CJ for You: awaken

awaken

Showing posts with label awaken. Show all posts
Showing posts with label awaken. Show all posts

Can we get everything we ask for through this Law of Attraction? Everyone says they won. But nothing happened to me? How long do you have to be confident? I came to know that Guru Vethathiri Maharshi has said a similar concept and method in Vethathriya also. Is that really the truth?


வாழ்க வளமுடன் ஐயா. இந்த Law of Attraction என்பதை சொல்லும் சீக்ரெட் நூல் வழியாக, நாம் கேட்பதை எல்லாமே பெறமுடியுமா? எல்லோருமே வெற்றி பெற்றதாக சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லையே? எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்? வேதாத்திரியாவிலும் இதுபோன்ற ஒரு கருத்தை, வழிமுறையை, குரு வேதாத்திரி மகரிஷி சொல்லி இருப்பதாக அறிந்தேன். அது உண்மைதானா? அதுகுறித்து விளக்குவீர்களா?

The Secret என்ற நூல் சமீபமாக, (14 ஆண்டுகளாக) உலக மக்களிடையே பிரபலமாகிவிட்டது. பலருக்கும் இது குறித்த விசயங்கள், பேசு பொருளாகி பகிரப்படுகிறது. இது திரைப்படமாகவும், நூலாகவும், கட்டுரையாகவும், ஒலி நூலாகவும் இணையத்திலும் கிடைக்கிறது. நானும் கூட அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாமே! என்று கவனித்தேன். ஆனால் முழுமையாக பார்க்க, படிக்க வாய்ப்பு அமையவில்லை. என்னுடைய சில நண்பர்கள்கூட, அதில் சில உண்மைகள் இருக்கிறது, உதவும், என்று சொல்லி படிக்க சொன்னார்கள். ஏனோ அது ஆர்வத்தை தூண்டவில்லை.


வேதாத்திரிய யோகத்தின் நல்விளக்கம், ஒருவர் பெற்றபின்பு, அவருக்கு வித்தியாசப்பார்வை இருக்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லாவகையான வேதாத்திரியம் அல்லாத கருத்துக்களிலும், அக்கருத்து சொல்லவருவது எது? என்ற உண்மை, அவருக்கு புலப்பட்டுவிடும். இதற்கு உதாரணமாக, இனிப்பு பண்டங்கள் பலப்பல வகையான பெயர்களில், வடிவங்களில், நறுமணங்களில் இருந்தாலும், அவை எல்லாமே, சர்க்கரை இனிப்பு என்ற ரசாயன தன்மையை மட்டுமேதான் பெற்றிருக்கின்ற என்ற அடிப்படை கருத்தில், ஒன்றிணைப்பதைப் போலவே ஆகும்.

எனினும், உங்களுக்காக, உங்கள் கேள்விக்காக, The secret, The power என்ற அந்த நூலை படித்தேன். ரூண்டா பைரன் என்ற பெண்மணி, தன் அனுபவங்களின் அடிப்படையில், அதுபோலவே சிந்தித்து அனுபவம் பெற்ற நபர்களை சந்தித்து, அவற்றை தொகுத்து, திரைப்படமாகவும், நூலாகவும் தந்திருக்கிறார். அதில் சில உண்மைகள் பொதிந்திருக்கிறது. எனினும், அது உலகாதாய விசாரணையாகவே இருக்கிறது. பொருள்முதல்வாத உலகியலில், மனிதனின் தேவைகள் மற்றும் மனம் குறித்து விளக்கினாலும், அங்கே அதற்கான பொது தன்மையில் மட்டுமே விபரம் கிடைக்கிறது. சில ஆன்மீகம் கலப்பு இருந்தாலும், யோகமாகவில்லை. எனினும், சாராசரி மனிதருக்கு தேவையான கருத்துகள் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கேள் கிடைக்கும் என்ற ரீதியில் இருப்பதும், நீங்களே மகத்துவமானவர், ஈர்ப்பு விதி உங்களிடமே இருக்கிறது, செயல்படுகிறது என்பதும், நன்றியுணர்வோடு இருப்பதும், நேர்மறை எண்ணங்களோடு இருப்பதும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தனியாக எதிர்க்கருத்து எனக்கில்லை. எனவே, என்னிடம் விளக்கம் எதிர்பார்ப்பதைவிடவும், நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு கலந்துரையாடி, உண்மை அனுபவத்தை தெரிந்து கொண்டு, உங்களுக்கான வழியை பெற்றுக்கொள்ளுங்கள். பொதுவாகவே, எதுவும் நடக்கவில்லையே? என்ற கருத்துக்கு உடனடியாக வந்துவிடவும் கூடாது. நம்பிக்கை இழக்கவும் கூடாது.

வேதாத்திரியத்தில், இறை என்ற பேராற்றலிடம், கேட்டுப்பெற மனிதனுக்கு தகுதி உண்டு என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இந்த பேராற்றலே, பிரபஞ்ச சக்தி, டோட்டாலிட்டி என்று சீக்ரெட் நூலில் குறிப்பிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் ஆனால், ஏற்கனவே கேட்டுவைத்த வரிசைப்படியேதான் நடக்கும் என்பதையும் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும், உன்னை தகுதியாக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறார். அதையேதான், Fraction demand Totality supplied என்றும் சொல்லுகிறார். தன் வாழ்க்கை அனுபவத்தின் வழியாகவே, அருட்காப்பும், சங்கல்பமும் தந்திருக்கிறார். அதன் விளக்கத்தை, தன் சொற்பொழிவிலும், கட்டுரைகளிலும், கவிகளிலும், என் வாழ்க்கை விளக்கத்திலும் தந்திருக்கிறார்.

இதனோடு, சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் என்பதையும், நமக்கு தந்திருக்கிறார். அதன் உண்மைகளையும் நமக்கு விளக்கியிருக்கிறார். யோகத்தில் நம்மை, நான் யார்? என்று உணர்ந்தறிவது, நம்முடைய பிறப்பின், நோக்கமும் கடமையும் ஆகும். அதனோடு, அந்த ஆராய்ச்சி பயணத்தோடு, உலக வாழ்க்கையும் முக்கியம், குடும்ப கடமையும், சமூக கடமையும் முக்கியம் அல்லவா? வேதாத்திரியம் இதை வலியுறுத்துகிறது. அந்தக்காலம் போல விட்டுவிட்டு செல்வது பொருந்தாது என்றும் சொல்லுகிறது. எனினும் வேதாத்திரிய கருத்துக்கள் தனித்துவமானவை. இவற்றை, The secret, The power, law of attraction என்பதை விளக்கும் நூலின் கருத்தோடு ஒப்பிட முடியாது.

மேலும் சில உண்மை விளக்கமறிய, இந்த காணொளி உதவிடும்.

பிரபஞ்ச அறிவு என்பது என்ன? அதனோடு இணைந்து கொள்வது எப்படி ? உண்மை விளக்கம் Universal Conscious, Human

வாழ்க வளமுடன்

What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?


வாழ்க வளமுடன் ஐயா, இறைநிலை தவம் என்பது என்ன? எதற்கான இத்தவம் செய்யப்படுகிறது? அதை யார்? எப்போது? எப்படி செய்யலாம்? விளக்கமுடியுமா?


இத்தனை கேள்விகளை ஒன்றாக அடுக்கி இருப்பதை பார்த்தால், நீங்கள் வேதாத்திரியத்தின் வெளியே இருந்து கேள்வி கேட்பதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் தருவதின் வழியாக, சில வேதாத்திரிய அன்பர்களுக்குமே உதவக்கூடும் என்றும் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.

இறைநிலை தவம் என்பது, வேதாத்திரியத்தில் மட்டுமே வழங்கப்படும் தவமாகும். அதுவும் நேரடியாக, வேதாத்திரி மகரிஷி அவர்களே வழிநடத்துவதாக அமைந்திருக்கும். வேதாத்திரியத்தின் முழுமையையும், மெய்ப்பொருள் உண்மையையும் உண்டாகித்தரும் தவமாக உள்ளது. வேதாத்திய பாடங்கள், அகத்தாய்வு பயிற்சிகளான எல்லாம் பூர்த்தி செய்து, பிரம்மஞானம் அறிந்து, மற்றவர்களுக்கு அவ்வுண்மையை விளக்கித்தரும் அளவில், அறிந்துகொள்ள உதவும் தவமே ‘இறைநிலை தவமாகும்’. அப்படியான பயிற்சியின் முடிவில், இத்தவம் கற்றுக்கொண்டாலே, ஆசிரியராகிவிட முடியுமா? என்றால் அதுதான் இல்லை.

இறைநிலை தவம், தொடர்ந்து செய்து, அதை நாம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவது போல, ‘மனதின் அடித்தலமே நிலைபொருள், அது தெய்வம்’ என்ற வகையில், ஒருமுனையில் நாமும், மறு முனையில் மெய்ப்பொருளும், இணைந்திருக்கும் நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே இருத்தல்’ என்பதை அனுபவமாக பெற வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது அவரவருடைய, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, அனுபவம், கர்ம வினை, அகத்தாய்வு ஆகியன துணையாக இருந்து உதவும். எனவே நாம் அக்காலத்தை கணிக்க முடியாது.

இந்த இறைநிலை தவம், முழுமையாக நம்மை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் அல்லது உயர்வைத்தந்து முழுமையை தரும் என்பது உண்மை. இது பொதுவெளியில் இல்லை. மற்ற எந்த யோக சேவை மையங்களிலும் இல்லை. இதற்கு முன்பும் எந்த ஒரு வகையில், இத்தவம் இருந்ததும் இல்லை என்பதே உண்மையாகும். முழுமையாக, தானாக, தான் உணர்ந்த உண்மையை, அன்பர்களுக்காக, அவர்களின் உயர்வுக்காக, வேதாத்திரி மகரிஷியே இத்தவத்தை வடிவமைத்து, நேரடியாக நடத்தியும் தந்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.

        சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், மெய்யியளாலர்களும் கண்ட மெய்ப்பொருள் உண்மையை, தவத்தின் வழியாக, உங்களுக்குள் உணர்த்தித்தருவதே ‘இறைநிலை தவத்தின் தத்துவமாகும்’. இதை நீங்களும் நானும் வார்த்தையால் விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த இறைநிலை தவத்தை எப்படிச் செய்யலாம்? அதை வேதாத்திரிய பாடத்திட்டத்தின் வழியாக உங்களுக்குச் சொல்லித்தருவார்கள். அதை நான் இங்கே விளக்கினால், நீண்டு எழுதிக்கொண்டே செல்லவேண்டும். பதிவு இப்போதைக்கு முடியாது. எனவே, நேரடியாக, வேதாத்திரியத்தில் இணைந்து கற்றுக்கொண்டு, இறைநிலை தவத்தை செய்யலாம். அதுதான் உங்களுக்கான உண்மை விளக்கத்தை தரும். 

இந்த இறைநிலை தவம் செய்வதற்கு, எந்த நேரமும் தனியான அமைக்கப்படவில்லை. பிரம்ம முஹூர்த்தம் என்ற அதிகாலை 3:30 என்றெல்லாம் கடின அவசியமில்லை. அதிகாலை, பகல், மாலை, இரவு என்ற வித்தியாசமும் பார்க்க வேண்டியதில்லை. அதுதான் இந்த இறைநிலை தவத்தின் சிறப்பும் ஆகும்.

முக்கியமாக ஒன்றை, இங்கே சொல்லுகிறேன். இந்த இறைநிலை தவத்தின் வழியாக, நம்முடைய உடலில், எந்த ஒரு ஆதார சக்கர மையங்களும் தூண்டப்படுவதில்லை. அதனால் ஏற்படக்கூடிய கடினமோ, சிக்கலோ, பயமோ அவசியமும் இல்லை. நம்முடைய மனமே இதில், இத்தவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய மனமே அந்த அனுபவத்தையும் பெறுகிறது, உயர்கிறது.

இறைநிலை தவம், வேதாத்திரியத்தின் முழுமை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுன் முழுமையான உண்மையையும், உயர்வையும் தரும் தவமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-


What is the answer to those who say that the practice of yoga is a deception, a survival for a yogi?


யோக பயிற்சி என்பது ஏமாற்றுவேலை, யோகிக்கான பிழைப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் என்ன?



இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்லாம். ஒரு உண்மை விளக்க தத்துவ நிகழ்ச்சிக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் ஒரு இளைஞன், வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கிறான்.

‘சுவாமிஜி, உங்கள் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டேன். மகிழ்ந்தேன். உண்மைகளும் தெரிந்தன. இந்நிலையில், நான் உங்களைப்போல ஆகவேண்டும். அதற்கு என்னவழி?’

‘நல்லது, அது கடினமில்லை. இங்கே வழங்கப்படும் பயிற்சிகளில் இணைந்து, கற்றுக்கொள்க. அப்பயிற்சிகளே உன்னை, என்னளவிற்கு உயர்த்தித்தரும்.’

‘ஓ, அதற்கெல்லாம் விருப்பமில்லை. எளிமையாக உங்களைப்போல ஆகவேண்டும், அதுதான் என் நோக்கம்’

இளைஞனின் கருத்தை புரிந்துகொண்ட பின் ‘சரி, அப்படியானால், உடனடியாக ஒரு துணிக்கடைக்குச் சென்று, இதுபோல வெள்ளை குர்தா, வேஷ்டி, மஞ்சள் துண்டு வாங்கிக்கொள். அணிந்து தயாராகலாம். ஆனால் இதுபோல தாடி வளர, குறைந்தது மூன்று மாதம் ஆகுமே?’

‘ஆமா, ஆனாலும்...’

‘உனக்கு என்ன விருப்பமோ அதை நீயே செய்துகொள், ஒத்துவரவில்லை விட்டுவிடு’ என்று வேதாத்திரி பதிலளிக்கிறார்.

இப்படியாக, உண்மையை அறிந்து உணராமல், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், வெளி தோற்றத்தில் தன்னை, யோகியாக காட்டும் நபர் எப்போதுமே உண்டுதான். உண்மையான யோகிக்கு கிடைக்கும் மரியாதையை, தானும் பெற விரும்பி, இப்படி வேடமிட்டுக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் மக்களிடம், பணமும் பொருளும் பெற்று, தன்னை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் நிகழ, இப்படியான போலியான யோகிகளைதான் மக்களும் நம்புகிறார்கள் என்பதும் உண்மை. ஒரு யோகி, தன்னுடைய தோற்றத்தில், இப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது ஒரு நடைமுறை பழக்கமே அன்றி, கட்டாயமில்லை.

பெரும்பாலான யோகிகள், காவியும், பச்சையும், ஆரஞ்சு, மஞ்சள் துண்டு, தாடி, மீசை, ஜடாமுடி என்று இருப்பார்கள். கையில் நுகத்தடியும், கமண்டலமும் கூட உண்டு. புலித்தோல், நம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், அது இல்லை. ஆனால், வேதாத்திரி மகரிஷி இதற்கு மாறாக, வெள்ளை குர்தா, பஞ்சகட்சம் வேஷ்டி,  காவி துண்டு என்றுதான் அமைத்துக் கொண்டார். தாடி மீசை இயல்பாக அமைத்து கொண்டார். தான் உணர்ந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் வழியாகவும் தெளிவு செய்தார். விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டினார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின், வான் காந்த தன்னிறைவுக்குப் பிறகு, சில யோகிகள் வேடத்தை ஏற்றுக்கொண்டுதான் வலம் வருகிறார்கள். அவர்களையும், சுவாமிஜி என்றுதான் வேதாத்திரிய அன்பர்களும், மக்களும் அழைக்கிறார்கள். இவர்கள் உண்மையா? போலியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வேதாத்திரி மகரிஷி, சுவாமிஜி என்பதை விட, ஐயா என்று அழைப்பதை விரும்பினார் என்பதும் உண்மை. தன்னை அருட்தந்தை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொண்டார். விருப்பு வெறுப்பு ஏதுமில்லாத அரவணைப்பும், திருத்துதலும், கண்டிப்பும், பாதுகாப்பும், உயர்வு தருவதும் தந்தையின் பண்புகள் தானே!

இந்த போலியான யோகிகளை மக்கள் ஏற்பது, பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இன்றும், இப்போதும் உண்டுதான். எனினும், தன் காலத்திலேயே, மக்களின் அறிவு வளர்ச்சி மாறிவருகிறது. யோகிகளை அடையாளம் காண்பதில், மக்கள் நிலை இப்படி மாறியுள்ளது என்று அவரே விளக்க்குகிறார். ‘அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.'

‘யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.’

‘தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது. இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.’என்பதாக,  அருட்தந்தை வேதாத்திரி மகரிசி தெளிவு செய்கிறார்.

ஆனால், மக்களின் சுய சிந்தனையும், ஆராய்ச்சியும் அற்ற நிலையில், தோற்றத்திற்கு மதிப்புதந்து ஏமாறும் போக்கு மாறவில்லை என்பது உண்மையே. ஒரு பைத்தியக்காரரைக்கூட சித்தர் என்று சொல்லும் கூட்டமும், மதிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அதுபோல, காவியும், தாடியும், ஜாடாமுடியும் இருந்தாலே, இவர் யோகி என்று மதித்து, கைகட்டி, காலில் விழும் கூட்டமும் நம்மிடையே உண்டு. இதற்கு வழி, காலமும், அதுதரும் அனுபவமும் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

-

How can we understand that God and Brahmmam are? Does it really matter? Is it necessary to accept that? truth explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பதும் பிரம்மம் என்பதும் எப்படி விளங்கிக் கொள்வது? உண்மையாகவே இருக்கிறதா? அப்படி ஏற்றுக்கொள்வது அவசியம் தானா? உண்மை விளக்கம் தருக.


        உங்கள் அடிப்படை சந்தேகத்தை விளக்கக்கூடிய கேள்வி என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உதவக்கூடிய விளக்கமும் கிடைக்கும் என்பதும் உண்மை. ஏற்கனவே இந்த கேள்வியின் அடிப்படையில், விரிவாக விளக்கம் தந்துள்ளேன். அதை, இங்கே தேடிப்பார்த்து படித்து அறியலாம். இன்று கூடுதலாக, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கித்தருகிறார் என்றும் பார்க்கலாம்.

இறைநிலை உணர்ந்த அறிவு, வாழும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். அது அவசியமும் கூட. காரணம், அதில் அவனுடைய பரிணாம எழுச்சியின் உண்மை மறைந்திருக்கிறது. மற்ற ஜீவன்களில் இருந்து, எந்த வகையில் அவன், ஆறாம் அறிவின் உன்னதத்தை பெற்றிருக்கிறான் என்ற காரணம் உள்ளடங்கி இருக்கிறது. அது அவனுடைய பிறவிக்கடமையாகவும், பிறவியின் நோக்கமாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், உதாசீனப்படுத்தி விலகிக் கொண்டாலும், யாருக்கும் ஏதும் இழப்பு இல்லை. ஆனால், பிறந்த அந்த மனிதனின், பிறப்பு ‘வீணாகி விடுகிறது’. எனவே, அறிந்து உணராமல் மடிந்துவிடுவது, அவனுக்கே இழப்பாகிறது. அந்த இழப்பு, அவனுடைய வாரீசுகளுக்கும் தொடர்ந்தால் என்னாவது? 

இந்த நிலையில், ஒரு மனிதன் அவனின், பிறவி நோக்கமும், பிறவிக்கடமையும் தெரிந்து கொண்டால் என்னவாகும்? ‘நான் யார்?’ என்று தெரிந்து கொண்ட பிறகு, கிடைக்கக்கூடிய அந்த ‘முழுமை இன்பம்’ அனுபவமாக மட்டுமே கிடைக்கக்கூடியது. ஒருபோதும் வார்த்தைகளால், எழுத்துக்களால் விளக்கித்தர முடியாது. எனினும், வேதாத்திரி மகரிஷி அதுகுறித்த விளக்கத்தை, உங்கள் அளவிற்கு தருவதை, இதோ காணலாம்.

பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனித பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவேதான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.

இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் தூள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், ‘பிரம்மம்’ எனும் தெய்வீகப் பேரற்றாலின் சரித்திரம்.

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்’ என்ற வகையில் உண்மை விளக்கமளிக்கிறார், வேதாத்திரி மகரிசி.

இந்த உண்மைகளை, தன் வாழ்நாளில் அறிந்து உணர்வதற்காகவே பிறவியெடுக்கிறான். ஆனால் பிறந்த பிறகும், வாழும் நிலையிலும், அதை மறந்துவிடுகிறான். எல்லாவற்றையும் மறுத்தும் விடுகிறான். அதோடு மடிந்தும் விடுகிறான்.

வாழ்க வளமுடன்.

Will you explain briefly but clearly the real truth of Brahma Gnana?


பிரம்ம ஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை, சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கித் தருவீர்களா?


பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்களே, மிக எளிமையாக, தன் எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை வழியாக, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை விளக்கித் தருகிறார். இதை யாவரும், வார்த்தையால் விளங்கி கொள்ளுதல் சிறப்பு எனினும், அதை அனுபவபூர்வமாக, தனக்குள்ளாக, உணர்தலாக அறிந்து கொள்வதுதான், முழுமையான பலனைத் தரும். மனிதனாகப் பிறந்த, நோக்கமும் நிறைவேறிடும். வாழும் இவ்வுலக வாழ்வின் சிறப்பு அனுபவிக்க முடியும். அந்த பலனையும், அனுபவத்தையும் விளக்கிடுதல் எளிதன்று. உதாரணமாக சொல்லப்போனால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை ஆகிவிடும். ஒரு யோக சாதகரின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி என்ற வகையிலும், உண்மைகள் அவரை ஊக்குவிக்கும். இதோ, வேதாத்திரி மகரிஷியின் உண்மை விளக்கம் காண்போம்.
சுத்தவெளிதான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும்.
முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தின்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும் போது எழுகின்ற நுண் அலைகள் தான் காந்தம் எனும் நிழல் விண்கள்.
நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல்விண், நிழல்விண், காந்தம், காந்தத் தன் மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். 
பரமாணு முதல் கொண்டு, எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.
இந்த ஒவ்வொரு நிலைகளையும், நமக்குள்ளாக, கடந்து உள்ளே அறிவதின் வழியாகவே அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். இந்த உண்மையை அறிவதற்காகவே, தன் மாற்றமாக, பரிணாமத்தின் எழுச்சியாக, மனிதன் வந்தான். இந்த பிரம்மத்தை இறைவன் என்ற மதிப்பில் எளியமக்களுக்கு அறியத்தருவதுதான் பக்தியாக, யோகத்திலிருந்து மலர்ந்தது. ஆனால், பக்தி பலரிடம் சிக்குண்டு, பிரம்மம் இறைவனாகி, மனிதன் படைப்புத்தத்துவமாகி, தூரத்தையும், பிறப்பையும், வாழ்க்கையையும், காலத்தையும் அதிகமாக்கிவிட்டது. என்றாலும்கூட, இயற்கையே, அவ்வப்பொழுது அத்தகைய, பக்தி வழியில் ஆழ்ந்து, நிறைந்து, அடுத்த நிலை என்ன? என்று தேடும் மனிதர்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், வான்காந்தம் என்ற பேராற்றலில் தன்னை இணைத்துக்கொண்டு வழித் துணையாகவும் இருக்கிறார்.
வாழ்க வையகம்,  வாழ்க வளமுடன்.

Why is it exalted as divine power? How does it relate to us? What is the need to respect it?


இறையாற்றல் என்று உயர்வாக சொல்லப்படுவது ஏன்? நம்மோடு எப்படி தொடர்புகொண்டதாகிறது? அதற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?


பொதுவாகவே, நாம் வாழும் காலத்தில், இறை என்பது குறித்த சந்தேகங்கள் நிறைய உண்டு. காரணம் பன்னெடுங்காலமாக, அதை நாம் ஆராயாமல், உண்மை அறியாமல், பக்தியில் மட்டுமே திளைத்து இருந்ததுதான். பக்தி என்பது, மெய்ப்பொருளை விளக்கும் சிறு முயற்சி, அடிப்படை தத்துவம் மட்டுமே. அந்த பக்தியின் வழியாக, இறை என்று சொல்லப்படுவது எது? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யோகத்தின் வழியாக உணர்வேண்டியது அவசியம்.

ஆனால், உண்மை அறிகிறேன், அறிந்துவிட்டேன் என்று, தான் சொல்லும் விளக்கங்களிலேயே, நிலைத்து நிற்கமுடியாது தடுமாறும் விஞ்ஞான அறிவின் துணை கொண்டு, இறை என்பதே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடும் நிலைதான் நம்மோடு இருக்கிறது. ஆனால் உண்மை நிலைத்து இருக்கிறது. உங்களுடைய  இந்த மூன்று கேள்விக்கும், பதிலாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி விளக்கம் தருகிறார் என்று பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களான பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது. 

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. 

  வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

மகரிஷியின் இத்தகைய விளக்கம், உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒன்றையும் நுணுகி, ஆராய்ந்து பார்க்கவே, மனிதனுக்கான, மனிதனுக்கு மட்டுமான ஆறாம் அறிவு அவனுக்கு கிடைத்திருக்கிறது. எந்த உண்மையையும், இயற்கையையும் அவன் ஒதுக்கித் தள்ளுகிறானோ, அந்த இயற்கையே அந்த ஆறாம் அறிவையும் அவனுக்கு வழங்கி இருக்கிறது. உண்மை விளக்கம் பெறவும், அறிவின் முழுமையை பெறவும், யோகமே துணையாகிறது.

வாழ்க வளமுடன்.

-

How to understand the Almighty worship between just human and after realization


சராசரி மனிதனின் இறைவழிபாடும், இறையுணர்வு பெற்ற மனிதனின் இறைவழிபாடும் ஒன்றானதுதானா? எப்படி விளங்கிக் கொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சராசரி மனிதனின் இறைவழிபாடும், இறையுணர்வு பெற்ற மனிதனின் இறைவழிபாடும் ஒன்றானதுதானா? எப்படி விளங்கிக் கொள்வது?


பதில்:

இந்த கேள்விக்கான விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே தருகிறார். அதையே உங்களுக்கு தந்துவிடுகிறேன். முன்னதாக, சராசரி மனிதன், தன்னளவில் இறைவழிபாடு செய்கிறார். அது உண்மை, விளக்கமற்று மறைந்திருக்கிறது. யோகத்தின் வழியாக, தன் முயற்சியினாலும், ஆர்வத்தினாலும்,  பக்தி என்ற வழிபாடு கடந்து, இறையுணர்வு அடைந்தவரின் வழிபாடு, உண்மை உணர்ந்த வழிபாடாக இருக்கும். அந்த வழிபாட்டின் உண்மையை, இதோ அறிவோம்.

ஒருவர் இறையுணர்வு பெற்று விடுகிறார். அவர் பெறும் விளக்கம் என்ன? பேரியக்க மண்டலம் முழுவதும் காணப்படும் காட்சிகள் விண் எனும் நுண்துகள்களும், இறைவெளியும்தான். இந்த இரண்டு தத்துவங்களின் கூட்டு இயக்கம்தான் அனைத்துத் தோற்றங்களும். ஒவ்வொரு தோற்றத்திலும் விண், வெளி இவற்றின் விகித அளவுதான் வேறுபடும். இந்த இரண்டில் வெளியேதான் இறைநிலையாக, பூரணப் பொருளாக, தெய்வமாக உணருகிறார். எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. ஒவ்வொரு விண் எனும் பரம அணுவைச் சுற்றிலும் இருப்பது இறைவெளியே. 

விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக் காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது.

இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும் உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.

இவ்வாறு இறைநிலையானது [தெய்வம்] தனது காந்தமென்ற ஆற்றலால் உடலைச் சீராக நடத்தும் போது எனது புலன் உணர் ஆர்வத்திலெழும் செயல்களாகிய உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோ, தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. 

அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் செயல்களை அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே வாழ வேண்டும் என்ற விளக்கமும், அதற்கேற்ற செயல்களும்தான் இறைவழிபாடு.

எனது உடல், உள்ளம் இவற்றில் இறையாற்றல் அதன் அருட்செயலை ஆற்றுவது போல், எல்லா மனிதரிடத்திலும் செயல் புரிகின்றது. சீவனின் உடலில் மாத்திரமன்று, எல்லாச் சடப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து நான் செயல்புரிய வேண்டும் என்ற இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே உண்மையான வழிபாடாகும்.

என்பதாக, விளக்கமளிக்கிறார். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்

-


How to understand the realization, what got it from the yoga and meditation?


யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?


பதில்:

உலகில் பிறந்து வாழும் ஒரு மனிதனுடைய நோக்கமும், பிறவிக் கடமையும், இந்த தன்னை அறிதல்தான். அதுவன்றி இந்த மனிதப்பிறப்பு முழுமை அடைவதில்லை. அதற்கு யோகமே சிறந்த வழியாகும். யோகத்தில் இணைவது மட்டுமல்லாமல், தியானமும், அதில் ஆர்வம், முயற்சி, ஈடுபாடு, பயிற்சி, ஆராய்ச்சி, தெளிவு என்றவகையில் செயல்பட்டு முடிவாக தன்னிலை விளக்கம் பெறலாம். 

இந்த தன்னிலை விளக்கத்தில், நமக்கு கிடைப்பதென்ன? அறியலாமா? இப்போது, நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா?  என்று கேட்டுக்கொண்டால், இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. 

எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே "நான்" என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் "நான்" என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்றுவரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. 

சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது. 

ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே "நான்" எனப்படுவது. ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்ப பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. 

ஆகவே "நான்" பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவ பரிணாம சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்ப பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்ப பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே "நான்" என்பதாகும். 

அரூப நிலையில் ஏகனாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே "நான்" என்பதாகும்.

தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் என்ற தலைப்பிலான, ஞானக்களஞ்சிய கவிதை வழியாக, விளக்கும் உண்மையையும் அறிவோம்.

'உன்னையோ கடவுளையோ அறிய வென்றால், 

   ஒருகுறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து 

தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும் 

   தனிக்கருணை வடிவான குரு வடைந்தால், 

அன்னை வயிற்றடைந்து உருவாய் உடலாய் வந்த 

   ஆதி கருவைப் புருவத்திடை உணர்த்தப் 

பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க, உந்தன் 

   பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்.'

(ஞானக்களஞ்சியம் கவி: 1460)


வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Please explain simply the Mukti and Gnana in spirituality?


முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?


பதில்:

எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை (the source of all the forces) அறிவால் அறிந்து வாழ்வில் அமைதி பெறுவதே அறிவில் தெளிவு பெறுவதே முக்தி எனப்படும்.  

விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல் வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் விளக்க வழி வாழ்வே ஞான நெறியாகும்.

வாழ்வில் மனம் தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான்.  உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம் உயிர் மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருக்கின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருள்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் மனவளக்கலையினை அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. 

மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை யோகம் என்றும் ஆராய்ந்த பின் கண்ட விளக்க வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை ஞானம் என்றும் வழங்குகிறோம்  

வாழ்க வளமுடன்.

-

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Is it feasible being awaken without mind?


வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?

பதில்:

மனிதன் என்றாலே மனம்+இதன் = மனிதன் என்பதுதான் கருத்து. மனிதனையும், மனதையும் பிரித்துப்பார்த்திடவும் முடியாது. மனதை உணர்ந்த மனிதனும் இல்லை, மனதை துறந்த மனிதனும் இல்லை.  சில ஞான வகுப்பு நிகழ்த்துபவர்கள், மனதை தள்ளிவைத்து வாழ் என்று போதனை சொல்லுகிறார்கள். மனதை கண்டுகொள்ளாதே, அது உன்னை தடுக்கிறது, குழப்புகிறது, அதற்கு கவனம்  செலுத்தாதே, உன் மனதிற்கு மதிப்பளிக்காதே என்று பல்வாறாக அறிவுரைகள் தந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி வாழ்வதுதான் விடுதலை வாழ்க்கை, ஞானம் தேடுதல் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

மனிதனே மனமாக இருக்கும் பொழுதும், மனமே மனிதனாக இருக்கும் பொழுதும் இது பொருந்தக்கூடியதா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உங்களை உங்கள் மனதிலிருந்து பிரித்தால், தடுத்தால், விலகினால் என்னவாகும்? பிரிக்கவே முடியாத ஒன்றை பிரித்ததாக எண்ணி குழப்பம் தான் மிஞ்சி நிற்கும்.

மனமற்ற நிலை சாத்தியமில்லை. ஆனால் அது, அந்த மனமற்ற நிலை, உங்களுக்கும் எனக்கும் எவருக்கும் தினமும் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கிறது. எப்போது என்று தெரியுமா? நம்முடைய தூக்கத்தில் தான். தூக்கத்தில் மனமும் இல்லை, நாமும் இல்லை. அப்படியான தூக்கத்தில் கூட சிலருக்கு கனவுத்தொல்லையும் உண்டு. கனவில் கூட மனதை பிரிக்கமுடியவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறதா?

அப்படியானால் வேறு வழியே இல்லையா, மனமற்ற நிலை சாத்தியப்படுத்திட? 

இல்லைதான். ஆனால் மனதில் எண்ணங்களற்ற நிலை சாத்தியமானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல, ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ ஆம் அதுதான் சிறந்தவழி.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? இன்னொரு கேள்வி பதிலில் காணலாம்.
வாழ்க வளமுடன்.
-