CJ for You: natural

natural

Showing posts with label natural. Show all posts
Showing posts with label natural. Show all posts

Did you know Vethathiri Maharshi's explanation of natural consciousness and knowledge what is that the base of Almighty?


இயற்கை உணர்வும், அறிவும், அதன் மூலமான இறை என்பது குறித்தும் வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் எப்படிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?

        இயற்கை உணர்வும், அறிவும் உலகில் வாழும், எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. அது இயற்கையின் கொடையாகவும் அமைந்துள்ளது. வாழும் அந்த வாழ்நாள் முழுவதும், அந்த உணர்வையும், அறிவும் பயன்படுத்திக் கொள்கிறது. நாமும் பயன்படுத்துகிறோம். அதுபோலவே புதிதாக, தன் அனுபவத்தால், மனிதனைத் தவிர மற்ற ஜீவன்கள், கற்றுக் கொள்கிறது.  ஆனால் மனிதனோ தன் ஆறாம் அறிவால், சிந்தித்து தன்னை மேம்படுத்தியும் கொள்கிறான். இதை வேதாத்திரி மகரிஷி எப்படி விளக்குகிறார்? 

உலகில் வாழ்கின்ற காலத்தில், இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு 'Instinct' என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த 'Instinct' என்பதற்கு மேலே 'Intelligence' அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் 'Intelligence' என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த “Intelligence” வந்த பிறகு தான் “அறிவு”, 'Knowledge' வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது 'Intelligence'. அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' 'Knowledge' என்று சொல்லலாம்.

இந்த 'Collective Knowledge' வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் 'Intuition' உண்டாகிறது, அதில் இருந்து தான் எல்லாம் வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. என்றவகையில், பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

Is there such a thing as fate? Is it true that wisdom can conquer fate?


விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?


பதில்: 

இதற்கு முன்பாகவும், பலவிதமாக இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் எனினும். மீண்டும் சொல்லுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இங்கே குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களின் கவிதையின் கருத்தாக, எனக்கு கிடைத்த உண்மையைக் கொண்டு விளக்குகிறேன்.

        விதி என்பது இயற்கையின் நியதி ஆகும். நியதி என்பது என்ன? அடிப்படையாக இருப்பது என்று அர்த்தமாகிறது, அப்படியானால் விதி இருக்கிறதா? என்றால் அது நிச்சயமாக இருக்கிறது என்பது ‘அடித்துச் சொல்லக்கூடிய்’ உண்மைதான். ஆனால் அதைபின்பற்றி ‘தலையெழுத்து’ ஒன்று இருக்கிறது. அதன்படிதான் நீ வாழ்வாய் என்றால், நம்பாதீர்கள். விதி உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் தலையெழுத்து என்பது இல்லவே இல்லை.

இந்த விதி எங்கே தொடங்குகிறது? என்று ஒரு கேள்வி எழுந்தால், அது, பஞ்ச பூதத்தின் முதல் பரிணாமத்திலேயே உருவாகிவிட்டதாக, மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். பரமாணுக்களின் கூட்டாக விண் என்ற ஆகாஷ் உருவான பொழுதே, அதனூடாக விதி என்பது அமைந்திருக்கிறது என்கிறார். அந்த விண் மிகமிக விரைவான சுழற்சி கொண்டது. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையில் இருப்பதும் ஆகும். அதனைத் தொடர்ந்த அடுத்த பரிணாமான காற்றையும் நாம் காணமுடிவதில்லை. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத விண் என்ற ஆகாஷ் தான், ஜீவன்களிலும், மனிதரிடத்திலும் ‘உயிர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறது. அதன் உள்ளடக்கமாக தோற்றம், இருப்பு, கலைதல் என்ற மூன்று கட்டமாக விதியை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அது அதனுடைய இயற்கை தன்மையாகவும் உள்ளது. இங்கே விதி என்பதை பார்த்தோம்.

அந்த விதியை கொண்டிருக்கும் உயிர், தன்னுள்ளே, அதன் மையப்புள்ளியிலே அறிவாக, உணரும் ஆற்றலை பெற்றிருக்கிறது அல்லவா? அதுவே மதி என்றும் மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார். (உங்களுக்குப் புரிகிறதா? என்று நான் கேட்கவே மாட்டேன். புரிகிறதா என்று கேட்பவன் விளக்கத்தெரியாத முட்டாள்) இதை இன்னும் விளக்கமாக, எப்படியாக புரிந்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கலாமா? தனக்குள் விதி என்ற இன்று இருப்பதால், அந்த விண் என்ற ஆகாஷ் துகள் நின்றுவிடவில்லை, அழிந்துவிடவில்லை.தனக்குள் அமைந்திருக்கும் அந்த விதியை மீறி, அதனூடாக இருக்கும் மதியின் வழியாக, தன் வாழ்நாளின் தன்மை கருதி, திட்டமிட்டு, அதற்குள்ளாக, தன் காலத்திற்குள்ளாக, பலகோடி துகள்களோடு கூடி, அணுக்களாகவும், தன்னைப்போன்ற பல உயிர்த்துகளோடும் கூடியே,  மூலக்கூறுகளாகவும், தோற்றங்களாகவும், பொருட்களாகவும், ஜீவன்களாகவும், மனிதராகவும் வந்து நிற்கிறதே? அது விதியைக்கடந்த மதியின் செயல் அல்லவா? அதை நாம் ‘பஞ்சபூத நிலையிலேயே’ புரிந்துகொள்ள வேண்டும் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு உணர்த்துகிறார்.

விண் / ஆகாஷ் / உயிர் ஆகிய இத்துகளே, விதியை மதியால் வென்று வெற்றிபெறும் பொழுது, அந்த உயிரைக்கொண்டே உலகில் வாழும் நாம், நம்மை விதியின் கீழ், குறைபட்டுக் கொள்ளலாமா? கவியின் கருத்து வழியாக, சொன்ன இத்தகைய விளக்கம் உங்களுக்கு, உண்மையை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

-

வாழ்க வளமுடன்.

-

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Why the changes are low level within people based on yoga even it is simplified?


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


பதில்:

யோகம் என்பது எளிமையாக்கப்பட்டு, மனிதர்களின் பிறவி நோக்கத்தை அறியவும், பிறவிக்கடன் தீர்த்திடவும் வழிகளாக, பயிற்சிகளாக பல கிட்டதட்ட 100 ஆண்டுகளாக உலகில் எத்தனையோ ஞானிகளால், மகான்களால், யோகிகளால், உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவும் இருந்தன எனினும் கடின முறைகளும், துறவு கட்டாயம் என்ற நிலையும்கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு இருந்தனர். என்றாலும் அதையும் விரும்பி ஏற்று கற்றுக்கொண்டு, தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த நினைத்த அத்தகைய உயர்ந்த நோக்கமும் எண்ணமுமே, பிற்காலங்களில் யோகத்தை எளிமையாக்கிடவும் வகை செய்தது எனலாம்.

அந்தக்கால கடின முறைகளும், கட்டாய துறவும் இப்பொழுது இல்லை. பயிற்சியில் எளியமுறையும், வாழும் வாழ்க்கையில் அளவும் முறையும் கொண்டு யோகத்தின் வழியாக உயரலாம். தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் அறியலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவே இன்றளவும் தொடர்கிறது.

எத்தனையோ யோக பயிற்சி மையங்களும் உலகெங்கிலும் உருவாகிவிட்டன. நோக்கம் ஒன்றாகக் கொண்டு பலவாறாக பயணிப்பது மக்களுக்கும் உதவும். அந்தவகையில்தான் மொழி, இனம், நாடு என்ற பிரிவுகள் இன்றி அனைவரும் யோகத்தில் பயணிக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனினும் சில குறுமதியர்கள், தங்களின் சுய லாபத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பிறரிடமிருந்து பொருள் பறிக்கவும் திட்டமிட்டு, மக்களுக்கு  தவறான பாதையையும், அச்சுறுத்தலையும் பரப்புகின்றனர். மிகையாகச் சொல்லி அதை மனிதர்களால் முடியாது என்றும் சொல்லுவார்கள். மனிதர்களாகிய நமக்குத் தேவையும் இல்லை என்றும் சொல்லுவார்கள். இப்படியான மனிதர்களுக்கும் பெரும்கூட்டம் பின்னால் செல்லுகிறது என்பதுதான் நாம் நேரில் பார்க்கின்ற உண்மையாகும்.

தகவல் தொடர்பு உலகம் முழ்வதும் எளிமையாகிவிட்ட இந்த நிலையிலும் கூட, இப்படியான உண்மைக்குப் புறம்பான மாற்றுக்கருத்துக்கள் வலிமையாக பரவி வருவது கண்கூடு. ஆனால் இதை உடனடியாக மாற்றிவிட முடியுமா? முடியாதுதான். வேகமாக நகரும் ஒரு விசையை, பொருளை, தடுப்பதில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை விதி. ஆனால் அதுவாகவே ஒர்நாளில் ஓரளவில் நின்றுவிடும் அல்லவா? அதுவரை காத்திருந்து பிறகு அதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கலாம்.

பொதுவாகவே யோகம் குறித்து எது பேசினாலும் ஏற்கும் மனநிலை, எந்த மனிதருக்கும் இல்லை என்பதுதான் இப்போதுள்ள தலைமுறைக்கும், அடுத்த இரண்டு தலைமுறையினருக்கும் இருக்கிறது. தவறில்லை. எல்லா மனிதர்களுமே உலகில் இன்பத்தை நுகர்ந்து அனுபவித்து வாழவே பிறந்தோம் என்ற உண்மையில், அவர்கள் பயணிக்கிறார்கள்.  யோகத்தின் வழியாக, இப்படியாகத்தான் அந்த இன்பத்தை நுகர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மற்றோர் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் எங்கே பிரச்சனை வருகிறதோ? தடை வருகிறதோ? குழப்பம் வருகிறதோ? அப்போது தானாகவே மாற்றம் நிகழும் என்பதே உண்மை. இயல்பான பாடமும், திருத்தமும் மனித சிந்தனையில் அமைந்துள்ளது. இயற்கையானது நமக்கு வழிகாட்டியது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டும் என்பதே உண்மையாகும். காத்திருக்கலாம் தவறில்லை.

வாழ்க வளமுடன்

-

What is the way I can live without suffering?


வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


பதில்:

இந்த உலகில் வாழும் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், இன்பமான வாழ்வுதான் கிடைக்கிறது. அதுதான் இயற்கையின் திட்டமாகவும் இருக்கிறது. ஏன் இங்கே இயற்கையை குறிப்பிடுகின்றோம்? இயற்கையின் வழியாக வந்த, பரிணாமத்தில் வந்தது தான் இந்த உலகம், அந்த உலகில் பரிணாமத்தால் உயிர்கள் உண்டானது. தாவரம் முதலான ஓரறறிவு முதல் ஐயறறிவு விலங்கினங்கள் வரை. அதன் பின்னும் அதன் தொடர்ச்சியாகத்தான் ஆறாம் அறிவாக மனிதனும் பரிணாமம் அடைந்தான். மனிதனின் பரிணாமத்தில் இயற்கையும் முழுமையை பெற்று நிறைந்தது. அதனால்தான் ஆறாம் அறிவுக்கு மேலான ஒன்று இல்லை, இவ்வுலகில்.

இப்படி வந்த உயிரினங்களில், மனிதன் மட்டுமே துன்பம் அடைகிறான் என்ற கருத்து நம் எல்லோருக்கும் உண்டு. முதலில் துன்பம் என்பது என்ன? என்று சிந்தித்தால், அதில் பலவகை வந்து நிற்கும். உதாரணமாக, உடலில் காயம், வலி, நோய், என துன்பம் வரலாம். மனதில் எழும் குழப்பாமான சிந்தனைகள், விரும்பத்தாகத நிகழ்வுகள், ஏமாற்றங்கள் வழியாக துன்பம் வரலாம். உங்களுக்கு என்ன வகையான துன்பம் என்பதை நீங்கள் தெளிவாகவும் சொல்லவில்லை. நீங்களே ஒரு நாள், தனியாக உட்கார்ந்து, என்ன வகையான துன்பம் எனக்கு இருக்கிறது? இது எதனால் வந்தது? என்றும் யோசித்துப்பார்த்து, வரிசையாக அதை எழுதுவைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை படித்துப்பார்த்தால், சில உங்களுடைய எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றமாக இருக்கும். சில உங்களுடைய தவறான செயல்களால் உருவானதாக இருக்கும், சில அளவு முறை மீறியதால் வந்த விளைவாக இருக்கும். சில இயற்கையை மீறிய செயலுக்கான தண்டனையாக இருக்கும். சில மற்றவர்களுக்கு செய்த செயல்களால் கிடைத்த எதிர்விளைவுகளாக இருக்கும். சில ஏற்கனவே உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருவதாகவும் இருக்கும். இதில் கிடைத்திருப்பது எல்லாமே துன்பம்தான், நாம் புரிந்து கொள்ளாதவரை.

இந்த துன்பங்களின் உண்மை நிலையறிந்து, திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொண்டால், இருக்கும் துன்பத்தில் இருந்து தீர்வு காணலாம், அதை விட்டு விலகலாம், அந்த துன்பங்கள் இனியும் எழாத வகையில் நம்மை பாதுகாத்தும் கொள்ளலாம். இதற்கு, வேதாத்திரியத்தில் அகத்தாய்வு, தற்சோதனை எனும் பயிற்சிகள் உதவும். துன்பத்திற்கு தீர்வும், வழியும் உங்களிடமே இருக்கிறது, அதை தேடிக்கண்டடைவதே உங்களுக்கான நோக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

Are you feared because someone has teased your face and by comment? Is that true?!


உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!

[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]


பதில்:

என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்

இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன். 

மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?

இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.

இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள்  முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!

எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.

சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!

மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!

இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது. 

சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!

நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன். 

உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும்,  என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.

If Kayakalpa yoga helps to lifetime120 years, why we live long?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் செய்தால் 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்பது உண்மையா?! எதற்காக 120 ஆண்டுகள் வாழனும்?


பதில்:

ஆம், உண்மைதான். ஆனால் இதற்கு சில விதிகள் உள்ளன. அதன்படி கற்றுத்தேர்ந்து, பயன்படுத்தி, வாழ்ந்து வந்தால் நிச்சயமாக, மனிதனுக்கு இயற்கை அளித்த 120 ஆண்டுகள் வாழமுடியும் என்பது உறுதி. அவை என்னென்ன?

காயகல்பம் என்பது சித்தர்களின் அற்புதக் கலை. இந்தக்கலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆராய்ச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டு, மனவளக்கலை வழியாக கற்றுத் தரப்படுகிறது. இப்பயிற்சியை ஒருவர், பருவம் வந்த நிலையில், அதாவது 14 வயது நிறைவில் இருந்தே கற்றுக் கொள்ளவேண்டும். நாள் தவறாது பயிற்சியை செய்துவரவும் வேண்டும். மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவ்வைந்தில் அளாவு முறையோடும் வாழ்ந்துவர பழகவேண்டும்.

ஒரு மனிதனின் ஆயுள் பூமியின் சுழற்சியாலும், அதன் மையத்தில் உண்டாகும் ஆற்றலாலும் தான் நிர்ணயிக்கப்படுவதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். உயிருக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு, தொடர்பு தினமும் விலகிக் கொண்டே இருக்கிறது என்றும் சொல்லுவார். முன்னதாக, ஆசான் திருவள்ளுவர், ஒரு நாள் என்பது உயிரை அறுக்கும் வாள் என்று பொருள்பட ஆயுள் குறைவது குறித்து தன் குறளில் சொல்லுகிறார்.

சித்தர்களின் காயகல்பபயிற்சியை தொடர்ந்து செய்வதால், ஓவ்வொருநாளும், நம் உடலில் இருந்து வெளியேறக்கூடிய உயிர்த்துகள்கள் நிறுத்தி, பாதுகாக்கப்படுகின்றன. காயகல்ப பயிற்சியில், வித்துவின் நீர்த்தன்மையை கெட்டிப்படுத்தி வருவதால், அந்த வித்துவே, உயிர்த்துகள்களை காக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வித்து மற்றும் உயிர்த்துகள்களின் கூட்டு, மனிதனின் ஆயுளை, இயற்கையின் சராசரியான 120 ஆண்டுகள் காக்கும் தன்மையை பெற்றுக்கொள்கிறது. இது வெறும் நம்பிக்கையல்ல. தினமும் பயிற்சி செய்துவருபவர்கள் உணர்ந்த உண்மையாகும்.

சரி, ஏன் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என்று கேட்கிறீர்கள். வேடிக்கையான கேள்வி, எதை எப்படி அனுபவித்து வாழ்ந்து மடிந்தால் போதும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் இந்த கேள்வியில், எது வாழ்க்கை உண்மை? பிறவிக்கடமை? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் இயற்கைக்கும் என்ன தொடர்பு? மனம் என்பது என்ன? உயிர் என்பது என்ன? இறை என்பது என்ன? ஏன் பிறந்தேன்? ஏன் இறக்கிறேன்? பிறக்கும் முன் என் நிலை என்ன? இறந்த பிறகு என் நிலை என்ன? என்ற கேள்விக்கெல்லாம் உங்களுக்கு நேரமும், அவகாசமும், உண்மை அறியும் ஆர்வமும் இல்லை என்பதை சொல்லிவிடுகிறீர்கள். இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவும், அந்த உண்மைகளை பிறருக்கு பகிர்ந்து, அவர்களையும் உயர்த்தவும் வாழ்நாள் உதவிடுமே?! எனினும், இந்த உலகில் எப்படி வாழ்வது, எதை தேடுவது, அனுபவிப்பது என்பது உங்கள் விருப்பமே! இதில் மாற்றுக்கருத்தில்லை!

வாழ்க வளமுடன்