CJ for You

Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje


தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது தெரியுமா?

வாழ்க வளமுடன் ஐயா, தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? என்று விளக்குவீர்களா? என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். தன்னையறியும் யோக பயணத்தில், நாம் ஏதேனும் சொன்னால், சொல்லுபவரையே எடைபோட்டு, நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று கேட்டு காலை வாறிவிடும் அன்பர்கள் மத்தியில், இப்படியான கேள்விகளை கேட்டு தன்னைப்போல பிறரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதுபோலவே, என்ன சொல்லியிருக்கிறேன் என்றே அறியாமல், மேலோட்டமாக படித்துவிட்டு, ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?!’ என்று ஏளனம் செய்து, தன் தகுதியை வெளிப்படுத்திக்கொண்ட அன்பர்களையும் வாழ்த்துகிறேன். இத்தகைய அன்பர்கள்தான், என்னைப்போன்ற சாதகர்களுக்கு, படிகற்கள். நாம் சரியாக அடுத்தபடியில் நடக்கிறோமா? இல்லையா? என்று சோதனை செய்து, உறுதி செய்து கொள்வதற்கு உதவுகிறார்கள். இப்படி சொல்லுகிறாரே? என்று நானும் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் சொன்னால், அவருக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படியாக உணர்ச்சி வசப்பட்டால்கூட அது எனக்கு தளைதான்.

தளைகள் என்பது நமக்கு வேண்டாத சுமைகள் என்று சொல்லலாம். நம்மை தடுக்கும் கண்ணாடி சுவர்கள் அது. நம் கைகளை, கால்களை சுற்றி சிக்கலாகிக் கிடக்கும் கயிறு என்றும் சொல்லலாம். நம்முடைய முதுகில் ஏற்றி இருக்கும் பாரம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யோக வழித்துணையில் சுமை தேவையில்லை தானே? அத்தகைய சுமைகள் தான் தளை என்று சொல்லப்படுகிறது.

ஒரு பாறையில் ஒளிந்திருக்கும் சிலைக்கு, அதன் தேவையற்ற பாறைகள் தான் தளையும், சுமையும் ஆகும். அந்த பாறை சிற்பமாக மாறுவதற்கு, சிற்பி என்ற குரு தேவைப்படுகிறார். உளி என்ற யோக வழி தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாறைக்கு ஒன்றும் வேலையில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது தானே? ஆம். பாறைக்கு வேலை இருக்கிறது. அது, தான் சிற்பமாக மாற்றப்படும் வரை, பொறுமையாக குருவின் துணையையும், உளியின் செதுக்குதலையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, யோக பயிற்சியில், அதை சாதனையாக்கிட, மனம் ஒன்றி செயல்பட வேண்டும். இப்போது, இந்த தளை என்பதில் விடுதலையானது, எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருக்கும் அல்லவா?!

தளைகளை விடுவிப்பதிலும், யோக பயணத்தில் முன்னேறுவதிலும் அவசியமாக தேவைப்படுகின்ற ‘பொறுமை’ எல்லாவிதங்களிலும் நிலைபெற்று, உங்கள் வாழ்க்கையை, செயல்முறைகளை, வழக்கம் பழக்கங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லலாம். அப்படி இருந்த மனிதரா இப்படி மாறிவிட்டார்? என்று உங்கள் காதுபடவே பேசி அதிசயிக்கும் மனிதர்களை நீங்கள் காணமுடியும். ஆம். ஒரு புது மனிதராக நீங்கள் மாறிட முடியும் என்பதே உண்மை.

எனினும், தளைகளை களைதல், உடனடியாக நிகழக்கூடியதல்ல. இதற்கு பல காலங்கள் ஆகலாம். உதாரணமாக சொன்னால், பல பிறவிகள் கூட ஆகலாம் என்பதே உண்மை. அந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. இந்த தளைகள், நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக நம்மை வந்தடைந்தது. வந்துகொண்டும் இருக்கிறது. கூடுதலாக, பரம்பரை வழியாக, கருமூலமாகவும் நமக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை முற்றுணர்ந்த குரு, நமக்கு உதவியாக இருந்து, இந்த தளைகளில் இருந்து, நம்மை விடுவிக்க துணையாகவும் இருக்கிறார். அவர் காட்டுகிற வழியில், அந்த அறிவுரைகள்படி நாம் நம்மை திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் போதும். தளைகள் தானாகவே நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்த உண்மையை உங்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்தில்கூட, புதிதான தளைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளலாம். நம்மையறியாமல் சில தளைகள் நம்மீது படர்ந்துவிடும். அதை லாவகமாக, விட்டு விலகிட, விலக்கிவிட நாம் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. தளை என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்கள் யோக பயணத்தில் சிறக்க, உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.

Time is wasted in the economy to satisfy its own needs. Where do I join yoga, get Kundalini initiation and get true explanation? Very confusing. Is this why they ask me that I am not interested in yoga? What is your response to them?


வாழ்க வளமுடன் ஐயா, பொருளாதாரத்தில் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்திடவே காலம் வீணாகி விடுகிறது. இதில் நான் எங்கே யோகத்தில் இணைந்து, குண்டலினி தீட்சை பெற்று, உண்மை விளக்கம் பெறுவது? மிகவும் குழப்பமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கு யோகத்தில் ஆர்வம் இல்லை என்று கேட்கிறார்களே? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?


அவர் சொல்லுவது உண்மைதான். பக்தியில் இருக்கும் மனிதர், அதிலிருக்கும் உண்மை தத்துவங்களை அறிந்திட நினைத்தால், அவர் யோகத்திற்கு வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒரு சிலருக்கு, யோகத்தில் தானாகவே ஆர்வம் வந்துவிடும். அதற்கு காரணமாக இருப்பது, அவருடைய மூதாதையர்கள், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையின் ஊக்குவிப்பு. இவர்களுக்கு, தங்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொருளாதார வாழ்க்கையோடு போராடிக்கொண்டே யோகத்திலும் இணைந்து உயர்வார்கள்.

எனினும் ஒருவர், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பிறகுதான் யோகத்திற்கு வரவேண்டும் அல்லது வரமுடியும் என்பது தவறான கருத்து. அப்படிப்பார்த்தால், உலகில் உள்ள எல்லா பணக்காரர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் யோகத்திற்கு வந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்துவிட்டதா என்ன? இல்லைதானே?

ஆனால், ‘அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய பாமரனுக்கு யோகம் தேவையில்லை’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆமாம். அவனுக்கு ஒவ்வொருநாளும் மிகுந்த போராட்டமாகவே இருக்கும் அல்லவா? எப்படி வாழ்வது? எப்படி உணவு கிடைக்கும்? எதை சாப்பிடுவது? என்ன வேலை கிடைக்கும்? எப்போது தூங்குவேன்? என்ற சிந்தனை ஓட்டத்திலேயே இருக்கும் மனிதனுக்கு, யோகம் கற்க வாய்ப்பிருக்காது. அவன் பக்தியிலும் இருக்கமாட்டான். ஆனால், கடவுளே, என் நிலமை ஏன் இப்படி இருக்கிறது? என்று புலம்பிக்கொண்டுதான் இருப்பான். சரிதானே?

பொதுவாகவே, உலகில் வாழும் மனிதனுக்கு, பொருளாதாரம் அவசியம். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருள் பலம், அதன் உபயோகம் இல்லாமல் வாழமுடியாது. அந்த பொருளுக்காக, இன்னொரு மனிதரை சார்ந்தும் வாழமுடியாது. அப்படி சார்ந்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அது உண்மைதான், அதற்காக, தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை, சம்பாதித்துக் கொண்டே இருக்கமுடியுமா? அதுமட்டுமேதான் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? நாம், இந்த உலகில் பார்க்கின்றோமே? பலகாலம் ஓடிஓடி சம்பாதித்த பணத்தையெல்லாம், தீடீரென்று ஒருநாள், தன்னுடைய உடலில் ஏற்பட்ட நோய் தொந்தரவுகள் தீர்க்கும் மருத்துவமனைக்குத்தானே செலுத்துகிறார்?. உண்மைதானே? சிலர், தன்னுடைய சொத்துக்களையும் கரைத்துவிடுகிறார்கள். இதுபோலவே சில வழக்கு விசாரனைக்கும் தன் சம்பாத்தியத்தை வழங்கிவிடுகிறார்கள் அல்லவா?

சாரசரியான பொருளாதர உலகின் பார்வையில், பொருளாதார உயர்வை விட்டுவிட்டு, யோகத்திற்கு எப்படி வருவது? என்று உங்கள் நண்பரோ, வேறு சிலரோ கேட்பது உண்மையாகவே தோன்றும். யாருமே, பொருளாதரத்தை விட்டுவிட்டு யோகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை. நிச்சயமாக, வேதாத்திரியம் அப்படி சொன்னதே இல்லை. பொருளாதாரத்தில் நன்கு உயருங்கள். இந்த அளவில் போதும், நான் நிறைவாக இருக்கிறேன் என்ற நிலைக்கு வாருங்கள். உங்களுடைய பொருளாதாரம் பலமாக இருக்கட்டும்.  உங்கள் வாழ்நாளுக்கும் போதுமானதாகவே இருக்கட்டும். அதில் ஒருவகையான மன நிறைவை கொண்டுவாருங்கள். பொருளாதாரத்தில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இருப்பது வேறு. போதும் என்ற மன நிறைவை அடைவது வேறு.

இந்நிலையில், எனக்கு இருப்பது போதும் என்ற நிலையிலும், இந்த நிலையில் இருந்து என்னை நிறைவு செய்துகொண்டு, ‘என் பிறப்பின் நோக்கத்தை அறிவதையும், பிறப்பின் கடமையை தீர்த்திடவும் யோகத்தில் இணைகிறேன்’ என்று மாற்றம் கொள்ள வேண்டும். பொதுவாகவே, யோகத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொல்லுவார்கள். அதில் 1) வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு, 2) வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவு. இந்த இரண்டில் எது அவருக்கானது என்பதை சிந்தனை செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், ஒருபோதும், சம்பாத்தியத்தை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதையும் அவருக்கு விளக்குங்கள். அவர் அதில் நிறைவு பெறும் வரை, போதும் என்ற மனநிலை வரும்வரை பொருளாதாரத்திலும், சம்பாத்தியத்திலும் தொடரட்டும். அதுதான் அவருக்கு நன்மையுமாகும்.

இந்த உலகில் வாழும், ஓவ்வொரு மனிதனும், தன்னுடைய வேலை, வியாபாரம், தொழில் என்ற வகையில், பொருளாதார உயர்வை பெற்றே ஆகவேண்டும். தானும் உயர்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் வகையிலும் மாற்றத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். பிறரை உடலாலும், மனதாலும் வருத்தம் செய்யாத அளவில் தன்னளவில், பொருளாதார உயர்வை பெறவும் வேண்டும். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, இந்த அளவிலான பொருளாதார உயர்வு எனக்கு போதும் என்ற நிறைவை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விளக்கம் பெறாமல் யோகத்தில் இணைவதை தவிர்க்கலாம்.

என்ன இப்படி சொல்லுகிறீர்கள்? ஒரு யோகி இப்படி சொல்லலாமா? என்று கேட்பீர்கள். வேதாத்திரி மகரிஷியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். இதில் என் கருத்தாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒருவேளை, இயல்பாகவே, தானகவே, யோகத்தில் இணைந்திட வாய்ப்பு கிடைத்தால், கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. எதுவும் குழப்பம் அடையப்போவதும் இல்லை. வழக்கமான உங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகிடாமல், யோகத்தையும் தொடரலாம். நன்மையும் அடையலாம். இதனால் அதுவும், அதனால் இதுவும் கைவிட்டு போய்விடுவதில்லை. நிச்சயமாக, பொருளாதார நிறைவு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், யோகத்திலும் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள் என்பது உண்மையே. இதற்குச் சான்றாக நிறைய அன்பர்களும் இருக்கிறார்கள். சரிதானே?

மறுபடியும் நினைவுறுத்துகிறேன், பொருளாதார நிலையை, வாய்ப்புக்களை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை. அதுபோலவே பொருளாதார நிலையும், வாய்ப்பும் மட்டுமே அவசியம் என்று யோகத்தை கைவிட வேண்டியதும் இல்லை.

இந்த விளக்கத்தை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். நேரடியாக அவரை, இந்த பதிவை படிக்கச்செய்யுங்கள். தானாக உண்மை விளங்கிக் கொள்வார். சில நாட்கள் சிந்தனை செய்தார் எனில், நல்ல விளக்கமும் அவருக்கு கிடைக்கும். அதன்வழியில், அவருக்கு விருப்பமானதை தொடர ஆயத்தமாவார். உங்களுக்கும் ஒருவரை நன்வழிக்கு கொண்டுவந்த திருப்தியும் கிடைத்துவிடும் அல்லவா?

வாழ்க வளமுடன்.

-

At the end of the Vethathiriya meditation, instead of saying Om Shanti three times, it is a bit difficult to say Amaiti or peace. I don't think there's really peace there. Is it right to change it like this without saying Om Shanti? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவத்தின் முடிவில், ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்லுவதற்குப் பதிலாக, அமைதி என்று சொல்லுவது, சற்று நெருடலாக இருக்கிறது. உண்மையிலேயே அங்கே அமைதி வரவில்லை என்று கருதுகிறேன். ஓம் சாந்தி என்று சொல்லாமல் இப்படி மாற்றுவது சரிதானா? விளக்குக.


நீங்கள் வேதாத்திரி மகரிசியின் காலத்து வேதாத்திரிய அன்பர் என்று கருதுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்து கொண்டது 2006ம் ஆண்டில் தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே, ஓம் ஷாந்தி, அமைதியாக மாறிட்டது. இந்த மாற்றத்தற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்று நமக்குத் தெரியாது. எனினும், இந்திய அரசும், அரசியலமைப்பும், மக்களும், மதம் சார்ந்த அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே, தனித்த நிலையில் ‘அமைதி’ என்று மற்றம் செய்யப்பட்டது.

இதில் வேதாத்திரி மகரிஷிக்கு ஏற்பு உண்டா? என்றால் இல்லை என்றுதான் கருத இடமிருக்கிறது. காரணம், வேதாத்திரியம் என்பதே எந்த எல்லைக்குள்ளும் சிக்கிடாத தன்மை கொண்டது. ஆண் பெண் என்ற பேதம் கூட அதற்கு இல்லை என்பதுதான் நிச்சயமான உண்மை. அப்படி இருக்கும் நிலையில், ஓம் ஷாந்தி என்பது மதரீதியாக இருக்கிறது என்பது, புரிந்து கொள்ளாத தன்மை. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் உருவாகாமல இருக்க, மாற்றித்தானே ஆகவேண்டும்? அதனால் மாற்றப்பட்டுவிட்டது.

உங்களுக்கும் எனக்கும் ‘அமைதி’ என்று சொன்னால், அந்த வார்த்தை அமைதியை தருவதில்லை என்பது நிஜமே. ஏனென்றால், ஓம் ஷாந்தி என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால் கடந்த இரு தசாம்ச ஆண்டுகளாக, வேதாத்திரியம் பழகுவோரும், கற்பிக்கும் ஆசிரியரும், ‘அமைதி’ என்று சொல்லித்தான் அமைதியை நிலை நாட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. ஒரே நல்லது என்னவென்றால், இனிமேல் யாரும் ‘ஓம் ஷாந்தி’ என்று சொல்லி தவத்தை முடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தவில்லை. அந்த வகையில் விரும்புவோர் ‘ஓம் ஷாந்தி’ என்றும் சொல்லலாம். ‘அமைதி’ என்றும் சொல்லலாம். நீங்கள் கேட்ட இதே கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே ஒரு அன்பர் கேட்டுள்ளார். அந்த பதிவை இப்பொழுது உங்களுக்காக பகிர்கின்றேன்.  இந்த பதில் வழியாக, நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவரும் என்பது உண்மை. இதோ!

-

கேள்வி: சுவாமிஜி! உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

மகரிஷியின் பதில்: “ஓம்” என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கேத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று. அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க மௌனம் என்ற குணத்தை வைத்து மாத்திரைக் குறைவான “ம்” என்ற மகர மெய்யைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம். அதனுடன் சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலாதாரத்தில் எழுந்து, துரியத்தில் முடியும் உயிர் எழுத்தாக வருவது “ஓ” என்ற சப்தம் தான். “ஓ” என்ற சப்தத்துடன் “ம்” என்ற மகர ஒற்றை இணைத்து “ஓம்” என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது. இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். “ஓம் சாந்தி” என்று தவ முடிவில் கூறுவது நாம் எல்லோரும் இறையருளான அமைதி பெறுவோம் என்பதேயாகும். விருப்பப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தைகளைக் கூறாமல் விட்டு விடட்டுமே.

அப்படி விட்டுவிட்டால் அதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் ஏற்பட்டு உலக சமுதாயம் என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது தவமுறையில் ஒரே சீரானமுறை (Uniformity) போய்விடும்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

-

வாழ்க வளமுடன்!

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

Kundalini Yoga is meant to be practiced for many years, but it's funny that it is available immediately and a lifetime is enough. Is it also a deception that you can learn without Vasiyogam? Can you explain how mindfulness works?


குண்டலினி யோகம் பல்லாண்டுகாலம் கற்க வேண்டும் என்பதுதான் முறை, ஆனால் உடனே கிடைக்கும் என்பதும், வாழ்நாள் போதும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வாசியோகம் இல்லாமல் கற்கலாம் என்பதும் ஏமாற்றுவேலையோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. மனவளக்கலை எப்படி என்பதை விளக்குவீர்களா?

நீங்கள் இன்னமும் அந்தக்காலத்து மனிதராகவே இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உண்மையாகவே நீங்கள் உங்களை, இந்த நவீன காலத்திற்கு மாற்றிக் கொண்டீர்களா? இல்லையா? மற்றவர்களை பார்த்தாவது அந்த வாழ்வியல் மாற்றத்திற்கு வரவில்லையா? இன்னமும் பழமையில்தான் வாழ்கின்றீர்களா? என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? 

சித்தர்கள் வழங்கிய குண்டலினி யோகத்திலும், அவர்கள் வழியாகவே மாற்றமும், எளிய பயிற்சிகளும் வந்துவிட்டது. தீடீரென வேறு யாரும் குறுக்குவழியை, குண்டலினி யோகத்தில் தரவும் முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லை, உங்கள் வந்தடையவில்லை. அதனால் நீங்கள் இன்னமும் பழைய முறையைல், கடினமான வழியில், வீட்டை, நாட்டை, வேலையை, கடமையை, அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு, சந்நியாசி கோலம் கொண்டு, காட்டிற்கு போய்விட வேண்டும் என்ற காலத்திலேயே இருக்கிறீர்கள்! 

உண்மையை புரிந்து கொள்ள தயாராகுங்கள். குண்டலினி யோகம் என்ற  வார்த்தைதான், வேதாத்திரி மகரிஷியால், எளிய உண்மை அர்த்தம் தரும் ‘மனவளக்கலை’ என்றானது. இந்த, மனவளக்கலை என்பது பயிற்சி மட்டுமல்ல, அள்ள அள்ள குறையாத இயற்கை செல்வத்தை பெற்றிருக்கும் ஒரு பெட்டகம் ஆகும். அந்த செல்வத்தின் வழியாக, உங்களின் அன்றாட வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளலாம். உங்களுடைய பொருள்வளத்தையும் உயர்த்திக்கொள்ள தகுதியாக்கிக் கொள்ளலாம்.  எனவே, யோகத்தின் இணைவதால் என்னபயன்? என்ற கேள்விக்கு இடமில்லை.

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இதை நீங்கள் அடிப்படை பயிற்சியிலேயே தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடலை வளமாக்கும், எளியமுறை உடற்பயிற்சியை கற்றுத்தேரலாம். உயிரை வளப்படுத்தி, வாழும் நாளை சிறப்பாக்கிட, காயகல்பயோக பயிற்சி கற்றுக்கொள்ளலாம். குருவின் அருளாசியோடு தீட்சை பெற்று, தவம் கற்றுக் கொள்ளலாம். இத்தகைய மூன்று முக்கிய அம்சங்களும், உங்களுக்கு கிடைத்துவிடுகிறது.

இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும்.

சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே ‘மனவளக்கலை’ ஆகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்று விட்டால், அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய மாற்றம், எத்தகையோ பிறவிவழியாக நாம் கைவிட்டுவிட்டோம் என்பதே உண்மை. இன்று, இப்பொழுது கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? உடனே கைக்கொண்டு, நமக்கு பயனாக்கிக் கொண்டு, நம் பிறவியின் நோக்கத்தையும், கடமையையும் நிறைவேற்றிட வேண்டும். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Can we get everything we ask for through this Law of Attraction? Everyone says they won. But nothing happened to me? How long do you have to be confident? I came to know that Guru Vethathiri Maharshi has said a similar concept and method in Vethathriya also. Is that really the truth?


வாழ்க வளமுடன் ஐயா. இந்த Law of Attraction என்பதை சொல்லும் சீக்ரெட் நூல் வழியாக, நாம் கேட்பதை எல்லாமே பெறமுடியுமா? எல்லோருமே வெற்றி பெற்றதாக சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லையே? எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்? வேதாத்திரியாவிலும் இதுபோன்ற ஒரு கருத்தை, வழிமுறையை, குரு வேதாத்திரி மகரிஷி சொல்லி இருப்பதாக அறிந்தேன். அது உண்மைதானா? அதுகுறித்து விளக்குவீர்களா?

The Secret என்ற நூல் சமீபமாக, (14 ஆண்டுகளாக) உலக மக்களிடையே பிரபலமாகிவிட்டது. பலருக்கும் இது குறித்த விசயங்கள், பேசு பொருளாகி பகிரப்படுகிறது. இது திரைப்படமாகவும், நூலாகவும், கட்டுரையாகவும், ஒலி நூலாகவும் இணையத்திலும் கிடைக்கிறது. நானும் கூட அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாமே! என்று கவனித்தேன். ஆனால் முழுமையாக பார்க்க, படிக்க வாய்ப்பு அமையவில்லை. என்னுடைய சில நண்பர்கள்கூட, அதில் சில உண்மைகள் இருக்கிறது, உதவும், என்று சொல்லி படிக்க சொன்னார்கள். ஏனோ அது ஆர்வத்தை தூண்டவில்லை.


வேதாத்திரிய யோகத்தின் நல்விளக்கம், ஒருவர் பெற்றபின்பு, அவருக்கு வித்தியாசப்பார்வை இருக்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லாவகையான வேதாத்திரியம் அல்லாத கருத்துக்களிலும், அக்கருத்து சொல்லவருவது எது? என்ற உண்மை, அவருக்கு புலப்பட்டுவிடும். இதற்கு உதாரணமாக, இனிப்பு பண்டங்கள் பலப்பல வகையான பெயர்களில், வடிவங்களில், நறுமணங்களில் இருந்தாலும், அவை எல்லாமே, சர்க்கரை இனிப்பு என்ற ரசாயன தன்மையை மட்டுமேதான் பெற்றிருக்கின்ற என்ற அடிப்படை கருத்தில், ஒன்றிணைப்பதைப் போலவே ஆகும்.

எனினும், உங்களுக்காக, உங்கள் கேள்விக்காக, The secret, The power என்ற அந்த நூலை படித்தேன். ரூண்டா பைரன் என்ற பெண்மணி, தன் அனுபவங்களின் அடிப்படையில், அதுபோலவே சிந்தித்து அனுபவம் பெற்ற நபர்களை சந்தித்து, அவற்றை தொகுத்து, திரைப்படமாகவும், நூலாகவும் தந்திருக்கிறார். அதில் சில உண்மைகள் பொதிந்திருக்கிறது. எனினும், அது உலகாதாய விசாரணையாகவே இருக்கிறது. பொருள்முதல்வாத உலகியலில், மனிதனின் தேவைகள் மற்றும் மனம் குறித்து விளக்கினாலும், அங்கே அதற்கான பொது தன்மையில் மட்டுமே விபரம் கிடைக்கிறது. சில ஆன்மீகம் கலப்பு இருந்தாலும், யோகமாகவில்லை. எனினும், சாராசரி மனிதருக்கு தேவையான கருத்துகள் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கேள் கிடைக்கும் என்ற ரீதியில் இருப்பதும், நீங்களே மகத்துவமானவர், ஈர்ப்பு விதி உங்களிடமே இருக்கிறது, செயல்படுகிறது என்பதும், நன்றியுணர்வோடு இருப்பதும், நேர்மறை எண்ணங்களோடு இருப்பதும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தனியாக எதிர்க்கருத்து எனக்கில்லை. எனவே, என்னிடம் விளக்கம் எதிர்பார்ப்பதைவிடவும், நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு கலந்துரையாடி, உண்மை அனுபவத்தை தெரிந்து கொண்டு, உங்களுக்கான வழியை பெற்றுக்கொள்ளுங்கள். பொதுவாகவே, எதுவும் நடக்கவில்லையே? என்ற கருத்துக்கு உடனடியாக வந்துவிடவும் கூடாது. நம்பிக்கை இழக்கவும் கூடாது.

வேதாத்திரியத்தில், இறை என்ற பேராற்றலிடம், கேட்டுப்பெற மனிதனுக்கு தகுதி உண்டு என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இந்த பேராற்றலே, பிரபஞ்ச சக்தி, டோட்டாலிட்டி என்று சீக்ரெட் நூலில் குறிப்பிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் ஆனால், ஏற்கனவே கேட்டுவைத்த வரிசைப்படியேதான் நடக்கும் என்பதையும் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும், உன்னை தகுதியாக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறார். அதையேதான், Fraction demand Totality supplied என்றும் சொல்லுகிறார். தன் வாழ்க்கை அனுபவத்தின் வழியாகவே, அருட்காப்பும், சங்கல்பமும் தந்திருக்கிறார். அதன் விளக்கத்தை, தன் சொற்பொழிவிலும், கட்டுரைகளிலும், கவிகளிலும், என் வாழ்க்கை விளக்கத்திலும் தந்திருக்கிறார்.

இதனோடு, சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் என்பதையும், நமக்கு தந்திருக்கிறார். அதன் உண்மைகளையும் நமக்கு விளக்கியிருக்கிறார். யோகத்தில் நம்மை, நான் யார்? என்று உணர்ந்தறிவது, நம்முடைய பிறப்பின், நோக்கமும் கடமையும் ஆகும். அதனோடு, அந்த ஆராய்ச்சி பயணத்தோடு, உலக வாழ்க்கையும் முக்கியம், குடும்ப கடமையும், சமூக கடமையும் முக்கியம் அல்லவா? வேதாத்திரியம் இதை வலியுறுத்துகிறது. அந்தக்காலம் போல விட்டுவிட்டு செல்வது பொருந்தாது என்றும் சொல்லுகிறது. எனினும் வேதாத்திரிய கருத்துக்கள் தனித்துவமானவை. இவற்றை, The secret, The power, law of attraction என்பதை விளக்கும் நூலின் கருத்தோடு ஒப்பிட முடியாது.

மேலும் சில உண்மை விளக்கமறிய, இந்த காணொளி உதவிடும்.

பிரபஞ்ச அறிவு என்பது என்ன? அதனோடு இணைந்து கொள்வது எப்படி ? உண்மை விளக்கம் Universal Conscious, Human

வாழ்க வளமுடன்