிவும் தானே தீர்மானிக்கிறது.  எனவே காத்திருக்கிறேன்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Why should I carry someone's karma? Want to solve?


யாருடைய கர்மாவையோ நான் எதற்காக தூக்கி சுமக்கவேண்டும்? தீர்க்கவும் வேண்டும்?


வேதாத்திரியத்தில் ஆழ்ந்து விட்டால் தானாக தெரியக்கூடிய உண்மைகள், வெளிப்பார்வைக்கு பொருத்தமாக இருப்பதில்லை, புரிவதும் இல்லை. முன்னோர்கள் என்னுடைய முன்பிறவி, என்குழந்தைகள் என்னுடைய பிற்பிறவி என்பது, கர்மா என்ற வினைப்பதிவுகளின் அடிப்படையில் சொல்லுவது மட்டுமே. ஒருவர் முன்னாலும் பிறப்பதில்லை, பிற்பாடும் பிறப்பதில்லை. வாழ்வது ஒருமுறை, இறப்பதும் ஒருமுறையே.

ஆனால் கர்மா என்ற வினைப்பதிவு அப்படியல்ல. ஒரு சட்டையில் ஒட்டிய தூசி போல. யார் அதற்கு உரிமையாளரோ அவர் துடைக்கவேண்டும். அல்லது யார் அதை உரிமை கொண்டாடுகிறார்களோ அவர் துடைக்கவேண்டும். இந்த சட்டைதான் நம் உடல், சட்டையின் தூசி கர்மா. யாருமே தனியா வானத்திலிருந்து குதித்து பிறப்பதில்லையே! தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்றால், தாத்தாவின் கர்மா பேரனுக்கு வராமல் போகுமா? வேண்டாம் என்றாலும் இறைநிலை விடாது. (இறையே இல்லை என்றால் இயற்கை என புரிந்துகொள்க)

மேலும், மனிதனின் பிறப்பு ‘நான் யார்?’ என்று அறியவே மலர்ந்தது. அதற்கு தடையாக இருப்பது கர்மா என்ற வினைப்பதிவுகள். அந்த தடையை,  ஒருவர் அதை தீர்க்காதவரை, மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி இப்படியே, ‘இந்தா, தீர்க்கப்படாத இந்த கர்மாவை தீர்’ என்று ஒவ்வொரு பிறவியிலும், இறை அல்லது இயற்கை  கொடுத்துக் கொண்டே இருக்கும்.

எவருடைய கர்மாவோ எனக்கெதற்கு? நான் ஏன் சுமக்கவேண்டும்? தீர்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அது நம் மூளையின் அறிவு சார்ந்தது. ஆனால் கர்மா கருமையம் சார்ந்தது, மூளை மண்ணோடு மண்ணாகலாம், சாம்பலும் ஆகலாம். கருமையம் அப்படியே நகர்ந்து விடும், ஆண், பெண் வித்தின் வழியாக!

நீங்கள் மனம் விரும்பி வைத்திருக்கும் பொருளில், கறை இருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவீர்களா? 

கர்மா எனக்கில்லை என்று சொல்லுவதாக இருந்தால், ஏன் உங்கள் நடவடிக்கைகள், உங்களின் முன்னோர்கள் மாதிரி, தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி இருக்கின்றன? உங்கள் சொந்த வழக்க பழக்கங்களை ஏன் நீங்கள் செயல்படுத்துவதில்லை?! கற்றுக் கொள்ளவில்லையா?! கற்றது பதியவில்லையா? செயல்படுத்த முடியவில்லையா?! 

இன்னமும் யோசிக்கலாம், ஆராயலாம்! வாழ்க வளமுடன்.


What do the planets do to me?! - 02


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? - 02



இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்க:
இங்கே படிக்கலாம்

கிரக ஆராய்ச்சி - நவீன வரலாறு

உலகில் வாழும் எல்லோருக்குமே ஒரளவு ஜோதிடம் குறித்த அறிவு இந்நாளில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஜோதிடத்தை மறுத்துப்பேசும் ஆட்களும் அதற்கேற்பவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் அணுவியல், அறிவியல் வளர்க்கும், வளர்ந்த மேற்கத்திய நாடு மக்களும் விதிவிலக்கல்ல. விண்வெளியில், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் நீள அகல அமைப்பில், ஆனால் ஒரு பெரிய ஆங்கில எழுத்து H போல மிதந்து, ஒரு நாளைக்கு 16 முறை பூமியை வலம் வரும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கும் காலத்திலும், சோதிடம் சக்கைபோடு போடுகிறது. 


சூரினின் வெப்பக்கதிர்களை ஆராய்ச்சி செய்யும் துணைக்கோள் அணுப்பிவைத்து, சூரியப்புயலை படம் எடுத்து அனுப்பிவிட்டது, அந்த படங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். சூரியகுடும்பத்தை விட்டு வெளியே போய்விட்டது ஒரு தொலைநோக்கி துணைக்கோள், அதன் வழியாகவே பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்பதற்கான யூகத்திற்கு, சான்றுகள் கிடைத்தது. இப்பொழுது புதிதாக, இந்த பிரபஞ்சம் உருவாவதர்கு காரணமாக சொல்லப்படும் பெரும் வெடிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக, முற்றிலும் பெரிய நவீன தொலைநோக்கு துணைக்கோளும் அனுப்பியாகி விட்டது.  


கடந்த வருடத்தில், செவ்வாய் கிரகம் நோக்கி, ஆராய்ச்சிக்காக அனுப்பிவைக்கப்பட்ட துணைக்கோளும், ட்ரோனும், மண், நில பரிசோதனை வண்டியும் கூட, செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கி, அதன் அதன் வேலைகளை செய்து, அதன் மாதிரி படங்களை, செய்திகளை பூமிக்கு தந்துகொண்டு இருக்கிறது. தனுசு ராசிக்கட்டத்தில் அமைந்திருக்கும், இப்போதைக்கு பெரிதாக காணப்படும், கருந்துளையையும், உலகின் பல இடங்களில் அமைந்திருக்கும், நவீன வானியல் தொலைநோக்கி வழியாக, பகுதி பகுதியாக படம் எடுத்து, இணைத்து, அக்கருந்துளையின் உண்மை வடிவத்தையும் உலகுக்கு அறிவித்து விட்டார்கள். இப்படியாக விஞ்ஞானம் ஒருபக்கம், அந்த கிரங்களையே துளைத்துக் கொண்டிருக்கையில், ஜோதிடம் குறித்தான நம்பிக்கை மாறவே இல்லை என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.


ஜோதிடம் வழி எது?

பலப்பல வகையில், ஜோதிடம் நம் வாழ்நாளில் கலந்து பிண்ணிக் கொண்டது. இதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. இதில் வியாபார, வணிக பிண்ணனி உண்டா என்று ஆராய்ந்தாலும் அதுவும் சரியாக இல்லை. ஏனென்றால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது அரசர்கள் நாடாண்ட காலங்கள் வரை, ஜோதிடர்கள் காசுக்காக ஜோதிடம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு ஜாதகன் மனம் உவந்து கொடுப்பதை வாங்கிக்கொள்ள மறுக்கமாட்டார்கள். மேலும் ஜோதிடம் ஒரு கலையாக மதிக்கப்பட்டதால், மற்ற கலைஞர்களோடு, ஜோதிடர்களும் சமூகத்தில் மதிக்கப்பட்டார்கள். மேலும் அரசர்களின் ஆலோசகர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்பட்டது.

அந்த வழியாக வளர்ந்த ஜோதிடமே, தற்காலத்தில் பணத்திற்காக, வாழ்வாதாரமாக மாறி தொழிலாகவே எங்கும் பரவலாகிவிட்டது. மேலும் கூர்ந்த அறிவுள்ள யார்வேண்டுமானாலும் கற்றுத்தேர்ந்து, ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்றும் மாறிவிட்டது. 


ஊன்றிபோனது

ஜோதிடம் மக்களிடம் மிகுந்த சிறப்பு அடைந்ததற்கு முக்கிய காரணம், தன் குடும்பம், தொழில், வறுமை நிலை மாறுமா என்ற கேள்வியில்தான். எப்போதுமே நல்ல பொருள், பணம், நிலம், வீடு, வசதி என்று வாழ்பவன், நிச்சயமாக ஜோதிடத்தை நம்ப மறுப்பான். சிலர் கடவுளையே கூட நம்ப மறுப்பான் என்பதும் உண்மை. ஒரு ஏழை தனக்கு பிறக்கும் குழந்தை வழியாக, தன் நிலைமையும், குடும்ப வறுமையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான், பிறந்த அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதி, அதற்கான பலன் பார்க்கிறான். இந்த பழக்கமே தொடர்ந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது. 


அலைத்தொடர்பு

கிரகங்கள் எப்போதும், தன் சுழற்சியினால் அலைகளை இந்த பிரபஞ்சம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கின்றன. அந்த அலைகளில் நேரடியாக நாம் வாழும் பூமியை வந்தடைவதில்லை. அந்த அலைகள் வரும் வழியில் வேறென்ன கிரகங்கள் இருக்கிறதோ அதனுடைய அலைகளையும் இணைத்துக் கொண்டே வருகிறது. மொத்தமாக மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களோடும், உயிரற்ற பொருட்களோடும் தொடர்புகொண்டு, பூமியின் மையம் நோக்கி நகர்ந்தும் அல்லது பூமியைக்கடந்தும் செல்கிறது. இது ஓவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

அந்த அலைகள், மனித மனதோடு பெரும்பகுதியும், உடல் உறுப்புக்களோடு பிற பகுதியும் செயல்படுகிறது. உதாரணமாக உடல் உறுப்புக்களில்

கிரகம்உறுப்பு
சூரியன்எலும்புகள்
புதன்தோல்
சுக்கிரன்ஜீவசக்தி
சந்திரன்இரத்த ஓட்டம்
செவ்வாய்மஜ்ஜை
குருமூளைச் செல்கள்
சனிநரம்புகள்
ராகு-கேதுஓஜஸ் எனும் உயிர்சக்தி

அந்த அலைகள் எவ்வாறு செயல்படுகிறது என்ற உண்மையையே, கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? என்ற தலைப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு விதை மண்ணில் விதைக்கிறோம், அல்லது தானாகவே மரத்தின் விதைகள் மண்ணில் விழுகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். அந்த விதை ஈர மண்ணில் விழுந்தால் தானாகவே வேர் பிடித்துக் கொள்ளும் அல்லது மழைக்காக காத்திருக்கும். நாம் விதைத்தால் நாமே தண்ணீர் ஊற்றி காப்போம். 

ஒரு விதைக்குள் மரம் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தது தானே? மரம் உள்ளே இருக்கிறது என்பதர்காக, விதைத்த உடனே மரமாகிவிடுவதில்லை. அதற்கென்று காலம் தேவைப்படுகிறது. ஒரு விதை மரமாக வேண்டும் என்பதற்கான வழிமுறை, (கணிணி மென்பொருள் போல அல்லது வீடு கட்ட உதவும் மாதிரி படம் போல) அந்த விதைக்குள் இருக்கிறது. அந்த வழிமுறையை அவ்வப்பொழுது தூண்டுவதற்கு இந்த கிரகங்கள் உதவுகின்றன. ஏனென்றால் காலம் என்பது கிரங்கங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டதுதானே?! அப்படியானால் ஒரு விதைக்கும், மரத்திற்கும் ஜாதகம் எழுதலாமா என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. எழுதலாம் தவறில்லையே!


மனிதனுக்குள் தூண்டுதல்

இதைப்போலவேதான், மனிதனும் அவனின் வளர்ச்சி, வாழ்க்கை முறை, நடவடிக்கை, அவனின் முன்வினைபயனாக இனி செய்யவிருப்பது, பெற இருப்பது என்பதாக அவனுக்குள் வழிமுறை அமைந்திருக்கிறது. அது அவன் வாழும் காலத்தில் தானாகவே வெளிப்படும் என்பதும் உறுதி. அல்லது அவன் அவனுடைய எண்ணங்களாலும், சொல்லாலும், செயலாலும் வரவழைத்துக் கொள்வான். ஏற்கனவே தாயின் வயிற்றில் கரு, உடலாக மாறிடும் பொழுதே, கிரகங்களின் ஆளுமை பார்த்தோம். குழந்தையாக வளர்ந்து, பிறந்து வெளி வரும் காலத்தில், தனித்த உயிராக மாறிவிடுவதால், தனியான ஜாதக குறிப்பும் அமைந்து விடுகிறது.

அந்த ஜாதக குறிப்பின் படியே, அந்த குழந்தையின் உடல், மன, உயிர் நிலைமை, பெற்றோரிடம், பெரியவர்களிடம் நடந்துகொள்ளும் முறை, வெளியிடம் சமூகத்தில் நடந்துகொள்ளும் முறை, நட்பு, பகை, ஆர்வம், சிறப்பு, பொருளீட்டும் வாய்ப்பு, எதிர்பாலின கவர்ச்சி, அரசு உதவி, தெய்வ உதவி, ஆயுள் இப்படி பலப்பல தலைப்புக்களில் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் சொல்ல துவங்குகிறார்கள். இந்த குறிப்பின்படி சொல்லுவதெல்லாம் அப்படியே சிறப்பாக அமைந்துவிடுமா என்றால் அங்கேதான், இந்த இயற்கை ஒரு தடுப்பு வைக்கிறது.


நடந்தது, நடப்பது, நடக்கப்போவது

ஒரு ஜோதிடர் எந்த மனிதருக்கும், அவனின் ஜோதிடத்தை ஆராய்வாரானால், நடந்ததும், நடப்பதும் ஏறக்குறைய சரியாக அமைவது போல இருக்கும். நீ இப்படிப்பட்டவன், உனக்கு இந்த இடத்தில் நோய் வந்திருக்கும். நீ பிறந்த பொழுதே குடும்பத்தில் வறுமை, தகப்பனோடு ஒற்றுமையில்லை, ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டாய், திருமணம் தள்ளிப்போகிறது. குலதெய்வம் வழி விடவில்லை. குழந்தை தாமதம், தொழிலில் சிறப்பில்லை. கடல் கடந்துபோய் சம்பாரித்தால்தான் நல்லது. இப்பொழுது வீடு, நிலம் வாங்க வழியில்லை. நட்பு சரியில்லை, திருட்டுத்தனம் செய்யாதே மாட்டிக்கொள்வீர், அரசோடு மோதாதே என்றெல்லாம் சொன்னால் ஆமாங்க, சரிங்க என்ற பதில்தான் ஜாதகர் தருவார். 

ஆனால் நடக்கப்போவதை கணித்து சொன்னால், அம்மனிதர் வாய்பிளந்து கேட்டு சந்தோசம் செய்து, ஜோதிடர் கேட்ட பணத்தை அல்லது அதற்கு மேலாக கொடுத்து வீட்டிற்கு திரும்புவார். ஆனால் ஜோதிடர் சொன்ன காலம் வரும்பொழுது, சில பலன்கள் தலைகீழாக நடக்கும் அல்லது நடக்காது. ஏன்?


மனம் கிரகத்தை தொடர்புகொள்ளுமா? 

மனிதன் தன்னுடைய மனதால் வாழ்கிறான். அப்போதும், இப்போதும், எப்போதும் அப்படித்தான். இதில் மாற்றத்திற்கு இடமே இல்லை. ஏற்கனவே கிரகங்கள் மனித மனதோடு தொடர்பு கொள்ளும் என்றும் கண்டோம் அல்லவா? அது உண்மையானால், மனமும் கிரகங்களோடு தொடர்பு கொள்ளுமே!  

தனக்கு நிகழ்ந்த பிரச்சனைகளின் அடிப்படையில்தான், அம்மனிதன் தன்னுடைய ஜாதக ஆராச்சியை தொடங்குகிறான். அந்த நொடியே அவனுடைய மனம், கிரங்களை நோக்கி கவனம் கொண்டு விடுகிறது. அந்த எண்ணமேதான், ஒரு ஜோதிடரை பார்க்கும்படி அவனை தூண்டுகிறது. ஜாதக பலன் பார்க்கிறான். ஜோதிடர் சொல்லும் கருத்துக்களை கேட்கிறான். அவர் சொன்ன விளக்கம், வழிமுறைகள் கேட்டுக் கொள்கிறான். இப்பொழுது அவனுக்குள், அவனுடைய ஜாதக்கபடி, தனக்கு நல்லது செய்யும் கிரகம், கெட்டது செய்யும் கிரகம் என்று வகைப்படுத்திக் கொள்கிறான். ஒரு எச்சரிக்கையை அமைத்துக் கொள்கிறான். ஆனால் அதே கவனம் நீண்ட நாளைக்கு இருப்பதில்லை மறந்தும் விடுவான். பிறகு வழக்கம்போலவே ஜாதக பலன்களையே மறந்துவிடுவான். எல்லாம் என் தலையெழுத்து, அதுதானே நடக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொள்வான். 


தூண்டுதல்

இந்த நிலையில்தான் கிரங்கள் எப்போதும் செய்வதை செய்கின்றன. அது என்ன? தூண்டுகின்றன. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆரம்ப காரணியாக கிரகங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் அதைக் குறித்து கவனம் வைத்தாலும், வைத்துக்கொள்ளா விட்டாலும் அவனுக்குள் அக்கிரகங்கள் தூண்டுதலைத் தருகின்றன. ஆமாம், பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கிரகங்கள், மனிதனை தூண்டுகின்றன.


கட்டுரை இந்த பகுதியோடு முடிகிறது. 

வாழ்க வளமுடன்!


Present by:

Thanks to Images to: Internet source copyright to it's owners

Let's Give Up to Guru - Part 02


 குருவை சரணடைவோம் - பாகம் 02


கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும்.  வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.


கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!

இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம். 


குருவை தேடும் காலம் எது?

ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள். 

கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.


நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை

அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும். 


அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!

எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. 

உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.

உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே.  வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம். 

வாழ்க வளமுடன். 

Athma and it's Imprints



 கேள்வி: 

ஆன்மா எப்படி களங்கமடையும்? அது தூய்மையானது அல்லவா?


பதில்:

நான் யார்?

பொதுவாக ஆன்மா என்பதுகுறித்து அறியாவிட்டாலும், நாம் ஆன்மா என்று “எவ்வகையிலோ” அறிந்திருக்கிறோம். இதற்கு பல ஆன்மீக நூல்களும், ஆன்மீக தலைவர்களும், யோகிகளும், சித்தர்களும், குரு மகான்களும் துணை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் சொன்னதை கேட்டதோடு சரி, தன்னை அறிவதற்கான “பாதையில்” செல்வதற்கு மட்டும் யாருக்கும் ஆர்வமில்லை என்பதுதான் உண்மை. 


என்ன வித்தியாசம்?

பொருளியல் சார்ந்த இப்புவி வாழ்வில், தன்னையும், தன் பொருளாதர நிலையை உயர்த்தி, அதை தக்கவைப்பதற்கே பெரும்பாடாகி இருக்கின்ற நிலையில், தன்னை உணர்ந்தால் என்ன? உணராவிட்டால்தான் என்ன? என்றும்,

உணர்ந்தவன் மட்டும் என்ன, காலம் காலமாக நிலைத்து வாழ்ந்து விடுகிறாரோ? அவரும் நம்மைப்போல செத்துத்தானே போகிறார், சரித்தான், அவரும் போகிறார், நானும் போகிறேன் போ, போ. என்று சொல்லி, இறந்தும் வாழ்வது குறித்த உண்மை அறியாமல் பேசி, தன்னை அறியாமலேயே, மகத்தான இந்த வாழ்வை, இறை அறிவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தெரியாமல், இன்னும் பேரின்பமாக இந்த வாழ்வை ரசிக்கத் தெரியாமல், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். 


பேரின்பம்?!

என்ன? இறை உணர்ந்தால் பேரின்பமாக வாழலாமா? என்னாய்யா சொல்றீங்க? இறை உணர காட்டுக்கு போகனும், கல்யாணம் செய்யாம, பிரம்மச்சாரியா இருக்க வேண்டும், சுகங்கள் அனுபவிக்க கூடாது. சிற்றின்பமான உடலுறவு செய்யக்கூடாது, பச்சையாக சொன்னால் “விந்து” வெளியிடக்கூடாது, சில நேரம் நிர்வாணமா வாழவேண்டிவரும், இல்லையென்றால் காவி உடுத்த வேண்டும். மீசை, தாடி, மயிர் மழிக்க கூடாது, பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மொத்தத்திலே பரதேசி மாதிரி வாழனுமே?! நீ என்னமோ பேரின்பம்னு சொல்லுறியே?!

அப்படி சொன்னது யார்? உன்னை, தனிமனிதனை ஏமாற்றி, நீ உழைத்து சம்பாதித்த பொருளையும், பணத்தையும் பிடிங்கித் தின்று, தன் உயிர் வளர்க்கும் கூட்டமே. அவனுக்கு உழைக்க தெரியாது. நீ உழைத்தால் உன்னிடமிருந்து பிடிங்கிக்கொண்டால் அவனுக்கு சுலபம். அதனால் உன்னை அந்தப்பக்கம் போகாதே என்று சொல்லிவிட்டான். 

உண்மையாக, இந்த பூமியில், உனக்கு கிடைத்திருக்கும் பிறப்பு, இந்த உலக இன்பங்களை எல்லாம், அளவோடும், முறையோடும் பெற்று அனுபவித்து, இன்பம் அனுபவிப்பதற்கே. இன்பமாக இந்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால், இன்பம் மிகுந்து பேரின்பமாகும், அதன் தொடர்ச்சியாக அமைதியும் கிடைக்கும். 


அவன் யார் என்று எனக்கு சொல்லுங்களேன்?

உன்னை எமாற்றி பிழைத்து, உனது பொருள், சொத்து, பணம், உழைப்பு இப்படி எல்லாம் பறித்துக்கொண்டு, யார், தன் உயிரும், உடலும் வளர்க்கிறானோ அவனே அவன்.


இதற்கு பதில் என்ன?

ஐயா, இதை எழுதிய நான் கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் பரதேசி மாதிரி போகாமலும், வாழாமலும், உங்கள் இஷ்டப்படி இப்போது இந்த வாழ்க்கையில், நீங்கள் சுகவாசியாக வாழ்கிறீர்களா? 

பதில் கிடைக்குமா?


மனிதனின் பரிணாமம்

ஒவ்வொரு மனிதனும், (மனிதன் என்றாலே, மனம்+இதன் என்று வேதாத்திரி மகரிசி அவர்கள் சொல்லியுள்ளார்) தனக்குள்ளாக நான்கு பரிணாமங்களை உள்ளடக்கியிருக்கிறான் (ள்). அம் மூன்று பரிணாமங்கள்...

1) உடல்

2) உயிர்

3) மனம்

4) ஆன்மா


ஆன்மா

நாம் கேள்விப்பட்டது போலவே, ஆன்மா நீரில் நனையாது, நெருப்பில் எரியாது, காற்றில் கரையாது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மாவை அம்மாபெரும் சுத்த வெளி என்கிற இறைதன்மையோடு ஒப்பிட முடியாது. அதோடு இரண்டும் வேறு, அதன் நிலைகளும் வேறு ஆகும். 

சுத்தவெளி தனைஅறிய நினைத்த பயணத்தில், ஆன்மாவாக மலர்ந்தது. ஆனால் தன்னை அறிந்துகொள்வதற்குள் பலகோடி உயிரினங்களாகவும், அதன் வழியில் மன இதனான, மனிதனாகவும் மலர்ந்தது. மனிதனுக்குள்ளாக, கருமையம் அமைந்து, தன் சரித்திரத்தை பதிந்துகொண்டும் விட்டது. அப்படியாக பிறவி, பிறவியாக ஆன்மாக்களாக வந்தவேளையில் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை பெற்று, ஆன்மாக்களில் களங்கம் ஏற்பட்டுவிட்டது. 

அதில் ஒருசில ஆன்மாக்கள் தன் வாழ்நாளில் தன் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை தூய்மைசெய்து “இறை” உணர்ந்தன. பிற ஆன்மாக்கள் தன் வினைப்பதிவுகளை கழிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறந்தன.  இறை உணர்ந்தவர்கள், அதை, தன்னைச்சார்ந்த மனித குலத்தின்மீது அக்கறைகொண்டு, அவ்வழியை சொல்லியும் எழுதியும் வந்தனர். அவர்களில் நம் குருமகான் வேதாத்திரி மகரிசியும் ஒருவர். 

குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் உருவாக்கித்தந்த, உலக சமாதான சேவா சங்கம் வழங்கும், மனவளக்கலை பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அன்பர்கள் அனைவரும், இறை உணர, குருமகான் அவர்களை சரணடைந்து விட்டோம். இனி அவ் வினைப்பதிவுகளை தீர்த்து தூய்மை செய்துகொள்ள வேண்டும். அதுவே நாம் கடமை என்று வாழ்ந்து வருகின்றனர்.


இறை மற்றும் ஆன்மா

தாமரை இலை தண்ணீர் போல பாதிக்கப்படாதது சுத்தவெளி மட்டுமே. ஆனால் ஆன்மாவில் எல்லா களங்கங்களும் மையம் கொண்டு, வினைப்பதிவுகளாக பதிந்துவிடும். இதனால்தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்று திருவள்ளுவரும் சொல்லியுள்ளார். 

ஆனால், நான் என்ற கேள்வியோடு தன்னை அறிய வாய்ப்பில்லாமல், பிறவித் தொடர் வழியாக, ஓவொருவருக்கும் ஆன்மா களங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு மறுபிறவி இல்லை என்பதை, அறிவியல் ரீதியாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவன் ஆவியை நம்புவான். அது நம்மை பழிவாங்கும் என்றும் சொல்லுவான். இறந்தவன் ஆவியாக இருப்பது ஏன் என்று கேட்டால் பதிலிருக்காது. 

ஓவ்வொரு மனிதனுக்கும் மறுபிறவி தன் குழந்தைகளே, தான் இறை உணர முடியாத நிலையில்தான், 

1) உங்கள் பெற்றோர்கள் உங்களை பெற்றெடுத்தார்கள்

2) நீங்கள் உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறீர்கள்

3) உங்கள் குழந்தைகள் உங்கள் பெயரன், பெயர்த்திகளை பெற்றெடுக்கிறார்கள்

ஆனால் யாரும் இறை உணர தயாராக இல்லை.


முடிவு?!

ஆன்மாவில் களங்கம் என்பதற்கு மட்டுமே இந்த பதிவு தரப்பட்டது. இது புரியவில்லை என்றால், முழுமையான விளக்கம் வேண்டுமென்றால், உங்கள் அருகில் உள்ள, வேதாத்திரி மகரிசி மனவளக்கலை மன்றங்களை அணுகலாம். 

அல்லது உங்களுக்கு கேள்விகள் இருந்தால் இங்கே, பின்னூட்டம் இடுங்கள், அதற்கான பதிலை அடுத்த பதிவுகளில் தருகிறேன். வாழ்க வளமுடன். 

-------------

Thanks to Image: Omid Armin @omidarmin

Compansation and Athma Shanti


பரிகாரமும், ஆத்மா சாந்தியும்

Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India.


நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது.  அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற  வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.

வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,

“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. 

Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi


திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.

படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை. 

பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.

பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது. 

Tree around the snake stones and deities


பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை. 

இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி,  உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!

ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது  உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை. 

இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா? 

“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.  

பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.

“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”

பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. 

photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio