CJ for You: sun

sun

Showing posts with label sun. Show all posts
Showing posts with label sun. Show all posts

Guide me with truth of Pancha Bootha Navagraha Thavam!


பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.

பதில்:

யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.

பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.

ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை,  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.

அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.

இந்த  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம்.  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி.  யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.

வாழ்க வளமுடன்
-

What is the truth of Tamil new year and will it help for meditation?


தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.

பதில்:
யோகசாதனையில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு நாளும் கிழமையும் திசையும் ஒரு கணக்குமல்ல, தடையுமல்ல. ஆனால் புதிதாக யோகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கும், சித்திரைத்திங்கள் எனும் தமிழ் புத்தாண்டு நாள் சிறப்பாக இருக்கும் எனலாம்.

ஒரு வகையில் சூரியன், தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு, தன்னொளியில் பிரகாசிக்கத் தொடங்கும் நாளாக, தமிழ் சித்திரை மாதம் ஒன்றாம் நாளை எடுத்துக்கொள்ளலாம். வானியல் அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் இது சரிதான். மேலும் சூரியனின் உச்சவீட்டாக இருக்கக்கூடிய மேஷ ராசிக்கட்டத்திற்கும் வருகிறது. இந்த மேஷ வீட்டில்தான் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆகிய நட்சத்திரங்களும் அதன் பாதங்களும் இருக்கின்றன. இதன்படி நாம் கவனிக்கும் பொழுது, அசுவினி என்ற நட்சத்திரத்தின் பாதையில், சூரியன் வரும் நாளே ‘சித்திரை மாதம்’ ஆகும். சூரியன் உச்சம் பெறுவது தனிப்பட்ட பாகையில் ஆகும்.

எனினும் சூரியனை, ஆத்மகாரகன், ஆத்மாவுக்கு உரியவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேபோல சந்திரனை மனோகாரகன், மனதிற்கு உரியவன் என்று சொல்லப்படுகிறது. சூரியன் எப்படி புத்துணர்வோடு, சித்திரை மாதத்தில் நுழைகிறதோ, அதே போன்றதொரு ஆத்ம புத்துணர்வு, நம் ஆன்மாவுக்கும் கிடைக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில்தான், தமிழ்புத்தாண்டு நாள், யோகத்திற்கும், தவத்திற்கும் உதவலாம். 

மேலும் இது கோடைக்காலம். நீங்களே பார்க்கலாம். பெரும்பாலான மரங்கள் கடந்த மாதங்களில், தன்னுடைய எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, பூரிப்பாக இளம்பச்சை இலைகளை தன்னுடைய கிளைகளில் படரச்செய்வதை காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதான பச்சைபசேல் என்ற மரங்களை இந்த கோடைகாலத்தில்தான் காணமுடியும். மாமரம் தன் பூக்களோடு மாங்கனிகளை தரும் காலமும் இதுதான். புளியமரம் தன் புளியங்கனிகளை தருவதும் இக்காலமே.

புதிதாக யோகத்தில் இணைவோடுக்கு இது சிறந்தகாலம் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஏற்கனவே யோகத்தில் பயணிப்போருக்கு, தங்களின் தவ ஆராய்ச்சிக்கு இக்காலம் உதவும் என்பது நிச்சயமே. நீங்கள் தன்னையறிதலில் உயர்வு பெற இறைநிலையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்
-

What is your notes about the Solar Eclipse, at America Sky, bottom of our earth?


நாம் இருக்கின்ற வானத்தில்மேல் கிரகணம் நிகழ்ந்தாலே கிண்டல் செய்வார்களே, அமெரிக்காவில் நடக்கும் கிரகணம் கண்டுகொள்ளப்படாது அல்லவா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, நாம் இருக்கின்ற வானத்தில்மேல் கிரகணம் நிகழ்ந்தாலே கிண்டல் செய்வார்களே, அமெரிக்காவில் நடக்கும் கிரகணம் கண்டுகொள்ளப்படாது அல்லவா?


பதில்:

அது எப்போதுமே பகுத்து அறியாத அறிவால் நடப்பதுதானே? அதைப்பற்றி நம் ஏன் கவலைப்பட வேண்டும்?. கிரகணம் எங்கு நிகழ்ந்தாலும் அது, நாம் வாழ்கின்ற பூமியில், சந்திரனால் தானே நிகழ்கிறது? வேறெரு கிரகத்திலும், அதன் துணைகோளாலும் இல்லையே? நாம் வாழும் பூமியில் எத்தகைய நிகழ்வு என்றாலும், அது அந்த பூமியில் இருக்கும் ஜடப்பொருள் முதற்கொண்டு, மனிதன் வரையிலான எல்லா ஜீவன்களுக்குமே சென்று சேரும் என்பது உறுதி. இதில் ஏதேனும் மாற்றுக்கருத்துண்டா?

கிரகணம் என்பது பொதுவானதுதான். சந்திரன் சூரியனை மறைத்தால் என்பதைவிட, சந்திரனின் நிழல் பூமியில் விழுந்தால் என்பதுதான் சரியானது, அது சூரிய கிரகணம். பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் நிகழும்.  மேலும் சூரியகிரகணம் பகலிலும், சந்திர கிரகணம் இரவிலும் நிகழும்.  இதன்வழியாக ஒரு காட்சி உங்களுக்குள் உருவாகி இருக்கும். மாதாமாதம் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இது நிகழ்வதில்லை. கிரகண வரைகோடு என்ற நிலையில், இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ராகு, கேது நிழல் கிரகத்தின் பாதையில், சூரியன், பூமி, சந்திரன் வந்து நின்றால்தான் கிரகணம். இல்லையேல் சாதாரண அமாவாசையும், பௌர்ணமியும் தான்.

Image source @spacetourismguide

மக்களின் அறியாமையில், பகலில் ஓர்சில நிமிடங்கள் சூரியன் மறைந்து, உலகம் இருட்டானதும், முழுநிலவு வராமல், வானம் இருண்டதும் கண்டு பயந்து, பற்பல கதைகளை கட்டினார்கள். ராகு கேது கிரகபாதைகளை பாம்பாக சொன்னார்கள். நீளமாக கருப்பாக இருப்பதெல்லாம் நம் மக்களுக்கு பாம்புதானே?! இந்த கதைகள் எல்லாமக்களிடமும் உண்டு. வானியல் வளர, இது சராசரி வானியல் அற்புதமாக மாறிவிட்டது. ஒன்றும் அதியசமில்லாததாகவும் இன்று நின்றுவிட்டது.

ஆனால், அன்றைய நாளில், பூமியில் உள்ள அசையும், அசையா எப்பொருளுக்கும், எல்லா ஜீவன்களுக்கும் உடலிலும், மனதிலும், உயிரிலும் எழும் மாறுதல்களை யார் அறிவார்? இதைத்தான் யாரும் பகுத்துப்பார்ப்பதில்லை. என்றாலும் யோகத்தில் இருக்கிற உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நாம் பார்க்கும் வானில் நிகழ்ந்தாலும், நமக்கு நேர்கீழே உள்ள அமெரிக்காவில் நிகழ்ந்தாலும், பாதிப்பு உண்டுதான். அதனால், மனமும் உடலும் உயிரும் பாதிக்காத செயலோ, நினைவுகளோ இல்லாமல் அமைதியாக இருக்கலாம். துரிய தவம், துரியாதீத தவம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து வாழ்த்தலாம். வயதில் பெரியோர்களை வாழ்த்தலாம், அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்து, அவர்களின் வாழ்த்தை பெறலாம். நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்து ஆராயலாம். உணவில் அளவைக்கொண்டு, சக்தி இழப்பை தடுக்கலாம். கடின, கவனமான வேலைகளை தவிர்த்து, விபத்தும் குறையும் ஏற்படாதவாறு காத்துக் கொள்ளலாம். அடுத்தவர்களை மனம், உடல் நோகாத தவறு செய்யாமல் தடுத்துக்கொண்டு உயர்வை பெறலாம்.

இதையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? கிரகணத்தின் மாறான அலை இயக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல், நன்மை அடையவிரும்புவோர் செய்யலாம். மற்றபடி கட்டாயம் ஏதுமில்லையே. பொதுவாகவே மனிதன் தன்னை உயர்வாக நினைத்து எல்லாவற்றையும் கைவிடுகிறான். அதுபோலவே தன்னையே தாழ்வாக அற்பமாக நினைத்து எதையுமே பயன்படுத்திக்கொள்ளாமல் தவறிவிடுகிறான். அதற்கு பகுத்து அறியும் அறிவு எனும் போர்வையையும் போர்த்திக் கொள்கிறான். நடக்கட்டும், காலம் அதன் வழியில் நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.

வாழ்க வளமுடன்


How Amavasya fast will benefit to us and which meditation is best for that day?


அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?

பதில்:
அமாவாசை, பௌர்ணமி என்பதும் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்து நிகழும் இயற்கையின் அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த புவியில், பஞ்சபூதங்களுக்கும், அதன் மலர்ச்சியில் உள்ள இயற்கைக்கும், பரிணாமத்தின் வழியாக மலர்ந்த ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் ஓர் உந்துதலையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அக்காலத்தில் இருந்தே இதை உணர்ந்தறிந்த முன்னோர்கள், மக்களின் வாழ்க்கை முறையை, அன்றைய நாளில் மட்டும் ஒழுங்குசெய்தார்கள். நிலவு, சூரியன், பூமி இவற்றின் அமைப்பில் மாறும் ஆற்றலை, நமக்கு சாதகமான வகையில் ஏற்று நன்மை பெற வழி வகுத்தார்கள்.

அமாவாசை என்றால், சூரியனும் நிலவும் இணைகிறது எனலாம். பௌர்ணமி என்றால் சூரியனும், நிலவும் தனித்தனியே எதிரெதிராக பிரிந்து நிற்கிறது எனலாம். இந்த இரண்டு நிலைகளிலும், சூரியன், நிலவு, நாம் வாழும் பூமி இவற்றின் காந்தக்களம் மாறுபாடு அடைகிறது. ஏனென்றால் ஓவ்வொரு கிரகத்திற்கும், தனித்தன்மையான காந்த அலைகள் உண்டு. அவை எப்போதும் பரவி வீசிக்கொண்டே இருக்கும். அமாவாசையில் சூரியனும், நிலவும் இணைவதால், அதன் காந்த அலைகள், புமியை நோக்கிய நிலையில் பலமாகின்றன. இதனால் ஒர் ஆகர்ஷணசக்தி ஏற்படுகிறது. இது மனிதர்களாகிய நம் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, ஜீரணமண்டலத்தையும் பாதிக்கிறது.

அதனால்தான் அமாவாசையில் விரதம் என்ற நிலைபாட்டை வைத்தார்கள். இந்த விரதம், குறிப்பிட்ட எளிய உணவுகளை குறைவாக சாப்பிடுவது என்றும், ஒரு நேரம் மட்டும் எதுவும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்றும் முன்னோர்கள் வழிசெய்தார்கள். இதில் அந்த ஆற்றலை வணங்குவதற்கு பக்தி வழியாகவும் பூஜை என்று வைத்தார்கள். இதனால் உடல், மன, உயிர் நலம் காக்கப்படும் என்பது உறுதி.

உணவு என்ற விரதம் மட்டுமல்ல, எந்த ஒரு புதிய செயல் தவிர்ப்பது, கடினமான வேலைகளை தவிர்ப்பது, ஆயுதங்களை கையாளாமல் இருப்பது என்று பல விரதங்கள் உண்டுதான். முக்கியமாக ஆண், பெண் உடலுறவையும் தடுக்கவே சொல்லுகிறார்கள். அதற்கான காரணங்கள் நிறைய உண்டு. அதை தனிப்பதிவாகவே தரலாம். ஆனால் இதை எல்லாம் மறுத்து, பொய், கட்டுக்கதை என்போர், வரக்கூடிய பிரச்சனையை அனுபவிக்க வேண்டியதுதான். அதுகுறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?!

அமாவாசையில் தவம் செய்வதாக இருந்தால், சாந்தி தவம் செய்யலாம். தவ ஆற்றலை உடலாற்றலாக மாற்றம் செய்யும் வகையில், உடல்நலம் காக்கப்படும். சக்தி இழப்பும் ஏற்படாது. மனமும் சிதறாத நிலைக்கு உதவும். வேறு தவங்கள் தேவையில்லை.
வாழ்க வளமுடன்
-

Why astrology prediction is available for Jupiter, Saturn and Rahu Ketu only?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குரு கிரக பெயர்ச்சி, சனி கிரக பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று மட்டுமே ஜோதிடர்கள் பலன் சொல்லுவது ஏன்?


பதில்:

ஜோதிடர்கள், உங்களுடைய ஜாதக கணிப்புப்படி எல்லா கிரக நிலைகளையும் ஆராய்ந்து, இப்போதுள்ள கோள் சார பெயர்ச்சி நிலைகளையும் கொண்டுதானே பலன் சொல்லுகிறார்கள். என்றாலும் பொதுவெளியில், ஜாதகம் கொண்டு சொல்லாமல் பொதுபலன் சொல்லும் பொழுது, ராசிகட்டங்கள் படி, குரு, சனி, ராகு, கேது கிரங்களின் பெயர்ச்சிகளை சொல்லுவார்கள். அப்படி இந்த நான்கு கிரங்களை மட்டும் மைப்படுத்திக் கொண்டு சொல்லுவதற்கும் சில காரணங்கள் உண்டுதான்.

ஏனென்றால், இவற்றின் நகர்வு கடந்து நீண்டகாலம் ஒரே வீட்டில் சஞ்சரிக்கும் தன்மை கொண்ட கிரகங்கள் ஆகும். உதாரணமாக சனி கிரகம், கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஒரு ராசி வீட்டில் தங்கிச்செல்லும். சில காலம், பின்னோக்கியும் நகர்ந்திடும். அதை வக்கிர நிலை என்று சொல்லுவார்கள். மேலும் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகமும் ஆகும். இதனால் எப்படிப் பார்த்தாலும் 3 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மூன்று ஆண்டுகள் ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பது ஆராய்ச்சிக்குறியதுதானே?! எனவே சனி கிரகம் பட்டியலில் இருக்கிறது.

குரு கிரகம் அளவிலும், நன்மையான சக்தி அளிப்பதிலும் பெரியது. கிட்டதட்ட 1 ஆண்டுக்காலம் ஒரு ராசியில் தங்கி செயல்படும். இக்கிரகத்திற்கும் வக்கிர நிலை உண்டு. அதனால் குருவும் பட்டியலில் இருக்கிறது.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி, அந்த ராசிக்குரிய கிரக பலன்களை தருவார்கள். இக்கிரங்களுக்கும் வக்கிர நிலை உண்டு. நம்மை வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களில், ராகு கேது கிரங்களே முக்கியமானவையாகும். இதனால் ராகுவும் கேதுவும் பட்டியலில் இருக்கிறது.

மற்றபடி சூரியன், செவ்வாய், சுக்கிரன் 1 மாதம் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த ராசிகளுக்கு போய்விடுகிறது. புதன் கொஞ்சம் சீக்கிரமாகவே ஒவ்வொரு ராசிவீடாக போய்வரும். சந்திரன் 2.5 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசிக்கட்டமாக நகர்ந்துவரும். இந்த சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவையும் ஒரு ஜாதகருக்கு பாதிப்பை தருகிறது என்றாலும் கூட காலம் சிறியதாக இருப்பதால், உடனடியாக அது கடந்தும் விடுமே? அதனால் பொதுவாக சொல்லும் பொழுது தவிர்த்துவிடுகிறார்கள். இதுதான் காரணம்! 

மேலும் இத்தகைய பெரிய கிரகங்களின் அருகாமையும், தூரமும் கூட நம்மை பாதிக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

Do all the planets rotate in a circle?



 
வானியல் நிகழ்வு!

அன்பர்களே, ஒரு வானியல் நிகழ்வு குறித்த உண்மையை நாம் தெரிந்து கொள்வோம். வேதாத்திரிய அன்பர்களாகிய நமக்கு இந்த உண்மை அககாட்சியாக பதிவாகும் என்பது உறுதி. சராசரி வானியல் ஆர்வமுள்ள அன்பர்களுக்கும் இந்த விளக்கக்கட்டுரை உதவும்.


சூரியக்குடும்பம்

நம்முடைய உலகியல் வாழ்வில் நமக்கு, பெற்றோரும், குழந்தைகளாக நாமும், நமக்கும் திருமணம் ஆகிவிட்டால், குழந்தைகள் பிறப்பதும், அவர்கள் நம் பெற்றோருக்கு பேரப்பிள்ளைகள் ஆகிவிடுவதும் ஒரு குடும்ப அமைப்பு. அதுபோலவே இந்த சூரியன், தாத்தாகவோ, கொள்ளுத்தாத்தாவாகவோ இருக்க. அதன் காந்த ஈர்ப்பு அலைகளுக்குள் சிக்கிய கோள்கள், சூரியனை மையமாகக் கொண்டு, தனக்குத்தானே சுற்றிக் கொண்டும், சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். இந்த கிரகங்க கூட்டங்கள் சூரியன் தலைமையில், சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுவதையும் நாம் அறிவோம்.


காந்த அலையின் தூரம்?!

எவ்வளவு தூரம் இந்த சூரியனின் காந்த அலை வீச்சு உள்ளது என்று ஆராய்ந்தால், சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தைப் போல் 30 மடங்கு தூரத்தில் இருக்கும் நெப்டியூன் வரை உள்ளது என்கிறார்கள். அதற்கு அடுத்து கோள்கள் இல்லை அதனால், அந்த வீச்சு அளவு சரியானது தானா? என்பதற்கும் விளக்கமில்லை. எனவே இந்த காந்த அலைவீச்சுக்கு உட்பட்ட எந்த கோளும் சூரியனைத்தான் மையமாக்கொண்டு சுழன்றாக வேண்டும் என்பது அதன் தலையெழுத்து! (கிரகத்துக்கே தலையெழுத்தோ?)


கடைசிக்கோள் புளூட்டோ?!

ஐயா, அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நாங்கள், சர்வதேச வானியல் ஒன்றியம்(?!) (IAU)புளூட்டோவை ஆராய்ந்து ‘குள்ளக்கிரகம்’ என்று சொல்லி தகுதி நீக்கம் செய்துவிட்டோம். எனவே கடைசிக் கோள் புளூட்டோ அல்ல என்கிறார்கள்.


வட்டமும் நீள்வட்டமும்

சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை நாம் அறிவதில்லை. விஞ்ஞானிகள், சூரியனின் மேல் ஏற்படும் கரும்புள்ளிகளைக் கொண்டும், அதன் நெருப்பு அலைகளைக் கொண்டும் கண்டு கொண்டார்கள். சூரியனை மையமாகக் கொண்டு, புதன், சுக்கிரன், நாம் வாழும் புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த சுற்று வட்டமாக சுற்றுகிறது என்றுதான் பெரும்பாலோனோர் கருதுகிறார்கள். அதைத்தான் நம்புகிறார்கள். கொஞ்சம் விஞ்ஞானம் அறிந்தோர், அது வட்டம் இல்லைய்யா, நீள் வட்டமாக சுற்றி வருகிறது என்பார்கள். 

விஞ்ஞானிகள் இதையும் மறுக்கிறார்கள். நீள்வட்டம்தான் ஆனால் ஒரே மாதிரியான நீள் வட்டமல்ல. அது சாய்ந்து சாய்ந்து நிகழும் என்கிறார்கள். இதை இன்னொரு விதமாக சொன்னால், நாம் சமையலறையில் ஆப்பம் ஊற்றினால், மாவு ஊற்றிய கையோடு, ஆப்பச்சட்டியை கையால் எடுத்து, அப்படியும் இப்படியும் சுழற்றி விடுவோம் அல்லவா? அதுபோல இந்த கோள்கள் / கிரகங்கள் சூரியனை சுற்றிவருகின்றன என்று விளக்கம் அளிக்கிறார்கள் வானியல் விஞ்ஞானிகள்.

உண்மையை சொல்லப்போனால், அவர்கள் சொன்னதை அவர்களே மறுத்து மறுத்து, புதிதுபுதிதாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.




உயரும் சுழல்படிக்கட்டு!

Spiral என்ற உயரும் சுழல் என்ற வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு வீட்டில் மாடிப்படி நீண்டு வைக்க இடமில்லை என்றால். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டமாகவே படிகள் அமைத்து, அப்படியே அந்த படிகளை மேலே உயர்த்திக்கொண்டே போவதுதான் ‘Spiral என்ற உயரும் சுழல்படிக்கட்டு’ ஆகும். அதுபோன்றே இந்த கோள்கள் / கிரகங்கள் சுழன்றுகொண்டே, சூரியனை பின் தொடர்கின்றன என்றால் மிகையில்லை.



இந்த உண்மையை ஆராய்ந்த வானியல் விஞ்ஞானிகள், அதை ஒரு காட்சி வடிவமாக உருவாக்கி நமக்கு அறியத்தருகிறார்கள். இதோ நீங்களும் கண்டு இந்த வானியல் உண்மை விளக்கம் அறிந்து கொள்ளுங்கள்.

காணொளி



-

Thanks to images and vides, copyrighted to original owner, here we used educational purpose only!

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Is the whole universe in astrology chart? Part 2


முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?

இரண்டாம் பகுதி

copyright to www.istockphoto.com



copyright to it's owner


copyright to www.tamilsonline.com




அன்பர்களே,

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PVN7GWG

-

Present by
Sugumarje

Is Zodiac Horoscope Dosha Remedies Working?


ஜெனன ஜாதக தோஷ பரிகாரம் வேலை செய்கிறதா?


தோஷம் என்றால் என்ன?

ஒரு ஜெனன ஜாதகத்தில் இருக்ககூடிய நல்லன, நிறைகள் எல்லாம் யோகம் என்ற அழைக்கப்படும் வேளையில், அதில் இருக்கக்கூடிய தவறுகள், குறைகள் தோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த தோஷம் என்பதிலும், ஒரு ஜாதகனின் பலமும் வெளிப்படும். அதாவது இக்குறை உள்ளவரோடு, குறை உள்ளவரை சேர்த்தால் பலன் உண்டாகும். உதாரணமாக, செவ்வாய் தோஷம் இருக்கிற ஆணுக்கு, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணே பொருத்தமாவாள். இரண்டு குறைகள் சேரும்பொழுது அவை நிறைகளாக மாறுகிறது அல்லது குறைகள் சமம் ஆக்கப்படுகின்றன.


தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்

பெருமளவில் இந்த வகையில், ஒரு ஜாதகருக்கு அனுபவம் கிடைத்திருக்கும். முக்கியமாக திருமணம் செய்வதற்கு, “தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்” என்ற வகையில், ஏதேனும் ஜோசியரிடம் ஆலோசனை கேட்டிருப்பார்கள். அவர்கள் சொன்னபடி குறிப்பிட்ட வகையில் அதை நிறைவேற்றி இருப்பார்கள். ஜாதகருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, பெற்றோரின் தொல்லை தாங்காமல் செய்திருப்பார்கள். உண்மைதானே?

இந்த தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆராய்வோம்.


தோஷங்கள்

1) ராகு, கேது சர்ப்ப தோஷம்

திருமண தடையும், வாழ்க்கை முன்னேற்ற தடையும், பூர்வ புண்ணிய தடையும், குழந்தைபாக்கிய தடையும் உண்டாக்கும் என்று சொல்லுவார்கள்

2) செவ்வாய் தோஷம்

ஆண், பெண் திருமண பொருத்தத்தில் இந்த தோஷத்திற்கு முக்கிய இடம் உண்டு

3) மாங்கல்ய தோஷம்

பெண்ணின் ஜாதகத்தின் வழியாக, கணவனின் ஆயுள் நிர்ணயம் செய்யும் தோஷம் என்பார்கள்

4) களத்திர தோஷம்

கணவனாக வருபவன், மனைவியாக வருபவள் குணங்களில் இருக்கும், அல்லது ஏற்பட போகும் மாற்றத்தை குறிப்பிடும் தோஷம் என்று சொல்லுவார்கள்.

5) புத்திரதோஷம்

குழந்தை பிறக்காத அல்லது பிறந்த குழந்தை குறித்த தோஷங்களை குறிக்கிறது என்பார்கள்.

6) சூரிய தோஷம்

உயிர், வாழ்க்கை, வளர்ச்சி, தொழில், அரசாங்க துணை ஆகியன குறித்த தோஷங்களை குறிக்கும் என்பார்கள். 

7) புனர்பூ தோஷம்

சந்திரன் சனி ஆகிய கிரங்களின் கூட்டினால் உண்டாகும் தோஷம் ஆகும்.

8) விஷ கன்யா தோஷம்

பெண்களின் ஜெனன ஜாதகத்தில் இருக்கும் இத்தோஷம் கணவனுக்கு  பிரச்சனைகளை உண்டாக்கும் என்று சொல்லுகிறார்கள்

9) பாபகத்ரி நீச்ச தோஷம்

ஒரு ராசி கட்டத்தின் முன்பும், அடுத்தும் அமைதிருக்கின்ற சுபர் அல்லது பாவர் கிரங்களைக் கொண்டு இந்த தோஷம் அமைவதாக சொல்லுகின்றனர். 

10) பாலரிஷ்ட தோஷம்

ஒரு குழந்தை இறந்தே பிறப்பது அல்லது 14 வயதிற்குள் இறப்பது இத்தகைய தோஷமாகும். 

இவை போக வேறு சில தோஷங்களும் இருக்கலாம், ஆனால் இந்த பதிவைப்பொறுத்தவரை இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.


பொதுவான நிவர்த்தி அல்லது பரிகாரம் என்ன?

எந்த ஒரு ஜெனன ஜாதகத்தை ஒரு சோதிடரிடம் கேட்டு, தோஷம் தொடர்பாக ஆலோசித்தால், இன்ன இன்ன தோஷம் இருக்கிறது, இதனால் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவார்.  வியாபார ரீதியிலான ஜோதிடர் என்றால் “யாகம் செய்யலாம்” என்றும் அதற்கு இவ்வளவு செலவு ஆகும் என்றும் பட்டியல் போட்டுத் தருவார்கள். 

சில ஜோதிடர்கள், இந்த பரிகாரத்திற்கு இந்த கோவிலுக்கு போய்வாருங்கள், பால் அபிஷேகம் செய்யுங்கள், இந்த கடலில், ஆற்றில் பிண்டம் வைத்து வழிபடுங்கள், அன்னதானம், ஆடைகள் தானம் செய்யுங்கள்,  ஏழைக் குழந்தைக்கு, உடல் ஊனமுற்ற, பார்வையற்ற சிறப்பு நபர்களுக்கு உதவுங்கள் என்றெல்லாம் சொல்லி விடுவார்கள்.

இன்னும் சில சோதிடர்கள், உங்கள் ஊரிலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள், நவ கிரகங்களுக்கு நீர் ஊற்றுங்கள் என்று எளிய வகையில் சொல்லிவிடுவார்கள்.


தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்தபிறகு?!

சோதிடர்கள் சொன்ன பரிகாரம் செய்த பிறகு என்ன நடந்துவிடும்? அந்த ஜாதகருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் மனதிருப்தி கிடைக்கும்.  இவர் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்துவிட்டார் என்று கிரகங்கள் திருப்தி கொண்டு இடம் மாறி அமர்ந்து விடுவதில்லை. தன் தாக்கத்தை குறைத்துக் கொள்வது இல்லை. உடனே நல்லது செய்துவிடுவதும் இல்லை. அல்லது அந்ததந்த கிரகங்களுக்கு அதிபதியாக சொல்லப்படும், கோவிலில் இருக்கும் இறைவன்கள் அருளைப்பொழிந்து விடுவதில்லை. நீங்கள் பிண்டம் வைத்துவிட்டீட்கள் என்பதற்காக, மூதாதையர்களும் பாசத்தால் பொங்கிவழிந்து உதவி செய்து விடுவதில்லை. 

எது இருந்ததோ அது அப்படியேதான் இருந்தது! 

அப்படியானால் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் என்பது பொய்யா?

உங்கள் மனம் ஏற்படுத்தும் மாயம், இந்த நிவர்த்தி, பரிகாரத்தால் “இனி நல்லது நடக்கும்” என்று நம்புகிறது. உங்கள் குடும்பத்தாரும் நம்புகிறார்கள், நீங்கள் இதைச்செய்யும் பொழுது, அதை பார்க்கும் “மற்றவர்களும்” நம்புகிறார்கள். அவ்வளவுதான்.


வேறு வழி என்ன? அல்லது உண்மை என்ன?

செவ்வாய் தோஷம் என்பது எந்த நிலையும், மாறாது, குறைவுபடாது. எனவே அந்த வரனுக்கு, செவ்வாய் தோஷம் இருக்கும் வரனை இணைப்பதுதான் அதற்கான பரிகாரமும், நிவர்த்தியும்.  இதைத்தவிர விளக்கு போடுவதாலும், நீர் ஊற்றுவதாலும், குறிப்பிட்ட ஸ்தல கோவில்களுக்கு போவதாலும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. செவ்வாய் தோஷத்திற்கும் திருமண தடைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. காலத்தால் காத்திருந்தால் தகுந்த வரன் அமையும். உங்கள் ஆர்வத்திற்கும், விருப்பத்திற்கும் வரன் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?! வாழ்க்கை என்ன பாஸ்ட் புட்டா?

கால சர்ப தோஷம் என்பது அமைந்திருக்கிறது. அமைந்துவிட்டது. ராகு கேது வுக்கு பால் அபிஷேகம் செய்துவைத்தால் குளிர்ந்து நகர்ந்து விடுவார்களா? இல்லை. அப்படி தோஷம் அமைந்ததற்கு தகுந்த காரணங்கள் இருந்திருக்கின்றன. அது காலத்தால் தானாக சரிசெய்யப்படும். காத்திருங்கள். 

என்னய்யா இவர், காத்திருங்கள், காத்திருங்கள் என்கிறாரே?! எனக்கு வயதாகிறதே? பொண்ணுக்கு வயதாகி காத்திருக்கிறாளே, இதற்கு மேல் காத்திருந்தால் கிழவி ஆகிவிடுவாளே என்றெல்லாம் நினைப்பீர்கள். இத்தகைய தோஷம் உள்ள ஒரு வரனுக்கு தகுந்த வரன் நிச்சயமாக கிடைக்கும். அந்த தகுந்த காலத்தை பெற காத்திருப்பதைத் தவிர வேறுவழி இல்லையே!


இயற்கையின் விதி

ஒரு குழந்தையின் ஜெனனம் என்ன சொல்லுகிறது? ஜாதகம் எழுதி பலன் பார்ப்பது பிறகு வைத்துக்கொள்ளலாம். பொதுவான பிறப்பு தரும் கேள்விகள் என்ன? பார்க்கலாமா!, இக்குழந்தை பெற்றோருக்கு உயர்வைத் தருமா? நல்ல கல்வி கற்குமா? நல்ல வேலைக்கு போகுமா? நிறைய சம்பாதிக்குமா? நல்ல நிலையில் திருமணம் செய்யுமா? அதற்குப்பிறகு குழந்தை பிறக்குமா? இவைதானே உங்கள் கேள்விகள்?

இந்த தோஷங்கள் ஒரு ஜாதகத்தில் அமைவதன் காரணம் என்ன? இந்த இயற்கைக்கு உங்கள் கேள்விகள் மேல் அக்கறை இல்லை. உண்மையாகவே அக்குழந்தை பிறந்தது, பெற்றோரின், அவர்களின் பெற்றோரின், அவர்களின் பெற்றோரின் (இன்னும்...) என்றவகையில் வரும் பூர்வ புண்ணியத்தால் நிகழ்வதாகும். அவைகளை கர்மா என்றும் வினைப்பதிவுகள் என்றும் சொல்லலாம். அந்த பூர்வ புண்ணித்தில் விட்ட குறை, நிறைகளை சரிசெய்யவே பிறந்திருக்கிறது. அந்த செயலில் முழுமையடையவில்லை என்றால் மட்டுமே, திருமணமும், அதன் பிறகான குழந்தையும் அமையும் என்பதுதான் இயற்கையின் விதி. 

அதென்ன இயற்கை விதி?! என்றால், நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கும் , செய்கின்ற செயலுக்கும் ஏற்ப பலன்கள் உடனேயும் கிடைக்கும், தாமதமாகவும் கிடைக்கும். ஒருமையில் கற்ற கல்வி ஏழுமையும் உய்க்கும் என்றால், கர்மா மட்டும் உடனே கழிந்துவிடுமா? பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவர் இறந்த பிறகு, செய்யும் கர்ம சடங்குகளில் எல்லாமே கழிந்துவிடுகிறது என்பதாக. ஆனால் இறந்தவரின் கர்மா அவரின் குழந்தைகளை சார்ந்துவிடுகிறது என்பதுதான் நிஜம். ஐயா, அவருக்கு குழந்தைகள் இல்லையே என்கிறீர்களா? இறந்தவருக்கு பிரியமானவரிடம் போய்ச்சேர்ந்துவிடும். எந்த கர்மாவும் தனித்து நிற்பதில்லை. வாழையடி வாழையாக அடுத்து அடுத்து வந்து சேர்ந்துகொண்டே இருக்கும், அவ்வப்பொழுது கழிந்துகொண்டே இருக்கும்.

இந்த இயற்கையின் வினை விளை நீதி என்பதை அறிந்துகொண்டால், அதற்கேற்றபடி நம் எண்ணங்களை, செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் இதையேதான் மையப்படுத்துகிறார். 


பதற்றம் வேண்டாம்

ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் இருக்கட்டும் பதற்றப்படாமல், ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஓவ்வொரு நல்ல ஜோதிடராக பார்த்து, ஆலோசனை கேட்டு, ஊர் ஊராக, கோவில் கோவிலாக சுற்றாமல், விளக்கு ஏற்று, குடம் குடமாக நீர் ஊற்று என்று அந்தப்பெண்ணை பாடாய்படுத்தாமல் அமைதியாக இருங்கள்.

அவனோ, அவளோ அமைதியாக இருக்கட்டும், திருமணம் அது இது என்று தொல்லை செய்யாதிருங்கள். பிடித்த படிப்பை படிக்கட்டும், பிடித்த வேலையை பார்க்கட்டும், அவர்களை சுமையாக நீங்கள் கருதாது இருங்கள். அவர்களாகவே காதல் வயப்பட்டால் கூட, அந்தபையன், அந்தப்பெண் எப்படி வாழ்க்கை நடத்துவார் என்றும், எதிர்காலத்தில் எப்படி வாழ்வார்கள் என்றும், எந்த பிரச்சனையும் எழாதவகையில் ஆலோசித்து சரி என்றால் சம்மதம் சொல்லிவிடுங்கள். தடுக்காதீர்கள். ஒரு ஜாதகர் கண்டிப்பாக அந்த ஜாதகத்தின் வழியில் இயல்பாக பொருந்திப்போக வாய்ப்பு அதிகம். திருமணம் வேண்டாம் என்கிறாரா? விட்டுவிடுங்கள், அவர்களை வற்புறுத்தாதீர்கள். தனித்து வாழ பழகிக்கொள்ளட்டும்.  திருமணம் செய்தவர்கள் சொர்கத்திற்கு போவதில்லை, தனித்து வாழ்வபர்கள் நரகத்திற்கு போவதில்லை.  குழந்தை பெற்றவர்களுக்கு மட்டும் மோட்சம் கிடைப்பதில்லை, குழந்தை பெறாதவர்கள் முக்தி அடையாமலும் இல்லை. 


எனவே தோஷ நிவர்த்தி அல்லது பரிகாரம் உண்டா?

இருக்கிறது என்றால் அது பொய் அல்லது உங்களை திருப்தி செய்யும் ஒரு வார்த்தையே! இன்னொன்றும் உண்டு, அது வணிகம்!! 


ஒப்படையுங்கள்

இந்த ஜெனன ஜாதக தோஷம் என்பதிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி அல்லது பரிகாரம் வேண்டும் என்றால் ஒரே வழி, உங்களை இறையிடம் ஒப்படையுங்கள் மனதளவில். கோவிலும் வேண்டாம், குளமும் நதியும், கடலும் வேண்டாம். 

ஓவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் வானம் நோக்கி வணங்குங்கள். என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று மனதார சொல்லுங்கள். 


நவக்கிரக தவம்

நவ கோள்களை மனதார வணங்கி பழகுங்கள். (கோவில்தான் கரோனா நோய்தொற்று காலத்தால் பூட்டு போடப்பட்டிருக்கிறதே?) இருக்கும் இடத்திலிருந்தே பரிகாரத்தையும், நிவர்த்தியையும் செய்யலாம் எந்த செலவும் இல்லாமல். உங்களுக்கு கோளறு திருப்பதிகம் தெரியுமா? சொல்லுங்கள். பதிகம் பாடினால் சரியாகுமா? பாடினால் சரி ஆகாதுதான். ஆனால் அந்த நேரத்தில் அந்த நவ கோள்களை நினைத்து, மனதோடு  இணைந்திருக்கிறீர்களே! அதுதான் உண்மைக்காரணம். சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லலாமா? தாராளமாக சொல்லலாம். 

வீட்டில் தவம் செய்ய பழகுங்கள். நவக்கிரக தவம் என்று ஒன்றுண்டு. இதை  “மனவளக்கலை” மையத்தில் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். அல்லது அந்த இணையதளத்தில் ஜூம், யூடூயுப் மூலமாக நடந்தால் கலந்து கொள்ளுங்கள். நவக்கிரக தவத்திலும், மனம்ஒன்றிபோகும், அதைத்தான் அமைதியாக செய்கிறீர்கள். 

நவ கோள்களின் தோஷம் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைக்கு கொடுக்கப்பட்ட கசப்பு மருந்து. ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன். 

---------------

Present by:





Photos Thanks to: Google and copyright their owners.

Non-Miracle Eclipse Event


 அதிசயமல்லாத நிகழ்வு


நேற்றைய நாள்

நேற்று அமாவாசை (புதுநிலவு நாள்) மற்றும் சூரிய கிரகணம் (வளைய கிரகணம்) நாளுமாக அமைந்தது. அதாவது முழுமையாக சூரியனை மறைக்காது, அதன் உள்ளடக்க அளவிற்கு நிலவு மறைப்பது, வளைய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் நம் இந்திய பகுதியில், அருணாச்சலம் மாநில பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் என்றனர். காரணம், இதன் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் நிலப்பரப்பு ஆகும்.  பூமியின் வடகோள் பகுதி நாடுகளான ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளில் முழுமையாக காணக் கிடைத்தது. இது குறித்த செய்தி, காணொளி தேடுகையில், வேறுபல செய்திகளை நான் கண்டறிந்தேன். 


நிகழ்வது என்ன?

Image subject to the copyrights 


ஒரு புதுநிலவு நாள் (அமாவாசை) , முழு நிலவு (பௌர்ணமி) நாள் என்பது ஒவ்வொரு மாதத்தில் நிகழ்வதுதான். கிரகணங்கள் மட்டுமே குறிப்பிட்ட அந்த கால கட்டங்களில் நடைபெறுகிறது. பூமியும்  சந்திரனும் சூரியனும் சந்திக்கின்ற புள்ளிகள் தான் ராகு, கேது என்று அமைகின்றன. அந்த இடத்தில் மிகச்சரியாக, முழு நிலவு நாளில் சந்திரகிரகணமும், புதுநிலவு நாளில் சூரிய கிரகணமும் நடைபெறும். 

Image subject to the copyrights 

சூரியன், பூமியிலிருந்து கிட்டதட்ட 9 கோடி மைல் தூரத்தில் இருக்கிறது. நிலவு பூமியிலிருந்து 2 இலட்சத்து 86 ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கிறது. அளவுகளில் சந்திரனே மிகச்சிறியது. அதை விட மிகப்பெரிது பூமி, பூமியை விட மிக மிகபெரியது சூரியன். ஆனால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது “இயற்கையின் அதிசயமாக” நிலவு அளவிற்கு சூரியனும் அல்லது சூரியன் அளவிற்கு நிலவும் இருப்பதை (மாய அளவுகளில்) காணலாம். இதனால் நிலவு தன் பாதையில் சூரியனை மறைப்பதும் (சூரிய கிரகணம்), பூமி தன் ஓட்டத்தில், நிலவுக்கான சூரிய ஒளியை மறைப்பதும் (சந்திர கிரகணம்) முழுமையாக நிகழ்கிறது. 


ராகு, கேது நிலை

இந்த ராகு, கேது இரண்டையும், ஜோதிட நூலார்கள் கிரகங்களாக எடுத்துக் கொண்டார்கள்.  உண்மையில் இவை காணக் கிடைக்காத நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும். வேதாத்திரியத்தின் அடைப்படையில் இவை இரண்டும், சூரியனில் இருந்து வெளிவரும் சுத்தவெளியாகும். சூரியனில் எப்போதும் அணுச்சிதைவு ஏற்படுக்கொண்டே இருப்பதை நாம் அறிவியல் ரீதியாகவும் அறிவோம். அந்த சிதைவின் காரணத்தால், மையத்தில் ஏற்படும் அழுத்தம் வெளியாகி, தன்னிடத்தில் தாங்காது பீறிட்டு, சூரியனிலிருந்து வெளிக்கிளம்புகிறது. சில அணுவியல் வல்லுனர்கள் இதை “கரும்புள்ளி” (Block Spots) என்றும் சொல்லுகிறார்கள். 

இத்தகைய சுத்தவெளிப்பாதை சூரியனின் இரண்டுபக்கங்களிலும் பாய்ந்து, சூரியமண்டலத்தை கடந்தும் செல்கிறது. இந்த ஒரு பக்கத்தைத்தான் ராகு என்றும், மறு பக்கத்தை கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். இரண்டும் எதிர் எதிராக 180 கோணத்தில் அமையும்.

சந்திரனில் இருந்து வரும் ஒரு கோடு அதில் எதிரும் புதிருமாக 180 கோணத்தில் புள்ளிகள் என்றும் ஜோதிட வல்லுனர்கள் சொல்லுவதுண்டு, ஆனால் வேதாத்திரியத்தில் சூரியனில் இருந்து கரும்புள்ளிகள் வழியாக பீறிட்டு கிளம்பும் வெளி என்பதுதான் உண்மை. 

இந்த படங்கள் உங்களுக்கு ஒரு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன்.

Copyrights to caricaturist-journal.blogspot.com

இவை எல்லாமே உண்மை என்பதால், இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் மற்றும் கோள்கள் இவற்றால் எழும் பாதிப்புக்களும் உண்மைதானா? இதன் அடிப்படையில் சோதிடமும் உண்மைதானா? என்ற கேள்விகள் எழும் தானே? இக்கேள்விக்கான விரிவான பதிலை அடுத்த பதிவில் காணலாம். 


உண்மை என்ன?

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் கூட்டு. இத்தகைய அணுக்களின் கூட்டு என்பது அணுவியல் அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் வேதாத்திரியத்தில் அணுவையும் கடந்து, விண்களின் கூட்டு என்றும், அதனினும் கடந்த பரமாணுக்களின் கூட்டு என்பதாக அமையும். இவை சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தால் சுழன்றுகொண்டே இருப்பதால், வான்காந்தம் உருவாகி அவை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.

இந்த வான்காந்தத்தில் எந்தெந்த பொருட்களில் இருந்து உருவானதோ அதன் தன்மைகளை கொண்டிருக்கும். எந்த கிரகம் எந்த தன்மையை பெற்றிருக்கிறதோ அத்தகைய தன்மையை, இந்த வான்காந்தமும் பெற்றிருக்கும் என்கிற உண்மையும் தெளிவாகிறது. 

நமது உடலும் இந்த பரமாணுக்களின் கூட்டுதானே? அந்த வகையில் நமக்குள் ஏற்படுகின்ற வான் காந்தத்திற்கும், பிரபஞ்சத்தில் உருவாகும் ஜீவ காந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வலிமை, அளவில் பெரிது என்ற அளவுகளும் இல்லை. ஆனால் ஒன்றோடு ஒன்று கலக்கும் பொழுது, அந்ததந்த அளவிலான மாற்றத்தை தருகிறது. இத்தகைய மாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்வதாகவோ, ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அமையும். ஆகவே ஏற்றுக்கொண்டால் நன்மை, ஏற்றுக்கொள்ள முடியாதபோது தீமை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.


முக்கிய தன்மைகள்

வெளி என்பதற்கு சூழ்ந்தழுத்தும் ஆற்றலும், வான்காந்தம் மற்றும் ஜீவகாந்தத்திற்கு சூழ்ந்தழுத்த ஆற்றலும் விலக்கும் ஆற்றலும் சம அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


ஓதங்கள்

Image subject to the copyrights 


இந்த தன்மைகளின் அடிப்படையில், சூரியனும், நிலவும் தனக்குறிய வான்காந்த அலைகளை கொண்டிருக்கின்றன. நிலவு சூரியனின் முன் நேராக வந்து நிற்கையில், தன்னியல்பாக பூமியில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் கடல் தன் இயல்பில் இருந்து எழும்புகிறது, இதுவே ஓதம் எனப்படும். இப்படி ஓதம் ஒருபக்கம் உயர்கையில் இன்னொருபக்கம், ஓதம் தாழ்ந்து போகவும் செய்யும். 


உதாரணமாக,  உயர்ந்த ஓதமும் தரும், தாழ்ந்த ஓதமும் தரும். படம் காண்க.





 நன்றி: www.elitereaders.com


புரிதல் என்ன?

நாம் வாழும் பூமியே கொஞ்சம் பாதிக்கப்படுமென்றால், அதில் வாழும் உயிரினமான மனிதனும் பாதிக்கப்படுவான் தானே?. மனிதனின் உடலும் 70% நீரால் ஆனதுதானே! உடலுக்குள்ளாக ஓடுகின்ற இரத்தமும் நீரின் ஒரு நிலையே.  அதனால் மனித உடல் பாதிக்கப்படலாம். அதோடு நிலவின் வான்காந்த அலைகள், மனித மன அலைகளோடு அல்லது ஜீவகாந்த அலைகளோடு நெருக்கமான தொடர்புடையது. இதனால் மனிதனின் மன நிலையும் தடுமாறலாம். இன்னமும் கூட சில நுண்ணிய தொழிற்கருவி பயன்படுத்தும் வல்லுனர்கள், மனம் ஒன்றி வேலைசெய்யும் தொழிலாளார்கள் இத்தகைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதை காணலாம். 


கூடுதலான விளக்கமாக

மனிதனின் உடலும், மனமும் பாதிக்கப்படுவதால்...

1) உடல் உறுப்பு இயக்கங்களில் சிறு மாற்றம் உண்டாகலாம்.

2) உணவு செரித்தல் தடை, தாமதம் உண்டாகலாம்

3) எண்ணம் சிதறலாம், முடிவுகளில் குழப்பம் வரலாம்

4) கருவிகளால் தன்னையோ, பிறரையோ காயப்படுத்துவது நடக்கலாம்

5) இந்த நாளில் உடல் உறவில் திளைத்தால், புத்தி சுவாதீனமற்ற குழந்தை உண்டாகலாம் அல்லது கரு பாதிப்பு உண்டாகலாம்

6) நோய்க்கான மருந்து பயன்படாமல் போகலாம்

7) ஏற்கனவே மனநோய் கொண்டோர் நிலைகொள்ளாமல் தவிக்கலாம்

8) நோயாளிகளுக்கு நோய்தன்மை உயரலாம்

9) உயிர் போகாது இழுத்துக்கொண்டிருந்த முதியோர் இறக்க நேரிடலாம்

10) குண்டலினி யோகத்தில் ஆர்வமுள்ளோர்க்கு தீட்சை பலனளிக்கும்

11) ஏற்கனவே தீட்சை பெற்றுக்கொண்டோர் தவம் சிறக்கும்

12) விழிப்புணர்வோடு இருப்போர்க்கு சிந்தனை சிறக்கும்.


உண்மைபோல புரட்டு

மேற்கண்ட 12 குறிப்புக்களோடு சில பல நிகழலாமே தவிர, வேறெந்த பாதிப்பும் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், பொதுவாகவே எல்லோரும், மக்களை பயமுறுத்தி, “கடவுள்” பயம் காட்டி, ஏதோ உலகமே ஒரு கெட்ட சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதான “உண்மைபோல புரட்டு” பகிரப்படுகிறது. வீட்டிற்கு, நாட்டிற்கு, உலகுக்கு ஆபத்து என்றெல்லாம் அள்ளித்தெளிக்கிறார்கள். அப்பதிவுகளையும் பல்லாயிரம்பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இன்னும் மேலே “இந்த மந்திரம் சொல்லுங்கள், இந்த பதிகம் பாடுங்கள், இந்த பக்திபாடலை பாடுங்கள்” என்று மொத்தமாக மடை மாற்றுகிறார்கள். 


என்ன செய்யலாம்?!

உங்கள் வழக்கமான வேலைகளை, திட்டங்களை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, இயற்கையாக வானில் நடக்கும் அற்புதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த எளிமையான செயல்களில் ஈடுபடலாம். திட்டமோ தீர்மானமோ வேண்டாம். உணவை தள்ளிப்போடலாம். வீட்டிற்கு வெளியே தாராளமாக வரலாம். தோட்டங்களில் ஓய்வு எடுக்கலாம். நல்ல இசை கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

கிரணங்களை பார்ப்பதில், சூரிய கிரகணங்களை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து. நேரடியான ஆதீத சூரிய ஒளி கண்களை குருடாக்கும். எனவே தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை உபயோகிக்கலாம். எப்படியும் தொல்லைகாட்சியிலும், யூடூயுபிலும் காட்டுவார்கள் அதை கண்டு மகிழுங்கள். சந்திர கிரகணம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் அதற்கும் தகுந்த பாதுபாப்பு கண்ணாடிகள் கிடைக்கின்றன. 

சந்திரகிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாமா? ஆங்கில வளைத்தளம் - விளக்கம்


அன்பர்களே

நீங்கள் உங்களை, தவறாக வழிநடத்தும் அல்லது பயமுறுத்தும் “பொது ஆலோசனையாளர்களிடம்” இருந்து தள்ளி நிறுத்துங்கள். 

வாழ்க வளமுடன்.