CJ for You

Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 02


 குருவை சரணடைவோம் - பாகம் 02


கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும்.  வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.


கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!

இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம். 


குருவை தேடும் காலம் எது?

ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள். 

கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.


நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை

அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும். 


அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!

எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. 

உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.

உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே.  வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம். 

வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 01


 குருவை சரணடைவோம் - பாகம் 01


உலகின் சிறப்பு என்ன?

இந்த உலகின் சிறப்பே, நேற்றிருந்தோர் இன்றில்லை என்பதே என்றார் அய்யன் திருவள்ளுவர். ஒரு மனிதனின் வாழ்க்கை, சாராசரியாக அறுபது ஆண்டுக்காலம் என்று வைத்துக்கொண்டால். அந்த ஆண்டுகளில் இறை உணர்வு பெற்று, உண்மை விளக்கத்தோடு பிறப்பின் கடமையை முடித்துவிட முடிகிறதா என்றால், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. ஒரு சிலருக்கே நிகழ்கிறது என்பதும் உண்மை.


வாழும்காலம் போதவில்லையே?!

பெரும்பாலான மனிதர்களுக்கு, தான் பிறந்த குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை தீர்க்கவே முழுகாலமும் செலவாகிறது. சிலருக்கு கல்வி கிடைப்பதில்லை, சிலருக்கு வேலை கிடைப்பதில்லை, வேலையும் தொழிலும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் கெட்ட நட்புக்கள், வழக்க பழக்கங்கள் இவற்றில் சிக்கி திசை மாறுதல் நடந்துவிடுகிறது. தன் தவறுகளால் சிக்கிக்கொள்ளுதல், தானாக, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைதல் உண்டு. சிலர், எதிர்கால பயம், குழப்பம் இவற்றால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கின்றனர். சிலருக்கு தீடீரென வரும் நோய் அவற்றால் முடக்கம் அல்லது நோய்தொற்று இவற்றாலும் வாழ்க்கை பாதிக்கிறது. இப்படியாக வாழ்க்கையை முழுமையாக வாழக்கூட வழியில்லை.

இத்தகைய சூழலில், பிறப்பின் கடமையாக, தன்னை அறிதல், இறை உணர்தலுக்கு ஏது வழி? என்றுதான் பொதுவாக தோன்றும். உண்மையாகவே, இத்தனை குழப்பங்கள் உங்களை சூழ்வதே இறையாற்றலின் விளைவால்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த புவியில் உங்களின் பிறப்பு நீங்கள் கேட்டு வாங்கவில்லையே? அது உண்மைதானே? அப்படியென்றால் உங்கள் பிறப்பின் உள் அர்த்தம், உண்மை என்னவாக இருக்கும்? 


உங்கள் பிறப்பின் ரகசியம்!

என்னையா இது? ஆண் பெண் சேர்ந்தால் ஒரு குழந்தை பிறக்காதா? என்று கேட்பீர்கள். எல்லா சேர்க்கையிலும் குழந்தை என்றால் இப்புவி தாங்காது. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம், வினைப்பயனே ஆகும். கர்மா என்று வடமொழியில் சொல்வார்களே அதுவே. அவ்வினைகளை தீர்க்க, புதிய அவதாரமாகவே ஒரு குழந்தை இந்தபுவியில் பிறக்கிறது. ஏன் தீர்க்க வேண்டும்? அப்போதுதான் உங்கள் பிறவி முழுமை அடையும். பிறப்பது யார் என்பதும் தெரியும். ஆதிகால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை தன் வாழ்க்கையை, திசைமாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கிறான், தன் இலக்கை எதுவென்று தீர்மானிக்காமல்.


வழிகாட்ட வந்தவர்கள்!

அந்த இலக்கை சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள் சொல்லிச்சென்றார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறையும் ஞானிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பக்தி மார்க்கம் வணிகமாகி, வாழ்க்கையை சிறப்பிக்காத நிலையிலும், அதை விட்டு விலகினால், இறையின் சாபம் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். யோகமார்க்கத்தை விட பக்தி மார்க்கம் எளிதாக இருக்கிறது. ஏதோ மனிதனால் ஆன, வழிபாடு, பூஜை, படையல், தேங்காய் உடைத்தல், பொங்கல் படைத்தல், அம்மாவாசைக்கு பிண்டம் வைத்தல் என்று சுலபமாக செய்யமுடிகிறது, இது போதாதா? இறைவனையும், முன்னோர்களையும் குளிர்விக்க! இதெல்லாம் இந்து மதத்தில் மட்டுமா என்ன? எல்லா மதங்களிலும் கடவுளை குளிர்வித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

 எத்தனையோ ஞானிகள் சொன்னாலும், வழி நடத்தினாலும்,  இவன் கேட்டபாடில்லை. நான் வாழப்பிறந்தேன், உண்ணப்பிறந்தேன், அனுபவிக்கப்பிறந்தேன் என்றே சொல்லிச்சொல்லி வாழ்க்கை சூழலில் சிக்கி சிதறடிக்கப்படுகிறார்கள். 

சரி கர்மா என்பது என்ன? அது என்ன தலைவிதியா அல்லது தலைஎழுத்தா? அடுத்த பதிவில் காண்போம். 

வாழ்க வளமுடன்.


Note: அடுத்த பதிவில் தொடர்கிறது


NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google





Incomplete Birth-debt on Life


பிறவிக்கடன் தீர்க்காத வாழ்க்கை


அன்பர்களே, என்னுடைய இணைதள பத்திரிக்கை தேடுதல் என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஏனென்றால், இத்தளங்களை பார்த்து செய்தியை வாசிப்பது என்பது, தற்போதைய இணையம், அந்தக்கால, மொட்டையான ஆர்வத்தை தூண்டும் துண்டு தலைப்புக்களை போல எழுதி, மீன் புழுவுக்கு ஆசைப்பட்டு கொக்கியில் மாட்டி சிக்கி தவிப்பது போல, நாமும் அந்த இணையதளத்தில் சிக்கி விடுவோம். ஆனால் சில நல்ல தகவல்களும் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். 


ஓய்வில் உழைப்பு

கடந்த மாதத்தில் அப்படி படித்த, ஒரு இணைதள பத்திரிக்கை ஒரு கட்டுரை படித்தேன். அதில் கிடைத்த செய்தியோடு, என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரில் இருக்கும், முதியோர் இல்லத்தில், அங்கே இருந்து வாழக்கூடிய பணிஓய்வு பெற்றோர்  ஒரு குழுவாக இணைந்து, பண்பலை வானொலி நடத்திவருகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எங்கள் வாழ்க்கை, இப்பொழுது வெறுமனே கழிவதில்லை, எல்லோருக்கும் பயன்படும்வகையில் நாங்கள், ஓவ்வொருவருமே செயல்படுகிறோம்.

இதுவரையில் எங்களின் வாழ்வில், எங்களுக்கு விருப்பமானதை செய்யமுடியாது இருந்தோம், இப்பொழுது அப்படி இல்லை.

எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லாமலிருந்தது. தற்பொழுது அதை செய்கிறோம்.

ஓவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை, வெளிக்காட்ட முடியாமல் அடைத்திருந்தோம். அதை செய்ய தள்ளிப்போட்டோம், அதற்கான கால அவகாசம் இல்லாமலிருந்தோம். கால ஓட்டத்தில் பிறரின் பார்வைக்காக செய்ய தயங்கினோம். இன்று ஓவ்வொருவரும் அத்திறமைகளை வெளியே தருகிறோம். திருப்தியாக இருக்கிறோம்.

இன்று எங்கள் பிள்ளைகளுக்கே, இதுவரை தெரியாத ஒரு முகத்தை அவர்களுக்கு காட்டியுள்ளோம். அவர்களும் பாராட்டுகிறார்கள்.

எங்களைப்போல உள்ள ஓய்வு இல்லத்தில் இருப்பவருக்கும், பணி ஓய்வுக்குப்பிறகு வாழ்க்கை இல்லை என்போருக்கும் உதாரணமாக இருக்கிறோம். சொல்லப்போனால் இளையோருக்கும் உத்வேகமாக இருக்கிறோம்.


எத்தனை கேள்விகள்?!

இந்த உலக வாழ்வியலில் இப்படியான அனுபவ வார்த்தைகள் மிகச்சரியானது என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு மனிதர் எத்தனை காலம்தான் இப்படியான மிகை உணர்ச்சிகளுக்கும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? வாழ்நாளில் என்றைக்கேனும் “அமைதி” எனும் நிலை நாட வேண்டாமா? எதுவுமே செய்யாமல், உள்முக ஆராய்ச்சியிலேயே அந்த ஆழ்ந்த அமைதி கிடைக்கிறதே அது வேண்டாமா? உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறீர்களே, உங்களை யார் என்று அறிந்தீர்களா? “நான் யார்” என்ற கேள்விக்கான பதிலை தேட முயற்சித்தீர்களா?

ஏன் இந்த பூமியில் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன நோக்கம் கொண்டு என்னை பெற்றெடுத்தார்கள்? என்ன தேடுதலுக்காக நான் வாழ்ந்தேன்? ஏன் இறை? எது இறை? கோவிலிலா? வீட்டிலா? மலைகளிலா? மலைச்சிகரங்களிலா? எங்கே இறை? நான் யார்? இளமையின் வளர்ச்சியில் நான் ஏன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்? அவர் ஏன் என்வாழ்வில் இணைந்தார்? எங்களுக்கும் ஏன் குழந்தைகள் பிறந்தன? அவர்கள் யார்? எதற்காக பிறந்தார்கள்? இப்படி நீண்டு செல்லும் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தேட முனைந்தீர்களா?

இத்தனை சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் வாழ்ந்து சொல்லிச்சென்றதெல்லாம் பொய்யா? இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும் மேற்குலகம், மன அமைதியை தேடி இந்தியாவுக்கே வருகிறார்களே அதிலெல்லாம் அர்த்தமில்லையா? சில ஆன்மீக, யோக தலைவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள மக்களுக்கு கற்பிக்கிறார்களே அதெல்லாம் விசயமே இல்லையா?


கட உள் என்பதற்கு கூடவா அர்த்தமில்லை?!

இந்த உலகை, இந்த வாழ்க்கையை, இந்த உலக இன்பங்களை, நட்புக்களை, மனிதர்களை புரிந்துகொள்ள அல்லது உங்களை இந்த உலகுக்கு வெளிக்காட்ட, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் வேண்டும்?! இறக்கும் வரையிலும் “இவள்/ன்” உழைத்தான், திறமையோடு இருந்தான். உதாரண மனிதராக வாழ்ந்தார் என்று சொல்லவேண்டுமா? அந்த வார்த்தைகளை பெறுவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? உங்கள் பகிர்வாக இவற்றைத்தான் உங்கள் பங்காக, இந்த உலகில் விட்டுச்செல்ல வேண்டுமா?



பொதுவான வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது?

நம் எல்லோருக்குமே, நம் பெற்றோர் ஏழையோ, நடுத்தரமோ, பணக்காரரோ என்றாலும், பொதுவான ஒரு வாழ்வு உண்டு. 14 வயதுவரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் உண்டு. அதற்கு பிறகு, விளையாட்டுத்தனம் மறைந்து, குடும்ப சூழல் அறிந்து, கல்வி, வேலை, தொழில், வியாபாரம், கடல் கடந்த வேலை அல்லது வணிகள் என்றபடி, நம் எல்லை எல்லைகள் விரிந்துவிடும். கல்வியில் பெற்றோர் துணை செய்தாலும் கூட, வேலை தேடுதல் அவரராகவே தேர்ந்தெடுக்கவேண்டியது இருக்கும்.  பிறகு, வேலை, தொழிலில், வணிகத்தில் ஓரளவு சம்பாத்தியத்தில் நிறைவு பெற்றால், காதல் வழி, திருமணம் வழி வாழ்க்கைத் துணைவர் கிடைத்து விடுவார்கள். சம்பாத்திய நிறைவு இல்லாத காதல் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்ல  வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதற்குள் அல்லது இதற்கிடையில் பெற்றோரின் மறைவு, அவர்களை தன்னோடு வீட்டில் வைத்துக்கொள்ளுதல் உண்டு.


ஓய்வை நோக்கி!

இந்த திருப்தி, அதிருப்தி தம்பதியர் கால வாழ்வில், குழந்தைகள் வந்துவிடுவர், பிறகு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்புக்கு ஆளில்லாமல் கஷ்டம், தன்னுடைய ஓய்வின்மைக்கு நடுவே அக்குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி, அவர்களுக்கான வேலை தேடுதல், ஆம். இப்போதெல்லாம் பெற்றோர்கள்தான் பிள்ளைக்காக வேலை தேடுகின்றனர். பிறகு அவர்களுக்கான மணமகன், மணமகள் தேடுதல் என்று பரபரப்பாகி வாழ்க்கை ஓடும். இதற்குள் தன் வயது கிட்டதட்ட 55க்கும் மேலே வந்துவிடும். அதாவது பணிஓய்வு (Retirement) நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


நம் ஓய்வு வாழ்க்கை!

நம் பெற்றோரை நாம் பார்த்ததுப் போன்ற அன்பும், அக்கறையும் இப்போது இருப்பதில்லை. 58/60 வயதில் பணிஓய்வுக்குப் பிறகு, ஓய்வுகால ஊதியம் வந்தால் அவர்பாடு சுகம். இல்லையேல் அவதி. அதோடு இப்பொதெல்லாம் வெகு சீக்கிரமே உடல்நல குறைபாடுகள் தலைதூக்குகின்றன. அதுவும் சிரமமே. இதனால் தன் பிள்ளைகளுக்கு சுமையாக?! மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். தற்போதைய பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பணிஓய்வுக்கு பிறகு, தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல், நல்ல முதியோர் இல்லங்களில், தாங்களாகவே பணம் கட்டி சேர்ந்துவிடுகின்றனர். அங்கே ஏற்கனவே வந்து தங்கி இருக்ககூடிய மற்றவர்களோடு “நல்ல நண்பர்களாக” வாழத் துவங்கின்றனர்.



materialistic vs spiritual

இப்படியான பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்ப வாழ்க்கைதான், பொருள்முதல்வாத உலகியல் வாழ்வு (Materialistic Life) என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையில் என்ன இழக்கிறோம் என்றால், நாம் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், பிறப்பின் கடமை, நான் யார் என்ற தேடல் ஆகியவை நிறைவு பெறவில்லை. 

ஆனால், பெரும்பாலும் கடவுள் மறுப்பு மிகுந்த இக்காலத்தில் அந்த நாத்திகவாதிகளை விட்டுவிடலாம். சிலரே ஆத்திகவாதிகளாக பக்தி மார்க்கத்தில் திளைத்திருப்பார்கள். அதுகூட என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் பக்தி மார்க்கத்திலும் தொய்வு வந்துவிடும்.  அதோடு இந்த உலகில் “இறை வணிகம்” மிக நன்றாக நடக்கிறது. காவி உடுத்திய போலிச் சாமியார்களும் மலிந்துவிட்டனர். அதனால் அவர்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. 


எனக்கு அவசியமில்லை எனும் கருத்து!

இதில் முக்கியமாக கருதவேண்டியது, இயற்கை குறித்த விளக்கமில்லை என்பதால், இறையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற சிந்தனைதான். வேதாத்திரி மகரிசி அடிக்கடி இரண்டு உதாரண கேள்விகள் கேட்பார்.

நீங்கள் பசியாற உணவு எடுத்துக் கொள்கிறீர்கள். உணவை எடுத்து வாயில்போட்டு, அரைத்து மென்று முழுங்குவதை தவிர உங்கள் வேலை ஏதும் இல்லை. அவ்வுணவை செரிமானம் செய்து, சக்தியாகவும், ரத்தமாகவும், தசையாகவும் மாற்றுவது யார்வேலை? நீங்கள் செய்தீர்களா? வேறு யாரேனும் செய்தார்களா? இல்லை அரசாங்கம் செய்ததா? சரி இந்த உலகில் மிகப்பெரும் அறிவியல் நிபுணர்களிடம் இரண்டு இட்லியை கொடுத்து, ரத்தமாக, தசையாக மாற்றித்தர கேட்டால், அவர்களாலும் முடியுமா?

இந்த பூமி எவ்வளவு எடை இருக்கும்? கணக்குப்போட்டால் 5.972 × 10^24 kg வரும். சூரியனின் எடை கணக்குப் போட்டால் 1.989 × 10^30 kg வரும். இப்படியே எல்லா கிரங்களுக்கும் போட்டுப்பாருங்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருப்பது எது?  ஒரு எடையுள்ள பொருளை ஒன்று, சும்மா தாங்கி, மிதக்க விட்டுக்கொண்டு இருக்கிறது என்றால், மிதக்கும் பொருள் வலிமையானதா? தாங்கும் பொருள் வலிமையானதா?   



இயற்கையும் இறையும்

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். இது அறிவியல், இயற்கை என்று நீங்கள் வாதிடலாம், இதைத்தான் ஞானிகள் “இறை” என்கிறார்கள். பொதுவாக சொல்லுவார்கள், உண்மையான குருவை தேடுதலில் நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அந்த குரு உங்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்துவைப்பார். 

இறை சிந்தனையில் தெளிவு பெற, 18 வயது நிரம்பினால் போதுமானது. வாழ்வில் எப்போது நமக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அந்த வயதே சிறந்தது. அந்த எண்ணம் எழுவதில், ஒரு காரணமும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இதில் யோகம் அறிந்துகொண்டால், பிறக்கும் குழந்தை “கருவிலே திருவுடையார்” என மாறலாம்! ஆனால் 60 ஆகியும், நான் இந்த உலகியலில் இயங்கிக்கொண்டே இருப்பேன் என்பது தவறல்ல. ஆனால் உண்மை உணராமல் இருக்கிறீர்களே?! 

இறந்ததும், பிறர் நினைவுகளால் வாழ்வது, இறவாமல் வாழ்வது வேறு. கடந்து உள்ளே அறிந்து, பிறப்புமின்றி, இறப்புமின்றி, எந்நாளும் அழிவின்றி இருப்பது எதுவோ, அதை தன்னிலே அறிந்து இருப்பதும் வேறு. எது உங்கள் தேர்வு?!

------

Photos thanks to: istockphotos, 123RF,  Dreamstime  

Greet Your Children for their Greatness


உங்கள் குழந்தைகளின் மேன்மைக்காக, அவர்களை வாழ்த்துங்கள்!


 
உங்கள் அன்புக்குழந்தை தூங்கும்போது, அருகில் சென்று, மெலிதான குரலில், அன்பாக, திருத்தமாக சொல்லுங்கள். 


ஓவ்வொரு நாளும் திரும்பத்திரும்ப, தினமும் சொல்லுங்கள். அவளது ஆல்ஃபா மன நிலை அதனை ஏற்று, அக்குழந்தையின் ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக படிப்படியாக மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டு சூழல் தோன்றும். இதை சொல்லச்சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அக்குழந்தையின் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். 


உங்கள் பேச்சும், தொனியுமே மாறும். சூழல் மாறும். உங்களின் உயர்ந்த எண்ண அலைகள் அக்குழந்தையை தழுவி அன்பு செய்யும். மனம் மாறும், மாற்றங்கள் நிகழும். வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும். தொடர்ந்து வாழ்த்தி வாழ்த்தி மகிழுங்கள். மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள். வாழ்க வளமுடன். 



உங்கள் அன்பு மகளுக்கான வாழ்த்து!

---

என் மகளே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவளாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவளாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவளாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவளாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்.

----


உங்கள் அன்பு மகனுக்கான வாழ்த்து!

---

என் மகனே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவனாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவனாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவனாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவனாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்

---


இவ் வாழ்த்துகளை தினமுமே சொல்லலாம். கூடுமானவரை தொடர்ந்து ஒரு வாரம் (ஏழு நாட்கள்) சொல்லுங்கள். இப்படி வாழ்த்துவதை மாதத்திற்கு ஒருமுறை என்றும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் செல்லங்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை தரும். நிச்சயமாக பலன் அளிக்கும் உண்மை இது. வாழ்க வளமுடன். 

----

காணொளி வாயிலாக அறியலாம்!

----

Photos thanks to: @Kevin Keith

Who is Eman the God of Death?


 எமன் என்பவன் யார்?


சிக்கவைக்கும் அல்காரிதம்

பொதுவாகவே, நாம் எந்த காணொளி குறித்து தேடினாலும், பார்த்தாலும், அதோடு தொடர்ச்சியுடைய மற்றொரு காணொளி, தானாகவே நமக்கு தேடித்தரும் வகையில்தான் YouTube algorithm அமைத்திருக்கும். இந்தா, இதையும் பார் என்று கொடுத்துக்கொண்டே இருக்கும். யுடுயூப் மட்டுமல்ல, நம் ஆர்வத்திற்கு தீனி போட அத்தனை வேகமாக இப்போது உள்ள இணையதளங்கள் செயல்படுகின்றன. சமீபகாலமாகவே நீங்கள் எதை தேடினாலும் அதுகுறித்த விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில்  வருவதையும் அறிந்திருப்பீர்கள்.


எமன் வாகனம்

கடந்தவாரத்தில், ஒரு நண்பர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். யுடுயூப் காணொளியில், எதேதோ பார்த்துக்கொண்டிருந்த பொழுது, காட்டுயானைகள் குறித்த காட்சிகளை பார்த்து ஆர்வம் கொண்டிருந்த வேளையில், இந்திய மேற்குமலை தொடர்களில் வாழ்ந்துவரும் காட்டு எருமைகள்,  வால்பாறை, கொடைக்கானல், ஊட்டி போன்ற நகருக்குள் வந்துசெல்லும் காணொளியை பார்த்திருக்கிறார். 

“அதை ஏன் கேட்கறீங்க, பார்த்ததிலே இருந்து அதுதான் மனசுல நிக்கிது”

“பிரமாண்டமா இருந்திருக்குமே, இந்திய காட்டு எருமைகளுக்கு நல்ல வலிமை, பெருமை இருக்கு, தெரியுமா?” என்றேன்

“ஆமா, பார்த்தாலே ஒரு பயம் கலந்த ஆர்வம்தான். ஆனா பயங்கர தெனாவட்ட நடக்குது” என்று சொல்லி சிரித்தார்.

“சில ரொம்ப ஆக்ரோஷமானவைதான், ஆனால் தேவையின்றி மனிதரை தாக்குவதில்லை. ஆனாலும் அது தாக்கும் தூரத்தை தாண்டி நிற்பதுதான் நமக்கு நல்லது”

“ஆமாம், இதுலே, ஊட்டி பார்க்கில், திருமணமாகி மூன்று மாதமே ஒரு தம்பதியினரை காட்டெருமை முட்டி, பையன் ஸ்பாட் அவுட், பொண்ணு 2 அப்புறமா இறந்துட்டாளாம்.”

“அடடா, உண்மையில் அது தாக்க வந்துட்டா, தரையில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி கேட்டிருக்கேன். ஆனால் நம்மை மாதிரி சாதரணமாவர்களுக்கு உடனே நினைவுக்கும் வந்துவிடாது. நாம் ஓட முயற்சிப்போம். அது பாய்ந்து வரும். வலிமையான முன் தலையும், கூர்மையான கொம்பும் அதற்கு உண்டே”

“ஆமா, கனவிலே கூட வந்து பயமுறுத்தும் போல இருக்கு” என்றார் சிரித்துக்கொண்டே.

“அதுமட்டும் வந்தா தப்பிச்சிரலாம், மேல ஒருத்தன் உட்கார்ந்து வந்தால்தான் தப்பிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு இருவரும் சிரித்தோம்.

“சரி, எமன் பற்றி ஒரு பதிவு போடுங்க” என்றார்.

எமன் வாகனம், காட்டெருமை அல்ல, கிராமப்புற வளர்ப்பான எருமை ஆகும். ஆனால், எமன் மாதிரியான ஆளுக்கு (?!) காட்டெருமை மிக பொருத்தமானதே!. 


எமன் கோவில்

எமன் பொதுவாகவே வழிபடும் தெய்வமாக இல்லை. ஆனால் மரணபயம், ஜாதகத்தில் மார்கஸ்தான கிரக நிவர்த்தி எனும் வகையில் பரிகாரம் செய்வதற்காக வணங்கவேண்டிய நிர்பந்தம் மனிதர்களுக்கு நேர்கிறது. சண்டைக்காரனிடமே சரணடைவது என்பது இதுதான். இப்படி பரிகார நேர்த்திக்காக சில கோவில்கள் அமைத்திருக்கிறார்கள். அந்தக்காலம் முதலாக என்று சொன்னால், விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை எனும் ஊரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி எனும் ஊரிலும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் எனும் ஊரிலும், தனித்த எமனுக்கான கோவில்கள் அமைந்திருக்கின்றன. காலத்தால் பிறகு அங்கங்கே நிறைய கோவில்கள் அமைந்திருக்கின்றன. 

Art by Suresh Pydikondala

யார் எமன்?

கதைகளாக பார்த்துகொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாக பார்த்தால், சூரியனின் மகன், சனியின் சகோதரன் என்கிறார்கள். ஏதோ சாபத்தால் முதலில் இறந்தவனே எமன், பிறகு சிவன், எமனை உயிர்பித்து மக்களின் உயிர்பறிக்கும் தகுதி கொடுத்ததாகவும், மார்கண்டேயன் உயிரை காப்பற்றி, சிவனெ எமனை எரித்ததாகவும், பூமியில் மனிதபாரம் அதிகமாக, தேவர்களின் கோரிக்கைபடி, எமனை உயிர்பித்ததாகவும் அப்போதிருந்து எமன் மக்களை உயிரைபறிக்கும் வேலைகளை மறுபடி தொடங்கியதாகவும் கதைகள் உண்டு. இந்த கதைகளுக்கு எல்லாம் பஞ்சமே இல்லை. 


உண்மையில் எமன் யார்?

எமன் இந்த வார்த்தையே மருவி வந்ததாகும். நியமம் என்றொரு வார்த்தை உண்டு. நியமம் என்பது #எண்வகை (எட்டு / அஷ்டாங்கா) யோகத்தில் இரண்டாவது நிலை. இறை அல்லது இயற்கையின் விதி, ஒழுங்கு, மாறாத நீதி என்ற வகையில் உணர்த்துவது ஆகும். 

(#எண்வகை யோகம் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம். காத்திருங்கள்)

இந்த நியமம், ஓவ்வொரு நொடியும் கடந்துகொண்டே இருப்பதும் ஆகும், முன்னோ, பின்னோ நகர்வதும் இல்லை. இந்த நியமத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு பாவம் நேர்கிறது என்றும், அது அவர்களிடைய வாழ்க்கை கணக்கில் வரவாக வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் வரவு வைப்பது சித்திரகுப்தன் என்றும், கணக்கை தீர்ப்பது எமன் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

கற்றுத்தேர்தலோ, படிப்போ, கல்வியோ இல்லாத பாமர மக்களுக்கு, ஒழுக்க வழக்க பழக்கங்களை கதைகளாக சொல்வது அக்காலத்திய வழக்கம்.  அதுவே இன்றும் ஆனால் கதைகளாக மட்டும் நிலைத்துவிட்டது.  

நியமம் செய்வது நியமன் என்ற வார்த்தையில், நியமன் (யமன்) எமனாகிப் போனான். நியமன் என்ற சமஸ்கிருத வார்த்தை, அப்படியே தமிழுக்கு மாறுகையில், காலன், காலத்தை ஒழுங்காட்சி செய்வபன் என்றாகிவிட்டது. 


காலன் காளி ஆனது

இந்த காலன் என்ற தமிழ்வார்த்தை, வட இந்தியாவிற்கு செல்கையில், திரிபு ஆகி, பெண்ணாகவும் ஆகி, காளி என்றாகிவிட்டது. மறுபடியும் அது தமிழுக்கு வந்து, இங்கும் காளி ஆகிவிட்டது. 

எமனுக்கும், காளிக்கும் உள்ள உருவம், செயல், அவர்களிடமிருக்கும் பொருட்கள் இவற்றைக்கொண்டு ஒற்றுமையை அறியலாம். எமனும், காளியும் சகோதர, சகோதரிகள் என்றும் சொல்லபடுவதுண்டு. இராமகிருஷ்ண பரமஹம்சரின் விருப்பத்திற்கு உரிய தெய்வமும், அவருக்கு உண்மையை உணர்த்தியதும் காளியே. 


இறப்பில் உயிர்ப்பு

பொதுவாக, இந்த உலகில் உயிர்வாழும் மனிதருக்கு மரணம் குறித்த தனிக்கவனம் இல்லாதிருந்திருக்க(!)  வேண்டும்.  அதாவது, மரணம் குறித்த அறிவோ, விளக்கமோ இல்லை என்ற நிலையில் வாழ்ந்திருக்க கூடும். நேற்றிருந்தான் இன்றில்லை என்றும், அவனுக்கு என்ன நடந்தது, நடந்திருக்கிறது என்பது விளங்கிக்கொள்ளாத நிலையில்தான் மனிதன் இருந்திருக்கிறான். பின்னாட்களில் அறிவு விளக்கம் பெற்றோர் அந்த நிலையை உணர்ந்து மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அந்த விளக்கத்திற்காக பின்னப்பட்ட கதையே நியமம் என்பதும், அதுவே எ(ய)மன் ஆகவும் மாறிவிட்டது.  

அதுவே இறப்பு குறித்த பயத்தையும் உண்டாக்கி விட, அதிலிருந்து தப்பிக்க அதையே இறை வடிவமாகவும் மாற்றி வழிபாடாகவும் வந்துவிட்டது. ஆனால், உண்மையாகவே இறப்பு குறித்த சிந்தனை வந்துவிட்டால், உயிர்வாழ்வது என்ற நிலை குறித்த உண்மையும் வந்துவிடும். எனவே காலனும், காளியும் உயிர் குறித்த சிந்தனையை தூண்டும் தெய்வ வடிவாகவும் ஏற்றுக்கொள்ளலாம்.


பகவான் ரமண மகரிஷியும் மரணம் குறித்த சிந்தனை வாயிலாகவே, “தான் யார்?” என்ற கேள்வியை தொடங்கினார் என்பதை நாம் அறிகிறோம். 


உயிர் காப்பானா (ளா), அழிப்பானா(ளா)

இரண்டு கேள்விக்கும் பதில் காத்தாலும் அழிப்பான்(ள்).  ஆனால், உயிரினங்களுக்கு பிறப்பு என்று நிகழ்ந்ததோ அன்றே இறப்பும் நிச்சயப்பட்டுள்ளது. இதில் மனிதன் விதிவிலக்கல்ல. சுழற்றிய பம்பரம், சுழலை நிறுத்தி கீழே விழுவது நமக்கு தெரிந்த உண்மைதானே. வேதாத்திரி மகரிஷி சொல்வது போல, “எல்லோருக்கும் தேதி குறிப்பிடாத ரிட்டன் டிக்கெட் வைத்திருக்கிறோம். யாரும் இதுவரையில் பயணத்தை நிறுத்தி வைத்ததில்லை”

நியமத்திலிருந்த வந்த எமனோ, காலனோ, காளியோ யாராக இருந்தாலும், இவர்கள்  நம் வாழ்வில், நம் வாழ்க்கையை குறிப்பிடும் ஒரு குறியீடு. அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நெடுங்கால பழக்கம். அதில் குறையும் இல்லை. ஆனால், வழிபடுகிறோம் என்பதற்காக, காலத்தில் இருக்கிற நியமங்களை விட்டு விலகிச்செல்வது முறையல்ல. 

நியமம் என்ற வகையில், இயற்கையின் விளைவோடு கூடிய நீதியில், சித்தர்கள் நமக்கு சொன்ன, 1) ஒழுக்கம் 2) கடமை 3) ஈகை இந்த மூன்றின் வழியாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், கிடைத்த உயிர் வாழ்வை இனிதே வாழலாம். தன்னைப்போலவே பிறரையும் மதித்து, கடமையாக உதவியும் செய்து வாழ்தலில் மகிழலாம். தான் செய்ததின் பிரதிபலனாக மீண்டும் நமக்கு, தகுந்த நேரத்தில் உதவி கிடைப்பதை எண்ணி வியக்கலாம்.  


மரணபயம்?!

ஒரு புதிய, புத்தம் புது திரைப்படம் (அரசால் தடை செய்யப்பட்டது), வீட்டில் OTT மூலம், தொல்லைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். திரைப்படம் பார்ப்பது என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். உடல் மண்ணுக்கு, உயிர் அந்நடிகருக்கு (அந்நடிகைக்கு) எனும் வகையில் என்று வைத்துக் கொள்ளலாமே. இப்பொழுது உங்கள் வீட்டில், திரைப்படம் இன்னும் 40 நிமிடத்தில் முடிவடையும் நேரத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

“ஐயகோ, இதென்ன சோதனை? முடிவு தெரியாமல் எப்படி?!” அழுது புலம்பி தவிக்கிறீர்கள். காரணம் தடை செய்யப்பட்ட அந்தப்படம் இனிமேல் வெளியிடவே மாட்டார்கள் என்பதே காரணம். 

வாழ்க்கை ஒரு தரம் தான் வாழ முடியும், திரைப்படம் பார்ப்பது போல இன்வெர்ட்டர் வைத்துக் கொண்டு அடுத்த 40 நிமிடத்தை கடத்த முடியாது. உங்கள் வாழ்க்கைக்கும், உயிருக்கும் இன்வெர்ட்டர் இல்லை. 

உங்கள் வாழ்வை, வாழும் காலத்திலேயே திருப்தியும், மன நிறைவும், உண்மையும் பெற்று, இயற்கையையும், இறையையும் உணர்ந்து, நான் யார்? (இவை எல்லாமே இன்வெர்ட்டர் தரும் 40 நிமிட மின்சாரம் என்று வைத்துக்கொள்க!) என்றும் தெளிந்தால் அடுத்த நாட்களை குறித்தோ, வரும் காலம் குறித்தோ கவலை இருக்கப் போவதில்லை.இப்போது மரண பயம் ஏன் வரும்?! எமனோ, காலனோ, காளியோ கவலை என்ன வந்துவிடும்? 

மனித பிறப்பின் முழுமையை அறிந்ததனால், இறப்பை இயல்பாக வரவேற்பீர்கள்.  

வாழ்க வளமுடன்.

----------
Present by:





Thanks to Photos and Images: Google and It's copyrighted owners