CJ for You: job work

job work

Showing posts with label job work. Show all posts
Showing posts with label job work. Show all posts

Is exercise necessary even in harmony with nature? Is normal life enough? What is your explanation for this?


இயற்கையோடு ஒத்து வாழக்கூடிய நிலையிலும், உடற்பயிற்சி அவசியம்தானா? இயல்பான வாழ்க்கை போதுமே? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?


நீங்கள் சொல்வது சரிதான். இயற்கையோடு ஒத்த தன்மையில், வாழக்கூடிய நிலையில், அன்றாட வேலைகள், கடமைகள் செய்துவந்தால், உடற்பயிற்சி அவசியம்தானா? என்று கேட்பது சரிதான். அதுபோலவே இயல்பான வாழ்க்கையில் முறையில் வாழ்ந்தாலும் போதுமானதுதான். ஆனால், உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். நிஜமாகவே நான், இயற்கையோடு ஒத்த தன்மையில் வாழ்கிறேனா? என்னுடைய அன்றாட வேலைகள், கடமைகள் உடலுக்கும், உடலுறுப்புக்களுக்கும் பலன் அளிக்கிறதா?

மேற்கண்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் என்ன? அதை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே இன்றைய உலகில், மிகச்சிலரே அத்தகைய உடல் உழைப்பையும், வேலையையும், கடமையையும் கொண்டிருக்கின்றனர். தினசரியாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளையும், வருமானத்தையும் ஈட்டக்கூடிய மனிதராக அவர் இருப்பார். சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரைப்போல நாம் உழைக்கவும் முடியாது. இவரைப்போல நாம் சாப்பிடவும் முடியாது என்று சொல்லுவார்கள். நிஜம் தானே?

பெரும்பாலோர் வாழ்க்கையில், அதிகாலை எழுந்து காஃபி, தேனீர் என்று ஆரம்பித்து, கைபேசியில், வரவேற்பறை தொலைகாட்சியில், செய்திகளையும், ராசி பலன்களையும் பார்த்துக்கொண்டே நகர்கிறது. நேரமிருந்தால், காரில், பைக்கில் நடைபாதை அமைந்த பூங்காவிற்கு சென்று, நடந்துவிட்டு மீண்டும் இல்லம் வந்துவிட்டு, ஏதோ அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, அலுவலகம், தொழில்கூடம் கிளம்பிவிடுகிறார்கள், வியாபாரம் தொடர்பான சந்திப்புக்கும் போய்விடுகிறார்கள். அவ்வளவுதான். இதிலேயே மாலை, இரவு வரை கடந்துவிடும்.

இதற்கிடையில் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து அலுவலை கவனித்தல், வெளியே வெயில், மழை, காற்று பொருட்படுத்தாத அலைச்சல், செயற்கை குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேர வேலைகள், கணிணி, கைபேசி, தொலைகாட்சி வழியாக நேரம் செலவழிப்பு, அது பொழுதுபோக்காகவும் இருக்கும், அலுவல் காரணமாகவும் இருக்கும். மதிய நேர உணவு தள்ளிப்போகும், இரவுக்கு பசி இல்லாத வகையில், மாலையில் வடை, காஃபி, தேனீர் என்றும் ஜங் ஃபுட் என்ற உணவுவகைகளும் பட்டியலில் இருக்கும். இந்த வகையில், உடலுக்கும், உடல் உறுப்புக்களுக்கும் ஏதேனும் இயக்கம், அசைவு, அமைந்துள்ளதா?

ஏங்க ஐயா? அதற்காக, முதலாவதாக சொன்னது போல, எல்லோரும் கஷ்டப்பட்டா உழைக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. அதற்கும் விளக்கம் தருகிறேன். நம்முடைய வாழ்க்கை, அதன் தரம் ஒவ்வொரு நாளும் உயர்கிறது. நாமும் நிறைய கற்றுக்கொண்டு, நம்மையும், நம் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்கிறோம். அது கட்டாயமும், அவசியமும் ஆகும். அதில், நம் குடும்பத்தாரையும் கவனித்துக் கொள்கிறோம். ஆனால், உங்கள் உடலையும், உடலுறுப்பையும் கவனித்துக் கொள்கிறீர்களா? அங்கேதான் சிக்கலை, நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

இதனால்தான், நம்மையே மறந்து, அன்றாடம் வாழ்க்கை, அப்படியே ஒரே தன்மையிலேயே நகர்ந்துவிடுகிறது. தீடீரென்று ஏதேனும் உடல்நலம் பாதிக்கபடும் பொழுதுதான், அடடா, ஏதோ தவறு செய்து விட்டோமோ? என்று நமக்குள்ளாக தோன்றுகிறது. மேலும் பணம் இருந்தால், அதற்கான கட்டணத்தைக் கொடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவரிடமும் நட்போடு பழகி, சரிசெய்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால், அது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லையே? பொருள் இழப்பும் உண்டாகும், உடல் உறுப்பு செயல்பாடும் பாதிக்கும், வாழ்க்கையும் பாதிக்கும், அதற்கு மேலாகவும் நிகழும் அல்லவா?

இப்போது இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன? இயற்கைக்கு முரணாகவேதான் நாம் வாழ்கிறோம். இல்லையென்றால் அப்படியான சூழல்தான் இங்கே இருக்கிறது என்ற தெளிவுக்கு வந்துவிட்டு, இதிலிருந்து என்னையும், என் உடலையும், உடல் உறுப்புக்களையும் காத்துக்கொள்ள வழி என்ன? என்று தனக்குள்ளாக கேட்டு, ஆராய்ந்து, என்ன செய்தால் நம்மை காத்துக்கொள்ளலாம்? என்றும் சிந்தித்து, ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்தலாம். அது எந்த ஒரு பயிற்சியாகவும் இருக்கலாம். என்றாலும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சிறந்த ஒரு தீர்வாகும்.

இன்னும் நான் இங்கே விளக்கமாக, இந்த சிக்கலை விளக்கலாம். ஆனால், நீங்கள் அந்த சிக்கலில் இருப்பதால், இதைவிடவும் தெளிவாக தெரிந்து கொள்ளவும் முடியும். நான் உங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்த சிந்தனைக்குள் அழைத்து வந்துவிட்டேன். என்வேலை அவ்வளவுதான், இனி நீங்களே இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும். சரிதானே?

வாழ்க வளமுடன்

-

Is health important to a man? Is mental resourcefulness important? Explain this dilemma.


ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? இந்த குழப்பமான நிலையையை விளக்குக.


இந்த கேள்விக்கு பதில் தரும் முன்பாக, கேள்வி கேட்டவரின் சூழல், வாழும் நிலை, தகுதி, இப்போதிருக்கும் வாய்ப்பு, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு என்ற அளவுகளைக் கொண்டு சொல்லவேண்டியதாக இருக்கிறது. 

நீங்கள் உலகவாழ்வில், ஒரு நல்ல உயர்வான நிலைக்கு, பொருள் செல்வாக்கோடு நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மன வளம் முக்கியம். அந்த மன வளத்தினால், உடலை நலமாக்கி, இந்த பொருள்முதல்வாத உலகில் வென்று உயரலாம். மனம் சோர்வாகவும், குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இயங்குமானால், அது உங்கள் உடலை, உடலுறுப்புக்களை கெடுக்கும். வேலை, வியாபாரம், தொழில் என்று எதனையும் செய்யவிடாது. முயற்சியில் தோல்வியை தரும். விளைவு, நட்டமாகும். இதனால் மனம் உற்சாகமாக இருக்க என்ன வேண்டும்? என்ற நோக்கத்தில் மன வளம் முக்கியம். இதற்கு யோகம் உதவுமா? நிச்சயமாக உதவும். ஆனால், யோகம் வாழ்க்கை இன்பத்தையும், பொருளாதாரத்தையும், இல்லறத்தையும் சிதைக்கிறது என்றுதானே, பெரும்பாலோர் நினைக்கிறார்கள்? சரிதானே?!

இரண்டாவது வகை மனிதராக பார்த்தால், ஏதோ ஓரளவில் நிலையான பொருள் கிடைக்கிறது. அன்றாட வாழ்வு நகர்கிறது என்ற நிலையில் இருக்கும் மனிதரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பொருளில் நிறைவு பெற்று, இருப்பது போதும் என்ற அளவில், அன்றாட வரவில், கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மற்றதை சேவையாக உலகுக்கு திருப்பித்தரும் மனிதர்களையும், இங்கே இணைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இப்போது, உடல் நலம்தான் முக்கியம். ஏனென்றால், இதுநாள் வரை, அந்த உடலைக்கொண்டு, பலவிதங்களில் தூக்கம் கெட்டு, உடல் பலம் கெட்டு, தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திருப்பார்கள். உடலில் பலவித நோய்கள் தலைதூக்கி நிற்கும். சில உடல் உறுப்புக்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலர் ஏதேனும் அறுவைசிகிச்சையும் செய்திருப்பார்கள். உணவே மருந்து என்பதற்கு பதிலாக, மருந்தே உணவாக சாப்பிடம் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் இவர்கள், உடலை காத்திட வேண்டும், உடல் நலமே இவர்களுக்கு முக்கியம். பிறகு அதன் வழியாக மன நலன் காக்கப்பெறலாம்.

மூன்றாவது வகை மனிதர், உலக வாழ்க்கையில் இருந்தாலும், உள்முகமாகவே, தன்னைக்குறித்த ஒரு தேடுதலைக் கொண்டிருப்பார். ஒருவகையில் அது, அவருடைய முன்னோர்களின் விருப்பமாகவும், அதை நிறைவேற்றிட பிறந்தவராகவும் இருப்பார். இவருக்கு, நேரடியான யோகம் தேவை. அப்படியானால் பொருள் பணம் அவசியமில்லையா? என்ற கேள்வி எழும்தானே? இவர், இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்படுபவராக இருப்பார். வேண்டுதலும் எதிர்பார்த்தலும் இருக்காது. இருந்தாலும் அமைதி, இல்லையென்றாலும் அமைதி என்ற நிலையில் இருப்பார். உங்களில் கூட அப்படியாக சிலர் இருக்கலாம். இந்த மனிதர் யோகத்தில் உயர, உடல் நலமும் வேண்டும், மன வளமும் வேண்டும். ஆனால், முதன்மையாக, உடல் நலம் சீர் செய்துவிட்டால், அடுத்து மன வளம் நோக்கி தானாக நகர்ந்துவிடுவார்.

இப்படியாக, ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? என்ற கேள்விக்கான விடையை கண்டுவிட முடியும். இதை நீங்கள் மிகச்சரியாக எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதன்படி நீங்கள், பயிற்சியை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

-


Does the man born in this world really have a purpose?


இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


பதில்:

இந்த உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகிற ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மனிதன் என்றால் ஆண் என்பதாக மட்டும் நினைக்கக்கூடாது. பெண்ணுக்கும் அத்தகைய நோக்கம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆணைவிட பெண்ணுக்குத்தான் அந்த நோக்கம் இயற்கையாக அமைந்திருக்கிறது எனலாம். பெண் ஏற்கனவே இந்த இயற்கையோடு வாழ்பவளும், இயற்கையின் முழு இயல்பை தன்னகத்தே பெற்றவளும்கூட பெண் தான்.

ஒரு நோக்கம் என்பதை, பொதுவாக இக்காலத்தில் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? பேரும் புகழும் பெறவேண்டும், குறையாத வளமும், நிறைவான பணமும் வேண்டும் என்று சொல்லுவார்கள்.  ஒரு மனிதர் எந்தெந்த நிலையில் வாழ்ந்து பழகுகிறாரோ அந்ததந்த அளவில் நோக்கம் மாறும். அரசியலில் இருப்பவர் கட்சிக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தலைவராக விரும்புவார். அலுவலத்தில் இருப்பவர், அந்த நிறுவனத்திற்கே தலைவராக விரும்புவார். நிறுவனம் வழி, தொழில், வியாபாரம் செய்பவர் உலகின் முன்னோடி நிறுவனமாக தன்னுடையது மட்டுமே இருக்கவேண்டும் என்று உயர விரும்புவார். இப்படி பலப்பல உண்டு.

ஆனால் இதெல்லாம் நிச்சயமானதுதானா? இதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது உண்மையிலேயே என்ன? பாராட்டும் புகழும் திருப்தியும் என்பது போதுமானதுதானா? ஒரு நொடியில், ஒரு நாளில் யாராவது வேறு ஒருவர், உங்கள்விட ஒரு படி முன்னேறினால் உங்கள் நிலை என்னவாகும்?! மேலும் தீடீரென்று உயர்த்தில் இருப்பவர், மறுநாள் இல்லை என்ற நிலை என்பதுதான் உலகில் நாம் பார்க்கிறோம். இதுநாள் வரை அவருடைய போராட்டம்  என்னவாயிற்று? என்ன நிறைவான பலனை அடைந்தார்? நிஜமாகவே அவருக்கு என்ன கிடைத்தது? நிச்சயமாக அவர் நோக்கம், விருப்பம் நிறைவேற்றம் அடைந்ததா? குறையோடு போய்ச்சேர்ந்தாரா? திருப்தியாக இருந்தாரா? என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?! யோசித்துப்பாருங்கள்!

ஆனால் இதெல்லாம் உலக வாழ்க்கை இயல்புதான், பொருள்முதல்வாத உலகில், நாம் உழைப்பதும் அதனால் பொருள்வளம் பெறுவதும் தேவையே. அதை விட்டு விலகமுடியாது. குரு மகான் வேதாத்திரியும் கூட இதையெல்லாம் விட்டுவிடு என்று சொன்னதே இல்லை. ஆனால் போதும் என்ற நிறைவான மன நிலைக்கு, வாழும் பொழுதே வந்துவிடு என்று சொல்லுகிறார். அந்த அளவிற்கு மேல், தேவைப்படும் பிறருக்கு பகிர்ந்தளித்து உதவுக என்று வலியுறுத்துகிறார்.

உண்மையில், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறப்பின் நோக்கம், தன்னை அறிவதுதான். இந்த இயற்கை அதைத்தான் நமக்கு உள்நோக்கமாக அமைத்திருக்கிறது. அதுதான் மனதில் இருக்கிறது, வெளியேவும் பிரகாசிக்கிறது. ஆனால் வளரும் காலத்தில் அது பலவகைகளில் சிக்கி மறந்துவிட்டது. உங்களுக்கு இது பிடிக்கும் என்ற ஒன்றை செய்தால், பிறகு உங்கள் மனமே ‘நான் கேட்டது இது இல்லையே’ என்று சொல்லிவிடும். இப்படி ஓவ்வொன்றாக எதை நீங்கள் விரும்பினாலும் அதில், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் திருப்தி ஏற்படுவதே இல்லை. உண்மைதானே? இல்லை நான் பொய்யாக சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

நம்முடைய மனம் மிகப்பெரிய பேராற்றலின் ஒரு சிறுபகுதி. அதை வாழ்க்கையில் சிறிய சந்தோசங்களில் அடைப்பதில் முழுமை பெறுவதில்லை. மனதின் நோக்கம், தன்னையறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை. மனம்+இதன்=மனிதன் என்பதால், மனிதனாகிய நமக்கும் தன்னையறிவதுதான் நோக்கம். அதற்காகவேதான் பிறப்பும் நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்

-

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.