CJ for You: lifeforce

lifeforce

Showing posts with label lifeforce. Show all posts
Showing posts with label lifeforce. Show all posts

Who are Siddhars? Why is it that only Tamil Siddhas are spoken of? Are there still Siddhas? How useful is their support to us? Will you explain?


வாழ்க வளமுடன் ஐயா. சித்தர்கள் என்பவர் யார்? அது ஏன் தமிழக சித்தர்கள் மட்டுமே உயர்வாக பேசப்படுகிறார்கள்? இன்னமும் சித்தர்கள் இருக்கிறார்களா? அவர்களின் துணை நமக்கு எந்த அளவில் பயன்படுகிறது? விளக்குவீர்களா?



இந்த உலகில், பல்லாயிரம் ஆண்டு பரிணாம எழுச்சியில், இயற்கையின் உன்னதமாக, முழுமை வடிவமாக வந்த அமைந்த ஒரு ஜீவ, உயிரினம்தான் மனிதன். மனிதன் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரும் ஒருநாளில் உருவாக்கிடவும் இல்லை. ஒரு பெரிய மரத்தின் மூலம், சிறிதாக, அணுவாக இரு விதைக்குள் இருந்ததுதானே? அதுபோலவே மனிதனின் மூலமும், அணுவில் இருந்துதான் தொடங்கியது. அந்த அணு ஒருசெல் உயிரியாக மலர்ந்து, ஒர்ரறிவு தாவரமாக மலர்ந்து, ஐந்தறிவு விலங்கினங்களாக உயர்ந்து, அந்த அறிவு வேட்கை நின்றிடாமல், முழுமைபெற துடித்து, பல்வேறு பிறவிகளுக்கு அப்பால் வந்ததே, மனிதப்பிறவியாகும். ஆறாம் அறிவில் முழுமைபெற்று, தன் மூலம் நோக்கி நகர்ந்து நின்றவனே மனிதன்.

இந்த தற்கால, நவீன விஞ்ஞானம் சொல்லும் முன்பாகவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சித்தர்கள் கண்டறிந்தனர். சும்மா வெறுமனே யூகமாக அவர்கள் சொல்லவில்லை. சித்து என்ற உயிரின் மூலம் எது? என்று தேடி அதை முழுமையாக அறிந்ததனால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மனித பிறப்பின் ரகசியமும், நான் யார்? என்ற தேடல் முழுமையும், பொருளுக்கும், உயிருக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும், மூலமாகவும் இருந்து, இயக்கிக் கொண்டும் இருக்குமந்த, மெய்ப்பொருளையும் கண்டார்கள்.

தன் ஆரம்ப புள்ளியை, அதில் கண்டு, உண்மை அறிந்து அதுவே மனித பிறப்பின் நோக்கமும், முடிவும், கடமையும் என்று, உலக மக்களுக்கு அறியத்தந்தார்கள். விரும்பியோர்க்கு யோகமாகவும், எளியோருக்கும், பாமரரருக்கும் பக்தியாகவும் தந்தார்கள். 

சித்தர்கள், தங்களை ஒழுக்கம், கடமை, ஈகை வழியாக, உலகோர்க்கும் சேவை செய்வதையே முழுமையாக்கிக் கொண்டார்கள். இன்றும் பலப்பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்களும் நானும் நினைப்பதைப்போல அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இப்படியான சித்தர்களை தமிழ்நாடு கொண்டது, மிகச்சிறப்பு. தமிழ்நாட்டின் காலநிலையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சித்தர்களால், நாம் பெருமைமட்டும் அடையவில்லை. வாழ்வின் முழுமையையும் அடைகிறோம்.
 
இந்த காணொளி வழியாக இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வோம்.

தமிழக சித்தர்களின் கடவுள் தேடல்! The search for God by the Siddhars of Tamil Nadu! Part 01
வாழ்க வளமுடன்.
-

Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work?


வேதாந்தம் என்பதற்கும், சித்தாந்தம் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எதை பயனுள்ளதாக கருதலாம்? எப்படி பயனாகிறது?

அந்தம் என்ற வடமொழி, முடிவான உண்மையை குறிக்கும் ஒரு சொல்லாகும். வேதம் என்பது உயர்வான உண்மை, மாற்றுக் கருத்தில்லாதது என்றும் பொருள் தரும் சொல்லாகும். அது மதிப்பானது என்ற தகுதியையும் பெற்றிருக்கும். பொதுவாகவே, வாழ்ந்த முன்னோர்களின் வழியாக, மனித வாழ்வை உயர்த்தக்கூடிய அருளுரைகள் இதில் அடங்கி இருக்கும். ஓவ்வொரு நிகழ்விலும், இயற்கையோடும், இறையாற்றலோடும் ஒருங்கிணைந்து, அறிந்து உணரப்பெற்ற உண்மைகளின் தொகுப்பு வேதம், அதை சொல்லும் வழிமுறையே வேதாந்தம் என்றாகிறது. உலகில் பல்வேறு, பாரம்பரியமான வேதங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் இருக்கின்ற வேதம் மிகச் சிறப்பானது. முழுமையானது என்பதை ஐயமில்லை. உலகுக்கே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.

சித் என்றால் உயிர் ஆகும். இந்த உயிரை ஆராய்ந்து, அதன் பஞ்ச பூதத்தின் முதன்மையான நிலையையும் அறிந்து கொண்டு, அந்த உயிரின் மூலமான, வெட்டவெளி என்ற மெய்ப்பொருள் நிலையையும் உணர்ந்து அறிந்தவர்கள் சித்தர் என்றாயினர். சித் என்ற உயிர் உண்மை வழியாக, மூலமும், முடிவான உண்மையையும் சொல்லும் பொழுது, அது சித்தாந்தம் என்றாகிறது. சித்தாந்தம் என்பது, சித்தர்கள் வழியாக, தமிழ்நாட்டில் தான் உருவானது. அக்காலம் முதல், உலகெங்கும் பரவி உள்ளது. எனினும் அதன் அடையாளம் பல்வேறு வகைகளில் சிதறிவிட்டது. வேறு வேறு பெயர்களில் மாற்றம் பெற்றுவிட்டது. ஆனால், சித்தாந்தத்தின் ‘மூலம்’ அதிலிருந்து விலகவில்லை.

வேதாந்தம் என்பது அறிவுக்கு விளக்கம் அளிப்பது என்றால். சித்தாந்தம் அந்த அறிவையே அறிந்துணரத் தருவதாகும். வேதாந்தம் கேட்டு, படித்து, சிந்தித்து ஏற்றுக்கொள்வதாகும். சித்தாந்தமோ உடல், மன, உயிருக்கான பயிற்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை, வார்த்தைகளால் விளக்குவதை விடவும், அனுபவமாக பெறுவதுதான் சிறந்தவழி. வெற்று வார்த்தைகளில் வித்தியாசப்படுத்தினால், அதன் தரத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே கவனம்.

இந்த இடத்தில், மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், விளக்கமான கருத்துக்களையும் அறிவோம். ‘தானே அவனாகவும் அவனே தானாகவும், சிவனே சீவனாகவும்,  சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான் தெளிவோடு திருப்தியும் வரும்.  இதை நமது மனவளக்கலை (Simplified  Kundalini Yoga - SKY) மூலம் சாதிக்க முடிகிறது.  தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும் பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும்.'

மேலும், ‘தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது.  முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும்.  அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அனுபோக பூர்வமாக பெற்றாக வேண்டும்’ என்கிறார்.

கூடுதலாக, ‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டு தான் உண்டு. அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே. ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும் இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும் எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். 

துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல் இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்க்கை முறையே பக்திமார்க்கம்.’என்று தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

What about the soul attachment and how to avoid it? Notes by Vethathiri Maharishi


ஆவி இறங்குதல், உடல்விட்ட ஆன்மாக்கள் நம் உடலில் பீடிக்காது இருக்க வழிகள் என்ன? எப்படி தடுத்துக் கொள்ளலாம்?


கேள்வி:

சுவாமிஜி! உடலைவிட்ட ஆன்மாக்கள் நம் உடலில் புகாது இருக்க (Immunity against Soul attachment) என்ன செய்ய வேண்டும்?


வேதாத்திரி மகரிஷியின் பதில்: 

Soul attachment என்று சொல்லக்கூடிய உடலை விட்ட ஆவியின் தொடர்பெல்லாம் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே உள்ளவர்களிடந்தான் வந்து சேர முடியும். தவத்தின் மூலம் நம் உயிர் இயக்கத்தை, உயிரிலிருந்து எழக்கூடிய மன இயக்கத்தை, நுண்மையான அலையியக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். 

எனவே, மனிதன் உணர்ச்சிவயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்குக் குண்டலினியோகம் அல்லது வேறுவிதமான உளப்பயிற்சியின் மூலம் மன அலையை ஓரளவு குறைத்து நுண்மையிலேயே வைத்துக் கொண்டோமேயானால் எவ்விதமான உயிர்த் தொடர்பு வந்தாலும், இணையவிடாது அதைத் தடுத்து விட முடியும். பிற உயிர் இணைய முடியாதிருக்க இதுதான் ஒரே வழி.

அதனுடன் மனதிலே பயம் இருக்கக் கூடாது. பயமிருந்தால் நமது சூக்கும சரீரம் நமக்குத் தெரியாமலே வெளிப்படும். அப்போது வேறு ஆவி வந்து நம்மோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

நாம் இரவிலே கண்ணாடி பார்த்துக்கொண்டே இருப்போமானால் நம்முடைய சூக்கும சரீரம் வெளிப்பட்டு, உடல் விட்ட ஆவியுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அப்படி நமக்குத் தெரியாமலே தொடர்பு ஏற்பட்ட பின், நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், எந்த உயிர் நம்மோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ அதனின்று பிரதிபலிக்கக் கூடியதொரு விகாரமான உருவம் நமக்குக் கண்ணாடியில் தோன்றக் காண்போம். அதனால் தான் இரவிலே நீண்ட நேரம் கண்ணாடி பார்க்கக் கூடாது என்பார்கள்.

அதிகமான வாசனைத் திரவியங்களை இரவிலே நாம் பூசிக் கொண்டால் அதன் மூலமாக நமது சூக்கும சரீரம் வெளியேறுவதற்கு வழியுண்டு.

இது போன்ற காரணத்தால்தான், இரவில் பூ வைத்துக் கொண்டு வெளியே போகக் கூடாது என்பார்கள். இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடித்து வந்தால் உடல் விட்ட வேறு ஆவிகள் நம்முடன் இணைவதைத் தவிர்க்கலாம்.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு ஆவிகள் இணைந்தாலும் அந்த ஆவிகளுக்குரியவர்கள் நல்ல எண்ணமும், தவ ஆற்றலும் உடையவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே உயிர் விட்டவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே மேம்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் நம்முடன் இணைந்து, நமக்கு நன்மை தருவார்கள். அவர்களும் பூரணம் அடைவார்கள்.

ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு இவற்றையெல்லாம் அறிந்து, ஆய்ந்து உணர்ச்சிவயப்படாத நிலையில் இருந்தால் பிற ஆவிகளின் தொடர்பை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-


Do you know the importance of simple exercise and the completion of human life?


எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், மனிதனின் வாழ்க்கை உயர்வும் உங்களுக்குத் தெரியுமா?



மனிதனாக பிறந்தால், மற்ற எந்த உயிரினங்களையும் விட, உயர்ந்த நோக்கமும், கடமையும் அவனுக்கு உண்டு, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போகப்போகிறோம் என்று இல்லை. மனிதனாக ஏன் பிறந்தோம்? எதற்காக? நான் யார்? என்னுடைய மூலம் என்ன? என்று சிந்தித்து விடை அறியவும் வேண்டும். இயற்கை என்பது என்ன? பிரபஞ்சமும் என்ன? பிரபஞ்சத்திற்கு அப்பாலும் என்ன? என்று முன்னோர்கள் சொன்னதையும் ஏற்று, நாமும் உண்மை அறிய முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அதற்கு விடையும் கிடைத்துவிடும். மனிதனின் வாழ்வும் முழுமை பெறும். இந்த நோக்கமும், கடமையும் நிறைவேற வேண்டும் என்றால், வாழும் வரை உடல் வேண்டும் அல்லவா? உடலின்றி மனிதனுக்கு வாழ்வும், உலகமும் ஏது? சிந்திப்பீர்.

இத்தகைய உண்மையை கருத்தில் கொண்டு, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி, விளக்கமளிக்கிறார். ‘உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான்  இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். 

உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.

        உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது 'மனவளக்கலை' (Simplified Kundalini Yoga - SKY) பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

உடலும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். 

உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்:

1.  கைப்பயிற்சி (Hand Exercise)

2.  கால் பயிற்சி (Foot Reflexology)

3.  மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)

4.  கண்பயிற்சி (Eye Exercise)

5.  மகராசனம் (Maharasanam) 

6.  உடல் வருடல் (Massage)

7.  ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation)

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை.  ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.’

மனிதன், தன் உடல் குறித்து, திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்லுகிறது, கவனிப்போம்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’ 

என்றும், உடலை காத்திட வேண்டிய அவசித்தையும், இந்த கவி வழியாக விளக்குகிறார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே’

என்றும், திருமூலர் கூறியுள்ளார். எனவே ‘இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்’ என்று உறுதிபட வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்

-

Truth and Secret Explanation of Vethathiriya Kayakalpa Yoga Exercise by Vethathiri Maharishi


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?


பதில்: 

இதோ, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமில்லாமல், உலகில் உள்ள எந்த மனிதருக்கும், வளரும் பருவம் வந்த அனைவருமே கற்று பயன்பெற்று, உலகில் நிறைவாக, தன்னையறிந்து, முழுமைபெற, வாழ்நாளை சிறப்பிக்க, இப்பயிற்சியின் விளக்கம் தருகிறார். முற்றிலும், நோக்கம் திசைமாறி, சிதறிக்கிடந்த, சித்தர்களின் ‘காயகல்ப யோக கலையை’ ஒருங்கிணைத்து, திருத்தி அமைத்து, எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நமக்குத் தந்த, வேதாத்திரி மகரிஷிக்கு நம் வணக்கத்தை செலுத்துவோம். வாழ்க வளமுடன்.

        வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ’மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி - கற்றுணர்ந்து பயன் கொள்வீர்! விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும்.

அது நாம் உண்ணும் உணவு.

1. ரசம்

2. ரத்தம்

3. சதை

4. கொழுப்பு 

5. எலும்பு

6. மஜ்ஜை மற்றும்

7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். 

இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. 

        மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். 

இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.  எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக,

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் (வேதாத்திரி மகரிஷியின் வார்த்தையில்) ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.’ என்பதாக விரிவான விளக்கங்களை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்.

வாழ்க வளமுடன்.

-

What is the necessity of exercise? what is the difference within exercise and yoga asana?


நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பதில்:

ஒரு மனிதனுடைய வாழ்வியல் இயக்கங்கள், அவனுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. இதில் அவனின் உடல், மனம், மூளை ஆகிய முக்கிய பங்கு வகிக்கிறது. உடல், மனம், மூளை ஆகிய மூன்றிலும், அந்த இயக்கம் எல்லாமே பதிவாகவும் மாறிவிடுகிறது. பிறந்த குழந்தையின் இயக்கம், பெரும்பான்மையாக, பரம்பரை வழியான, உடல் செல்களின் பதிவுகளாக இருக்கிறது எனலாம். 

        நம்முடைய தினசரி நடவடிக்கைகளில், நாம் ஒன்றி செய்யும் பொழுது கற்பதும், பிறகு அனுபவத்தில் தானாக நடப்பதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உதாரணமாக, கார் ஒட்டிப் பழகும் பொழுது, அடிப்படை முதல், பலவித நுணுக்கங்களை நாம் கற்றுத்தேர்கிறோம். ஆரம்பத்தில் பயம் இருந்தாலும் கூட, நம்பிக்கையோடு கற்றுக்கொள்கிறோம். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே, உடல், மூளை, மனம், கண்கள் கூடி இயங்க, கார் ஓட்டுதல் தானாகவே நடைபெறுவதை நாம் உணரமுடியும். அதாவது, இயல்பான ஒர் வெளிப்பாடாக மாறிவிடும். இதுவே கற்றல், அனுபவம், இயல்பு என்றாகிறது.

இப்படியாக நல்லதும், தீயதும் நமக்குள் பதிகிறது. தீயுது நம்மிடம், நமக்குள்ளாக தேங்குமானால், அது வலியாகவும், நோயாகவும்கூட மாறிவிடும். அதை மாற்றிடவே, நம்மை திருத்தி அமைத்தல் அவசியம். இப்படி உடல், மனம், மூளை ஆகிய பதிவுகள் திருத்தியமைக்க, உடற்பயிற்சி நிச்சயமாக உதவுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதை, நாம் இங்கே கவனிப்போமா?

பாவப் பதிவுகள் உடலில் நோயாகவும், உள்ளத்தில் களங்கமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நோய்கள் உடலில் தான் தொற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் தேங்கியுள்ள நோய்களின் பதிவுகளை போக்குவதற்கு செல்களிடையே சீரான இயக்கம் தேவை. செங்கல்லை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சிமிண்டால் இணைத்து கட்டிடம் கட்டுவதைப் போல, செல்களினால் இந்த உடம்பு கட்டப்பட்டு அதை சீவகாந்தம் இணைத்துப் பிடித்துக் கொண்டுள்ளது.

ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அந்தச் செயலுக்குத் தகுந்தவாறு உடல் செல்களைச் சீரமைத்தால் தான் அதைச் செய்ய முடியும். உதாரணமாக நீரில் நீந்த வேண்டும் என்றால் முதலில் பயிற்சி செய்து உடற்செல்களைப் பழக்கி விட்டால் பிறகு எப்பொழுது நீரில் விழுந்தாலும் உடற்செல்கள் அதன் பழக்க வழியே இயங்கி நம்மைக் கரை சேர்த்து விடும். ஒரு தடவை செய்து பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த வழியே தான் அந்தச் செல்கள் இயங்கும். செயல்களுக்குத் தகுந்தபடி செல்களை அமைக்கப் பழகி விட்டால் அதன்படி அவை இயங்கும்.

நாம் பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்து பழகினோமோ, அந்தச் செயல்களுக்குத் தகுந்தவாறு செல்கள் நமது உடலில் அமைந்துள்ளன. அதை நன்மையான முறையில் மாற்றி அமைக்கவில்லை என்றால் மனதால் ஒன்றைச் செய்யலாம் என்று நினைத்தாலும் உடலானது அதற்கு ஒத்து வராது. அதனால் செல்கள் அனைத்தும் காந்த துருவ அமைப்பில் (Polarity arrangement) அமைந்துள்ளது. அதற்குள் காந்த சக்தி சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் அந்த காந்தத்தை வாங்கி அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என மாற்றி உடலை நடத்தி வருகின்றது.

ஆகவே மனிதன் செயல்புரிய உடற்செல்களின் சீரான இயக்கம் தேவை. உடற்செல்களின் இயக்கத்திற்கு உடற்பயிற்சி தேவை. யோகாசனம் என்பது வடமொழி. உடற்பயிற்சி என்பது தமிழ், என்பதாக தெளிவான விளக்கம் அளிக்கிறார், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-

What is the way to understand our body and live long? Is Vethathiriyam help?


உடலை நல்லமுறையில் புரிந்துகொள்ளவும், நலமாக நீண்டநாள் வாழவும் வழி உண்டா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உடலை நல்லமுறையில் புரிந்துகொள்ளவும், நலமாக நீண்டநாள் வாழவும் வழி உண்டா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது?

பதில்:
நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம் மன நலம் பாதுகாக்கப்பெறும்.  இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.  அளவிலே முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும் உடலுக்கும் ஒரு தொடரியக்கம் நட்பு உறவு சீராக இருக்கும்.  எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும் திசைமாறினாலும் வெளியேறினாலும் அளவிலே குறைந்தாலும் ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.

அது இரத்த ஓட்டத்திலோ வெப்ப ஓட்டத்திலோ காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும்.  அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.  அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கெனவே அங்கு தொளை (puncture) ஆகி இருக்கிறது அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும்.

இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது.  அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவ காந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும்.  ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும்.  உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி ஜீவகாந்த சக்தி உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும்.  

அந்தத் தோல்வியிலே தானே குறைவு பட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக்கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெறியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

இப்படியான உண்மையை நாம் புரிந்துகொண்டு, இயற்கையின் அன்பளிப்பான, உடலை காத்து நலமடைய, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. எல்லோரும் கற்று பயணடையலாம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

Why human need food? can we avoid? any science truth on it?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் சுவாமிஜி, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

மனிதன் இப்பூவுலகின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது.  தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது.  எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Compressive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்துவிடுகிறது.

        உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. 

பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன.  பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown Up) விசிறியடிக்கபடுகின்றன.  அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn  out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன.  இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித  உடலில் உள்ள தசை,  நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்து கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

        அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான  புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துப் கொண்டிருக்கின்றன.  இதனால் உடலின் இழப்பானது சரிகட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம்.  நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம்.  ஒரு முழுநாள் நீரைத் தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம்.  அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம்வரை உடலின் எடை குறைந்திருக்கும்.  இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும் சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிபிழைத்துக் கொண்டேயிருக்கிறான்.  இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்றே பெயர் வந்தது.

வாழ்க வையகம்    வாழ்க வளமுடன்.

-

Please explain about the Death and the Eternal after the death?


மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

அன்பரின் கேள்வி: 

சுவாமிஜி! மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உலகில் உயிர் வாழும், மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கும், மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போதுதான் அது வாழ்வு. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையே மரணம் எனப்படும். மரணம் இல்லையென்று கூறமுடியாது.

        உயிரின் இயக்கத்தால்தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையென்றால் உடலிலுள்ள அணுக்கள் தொடர் இயக்கம் சிதைந்து விடும்.

        கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து உயிர்த்துகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன்னுடைய இயக்கத்தை நடத்திக் கொள்ளத் தொடங்கிவிடும்.

        உதாரணமாக இதற்கு ஒரு கம்பெனியைச் சொல்லலாம். நீதிமன்றத்தின் உத்தரவால் ஒரு கம்பெனியானது உலாவீனம் (Liquidate) செய்யப்படுகிறது. என்று வைத்துக் கொள்வோம்.

        அக்கம்பெனியானது அதன் பெயரில் இறந்துவிட்டது என்றாலும், அதிலுள்ள நிர்வாகிகள், பங்குதாரர்கள், வேலையில் இருந்தவர்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.

        கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள். ஆனால் தனித்தியங்குகின்றார்கள்.

            அதேபோல் உடலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து இயங்குகின்றன. அவ்வளவே. அத்தகு தனித்தனியான இயக்கங்களுக்கு மரணம் என்பதில்லை.

        அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.

        இந்த உண்மையை, மனவளக்கலை எனும் எளிய குண்டலினி யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுண்மை விளக்கம் பெற்று, மரணமில்லா பெருவாழ்வு என்ற தத்துவ உண்மையையும் அறியலாம்.

வாழ்க வளமுடன்!

-



What is lifeforce? Why it is separated? Can we protected?


உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


பதில்:

எளிமையாக கேள்வி கேட்டுவிட்டீர்கள், அதில் எவ்வளவு ஆழ்ந்த இயற்கை உண்மைகள், ரகசியங்கள் அடங்கியுள்ளன என்பதை அறிவீர்களா? இத்தகைய உயிர் குறித்த எல்லா உண்மைகளையும் சித்தர்கள் அறிந்து உணர்ந்து முழுமையும் அடைந்தார்கள். சித்து என்று அழைக்கப்படும் உயிரை அறிந்ததால்தான் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். விளக்கிட கடினமே என்றாலும் கூட, இந்த பதிவில் முடிந்தளவு எளிமையாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். எல்லோருக்குமே பயன்படும் வகையில் உதவும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்த்தி வணங்குவோம். குப்பையாக குழப்பிக் கிடந்த உண்மைகளை அழகாக, சிதையாமல் எடுத்து, அழக்குகளை நீக்கி மிக தெளிவாக, எளிமையும் செய்து, மாற்றுக்கருத்துக்கு இடம் தராமல், விளக்கித்தந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உயிர் என்று அழைக்கப்படும் ஆகாஷ் துகள்கள், பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலையாகும். கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையிலும், கருத்துக்கும் மிக எளிதில் சிக்கிடாத நுண்ணியது இந்த உயிர்த்துகள்கள். இதை தமிழில், வேதாத்திரியத்தில் விண் என்றும் சொல்லுகிறோம். மனிதர்களாகிய, நம்முடைய உடல் மண் என்ற பஞ்சபூத தன்மை கொண்டது, அதனூடாக, நீராக இரத்தம், வெப்பமாக உடல் சூடு, காற்றாக மூச்சுக்காற்று ஆகிய நான்கு பஞ்சபூதங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஐந்தாவதாக, முதல் நிலை பஞ்சபூதமான உயிர் இணைந்தால், நாம் இந்த புவியில் உயிரோடு, உணர்வோடு வாழ்கிறோம் என்று அர்த்தமாகிறது.

இந்த உயிர் மிக மிக நுண்ணியதும், லேசானதும் ஆகும். எனவே இது இயற்கையின் சக்தியால் நீண்டகாலம் ஒரே இடத்தில் தங்கிட வாய்ப்பில்லை. ஆசான் திருவள்ளுவர், மிகத்தெளிவாக தன்னுடைய குறள் வழியாக இதை சொல்லுகிறார்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (நிலையாமை, குறள் 334)

உயிரானது, ஒவ்வொருநாளும் இந்த உடலைவிட்டு நகர்ந்து போய்க்கொண்டேதான் இருக்கிறது. ஒருநாள் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் இணைப்பை வாளால் அறுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்வாக பெற்று அறிந்து கொள்ளுங்கள். என்று குறளில் சொல்லுகிறார்.

இதன்படி காலத்தால், இயற்கையாகவே உயிர் உடலைவிட்டு நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒருநாளில் முழுதாக போய்விடுகிறது. அன்றைக்கு ஒருநபர் இறந்துவிடுகிறார் என்று புரிந்துகொள்கிறோம். இதில், இந்த இயற்கைக்கு முன்பாக, அதன் விதிக்கு முன்பாக நாம் ஒன்றுமே இல்லை. அதனால் அதன்போக்கில் நிகழும் ஒன்றை தடுக்கவும் வழியில்லை. ஆனால் இது ஏன் நிகழ்கிறது? இந்த பிறப்பும் இறப்பும் எதனால்? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், யோகம் அதற்கான பதிலை தரும். வாழ்கின்ற நாளுக்குள் அதை அறியவும் முயற்சிக்கலாம் என்பதும் உறுதி.

ஆசான் திருவள்ளுவர், தன் குறள்வழியாக தருகின்ற இன்னொரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (நிலையாமை, குறள் 340)

உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? என்ற விளக்கத்தை - மு. வரதராஜன் அவர்கள் தருகின்றார்.

உயிர் குறித்த உண்மைகளை எடுத்துரைத்த ஆசான் திருவள்ளுவரையும், ஔவையார், சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள், யோகியர்கள், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களையும் மீண்டும் வாழ்த்தி நினைவு கூர்வோம்.

வாழ்க வளமுடன்.

-

Difference between the Siddhar kundalini yoga and Vethathiriya.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் என்ன வித்தியாசம் என்று விளக்குவீர்களா?


பதில்:

வேதாத்திரியம் தந்த, வேதாத்திரி மகரிஷியைக் கூட சித்தர் என்று அழைப்பது பொருத்தமானதுதான். முதலில் சித்தர்கள் என்றால், சித்து என்ற உயிரை, அதன் இருப்பை, தன்மையை, மதிப்பை, இயக்கத்தை அறிந்து உணர்ந்தவர்கள் என்பதாகும். சித்தர்களே, வெட்டவெளி தத்துவத்தை சிவமாக ஏற்று, அதை குண்டலினி யோகத்தின் வழியாக எப்படி பெறுவது என்ற வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும் வடிவமைத்து தந்தார்கள். விரும்பியோருக்கு பயிற்றுவித்தார்கள். கவி பாடல்களாக எழுதியும் வைத்தார்கள். உலகெங்கும் சென்று அங்காங்கே இருந்த மக்களுக்கும் அதை பக்தி வழியில் வழிபாடகவும் அமைத்துத் தந்தார்கள். பின்னாளில்தான் பக்தியில் குழப்பங்கள் நேர்ந்து, சித்தர்களின் உண்மையான கருத்தும், நோக்கமும் சிதைந்துவிட்டது. 

உங்களுக்குத் தெரியுமா? இன்றைய, இப்போதைய காலகட்டத்திலும் அத்தகைய சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

சித்தர்களின் யோகமுறை கடினமானது. என்றாலும் கூட காலத்தால் அவை எளிமையாக மாற்றம் பெற்றன. உலகெங்கும் அந்த சித்தர்களின் வழியாக வந்தவர்கள், அதை ஆராய்ந்து வந்ததால், இறையாற்றலின் கருணையாலும் அத்தகைய எளிய முறைகள் சாத்தியமாகிற்று. எனினும் அந்தக்கால கடின முறையை இப்போதும் பின்பற்றுபவர்கள் உண்டு.

வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம், அத்தகைய எளியமுறையைத்தான் பின்பற்றுகிறது. சித்தர்கள் தந்த விளக்கத்தை அப்படியே ஏற்று, தற்கான விஞ்ஞான வளர்ச்சியில், எது ஏற்றதோ அதைக் கொண்டு, இறைதத்துவத்தை விளக்குகிறது. சித்தர்கள் கண்டு இவ்வுலகுக்கு தந்த காந்தம் என்ற உண்மை விளக்கம், கந்தனாகி பக்தியில் நின்றுவிட்டது. அதே காந்தம், வேதாத்திரியத்தில் வான்காந்தமாகவும், ஜீவகாந்தமாகவும் மலர்ந்து விட்ட உண்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, சித்தர்களின் சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால், பெரும் வித்தியாசம் ஏதுமின்றி, இக்கால மனித அறிவின் வளர்சிக்கு ஏற்றபடி, இறை தத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுப்பது மட்டுமேதான்.

வாழ்க வளமுடன்.