CJ for You: appearance

appearance

Showing posts with label appearance. Show all posts
Showing posts with label appearance. Show all posts

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

How we can identified the true Yogi or Mahan in this modern world?


யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?

பதில்:

ஒரே கேள்வியில் இத்தனை துணைக்கேள்வியை இணைத்துக் கேட்டால் எப்படி சுருக்கமாக பதில் சொல்லமுடியும்? எனினும் முயற்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தின் வழியாக தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் உணர்ந்தவர்கள் பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை. ஏனென்றால், ‘பிரம்மஞானம்’ என்ற உண்மைநிலையை எங்குமே, எதிலுமே, எப்பொருளிலுமே, எந்த உயிர்களிடமுமே, எந்த மனிதர்களிடமுமே காணக்கூடிய தன்மைக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள். எந்தவகையிலும் ‘தான், தனது’ என்று பிரித்துப்பார்த்திடாவர்கள். மிக இயல்புக்கு வந்து, இயற்கைத் தன்மையோடு ஒன்றி வாழ்பவர்கள்.

இப்படியான தன்னிலை விளக்கம் பெற்றவர்களும், மெய்ப்பொருள் உண்மை பெற்றவர்களும், பிறருக்கு எடுத்துச்சொல்லி, அவர்களையும் தன்னைப்போல உண்மையும், விளக்கமும் அறியச்செய்வதில் வெகு சிலர்தான் ஆர்வமாக இருப்பார்கள். மற்றோர் எப்போதும் போலான, வாழ்க்கையை, தன்னளவில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களை எளிமையாக காட்டிக்கொள்வதும், உலகுக்கு, அந்த உலகில் இயல்புக்கு மாறாக காட்டிக்கொள்வதும் உண்டு. எந்த ஆடையுமின்றியும் இருக்கலாம், கோவணம் என்ற சிறு மறைப்பு துணி மட்டும் கட்டியிருக்கலாம். சட்டை இல்லாமல் வேட்டி, துண்டு மட்டும் கட்டியிருக்கலாம். ஏதேனும் போர்வையை தன்மேல் போர்த்தியபடி இருக்கலாம். தலைப்பாகை கட்டியிருக்கலாம். தாடி மீசை கலைந்த தலைமுடி என்றும் இருக்கலாம். சிலர் அழுக்கடைந்த நிலையில் கூட இருப்பார்கள். சிக்கல் நிறைந்த, ஜடாமுடி என்று சொல்லப்படும் தலைமுடியிலும் இருப்பார்கள். 

இவர்களை நாம் அடையாளம் காண்பது எளிது. ஆனால் இவர்கள் எதுவுமே பேசாமல், இறையுணர்வை பெறுவது உண்மை எப்படி அறிவது என்று சொல்லாமல், பயிற்சி அளிக்காமல் இருப்பதால் இவர்களை மக்களாகிய நாம் உதாசீனம் செய்துவிடுவோம். மாறுதலாக எதோ சக்தி வாய்ந்தவர் என்று வணங்கவும் செய்துவிடுவோம்.

இந்த வணக்கத்தையும், மரியாதையையும், செல்வாக்கையும், பார்த்துத்தான் ஏமாற்றுப் பேர்வழிகள், தாடி மீசை முடியலங்காரம், ஆடை அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி, பொருள், பணம் பறிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பூஜையும், வழிபாடும், மந்திர உச்சாடனமும், மௌன விரதமும் இருந்து, பல மக்களின் சந்தேக பார்வையில் இருந்து தப்பிவிடுவார்கள்.

மக்களின் அறியாமை உணர்ந்து, அவர்களை வழிநடத்த, உண்மைப்பொருள் உண்மையும், விளக்கமும் அளித்து முன்னேற்ற அக்கறை கொண்டு, ஞானிகள், மகான்கள், யோகியர்கள் தன்னை தனியாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை வழங்குவார்கள். இவர்களையும் மதிக்காது, உதாசீனம் செய்யும் மக்களும் உண்டுதான். இத்தகைய உண்மையானவர்கள் மீது, நம்மக்கள் அக்கறை கூட கொள்வதில்லை, ஏமாற்றுக்காரன் என்றும் சொல்லுவார்கள். ஆனால் எல்லாவற்றையும் சொல்லிக்கொடு என்றும் எதிர்பார்ப்பார்கள். என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்றும் மறுப்பார்கள். 

வாழ்கின்ற இந்த உலகில், நாட்டில் ஒரு மனிதன் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்பது, அவரவர் உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. நீங்கள் சொல்வது போல, எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது, யோகத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, மிக சாதாரண மனிதர்களும் அப்படி இருப்பார்கள் என்பதுதான் உண்மை. இதில் மனிதர்களின் இயல்பும் இருக்கிறது. சோம்பேறித்தனம், இயல்பாக விட்டுவிடுதல், எனக்கு பிடிக்கும் என்று மிகைப்படுத்துதல், நான் இப்படித்தான் என்று தன்னை வெளிக்காட்டுதல், மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்துதல் என்று பலப்பல இருக்கின்றன. அடையாளம் காணத்துடிக்கும் நமக்குத்தான் பெரும் பிரச்சனை என்று சொல்லலாம்.

ஆசான் திருவள்ளுவர், 
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (குறள் 828)

என்று குறள்வழியாக சொல்லுகிறார். இதன் பொருளாக, நம்மை வணங்கி தன்னை தாழ்த்தும் ஒரு மனிதனிடம், நம்மை ஏமாற்றி, படையெடுத்து தாக்கி அழிக்கும் தன்மை இருப்பதுபோலவே, ஒருவருடைய அழுகையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும் என்கிறார்.
 
இதன்படி தோற்றத்தை வைத்து, மயங்கிவிடும் தன்மையை, நாம் தான் மாற்றிக் கொள்ளவேண்டும். அவர் யார்? இதற்குமுன் என்ன செய்தார்? பின்புலம் என்ன? அணுகுமுறை என்ன? அனுபவம் என்ன? என்ன் சொல்லுகிறார்? அதில் உண்மை உள்ளதா? பயன்படுமா? உலகியலுக்கும், இயற்கைக்கும் முரண்படாது செயல்படுகிறாரா? வழிகாட்டுகிறாரா? என்று பலகேள்விகளை முன்வைத்து ஆராய்ந்து மதிப்பளிக்கவேண்டும். தோற்றம் கண்டு ஏமாறவேண்டியது இல்லை. அப்படி ஏமாந்தால் அது உங்கள்பாடு.
 
வாழ்க வளமுடன்
-

How we can identify the true Yogi, Mahan and Gnani?


ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?

பதில்:

வாழும் உலகில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை, தன்னையுணர்ந்த யோகிகள், மகான்கள், ஞானிகள் ஏராளம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம், அவரவர்களுடைய தோற்றங்களையும் மாற்றிவிடும் என்பது உண்மை. கற்காலம் என்ற நிலையை எடுத்துக்கொண்டால், எல்லா மனிதனுமே ஆடையின்றி திரிந்தகாலம் உண்டுதானே? ஆனால் ஐந்தறிவு விலங்கினத்திற்கும், ஆறறிவான தனக்கும் உள்ள வித்தியாசத்தையும், உயர்வையும் அறிந்தபிறகு தன்னை, மனிதன் ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டான். அவரவர்களுக்கு அந்தந்த சூழ்நிலைகள் கொண்டும், செய்கின்ற வேலைகள் கொண்டும், ஆடைகளும் தோற்றங்களும் அமைந்துவிட்டன. காலங்காலமாக அவை மாற்றம் பெற்றுக்கொண்டே வருகின்றன.

எப்படிப்பார்த்தாலும், ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆனால் அவர்களுக்குள்ளாகவே இப்படி இருக்கவேண்டும் என்ற இயல்பான தன்மை உருவாகிவிடும். எந்தவகையிலும், அது உலகை, மக்களை பயமுறுத்துவதாகவே, தனிதன்மை வாய்ந்ததாகவோ, ஏமாற்றுவதாகவோ இருக்காது என்பதே உண்மையாகும்.

அந்தக்கால சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள் ஜடாமுடி என்ற, முடிச்சுமுடிச்சான முடிகள், என்றுமே வாறப்படாத, எண்ணை காணாத தலைமுடி, உயர்த்திக்கட்டிய முடி, அதில் உத்திராட்சம், விரிந்த தலைமுடி என்ற நிலையில் இருந்தார்கள். உடை என்று எடுத்துக்கொண்டால், கோமணம், சிறிய துண்டு, காவி உடை, எப்போதும் ஒரே ஆடை, அழுக்கடைந்த கிழிந்த ஆடை, தலைப்பாகை, உடலை போர்த்திய துணி என்றெல்லாம் உண்டு. இப்போதும் சிலர் அப்படி தோற்றமளிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அந்தக்காலத்தில், ஆடையில்லா நிர்வாணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போதும் சில சமணர்கள் அப்படி இருப்பதை காணமுடிகிறது.

அதுபோலவே, படர்ந்து நீண்ட தாடி, அழுக்கான தோற்றம், பாமரன், ஏழை, பிச்சைக்காரர போன்ற தோற்றத்திலும் இருப்பதுண்டு. ஆனால் இத்தகைய வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு, இவர் தன்னை அறிந்தவர்தான், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தவர்தான் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. பொதுவாகவே சராசரி மக்கள் மத்தியில், இப்படியான தோற்றங்களுக்கு மதிப்பு உண்டு. சிலவேளைகளில், மனநலம் குன்றிய மனிதர்களைக்கூட சித்தர், யோகி, மகான், ஞானி என்று நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். ஒரு பேசமுடியாதவர், தன்னிலை மறந்தவர், பித்துப்பிடித்த நிலையில் இருப்போரையும் போற்றுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்தான், இறைநிலை உணர்ந்தவர் என்றும் நம்புகிறார்கள். இந்த உலகை, பிரபஞ்சத்தை, இயற்கை, மெய்பொருளான உண்மையையும், தன்னையும் அறிந்த ஒருவர், பைத்தியக்காரனாக இருப்பாரா?

என்றைக்கு உலகில், தன் வயிற்றுப்பாட்டுக்கும், மக்களின் ஆதரவைப் பெறவும் ஏமாற்றலாம் என்று சிலர் நினைத்தார்களோ? அன்றைக்கே இதில் போலி உருவாகிவிட்டது. பெரும்பாலும் போலிச்சாமியார், பேசுவது புரியாது. ஏதேனும் பழைமையான நூலை வாசித்து அதில் உள்ளதை அப்படியே சொல்லுவார், அடிக்கடி தன்னை மறைப்பார், மௌன விரதம் என்று பேசா நோன்பு இருந்து, கேள்விகளை தவிர்ப்பார். பூஜை, யாகம் என்று அடிக்கடி மக்கள் சந்திப்பை தூரவைப்பார். அருகில் தன் நம்பிக்கையானவர்களை தவிர வேறு யாரையும் அண்டவிடமாட்டார். இன்னும் நிறைய சொல்லலாம் எனினும், அவர்களை குற்றம் காண்பதும், குறைகாண்பதும் நமது வேலையல்லவே?!

வெறுமையான தோற்றத்திலும், ஆடை அலங்காரத்திலும், தாடி மீசை முடி அமைப்புக்களிலும், சின்னங்களிலும், உருவங்களிலும் ஏமாறாதீர்கள். நேரடியாக, கேள்வி கேளுங்கள். அவராகவே எதையும் மேற்கோள் காட்டாமல், உணர்ந்ததை எளிமையாக, புரியும்படி சொல்லி விளக்குகிறாரா? என்று ஆராயுங்கள். வெறுமனே ஆலோசனை சொல்லுகிறாரா? என்பதையும் அறியுங்கள். பொதுவாகவே யாரையும் சந்தேகக்கண்கொண்டு பார்த்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பழகிக்கொள்வதே நல்லது. சராசரி மக்களில் சிலர், ‘வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக சொல்லுவார்கள். நாம் அப்படியாக இருக்கவேண்டாமே!

வாழ்க வளமுடன்
-

Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன்.