CJ for You: believe

believe

Showing posts with label believe. Show all posts
Showing posts with label believe. Show all posts

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?


தன்முனைப்பு என்பதுதான் நம்மை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்முனைப்பு கூடாது என்றுதானே சொல்லுகிறார்கள். நான் நன்றாக இருக்கவேண்டும், வளரவேண்டும், உயரவேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்? விளக்கம் தருக.

தமிழில் தன்முனைப்பு என்ற வார்த்தை, ஏதோ குறிப்பிட்ட காலங்களில் உட்புகுந்தது போல தோன்றுகிறது. சில வார்த்தைகளை, ஆங்கிலத்தில் இருந்து மொழி (முழி) பெயர்க்கும் பொழுது இப்படியான தமிழ் வார்த்தைகள் வந்துவிடுவதுண்டு. இந்த தன்முனைப்பை, motivation என்று கூட சொல்லுகிறார்கள். ஆனால் பொதுவான சமமான வார்த்தை Ego என்பதாகும்.

எனக்குத்தெரிந்தவரை, தன்முனைப்பு என்ற வார்த்தை, பழந்தமிழில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நல்ல தமிழறிஞர் யாரேனும் இருந்தால், என் சந்தேகம் தீர்க்கலாம். ஆனால், தன்முனைப்பு என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்களோ, அதற்குச் சமமான வார்த்தைகள் இப்படியாக இருக்கிறது. அவை, அகங்காரம்,. தான் என்ற எண்ணம்; செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். செருக்கு, இறுமாப்பு, முனைப்பு ஆகும்.

தான், தனது என்று வாழும் பொழுது, தான் என்ற அதிகார பற்றிலும், தனது என்ற பொருள்பற்றிலும் மனிதன் சிக்கிவிடுகிறான். இதைத்தான் தன்முனைப்பு என்று சொல்லுகிறார்கள்.  தான் என்றும், தனது என்றும் வாழ்வதில் சிக்கலில்லை, ஆனால் தான் மட்டுமே, தனது மட்டுமே என்று குறுகிக் கொள்வதுதான் சிக்கலாகிறது. அதனால்தான், தன்முனைப்பு கூடாது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த குறுகிய மனப்பான்மை அறியமுடிவதில்லை. அதனால்தான், மனிதனுக்கு மனிதனே துன்பம் செய்விக்கிறான். தன்னைப்போலவே இன்னொருவரும் மனிதரே என்று அவன் நினைப்பதில்லை.

மிருகங்களிலும், பறவைகளிலும் இந்த தொல்லை இல்லை. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை பழிவாங்குமா? கீழாக நினைக்குமா? அதன் வாழ்நிலையை சிதைக்குமா? இதைப்போல, ஒரு புலி இன்னொரு புலியை, ஒரு யானை இன்னொரு யானையை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவேளை இவைகளுக்கு ஐந்தறிவு என்பதால், இப்படி இருக்கின்றதோ? நமக்கெல்லாம் ஆறறிவு ஆகிற்றே?

தன்முனைப்பு பெரும்பாலும் சுயநலம் கொண்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு தேவையானது வேண்டும், நான் விரும்பியது வேண்டும். எனக்கானது வேண்டும் என்ற வகையில், தன்னளவில் வாழும்பொழுது, அவன் மனித தன்மையையே இழந்தவனாகிறான். இயற்கையின் இயல்பை கெடுக்கவும் செய்கிறான். ஆனால் அதை அவன் அறிவதும் இல்லை. எனவே நீங்கள் தன்முனைப்பு என்ற வார்த்தைக்கான உண்மையை அறிதல் அவசியமாகும்.

இந்த காணொளி கூடுதலாக சில விளக்கங்களை தரலாம்.

தன்முனைப்பு, சுயமரியாதை புரிந்துகொள்வது எப்படி? தவிர்க்க என்ன செய்யலாம்?

வாழ்க வளமுடன்


Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi


கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?


கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?

பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.

பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.

இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.

மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.

எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.

விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.

இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.

கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,

   கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!

கட -  உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,

   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;

கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக் 

   கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!

கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.

   கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.

மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

Are you feared because someone has teased your face and by comment? Is that true?!


உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!

[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]


பதில்:

என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்

இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன். 

மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?

இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.

இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள்  முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!

எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.

சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!

மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!

இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது. 

சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!

நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன். 

உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும்,  என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.