CJ for You: vedanta

vedanta

Showing posts with label vedanta. Show all posts
Showing posts with label vedanta. Show all posts

Please explain Dvaita, Advaita, Vishishtadvaita philosophies?


துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

சுவாமிஜி, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப் பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்து செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (Essence) தானே?


அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்தச் செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், “த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் “அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம், “ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று “மாறுபடுகிறது” என்பதை த்வைதம், “எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.


வாழ்க வளமுடன்.

What is the truth of, Human athma contaminated is cause for life problems said by Vedanties?


மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?

பதில்:

உலகில் வாழும் ஜீவன்களின் பரிணாமத்தில், ஆறாவது அறிவின் உயர்வில் வந்தவனே மனிதனாகிய நாமும் நம்முடைய சக உதிரர்களும். உதிரம் என்றால் இரத்தம், சக உதிரம் என்றால் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான இரத்தம் என்ற உயர் கருத்தாக அமைகிறது. ஆறாவது அறிவில் பரிணமித்தாலும்கூட அதில் உண்மை விளக்கத்தை பெறததால், மனிதனுடைய வாழ்க்கை புதிராக இருக்கிறது. மேலும் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாவே காரணம் என்ற வேதாந்த கருத்து உண்மைதான். 

இந்த களங்கம் என்பதை குறை அறிவு, விளக்கமற்ற நிலை, மறதி, விலகி நிற்றல் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதை நிவர்த்தி செய்தால், வாழ்கின்ற வாழ்வின் உண்மை புரிந்துவிடும். மனிதனுக்கு மனிதனே செய்யும் தீங்கு எழாது. தனிமனிதனும் அமைதி அடைவான், உலகமும் அமைதிபெறும். ஓர் உலகம் என்ற ‘உலக சமாதானமும்’ கிடைத்துவிடும்.

உண்மையாகவே ‘இந்த மனித சமுதாயம், வாழ வழி தெரியாமல் திகைத்து சிக்கல் ஏற்றது’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். உங்களுக்கே தெரியும் உண்மை அதுதான். ஆனால் நாம் மறந்துவிட்டு, எதோ வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்று வாழ்நாட்களை கடத்தி வருகிறோம் அல்லவா? எல்லோருக்கும் பிறப்பு என்று உண்டு, அதுவும் சமகால நாட்களான ஒன்பதுமாதம், குறை பிரவசம் தனியானது. எல்லோருக்கும் பசிவந்தால் அதை உணவால் சரிசெய்தல். வலி, நோய் தொந்தரவு இவற்றை மருந்தால் குணமாக்குதல். உழைப்பு, சோர்வு, தூக்கம், விழிப்பு என்பதுவும் பொது. சுவாசிக்கும் காற்று, வெப்பம், மழை நீர் ஆகியனவும் இயற்கை வழங்கிய பொதுவானது. உடல், அதனோடுகூடிய உயிர், அதில் எல்லாம் உணர்வாக பெற்று அறிந்து உணர்ந்து வாழ மனம் ஆகியனமும் பொதுவானது. வாழ்க்கையும் பொதுவானது, அதில் மரணமும் பொதுவானது. ஆனால் இந்த பொதுத்தன்மை எல்லா மனிதர்களிடமும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. ஏழைக்கும், நடுத்தரவாதிக்கும், செல்வந்தருக்கும் வேறுபாடாக அல்லவா இருக்கிறது? அதனால்தானே சிக்கலும் கூட எழுகிறது?

நாடகத்தில் வேஷம் கலைத்தால், சராசரி மனிதனாகிவிடுவது போல, இதிலிருந்து மனிதன் எப்போது மாறி, உண்மையை உணர்வது? அதற்காகத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘தனிமனித விடுதலைதான்’ இந்த உண்மையை உணரத்தரும் என்கிறார். மேலும் மனிதன் யோகத்தில் இணைந்துதான் உண்மையை பெறமுடியும் என்றும் சொல்லுகிறார். 

வேதாந்த கருத்துக்கள் உண்மையானதுதான். அது உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு மனிதனை உயர்த்தவல்லது. யோகம் அந்த உண்மையை மனிதனுக்கு, அறிந்ததை, புரிந்ததை உணரவைப்பதாகும்.
வாழ்க வளமுடன்
-

Why often noted yoga only is the best way? Any other way not truly work?


எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


பதில்:

யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.

இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான்  உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.

ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.

வாழ்க வளமுடன்

-

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

Upadesh Mantra from the Guru!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குருவால் கிடைத்த உபதேச மந்திரம்  சொன்னால் இறையுண்மை அறியமுடியுமா?.


பதில்:

இந்த உலகில், இறையுண்மை எனும் மெய்ப்பொருள் உண்மை அறிய, பக்தி வழி, வேதாந்த வழி மற்றும் யோகவழி உண்டு. பக்தியைக்கூட வேதாந்தமாக சொல்லுவோரும் உண்டு. இந்த வேதாந்தம், யோகம் இரண்டுமே ஒரே நோக்கம் கொண்டது. ஆனால் பாதைகள் வேறு ஆகும். இரண்டு பாதைகளுமே குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும், அது பயணாளியின் நம்பிக்கை, ஆர்வம், முயற்சி, செயல்பாடு, ஆராய்ச்சி, அர்பணிப்பு என்ற வகை நிர்ணயம் செய்யமுடியும். ஒரு மனிதரால் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ? அதை ஏற்று பயணிக்கலாம். எதை விரும்புகிறாரோ அதை விரும்பியும் பெற்று பயணிக்கலாம். எது சரியானது என்று தீர்மானிக்கிறாரோ அதன்படி அவ்வழியே செல்லலாம். அந்த வகையில் குறை நிறை என்றெல்லாம் சொல்லமுடிவதில்லை. என்றாலும் கூட வேதாந்தம் என்பது அருகில் கொண்டுபோய் நிறுத்தும் என்றுதான் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதை அடைவது என்பது யோகத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் உலகில் மாற்றுக்கருத்துகள் உண்டு!

ஒரு உபதேச மந்திரம் என்பது ஒரு குருவால், பக்தி வழியிலும் கிடைக்கலாம். வேதாந்த வழியிலும் கிடைக்கலாம். இந்த உபதேச மந்திரம் குருவால், அந்த புதிய, ஆரம்ப சாதகருக்கு, சீடருக்கு தனியாக, ரகசியமாக, பிறருக்குத் தெரியாமல், அறியாமல், காதுவழியாக சொல்லப்படுவது ஆகும். இந்த உபதேச மந்திரத்தை மனதிற்குள்ளாகவே சொல்லுவதும் உண்டு. தவ நிலையில் அமர்ந்து ஒலிக்குறிப்பாக சொல்லுவதும் உண்டு. இந்த வழியை, பதஞ்சலி முனிவர் தன்னுடைய அஷ்டாங்க யோகத்தில் ‘பிரத்தியகாரா’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி உபதேச மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தால் மனம் லயப்பட்டு, ‘தாரணா’ என்ற நிலைக்கு உயரும். தன் வழியாக ‘தியானம்’ கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு!

எனவே உங்களுக்கு அப்படியான ஒரு உபதேச மந்திரம் கிடைத்தால், தாராளமாக உள்வாங்கி சொல்லிவரலாம். எத்தனை முறை, எவ்வளவு காலம் என்ற கணக்குகள் இதில் அடங்காது. உங்கள் மனம் அதில் லயிக்கும் காலம் வரை சொல்லிக்கொண்டே வரலாம். அந்த நிலையின் ஏதோ ஒருநாள் இறையுண்மையை நீங்கள் உணரலாம்.

திருவண்ணாமலையில், வாழ்ந்து வந்து வாழ்ந்து, முக்தியடைந்த, யோகி ராம் சுரத்குமார் அவர்கள், தன்னுடைய குருவான சுவாமி பப்பா ராம்தாஸ் என்பவரிடம் இருந்து, உபதேச மந்திரம் கிடைக்கப்பெற்றார். அதுதான் பின்னாளில் அவர் சொன்ன,

‘ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்! ஓம்!’ என்பதாகும்!

வாழ்க வளமுடன்.