CJ for You: awakening

awakening

Showing posts with label awakening. Show all posts
Showing posts with label awakening. Show all posts

Kundalini Yoga is meant to be practiced for many years, but it's funny that it is available immediately and a lifetime is enough. Is it also a deception that you can learn without Vasiyogam? Can you explain how mindfulness works?


குண்டலினி யோகம் பல்லாண்டுகாலம் கற்க வேண்டும் என்பதுதான் முறை, ஆனால் உடனே கிடைக்கும் என்பதும், வாழ்நாள் போதும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வாசியோகம் இல்லாமல் கற்கலாம் என்பதும் ஏமாற்றுவேலையோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. மனவளக்கலை எப்படி என்பதை விளக்குவீர்களா?

நீங்கள் இன்னமும் அந்தக்காலத்து மனிதராகவே இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உண்மையாகவே நீங்கள் உங்களை, இந்த நவீன காலத்திற்கு மாற்றிக் கொண்டீர்களா? இல்லையா? மற்றவர்களை பார்த்தாவது அந்த வாழ்வியல் மாற்றத்திற்கு வரவில்லையா? இன்னமும் பழமையில்தான் வாழ்கின்றீர்களா? என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? 

சித்தர்கள் வழங்கிய குண்டலினி யோகத்திலும், அவர்கள் வழியாகவே மாற்றமும், எளிய பயிற்சிகளும் வந்துவிட்டது. தீடீரென வேறு யாரும் குறுக்குவழியை, குண்டலினி யோகத்தில் தரவும் முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லை, உங்கள் வந்தடையவில்லை. அதனால் நீங்கள் இன்னமும் பழைய முறையைல், கடினமான வழியில், வீட்டை, நாட்டை, வேலையை, கடமையை, அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு, சந்நியாசி கோலம் கொண்டு, காட்டிற்கு போய்விட வேண்டும் என்ற காலத்திலேயே இருக்கிறீர்கள்! 

உண்மையை புரிந்து கொள்ள தயாராகுங்கள். குண்டலினி யோகம் என்ற  வார்த்தைதான், வேதாத்திரி மகரிஷியால், எளிய உண்மை அர்த்தம் தரும் ‘மனவளக்கலை’ என்றானது. இந்த, மனவளக்கலை என்பது பயிற்சி மட்டுமல்ல, அள்ள அள்ள குறையாத இயற்கை செல்வத்தை பெற்றிருக்கும் ஒரு பெட்டகம் ஆகும். அந்த செல்வத்தின் வழியாக, உங்களின் அன்றாட வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளலாம். உங்களுடைய பொருள்வளத்தையும் உயர்த்திக்கொள்ள தகுதியாக்கிக் கொள்ளலாம்.  எனவே, யோகத்தின் இணைவதால் என்னபயன்? என்ற கேள்விக்கு இடமில்லை.

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இதை நீங்கள் அடிப்படை பயிற்சியிலேயே தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடலை வளமாக்கும், எளியமுறை உடற்பயிற்சியை கற்றுத்தேரலாம். உயிரை வளப்படுத்தி, வாழும் நாளை சிறப்பாக்கிட, காயகல்பயோக பயிற்சி கற்றுக்கொள்ளலாம். குருவின் அருளாசியோடு தீட்சை பெற்று, தவம் கற்றுக் கொள்ளலாம். இத்தகைய மூன்று முக்கிய அம்சங்களும், உங்களுக்கு கிடைத்துவிடுகிறது.

இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும்.

சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே ‘மனவளக்கலை’ ஆகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்று விட்டால், அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய மாற்றம், எத்தகையோ பிறவிவழியாக நாம் கைவிட்டுவிட்டோம் என்பதே உண்மை. இன்று, இப்பொழுது கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? உடனே கைக்கொண்டு, நமக்கு பயனாக்கிக் கொண்டு, நம் பிறவியின் நோக்கத்தையும், கடமையையும் நிறைவேற்றிட வேண்டும். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Everyone in the world worships a different God. But who or who is the true God? How to understand the truth? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா,  உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர். ஆனால், எது அல்லது யார் உண்மையான இறை? எப்படி உண்மை விளங்கிக் கொள்வது? விளக்கம் தருக.


    உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர் என்ற கருத்து சரிதான். பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் இருந்து வருகின்றனர். நிச்சயமாக அதை குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. சொன்னால் மதம் முன்னே வந்து நிற்கும். அப்போது உண்மை மறைந்துவிடும்.

கடவுள் என்பது ‘கடந்து உள்ளே’ என்ற வினைச்சொல்லின் விளக்கமாகும். ஒரு மனிதன் தனக்குள்ளே கடந்து உள்ளே கவனித்தால், தன்னை விட மதிப்பு வாய்ந்த, எல்லாவற்றிக்கும் மூலமான, தெய்வீகத்தை உணர்ந்து அறியலாம் என்பதுதான், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முன்னோர்களின் வாக்கும், வழிமுறைகளும் ஆகும்.

ஒரு பொருள் என்பதைக் கடந்து, எப்போதும் இருக்கும் பொருள், என்பதை மெய்ப்பொருள் என்று சொல்லுவது வழக்கு. ஏனென்றால், நாம் இந்த உலகில் காணும் எல்லாமே, பொருள் நிலையில் இருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் கூட, சிறு அணுவாக இருந்து சிசுவாக, குழந்தையாக, சிறுவராக, இளைஞராக, மனிதராக மாறிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா? இந்த வளர்ச்சியில், ஒருகட்டத்தில் இல்லாமலும் போகிறோம். ஆனால், இந்த உண்மை உணரா மயக்கத்தில், நாமும், மற்ற எல்லாமும், எப்போதும் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். 

ஆனால், மெய்ப்பொருள் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தன்மையை கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம், நிலை, முடிவு அறியாதும் இருக்கிறோம். அதனால்தான் அத்தன்மையை, இறை என்று உயர்ந்த மதிப்பு கொடுத்து வணங்குகிறோம். அந்த உண்மைதான், பல்வேறு மனிதர்களிடத்தில், சிக்கிவிட்டது.

சிவம் என்பது உலக உயிர்களுக்கு பொதுவான வார்த்தையாகும். இதில் எந்தவிட பாகுபாடும் வருவதற்கில்லை. சிவம் என்பதுதான் பின்னாளில் பல்வேறு மாற்றங்களை கொண்டது. அந்த மாற்றங்களின் வழியாக, உண்மை மறைந்து அதில் பொய்யும் கலந்துவிட்டது. சிவத்திற்கு பதிலாக வேறு என்னென்னமோ வந்து மக்களை குழப்பியும்விட்டது, பிரித்தும்விட்டது.

உலகில் உள்ள எல்லா மனிதர்களும், யோகத்தின் வழியாக, தன்னையறிந்தால், இந்த உண்மை விளங்கிவிடும். வேறெதையும் எங்கே? எங்கே? என்று தேடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை ஏதோ தடுக்கிறது.

மெய்பொருள் என்பது என்ன? என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள், இங்கே விளக்குகிறார். அறிந்து கொள்வோம்.
மெய்ப்பொருளே சிவம் என்பதை உணர்வோம்! Let's Perceive the Absolute Matter is Shivam!
வாழ்க வளமுடன்
-

Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடு அவசியம் தானா? அது எப்படி இருக்கவேண்டும்? வேதாத்திரி மகரிஷி அதுகுறித்து சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.


இறைவழிபாடு என்பது மனிதனுக்கு அவசியம். அதை புறம்தள்ளுவதும், விட்டுவிலகுவதும், அவசியமில்லை என்று கருதுவதும் அவனுடைய அறியாமை. அது தன்முனைப்புக்கும் வழிவகுக்கும். அவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றும். பிறப்பின் நோக்கமும், கடமையையும் அறிந்துகொள்ளும் வழியில் இருந்து தள்ளிவைக்கும். ஆனால், பெரும்பாலோர் இதை ஏற்கவும் மாட்டார்கள். இறையும், இறைவழிபாடும் தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவர்கள் கண்ணோட்டம்.

இறைவழிபாடு என்பது ஆதி மனிதனின் உள்ளுணர்வு ஆகும். தன்னைவிடவும் வலிமையானது, தன்னிலும் பிரமாண்டமானது, தன்னையே காப்பது என்ற, தான் அறிந்த உண்மையின், வியப்பின், மரியாதையின் உச்சமே ‘இறைவழிபாடாக’ வாழ்வியலில் கலந்தது. மேலும் அந்த இறைவழிபாடுதான், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது,

நான் யார்? என்று ஆராய்வதின் வழியில் நமக்கு கிடைக்கும் விடை, தனக்கும், இந்த இறைக்கும் உள்ள தொடர்புதான். எனினும் அது எளிமையானதல்ல. குண்டலினி யோகம் வழியாக, மனதை அறிந்து, மனதின் மூலமாக உயிரை அறிந்து, உயிருக்குள் அறிவாக இருந்து இயங்கும், இறையை அறிந்து உணரவேண்டியது அவசியம். இதற்கு கால நீடிப்பு ஆகலாம், என்றாலும் மனிதன் வாழ்நாளுக்குள் அறியமுடியும். அதுவரை நமக்கு இறைவழிபாடு தேவை. அது மனதிற்கான ஒரு பயிற்சியும் கூட. குழந்தைகளுக்கு பக்தி வழியாகவும், பெரியவர்களுக்கு யோகம் வழியாகவும் இந்த இறைவழிபாடு பயன்பாட்டில் நம்மிடையே கலந்திருக்கிறது.

உங்கள் கேள்விக்கான பதிலை, எளியவகையில், வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இதோ இந்த காணொளி வழியாக அறியலாம்.

இறைவழிபாடு எப்படி இருக்கவேண்டும்? How should worship be performed? by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-

Why my horoscope and star not gift to me the spiritual enlightenment? Do you explain it?


என்னுடைய ஜாதகத்தின் வழியாக என்னுடைய பிறவியில் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்றும், அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யோகத்தில் இறையுணர்வு பெற வழியில்லை என்று சொல்லுகிறார்கள். உங்கள் கருத்தும் ஆலோசனையும் என்ன?


அப்படி சொன்னவர்கள், அதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து சொல்லி இருக்கலாமே? ஏன் அதைச் சொல்லவில்லை. குறை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அந்த குறையை தீர்க்க இந்தந்த வழிமுறைகளில் செயல்பட்டு தீர்த்து, பிறவிப்பயனாகிய, பிறவிக்கடனாகிய உண்மையை உணர்ந்து, இறையுணர்வு பெறலாம் என்று விளக்கி இருக்கலாமே? ஆனால் அதை அவர் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால் அவரும் யோகத்தில் இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் அவர் இருந்து, அந்த அனுபவங்களையும் பெற்றிருந்தால், மிக எளிதாக, உங்களுக்கும் வழியை காட்டி இருக்கலாம் என்பது உண்மையே.

பிறந்த எல்லா மனிதர்களுக்கும், இறையுணர்வு என்ற உண்மையறிதலும், நான் யார்? என்று தன்னையறிதலும் உள்முகமாக, வேட்கையாக அமைந்திருக்கிறது. அப்படியா? என்று கேட்பவர்களுக்கு, உங்கள் பிறப்பின் காரணமே அதுதான், என்றுதான் பதில் தரவேண்டியதாக இருக்கிறது. ஆம், ஆனால் பிறந்த பிறகு, வளரும் சூழ்நிலைகள் காரணமாக, அதை, அந்த நோக்கத்தை விட்டுவிட்டு, உலக வாழ்கையில், ஆழ்ந்து நம்மை மறந்துவிடுகிறோம்.

ஏனடா இப்படி மாறிவிட்டாய்? என்று நம்மை, இந்த இறையாற்றலே கேட்டு, எப்போதடா நீ என்பக்கமாக திரும்புவாய்? திசை நோக்கி நகர்வாய்? என்று கேட்கிறது. இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தரவில்லை என்றால், நமக்கு சில பிரச்சனைகளை, நம்முடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் வழியாகவும், மற்றவர்கள் மூலமாகவும் உண்டாக்குகிறது. இந்த பிரச்சனைகளின் வழியாகவாவது, இவன் திருந்துவானா? என்று நமக்கு பாடம் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் நாம்தான், அடுத்த வகுப்பிற்கு கடந்து செல்ல விருப்பமில்லாமல், அதே வகுப்பிலேயே கிடந்து உழல்கிறோமே? அதுதானே நமக்கும் பிடித்திருக்கிறது! இல்லையா?!

இந்த சூழலில், நாம் ஜாதகம் உதவுமா? என்று நினைக்கிறோம். அதன்வழியாக தீர்வு உண்டாகுமா? என்று ஆய்வு செய்யும் பொழுது, அது வேறுமாதிரியான கோணத்தில், வாழ்க்கையை திசை திருப்புகிறது என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் அனுபவம், ஆய்வு முடிவுகள் அப்படியானது. அவர்களை குறை சொல்லி ஒன்றுமில்லை.

ஆனால் உண்மை, வெட்ட வெளிச்சமாக, தெளிவாகவே இருக்கிறது. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோமா? மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. கண்டு கேட்டு உண்மை அறிக.


இணைப்பு: 

இறையுணர்வு பெறுவதற்கு பிறந்த நட்சத்திரம் உதவுமா? Birth Star Helps to Enlightenment

Part 01

Part 02

Part 03

வாழ்க வளமுடன்.


Is God man Correct? What is the truth on it? What is the connection between the God and Human?


நான் கடவுள் என்பது சரிதானா? அதன் உண்மை என்ன? மனிதனுக்கும் மெய்ப்பொருளுக்கும் உள்ள தொடர்பு என்ன?



மெஞ்ஞானத்தின் வழியாக, சித்தர்கள், ஞானிகள், மகான்கள், இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து உணர்ந்தார்கள். அந்த விளக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கு, பக்தி வழியாக, கருத்தாக வடிவமைத்தார்கள். விருப்பமுள்ளோர் கற்றுத்தேர யோகம் என்ற மனதின் வழியாக உண்மையறியும் பயிற்சிகளையும் கொடுத்தார்கள். ஒரு மனிதனின் ‘பிறவி நோக்கமும், கடமையும், நான் யார்? என்ற உண்மை அறிதலே’ என்பதையும் அறிவுறுத்தினார்கள். அந்த வகையில்தான், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்று சொன்னார்கள். விஞ்ஞானமும், எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்தி வழியிலான கருத்துக்களை, படைப்புத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை, தெய்வம் என்பதையும் நம்புவதில்லை. வழிபாடு, மந்திரம் இவற்றையும் புறந்தள்ளுகிறது. ஆனால், சில உண்மைகளுக்கு, விடை தெரியாமல் தடுமாறுகிறது என்பதும் உண்மையே. 

உதாரணமாக, ‘உலகில் இருப்பதெல்லாம், காட்சியும், பொருளும் ஆனவை. அவை மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியானால், மாறாதிருப்பது எது? என்ற கேள்விக்கு ‘என்றும், எப்போதும், எவ்விடத்திலும் இருப்பது எதுவோ அதுவே முதன்மையானது. அதை மெய்ப்பொருள் என்று உயர்வாக அழைக்கிறோம்’ என்கிறார். இதை வெட்டவெளி, சுத்தவெளி, இறை, தெய்வீகம், சிவம், ஈசன் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, இதனில் நான்கு தன்மைகள் கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவை, 1) பூரணம் என்ற வற்றாயிருப்பு 2) வேகம் என்ற பேராற்றல் 3) விவேகம் என்ற பேரறிவு 4) காலம் என்று வகைப்படுத்துகிறார். இந்த விளக்கத்தை, அந்த உண்மை நிலையை, யோகத்தின் வழியாக, அறிந்து உணர்ந்தவர் மட்டுமே, தெளிவு செய்திட முடியும். சும்மா, வெறுமனே, மேம்போக்காக சொல்லுவதும், புரிந்து கொள்வதும் உண்மை விளக்கம் ஆகாது. மேலும் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த உணர்தலை, ‘அதுவாகி நின்று அந்நிலையில் உணர்வதாகும்’ என்றும் வேதாத்திரி மகரிஷி தெளிவு செய்கிறார். மாணிக்க வாசகரும், திருவாசகத்தில் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற ஒருமையை குறிப்பிடுகின்றார். இங்கே தான், அத்துவைதம் இரண்டற்ற நிலை தெளிவாகிறது. ஆனால், உலகவாழ்வில் மயங்கி, அன்றாடம் இன்பம் தேடி, துய்த்து வாழும், சராசரி மனிதனுக்கு இது புரியுமா? தெரியுமா? என்றால் மிகக் கடினமே. இந்த நிலையில்தான், அந்த சராசரி மனிதர்களிடம், சித்தர்கள் சொன்ன ‘நான் கடவுள்’ விளக்கம் தொக்கி நிற்கிறது. இந்த வார்த்தையை, சாராசரி மக்களுக்கு ஏற்றபடி, இன்னொருவிதமாக சொன்னால், ‘கடவுளே நானாகவும் இருக்கிறது’ என்பதே சரியாகும்.

மேற்கண்ட நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, வேதாத்திரி மகரிஷி தரும், விளக்கத்தையும் இங்கே அறிந்து கொள்வோம். இதோ, 

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்_ என்ற தலைப்பிலான ஞானக்களஞ்சிய கவிதையில்...
கடவுள் எனப் படுபவனே மனிதனானான், 
கருத்தியங்கி, கருத்தறிந்தான்; 
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான் 
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான் 
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக் 
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான் 
கடவுள் ரகசியமதனைவெளியாய்க் காட்டும்  
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி. 
 
  இந்த கவிதையில் பொதிந்துள்ள, உண்மையையும், அவரே விளக்குகிறார். எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
 
  மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான். 

  இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.
 
  மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் – அறிய வேண்டிய நிலையில் – உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாகக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை. 

  அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான். இந்தவகையில், விளக்கமும் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
-

How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-  


How do you want to live in this World? Upgrade of the human enlightenment!


நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இந்த உலகில், மனிதன் தனித்த ஒருவன் அல்ல. குடும்பம், உறவுகள், சமூகம் என்ற உறவுகளை அடிப்படையாக கொண்டுதான் பிறக்கிறான். ஒருவன், தன்னை அனாதையாக கருதவும் முடியாது. ஏனென்றால், அவனுக்கு, இந்த சமூகம் உதவிகளை தானாகவே, விரும்பி செய்யும் என்பது உண்மை. அதுபோலவே, தன்னை அனாதையாக கருதியவனும், இந்த சமூகத்திற்கு உதவவேண்டிய வகையிலும் இருப்பான். இந்நிலையில், ஒரு மனிதனின் வாழ்வு அமைந்துவிடுகிறது. எனக்கு யாரும் தேவையில்லை. எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நானும் யாருக்கும் உதவ தயாரில்லை. என்பதாக தனக்குள்ளாக வட்டம் போட்டுக்கொண்டு வாழ்வது, பொருத்தமற்றது ஆகும். அது மனித பிறவிக்கே இழுக்கு என்று கருதலாம். அதுபோல, அப்படி வாழ்வது, இயற்கைக்கும் விரோதமானது. மனிதன் என்பவன், இதமான மனதைக் கொண்டவன், மன+இதன் என்பதுதான், மனிதன் என்றாகிவிட்டது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். 

இப்போதுள்ள வாழ்க்கைமுறை, ஒரு தனி மனிதனை, எல்லாவகையிலும், இந்த உலகம் பிணைத்திருக்கிறது. அதாவது விட்டு விலகிடாத அளவுக்கு இணைத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதை உலகம் சுருங்கி விட்டது என்று, சமூக ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். மேலும் கைபேசி என்ற, தகவல் தொடர்பு சாதனம், உலகவே ஒரு சமூகம் என்ற மாயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த மாயம், சிலவேளைகளில் நிஜமாகவும் வந்து நிற்கிறது. இது விஞ்ஞானத்தின் கட்டாயமும், வளர்ச்சியும் என்பதாகவே அமைந்துவிட்டது. இதிலிருந்து, சராசரி மனிதனும் தப்பிக்கமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுது, இந்த உலகம், ஒன்றாக, ஒரே சமுகம் என்ற நிலைபாடுக்கு வந்துவிட்டதை, நாம் நம்பித்தான் ஆகவேண்டும். என்றாலும் கூட, எங்கோ ஏற்படும் மாற்றம், உடனடியாக, நமக்கும் நேர்ந்துவிடுவதையும், அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், தடுமாற்றமே ஏற்படுகிறது. ஏனென்றால், மனிதன், தன்னையும், சமூகத்தையும் பார்க்கிற பார்வை, நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஏற்பான ஒன்று, எல்லோருக்கும் ஏற்பாக இருப்பதும் இல்லை. ஆனால், திடீரென்று, அவருக்கு நிகழ்ந்தது, எனக்கும் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிவிடுவதை காணலாம். நாமும் கூட சில நேரங்களில், சில நிகழ்வுகளில் அப்படி நினைப்பதுண்டு, விரும்புவதும் உண்டு.

இந்த நிலைகளை எல்லாமே, வாழ்ந்து அனுபவம் கண்ட முன்னோர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவ ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மக்களின் வாழ்வியலுக்கு, ஒரு நடைமுறை அமைத்து தந்திருக்கிறார்கள். அதனோடு, தன்னையும், மெய்ப்பொருளையும் உணர்ந்த ஞானிகள், ஒரு தனிமனிதனை, இப்படி வாழ்க என்று அறிவுறுத்துகிறார்கள். அதையே இயற்கைக்கும், தனக்கும், குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வாக கருதுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியும், ‘தனிமனிதனின் அமைதியே, உலக அமைதிக்கு வழியாகும் ’ என்று சொல்லுகிறார்.

இந்நிலையில், ஒரு மனிதன் எப்படி வாழலாம்? எப்படி வாழவேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பாகும். இதை யாரிடமாவது கேட்டால், என்ன பதில் சொல்லுவார்? நமக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய பதில், ‘நான் நன்றாக வாழவேண்டும். இன்பமாக வாழவேண்டும். நோய் நொடி இல்லாமல், எல்லாம் அனுபவத்தி வாழவேண்டும். நீண்ட ஆயுட்காலமும் வேண்டும், சுகபோகமாக, உலகில் மதிப்பாகவும் வாழவேண்டும்’ என்று தன்னலம் கருத்தாக சொல்லுவார். இந்த பதில் எபோதும் பொதுவானது. இன்னும் சிலர், ‘தானும் நன்றாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன்’ என்ற வார்த்தையை, இணைத்துக் கொள்வார்கள்.  கூடுதலாக‘நானும், என்குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்’என்று சொல்லுவார்கள்.

முரண்பாடானவர்கள் ‘மற்றவர்கள விட, நான் நன்றாக வாழவேண்டும்’ என்று சொல்வார்கள். அதையே வாழ்வில் கடைபிடிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனுடைய இந்த எண்ணங்கள்தான், அவனின் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறது. ஒரு குறிபிட்ட வட்டத்திற்குள் நீங்கள், ‘சுயநலமாக, எனக்கு மட்டும்’ என்று எதையாவது நினைத்தால், அது உங்கள் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுகிறது என்பது உறுதி. அது இயற்கையின், நீதிக்கு எதிரானது என்பதை மறவாதீர்கள். ஒரு சுவறில் எறிந்த பந்து, திரும்ப உங்களிடமே வருவதுபோல, உங்களை தாக்கும். இதை பெரும்பாலோர் தன் வாழ்நாளிலேயே, உணர்ந்திருப்பார்கள்.

ஒரு மனிதன், எப்படி வாழவேண்டும் என்பதையே, இன்றைய யோககல்வி முறைகள் போதிக்கின்றன. இதை பக்திவழியிலான கதைகள், ஓர் அளவில் தடுமாறுகின்றன. காரணம் என்னவென்றால், அக்கால மனிதர்களின், அறிவுநிலை, வாழ்க்கைமுறை, செயல்பாடுகள், தகவல் தொடர்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நிலையில் இருந்தது. இன்றோ உலக மக்கள் அனைவருமே, தன் அறிவிலும், வாழ்விலும் மிக உயர்ந்திருக்கிறார்கள். பக்தி என்ன உண்டோ, அதில் அடிப்படை மாறாமல், எடுத்துக்கொண்டு, கூடுதலாக யோகம் என்ற மெய்ப்பொருளும், இயற்கையோடு தன்னையும் அறியும் பயிற்சி (Upgrade of the human enlightenment) தேவைப்படுகிறது.  இதை அறிவறிந்தோர் உணர்வார்கள். அவர்கள் தன் வாழ்விலும் அதை கடைபிடிக்கிறார்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறார். உங்களுக்குள்ளாகவும், ‘நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’என்ற இந்த கேள்விக்கு, ஆராய்ச்சியை தொடங்குங்கள், உண்மை அறியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Through the simplicity of the Vethathiriya, the truth and the individuality is gone. Is this correct?


வேதாத்திரியம் வழியாக, யார் வேண்டுமானாலும் யோகம் கற்று உயரலாம். மற்றவர்களுக்கும் கற்றுத்தரலாம் என்றாகிவிட்டது. இதில் உண்மை அறிந்தவர் யார்? என்ற தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது. இது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் வழியாக, யார் வேண்டுமானாலும் யோகம் கற்று உயரலாம். மற்றவர்களுக்கும் கற்றுத்தரலாம் என்றாகிவிட்டது. இதில் உண்மை அறிந்தவர் யார்? என்ற தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் வேதாத்திரி மகரிஷி ஆகிவிடலாமா? அப்படி ஆகிவிட முடியுமா? விளக்கம் தருக.

பதில்:

உங்களுடைய, குழப்பத்திலும், கோபத்திலும் இந்த கேள்வி எழுந்திருக்கலாம். எனினும் நல்ல கேள்வியே என்பதில் வரவேற்கிறேன். இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியே, தந்திருக்கிறார். ஆம், அவரும் இதுபோன்ற கேள்வியை எதிர்கொண்டிருக்கிறார். அந்த கேள்வியையும், அதற்கான மகரிஷியின் பதிலையும் பார்க்கலாம். அதில் உங்களுக்கான விளக்கமும் கிடைக்கும். இதோ!

அன்பரின் கேள்வி:

மகரிஷி அவர்களே, நம் நாட்டில் பல மகான்கள் அவ்வப்பொழுது சித்தியடைந்துள்ளனர். அவர்கள் உபதேசத்தால் ஈர்க்கப்பட்டு பலர் பக்தர்கள் ஆனார்கள், ஆனால் தாங்கள் மட்டும் மனவளக்கலைப் பயிற்சியைப் பின்பற்றினால் எல்லோரும் தங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள். அது எவ்வாறு சாத்தியம்?

வேதாத்திரி மகரிஷியின் பதில்:

பல மகான்கள் உலகில் சித்தியடைந்தார்கள் என்று கூறுகிறீர்கள். மேலும் என்னைக் குறிப்பிட்டு 'உங்களைப் போல் மற்றவர்களும் உயர்நிலை பெறுவது சாத்தியமில்லை' என்று கூறுகிறீர்கள். 

நீங்கள் எந்த நிலையை, எந்தப் பேற்றினை சித்தி என்று கருதுகிறீர்கள். வேடமிட்ட சந்நியாசிக் கோலத்தையா? எதேனும் ஜால வித்தையில் தேர்ச்சிப் பெற்று பிறர் வியப்புறச் செய்யும் திறமையையா? இனிக்கப் பேசி சொற்பொழிவாற்றும் தெளிவையா? நாடு எங்கும் மக்கள் வாங்கிப் படிக்கும் அளவுக்கு நூல்களில் எழுதிப் புகழ் பெறுவதையா? ஒரு மனிதன் அருட்பேறு பெற்றதை உங்கள் கண்ணாலோ, கருத்தாலோ காண முடியுமா? எந்தக் கோணத்தில் எந்த நிலையிலிருந்து கொண்டு நீங்கள் பிறர் உயர்வைக் கணிக்கிறீர்கள்? 

நீங்கள் ஒரு பெரிய ஞானி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் பல பழிச்செயல்கள் கொண்டவராக, நடிப்பில் வல்லவராக இருக்கலாம். உங்கள் தயவில் வேலை செய்யும் ஒரு கூலியாள் பழிச் செயல் நீங்கி உய்வு பெற்ற ஒரு மகானாக இருக்கலாம். ஒருவரைப்பற்றிக் கணிக்க நீங்கள் உங்கள் தெளிவையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும். அதற்கு முன் ஒருவர் சித்தி பெற்றவர் என்று கருதினால் அது தப்புக் கணக்கேயாகும். மருட்சியால் கொண்ட முடிவாகும். 

மனிதன் புலன்வழியே இன்ப துன்ப நுகர்ச்சியில் மயங்கி உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மனம் அடையும் பொருந்தா நிலைகள் ஆறுகுணங்களாகும். அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலியவையாகும். மனதிற்கு மூலமான உயிராற்றலை உணர்தலாகப் பெறும் குண்டலினி யோகத்தால் மனம் ஒடுங்கி தன் மூலத்தில் நிலைபெறுகிறது. அப்பொழுது உணர்ச்சி நிலையில் எழும் ஆறுகுணங்களைப் பற்றியும், அவை இயங்கும் நிலைகளைப் பற்றியும், அகநோக்குப் பயிற்சி என்ற சாதனையால் உணர்ந்து சீரமைப்பு பெறலாம். முறையாகப் பயின்ற பலர் இப்பயிற்சியில் வெற்றி பெற்று அமைதியின் பெருமையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

வாழ்க வளமுடன்.

-

Please explain the Realization of the Consciousness by all ways?


இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

அன்பும் கருணையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமானால் இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.  சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதல்ல என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.  ஆனால் பருவம் வந்த பின் புற வழிபாட்டிலிருந்து அக வழிபாடு தொடங்க வேண்டும்.  அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவ சாதனை அவசியம் வேண்டும். 

அப்போது தான் மனம் ஒரு சமநிலையிலே இருக்கவும் உயர் நிலையிலே அறிவு இயக்கவும் முடியும்.  இங்கே தான் மனம் அமைதி பெரும்.  எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. 

அதனை எந்தப் பொருளிலும் எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லைகட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையை பெற முடியாது. பொருளில் இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.   அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில் இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டுவிட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும். 

மேலும் பரநிலையுணர்வும் அதில் அடங்கி இணைந்து நிலைபெறும் பேறும் கிடைக்காத போது அறிவு தான்-தனது, என்னும் தன்முனைப்பில் உணர்ச்சிவயமாகி புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும்.  தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்புநிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து நிறைவும் அமைதியும் பெறும்.

    பக்தி என்ற நிலையிலே நாம் இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து கொண்டாலும், யோகம் என்ற நிலையில்தான், முழுமையாக உணர்ந்து கொள்கிறோம் என்பதே இங்கே விளக்கமாகிறது.

வாழ்க வளமுடன்.
-

If we live in USA, Canada, Malaysia, Singapore, Australia, Dubai, Bahrain any different on yoga benefits?


அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 

Thanks to @arminschieb


பதில்:

அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? ஆனால் இந்த கேள்வி எழுவது இயல்பு. ஒரு புதிய கண்டம், நாடு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, வழக்கம் பழக்கம், உணவு, கால நேரம் இப்படியாக எல்லாமே மாறி இருக்கும் அந்த நிலையில், ஏதோ ஒரு புதிய உலகுக்கே வந்துவிட்டதாகவே தோன்றும். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ‘வேர், மூலம்’ ஒன்றுதான். இந்த உலகமும் ஓன்றுதான். கடல் கடந்து என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவை வெவ்வேறு கடலா? ஒரே கடல்தான், நம்முடைய சௌகரியத்திற்காக வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறோம். எந்த நாட்டின் கடற்கரையில் நின்று, நீங்கள் கையால் நீர் அள்ளினாலும், உங்கள் கால்களை நனைத்தாலும் அது ஒரே நீர் நிலையான கடல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும், மற்ற எல்லா உலக நாடுகளின் மக்களும் சுவாசிக்கும் காற்றும் ஒன்றுதானே? வேறு தனியாக அந்தந்த நாடுகளில் காற்று தனிப்பட்டு இருக்கிறதா?

எனவே மனிதர்களும், மனிதர்களின் வாழ்க்கைக்கானதும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. உண்ணும் உணவு மாறி இருக்கலாம். ஆனால் செரிமானம், சக்தி, உழைப்பு, ஆற்றல் ஒன்றுதானே? இங்கே விளைவித்தால் அது அங்கே ஏற்றுமதி ஆகிறது. அங்கே விளைவித்தால் அது இங்கே இறக்குமதி ஆகிறது. யாரோ ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு, உலக மக்களின் எல்லாருடைய பயன்பாடுக்கும் கிடைக்கிறது. ஏதோ ஒரு நாட்டின் அரசியல் குழப்பம், மொத்த உலக நாடுகளையும் குழப்புகிறது. இப்படியாக எல்லாமே ஏதோ ஒன்றில் நாம் இணைந்துதான் இருக்கிறோம்.

மனிதன் தன்னுடைய ஆறாம் அறிவால், எண்ணத்தால், சிந்தனையால், எல்லா மனிதர்களோடும் இணைந்தேதான் இருக்கிறான். ஆனால் நாம் அதை அறிவதும் இல்லை, உணர்வதும் இல்லை. ஏதோ நாம் மட்டும் தனித்து இருப்பதுபோலவும், எதைவேண்டுமானலும் செய்துவிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் உங்கள் கூடவே ‘மனசாட்சி’ என்ற ஒன்று, உங்கள் அத்தனை இயக்கங்களையும், மேம்பட்ட CCTV Camera போலவே ஒளி, ஒலி காட்சிகளோடு பதிந்து கொள்கிறது, நீங்கள் அறியாமலேயே. உண்மைதானே?

மனித இனம் ஒன்றுதான், மனமும், உயிரும் ஒன்றுதான். உடலால் பலப்பலவாக பிரிந்து எல்லைகட்டி இருக்கிறோம். அவ்வளவுதானே? இதில் உங்களுக்கு கிடைக்கும் எந்த யோக பயன்களும் மாறிடாது. இறையாற்றலும் மாறிடாது. வீணான கற்பனையும், உதாசீனமும் தேவையில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட யோக வழிமுறைகளையும், பக்தி வழிமுறைகளையும் எந்த மாற்றமும் செய்துகொள்ளாமல், அதன்படியே தொடருங்கள். இறையாற்றலும், அருட்பேராற்றலும் நீங்கள் எங்கிருந்தாலும், அன்பும் கருணையுமாக உங்களைச் சூழ்ந்தே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். உங்களை எல்லைகட்டிக் கொள்ளாமல், ஒரே உலகம் என்ற கருத்தில் மலருங்கள். ஆர்வத்தோடும், முயற்சியோடும், தொடருங்கள். ‘நான் யார்?’ என்ற உண்மையை நோக்கியும் நகரலாம். இறையுண்மையையும் அறிந்து உயரலாம். பிறப்பின் நோக்கமும், கடமையும் கண்டு வாழ்வின் முழுமையை அடையலாம். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

        ஒரே ஒரு சிறப்பம்சத்தையும் சொல்லவேண்டும். அது என்னவென்றால், உங்களை யோகத்திற்கும், பக்திக்கும் இழுத்துக்கொண்டு திசை திருப்பும், போலியான நபர்கள் உங்களருகில் இருக்கமாட்டார்கள். உங்கள் யோக குரு / ஆசிரியர் சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் போதுமானது. ஆனால் உலகம் சுருங்கி கையில் வந்துவிட்ட இந்தக்காலத்தில் நீங்கள் ‘இதில்’ கவனமாக இருத்தல் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்
-

Welcome Patrons, Sponsors and Supporters for Vethathiriya Channel



அன்பர்களே, 

பொதுவான தளத்தில், உங்களைப்போன்ற, நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமே பதிவுகள் வழங்குவதில் ஒரு தொய்வு இருப்பதாக அறிகிறேன். ஏனென்றால், பொதுவெளியில் தரப்படும் எதுவும், நேரடியாக உங்களுக்கு வந்து சேர்வதில் தாமதமாகலாம். ஆனால் நீங்களே விரும்பி ஏற்கும் நிலையில், அது நேரடியாகவும், உங்கள் விருப்பத்திலும், உங்களுக்கான தீர்வாகவும், முழுமையாகவும் அமைந்துவிடும். சரிதானே?

அப்படியாக ஜூம் (ZOOM) வழியாக காலையும், மாலையும் பதிவுகள் வழங்க விருப்பம் கொண்டுள்ளேன். இதற்கு புரவலர்களும், நன்கொடையாளர்களும்,ஆதரவாளர்களும் தேவை. (Patrons, Sponsors and Supporters).  உங்களில் அத்தகைய விருப்பமுள்ளவர்கள், உங்களால் அனுகூலமான தொகையை, குறைந்தபட்சமாகக்கூட கொடையாக மாதம் ஒருமுறை, இந்திய ரூபாயாக அனுப்பிவைக்கலாம். அது உங்களின் விருப்ப கட்டணமாகவும், நன்கொடையாகவும் இருக்கலாம். கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகியனவும் திட்டத்தில் உள்ளது. உங்கள் நன்கொடை விரைவில் தொடங்கிட உதவி செய்யும். 

இந்த நிகழ்வு, உங்களுக்கும் பயன்படும், உங்களைப்போன்ற பிற அன்பர்களுக்கும் பயன்படும். தனித்தனியாக அன்பர்களுக்கு கட்டணம் அமைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இந்த சேவை தொடங்கவும், வளரவும் உங்கள் ஆதரவை விரும்பும், வேதாத்திரிய சானல்!

வாழ்க வளமுடன்.

-

நன்கொடை அனுப்பிட:
9442783450@UPI

வங்கி விபரம்:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

விபரம் வேண்டுவோர் தொடர்புகொள்ள:
wa.me/919442783450

-

* இது வேதாத்திரியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமான அழைப்பு!

-

Dear Friends, 

In the general domain, I understand that there is a slackness in providing posts only to our Vethathiriya lovers like you. This is because anything that is given in public will be delayed in reaching you directly. But if you accept it voluntarily, it will be direct, voluntary, remedy and complete for you. Right?

So I would like to offer morning and evening events via ZOOM. It needs patrons, donors and supporters. Those of you who are interested can send a favorable amount of Indian Rupees as a minimum by month. It can be your preferred fee and a donation. Google Meet and Microsoft Teams also on process. It helps to start live discussion as soon as possible..

This event will be of use to you as well as to other lovers like you. I'm not interested in setting fees for individual deacons. We would like your support to start and grow this service, Vethathiriya Channel!

Live prosperously.

-

For Digital Donate:
9442783450@UPI

Bank Details:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

Feel free to contact for details:
wa.me/919442783450

-

* This is an invitation only for those interested in Vethathiriyam!

Why often noted yoga only is the best way? Any other way not truly work?


எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


பதில்:

யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.

இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான்  உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.

ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.

வாழ்க வளமுடன்

-

Shall we get initiation, guidance on self realization from you as a Master?


உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.

பதில்:

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல்,  பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!

எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை  விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.

தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய வாட்சாப் http://wa.me/91944273450 என்ற கைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கலாம்.  வேதாத்திரிய கேள்வி பதில் வாட்சாப் குழு ’ https://chat.whatsapp.com/H9g30UE1iWf2H7aAeM1qHc ' உள்ளது, அதிலும் உங்களைக்குறித்த, விபரங்கள் சொல்லிவிட்டு பிறகு உங்கள் சந்தேகம் கேட்கலாம். நிச்சயமாக உங்கள் அறிமுகம் தேவை. அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை, தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.

சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாழ்க வளமுடன்
-

Most of people not interested on yoga and they living till end, no issues on that. correct?


யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வளமுடன் ஐயா, யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கையில் தானாகவே யோகத்திற்கு வருபவர்களும், பிறர் சொல்லி கேட்டு யோகத்திற்கு வந்து அதை கடைபிடித்து வருபவர்களும் ஒருசிலர் தான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதனால் நீங்களும் அப்படியே இருந்துவிடலாமே என்று நினைக்கிறீர்கள். சரிதானே?

அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு, நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிலிருக்கும் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். அதுதான் என்னுடைய கடமை. இந்த உலகில் நாம் அடிக்கடி பிறப்பதில்லை. ஏற்கனவே பிறந்தோமா? என்பதும் நினைவில் இல்லை, இனி எப்போதாவது பிறக்கப்போகிறோமா? என்பதும் நமக்குத் தெரியாது தானே? அப்படியானால் இருக்கின்ற இந்த வாழ்க்கையை நல்லவிதமாக, எல்லா இன்பங்களையும் பெற்று அனுபவித்து வாழ்வது நல்லதுதான். ஆனால் உண்மையாகவே அப்படி வாழ்ந்து அனுபவித்தீர்களா? அப்படி அனுபவிக்கவும் முடிகிறதா? என்ற கேள்விக்கு பதிலை சொல்லுவீர்களா?

வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்னிடமே எதிர்கேள்வியும் கேட்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை நீங்கள் ஏன் மறுக்குறீர்கள்? என்று நானும் கேள்வி கேட்பேன். அது உண்மைதானா? ஆம். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்து இருக்கிறது. அதை நானும் அனுபவித்து மகிழ்கிறேன். உங்களைப்பொறுத்தவரை, ஏதேனும் செய்தால்தான் இன்பம் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் சும்மா இருக்கும் சுகம் பற்றிய உண்மையை அறிவீர்களா? எதுவுமே செய்யாமல், இன்பத்தை தேடாமல், இன்பத்திலேயே நிறைந்து இருப்பது குறித்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?

தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதனால் என்ன பிரயோஜனம்? என்று மறுபடி என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறீர்களா? சரி, நீங்கள் பிறந்ததே அந்த உண்மையை அறிவதற்குத்தானே? அதை மறந்துவிட்டீர்களே? அந்த உண்மை அறிந்துவிட்டால், நீங்களாக இருப்பது யார்? என்ற ‘நான் யார்?’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே? அதை கிடைத்த இந்த பிறவியில் அறிந்து கொள்ளாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்வீர்களா? அது சோகம் இல்லையா? உணராமல் இறந்துவிடுவது கொடுமை தானே? இனி அந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்? முடிந்தது முடிந்ததுதான்.

எனவே சுருக்கமாக முடித்துக்கொள்ளாலாம், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யோகத்தில்’ பயணியுங்கள். உங்களோடு வராதவர்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களை முடக்கிவிடும். அதற்கு இடம்கொடுக்காமல், தொடர்ந்து பயணித்து, உண்மை விளக்கம் பெறுங்கள். குருவருள் உங்களுக்கு துணை இருக்கட்டும். நானும் உங்களை வாழ்த்து மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

What is the meaning of yoga instead of enjoying the earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?


பதில்:

நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?

நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.

மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.

வாழ்க வளமுடன்.

How long the Master's help we need? After completion anyway we request more!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோக குருவின் உதவி எவ்வளவு காலம் தேவைப்படும்? எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை இருக்கிறதே?!


பதில்:

எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை எழுவது உண்மைதான். என்றாலும் கூட, தன்னை இந்த வான்காந்தத்தில் கலக்க விட்டுக்கொண்ட பிறகு நாம் அப்படி நினைப்பது சரிதானா? என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம். மனதின் இயல்பு என்னவென்றால், இழப்பை பதிவு செய்துகொண்டு அவ்வப்பொழுது வருந்துவதுதான். ஆனால் குண்டலினி யோகம் பயிலும், மனவளக்கலை அன்பராகிய நாம் அதை மாற்றி அமைக்கவும் வேண்டும். 

ஒரு யோக குருவின் உதவி, எல்லாம் கற்கும் வரை தேவைதான். அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். கைபிடித்து அழைத்து வந்து இதுதான் பாதை, என்று காட்டிவிட்டால், பயணம் போகவேண்டியது நாம் தானே? இனி எந்த பயணத்தில் தயக்கம் எதற்கு? நாம் என்ன நினைக்கிறோம் என்றால், இந்த பாதையில் ஏதேனும் குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது? எனக்கு அதெல்லாம் தெரியாதே? என்று நினைக்கிறோம். தன்னையறியும் வழியிலும், இறையுணர்வு பெறும் வழியிலும் எப்படி குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வரலாம் என்று நம்புகிறீர்கள் அல்லது நினைக்கிறீர்கள்? இது சரிதானா?

அப்படியே வந்தாலும் கூட, நம்முடைய குரு கைவிட்டுவிட்டாரே என்றா நினைப்பீர்கள்? அதற்கும் வழி இல்லையே? எனவே இது நீங்களாகவே உருவகப்படுத்திக் கொண்ட சிந்தனைதானே தவிர ஏதும் உண்மையில்லை. முக்கியமாக நம்முடைய குரு, நம் உயிரோடு கலந்துவிட்டதை நீங்கள் மறக்கலாமா?

நம் ஒருவரை மட்டுமே, இறுதிவரை உயர்த்திதர வேண்டும் என்பதும் முறையாகுமா? குருவின் நோக்கமும், செயலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், உய்யவேண்டும் என்பதல்லவா? அதற்கு நாம் தடையாக நினைக்கலாமா? அவரை துணையாக நினைத்துக்கொண்டு, அவரைப் போற்றி வணங்கிக் கொண்டு, பயணித்துகொண்டே இருப்பதுதான் நம்முடை வேலை. அதுதான் நம்முடைய குருவுக்கு முழுமை தருவதாகும், முடிந்தால் நீங்கள் இன்னொருவரையும் உயர்த்துங்கள். வேறு எந்தவித குறையும் வேண்டாம், தொடர்ந்து பயணியுங்கள். உண்மை உணருங்கள்.

வாழ்க வளமுடன்.

Why they always replied as practice meditation it is the solution


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யாரிடம் எந்த சந்தேகம் கேட்டாலும், பொதுவான பதிலாக ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்கிறார்களே? 


பதில்:

அந்த பதிலிலும் ஓர் உண்மை இருக்கிறதுதானே?! என்றாலும் கூட, கேட்கிற அன்பரின் சந்தேகம் எத்தகையது என்பதை, கேட்பவருடைய பார்வையிலேயே பார்க்க வேண்டியதும் அவசியம். ஒரு சிலருக்கு, மூன்றாம் பார்வைகோணம் கிடைப்பதில்லை அல்லது பழகுவதில்லை. இதெல்லாம் எதற்கு என்று தள்ளி வைத்துவிடுவார்கள். தனக்கு புரிந்ததுபோலவே, இன்னொரு நபருக்கும் புரிந்திருக்கும் என்பதும், புரியவேண்டும் என்பதும் நிகழ்வதில்லையே!?

கருமையம், மனம் என்பது எல்லா மனிதருக்கும் பொதுவானது என்றாலும், அதில் இருக்கின்ற களங்களும், பதிவுகளும், அனுபவங்களும் வேறுவேறானவை தானே? அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதனால், அவரவர் தனித்தனியான எண்ணம், சொல், செயல்பாடு என்றுதானே இருப்பார்கள்?! இதுபொதுவானது!

ஆனால், ஏன் தவம் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது என்றால், மனம் இயல்பு நடவடிக்கைகளில் இருந்தும், வாழ்க்கைச்சூழலுகான பரபரப்பில் இருந்தும் கொஞ்சமாக விலகி, தன்னுடைய மூலம் நோக்கி நகரத்துவங்கும். மனதின் அலைச்சுழல் ஆல்பா என்ற தூக்கத்திலும் விழிப்பு நிலை என்ற அலைநீளத்தில், இயங்கிட ஆரம்பமாகும். அந்த நிலையில், மனமே தன்னுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, காட்சிவடிவமாக காணத்துவங்க நல்ல வாய்ப்பு கிடைத்திடும். அதனால்தான், ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

அதாவது, உங்களுக்கான தீர்வு உங்களிடமே இருக்கிறது என்பதுதான் இதன் நோக்கமாக இருக்கிறதே தவிர வேறெந்த காரணமும் இதில் இல்லை! வேதாத்திரியத்தில் அப்படியான குறை காணவும் அவசியமில்லை.

வாழ்க வளமுடன்.

Why i not interested in yoga and no one do not follow this then why me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது? பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும்?


பதில்:

தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது போலவும் பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு, இந்த உலகில் மனோநிலை மாறிவிட்டது என்பது உண்மைதான். காரணம், மனிதன், தன்னையும், தன்னுடைய ஆதாரமூலம் எது? என்பதையும் ஆராயக்கூடிய நிலையில் இருந்து விலகிவிட்டான். அவனுக்கு, இந்த உலகில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் இவற்றில் கவனம் கொண்டு வாழ்வதற்கு பழகிவிட்டான். வாழும் வரை இதுவே போதும் என்ற நிலைக்கும் நிறைந்துவிட்டான்.

பிறந்த குழந்தைகூட இயல்பான நிலையில் வளர்கிறதா? என்பதை நீங்கள் பார்த்து பரிசோதிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளையே கவனிக்கலாம். மூன்று வயது வரைதான் அந்த குழந்தைத்தனம் என்ற இயற்கையோடு ஒன்றிய செயல்பாடு இருக்கும், மூன்றுவயதை தாண்டிவிட்டால், குழந்தைகளும் பெரியவர்களோடு போட்டிபோட பழகிவிடுகிறார்கள். பெரியவர்களையே அடக்கிடவும் பழகிவிடுகிறார்கள். இயற்கை குறித்து ஏட்டளவில் தான் உள்ளது, தன்னைப்பற்றிய அறிவும் அங்கே இல்லை. நான் யார்? என்ற தேடலுக்கும் இங்கே இடமில்லை. இயற்கையை மதிப்பதும் இல்லை, இறைநம்பிக்கையும் இல்லை. இதனால் பக்தியும், யோகமும் அவசியமற்று போய்விட்டது. செயல் விளைவு குறித்து அக்கறை இருந்தாலும், கர்மா என்ற வினைப்பதிவு குறித்தும் விளக்கமில்லை. இதனால் ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம், போய்ச்சேருவோம், இதுதான் மனித இயல்பும், வாழ்க்கையும் என்று வாழப்பழகிவிட்டார்கள்.

ஆனால், நாம், நமக்கு நம் முன்னோர்களால் ஏற்பட்ட உந்துதலால், துன்பம் தீர்க்கவும், தன்னை அறியவும், இயற்கையை உணரவும், இறையுணர்வு பெறவும் ஆர்வம் கொண்டு யோகத்தில் இணைந்திருக்கிறோம். அதை நினைவில் கொண்டு, மற்றவர்களை பார்க்காமல், அவர்களை அவர்கள்போக்கில் விட்டுவிட்டு, உங்கள் பாதையை மாற்றாமல், யோகத்தில் பயணியுங்கள். உண்மை உணர்ந்து, நிறைவான, முழுமையான மகிழ்ச்சியான உலக வாழ்க்கை வாழலாம். அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். வாழும் வாழ்வில் உயரலாம். மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கலாம். சமூகம் மதிக்கும் உயர் நிலையும் அடையலாம்.

வாழ்க வளமுடன். 


How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன். 

What is my journey in Vethathiriyam like?!


வேதாத்திரியத்தில் என்னுடைய பயணம் எப்படிப்பட்டது?!


நானும் வேதாத்திரியமும்

அருள்நிதி பயிற்சிக்காக, ஆழியாறில் 1991ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி மாலையில் அங்கே சென்றடடைந்தோம், அங்கே, முதலில் நாங்கள் கண்ட காட்சி இன்னும் அதே மலர்ச்சியோடு, ஆம், குருமகான் வேதாத்திரி மகரிசி, மாலை நடைப்பயணத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் குழுவோடு பேசிவிட்டு வாழ்த்தினார். மறுநாள்  28 முதல் 29, 30 ம் தேதிவரை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டோம். அவ்வப்பொழுது எனக்கு கிடைத்த உணவு இடைவேளை நேரத்திலும், அன்றைய நாள் பயிற்சி முடிவிலும், அருள்நிதி சான்று பெற்று, நான் வாழ்த்துகளை பெற்ற நேரத்திலும் ‘நான் தகுதியுள்ளவன் தானா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துவந்தது உண்மையே.

ஆனால், ஒரு தகுதி, ஏற்கனவே தகுதியுள்ள ஒருவரால் வழங்கப்படுகிறது என்றால், ‘நிற்க அதற்குத்தக’ என்பது தான் அதன் அர்த்தம். உண்மையாக, இந்த இயற்கையும், நம்மை அப்படித்தான் அரவணைத்து நடத்திச் செல்கிறது. தவறிவிட்டால், தண்டிக்கவும் செய்கிறது அல்லவா?

யார் வேண்டுமானாலும், வேதாத்திரிய தீட்சை பெறலாம் என்றாலும், நம்மில் சிலருக்கே அது கிடைத்தது. ஏன்? நாம் தகுதி பெற்றதினால் தானே? 

சராசரி நபர்களுக்கும மட்டுமின்றி தேடுவோருக்கும் கூட இன்னும் கிடைத்தபாடில்லையே?! அதுதான் இயற்கையின் நிகழ்வாகிறது. எனவே நீங்கள், வேதாத்திரியத்தில் இணைந்ததையும், தீட்சை பெற்றதையும், மகிழ்ந்து, வாழ்த்துங்கள். பிறவியில் கிடைத்த பெரும் பேறு என போற்றுங்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் தந்த ஆசிரியர்கள் அல்லது துணை செய்த நண்பரை நினைத்தும் வாழ்த்துங்கள்.

தடுப்பும் ஏற்பும்

ஒரு சராசரி நடுத்தரவர்க்க மனிதருக்கு நடக்கும் நிகழ்வான, படிப்பு, வேலை, வளர்ச்சி, உயர்வு என்று எல்லாவற்றிக்கும் போராட்டமும், தடுமாற்றமும், நமக்கு யார் உதவுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும். எனக்கும் அப்படித்தான். ஆனால், அப்படி நிகழும் பொழுது, ஏதோ ஒருவகையில் நீங்கள் செலுத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுதான் யோகத்தில் சிறப்பாகும்!

நீங்கள், ஏதேனும் ஒரு நாள், துணைக்கு யாருமற்று, தனித்து நின்று பழகும் பொழுதுதான்,
உலகியலில் பிறமனிதர்கள் எப்படி?
நம்மோடு ஏன் இப்படி பழகுகிறார்கள்?
இப்பொது இருக்கும் சூழ்நிலையை எப்படி ஏற்பது?
நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்வது?
அதை எப்படி அதை அணுகுவது?

என்ற அனுபவம் கிடைக்கும். அதன்வழியாகவே, ஒரு தனியனாக உங்களை நீங்கள் உணர்ந்தால்தான், நிஜமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதுகூட உங்களுக்கே தெரியவரும். அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 

ஆனால் இவை எல்லாம், இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒன்றுதானே? அதை விழிப்பாக, ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டால், நம்மை திருத்தும் ஒரு தடுப்பும், அதன்வழியாக ஏற்பும்   இயற்கையே நிகழ்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே நமக்கு நிகழ்கின்ற எதுவுமே காரணமின்றி நிகழ்வதில்லை. நாம் செல்லும் பாதையில், போக்குவரத்தை சரிசெய்வதைப் போல காலம் செயல்படுகிறது. விபத்து ஏற்படுகிறது என்றால் அது நம் கவனக்கோளாறே ஆகும்.

உண்மை விளக்கம்பெற உதவுவீர்

தனி மனிதன், நான் யார்? என்று தன்னை அறியவும், தன் மூலம் அறிந்து பிறவிக்கடன் தீர்க்கவும் ‘பிரம்மஞானம்’ போதும். ஆனால், அருள்நிதி பயிற்சி ஏன் பெறுகிறோம்? கற்றுக்கொண்ட விளக்கத்தில் ஆழ்ந்து, தேர்ந்து, உண்மையறிந்த பிறகு, நம்மைப்போலவே, துன்பத்தில் சிக்கித்தவிக்கும், சகமனிதரை நாம் உயர்த்துவதற்கு உதவலாம் அல்லவா? அதற்காகவே

ஆனால் வேதாத்திரியத்தில், இது கட்டாயமல்ல. உங்களுக்கு அப்படியான விருப்பம் இருந்தால் பிறருக்கு சொல்லித்தரலாம். மேலும் வேதாத்திரியத்தை, உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் வகையில் மனவளக்கலை  வழியாக. அருள்நிதி நிலையும், கூடுதலாக, துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளும் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்வது மட்டுமல்ல, சக மனிதருக்கும், காலம் காலமாக மறைந்திருக்கும் உண்மை விளக்கத்தை அறியத் தரவேண்டும் என்பது, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் திட்டம். அதன்படியே இன்று, வேதாத்திரியம் பரந்து விரிந்து இருப்பதை நாம் காணமுடியும்.

கர்மா எனும் வினைப்பதிவு தாக்கமும் கழிவும்!

எப்படியோ நாம் பிரம்மஞானம், பெற்று அருள்நிதி ஆகிவிட்டோம், இன்னும், துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்றும் ஆகிவிட்டோம். ஆனால் நாம், தன்னை அறிதலிலும், இறையுண்மை உணர்தலிலும் எப்படி இருக்கிறோம்? என்பது அவரவருக்கே தெரியும் உண்மையாகும்.

இதற்கு நம் கர்மா என்ற வினைப்பதிவின் பங்கு அளப்பறியது. என்னதான் வேதாத்திரிய சேவையில் இருக்கிறோம் என்றாலும் அதன் தாக்கம் ஒவ்வொருவரும் அறிவார். தனியாக இங்கே நான் விளக்கத் தேவையில்லை. நம் ஓவ்வொரு நொடி வெளிப்பாடிலும் கர்மா வரவும், பற்றும் இருப்பதை உணர்ந்தால் போதுமானது.  வரவில் கவனமாக இருப்பது முக்கியம். 

புலிவால் பிடித்த கதை

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் 50 வயது நிறைவில், உலக வாழ்வு போதும் என்ற முடிவோடு, முழுமையாக, எல்லாவற்றிலிருந்தும் விலகி, வேதாத்திரிய சேவையை ஏற்றுக்கொண்டார். 

1988 முதல், இத்தனை ஆண்டுகளாக, ஆர்வம், பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, முடிவு என எனக்கு வேதாத்திரியம் வழியாக, உண்மை வரவர, என் சூழல் மிகுந்த மாற்றம் நிகழ்ந்தது. தானாகவே 2017ம் ஆண்டில் அந்த உண்மைக்குள் நான் விழ ஆரம்பித்தேன். 2018 ல் நிறைப்பேறு நிலை என்பது புரிய ஆரம்பித்தது. எப்போதுமே எனக்குத் தெரிந்ததை, பிறருக்கு சொல்லும் பழக்கமும், சொல்லித்தரும் பழக்கமும் உண்டு.

அந்த வழியாக, வழக்கமான பணிகளோடு, வேதாத்திரியமும் பிறருக்குத் தரலாம் என்றெண்ணி ஆண்டு 2018 ல் ஆரம்பித்ததே ‘வேதாத்திரிய சானல்’ ஆகும். ஆண்டு 2019 ல் டிசம்பரில், பெரும் தொற்றான கோவிட் பரவ, என்னுடைய வழக்கமான பணிகள் பாதிக்கபட, முழுதான பணியாக வேதாத்திரிய சேனலில் பதிவேற்றம் செய்வது என வந்துவிட்டது. இன்று இந்த ஆண்டு 2023-லும், ‘நீ முழுமையாக இதில் இரு’ என்பதாகவே சூழல் அமைந்துவிட்டது.

ஆம் புலிவாலை சும்மா பிடிக்கப்போக அதில் சிக்கிவிட்டேன் என்ற பழமொழி போலத்தான் சொல்லவேண்டும். வேதாத்திரியத்தை நான் விட்டால்கூட, வேதாத்திரியம் என்னை விடாது. இப்பொழுது எனக்கு வேதாத்திரியம் தவிர வேறெதும் தெரியாது என்ற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் தான், வேதாத்திரியத்தில் வழக்கமான பதிவுகளோடு கூடுதலாக தனிப்பட்ட சேவையும் தரலாம் என்று முடிவெடுத்தேன். அதை நன்கொடை பெற்று நடத்தக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.

ஏனென்றால், முழுதாக வேதாத்திரியத்தில் இயங்கினால், உலகியல் பணிகளில் தொய்வு வருவது இயல்பானதே ஆகும். இதை நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அனுபவித்தும் இருந்தார். அவர் ‘அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று காலம் தள்ளிய நாட்கள் அவை’ என்கிறார். ஆனால், இறையுண்மையை, நான் யார்? என்ற தன்னையறிதலை, பிறவிக்கடன் தீர்க்கும் உன்னதத்தை, ஏளனமாக பார்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான்  இந்த சேவையில் ஈடுபடுபவர்களையும் ஏளனம் செய்வார்கள். அதுகுறித்து, தன்னை அர்ப்பணித்து சேவையில் இறங்கியவர்கள் வருத்தம் கொள்வதில்லை!

எதிர்பார்ப்பில்லை

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன், எல்லாம் வல்ல இறைநிலை, என்னை பார்த்துக்கொள்ளும்’ என்பது நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய சேவையில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும் சங்கல்பம். நானும் இந்த சங்கல்பத்தின் வழியேதான் வேதாத்திரிய சேவையில் இறங்கியுள்ளேன். நான் இறங்கினேன் என்பது தவறு, இறைநிலையே என்னை தன்னில் நகர்த்திக் கொண்டது என்று சொல்லலாம். ஆனாலும், யாருக்கு எப்பொழுது எது எங்கே கிடைக்கவேண்டும் என்பதை, காலமும், அதனோடு இருக்கும் பேராற்றலும், பேரறறிவும் தானே தீர்மானிக்கிறது.  எனவே காத்திருக்கிறேன்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!