CJ for You: particle

particle

Showing posts with label particle. Show all posts
Showing posts with label particle. Show all posts

Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-

What is the relationship between man and God? Is that true and necessary?


மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? அது உண்மையும், அவசியமும் தானா?


இந்த கேள்வியை கேட்கும் வகையில், உங்களுக்கு இறை நம்பிக்கையும், அதுகுறித்த சிந்தனையும், மனிதன் பிறப்பு குறித்த ஆராய்ச்சியும், இயற்கை குறித்த வியப்பும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கடவுள் என்பதே பொய் என்ற கருத்து, அவ்வப்பொழுது மேலோங்கி, இளையோர்களிடம் திணிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். எனினும் அதுகுறித்து நாம் கவனம் கொள்ள அவசியமில்லை. ஏனென்றால், இந்த பிரச்சனையை, அவர்களுக்குள்ளாக இருக்கும், இறையாற்றலே சரி செய்துகொள்ளும் என்பது உறுதி. என்ன அதுவரை அவர்களுடைய வாழ்க்கை, பல திசைமாற்றங்களை சந்தித்து, இறுதியாக ‘ஓ, இதுதான் கடவுளா?’ என்று அவர்களின் கேள்விக்கு பதிலை, காலமே தந்துவிடும். சிலருக்கு தன் வாழ்நாளிலேயே கிடைக்கும். சிலருக்கு அவர்களின் வழியாக வரும் வாரீசுகளுக்கு கிடைக்கும். நாம் அதை எப்போது என்று தீர்மானிக்க வழியில்லை. எனவே, நாம் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். அது அவர்கள் பாதை, சென்று சேரட்டும், நாம் நம் பாதையில் பயணிப்போம்.

மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு அறியவேண்டும் என்றால், நாம், விஞ்ஞானத்தில் சொல்லப்படுகின்ற, ரிவர்ஸ் இன்ஞ்ஜீனியரிங் டெக்னாலஜிக்கு ( Reverse Engennering Technology) செல்லவேண்டும். இந்த பின்னோக்கிய அமைப்பியல் நுட்பம் என்பது, மனிதனின் மூலம் என்ன? என்ற கேள்வியாக ஆரம்பிக்கலாம். உயிர்வியல் ஆய்வாளரான, சார்லஸ் டார்வின், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றார். நவீன விஞ்ஞானம், இல்லை, குரங்குக்கு முன்னேயும், குரங்குக்கு பின்னேயும் பல நூறு பிறப்புக்கள் வந்தன. பிறகுதான் நவீன மனிதன் வந்தான் என்று சொல்லுகிறது. இந்த விஞ்ஞானம் எப்போது தொடங்கியது? புவியீர்ப்பு என்பதையே 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்கும் முன் இல்லையா? இருந்தது அதை, பதிவு செய்து விஞ்ஞானமாக்கவில்லை. அவ்வளவுதான்.

இவையெல்லாம், மக்களின் வாழ்வியலில் எல்லாம் கலந்துதான் இருந்தது. Proof என்று சொல்லக்கூடிய சான்று, தனியாக இல்லை. விஞ்ஞானம் என்ற அமைப்பும் உருவாகவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக, செய்யுள் வழியாக, கவி வழியாக வந்து கொண்டுதான் இருந்தது. இதையெல்லாம், பக்தி என்பதாக, சிலர் ஒதுக்கிவைத்தது, வாழும் மக்களுக்கான அநீதி. எனினும் உண்மை மறைவதில்லை.

இறை நிலை, தெய்வீகம், கடவுள், இயற்கை இப்படி எந்தெந்த வார்த்தையில் சொன்னாலும், ஒரே பொருளைக்குறிக்கும், மெய்பொருளை நாம், அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடவும் முடியாது. உயர்வான, மூலமான, என்றும், எங்கும், எப்போதும் இருக்கும் ஒன்றான முழுமை அது. வார்த்தைக்குள் சிக்கிடாதது. ஆனால், உணர்வுக்கும் அறிவுக்கும் கிடைப்பது. நிச்சயமாக அது கற்றறிவும், படிப்படிவும், அனுபவ அறிவும் அல்ல. சிந்தனையும், எண்ணமும் அற்ற ஓர் ஒப்பற்ற நிலை. இதை, வேதாத்திரி மகரிஷிதான், உள்ளது உள்ளபடி, விஞ்ஞானிகளுக்கும் புரியவைத்தார்.

அறிவும், விரைவுமாக, வேகமும் விவேகமுமாக, பேராற்றலும் பேரறிவுமாக, தன்னியல்பாக அதிர்ந்துகொண்டே இருப்பதும், தன்னிருக்க சூழ்ந்தழுத்தமாக இருப்பதும் எதுவோ அதுவே மெய்பொருள் என்கிறார். இதை உங்கள் வார்த்தை படி எப்படி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், ஒதுக்கித்தள்ளினாலும்கூட ‘அது இருக்கும், அதற்குள் நாம் இருப்போம், நமக்குளும் அது இருக்கும்’.

பரிணாமத்தில் எழுச்சியில், தன்மாற்றமாக உண்டான, பரமாணு முதல், மனிதன் வரையில் வந்த பயணம், மனிதன், நான் யார்? என்று தன்னை அறிந்த பொழுது முழுமை அடைந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஓர் மனிதனில் அது திருப்தி அடையவில்லை. ஒவ்வொரு மனிதனும், அந்த பயணத்தை முடிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவரை, பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக. உங்களிடம் எப்படி உங்கள் தாத்தா பாட்டியின் குணாதசியம் இருக்கிறதோ, அதுபோல உங்கள் குணாதசியம், உங்கள் பரம்பரைக்கு, வாரீசுகளுக்கு கடத்தப்படும். இல்லை என்று மறுப்பீர்களா?

இதையே கர்ம வினை என்று அமைகிறது. கர்மா என்ற வார்த்தை, உங்களை ஏதோ செய்கிற்து என்றால், செயல் விளைவு தத்துவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இயற்கையின், வினை விளைவு நீதி உள்ளடக்கமாக இருக்கிறது. யாரும், எதுவும், இதிலிருந்து தப்பமுடிவதில்லை. அதை புரிந்து கொண்டு, உங்களுக்கும், பிறருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பதிவுகளை நாம் விலக்கி, தூய்மை செய்துகொள்வது அவசியம். பிறப்பின் நோக்கமும் அதுதான். இறைநிலையின் தீர்ப்பும் அதுதான். அதை புரிந்து கொள்ளாதவரை, உங்கள் வாழ்க்கைப்பாடு திண்டாட்டம் தான். அதை தனியாக, இங்கே வார்த்தைகளால் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில், உங்கள் கேள்விக்கு விடை, புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Please explain the good, bad and problems on the trick of body to body transformation!


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


பதில்:

இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன்.  சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.

முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

        எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.

வாழ்க வளமுடன்

-