CJ for You: poem

poem

Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

The Game Changer


 வணக்கம் அன்பர்களே.

கடந்த  2023 ஆண்டு ஜூலை மாதம் முதலாகவே, @வேதாத்திரியா (@Vethathiriya) எனும் YouTube வழியாக தரக்கூடிய பதிவுகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதை அறிவீர்கள். என்னுடைய இருப்பிட இடமாறுதல், வேலை மாற்றம், உடல்நிலை, குடும்பத்தினர் உடல்நிலை என பல்வேறு சோதனை காலமாக ஆரம்பமானது. தெளிவாக சொன்னால், கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பான சூழலே, வழக்கமான வேலைகளை குறைத்துவிட்டது. அந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளாகவே, அருள்துறையில் அதிசயதக்க உயர்வுகளை அடைந்தாலும் கூட, பொருள்துறையில் பெரும் தடுமாற்றத்தை பெற்றேன். முக்கியமான காரணம், கடந்த இருபது ஆண்டுகளாக, தனி நபராக, சுயசார்பாக இயங்கியதுதான். தனிப்பட்ட எந்த நிறுவனத்தையோ, எந்த நபரையோ சார்ந்து நான் இயங்கியதில்லை. இதனால், கரோனா நோய்தொற்று காலம், வேலைகள் இல்லாது, பொருளாதாரத்தில் வீழ்ச்சி. தடுமாற்றம். சிக்கல்கள் ஏற்பட்டு சமாளிக்க முடியாத திண்டாட்டம் ஆகிவிட்டது.

‘எனினும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதை தெரிந்து கொண்டிருந்ததாலும், பல்வேறு மாற்றங்களை தந்து, நமக்கு பாடம் நடத்தும் இறையின், இயற்கையின் நீதி அறிந்ததாலும், ‘நடப்பது நடக்கட்டும் எனினும் நான் என் முயற்சிகளில் தயங்கி நின்றிடமாட்டேன்’ என்ற உறுதியில், என்னால் முடிந்ததை, சரியான வழியிலே செயல்பட்டுக்கொண்டே இருந்தேன். வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை ஒன்றை அவ்வப்பொழுது நான் நினைவில் கொண்டுவருவேன்.

-

இயற்கை என்னும் பேராட்டக்காரனுக்கு

எல்லோருமே ஆட்டக்காய்கள், பெயர்த்து

இடமாற்றி வைப்பான், பிய்த்தெறிவான்,

அருள்வான். குறையென்று சொல்லுவதற்கு

பிறந்தோர் உலகில் யாருளர்!

-

இந்த கவிதையின் உண்மை அறிந்தோர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று மனம்வருந்த முடியாது. எதனால்? என்ன காரணம்? என்று நம்முடைய குறை அறிவுக்கும் விளங்கிடாது. ஆனால் எங்கோ தவறு இழைத்திருக்கிறோம். அதனால், இதை, இந்த சூழலை, அதற்கான திருத்தமாக ஏற்றுக்கொள்வோம் என்ற முழுமையான முடிவுக்கு வந்து நிற்பதற்கு தயாராகிவிடுவோம். அதுதான் எனக்கும் நிகழ்ந்தது. இதில், மறுபடியும் எழமுடியுமா? என்ற கேள்விகூட எழலாம். ஆனால், மனிதன் தாங்கமுடிகிற துன்பத்தைத்தான் ‘இந்த இயற்கை நீதி’ வழங்குகிறது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது நமக்கான திருத்தம் என்பதை ஆழமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்குப்போய் இப்படியா? என்று தனை வருத்தம் செய்துகொண்டால், யாராலும் உங்களை தேற்றிட முடியாது. நடப்பது எனது தவறுகளுக்கான திருத்தம், தண்டனை என்று ஏற்றுக்கொள்ளலாம். அந்த நிலைக்கு மனம் தெளிவு வரவேண்டும் என்பதும் முக்கியம். இல்லையானால், உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட சில முயற்சிப்பார்கள்.

எனக்கான சூழலில், அதை சரி செய்திட குடும்பத்தினரும், நண்பர்களும் உதவினர். அதன்வழியாக சில சிக்கல்களை கடந்து வந்தேன். எனினும் வேலை தாமதமாகவே அமைந்தது. முழுமையாக, என்னையே மாற்றி அமைக்கும்படி, என் அடையாளத்தையும் மாற்றும்படி வேலை அமைந்தது. என்றாலும், நிறைவான வேலைதான். சொந்தமான தொழில் என்ற நிலை கடந்துவிட்டது. எனினும் இதுவும் ‘இதுவும் நீதிக்காகவே’ என்று ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை பயணிக்கிறேன், இனிமேலும் அதிலே பயணிப்பேன். எனக்கு அல்லது எனக்குள் எந்த குறையும் இல்லை.

வேதாத்திரியத்தில் விளக்கம் பெற்ற பிறகுமட்டுமல்ல, அதற்கு முன்பாகவேகூட என் தேவைகள் மிகக்குறைவு. எந்த திட்டமும், முனைப்பும், முயற்சியும் கொண்டவனில்லை. இருப்பது போதும், இதில் குறைவின்றி இருந்தாலே நிறைவுதான் என்ற மன நிலை எப்போதும் உண்டு. இது என் குடும்பத்தின் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் நற்பண்பு என்றுதான் சொல்லுவேன். பெயருக்கும், புகழுக்கும், பெருமைக்கும் என்றும் ஆசையும், அதற்கான திட்டமும், குறுக்குவழிகளும் என்றுமே இருந்ததில்லை. என்னுடைய இருபதாண்டு ஓவிய வேலைகளிலேயே அது நிறைவும் பெற்றுவிட்டேன். ஆனால், நான் வேதாத்திரியா வழியாக எதைச் சொன்னாலும், நான் ஏதோ காசுக்கு ஆசைப்பட்டு செயல்படுவதாகவே சில அன்பர்கள் பின்னூட்டம் தந்ததை அறிவேன். அது அப்படித்தான் நிகழும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இத்தகைய அன்பர்களின் பின்னூட்டம், மற்ற அன்பர்களையும், ஆர்வத்தையும், உயர்வையும் திசை திருப்பிவிடும், நான் ஒன்று சொல்ல, அவர்கள் அதற்கு ஒரு பின்னூட்டம் இட, இப்படி நீண்டுகொண்டே இருக்கும் என்பதன் காரணமாகவே பின்னூட்டம் தடையும் செய்யப்பட்டது.

இப்படியாக, ஆறுமாதங்களாக இரு புதிய பதிவுகள் மட்டுமே என்னால் தரமுடிந்தது. இதற்காக அன்பர்கள் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். என்றாலும், எழுத்துப்பதிவுகளும், வேதாத்திரிய கேள்வி பதில்களும் தொடர்கின்றன. அருள்தந்தை, மகான், வேதாத்திரி மகரிஷி தந்த, உங்களுக்கான விளக்கங்களை, என்வழியாக, என்னுடைய புரிதல் கொண்டு, இன்னும் எளிமையாக தந்திருக்கிறேன் என்பது உண்மை. புதிய பதிவுகள் இல்லாத இந்த நிலையிலும், மிக சிறப்பான பார்வைகள் வந்துகொண்டிருப்பதை YouTube தருகிற மாத அறிக்கை சொல்லுகிறது. அன்பர்களாகிய உங்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.

உலகமெங்கும், எண்ணற்ற வேதாத்திரியர்கள் தம் மக்களுக்கான பகிர்தலை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்த பதிவுகளை தந்திருக்கிறேன். இன்னும் தருவேன்.

ஒவ்வொரு நொடியும் பல்வேறு சூழல் வழியாகவும், பிறர்மூலமாகவும், எண்ணங்களாலும் வழிநடத்தும் இறையாற்றலுக்கு என்னுடைய வணக்கங்கள், அந்த இறையை உணரத்தந்த மகான் குரு வேதாத்திரி மகரிஷிக்கும் வணக்கங்கள். அன்பர்களாகிய நீங்கள் அனைவரும், இறையாற்றலின் கருணையினால், உடல்நலம், நீள் ஆயுள் நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்.


Isn't it wrong to grow a body? Is Siddhar Thirumoolar right? What is the truth?


ஐயா, உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் சித்தர் சொல்லுகிறாரே. அப்படியாக உடலை வளர்ப்பது தவறுதானே? சித்தர் திருமூலர் சொல்லுவது சரியா? உண்மை என்ன?

சித்தர் பெருமகான், திருமூலரின் திருமந்திரம் நூலில், அந்த பாடலின் ஒரு வரியை எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த அளவில், இந்த கேள்வியை கேட்கிறீர்கள். உண்மையில் உங்கள் முடிவு தவறு. அந்த பாடல் முழுமையாக என்ன என்பதை, இதோ இங்கே பார்க்கலாமா?

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!’

என்ற இந்த கவியில், உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று தான் சொல்லுகிறார். ஆனால், எதற்காக அப்படி சொல்லுகிறார் என்பதையும் விளக்குகிறார் அல்லவா? மிக எளிய தமிழில் இருப்பதால், தனியாக விளக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். எனினும் சுருக்கமாக சொல்லுகிறேன். நாம் வாழும் வரை உடலும், உயிரும் இணைந்திருக்க வேண்டும். எந்த ஒன்று பாதிக்கப்பட்டாலும், பிரிந்தாலும் எல்லாம் முடிந்தது. இதற்கிடையில், நான் யார்? என்று தன்னை அறியவேண்டும். பிறவிக்கடனான கர்ம வினைப்பதிவுகளை நீக்க வேண்டும் அல்லவா?

அதற்காக வாழ்வையும் வளமாக்கிட வேண்டுமே! என்பதையே இந்த திருமந்திர கவிதையில் விளக்குகிறார். பொதுவாக, சித்தர்கள் இந்த உடலை, ஒரு பொருட்டாக கண்டுகொண்டதில்லை. அப்படித்தான் அவர்கள் கருதி, பல கவிகள் தந்திருக்கிறார்கள். திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், ‘இந்த உடல் எனக்கு ஒரு தடையாக இருக்கிறது’ என்று சொல்லுகிறார். இறை உண்மையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு, அப்படித்தான் தோன்றும். ஆனால், மகான் திருமூலர், நமக்காகவே இந்த கவிவழியாக உண்மை சொல்லுகிறார்.

சராசரி வாழ்வில் இருக்கும் மக்களுக்கு உண்மை விளக்கம் தரும் வகையில்தான் இந்த கவிதை உதவுகிறது. உடலை கெடுத்துக்கொண்டு, ஆன்மீகத்திற்கும், யோகத்திற்கும் பயணிக்க வேண்டியதில்லை. உடலும் வேண்டும், உடலும் வேண்டும், உண்மைப்பொருள் தேடுதலும் வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரைதான் சொல்லுகிறார். மேலும் இந்த உண்மை விளக்கத்தை, இந்த காணொளி வழியாகவும் அறியலாம்.

வாழ்க வளமுடன்.

-

How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-  


Vethathiri Maharishi's Realization moved to 21 years backward, Is it Correct?


இருபத்தொன்று ஆண்டுகள் பின்னோக்கிய வேதாத்திரி மகரிஷியின் உண்மை உணர்தல்! சரிதானா?


ஒரு சாராசரி, தனி மனிதருடையை சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் மாறாது நிலைபெறும் காலம் இது. ஒரு ஞானியின் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் அதைவிடவும் மகத்துவமானது. காலம் மாறினாலும், சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிடாது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன் காலத்திலேயே, தன் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார். அதில் எப்போதும் எந்த மாற்றமும் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார். இதற்கு காரணமும் அவரே சொல்லுகிறார்.

ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளுக்குக்கூட, தமிழறிந்த யார் வேண்டுமானாலும், விளக்கவுரை எழுதலாம் என்ற நிலை இன்னமும் தொடர்கிறது. ஒரே குறளுக்கு, வேதாத்திரி மகரிஷியின் விளக்கவுரையையும், இன்னொருவர் விளக்கவுரையையும் நீங்கள் ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்'  நூல்வழியே ஒப்பிட்டுப்பார்த்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக மறைபொருளை விளக்கும், ஐம்பது திருக்குறளுக்கு மட்டுமே விளக்கம் தந்திருக்கிறார். வேதாத்திரியத்திற்கு ஏற்றபடி இது போதும் என்றும் சொல்லிவிட்டார்.

‘நான் பேசவும், எழுதவும், விளக்கவும் ஆரம்பித்தது, எல்லாம் உணர்ந்த பிறகுதான். அதனால், அன்று சொன்னதையே இன்றும் சொல்லுவதுபோல உங்களுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலோர், ஆரம்பத்தில் ஒரு விளக்கத்தையும், உண்மை உணர்ந்த பிறகு வேறெரு விளக்கத்தையும் தருவார்கள்’ என்று உண்மையான காரணத்தை சொல்லுகிறார். மேலும், தன்காலத்திற்கு பிறகும், இப்படியே தொடரவேண்டும் என்பதையும் விளக்குகிறார். ‘ஒரு ஞானி, தான் உணர்ந்ததை பிறருக்கு வார்த்தைகளால் விளக்க முயற்சிப்பார். சீடரோ, மாணவனோ அந்த குறிப்பை எழுதிக்கொள்வான். ஆனால் அவன் அதை உணர்ந்தறிய மாட்டான். இதனால், ஞானியின் மறைவுக்குப்பின், தனக்கு தெரிந்ததை இணைத்துக்கொள்வான். அவன் காலத்திற்குப் பிறகு இன்னொருவன் வருவான். அவன் கூடுதலாக இன்னொன்றை சேர்த்துக்கொள்வான். இப்படியே கதை, கட்டுரை போல உண்மை, இவ்வுலகில் திரிந்து விட்டிருக்கிறது’ என்று சொல்லுகிறார். எனினும் வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்துவிட்டபிறகும், அவரின் கனவு நிறைவேறிட பிரமாண்டமாக, வேதாத்திரியம் வளர்ந்திருக்கிறது. வளர்ந்துகொண்டும் இருக்கிறது. அந்த வகையில் வேதாத்திரி மகரிஷியும் மகிழ்ந்திருப்பார்.

எனினும், கண்ணில் பட்ட ஒருபதிவு என்னை உறுத்தியது. இதோ அந்த பதிவிற்க்கான காட்சிப்படம். 


        வழக்கமாகவே நான் அடிக்கடி, வேதாத்திரிய ஞானக்களஞ்சிய கவிகளை படித்துக் கொண்டிருப்பவன். என்னுடைய உண்மை விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷியின் நேரடியான உரைகளும், கட்டுரைகளும், நூல்களும், கவிதைகளுமே உதவின. கவிதையை, பதிவில் படித்த பொழுது, எனக்கு ஒரு வரி இடித்தது. உடனே மூல ஞானக்களஞ்சிய கவி நூலைப் பிரித்தேன் படித்தேன். உண்மை அறிந்தேன்.

ஞானமும் வாழ்வும் கவிகள்: (கவி எண் 238) ‘இனி பிறவி இல்லை’ ‘நிறை உணர்வு’ என்பதை தாண்டி, ‘உருவெடுத்த காரணமும்’ என்று ஆரம்பித்து ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று யாரோ, வேதாத்திரி மகரிஷியின் கவிதையில், கை வைத்திருக்கிறார்கள்.


வேதாத்திரி மகரிசி 96 ஆண்டுகள் வாழ்ந்தது இருக்கட்டும். அதை சொல்லுவதற்கு, அவரே 28/05/1986 ல் எழுதிய கவிதையில் கை வைக்கவேண்டுமா? யார் செய்த திருத்தம் என்பது தெரியவில்லை. கிட்டதட்ட, வேதாத்திரி மகரிசியின், இறையுணர்தலை, உண்மை விளக்கத்தை, 21 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார்களே? ‘உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து’ என்பதை ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று மாற்றிவிட்டது தகுமா? திருத்தியதை படிக்கும் சமூகம், எதோ இறக்கும் தருவாயில்தான், உண்மை உணர்ந்தாரோ? என்று கருத இடமிருக்கிறதே?! உங்களுகு சந்தேகம் இருந்தால், கவி எண் 709, ‘நிறை உணர்வு’ எனும் தலைப்பில், ஞானக்களஞ்சிய கவிதை நூலைப்பாருங்கள்.

அட, ஏனய்யா இதெல்லாம் பெரியவிசயமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விடுங்க இதெல்லாம் சகஜம் என்று என்னையும், உங்களோடு அழைக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது. சரி விட்டுவிடுவோம். ஆனால் வேதாத்திரியம் சிறுகச்சிறுக தன் மதிப்பிழக்க விடலாமா? ஏற்கனவே, வேதாத்திரியத்தில் உள்ளவர்களே, வேதாத்திரி மகரிசி அவர்கள் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? மருத்துவ மனையில்தானே இறந்தார்?’ என்று உண்மை அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில், கூடுதலாக 21 ஆண்டுக்கால உண்மை விளக்கமும் தள்ளிப்போய் விட்டது. இனி காலப்போக்கில், பதினோராவது மடமாக மாறிவிடக்கூடும் அல்லவா?

        வேதாத்திரி மகரிஷி, தன் அன்பர்களிடம் உரை நிகழ்த்தினாலும், பொதுமக்களுக்காக உரை நிகழ்த்தினாலும், அவர்களை உயர்த்திடவே, தன் கருத்துக்களை, தன் உதாரணங்களைக் கொண்டே விளக்குவார். ஒருபோதும் பொது தளத்தில் உள்ளவர்களை சொல்லி பேசுவதில்லை. மக்களின் அககாட்சி மாறக்ககூடாது என்பதில் கவனம் கொண்டிருப்பார். ஆனால் இப்போது, எல்லோருமே, மக்களின் தளத்திற்கு இறங்கிவிட்டனர், இப்படி சொன்னால்தான் மக்களுக்குப் புரியும் என்று, வேதாத்திரி மகரிஷி கண்டுபிடிக்காத கருத்தியலை கண்டுபிடித்துவிட்டார்கள். மணி நேரம் பேசினாலும் அப்படித்தான், குறைந்த நிமிடத்தில் பேசினாலும் அப்படித்தான். இதை நீங்களும் உணர்ந்திருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும்கூட நல்லதே நடக்கட்டும்.

உலக பேச்சு வழக்கில், உண்மைக்கு புறம்பாக, ஒரு மனிதர் இறந்த பிறகு, இறந்தவரின் கருத்தை பேசினாலும், பேசும் பொருளானாலும், அவர் தன் கல்லறையில் நெளிகிறார் என்று சொல்லுவார்கள். அதாவது அந்த அளவிற்கு வருத்தம் தரும் என்று குறிப்பிடுவார்கள். அப்படி ஆகிவிட வேண்டாமே?!

        ஒரு அன்றாடம் நிகழ்வதையே தவறான செய்தியாக தருவது, தவறு, குற்றம் எனும்போது, ஒரு ஞானியின், மெய்யுணர்தலை, தன் விளக்கத்தை, பொருத்தமாக மாற்றி அமைப்பது என்னவாகும்? ‘ஐயா, இதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்கிறீர்களா? சரி தான். அப்படியே ஆகட்டும்.  

வாழ்க வளமுடன்.

-

Is there such a thing as fate? Is it true that wisdom can conquer fate?


விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?


பதில்: 

இதற்கு முன்பாகவும், பலவிதமாக இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் எனினும். மீண்டும் சொல்லுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இங்கே குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களின் கவிதையின் கருத்தாக, எனக்கு கிடைத்த உண்மையைக் கொண்டு விளக்குகிறேன்.

        விதி என்பது இயற்கையின் நியதி ஆகும். நியதி என்பது என்ன? அடிப்படையாக இருப்பது என்று அர்த்தமாகிறது, அப்படியானால் விதி இருக்கிறதா? என்றால் அது நிச்சயமாக இருக்கிறது என்பது ‘அடித்துச் சொல்லக்கூடிய்’ உண்மைதான். ஆனால் அதைபின்பற்றி ‘தலையெழுத்து’ ஒன்று இருக்கிறது. அதன்படிதான் நீ வாழ்வாய் என்றால், நம்பாதீர்கள். விதி உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் தலையெழுத்து என்பது இல்லவே இல்லை.

இந்த விதி எங்கே தொடங்குகிறது? என்று ஒரு கேள்வி எழுந்தால், அது, பஞ்ச பூதத்தின் முதல் பரிணாமத்திலேயே உருவாகிவிட்டதாக, மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். பரமாணுக்களின் கூட்டாக விண் என்ற ஆகாஷ் உருவான பொழுதே, அதனூடாக விதி என்பது அமைந்திருக்கிறது என்கிறார். அந்த விண் மிகமிக விரைவான சுழற்சி கொண்டது. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையில் இருப்பதும் ஆகும். அதனைத் தொடர்ந்த அடுத்த பரிணாமான காற்றையும் நாம் காணமுடிவதில்லை. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத விண் என்ற ஆகாஷ் தான், ஜீவன்களிலும், மனிதரிடத்திலும் ‘உயிர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறது. அதன் உள்ளடக்கமாக தோற்றம், இருப்பு, கலைதல் என்ற மூன்று கட்டமாக விதியை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அது அதனுடைய இயற்கை தன்மையாகவும் உள்ளது. இங்கே விதி என்பதை பார்த்தோம்.

அந்த விதியை கொண்டிருக்கும் உயிர், தன்னுள்ளே, அதன் மையப்புள்ளியிலே அறிவாக, உணரும் ஆற்றலை பெற்றிருக்கிறது அல்லவா? அதுவே மதி என்றும் மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார். (உங்களுக்குப் புரிகிறதா? என்று நான் கேட்கவே மாட்டேன். புரிகிறதா என்று கேட்பவன் விளக்கத்தெரியாத முட்டாள்) இதை இன்னும் விளக்கமாக, எப்படியாக புரிந்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கலாமா? தனக்குள் விதி என்ற இன்று இருப்பதால், அந்த விண் என்ற ஆகாஷ் துகள் நின்றுவிடவில்லை, அழிந்துவிடவில்லை.தனக்குள் அமைந்திருக்கும் அந்த விதியை மீறி, அதனூடாக இருக்கும் மதியின் வழியாக, தன் வாழ்நாளின் தன்மை கருதி, திட்டமிட்டு, அதற்குள்ளாக, தன் காலத்திற்குள்ளாக, பலகோடி துகள்களோடு கூடி, அணுக்களாகவும், தன்னைப்போன்ற பல உயிர்த்துகளோடும் கூடியே,  மூலக்கூறுகளாகவும், தோற்றங்களாகவும், பொருட்களாகவும், ஜீவன்களாகவும், மனிதராகவும் வந்து நிற்கிறதே? அது விதியைக்கடந்த மதியின் செயல் அல்லவா? அதை நாம் ‘பஞ்சபூத நிலையிலேயே’ புரிந்துகொள்ள வேண்டும் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு உணர்த்துகிறார்.

விண் / ஆகாஷ் / உயிர் ஆகிய இத்துகளே, விதியை மதியால் வென்று வெற்றிபெறும் பொழுது, அந்த உயிரைக்கொண்டே உலகில் வாழும் நாம், நம்மை விதியின் கீழ், குறைபட்டுக் கொள்ளலாமா? கவியின் கருத்து வழியாக, சொன்ன இத்தகைய விளக்கம் உங்களுக்கு, உண்மையை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

-

வாழ்க வளமுடன்.

-

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

No need mantra and chanting if mind will be completeness by Siddhar Agathiyar


மனமது செம்மையானால் மந்திரம் எதுக்கடி?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை செம்மையாக வைத்துக்கொண்டால் மந்திரம் தேவையில்லை என்று சொல்லுகிறார்களே? அதன் விளக்கம் என்ன?


பதில்:

ஆதியோகியின் வழியில், சப்தரிஷிகளில் ஒருவர், தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த சித்தர்களின் வரிசையில் முதன்மையாக இருந்தவர், அகத்தியர் ஆவார். இவரை மகாமுனி, முனிவர், மகான் என்ற அடைமொழியோடு அழைப்பார்கள். அவர் எழுதிய கவியின் முதல்வரியே நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியாகும். அந்தக்கவி இதுதான்.,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா

மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

இந்தப்பாடலின் கருத்துப்படி, மனம் செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம், வாயுவை உயர்த்த வேண்டாம், வாசியை நிறுத்த வேண்டாம், மந்திரம் தானாக செம்மையாகிவிடும் என்று பொதுவான கருத்துரை எல்லோருக்கும் உருவாகும். ஆனால் இது படிநிலையாக நாம் பெறுகின்ற மாற்றத்தை விளக்கிச் சொல்லுகின்ற கவியாகும்.

பொதுவாகவே, சித்தர்கள் எழுதக்கூடிய கவிகள் குழூஉக்குறி என்ற பாணியில் அமைந்திருக்கும். அது என்ன என்றால், பரிபாஷையில் ஒரு கருத்தை சொல்லியிருப்பார்கள். சாதாரணமாக வாசிக்கும் பொழுது ஒரு அர்த்தமும், ஆழ்ந்து ஆராய்ச்சி நோக்கோடு படிக்கும் பொழுது உண்மை அர்த்தமும் விளக்கமாக கிடைக்கும். ஒருவகையில், சித்தர் பரம்பரையினர் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என்றும் சொல்லலாம். இந்த வரிசையில் இன்னும் நமக்கு புரியாத, விளங்கிக் கொள்ளமுடியாத எண்ணற்ற சித்தர் கவிபாடல்கள் இருக்கின்றன என்பதே உண்மை.

இந்த மனமது பாடல் குறித்த உண்மை வேறு யாரேனும் சொல்லியிருக்கிறார்களா? என்று தேடும்பொழுது, தமிழ்நாடு ஆன்மீக யாத்திரைக்குழு என்ற வலைப்பூவில், ஒர் பதிவையும் கண்டேன். நல்ல விளக்கம் எனினும் ஓரளவிற்கு யோக விளக்கத்தோடு அமைந்திருந்தது. அதை இன்னும் தெளிவாக இங்கே காண்போம்.

மெய்ப்பொருள் உண்மையை யோகத்தின் வழியே தேடும் ஒரு சீடருக்கு சொல்லுவது போல இந்த கவி அமைந்திருக்கிறது! இந்த மனம் செம்மை நிலைக்கு வரவேண்டும் என்றால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் கிடைத்துவிடாது. அதற்கு யோகத்தில் இணையவேண்டும். குருவின் உதவியும் கண்காணிப்பும் வேண்டும். உலகியலில் இப்போது வழங்கப்படும் யோகம் அல்லாத வேறெந்த மன பயிற்சியும் நிச்சயமாக உதவிடாது. சில நாட்கள் நன்றாக, தெளிவாக இருக்கலாம், மறுபடி பழையமாதிரியான நிலைக்கு தானாக மாறிவிடுமே?!

இப்போது, இந்த கவி, அஷ்டாங்க யோகத்தின் படி, ஓவ்வொரு உயர்வையும் காட்டுவதாகவே பார்க்கமுடியும். யோகத்தில் இணைந்து கொண்டு, அந்தக்கால முறைப்படி மந்திரம் சொல்லிவந்தால், முதல் நிலையில் மனம் செம்மையாகும். அது என்ன மந்திரம்? ‘ஓம் நமசிவய’  (பஞ்சாக்ஷர மந்திரம்)  என்பதுதான் சித்தர்களின் அடிப்படையான மந்திரம். இந்த பஞ்சாக்ஷர, ஐந்தெழுத்து ரகசியம் என்ன? என்று பார்த்தால்,  ந நிலம் /ம நீர் / சி நெருப்பு / வ காற்று / ய வானம் என்பதாகும்! இதனோடு முன்பாக ‘ஓம்’ என்று சொல்லப்படும். ஆனால் இப்போது நீங்கள் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது எனது ஆலோசனை.  ஏன் சொல்லக்கூடாது என்பதை பிறகு, இன்னொரு பதிவில் பார்க்கலாம்!

இப்படி மந்திரம் சொல்லிச் சொல்லியே மனம் செம்மையானால், அந்த மந்திரம் செபிப்பதை விட்டு விட்டு, வாயுவை உயர்த்தவேண்டும். அதாவது பிராணாயமம் செய்யவேண்டும். இந்நிலையில் மனம் செம்மையானால், பிராணாயமம் வழி வாயுவை உயர்த்த வேண்டாம். அடுத்ததாக, வாசியோகம் தொடரவேண்டும். அந்த வாசியோகத்தின் வழியே நம்முடைய மனம் செம்மையானால், வாசியையை நாம் நிறுத்தவேண்டியதில்லை, அது தானாகவே நிகழந்து, மனதை அடுத்தும் செம்மையாக்கிவிடும். இப்படி ஓவ்வொரு நிலைக்கும், இந்த மந்திரம் மனதை செம்மையாக்குகிறது. அதனால் மந்திரமே செம்மையானது என்று அகத்தியர் பெருமான் இந்த உண்மையை கவி வழியாக சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

Get the Truth from the Bhakti


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்பதை ஏன் என்னால் ஏற்கமுடியவில்லை?


பதில்:

உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். உண்மையை விளக்கிக் கூறும் வாய்ப்பை இக்கேள்வி உருவாக்குகிறது. இனி பதிலை சிந்திப்போம்.

‘பக்தி என்பது சிறுபிள்ளைகட்கே' என்று ஒருகவிதையில் சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். உடனடியாக அந்த கவிதையை என்னால் இங்கே ஞாபகப்படுத்தவோ, குறிப்பிடவோ முடியவில்லை, கேள்வி கேட்ட நீங்களே குறிப்பிட்டால் நலம். பொதுவாக, கவிதை என்பது, கரும்புச்சாறு போல பெரிய நீண்ட கரும்பை, கசக்கிப் பிழிந்து உருவாக்கிய சாறு. அதை நீங்கள் கரும்பாக நினைக்க முடியுமா? அதுபோலவே ‘பக்தி என்பது சிறுபிள்ளைக்கானது அது ஒரு விளையாட்டுப் போல' என்றால் அதற்கான காரணமும், விளக்கமும் ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் அல்லவா? அதெப்படி இந்தமாதிரி சொல்லலாம் என்று நினைக்கலாமா?

சரி சிறுபிள்ளை விளையாட்டு என்பது என்ன? நீங்கள் அந்த சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியது இல்லையா? ஞாபகமும் இல்லையா? ஆனால் இப்போதுள்ள சிறுபிள்ளைகளுக்கு படிக்கவும், வீட்டுப்பாடம் செய்யவுமே நேரமில்லை. இன்னும் சொல்லப்போனால், சாப்பிடக் கூட நேரமில்லை என்று வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள் நம் பெற்றோர்களாலும், சமூகத்தாலும், உலகத்தாலும்.

உதாரணமாக பார்க்கலாமே, சிறுபிள்ளைகள், ஆண் பெண் என்ற பேதமற்று பழகி விளையாடுவார்கள். அப்படியான அனுபவம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வருத்தமே! அந்த விளையாட்டில் அம்மா, அப்பா, பிள்ளை, குடும்பம் என்ற விளையாட்டும் உண்டு. சாமியும், கோவிலும் கூட உண்டு. அப்படி அந்த குடும்பத்தில் அம்மா என்ற குழந்தை சமைக்கும், மற்றவர்கள் உண்டு மகிழ்வார்கள். அதாவது நெருப்பில்லாத சமையல், பொருளில்லாத சாப்பாடு. சிலவேளைகளில் அப்படி எதுவுமே இல்லாமல் நடிப்பார்கள் அவ்வளவுதான். இந்த சாப்பாடால் உங்கள் பசி ஆறுமா? இல்லை ஆனால் இது ஒரு அனுபவ விளையாட்டு. ஒரு பகிர்வு, அன்பு, நட்பு, பழக்கம் என்ற ரீதியில் அமைந்திருக்கும். உண்மையைப் போன்ற பொய். இதைத்தான் இப்போது மெய்நிகர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிறுபிள்ளை விளையாட்டு போலவேதான் நம்முடைய ‘பக்தி’ இருக்கிறது. அந்த பக்தியில் இருக்கின்ற, சொல்லப்பட்ட, மறைக்கப்பட்ட, மறைந்திருக்கிற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் பக்தியை கடந்து ‘யோகத்திற்கு’ வரவேண்டும். வந்தாகவேண்டும். 

இதைத்தான், இந்த விளக்கத்தைத்தான், கவிதையில் சுருக்கமாக ’பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இப்பொழுது உண்மை உங்களுக்கு விளக்கமாவிட்டதா?!

வாழ்க வளமுடன்.

குறிப்பு: இந்தப்பதிவில், பக்தியை குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் எண்ணினால் அது அறியாமையாகும்!

Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.