CJ

Did you know Vethathiri Maharshi's explanation of natural consciousness and knowledge?


இயற்கை உணர்வும், அறிவும் குறித்து வேதாத்திரி மகரிஷி விளக்கம், உங்களுக்குத் தெரியுமா?

        இயற்கை உணர்வும், அறிவும் உலகில் வாழும், எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. அது இயற்கையின் கொடையாகவும் அமைந்துள்ளது. வாழும் அந்த வாழ்நாள் முழுவதும், அந்த உணர்வையும், அறிவும் பயன்படுத்திக் கொள்கிறது. நாமும் பயன்படுத்துகிறோம். அதுபோலவே புதிதாக, தன் அனுபவத்தால், மனிதனைத் தவிர மற்ற ஜீவன்கள், கற்றுக் கொள்கிறது.  ஆனால் மனிதனோ தன் ஆறாம் அறிவால், சிந்தித்து தன்னை மேம்படுத்தியும் கொள்கிறான். இதை வேதாத்திரி மகரிஷி எப்படி விளக்குகிறார்? 

உலகில் வாழ்கின்ற காலத்தில், இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு 'Instinct' என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த 'Instinct' என்பதற்கு மேலே 'Intelligence' அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் 'Intelligence' என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த “Intelligence” வந்த பிறகு தான் “அறிவு”, 'Knowledge' வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது 'Intelligence'. அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' 'Knowledge' என்று சொல்லலாம்.

இந்த 'Collective Knowledge' வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் 'Intuition' உண்டாகிறது, அதில் இருந்து தான் எல்லாம் வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. என்றவகையில், பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

What is wave motion? Where does it start? We know the true explanation.


அலை இயக்கம் என்பது என்ன? அது எங்கிருந்து தொடங்குகிறது? உண்மை விளக்கம் அறிவோம்.

அலை இயக்கம் என்பது, விஞ்ஞானம் சொல்லுகின்ற டார்க் மேட்டர் (Dark Matter)என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் இன்னமும் அந்த விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் என்பதையே ஒன்றுமில்லாதது என்கிறபொழுது, அதனையும் கடந்த டார்க் மேட்டரை என்ன சொல்லும்? இப்படித்தான் சொல்லுகிறது. ‘ hypothetical form of matter that is believed to make up 90 percent of the universe; it is invisible (does not absorb or emit light) and does not collide with atomic particles but exerts gravitational force. 

    இதன் விளக்கம், ‘பிரபஞ்சத்தின் 90 சதவிகிதம் என்று நம்பப்படும் பொருளின் கற்பனையான, அனுமானமாக வடிவம்தான் இந்த கருமைப் பொருள். இது பார்வைக்கு அகப்படுவதில்லை. ஒளியை ஏற்காது, பிரதிபலிக்காது. எந்த அணுக்களோடும், அணுக்கூட்டங்களோடும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஈர்ப்பு ஆற்றலை செலுத்துகிறது’. 

இந்த கருமைப்பொருள்தான், அலை இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அது அணுக்களின் சுழற்சியில் இருந்துதான் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் எங்கோ தொடங்கும் அலை, இங்கே வரலாம். இங்கே உருவாகும் அலை, அங்கேயும் போகலாம். இனி, அலை இயக்கம் ( Wave Theory) குறித்த உண்மைகளை காணலாம்.  

எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது.இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல்தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம். 

அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்துவரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection). அதனால் அது திரும்பிவருகிறது. 

ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை. அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது. 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், அதோடு மற்றொரு அலை மோதும்பொழுது ஊடுருவியும் (Penetration) போகிறது. 

அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக் கொண்டேயும் (Interaction) இருக்கும். 

ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக்கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.

நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுருவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக்கொண்டுமிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக அது கருமையத்தில் (Genetic Center) ஒரு பதிவு ஏற்படும். 

அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்ட இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக (Imprints) மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். 

ஆகவே நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில், அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இது தான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. 

இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் (Wave Theory) என்ற ஒரு நியதியை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடல் அலைபோல ஒயாது, எழும்பி, இறங்கி முடிந்து, மீண்டும் வந்து கொண்டே இருக்கக்கூடிய, இந்த அலை இயக்கம் வழியாக, மெய்ப்பொருள் உண்மையை, நாம் மிக எளிதில் புரிந்து கொள்ள வழி இருக்கிறது. அந்த வழி, மனவளக்கலை மன்றத்தில் தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் அந்த வழியாக, ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

கட்டுரையின் மூல வடிவம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

-

Do you know the importance of simple exercise and the completion of human life?


எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், மனிதனின் வாழ்க்கை உயர்வும் உங்களுக்குத் தெரியுமா?



மனிதனாக பிறந்தால், மற்ற எந்த உயிரினங்களையும் விட, உயர்ந்த நோக்கமும், கடமையும் அவனுக்கு உண்டு, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போகப்போகிறோம் என்று இல்லை. மனிதனாக ஏன் பிறந்தோம்? எதற்காக? நான் யார்? என்னுடைய மூலம் என்ன? என்று சிந்தித்து விடை அறியவும் வேண்டும். இயற்கை என்பது என்ன? பிரபஞ்சமும் என்ன? பிரபஞ்சத்திற்கு அப்பாலும் என்ன? என்று முன்னோர்கள் சொன்னதையும் ஏற்று, நாமும் உண்மை அறிய முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அதற்கு விடையும் கிடைத்துவிடும். மனிதனின் வாழ்வும் முழுமை பெறும். இந்த நோக்கமும், கடமையும் நிறைவேற வேண்டும் என்றால், வாழும் வரை உடல் வேண்டும் அல்லவா? உடலின்றி மனிதனுக்கு வாழ்வும், உலகமும் ஏது? சிந்திப்பீர்.

இத்தகைய உண்மையை கருத்தில் கொண்டு, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி, விளக்கமளிக்கிறார். ‘உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான்  இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். 

உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.

        உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது 'மனவளக்கலை' (Simplified Kundalini Yoga - SKY) பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

உடலும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். 

உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்:

1.  கைப்பயிற்சி (Hand Exercise)

2.  கால் பயிற்சி (Foot Reflexology)

3.  மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)

4.  கண்பயிற்சி (Eye Exercise)

5.  மகராசனம் (Maharasanam) 

6.  உடல் வருடல் (Massage)

7.  ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation)

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை.  ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.’

மனிதன், தன் உடல் குறித்து, திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்லுகிறது, கவனிப்போம்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’ 

என்றும், உடலை காத்திட வேண்டிய அவசித்தையும், இந்த கவி வழியாக விளக்குகிறார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே’

என்றும், திருமூலர் கூறியுள்ளார். எனவே ‘இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்’ என்று உறுதிபட வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்

-

Is Blackhole as a Dark matter in the DNA? What is result of the bio-chemical research?


கருந்துளை எனும் கருப்பொருள், உயிர்களின் மரபணுக்களிலும் உள்ளதா? உயிர் வள விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது?

Source from Hashem Al-Ghaili
  

        நாம் வாழும் காலத்தில், விஞ்ஞானம் என்ற Science (அறிவு இயல் அல்ல, விண் அறிவு அல்லது விண் ஞானம் என்பதுதான் சரியானது), பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்திய நாட்டின் ஆதாரமாக, திகழும் மெய்யியலுக்கு காட்சி வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது எனலாம். சிலர் இந்தியாவை, அவர்கள் வணிக ரீதியாக அணுகி, இங்குள்ள பல உண்மை தத்துவங்களை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுவார்கள். அதில் எதோ சில வகையில், உண்மை இருக்கலாம். மதிப்பு வாய்ந்தது என்று எதையேனும் நினைத்தால், எனக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்வது, மனிதனின் இயல்பு. மேலும், அது நம்மிடம் இருக்கும் பொழுது, அவற்றை மதிப்பில்லாததாக வைத்துக் கொண்டதும், நம்முடைய தவறுதானே?

ஆனால், எப்படி ஒரு மனிதனுக்கு, தன்னளவில், அறிவு பல நிலைகளில் இருக்கிறதோ, அதுபோல, பிரபஞ்ச அறிவு என்ற ஒன்று நிலைபெற்றிருக்கிறது. எங்கே? இந்த பிரபஞ்சத்தில்! இந்த பிரபஞ்ச அறிவு, மனித உயிர்களின் அறிவை, தன்னோடு இணைத்துக் கொள்கிறது.  இதனால்தான், ‘நான் நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய்’ என்றும், ‘நான் இதைத்தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், நீ செய்துவிட்டாய்’, என்றும், ‘இதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது, அதை நீ நிறைவேற்றி விட்டாய்’ என்றும் அதிசயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அதனால், இங்கிருந்து, திருடித்தான், அதை இன்னொருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நுணுகி ஆராய்ந்து கொண்டே இருந்தால், சிந்தித்துக்கொண்டே இருந்தால், பிரபஞ்ச அறிவானது, அதற்கான விளக்கத்தை, தூண்டுதலை கொடுத்துக் கொண்டே இருக்கும். மிகச் சரியாக, அதைபற்றிக் கொண்டு உயர்ந்தால், நம் கேள்விக்கான பதிலை, சந்தேகத்துக்கான விளக்கத்தை பெறமுடியும் என்பது உறுதியே. இதெல்லாம் நம்புறமாதிரியாய்யா இருக்கு?! என்று கேள்வி எழுப்புவோருக்கு, இதில் எந்த புனைவும், மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எல்லாம் பொய், கட்டுக்கதை, ஏமாற்றுவித்தை என்போருக்கு, தனியே எந்த விளக்கமும் இல்லை.

இனி, இன்றைய, விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு விளக்கத்தை இங்கே காண்போம். விஞ்ஞானம், மெய்யியலை விரும்புவதும், அணுகுவதும் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே, கருத்துக்கு நிகரான காட்சி, உருவம், வடிவம்  வேண்டும். அப்போதுதான் நம்பும். மெய்யியலை பொய்யியல் என்றுதான் நம்மில் பெரும்பாலோரும் சொல்லுகிறோம் அல்லவா? இந்த விஞ்ஞானம், தனக்கு புரியாத இரண்டு உண்மைகளை, விளக்க முயற்சித்து, தோற்றுக்கொண்டே இருக்கிறது, அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு விருப்பமில்லை, தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்கிறது, இன்னும் நகரும். சரி, அது என்னாய்யா அந்த இரண்டு? அது பொருள் மற்றும் ஆற்றல் (Matter and Power). இரண்டும் இருக்கிறது. ஆனால் அதன் மூலம் நாம் அறியோம் என்று கைவிரிக்கிறது. இன்றைய பதிவு, அந்த விஞ்ஞானம், கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்சிக்கிறது. காண்போம்.

உயிரியல் கருப்பொருள் (Dark Matter) - ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக் குறியீட்டிலும் இருண்ட பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எந்த அளவுகளில் என்றால், நமது முழு மரபணுவிலும், புரதங்களுக்கான டிஎன்ஏ குறியீடுகளில் 1 முதல் 2% மட்டுமே நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 98% மரபணு எதற்கும் குறியிடாது, இடமாக மட்டும் இருக்கிறது. இதை வெறுமை (Emptiness) என்று சொல்லுவார்கள். நான் அறிந்த, அன்பர் ஒருவர், இடமாக இருக்கிறது (Spaceness) என்கிறார்.

இந்த பெரிய அளவிலான, காலி இடமான, மரபணு குறியீடு, டிஎன்ஏவின் டார்க் மேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உயிரியல் இருண்ட பொருளில், குறியீட்டு அல்லாத டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பகுதிகள் அடங்கும். இந்த DNA வரிசைகளின் சரியான செயல்பாடு அல்லது அவை ஏன் நமது மரபணுவில் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. 

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த, இந்த குறியீட்டு அல்லாத டிஎன்ஏ உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அருகிலுள்ள மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன? மற்றும் எந்த வகையான உயிரணுக்களில் இது பாதிக்கிறது? என்பது ஆய்வில் இருக்கிறது.

இந்த இருண்ட பொருளில், ஆயிரக்கணக்கான புரோட்டீன் அல்லாத குறியீட்டு மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவற்றின் செயல்பாடுகள் அல்லது நோய் தாக்கத்தில், அவற்றின் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதர்கள், எலிகள் மற்றும் கோழிகள் போன்ற பல்வேறு உயிரினங்களில், இந்த இருண்ட பொருளின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உருவாகி வருகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மரபணு வரிசைகள் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறியிடப்படாத பகுதியிலிருந்து, இந்த நான்கு மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் நீக்கியபோது, ​​ எலிகளின் மூளையில் அசாதாரணங்களை அவர்கள் கண்டறிந்தனர், டிஎன்ஏவின் இந்த குறியீட்டு அல்லாத, டார்க் மேட்டர் பிரிவில் உள்ள பிறழ்வுகள், அல்சைமர் போன்ற மூளை நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இன்னொரு ஆராய்ச்சியின் முடிவாக, நமது இரைப்பைக் குழாயில் காணப்படும் சுமார் 40% முதல் 50% வரையிலான மரபணு தகவல்கள், எந்த விலங்கு, தாவரம், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது மனிதர்களுக்கு முன்னர் வகைப்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட எந்த வகையான உயிரினங்களுடனும் பொருந்தவில்லை என்று அறியப்படுகிறது.

அன்பர்களே, இந்த ஆராய்ச்சியின் மூலக்கட்டுரை உதவி, Hashem Al-Ghaili. இணையத்தில் கிடைப்பதால், நீங்களும் நேரடியாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி விளக்கங்கள், நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைதானே?

வாழ்க வளமுடன்.

-


Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?


உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள் உள்ளதா?

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா. உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள், வழிமுறைகள் சொல்லியிருக்கிறாரா? 


பதில்

தன்னுடைய வாழ்நாளில், தன் இறையுணர்தல் பயணத்தோடு, அதை மற்றவர்களுக்கும், அறித்தரும் வேளையில், அன்பர்களின் உடல்நலம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிறருக்கு அப்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதன் வழியாக கிடைத்த, அந்த மாற்றங்களையும், விளைவுகளையும் கூட ஆராய்ந்து, திருத்தி, முழுமை செய்திருக்கிறார்.  பல்வேறு வகையான ஆசனம், மூச்சுப்பயிற்சி, உடலியக்கம், அக்குபிரஷர் என்று எல்லாம் கலந்த ஒன்றாகவே, எளியமுறை உடற்பயிற்சியை அமைத்துத் தந்திருக்கிறார். 

    முக்கியமாக, கிட்டதட்ட உண்மையை இழந்திருந்த, சித்தர்களின், அற்புதமான காயகல்ப யோக கலையை, முழுமை செய்தும் தந்தார். எளிமையான குண்டலினி யோகத்தையும் கற்றுத்தந்தார். தன்னைப்போலவே நாமும், மெய்ப்பொருள் விளக்கம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அந்த வகையில், அவர் சொன்ன, உடல் நலம் பெறுவதற்கான அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளை இங்கே காணலாம். வாழும் வாழ்க்கையில், உடல் நலம் மீது அக்கறை கொண்டோர் யாவரும், கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று கூட சொல்லமுடியும். தங்களின் உடலின் மீதும், உயிரின் மீதும், வாழ்நாளின் மீதும் விருப்பம் கொண்டோர், இந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். மற்றவர்கள், வழக்கம்போல, ஒதுக்கி, தள்ளி வைத்துவிடலாம்.

இனி, 

  அடிப்படை: அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.  அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

        அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

ஐந்தில் அளவுமுறை: உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

உணவில் எளிமை: வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

சமநிலை தாக்கங்கள்: கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.  விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

மரு உந்து சக்தி: நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

ஆர்வமும் மாற்றமும்: நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

அகத்தாய்வு: மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை: உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது. 

தூய்மை பெறல்: உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

தன்னில் அக்கறை: எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின், இந்த விளக்கத்தை, நன்கு அறிந்து, நினைவில் கொண்டு, அதன்படி, நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால். தனிமனிதனாகவும் இன்புறலாம். குடும்பமாகவும், சமூகமாகவும் இன்புறலாம். உலக மக்கள் யாவருமே இன்புறலாம். இனிமை நிறைந்த வாழ்வை, எல்லோரும் வாழவும் வழியுண்டாகும்.

வாழ்க வளமுடன்.

-

How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?


வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.


பதில்: 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.

இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.

‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும்.  உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே.  அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்.  சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும்.  சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது.  அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’

‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு.  நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’

‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும். 

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.  தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’

வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

-