CJ for You: ambition

ambition

Showing posts with label ambition. Show all posts
Showing posts with label ambition. Show all posts

Anyone can do the practice of biomagnetic gazing? will it give you immense power? Someone saying that we can make our lives better and get what we want. Is that really the truth? Explain


வாழ்க வளமுடன் ஐயா, ஜீவகாந்த பெருக்கம் பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற் சொல்லப்படுகிறது. அதனால் அபரிதமான சக்தி கிடைக்கும். நம் வாழ்க்கையை மிகசிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்றும், நினைத்ததை பெறலாம் என்றும் சொல்லுகிறார்களே? அது உண்மைதானா? விளக்கம் தருக.



வேதாத்திரிய அன்பர்கள் கூட, இப்படியான கேள்வியை கேட்பது வியப்பாக இருக்கிறது. எனினும் நீங்கள் ஆரம்ப சாதகராக இருந்தால், அதற்குரிய விபரங்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவின் வழியாக உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

இணைய உலகில், தடுக்கிவிழுந்தால் தகவல்கள் என்று, எல்லோருமே அள்ளிப்போடுகின்றனர். அது உண்மையா?, பொய்யா? தனக்கு அனுபவம் உண்டா? என்றெல்லாம் சொல்லுவதில்லை. ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களின் பதில் என்ன? எங்கேயோ படித்தேன், யாரோ சொன்னார்கள், இப்படியெல்லாம் பெயர் தெரியாத சித்தர் சொன்னார் என்று மழுப்புவார்கள். அதை இவர்களே, செய்து பலன்கண்டார்களா? என்றும் தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்து, நீங்களும் குழப்பிக்கொள்ள வேண்டாமே? அதுவும், வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு, உண்மை விளக்கம் பெறாமல் இருக்கலாமா?

ஜீவகாந்தம் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி செய்ய, உடலை, மனதை தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று நேரம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முறையான வழிமுறைகளை, ஆசிரியரின் வழியாக கற்றுத்தேர வேண்டும். சும்மா, வெறுமனே எனோ தானோ என்று, ஜீவகாந்த பெருக்க பயிற்சியை செய்யமுடியாது. அப்படி செய்யவும் கூடாது. அதனால் ஏற்படும் தவறான விளைவுகள், உங்கள் உடலையும், மனதையும் பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிருக்கும் கூட பிரச்சனை தருவதாக அமைந்துவிடலாம். எனவே, கவனமாக இருங்கள்.

உங்களுக்கென்று, பயிற்சி வழங்கப்படும் வரை பொறுமையாக காத்திருங்கள். தெளிவாக, ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு பிறகு, பயிற்சி செய்யுங்கள். சரிதானே? இந்த காணொளி தரும் விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஜீவகாந்த பெருக்கம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா? செய்தால் என்ன பலன் கிடைக்கும்? உண்மை விளக்கம்
வாழ்க வளமுடன்
-

Will you explain briefly but clearly the real truth of Brahma Gnana?


பிரம்ம ஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை, சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கித் தருவீர்களா?


பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்களே, மிக எளிமையாக, தன் எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை வழியாக, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை விளக்கித் தருகிறார். இதை யாவரும், வார்த்தையால் விளங்கி கொள்ளுதல் சிறப்பு எனினும், அதை அனுபவபூர்வமாக, தனக்குள்ளாக, உணர்தலாக அறிந்து கொள்வதுதான், முழுமையான பலனைத் தரும். மனிதனாகப் பிறந்த, நோக்கமும் நிறைவேறிடும். வாழும் இவ்வுலக வாழ்வின் சிறப்பு அனுபவிக்க முடியும். அந்த பலனையும், அனுபவத்தையும் விளக்கிடுதல் எளிதன்று. உதாரணமாக சொல்லப்போனால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை ஆகிவிடும். ஒரு யோக சாதகரின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி என்ற வகையிலும், உண்மைகள் அவரை ஊக்குவிக்கும். இதோ, வேதாத்திரி மகரிஷியின் உண்மை விளக்கம் காண்போம்.
சுத்தவெளிதான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும்.
முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தின்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும் போது எழுகின்ற நுண் அலைகள் தான் காந்தம் எனும் நிழல் விண்கள்.
நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல்விண், நிழல்விண், காந்தம், காந்தத் தன் மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். 
பரமாணு முதல் கொண்டு, எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.
இந்த ஒவ்வொரு நிலைகளையும், நமக்குள்ளாக, கடந்து உள்ளே அறிவதின் வழியாகவே அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். இந்த உண்மையை அறிவதற்காகவே, தன் மாற்றமாக, பரிணாமத்தின் எழுச்சியாக, மனிதன் வந்தான். இந்த பிரம்மத்தை இறைவன் என்ற மதிப்பில் எளியமக்களுக்கு அறியத்தருவதுதான் பக்தியாக, யோகத்திலிருந்து மலர்ந்தது. ஆனால், பக்தி பலரிடம் சிக்குண்டு, பிரம்மம் இறைவனாகி, மனிதன் படைப்புத்தத்துவமாகி, தூரத்தையும், பிறப்பையும், வாழ்க்கையையும், காலத்தையும் அதிகமாக்கிவிட்டது. என்றாலும்கூட, இயற்கையே, அவ்வப்பொழுது அத்தகைய, பக்தி வழியில் ஆழ்ந்து, நிறைந்து, அடுத்த நிலை என்ன? என்று தேடும் மனிதர்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், வான்காந்தம் என்ற பேராற்றலில் தன்னை இணைத்துக்கொண்டு வழித் துணையாகவும் இருக்கிறார்.
வாழ்க வையகம்,  வாழ்க வளமுடன்.

Is God man Correct? What is the truth on it? What is the connection between the God and Human?


நான் கடவுள் என்பது சரிதானா? அதன் உண்மை என்ன? மனிதனுக்கும் மெய்ப்பொருளுக்கும் உள்ள தொடர்பு என்ன?



மெஞ்ஞானத்தின் வழியாக, சித்தர்கள், ஞானிகள், மகான்கள், இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து உணர்ந்தார்கள். அந்த விளக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கு, பக்தி வழியாக, கருத்தாக வடிவமைத்தார்கள். விருப்பமுள்ளோர் கற்றுத்தேர யோகம் என்ற மனதின் வழியாக உண்மையறியும் பயிற்சிகளையும் கொடுத்தார்கள். ஒரு மனிதனின் ‘பிறவி நோக்கமும், கடமையும், நான் யார்? என்ற உண்மை அறிதலே’ என்பதையும் அறிவுறுத்தினார்கள். அந்த வகையில்தான், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்று சொன்னார்கள். விஞ்ஞானமும், எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்தி வழியிலான கருத்துக்களை, படைப்புத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை, தெய்வம் என்பதையும் நம்புவதில்லை. வழிபாடு, மந்திரம் இவற்றையும் புறந்தள்ளுகிறது. ஆனால், சில உண்மைகளுக்கு, விடை தெரியாமல் தடுமாறுகிறது என்பதும் உண்மையே. 

உதாரணமாக, ‘உலகில் இருப்பதெல்லாம், காட்சியும், பொருளும் ஆனவை. அவை மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியானால், மாறாதிருப்பது எது? என்ற கேள்விக்கு ‘என்றும், எப்போதும், எவ்விடத்திலும் இருப்பது எதுவோ அதுவே முதன்மையானது. அதை மெய்ப்பொருள் என்று உயர்வாக அழைக்கிறோம்’ என்கிறார். இதை வெட்டவெளி, சுத்தவெளி, இறை, தெய்வீகம், சிவம், ஈசன் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, இதனில் நான்கு தன்மைகள் கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவை, 1) பூரணம் என்ற வற்றாயிருப்பு 2) வேகம் என்ற பேராற்றல் 3) விவேகம் என்ற பேரறிவு 4) காலம் என்று வகைப்படுத்துகிறார். இந்த விளக்கத்தை, அந்த உண்மை நிலையை, யோகத்தின் வழியாக, அறிந்து உணர்ந்தவர் மட்டுமே, தெளிவு செய்திட முடியும். சும்மா, வெறுமனே, மேம்போக்காக சொல்லுவதும், புரிந்து கொள்வதும் உண்மை விளக்கம் ஆகாது. மேலும் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த உணர்தலை, ‘அதுவாகி நின்று அந்நிலையில் உணர்வதாகும்’ என்றும் வேதாத்திரி மகரிஷி தெளிவு செய்கிறார். மாணிக்க வாசகரும், திருவாசகத்தில் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற ஒருமையை குறிப்பிடுகின்றார். இங்கே தான், அத்துவைதம் இரண்டற்ற நிலை தெளிவாகிறது. ஆனால், உலகவாழ்வில் மயங்கி, அன்றாடம் இன்பம் தேடி, துய்த்து வாழும், சராசரி மனிதனுக்கு இது புரியுமா? தெரியுமா? என்றால் மிகக் கடினமே. இந்த நிலையில்தான், அந்த சராசரி மனிதர்களிடம், சித்தர்கள் சொன்ன ‘நான் கடவுள்’ விளக்கம் தொக்கி நிற்கிறது. இந்த வார்த்தையை, சாராசரி மக்களுக்கு ஏற்றபடி, இன்னொருவிதமாக சொன்னால், ‘கடவுளே நானாகவும் இருக்கிறது’ என்பதே சரியாகும்.

மேற்கண்ட நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, வேதாத்திரி மகரிஷி தரும், விளக்கத்தையும் இங்கே அறிந்து கொள்வோம். இதோ, 

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்_ என்ற தலைப்பிலான ஞானக்களஞ்சிய கவிதையில்...
கடவுள் எனப் படுபவனே மனிதனானான், 
கருத்தியங்கி, கருத்தறிந்தான்; 
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான் 
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான் 
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக் 
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான் 
கடவுள் ரகசியமதனைவெளியாய்க் காட்டும்  
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி. 
 
  இந்த கவிதையில் பொதிந்துள்ள, உண்மையையும், அவரே விளக்குகிறார். எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
 
  மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான். 

  இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.
 
  மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் – அறிய வேண்டிய நிலையில் – உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாகக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை. 

  அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான். இந்தவகையில், விளக்கமும் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
-

Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?


உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?


சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும்.  இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.  

இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.  

சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை  உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.

பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.  இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல்  செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.  

களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.  

இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில்  ஏழ்மை என்பது இருக்காது.  பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது.  அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.  

எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும்.  வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம்.  அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.

இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்

இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,

ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?

குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?

கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க. 

முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.

மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?

சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!  

சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.


வாழ்க வளமுடன்.

-

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

Do you know the importance of simple exercise and the completion of human life?


எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், மனிதனின் வாழ்க்கை உயர்வும் உங்களுக்குத் தெரியுமா?



மனிதனாக பிறந்தால், மற்ற எந்த உயிரினங்களையும் விட, உயர்ந்த நோக்கமும், கடமையும் அவனுக்கு உண்டு, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போகப்போகிறோம் என்று இல்லை. மனிதனாக ஏன் பிறந்தோம்? எதற்காக? நான் யார்? என்னுடைய மூலம் என்ன? என்று சிந்தித்து விடை அறியவும் வேண்டும். இயற்கை என்பது என்ன? பிரபஞ்சமும் என்ன? பிரபஞ்சத்திற்கு அப்பாலும் என்ன? என்று முன்னோர்கள் சொன்னதையும் ஏற்று, நாமும் உண்மை அறிய முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அதற்கு விடையும் கிடைத்துவிடும். மனிதனின் வாழ்வும் முழுமை பெறும். இந்த நோக்கமும், கடமையும் நிறைவேற வேண்டும் என்றால், வாழும் வரை உடல் வேண்டும் அல்லவா? உடலின்றி மனிதனுக்கு வாழ்வும், உலகமும் ஏது? சிந்திப்பீர்.

இத்தகைய உண்மையை கருத்தில் கொண்டு, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி, விளக்கமளிக்கிறார். ‘உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான்  இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். 

உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.

        உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது 'மனவளக்கலை' (Simplified Kundalini Yoga - SKY) பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

உடலும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். 

உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்:

1.  கைப்பயிற்சி (Hand Exercise)

2.  கால் பயிற்சி (Foot Reflexology)

3.  மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)

4.  கண்பயிற்சி (Eye Exercise)

5.  மகராசனம் (Maharasanam) 

6.  உடல் வருடல் (Massage)

7.  ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation)

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை.  ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.’

மனிதன், தன் உடல் குறித்து, திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்லுகிறது, கவனிப்போம்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’ 

என்றும், உடலை காத்திட வேண்டிய அவசித்தையும், இந்த கவி வழியாக விளக்குகிறார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே’

என்றும், திருமூலர் கூறியுள்ளார். எனவே ‘இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்’ என்று உறுதிபட வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்

-

Why is it important to give importance to exercise? Why point it out so often?


உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன? அடிக்கடி அதையே சுட்டிக்காட்டுதல் ஏன்?


உண்மையாகவே இரண்டுவிதமான காரணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டையுமே நீங்கள் அறிந்தீர்களா? என்பதும் இந்த கேள்வி வழியாக தெரியவும் இல்லை. அதனால்தான் அடிக்கடி, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், அதையே சுட்டிக்காட்டுதலும் நிகழ்கிறது. அப்படியாவது நீங்கள், இந்த உண்மையை புரிந்துகொள்ள மாட்டீர்களா? என்ற உள்நோக்கம் தான் காரணம்.

அக்கால கிராமங்களில், அதிகாலை ஏதேனும் சாப்பிடும் பொழுது, ஒருவர் கேட்பார், ‘என்னய்யா, பல்லை விளக்காம சாப்புடுறே?’ இந்த கேள்விக்கு மற்றொருவர், ‘அடப்போப்பா, ஆடு, மாடெல்லாம் பல்லா விளக்குது?’ என்று பதில் சொல்லுவார். இதை நீங்களும் கேட்டிருக்கலாம். ஆனால், ஆடு, மாடுகளின் பல்லுயிர் பெருக்கம் வேறு. மனிதனுடைய பல்லுயிர் பெருக்கம் வேறு. அதனால், மனிதன் தன்னைச்சார்ந்த சூழலில், தூய்மையாக இல்லாவிட்டால், பலவிதமான நோய் தாக்கங்களுக்கு ஆளாகிவிடுவான். இது இயல்பானதாகும்.

மேலும் மனிதபிறப்பில் ஓர் இயற்கை உன்னதமும், முழுமையும் இருக்கிறது. அது உள்ளடங்கி இருக்கிறது. சாதாரணமாக, அதை மனிதனே அறிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு யோகம் தேவைப்படுகிறது. குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு மனிதன் தானாக, இந்த உண்மையை நோக்கி நகர்வது, அவனுக்குள் நிகழ்வதில்லை. மாறாக ஏதோ ஒரு, பரம்பரை வழியான தாக்கத்தில், யாரோ ஒரு சிலருக்கு நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில், நீங்கள் எப்படி வாழ்வது? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால், அதற்கு விடை, உங்கள் சூழலும், அதற்கேற்ப கிடைக்கும் வாய்ப்புக்களும், நீங்கள் தேர்ந்தெடுப்பதும்தான் மூலமாக அமைகிறது. மேலும், ஒரு நாட்டின் சட்ட திட்ட, ஒழுக்க, பழக்க முறைகளும் துணையாக அமைந்துவிடுகிறது. இதற்கு உட்பட்டு, நீங்கள் வாழ்க்கையை, எப்படி வேண்டுமானாலும் வாழமுடியும். அது உங்கள் உரிமையாகி விடுகிறது. அன்றாடம் உழைத்து, சலித்து, களைத்து, நன்றாக தூங்கி, எழுந்து வாழலாம். எதுவுமே செய்யாமல் சோம்பேறியாகவும் வாழலாம். இன்பங்களை மட்டுமே தேடி, திளைத்து, அனுபவித்து வாழலாம். இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றின் வரிசையில் வருவதுதான், எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் வாழ்வதும் ஆகும். தவறு செய்வதும், வருந்துவது, துணைக்கும், பாதுகாப்புக்கும் கடவுளை வேண்டுவதும், பரிகாரங்கள் செய்வதும், வழிபாடு செய்வதும் நிகழும்.இருப்பதை அனுபவித்து, இயற்கையோடு முட்டி மோதி, விளைவுகளை ஏற்று, எப்படியாவது வாழ்வது இந்த வகையாகும்.

இது இப்படி இருக்க, வழக்கமான கடமைகளை செய்துகொண்டே, இயற்கைக்கும், பிற மனிதர்களுக்கும் எந்த தீங்கும் நேராமல், முரண்படாமல், நிறைவான, மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், தனக்குள்,  மனிதனாக பிறந்திருக்கும் நான் யார்? ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? எனக்கு மூலமாக இருப்பது என்ன? நான் உடலா? மனமா? உயிரா? ஆத்மாவா? வேறொன்றா? என்ற சிந்தனை எழுந்தால், அது உண்மையை தேடும் வாழ்க்கை முறை ஆகும். கடவுள் என்பது என்ன? தெய்வீகம் என்பது என்ன? ஏன் வணங்குகிறோம்? என்ற கேள்வியும் அவனுக்குள் எழும். அதற்கு விடைகானவும் முயற்சிப்பான். உண்மையில், மனிதனுக்கு பிறப்பின் கடமையும், நோக்கமும் இருக்கிறது. ஆனால் அவன் அதை மறந்துதான் வாழ்கிறான். அந்த உண்மையை, குரு தான் தூண்டி விடுகிறார்.

இந்த இரண்டு வாழ்க்கை முறையில், எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். அது உங்கள் பரம்பரையாலும், குடும்பத்தாலும், சூழ்நிலையாலும், பிறராலும் நிகழும். முதல் நிலையில் உடற்பயிற்சி விருப்பமில்லை. அது அவசியமும் இல்லை. இரண்டாவது நிலையில், அது முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கு இந்த உடல் தேவைப்படுகிறது.  ஆன்மா இயக்க ஆற்றலாகவும், உடல் ஆன்மாவுக்குக் கருவியாகவும் இருப்பது விழிப்பு நிலையில் தெளிவாகும். உண்மை உணர்வாகும்.’ என்று சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்

-


What is the purpose of the Human Birth? Why it is not spread worldwide?


பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


பதில்: 

மனிதனின் பிறப்பு, பரிணாமம் என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. அதன் ஆராய்ச்சியில், மனிதனும் கூட விலங்கினங்கள் போலவே வாழ்ந்து வந்திருந்த நிலையை, பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலமாக அறிந்துகொண்டது. உலகம் முழுவதும் அப்படியான கற்கால மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிரூபணமும் செய்கிறது. இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ‘நம்முடைய’ வளர்ச்சி நிலையையும், சிந்திக்கும் ஆற்றலையும், இயற்கையை பயன்படுத்திக் கொள்வதையும், சில நேரங்களில் அந்த இயற்கைக்கு மாற்றாகவும் செயல்படுவதையும் ‘ஆறாவது அறிவு’ என்று எடுத்துக்கொள்கிறது இன்றைய நவீன விஞ்ஞானம்.

கனவாக கண்ட காட்சிகளை நிஜமாக்கிடவும் செய்கிறது, என்றாலும் சிலவற்றிற்கு விடை அறியமுடியாமல் தவிக்கிறது. மனிதர்களிடையே கலந்து உலவி வரும் கற்பனை கதைகளை அகற்றிடவும் செய்கிறது. நிலவுக்கும் மனிதர்களை அனுப்பி, நிஜமாக்கியது. அப்படியாக கோள்களை மட்டுமல்ல, சூரியன் முதலான எல்லா நட்சத்திரங்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை தெரிவிக்கிறது. பூமிக்கு மேலே துணைக்கோள் போலவே, ஒரு விண்வெளி கப்பல் (Internation Space Station) உண்டாக்கி, அதில் மனிதர்குழு பயணித்துக்கொண்டும், ஆராய்ச்சி செய்துகொண்டும் இருக்கிறதையும் நாம் அறிவோம். என்றாலும், மெய்ஞானத்தில் சொல்லப்படுகின்ற உண்மையினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆதாரம் கேட்கிறது.

விஞ்ஞானத்தின் பார்வையில், பூமியில் இருக்கும் நாம், பூமியின் ஈர்ப்பு விசையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த பூமி, வான்வெளியில் தானும் சுற்றி, சூரியனையும் சுற்றி உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை என்று சொல்லுகிறது. இங்கே சூரியன், பூமி, நிலவு, சூரியக்குடும்ப கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே வான்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறதே? அது எப்படி என்று கேட்டல் அது ஒரு ஆற்றல் சக்தியினாலும், பிரபஞ்ச ஈர்ப்பினாலும் என்று சொல்லுகிறது. Matter and Gravity என்ற இரண்டுக்குமேல் விஞ்ஞானத்தில் பதில் ஏதும் இல்லை.

மெய்ஞானம் இதையெல்லாம் கடந்து, மூலமான ஆற்றல் எது? அது எப்படி இருக்கிறது? இந்த பிரபஞ்ச பரிணாமம் எப்படி உருவானது? அந்த பிரபஞ்சத்தில், உருவான சூரிய குடும்பத்தில் உள்ள, பூமியில் உயிரின பரிணாமம் எப்படி வந்தது? மனிதன் என்பவன் யார்? என்று உண்மை அறிந்த விளக்கம் கண்டது. அதை அறிவதற்கான வழியை யோகம் என்றது. ‘நான் யார்?’ என்ற கேள்வியோடு பயணிக்கச் சொன்னது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தியை வழங்கியது. மெய்ஞானம் கருத்துக்களால் ஆனது, விஞ்ஞானம் கண்களால் பார்க்கும் பொருளால் ஆனது. அதனால் விஞ்ஞானம், மெய்ஞான கருத்துக்களுக்க மதிப்பளிக்கவில்லை. பொய் என்கிறது.

ஆனால், உண்மை மறுப்பதால் மாறுவதில்லையே? விஞ்ஞானத்தின் மறுப்பு பரவலாகப்பட்டதால், மெய்ஞானத்தின் முழுமை விளக்கம், மனிதர்களிடம் பரவினாலும் மக்கள் அதை ஏற்று, உண்மை பெறவில்லை, ஒதுக்கிவிட்டார்கள்.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இப்படியாக விளக்குகிறார். ‘ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம் அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும்.  எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை மனதால் உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.  இதுதான் பிறவியின் நோக்கம் (This and this alone is the purpose of life). போனபோக்கிலே பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை பழக்கம் சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்) இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம்.  இவற்றிலிருந்து விளக்கம் பெற்று விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது.  பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது’ என்கிறார்.

என்றாலும், மனிதர்களின் வாழ்வில், இயற்கையே வாய்ப்பு தந்து, உண்மை அறிக என்று சொல்லுகிறது. வெகு சிலர் அதை ஏற்று, உண்மை விளக்கம் பெற பயணிக்கிறார்கள். சிலர் கொஞ்ச காலம் கழித்து, நிச்சயமாக வருவார்கள்.

வாழ்க வளமுடன்.

-

Shall we learn the trick of one body to another body transformation and how?


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?

பதில்:

உங்கள் உடலைவிட்டு, இன்னொரு உடலுக்குப் போகும், தந்திரத்தில் இன்னும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை இந்த கேள்வி நிரூபிக்கிறது. சித்தாந்தம் என்ற வழியில் சித்து என்ற உயிரை அறிந்து, அதனுடைய மூலமும், இயக்கமும் உணர்ந்தவர்களான சித்தர்கள் இந்த ‘கூடுவிட்டு கூடுபாயும்’ வித்தையை கண்டுபிடித்து, உலகில் தாங்கள் வாழும் காலத்தில், அந்தந்த மக்களின் நன்மை கருதிமட்டுமே இதை செய்துவந்தார்கள். அதையே தங்கள் கவிதைகள் வழியாக சொல்லியும் வைத்தார்கள். ஆனால் செய்முறையை சொல்லவில்லை. அப்படியான செய்முறையை, நேரடியாக அந்த சித்தரின் வசமாக மட்டுமே கற்றுக்கொள்ளவும் முடியும். இந்தக்காலத்தில் யாருமே தங்களை சித்தர் என்று வெளிப்படையாக தங்களை, மக்களிடம் காட்டிக்கொள்வதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. என்றாலும் கூட, வாழும் சித்தர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், சில மனநலம் குன்றி, தெருவில் கவனமின்றி திரிவோரையும் ‘வாழும் சித்தர்கள்’ என்று நவீன மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கான, அக்கறையும், மருத்துவ உதவியும் செய்யாமல், செய்தும் தராமல், அவர்களின் தனிமையை, சுதந்திரத்தை கெடுத்து, மேலும் மேலும் அவர்களின் மனதை புண்ணாக்குகிறார்கள். காண்டண்ட் கிடைக்காத காணொளி பதிவர்கள் இதையும் பதிவாக்கி, யூயூபில் பரப்புகிறார்கள். கொடுமைதான்.

        இப்பொழுது கேள்விக்கு வரலாம். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியும்தான். ஆனால் அதற்கான அவசியம் என்ன? இதற்கான தக்க பதில் உங்களிடம் இருக்கிறதா? என்னவிதமான நன்மையை கருதி நீங்கள் இதை செயல்படுத்தப் போகிறீர்கள்? இதில் ஏதேனும் ரகசியமான ஆராய்ச்சி இருக்கிறதா? மக்களின் நலம் சார்ந்தோ, உலகின் எதிர்கால நன்மை கருதியோ திட்டத்தை நீங்கள் செயல்படுத்தப் போகிறீர்களா? இதற்கான விடையை முதலில் தயார் செய்யுங்கள். சுயநலம் கருதி இதை நீங்கள் செய்வதாக இருந்தால், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள், உயிரிழப்பு நேர்ந்துவிடும் என்பதும் உறுதி. தற்கொலைக்குச் சமமான காரியத்திற்கு ஒப்பாகிவிடும். ஏனென்றால் ‘இயற்கையின் செயல்விளைவு நீதி’ அத்தகையது.

        என்றாலும் உங்களுக்கான புரிதலை நான் தெளிவு செய்கிறேன். நீங்கள் அறிந்த ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை’ அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம் உங்களுக்குத் தெரியுமா? சொல்லுகிறேன்... 

நாம் ஓருடலாக வாழ்வதாக இருந்தாலும் கூட, இந்த உடல் மூன்று உடலாக அமைந்திருக்கிறது. 1) பருவுடல் 2) உயிருடல் 3) காரண உடல் ஆகியன ஆகும். பருவுடல் என்பது எலும்பு, தசை, சதை, ரத்தம், உடலுறுப்பு இவைகளால் ஆன மொத்த அமைப்பு. உயிருடல் என்பது பலகோடி உயிர்த்துகள் இணைந்த கண்ணாலும், கருவிகளாலும் காணமுடியாத, நுண்ணிய துகள்களால் ஆனதான் அமைப்பு. இதைத்தான் ‘சூக்குமம்’ என்றும் அழைக்கிறோம். அதையே சூக்கும உடல் என்றும் அழைக்கிறோம். மூன்றாவதாக இருப்பது, இந்த உயிரை, உடலுக்குள் கட்டிக்காக்கும் சக்தியான ‘காரண ஆற்றல் சக்தி’ இதையும் நாம் உணரமட்டுமே முடியும். இந்த மூன்றுக்கும் தனித்தனியான விரைவு இயக்கங்கள் உண்டு. அந்த தனித்தனியான இயக்கங்களை முறைப்படுத்தி ஒன்றுசேர்க்கவும் வேண்டும். இதில் அதிவேகமான விரைவுஇயக்கம் கொண்டது ‘காரண உடல்’ இதற்கு சமமாக ‘உயிருடல்’ பழகவேண்டும். இந்த இரண்டின் விரைவையும், இயக்கத்தையும் உடல் தாங்கிட பழகவேண்டும். இதற்கு நீண்டகால பயிற்சி முக்கியமானது ஆகும். யாரோ சொல்லக்கேட்டு, ஏதோ புத்தகம் வாசித்து, எவரோ காணொளியில் சொன்னதைக் கேட்டு செய்தால் அது ‘தற்கொலைக்கு’ சமமாகலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘சூக்கும பயணம்’ என்பது ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின்’ முன்னோட்டம் என்று சொல்லலாம். ஆனால், வேதாத்திரியத்தில் இந்த சூக்கும பயணம் பயிற்சி 1996 ம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. கைவிடப்பட்டது. ஏனென்றால், அதில் அன்பர்கள் ஏற்படுத்திக்கொண்ட கவனக்குறைவுதான் காரணமாக இருந்தது. எனவே, வேதாத்திரி மகரிஷி அவர்களே ‘இதுவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

என்றாலும், வேதாத்திரியத்தில் வழங்கப்படும் ‘ஜீவகாந்த பெருக்கம்’ உங்களுக்கு சிறந்த மாற்றாக அமைந்திருக்கிறது. அது உங்களுக்கு உதவும்.
வாழ்க வளமுடன்
-

How can newcomers approach elevated yoga in spiritual sadhana?


ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?


பதில்:

மிக நல்ல கேள்வியாக கருதுகிறேன். மிக நீண்ட விளக்கம் தரவேண்டிய நிலையிலும், சுருக்கமாக இங்கே காணலாம். இந்த உலகெங்கும் மக்கள் பரந்து நிறைந்து வாழ்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே, மதிப்பாக சொல்லவேண்டுமென்றால் நூற்று முப்பது கோடிக்கு மேலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகமக்கள் தொகையை நீங்களே கணக்கிடலாம். இந்த கணக்கில் நாமும் இருக்கிறோம். சராசரியாக எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் நன்றாக, நிறைவாக, வளமாக உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். ஏன்? என்று கேள்வி கேட்டால், ஏற்றத்தாழ்வுதான் வாழ்க்கையில் நிதர்சன உண்மை என்று பதில் தருவார்கள்.

ஏனய்யா, உலகில் எல்லோருமே மனிதர்கள் தானே?  அப்படியானவர்கள் நன்றாக, நிறைவாக, வளமாக ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழமுடியாது? ஏன் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, குறைகளை உயர்த்தி வாழவைக்க முடியாது? இயற்கையோடு ஒன்றிணைந்த, முரண்பாடுகளற்ற வாழ்வை எல்லா வயதினரும் ஏன் கற்று, தனக்கும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் ஏற்ற நன்மையை பகிர்ந்து வாழமுடியாது? அந்த மாற்றத்தை ஏன் தரவும் முடியாது?

இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்கும் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்தான். ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பலப்பல சிக்கல்கள் இருக்கின்றன. உலகில் மக்கள் மேல் அக்கறையுள்ள, பெரும்பாலான எல்லா தலைவர்களும் இந்த விளக்கங்களோடுதான், மக்களிடம் சொல்லி அவர்களின் ஆதரவில், ஆட்சிப்பணிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஆட்சிக்காலத்தில் செயலிழந்து விடுவதுபோல ஒரு தோற்றம் வந்துவிடுகிறது. நிஜத்தில் ஒரு மாற்றமும் நடப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த நிலையில்தான், தன்னையுணர்ந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் உதவ வருகிறார்கள். தலைவர்களுக்கு அல்ல, எளிய சராசரி மக்களுக்காக. வேதாத்திரி மகரிஷி ‘உலக சமாதானம் வேண்டும் என்றால், முதலில் ஒவ்வொரு தனிமனிதனும், அவனுள்ளாக திருத்தம் பெற்று மன அமைதியும் நிறைவும் பெறவேண்டும்’ என்று சொல்லுகிறார். சமீபகாலமாக அந்த மாற்றம், மனவளக்கலை வழியாக மாற்றம் பெற்று வருகிறது. என்றாலும்கூட, உலகம்முழுதும் உள்ள மக்களுக்கு, எண்ணற்ற பயிற்சி மையங்கள் அவசியமாயிற்றே? அந்த அளவில் ஆசிரியர்களும் அவசியமாயிற்றே? அந்தவகையில்தான் பலப்பல யோக அமைப்புக்கள் உருவாகி மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில்தான் சில, ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளே புகுந்து, மக்களை யோகம் என்ற பெயரில், பணமும் பொருளும் பறித்து, பெயரும் புகழும் பெற நினைக்கிறார்கள்.

இத்தகைய ஏமாற்றுப்பேர்வழிகள் குறித்த உண்மைகள் உடனடியாக உலகெங்கும் பரவி, ‘ஆன்மீகத்தை பரப்பும் யோகிகள், மகான்கள், ஞானிகள் எல்லோருமே ஏமாற்றுக்கார்கள்’என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதையே மற்றவர்களுக்கும் சொல்லி, உண்மையான ஆர்வம் உள்ளவர்களையும் தடுத்துவிடுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு பக்தியும், யோகமும் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அப்படியானால் அந்த வகையிலாவது இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்களா? என்றால், அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள். மனிதர்களுக்குள் பிணக்கு, சண்டை, சச்சரவு என்று நிம்மதி இழக்கிறார்கள். பணம், பொருள், செல்வாக்கு, புலன் இன்பம் என்ற நான்கில் சிக்கித்தவிக்கிறார்கள். தினந்தோறும் உடலையும், மனதையும் இழந்து வாழ்வின் நோக்கம் மறந்து துன்பத்தில் வருந்துகிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் பிரச்சனையும், சமூகத்தின் மொத்த வாழ்வியலில் பிரதிபலிக்கிறது. பிறகு அது உலகெங்கும் பரவிவிடுகிறது. நவீன தொழில்நுட்பங்களால் சுருங்கிய உலகம், இதற்கு நீண்ட நேரத்தை எடுத்துகொள்வதில்லை. இதற்கான உதாரணங்களை நீங்களே அறிவீர்கள்.

இத்தகைய தனிமனித போக்கிலிருந்து, உங்களை விடுவித்து, மனிதனின் தற்கால பிரச்சனைகள், துன்பங்கள் இவற்றிலிருந்து விலகி, உண்மை விளக்கம் பெறவும், உடலை வலுவாக்கி, நோய்களில் இருந்து தடுப்பு பெறவும், வருமுன் காக்கவும் யோகம் அவசியம். பிறப்பின் உண்மையையை, மனிதனாக பரிணமித்த காரணத்தை அறிவதற்கு, ‘நான் யார்?’ என்ற கேள்வி வழியாக விளக்கம் பெற, யோகம் மட்டுமே உதவும். இதை அறியாமல், புரியாமல், தெரிந்துகொள்ளாமல் இந்த உலகில் வாழ்ந்து மடிவதால், யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. ஏற்கனவே பலகோடி கோடி மனிதர்கள் அப்படித்தான் வாழ்ந்து மடிந்தார்கள், மறைந்தார்கள். அவர்களின் வரிசையில் நீங்களும் ஏன் இணையவேண்டும்? பரிசோதித்து பார்க்கலாமே?

இரண்டறிவு ஜீவனான மண்புழுவின் பாதையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்துங்கள். அது வந்த பாதையில் திரும்பிப்போவதில்லை. தடையை கண்டு விலகி வேறு பாதையில்தான் முன்னேறும். ஆறறிவு ஜீவனான மனிதர்கள், வழியில் தடை இருக்கிறது என்பதற்காக, வீட்டிற்கே திரும்பிவிட முடியுமா? அங்கேயே வருந்தி உட்கார்ந்து விடவும் முடியுமா? இனி என்னுடைய எல்லாபாதையிலும் தடைகள் இருக்கும், எனக்கெதற்கு பயணம்? என்று தனக்குள்ளாக கேள்வி கேட்டு, தன்னை முடக்கிக் கொள்வானா? உண்மையையும் பொய்யையும் அலசிப்பார்த்து, உண்மை விளக்கம் பெற முடியாதவனா? உணவு சமைக்கும் அரிசியில் கல் இருக்கிறது என்றால், அரிசியையே, வாழ்நாள் முழுவதும் துறந்துவிடுவானா? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

வாழ்க வளமுடன்

-

Why need yoga, we need to life like as others, who free from on yoga in life?


மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான சந்தேகம் தான். ஒரு நூறு அன்பர்களை எடுத்துக்கொண்டால், அதில் யாரேனும் ஒருவருக்குத்தான், நிச்சயமாக யோகத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பது உண்மையே. அந்த ஒருவரை மற்ற 99 அன்பர்களும் தடுத்து நிறுத்திவிடுவார்கள், சிலவேளை அவர்களை பார்த்து அந்த ஒருவரும், யோகத்தை விட்டுவிடுவார். பெரும்பாலும் இதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த ஒருநபர், இத்தனை பேரும் யோகம் என்பதே அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அதைக்குறித்து ஒரு விபரமும் தெரிந்து கொள்ளாமல், வழக்கமான உலக வாழ்க்கையில் வாழ்கிறார்கள். நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அந்த நிலையில் நான் மட்டும் ஏன்? எதற்காக? யோகம் வேண்டும், அதில் இணையவேண்டும்? என்று நினைக்கிறேன் என்று குழப்பம் எழுந்துவிடுகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தில் விருப்பமும், அதில் இணைந்து உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமும், தானாக, உங்களுக்குள்ளாக எழவேண்டும். அது உங்களுடைய மனதை, சிந்தனையை இயல்பாக தூண்டவேண்டும். யாரோ சொன்னார்கள், இவர் சொன்னார், அவர் சொன்னார், முயற்சிக்கிறேன் என்றெல்லாம் யோகத்தில் இணையமுடியாது, இணைந்தாலும் கூட அதை தொடரவும் முடியாது. ஒரு நாளோ, ஒருவாரமோ, ஒருமாதமோ செய்துவிட்டு முழுமையாக அதை கைவிட்டு போய்விடுவார் என்பதுதான் உண்மை.

உலகில் பெரும்பாலோர்க்கு கடவுள் நம்பிக்கையே, அவர்களுடைய சிதைந்து போய் இருப்பதால், யோகம் குறித்த எந்த நல்ல எண்ணமும் கருத்தும் இருக்காது என்றே கருதவேண்டும். உண்மையில் கடவுள் (கட+உள்) என்ற தத்துவமும், நம்பிக்கையும் உண்மையாகவேதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பகல் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று வாதாடும் அன்பர்களை நாம் என்ன செய்துவிடமுடியும்? அதுபோலவேதான் நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 99 அன்பர்களும் இருப்பார்கள். இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், உங்கள் வாழ்க்கையையும், அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பணம், பொருள், வசதி அதுவெல்லாம் கணக்கில் இல்லை. அது யார்வேண்டுமானாலும், தகுந்த காலத்தில் சம்பாத்தியமாக கொண்டுவரலாம். அதற்கு தேவை உழைப்பும், விழிப்புணர்வும், முயற்சியும், ஆர்வமும் மட்டுமே. பரம்பரையாக செல்வாக்கோடு இருப்பவர், இப்போதும் உங்களைவிட பணக்காரராக் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதனால் அந்த பொருள்நிலை செல்வாக்கை விலக்கிவிட்டு, அவர்களுடை எண்ணம், சொல், செயல், வழக்கம், பழக்கம், அணுகுமுறை, உதவும் குணம், நிறைவு, அமைதி என்பதெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நாளையும், தன்னோடு இருக்கும் ஒவ்வொரு நபரையும் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள். 

உண்மையாகவே, இந்த 99 அன்பர்களைவிட நீங்கள், வித்தியாசமாக, உள்ளுணர்வில் இருப்பதை மிக எளிதாக கண்டுகொள்வீர்கள். யோகத்தில் நீங்கள் இணைந்துகொண்டால், மிக எளிமையாக அளவு, முறை கண்ட வாழ்வில், தன்னை அறிந்து, இறை உண்மையும் அறிந்து, நிறைவாக, நிம்மதியாக, என்றும் மகிழ்வோடு வாழ்ந்து அதை பிறருக்கும் பகிர்ந்து வாழமுடியுமே?!

மேலும் பிறவி நோக்கமும் நிறைவேறிவிடும். இதுவரை இருந்துவந்த கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களும், உங்கள் வழி வரும் தலைமுறையினரும் கூட நிறைவடைவார்கள். இயற்கையின் உன்னதமும் உங்களுக்கு புரிந்துவிடும். எனவே, யோகம் குறித்தான சிந்தனையில், விழிப்பாக இருங்கள்.

உடனே யோகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன், கட்டாயப்படுத்தவும் மாட்டேன். அதை நீங்களே முடிவு செய்யலாம். காலமும் உங்களுக்கு துணை செய்யும்.

வாழ்க வளமுடன்.
-

Does the man born in this world really have a purpose?


இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


பதில்:

இந்த உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகிற ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மனிதன் என்றால் ஆண் என்பதாக மட்டும் நினைக்கக்கூடாது. பெண்ணுக்கும் அத்தகைய நோக்கம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆணைவிட பெண்ணுக்குத்தான் அந்த நோக்கம் இயற்கையாக அமைந்திருக்கிறது எனலாம். பெண் ஏற்கனவே இந்த இயற்கையோடு வாழ்பவளும், இயற்கையின் முழு இயல்பை தன்னகத்தே பெற்றவளும்கூட பெண் தான்.

ஒரு நோக்கம் என்பதை, பொதுவாக இக்காலத்தில் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? பேரும் புகழும் பெறவேண்டும், குறையாத வளமும், நிறைவான பணமும் வேண்டும் என்று சொல்லுவார்கள்.  ஒரு மனிதர் எந்தெந்த நிலையில் வாழ்ந்து பழகுகிறாரோ அந்ததந்த அளவில் நோக்கம் மாறும். அரசியலில் இருப்பவர் கட்சிக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தலைவராக விரும்புவார். அலுவலத்தில் இருப்பவர், அந்த நிறுவனத்திற்கே தலைவராக விரும்புவார். நிறுவனம் வழி, தொழில், வியாபாரம் செய்பவர் உலகின் முன்னோடி நிறுவனமாக தன்னுடையது மட்டுமே இருக்கவேண்டும் என்று உயர விரும்புவார். இப்படி பலப்பல உண்டு.

ஆனால் இதெல்லாம் நிச்சயமானதுதானா? இதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது உண்மையிலேயே என்ன? பாராட்டும் புகழும் திருப்தியும் என்பது போதுமானதுதானா? ஒரு நொடியில், ஒரு நாளில் யாராவது வேறு ஒருவர், உங்கள்விட ஒரு படி முன்னேறினால் உங்கள் நிலை என்னவாகும்?! மேலும் தீடீரென்று உயர்த்தில் இருப்பவர், மறுநாள் இல்லை என்ற நிலை என்பதுதான் உலகில் நாம் பார்க்கிறோம். இதுநாள் வரை அவருடைய போராட்டம்  என்னவாயிற்று? என்ன நிறைவான பலனை அடைந்தார்? நிஜமாகவே அவருக்கு என்ன கிடைத்தது? நிச்சயமாக அவர் நோக்கம், விருப்பம் நிறைவேற்றம் அடைந்ததா? குறையோடு போய்ச்சேர்ந்தாரா? திருப்தியாக இருந்தாரா? என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?! யோசித்துப்பாருங்கள்!

ஆனால் இதெல்லாம் உலக வாழ்க்கை இயல்புதான், பொருள்முதல்வாத உலகில், நாம் உழைப்பதும் அதனால் பொருள்வளம் பெறுவதும் தேவையே. அதை விட்டு விலகமுடியாது. குரு மகான் வேதாத்திரியும் கூட இதையெல்லாம் விட்டுவிடு என்று சொன்னதே இல்லை. ஆனால் போதும் என்ற நிறைவான மன நிலைக்கு, வாழும் பொழுதே வந்துவிடு என்று சொல்லுகிறார். அந்த அளவிற்கு மேல், தேவைப்படும் பிறருக்கு பகிர்ந்தளித்து உதவுக என்று வலியுறுத்துகிறார்.

உண்மையில், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறப்பின் நோக்கம், தன்னை அறிவதுதான். இந்த இயற்கை அதைத்தான் நமக்கு உள்நோக்கமாக அமைத்திருக்கிறது. அதுதான் மனதில் இருக்கிறது, வெளியேவும் பிரகாசிக்கிறது. ஆனால் வளரும் காலத்தில் அது பலவகைகளில் சிக்கி மறந்துவிட்டது. உங்களுக்கு இது பிடிக்கும் என்ற ஒன்றை செய்தால், பிறகு உங்கள் மனமே ‘நான் கேட்டது இது இல்லையே’ என்று சொல்லிவிடும். இப்படி ஓவ்வொன்றாக எதை நீங்கள் விரும்பினாலும் அதில், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் திருப்தி ஏற்படுவதே இல்லை. உண்மைதானே? இல்லை நான் பொய்யாக சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

நம்முடைய மனம் மிகப்பெரிய பேராற்றலின் ஒரு சிறுபகுதி. அதை வாழ்க்கையில் சிறிய சந்தோசங்களில் அடைப்பதில் முழுமை பெறுவதில்லை. மனதின் நோக்கம், தன்னையறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை. மனம்+இதன்=மனிதன் என்பதால், மனிதனாகிய நமக்கும் தன்னையறிவதுதான் நோக்கம். அதற்காகவேதான் பிறப்பும் நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்

-

Are you feared because someone has teased your face and by comment? Is that true?!


உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!

[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]


பதில்:

என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்

இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன். 

மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?

இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.

இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள்  முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!

எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.

சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!

மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!

இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது. 

சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!

நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன். 

உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும்,  என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.