CJ for You: give up

give up

Showing posts with label give up. Show all posts
Showing posts with label give up. Show all posts

Why most of persons stayed long with their personality?


மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


பதில்:

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இதைச் சொல்லுகின்ற உங்களுக்கும்கூட ‘நான் இப்படித்தான்’ என்ற நிலைபாடு இருக்கும் என்பதும் உண்மையே. அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்களே யாரிடமாவது, உங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டால், அவர்கள் சொல்லிவிடுவார்கள். நாம் யார்? நம் நடவடிக்கைகள் என்ன? என்று விபரமாக சொல்லுவார்கள்.

ஒவ்வொடு பொருளுக்கும் தரம், குணம், செயல்பாடு என்று இருப்பதுபோலவே, எல்லா ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் உண்டு. அதை குணாதசியம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Quality, Personality என்று குறிப்பிடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிக தெளிவாக ‘குணநலப்பேறு’ என்று சொல்லுகிறார். இதிலேயே குணம், நலம், அதனால் அடையும் பேறு என்ற மூன்று வார்த்தைகளும், பொருள்களும் நிறைந்திருக்கக் காணலாம்.

இயக்கமற்ற பொருட்கள், ஓரரறிவு தாவரங்கள் ஆகிய தன்னுடைய கருவழியாகவே தன்னுடைய ‘குணநலப்பேறு’ பெற்றுக்கொள்கிறது. ஒரு களிமண், ஒரு பாறை, உப்புக்கல், மிளகாய், மாம்பழம் என்று உதாரணம் எடுத்துகொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரறிவு முதல், ஆறறிவு மனிதனாக நம்மையும் சேர்த்து, கருவழியான ‘குணநலப்பேறு’ மட்டுமல்லாமல், வாழ்கின்ற சூழல், கூட்டு, சமூகம், தேவை, எதிர்பார்ப்பு, அனுபவம் என்று பலவழிகளில் புதிதாகவும் ‘குணநலப்பேறு’ அமைந்துவிடுகிறது.

முதலில் ஏற்படும் தேவை என்ற உணர்வுதான் எல்லா ‘குணநலப்பேறு’நிலைக்கும் அடிப்படை ஆகிறது. அதன்படிதான் மனிதர்கள் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்கள், தனக்கு பாதிப்பு, இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஒருசிலர் என்ன நிகழ்ந்தாலும் ‘நான் இப்படித்தான்’ என்ற நிலையை (உயிரே போனாலும் கூட) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி, இத்தகைய, இயற்கைதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டும், ‘குணநலப்பேறு’ அடையவேண்டும் என்றுதான், அகத்தாய்வும், தற்சோதனையும் அமைத்திருக்கிறார். முழுமையாக தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, இயற்கையாக ஒன்றிணைந்து இருப்பது என்ற தகுதியையும் அது தரும். மேலும் கருவழியான பதிவுகளை அகற்றிடவும் துணை செய்யும். யோகத்தின் வழியாக மட்டுமே இந்த Personality மாறுமே தவிர, வேறெந்த development பயிற்சியாலும் மாறிடாது என்பதை அறிந்துகொள்க.

வாழ்க வளமுடன்

-


Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-

Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga?


யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


பதில்:

உங்களுக்குத் தோன்றிய இக்கருத்து, யோகத்தில் தங்களை, இணைத்துக் கொண்ட எல்லோருக்குமே தோன்றும் என்பதே உண்மை. நீங்கள் வாய்திறந்து கேட்டுவிட்டீர்கள். பெரும்பாலோர் கேட்கமாட்டார்கள். தங்களுக்குள் சந்தேகத்தோடு இருப்பார்கள். யோகத்தில் ஆர்வம் வருவதும், அதில் தங்களை இணைத்துக்கொள்வதும், குருவின் வழியாக தீட்சை பெற்று, குண்டலினி சக்தியை உயர்த்திக்கொண்டு தியானம் பழகுவதும் மிக எளிதானதல்ல. பலப்பல பிறவிகளின் வழியாக நாம் இழந்த ஒன்றை, இந்தப்பிறவியில் பெரும்பேறாக அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அத்தகைய உண்மையை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.

காரணம் என்ன? இதற்கு முன்னதாக நாம் வாழ்ந்துவந்த நிலைகளிலும், அதில் கிடைத்த அனுபவங்களிலும் மனம் ஒன்றி அனுபவித்துவிட்டோம். அதனால் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதான ஒன்றாக கருதுகிறோம். அவசியமில்லாததோ? என்றும் சந்தேகப்பட்டு விடுகிறோம்.

வல்லூறு என்ற ஒரு பறவை இருக்கிறது. கழுகு என்ற பறவை இனத்தைச் சேர்ந்தாலும் அது கழுகைவிடவும் விட மிக பெரிதாக இருக்கும். கழுகு என்ற இனத்தில்  ‘கருடன்’ என்பது உண்டு, அதுவும் வேறுவகையானதே. இந்த வல்லூறுக்கு மிக நீண்ட இறக்கைகள் இருக்கும். எட்டுஅடி நீளம் கொண்டவை உண்டு என்கிறார்கள். மிக தீர்க்கமான பார்வை, வேகம், தன்னைவிட பெரும் எடையை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் பறக்கும் தன்மை கொண்டது. சரி, இதை ஏன் இங்கே சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா? வாருங்கள், மேலும் பார்க்கலாம்.

அத்தகைய வல்லூறுக் குஞ்சொன்று அடிபட்டு சாலையில் விழுந்துகிடந்தது. அதை பறவைகளின் ஆர்வலர், வனத்துறையிடம் கொடுத்துவிட்டார். அவர்கள், அந்த வல்லூறுக் குஞ்சை கவனமாக மருந்துகள் கொடுத்து, அதன் காயத்தை ஆற்றி, சிதைந்து போயிருந்த சிறகுகளை வெட்டி ஒழுங்கு படுத்தி, கூண்டுக்குள் வைத்து காத்துவந்தனர். வேட்டையாடும் பழக்கமுள்ள இனம் இந்த வல்லூறு, ஆனால் கூண்டுக்குள் உணவைக் கொடுத்து வளர்த்தனர். நாளடைவில் அது குணமடைந்துவிட்டது. வளர்ந்தும் விட்டது. அதன் இயல்பில் அவர்களை அலகால் கொத்தவும், தாக்கிடவும் செய்கிறது. இப்போது அதற்கு கூண்டு பொருந்தவில்லை. அவ்வளவு பெரிதாகவும் ஆகிவிட்டது. 

வனக்காவலர்கள் திட்டமிட்டு, அதை மலைக்காடுகளில் விட்டுவிட முடிவு செய்தனர். அடர்ந்த அந்த மலைக்காட்டின் உச்சியில் கொண்டு சென்று, முகத்திலும் கைகளிலும் உறை போட்டுக்கொண்டு கவனமாக, அக்கூண்டை திறந்துவிட்டனர். அந்த வல்லூறு, தன் கூண்டைவிட்டு கொஞ்சம் கூட நகரவே இல்லை. வனக்காவலர்கள் சிறிய மூங்கில் கம்புகளால் வல்லூறை கூண்டுக்கு வெளியே தள்ளுகிறார்கள். அப்படியும் நகரவில்லை. ஆனாலும் தொல்லை தாங்காதவாறு கூண்டுக்கு வெளியே வந்துவிட்டது. அது நடந்து நகர்கிறது. இறக்கைகளை விறிக்கவும் இல்லை, அது பறக்கவும் இல்லை. அதற்குப்பிறகு என்ன நடந்தது? அதை பிறகு சொல்லுகிறேன். இந்த வல்லூறின் நிலைதான் உங்களின் நிலைமை.

கூண்டில் இருந்து பழகியதால் அது கூண்டை விட்டும் நகரவில்லை, பறக்கவும் இல்லை. நீங்களும் இந்த உலக வாழ்க்கையில், மனதைக்கொண்டு வாழ்ந்து பழகிவிட்டு, உண்மையை நோக்கி யோகத்தின் வழியாக பயணிக்க தயங்குகிறீர்கள்.

மனிதனின் இயல்பும், பிறவியின் நோக்கமும் தன்னை அறிவதுதான். அதை விட்டு விலகிவிடலாமா? இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை. 

வாழ்க வளமுடன்

-



Why getting wrong result and difficulties as almost in every action in my life?


என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?

பதில்:

பெரும்பாலான அன்பர்களின் கருத்தாகவே இதை எடுத்துக் கொள்ளமுடியும். சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லிக்கொள்ளாமல் தனக்குள் புலம்பித் தவிப்பார்கள். சிலர்,  என் தலைவிதியே என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நாம் எதைச் செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறதா? அது உண்மைதானா? பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ‘முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுதான் அது. உங்களுடைய எந்த ஒரு செயலிலும், அதனுடைய தொடக்கம் சரியாக அமையவில்லை, மனம் ஒப்பவில்லை, குழப்பத்தோடு தொடங்குகிறது என்றால், அந்த செயலும், அதனுடைய விளைவும் நிச்சயமாக பிரச்சனைக்குரியதாகவோ, துன்பம் தருவதாகவோதான் அமையும் என்பது உறுதி. இயற்கையின் எந்த ஒரு செயலிலும், அதன் விளைவிலும் ஒற்றுமை, நேர்மை, ஒழுங்கு, காலம் என்பது அடங்கியிருக்கிறது. இதில் எல்லாவற்றிலுமே ‘துன்பம்’ எழுவதில்லை. ஆனால் நாம்தான் துன்பம் மட்டுமே எழுகிறது என்று புலம்பித்தவிக்கிறோம்.

இங்கே இரண்டு முக்கிய குறிப்புக்களை காணலாம். 1) நாமாக ஏதேனும் விளைவை நினைத்துக்கொண்டு, நம்முடைய செயலை செய்வது. 2) இதைச் செய்தல் இன்னதுதான் விளையும் என்ற எதிர்பார்ப்போடு செய்வது ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எப்படி ஒரு செயலை செய்வதற்கு ஆயத்தமாகிறீர்கள்? என்பதில்தான் உங்களுக்கான பதில் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை நீங்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பாகவும், சிந்தனை செய்துகொள்ளுங்கள். ‘இந்த இரண்டும் என்னிடம் இல்லை’ என்ற தெளிவான நிலையில் செயலை செய்ய தயாராகுங்கள்.

அடுத்ததாக, எப்போதும் ஒரு செயலை அனுபவமாக செய்யுங்கள். அனுபவம் இல்லை என்றால், அந்த செயலை செய்துவிட்டு, அதையே அனுபவமாக பெறுங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விளக்கம் பெற்று, தெளிவாக, கவனமாக, சிறப்பாக அடுத்தபடி செய்யுங்கள். இந்த இடத்தில் அந்த விளைவு தவறாக, துன்பமாக இருக்குமானல், அதை உடனடியாக திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தும் அதேபோல செய்யாதீர்கள்.

எந்த ஒரு செயல் செய்தாலும், உங்கள் உடல், மனம் விழிப்புணர்வோடும், ஒன்றுக்கொண்டு தொடர்புடையதாகவும் செய்யுங்கள். ஏனோதானோ என்று செய்யாதீர்கள். அசால்ட் என்று சொல்லப்படும் நிலையிலும் அச்செயலை செய்யாதீர்கள். மேற்கண்ட விளக்கங்களை நீங்கள் தெளிவு செய்துகொண்டால், ‘என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?’ என்று கேட்பதற்கு இடமிருக்காது.

வாழ்க வளமுடன்
-

What happen if we give up the yoga in the life by problem or mindset?


வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?

பதில்:

இந்த உலகில் வாழும் எல்லோருக்குமே, அவரவர் நிலையில் பிரச்சனைகள் உண்டு. தனித்து வாழ்ந்தாலும், குடும்பமாக வாழ்ந்தாலும், சமூக அமைப்பில் இருந்தாலும் கூட இந்த பிரச்சனைகள், ஒவ்வொரு விதத்திலும் வந்துமோதும். அப்படியான உலகம் இது. பொருள்முதல்வாத உலகத்தில், நாமும் நம்மையறியாமல் சிக்கி திணறுகிறோம். நம் மூச்சு நிற்கும் வரை. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை எனினும், வாழ்கின்ற இந்த வாழ்க்கையிலேயே நல்லதை நோக்கி நகர்ந்து அல்லதை விடுவதற்கு வழிஉண்டு. தன்னளவில் பிரச்சனை இல்லாமலும், பிறருக்கு துன்பம் விளைவிக்காமலும் நாம் வாழ்வதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு வழியை உருவாக்கித்தருவதும், அதற்கு நம்மை தயார் செய்வதும்தான் யோகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இத்தகைய யோகத்தை உருவாக்கித்தந்த சித்தர்களின் நோக்கமும் இதுவேதான்.

மனம் இதனான மனிதன், தன்னளவில் குறுகி வாழ்ந்துவருகிறான் என்பதில் சந்தேகமில்லை. தான் தனது என்ற தன்முனைப்பில் வாழ்ந்து அதையே மற்றவர்களுக்கும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தன்னளவில் திருப்தியும், நிறைவும், அமைதியும் இன்றி தவிக்கிறான். தனிமனிதன் அமைதியில்தான் குடும்பமும், சமூகமும், உலகமும் அமைதியடையும் என்பதை மறவாதீர்கள். அப்படியான அமைதியை தந்து, அளவு முறையோடு உலகில் வாழவே யோகம் உதவுகிறது. வேதாத்திரியமும் அதையே வழங்கிவருகிறது.

உங்களுடைய வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால், மிகப்பெரும் இழப்பு என்பது உண்மைதான். ஆனால் அதை திருத்திட வழியே இல்லை என்ற தெளிந்த நிலையில், வேறுவழியே இல்லாமல் கைவிடுகிறேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதான். ‘அடடா, இப்படியெல்லாம் சொல்லலாமா? எப்படியாவது தொடரத்தான் வேண்டும் என்றல்லவா அறிவுரை கூற வேண்டும்’ என்று நினைக்கிறீர்களா? உண்மையை அறிந்தவர்களின் பார்வையிலும், அனுபவத்திலும் ‘பொய்யாக’ சொல்லமுடியாது. எது சரியோ? அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனவே வாழ்க்கைச்சூழல், மனமாற்றம், பிரச்சனைகள் தாக்கம்  இருந்தால் ‘கைவிட்டு விடுங்கள்’. அது குறித்து கவலை இல்லாமல், அந்த சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். எவ்வளவு காலத்தில் சரி செய்யமுடியுமோ, அதுவரை உங்களுக்கு ‘யோகம்’ வேண்டாம்.

வாழ்க்கை முழுவதுமே இனி தொடர்முடியாத சூழலா? சரி வேறு வழியில்லை என்றால் அதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். உங்களுக்காக, உங்கள் வழியில் வேறு யாரெனும், வாரீசாக, தலைமுறையில் உருவாகலாம். அவரின் முயற்சியில் உங்களுக்கும் விளக்கம் உருவாகும். அதுவரை அமைதியாக வாழ்க்கையை கடந்து செல்லவேண்டியதுதான். எந்த வருத்தமும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்
-

What would happen if my self-realization did not take place within my life?


வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


பதில்:

நல்ல புரிதல் உள்ள கேள்வியாக கருதுகிறேன். பொதுவாகவே எல்லோருக்கும் இந்த கேள்வி உண்டு எனினும், சிலர்தான் வாய்விட்டு கேட்பார்கள். அத்தகையவர்களுக்கும் இந்த பதில் உதவும் என்பது உண்மை. இந்த கேள்வி எழுந்துவிட்டால், அவர்களுக்கு ஒரு திசை மாற்றம் ஏற்பட்டுவிடும். அதாவது அவ நம்பிக்கை. ‘இனிமேலாவது தன்னையறிவதாவது’என்று கைவிட்டுவிடுவார்கள். மேலும் இதுவரை வாழ்ந்தவர்கள் எல்லோரும், தன்னையறிந்தா போய்ச்சேர்ந்தார்கள்? இல்லையே? என் குடும்பத்தில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்தவரையிலும், அறிந்தவரையிலும் யாருமில்லையே? அதனால் எனக்கென்ன அக்கறை வந்ததது? அவர்களைப்போலவே நாமும் போய்ச்சேர்வோம். என்ன குறை ஆகிவிடப்போகிறது? போகும் காலம் வந்தால் போய்த்தான் சேரவேண்டும், நிலைத்து நிற்கவா முடியும்? என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, வழக்கமான பக்தியிலேயே தன்னை கரைத்துக்கொள்வார்களே தவிர, யோகத்தின் பக்கம் வரமாட்டார்கள்.

உண்மையிலேயே யோகம் யாருக்கும் கட்டாயமில்லை, ஆனால் யோகம் தான் தனையறிதலுக்கான சிறந்த தீர்வு. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும்படி, பிறப்பு நீண்டுகொண்டே போகும். இங்கே பிறப்பு நீளும் என்றால் அவரே பிறந்துகொண்டே வருவார் என்று நினைத்துவிடக்கூடாது. அது அறியாமை. ஒருவர் உலகில், பிறந்து வாழ்வில் மறைந்துபோனாலும், அவரின் கர்மா என்ற வினைப்பதிவு, அவரின் குழந்தை, வாரிசுகள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் பிறவித்தொடர் ஆகும். அது அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு தலைமுறையில், யாரெனும் ஒருவர் யோகத்தின் வழியில் தீர்க்கும் வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அது இயற்கையின் வினை விளைவு நீதியும் ஆகும்!

ஆனால், யோகத்தின் உண்மை அறிந்து, தங்களை இணைத்துக்கொண்டு, குருவின் வழிகாட்டலோடு பயணிக்கும் ஒருவருக்கு காலத்தால், எத்தகைய கர்ம வினைப்பதிவு சுமையாக இருந்தாலும் கூட அது களைந்து, தூய்மைக்கு வழி பிறக்கும். இதற்கு தேவை, ஆர்வம், முயற்சி, பயிற்சி, செயலாக்கம், ஆராய்ச்சி என்பதுதான். எனவே, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழுமா? என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது? நீங்கள் யோகத்தில் உங்களை இணைத்துக்கொண்ட பிறகு.

யோகத்திற்கு வராமலேயே, முடியுமா? நிகழுமா? என்று கேட்பது நியாயமும் இல்லை. ஒருவேளை, யோகத்தில் இணைந்துகொண்ட பிறகும், தவம் தியானம் செய்துவரும் பொழுதும், வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுமானால். நீங்கள் யோகத்தில் பயணிப்பதால், உங்கள் முயற்சி, செயல், ஆராய்ச்சி என்ற அளவில் அதில் மாற்றம் நிச்சயமாக நிகழந்திருக்கும். எனவே இங்கே வருத்தமும், கவலையும் பெறவேண்டிய அவசியமில்லை. அந்த வழியில் இருக்கும் அடுத்தவற்றை, உங்கள் வழியில் வந்த, வரும் வாரீசுகள், தலைமுறைமுறையினர் தீர்த்துவைப்பார்கள் என்பது உறுதி, மாற்றுக்கருத்தும் இல்லை.

வாழ்க வளமுடன்.

-

Is it feasible being awaken without mind?


வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?

பதில்:

மனிதன் என்றாலே மனம்+இதன் = மனிதன் என்பதுதான் கருத்து. மனிதனையும், மனதையும் பிரித்துப்பார்த்திடவும் முடியாது. மனதை உணர்ந்த மனிதனும் இல்லை, மனதை துறந்த மனிதனும் இல்லை.  சில ஞான வகுப்பு நிகழ்த்துபவர்கள், மனதை தள்ளிவைத்து வாழ் என்று போதனை சொல்லுகிறார்கள். மனதை கண்டுகொள்ளாதே, அது உன்னை தடுக்கிறது, குழப்புகிறது, அதற்கு கவனம்  செலுத்தாதே, உன் மனதிற்கு மதிப்பளிக்காதே என்று பல்வாறாக அறிவுரைகள் தந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி வாழ்வதுதான் விடுதலை வாழ்க்கை, ஞானம் தேடுதல் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

மனிதனே மனமாக இருக்கும் பொழுதும், மனமே மனிதனாக இருக்கும் பொழுதும் இது பொருந்தக்கூடியதா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உங்களை உங்கள் மனதிலிருந்து பிரித்தால், தடுத்தால், விலகினால் என்னவாகும்? பிரிக்கவே முடியாத ஒன்றை பிரித்ததாக எண்ணி குழப்பம் தான் மிஞ்சி நிற்கும்.

மனமற்ற நிலை சாத்தியமில்லை. ஆனால் அது, அந்த மனமற்ற நிலை, உங்களுக்கும் எனக்கும் எவருக்கும் தினமும் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கிறது. எப்போது என்று தெரியுமா? நம்முடைய தூக்கத்தில் தான். தூக்கத்தில் மனமும் இல்லை, நாமும் இல்லை. அப்படியான தூக்கத்தில் கூட சிலருக்கு கனவுத்தொல்லையும் உண்டு. கனவில் கூட மனதை பிரிக்கமுடியவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறதா?

அப்படியானால் வேறு வழியே இல்லையா, மனமற்ற நிலை சாத்தியப்படுத்திட? 

இல்லைதான். ஆனால் மனதில் எண்ணங்களற்ற நிலை சாத்தியமானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல, ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ ஆம் அதுதான் சிறந்தவழி.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? இன்னொரு கேள்வி பதிலில் காணலாம்.
வாழ்க வளமுடன்.
-

Why do you have frequent disagreements, quarrels with your spouse?


வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான், வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை திருமணம் என்ற பந்தத்தின் வழியாக இல்லறத்தில் வாழ்ந்துவரும் எல்லோரும் அனுபத்திருப்பார்கள், அனுபவத்திக் கொண்டும் இருப்பார்கள். இப்போது காதல் வசப்பட்டு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உயர்ந்த வசனம் பேசுபவர்களும் பின்னாளில், கணவன் மனைவி என்று ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது, இப்போது நீங்கள் கேட்பதைப்போல யாரிடமாவது கேட்பார்கள்.

இந்த உலக உறவுகளிலேயே, மிக உயர்ந்தது, மதிப்புவாய்ந்தது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவுமுறை எது தெரியுமா? கணவன், மனைவி என்ற உறவுதான். மேலும், வாழ்நாள் முழுவதும் தொடர்க்கூடியதும் இந்த உறவுதான். நம் இந்திய வாழ்வியல் கலாச்சாரம், நீண்டநாள் தொடரும் இல்லற வாழ்க்கையை அமைத்திருக்கிறது. தனித்தனியாக பிறந்து வளரும் ஒரு ஆணும், பெண்ணும், உலகமும், நீதி அமைப்பும் ஏற்ற வயதில், திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவி என்ற ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்வை தொடங்குகின்றனர். அதன்வாழ்க்கை வழியாக, குழந்தைகளை வருங்கால சந்ததியாக பெற்றெடுத்து ஆளாக்குகின்றனர். ஆனால், பெருபாலான உலக நாடுகளில், ஒரே திருமண நிகழ்வும், ஒரே கணவன், ஒரே மனைவி என்ற நிலையும், மாறிக்கொண்டே இருக்கிறது. திருமணமும், திருமண முறிவும் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம் நீங்கள் இங்கே கேட்ட, அதே கருத்துவேறுபாடு, சண்டை, சச்சரவு தான். வேறுசில காரணங்களும் இதனுள்ளே அடங்கிவிடவும் கூடும்.

சரிங்க ஐயா, இதற்கு காரணம் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா?

இதோ, காதலிக்கும் பொழுது விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் தொடர்கிறது. அதுபோலவே, முன்பின் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பெரியவர்களின் ஆலோசனையில் திருமணம் வழியாக இல்லறத்தை ஆரம்பிக்கும் காலத்தில்  விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் சில காலம் தொடர்கிறது. காதலிப்பவர்களுக்கு திருமணத்திற்குப் பின்பும், திருமணமானவர்களுக்கு சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தும், இந்த கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் அடிக்கடி வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கணவன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான். அதுபோலவே மனைவி கணவன் மேல் அன்பும், பாசமும், அக்கறையும் தான்.

அமைதியாக, சிந்தித்துப் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கு புரியவரும். இதை எப்படி தீர்க்கலாம்? யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ? இருக்கிறது என்று கருதுகிறாரோ? அவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழக வேண்டும். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், தன் வாழ்வில் பெற்ற அனுபவமாக நமக்கும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.