CJ for You

Everyone was talking about going for a walk as if it were a great exercise. Now it's exercise season. Isn't this all extreme?


ஐயா. ஒரு நேரத்தில் வாக்கிங் போவதையே பெரிய உடற்பயிற்சி மாதிரி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது உடற்பயிற்சி சீசன். அதிலும் எளியமுறை உடற்பயிற்சி சக்கைபோடு போடுகிறது. இதெல்லாம் ஓவராக இல்லையா?



இந்த கேள்வியை நான் வரவேற்கிறேன். அப்போதுதானே, உடற்பயிற்சி குறித்த, அதிலும் நீங்கள் குறிப்பிட்ட எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை நான் சொல்ல முடியும். நீங்கள், மனவளக்கலை அன்பரா இல்லையா என்பது தெரியவில்லை. மனவளக்கலை அன்பராக இருந்தாலும் கூட, சிலர், உண்மையை அனுபவமாக பெறாமல் இப்படி கேட்கவும் கூடும். எனினும் நீங்கள் யாராக இருந்தாலும், இதற்கான பதிலை தர விரும்புகிறேன்.

கடந்த 2019 கோவிட் தொற்றுநோய் பரவலில் இருந்து உங்களை நீங்கள் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. அதற்கு மருந்து உதவியதா? உங்கள் உடல் சக்தி உதவியதா? என்பதை அறியேன். என்றாலும் நீங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள். அதுதான் சிறப்பு. ஆனாலும், இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் உங்களுக்கு உங்கள் மீதும் அக்கறையில்லை, உங்கள் உடல்மீதும் அக்கறை இல்லை. இதனோடு, மற்றவர்கள் தங்கள் உடல்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை, அவமதிக்கிறீர்களே? இது சரிதானா?

கொரானா நோய் தொற்று இருந்த காலத்தில், ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு தங்கள் உடல் மேலும், தங்கள் மீதும், குழந்தைகள் மீதும், தங்கள் வாழ்க்கையின் மேலும் எந்த அளவுக்கு, அக்கறையாக, முயற்சியாக இருந்தார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? 

ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் சராசரி 60 ஆண்டுகள் என்றாலும், 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வழி உண்டு. இயற்கையின் கொடை என்னவோ 120 ஆண்டுகள். ஏதோ மிகச்சிலரே 100 வயதையும் தாண்டி வாழ்கிறார்கள் எனலாம். வாழ்வதற்காகவே பிறந்த நமக்கு, இந்த உடல் ஒரு கருவி. இந்த உடலின்றி உலகவாழ்க்கை நமக்கில்லை. உடலை உதாசீனம் செய்திடவும் வழியில்லை.

நோய் வரமால் காப்பது சிறப்பு என்றால், வந்த நோயை தீர்ப்பதும் சிறப்பே. ஒவ்வொரு நாளும், நம்மிடம் இருந்து போய்க்கொண்டே இருக்கிறது தவிர, திரும்பி வர வாய்ப்பில்லை. இளமையில் இருந்து முதுமைக்கு நகர்ந்தால், நாம் ஒன்றுமே செய்வதற்கில்லை. ஆனால், முதுமையை தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காக்கவும் வழி உண்டு. பரிதாபமாக, உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதில் உங்களுக்கு அக்கறையும் இல்லை.

இளமை காக்கும் வழிகள், சித்தர்களால், முன்னோர்களால், ஞானிகளால், மகான்களால் நமக்கு வழங்கப்பட்டது. அப்படி கிடைத்த ஒன்றுதான், காயகல்ப யோக பயிற்சியும், எளியமுறை உடற்பயிற்சியும் ஆகும். உடலை பேணி காக்க இன்னொரு ரகசிய காரணமும் உண்டு. இந்த உலகில் இன்பம் மட்டுமே நுகர்ந்து வாழ்வது மட்டுமில்லாமல், நாம் யார்? என்பதை தேடிக் கண்டடையவும் வேண்டும். உடல்பயிற்சிக்கே அக்கறை இல்லாத நீங்கள், இந்த நான் யார்? என்பதற்கு வருவீர்களா? என்றாலும் சொல்லுவதை சொல்லிவைக்கிறேன்.

உங்கள் மீது உங்களுக்கே அக்கறை இல்லை என்றால், வேறு வழி ஏதுமில்லை. அது உங்கள் வழி, உங்கள் முடிவு. எனினும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். மேலும் சில உண்மைகள் அறியவேண்டுமென்றால். இந்த காணொளி உதவலாம்.

உடற்பயிற்சி அவசியம் தேவை என்று சொல்லப்படுவது ஏன் தெரியுமா?
வாழ்க வளமுடன்
-

why does man need food? How does the need for food help? Can you survive without food?


வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் அவசியம் எப்படி உதவுகிறது? உணவில்லாமல் வாழ முடியுமா?

உலகில் வாழும் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிருள்ள, அசைவுள்ள, எல்லா ஜீவன்களுக்குமே உணவு அவசியம். இடம் விட்டு இடம்நகராத, செடி, மரங்களுக்குக் கூட உணவின் தேவையும், அவசியமும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்தானே? என்னவென்றால், அது தானாகவே, காற்றின் வழியாகவும், வெப்பத்தின் வழியாகவும், மண்ணின் வழியாகவும், நீரின் வழியாகவும் உணவை தயாரித்து கொள்கிறது. விஞ்ஞானத்தின் வழியாகவும் நீரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்தை அப்படியே எடுத்துக்கொண்டு பார்க்காலாம்.

மனிதன் இப்பூவுலகின்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது. தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Comprehensive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்து விடுகிறது. 

உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானுகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன, பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown up) விசிறியடிக்கப்படுகின்றன. அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித உடலில் உள்ள தசை, நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்தும் கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலின் இழப்பானது சரிக்கட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம். நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம். ஒரு முழுநாள் நீரைத்தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம் வரை உடலின் எடை குறைந்திருக்கும். இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கு சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு “பிழைப்பு” என்றே பெயர் வந்தது. என்பதாக விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

My stomach often gets into trouble. There is no interest in food. There is also sluggishness without appetite. What is the solution?


என்னுடைய வயிறு அடிக்கடி பிரச்சனைக்குள்ளாகிறது. உணவில் நாட்டம் இருப்பதில்லை. பசி இல்லாமல் மந்தமாகவும் இருக்கிறது. வீட்டில் சாப்பிட்டாலும், வெளியே சாப்பிட்டாலும் பிரச்சனையே. இதற்கு தீர்வு என்ன?

உணவு என்பது ஜீவன்களின், உயிர்களின் அடிப்படையானது. உயிர்வாழ்வதிலும், உடலை வளர்த்துக் காத்து, மனதையும் உயிரையும் காத்துக்கொள்வதிலும், உணவு தான் முக்கியமானது ஆகும். மேலும் இந்த உணவுதான் ஏழு தாதுக்களாகவும் மாறி, வாழ்வை, வாழும் பொழுது வளமாக்குகிறது. இப்படி முக்கியத்துவமான உணவை, நாம் கையாளும் விதம், சிறப்பாக இல்லை என்பது உண்மை. ஆனால், உணவு கலாச்சாரம், அதற்குரிய மதிப்பு, உலகெங்கும் உள்ளது. அது, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவு விடுதியிலும் இருக்கிறது.

உணவு என்பதைக் கொண்டே, அதை பரிமாறுபவர்களின் குணாதசியத்தை அறியலாம். அந்த உணவை செய்தவரின் அக்கறையை, அன்பை அறியலாம். அதுபோலவே அந்த உணவை உண்பவரின் நடவடிக்கையைக் கொண்டு, அவரின் குணாதசியத்தையும் அறியலாம். இங்கே ஒரு உணவின் வழியாக, எப்படியான தொடர்புகள் நம்மையறியாமல் உருவாகிறது என்று சிந்தித்து தெரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இதையெல்லாம் அறிந்துக் கொள்ளக்கூடிய சூழலை நாம் கைக்கொள்வதில்லை. ஏனென்றால் அப்படியான அவசர உலகில் நாம் வாழ்கிறோம். அப்படியான நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோலவே, அமைதியாக, பொறுமையாக, ரசித்து, ருசித்து, அனுபவித்து சாப்பிடுபவர்கள், மிகமிகக் குறைவு. இந்த பிரச்சனை, உங்களுடைய உணவால் வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது மிக குறைவே. அப்படியென்றால், இந்த பிரச்சனையின் மூலம் என்ன என்றால், உங்களுடைய மனமும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் ஆகும். அப்படியா? என்று திகைக்கிறீர்களா? ஆம், அதுதான் உண்மை.

ஆனால், இந்த பிரச்சனையை, மருத்துவரின் வழியாக தீர்க்கவே நான் வழிமொழிகிறேன். என்றாலும். உங்களுடைய இந்த உணவு தொடர்பான பிரச்சனையை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவும். இதைக்குறித்த சில உண்மைகளை, இந்த காணொளி வழியாக காணலாம்.

உணவுக்கும் முன்பும், நீர் அருந்தும் முன்பும் காயகல்ப பயிற்சி செய்யவேண்டுமா? ஏன்? Kayakalpa Yoga!

வாழ்க வளமுடன்

-

Thoughts are always running through me. I couldn't control it. Is this good? Bad?


ஐயா, எப்போதும் எனக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது நல்லதா? கெட்டதா? எப்படி இதை சரிசெய்து கொள்வது?


எண்ணம் என்பது இயற்கையானது. இயல்பானது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால் உயிர்ப்பானது. ஆம். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற கருத்தே அதில் பொதிந்து இருக்கிறது. அதனால்தான், தடையில்லா நீரூற்றுபோல, அலை அலையாக எழும் கடல்போல, எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாகவே, அது அதன் இயல்பில் தானாகவும் வரும். நீங்கள் உணரும், பார்க்கும், கேட்கும் நிகழ்ச்சிகள் வழியாகவும் வரும். மற்றவர்கள் தூண்டுதலாலும் வரும். நீங்களாகவே எதேனும் நினைத்தாலும் வரும்.

எண்ணம் என்பது, நம் மனதோடும், மூளையோடும் தொடர்பு ஏற்படுத்தி, காட்சியாக தருவது மட்டுமில்லாமல், உங்களுக்கு செயல் ஊக்கத்தையும் தந்துவிடும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, நாம் இயல்பாக வாழவும் முடியும். இல்லையேல், நொடிக்கு நொடி நம்முடைய செயல்களில், நடவடிக்கைகளில் பதட்டமும், தடுமாற்றமும் வந்துவிடும். சிலர், ‘தனக்குள்ளாக, யாரோ இருந்து கட்டளை இடுகிறார்கள்’ என்று கூட சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு எண்ணம் ஆட்சி செய்யக்கூடியதுதான்.

இந்த எண்ணம், அதன் செயலாக்கம், அதனுடைய மூலம், எந்த நவீன விஞ்ஞானத்தாலும், விஞ்ஞான கருவிகளாலும் விளக்கமாக அறியமுடியவில்லை. ஆனால் அதன் செயல் அளவைகளை, அளக்கின்ற கருவிகள் இருக்கின்றன. ஒரு மனிதன் தனக்குள்ளாக, எண்ணங்களின் அதிர்வோடு இருக்கிறானா? அமைதியாக இருக்கிறானா? என்று மன அலைச்சுழல் கருவி வழியாக அறியமுடியும். எனினும் கூட, ஆல்ஃபா, தீட்டா என்ற நிலை மட்டுமே அறியமுடியும் என்று சொல்லுகிறார்கள். டெல்டா என்ற நிலையை அறிய முடியவில்லை. ஏனென்றால் அது ஒன்றும் அற்றதாக, ஜீரோவும் அதற்கு கீழேயும் என்று முடிவு செய்கிறது. ஆனால் யோகத்தின் வழியாக, தவம் கற்ற ஒருவர், அந்த டெல்டா அலையிலும் நிலைக்க முடியும், உணரவும் முடியும். அதுவேதான் மெய்ப்பொருள் உண்மையையும் அறியும் நிலையாகும்.

எனவே, எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன என்றால், அது அதனுடைய இயல்பு. அதை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் ஒழுங்கு செய்யலாம். நாம் விழிப்பாக, அதை கவனிக்கும் பொழுது, இது தேவை, தேவையில்லை, இது நல்லது, இது வேண்டாம் என்று முடிவு செய்யவும் முடியும். எண்ணமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக திகழ்வதை நாம் மறக்கக்கூடாது. எண்ணம் எழுமிடமோ, உள்ளம் எனும் சிறு புள்ளி, விரிந்திடும் இடமோ, அகண்டாகாரம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். அதன் பெருமை உணர்ந்து, நல்ல எண்ணங்களை நமக்குள் விதைக்கவும் வேண்டும். அவற்றையே அறுவடை செய்யவும் வேண்டும்.

இந்த காணொளி உங்களுக்கு மேலும் சில விளக்கங்களை தரலாம்.

வாழ்க வளமுடன்.


Why my horoscope and star not gift to me the spiritual enlightenment? Do you explain it?


என்னுடைய ஜாதகத்தின் வழியாக என்னுடைய பிறவியில் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்றும், அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யோகத்தில் இறையுணர்வு பெற வழியில்லை என்று சொல்லுகிறார்கள். உங்கள் கருத்தும் ஆலோசனையும் என்ன?


அப்படி சொன்னவர்கள், அதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து சொல்லி இருக்கலாமே? ஏன் அதைச் சொல்லவில்லை. குறை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அந்த குறையை தீர்க்க இந்தந்த வழிமுறைகளில் செயல்பட்டு தீர்த்து, பிறவிப்பயனாகிய, பிறவிக்கடனாகிய உண்மையை உணர்ந்து, இறையுணர்வு பெறலாம் என்று விளக்கி இருக்கலாமே? ஆனால் அதை அவர் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால் அவரும் யோகத்தில் இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் அவர் இருந்து, அந்த அனுபவங்களையும் பெற்றிருந்தால், மிக எளிதாக, உங்களுக்கும் வழியை காட்டி இருக்கலாம் என்பது உண்மையே.

பிறந்த எல்லா மனிதர்களுக்கும், இறையுணர்வு என்ற உண்மையறிதலும், நான் யார்? என்று தன்னையறிதலும் உள்முகமாக, வேட்கையாக அமைந்திருக்கிறது. அப்படியா? என்று கேட்பவர்களுக்கு, உங்கள் பிறப்பின் காரணமே அதுதான், என்றுதான் பதில் தரவேண்டியதாக இருக்கிறது. ஆம், ஆனால் பிறந்த பிறகு, வளரும் சூழ்நிலைகள் காரணமாக, அதை, அந்த நோக்கத்தை விட்டுவிட்டு, உலக வாழ்கையில், ஆழ்ந்து நம்மை மறந்துவிடுகிறோம்.

ஏனடா இப்படி மாறிவிட்டாய்? என்று நம்மை, இந்த இறையாற்றலே கேட்டு, எப்போதடா நீ என்பக்கமாக திரும்புவாய்? திசை நோக்கி நகர்வாய்? என்று கேட்கிறது. இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தரவில்லை என்றால், நமக்கு சில பிரச்சனைகளை, நம்முடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் வழியாகவும், மற்றவர்கள் மூலமாகவும் உண்டாக்குகிறது. இந்த பிரச்சனைகளின் வழியாகவாவது, இவன் திருந்துவானா? என்று நமக்கு பாடம் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் நாம்தான், அடுத்த வகுப்பிற்கு கடந்து செல்ல விருப்பமில்லாமல், அதே வகுப்பிலேயே கிடந்து உழல்கிறோமே? அதுதானே நமக்கும் பிடித்திருக்கிறது! இல்லையா?!

இந்த சூழலில், நாம் ஜாதகம் உதவுமா? என்று நினைக்கிறோம். அதன்வழியாக தீர்வு உண்டாகுமா? என்று ஆய்வு செய்யும் பொழுது, அது வேறுமாதிரியான கோணத்தில், வாழ்க்கையை திசை திருப்புகிறது என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் அனுபவம், ஆய்வு முடிவுகள் அப்படியானது. அவர்களை குறை சொல்லி ஒன்றுமில்லை.

ஆனால் உண்மை, வெட்ட வெளிச்சமாக, தெளிவாகவே இருக்கிறது. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோமா? மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. கண்டு கேட்டு உண்மை அறிக.


இணைப்பு: 

இறையுணர்வு பெறுவதற்கு பிறந்த நட்சத்திரம் உதவுமா? Birth Star Helps to Enlightenment

Part 01

Part 02

Part 03

வாழ்க வளமுடன்.


What is the Truth of Vethathirya Kayakalpa yoga and how it come to this form as exercise?


ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி என்பது சித்தர்களின் புதிரா? அதை எப்படி இப்போதுள்ள பயிற்சியாக மாற்றம் பெற்றது என்று விளக்குவீர்களா?

சிவ வாக்கியர் என்ற சித்தர் பெருமகான், அம்மை அப்பன் என்று தொடங்கும் ஒரு கவியில், இப்படியாக ஒரு கவி இருக்கிறது.

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே!

இந்த கவி, காயகல்ப பயிற்சி உண்மையை, தெளிவாக தெரியப்படுத்துகிறது. ஆனால், அதை நாம் முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறதா? இல்லை. ஆனால், தமிழ் படிக்கத்தெரிந்த அனைவரும், இதை படித்து ஏதோ புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த கவிதையின் கருத்துரை, விளக்கம் அறியமுடியாது. என்றாலும்கூட, நமக்கு புரிந்த அளவில் விளக்கம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதை தனியே விளக்க வேண்டியதில்லை எனினும், ஒர் உதாரணமாக பார்க்கலாமே? 

மூலமாம் என்றால், மூலாதாரம் என்று அறியமுடிகிறது. அந்த மூலாதாரத்தில் கோரப்புல் விளைகிறது. அதை அதிகாலை எழுந்து, நாலு கட்டு கட்டுமளவுக்கு அறுக்கலாம். அப்படி அறுத்துக் கொண்டே வந்தால், பாலன் போல, இளவயது சிறுவன் சிறுமி போல, வாழலாமாம். பரப்பிரம்மம் என்று முழுமுதற்ப் பொருளையும் அறிந்து அதைப்போலவும் ஆகலாமாம். ஆலம் என்ற விஷத்தை உண்ட சிவனின் அடிசேர்ந்த வகையிலும், சக்தியை சரணடைந்த வகையிலும் இது உண்மை என்று இந்த கவிதை விளக்குகிறது’ என்று நாம் சொல்லிவிடலாம். ஆனால் இதன்படி செய்தால் அது காயகல்பம் ஆகிவிடுமா?

மூலாதாரம் எங்கே? என்று அறியவேண்டும். அங்கே கோரைப்புல் எப்படி இருக்கிறது? என்பது அறியவேண்டும். இதற்கு முன்பாக கோரைப்புல் அங்கே எப்படி வந்தது என்பதையும் அறியவேண்டுமே? நாலுகட்டு அறுக்கவேண்டும் என்றால் எப்படி? எதனால் அறுக்கவேண்டும்? அறுத்து எங்கே வைக்கவேண்டும்? இப்படி கேள்வி கேள்வியாக பிறக்கும்தானே?

        இப்படியாக பல நூறு சித்தர்கள், இத்தகைய காயகல்பம் என்ற தத்துவத்தை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதன் அவசியம் அவர்களுக்கு, தங்கள் வாழ்நாளை மெய்பொருள் ஆராய்ச்சியில் செலவழிக்க அவசியமாகவும் இருந்ததுதானே!

இந்த சித்தர்கள் ஏனய்யா இப்படி குழப்புகிறார்கள்? என்று நமக்கு அங்கலாய்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால், இதுதான் சித்தர்களின் வழிமுறை. ரகசியம் காக்கும் குழூஊகுறி பாடல்கள் என்று சொல்லுவார்கள். மேலோட்டமாக ஒன்றும், உள்பொதிந்த அர்த்தத்தைக் கொண்டும் அதை வார்த்தைகளால் சொல்லுவதாகும். மேலும் முக்கிய காரணம், இந்த உண்மைகள், உண்மையை அறிந்து தேடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கவேண்டும் என்ற காரணமும் ஆகும்.

இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆராய்ந்தார், பல்லாண்டுகள் அதை தேடித்தேடி, உணர்ந்தறிந்து, ஒழுங்குபடுத்தி, தானே செய்து பார்த்து, திருத்தங்கள் ஏற்று முழுமை செய்தார். அதுதான் நமக்கு, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சியாக நமக்கு கிடைத்திருக்கிறது. இதைக் குறித்த விரிவான காணொளி பதிவை இங்கே காணலாம். உண்மை அறியலாம்.

வாழ்க வளமுடன்.

Is it beneficial for us to multiply or biomagnetism gazing practice? Isn't it? How to retain it?


ஐயா, ஜீவாகாந்தம் பெருக்கப்பயிற்சி நமக்கு நன்மை தருகிறதா? இல்லையா? எப்படி அதை தக்கவைத்துக் கொள்வது?


ஜீவாகாந்தம் என்பது நம் உடலுக்குள்ளாக ஓடிக்கொண்டே இருக்கின்ற மின்சார சக்தி என்று உதாரணமாக கொள்ளலாம். இந்த சக்தி ஓட்டத்தின் வழியாகவே நம்முடைய அன்றாட செயல்பாடுகள், நினைவுகள், சிந்தனைகள், உணர்வு எல்லாமே நிகழ்கிறது. எண்ணங்களின் வழியாகவும், ஐம்புலன்களின் வழியாகவும் செலவாகிக் கொண்டும் இருக்கிறது. நம்முடைய உடலில் எப்போதும், போதுமான அளவில் இந்த ஜீவகாந்தம் இருக்க வேண்டியதும் அவசியம். இந்த இயற்கையும் அந்த ஜீவகாந்தத்தின் வரவையும், செலவும் கண்காணிக்கிறது என்பதும் உண்மை. ஒருவேளை ஏதேனும் வகையில், அதிகமான ஜீவகாந்த இழப்பை நாம் இழந்திட தயாரானால், இந்த இயற்கை, இனி உன்னால் முடியாது, பொறுமை என்று எச்சரிக்கிறது. தடுக்கிறது. இதை நீங்கள் அனுபவமாக உணரவும் முடியும்.

இதை ஏன் ஜீவகாந்தம் என்று அழைக்கிறார்கள்? காரணம் இருக்கிறது. மறை பொருளாக இருந்த இந்த ஆற்றலை, நம்முடைய சித்தர்கள் கண்டுணர்ந்து, காந்தம் என்றுதான் பெயரிட்டார்கள். இந்த காந்தத்தை, வேறெந்த வகையிலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. உடலுக்குள்ளாக இருக்கும் இந்த ஆற்றல், ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் இருக்கும் இதேமாதிரியான ஆற்றல் வான் காந்தம் என்றும் அழைக்கப்படும்.

ஜீவகாந்த பெருக்கம் என்பது, நமக்குள் இருக்கும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் ஓர் வழிமுறை ஆகும். இருப்பு அதிமானால், நமக்கு குறைவில்லாத, நிறைவான நன்மை கிடைக்கும் அல்லவா? அதுதான் இந்த பயிற்சியில் உண்டாகிறது. ஆனால், இதை செலவிடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

இதை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோம். இந்த காணொளியில், கருவுற்ற தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த ஜீவகாந்த பெருக்கப்பயிற்சி எப்படியான பலனை தருகிறது என்ற உதாரணத்தின் மூலம், உண்மையை நீங்கள் அறியலாம். 


வாழ்க வளமுடன்.

-