CJ

Why most of persons stayed long with their personality?


மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


பதில்:

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இதைச் சொல்லுகின்ற உங்களுக்கும்கூட ‘நான் இப்படித்தான்’ என்ற நிலைபாடு இருக்கும் என்பதும் உண்மையே. அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்களே யாரிடமாவது, உங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டால், அவர்கள் சொல்லிவிடுவார்கள். நாம் யார்? நம் நடவடிக்கைகள் என்ன? என்று விபரமாக சொல்லுவார்கள்.

ஒவ்வொடு பொருளுக்கும் தரம், குணம், செயல்பாடு என்று இருப்பதுபோலவே, எல்லா ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் உண்டு. அதை குணாதசியம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Quality, Personality என்று குறிப்பிடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிக தெளிவாக ‘குணநலப்பேறு’ என்று சொல்லுகிறார். இதிலேயே குணம், நலம், அதனால் அடையும் பேறு என்ற மூன்று வார்த்தைகளும், பொருள்களும் நிறைந்திருக்கக் காணலாம்.

இயக்கமற்ற பொருட்கள், ஓரரறிவு தாவரங்கள் ஆகிய தன்னுடைய கருவழியாகவே தன்னுடைய ‘குணநலப்பேறு’ பெற்றுக்கொள்கிறது. ஒரு களிமண், ஒரு பாறை, உப்புக்கல், மிளகாய், மாம்பழம் என்று உதாரணம் எடுத்துகொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரறிவு முதல், ஆறறிவு மனிதனாக நம்மையும் சேர்த்து, கருவழியான ‘குணநலப்பேறு’ மட்டுமல்லாமல், வாழ்கின்ற சூழல், கூட்டு, சமூகம், தேவை, எதிர்பார்ப்பு, அனுபவம் என்று பலவழிகளில் புதிதாகவும் ‘குணநலப்பேறு’ அமைந்துவிடுகிறது.

முதலில் ஏற்படும் தேவை என்ற உணர்வுதான் எல்லா ‘குணநலப்பேறு’நிலைக்கும் அடிப்படை ஆகிறது. அதன்படிதான் மனிதர்கள் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்கள், தனக்கு பாதிப்பு, இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஒருசிலர் என்ன நிகழ்ந்தாலும் ‘நான் இப்படித்தான்’ என்ற நிலையை (உயிரே போனாலும் கூட) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி, இத்தகைய, இயற்கைதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டும், ‘குணநலப்பேறு’ அடையவேண்டும் என்றுதான், அகத்தாய்வும், தற்சோதனையும் அமைத்திருக்கிறார். முழுமையாக தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, இயற்கையாக ஒன்றிணைந்து இருப்பது என்ற தகுதியையும் அது தரும். மேலும் கருவழியான பதிவுகளை அகற்றிடவும் துணை செய்யும். யோகத்தின் வழியாக மட்டுமே இந்த Personality மாறுமே தவிர, வேறெந்த development பயிற்சியாலும் மாறிடாது என்பதை அறிந்துகொள்க.

வாழ்க வளமுடன்

-


Is it right for us to live by greeting others?


எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


பதில்:

இதே போன்றதொரு கேள்வி வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அது ‘தவறு செய்பவர்கள் இந்த உலகில் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். நாம் ஏன் திருத்தமாக வாழவேண்டும்?’ என்ற கேள்வி. அதற்கு மகரிஷின் பதில் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி கொஞ்சநாள் தவறு செய்தே வாழ்ந்து பாருங்களேன்’ என்று தருகிறார்.

நம்முடைய பார்வைக்கு, தவறு செய்பவர்கள் ‘நன்றாக’ இருப்பதுபோலவும், செழிப்பாக, இன்பமாக, நிறைவாக வாழ்வது போலவும் தெரியும், ஆனால், அவர்கள் மனதிலும், உடலிலும், வீட்டிலும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் எதுவுமே நமக்கு தெரியாது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்கி எழுவார்களா? என்பது கூட கேள்விதான். அதை அவர்கள் வெளிக்காட்டவும் தயங்குவார்கள் / மறைப்பார்கள். ஆனால் ஏதேனும் வகையில் நாம் அறிய முடியும்தானே?

நாம் நம்முடைய பார்வையை, முன்னோக்கி பார்த்தால் இப்படி வாழ்ந்த முடிந்தவர்கள் பேரும் புகழோடுமா தன்னுடைய காலத்தை முடித்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறந்து பல காலம் ஆனாலும் கூட, அவர்கள்மேல் விழுந்த பழிச்சொல் அகலாமல் இருப்பதை நாம் காணமுடியும். நல்லதிற்கு உதாரணம் என்பது போலவே, தீய நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் உதாரணமாக அவர்கள் ‘காலத்தால்’ நின்றிருப்பதை அறியலாம்.

அறிவில், அனுபவத்தில், வாழும் சூழலில் வளர்ச்சி அடையாத சிலர், மற்றவர்கள் வருத்தி, துன்புறுத்தி, பிடுங்கி, வாழ்வதை நாம் காணமுடியும். நாமேகூட அப்படியான சிலரிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்போம் என்பதும் உண்மையே. அத்தகைய நிகழ்வுக்குப் பின் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும். அறம் அல்லாத எந்த ஒரு செயலை செய்தாலும், அது இயற்கை எனும் தெய்வீக பேராற்றலால், அவரவர் மனதிற்குள்ளாகவும், கருமையத்திலும் ‘கர்மவினைப்பதிவாக’ பதிவு செய்வதை மறவாதீர்கள். வட்டியும் முதலுமாக என்ற ரீதியில் அதை தீர்க்காமல் விடவே விடாது. அதுதான் இயற்கையின் செயல்விளைவு நீதி.

சாதாரணமாகவே, மனம் ஒப்பாத ஒன்றை செய்துவிட்டு காலம்பூராவும் வருந்துவது மனிதனின் இயல்பு. யோகத்தின் வழியாக மனதை அறிந்த நாம், அப்படியான தவறை நாமே விரும்பி செய்திட முடியுமா? அது நியாயமும் ஆகுமா? இருக்கும் வினைப்பதிவுகளை தீர்க்க மட்டுமேதான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மறுபடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். தவறு செய்யும் அவர்கள், தவறுமட்டுமே செய்யும் அவர்களுக்கு அதுகுறித்த கவலை இல்லை. அது அவர்கள் பாடு. நாம் நம்மை திருத்திக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்

-

Please explain Dvaita, Advaita, Vishishtadvaita philosophies?


துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

சுவாமிஜி, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப் பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்து செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (Essence) தானே?


அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்தச் செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், “த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் “அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம், “ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று “மாறுபடுகிறது” என்பதை த்வைதம், “எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.


வாழ்க வளமுடன்.

Please explain about the Death and the Eternal after the death?


மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

அன்பரின் கேள்வி: 

சுவாமிஜி! மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உலகில் உயிர் வாழும், மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கும், மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போதுதான் அது வாழ்வு. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையே மரணம் எனப்படும். மரணம் இல்லையென்று கூறமுடியாது.

        உயிரின் இயக்கத்தால்தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையென்றால் உடலிலுள்ள அணுக்கள் தொடர் இயக்கம் சிதைந்து விடும்.

        கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து உயிர்த்துகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன்னுடைய இயக்கத்தை நடத்திக் கொள்ளத் தொடங்கிவிடும்.

        உதாரணமாக இதற்கு ஒரு கம்பெனியைச் சொல்லலாம். நீதிமன்றத்தின் உத்தரவால் ஒரு கம்பெனியானது உலாவீனம் (Liquidate) செய்யப்படுகிறது. என்று வைத்துக் கொள்வோம்.

        அக்கம்பெனியானது அதன் பெயரில் இறந்துவிட்டது என்றாலும், அதிலுள்ள நிர்வாகிகள், பங்குதாரர்கள், வேலையில் இருந்தவர்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.

        கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள். ஆனால் தனித்தியங்குகின்றார்கள்.

            அதேபோல் உடலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து இயங்குகின்றன. அவ்வளவே. அத்தகு தனித்தனியான இயக்கங்களுக்கு மரணம் என்பதில்லை.

        அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.

வாழ்க வளமுடன்!

-



Guide me with truth of Pancha Bootha Navagraha Thavam!


பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.

பதில்:

யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.

பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.

ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை,  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.

அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.

இந்த  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம்.  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி.  யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.

வாழ்க வளமுடன்
-

If we live in USA, Canada, Malaysia, Singapore, Australia, Dubai, Bahrain any different on yoga benefits?


அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 

Thanks to @arminschieb


பதில்:

அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? ஆனால் இந்த கேள்வி எழுவது இயல்பு. ஒரு புதிய கண்டம், நாடு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, வழக்கம் பழக்கம், உணவு, கால நேரம் இப்படியாக எல்லாமே மாறி இருக்கும் அந்த நிலையில், ஏதோ ஒரு புதிய உலகுக்கே வந்துவிட்டதாகவே தோன்றும். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ‘வேர், மூலம்’ ஒன்றுதான். இந்த உலகமும் ஓன்றுதான். கடல் கடந்து என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவை வெவ்வேறு கடலா? ஒரே கடல்தான், நம்முடைய சௌகரியத்திற்காக வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறோம். எந்த நாட்டின் கடற்கரையில் நின்று, நீங்கள் கையால் நீர் அள்ளினாலும், உங்கள் கால்களை நனைத்தாலும் அது ஒரே நீர் நிலையான கடல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும், மற்ற எல்லா உலக நாடுகளின் மக்களும் சுவாசிக்கும் காற்றும் ஒன்றுதானே? வேறு தனியாக அந்தந்த நாடுகளில் காற்று தனிப்பட்டு இருக்கிறதா?

எனவே மனிதர்களும், மனிதர்களின் வாழ்க்கைக்கானதும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. உண்ணும் உணவு மாறி இருக்கலாம். ஆனால் செரிமானம், சக்தி, உழைப்பு, ஆற்றல் ஒன்றுதானே? இங்கே விளைவித்தால் அது அங்கே ஏற்றுமதி ஆகிறது. அங்கே விளைவித்தால் அது இங்கே இறக்குமதி ஆகிறது. யாரோ ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு, உலக மக்களின் எல்லாருடைய பயன்பாடுக்கும் கிடைக்கிறது. ஏதோ ஒரு நாட்டின் அரசியல் குழப்பம், மொத்த உலக நாடுகளையும் குழப்புகிறது. இப்படியாக எல்லாமே ஏதோ ஒன்றில் நாம் இணைந்துதான் இருக்கிறோம்.

மனிதன் தன்னுடைய ஆறாம் அறிவால், எண்ணத்தால், சிந்தனையால், எல்லா மனிதர்களோடும் இணைந்தேதான் இருக்கிறான். ஆனால் நாம் அதை அறிவதும் இல்லை, உணர்வதும் இல்லை. ஏதோ நாம் மட்டும் தனித்து இருப்பதுபோலவும், எதைவேண்டுமானலும் செய்துவிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் உங்கள் கூடவே ‘மனசாட்சி’ என்ற ஒன்று, உங்கள் அத்தனை இயக்கங்களையும், மேம்பட்ட CCTV Camera போலவே ஒளி, ஒலி காட்சிகளோடு பதிந்து கொள்கிறது, நீங்கள் அறியாமலேயே. உண்மைதானே?

மனித இனம் ஒன்றுதான், மனமும், உயிரும் ஒன்றுதான். உடலால் பலப்பலவாக பிரிந்து எல்லைகட்டி இருக்கிறோம். அவ்வளவுதானே? இதில் உங்களுக்கு கிடைக்கும் எந்த யோக பயன்களும் மாறிடாது. இறையாற்றலும் மாறிடாது. வீணான கற்பனையும், உதாசீனமும் தேவையில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட யோக வழிமுறைகளையும், பக்தி வழிமுறைகளையும் எந்த மாற்றமும் செய்துகொள்ளாமல், அதன்படியே தொடருங்கள். இறையாற்றலும், அருட்பேராற்றலும் நீங்கள் எங்கிருந்தாலும், அன்பும் கருணையுமாக உங்களைச் சூழ்ந்தே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். உங்களை எல்லைகட்டிக் கொள்ளாமல், ஒரே உலகம் என்ற கருத்தில் மலருங்கள். ஆர்வத்தோடும், முயற்சியோடும், தொடருங்கள். ‘நான் யார்?’ என்ற உண்மையை நோக்கியும் நகரலாம். இறையுண்மையையும் அறிந்து உயரலாம். பிறப்பின் நோக்கமும், கடமையும் கண்டு வாழ்வின் முழுமையை அடையலாம். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

        ஒரே ஒரு சிறப்பம்சத்தையும் சொல்லவேண்டும். அது என்னவென்றால், உங்களை யோகத்திற்கும், பக்திக்கும் இழுத்துக்கொண்டு திசை திருப்பும், போலியான நபர்கள் உங்களருகில் இருக்கமாட்டார்கள். உங்கள் யோக குரு / ஆசிரியர் சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் போதுமானது. ஆனால் உலகம் சுருங்கி கையில் வந்துவிட்ட இந்தக்காலத்தில் நீங்கள் ‘இதில்’ கவனமாக இருத்தல் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்
-

Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!


வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


பதில்:

வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.

உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.

சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.

மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.

ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.

பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.

வாழ்க வளமுடன்

-