CJ

Suddenly, one day, I took initiation and learned penance. But I couldn't keep up. My living situation is not good, there is no peaceful place. Shall we leave it at that? What other way? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒருநாள் திடீரென, தீட்சை எடுத்துக்கொண்டு, தவம் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை. என்னுடைய வாழ்க்கை சூழ்நிலை சரியில்லை, அமைதியான இடமும் இல்லை. அப்படியே விட்டுவிடலாமா? வேறு என்ன வழி? விளக்கம் தருக.

எல்லோருமே, தீடீரென ஒருநாள் தான், மாற்றத்தையும், உண்மையையும் உணர்ந்து, இனியாவது, வாழ்வில் திருத்தம் பெறவேண்டும் என்று, குருவை நாடி சரணடைகிறோம் என்பதுதான் உண்மை. நாம் தேர்ந்தெடுத்தது எதுவேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் குருவை நாடினால், அவரின் வழிகாட்டுதல் எந்தவகையிலும் நமக்கு துணை நிற்கும் என்பது உறுதி. 

நீங்கள் மனவளக்கலை அன்பர் என்றால், உங்களுக்கான அடிப்படை பயிற்சிகள் போதுமானது. அதை உங்கள் வாழ்நாள் முழுவதுமே கடைபிடிக்கும் வகையில்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். அந்த நிலையில் இருந்து நீங்களாகவே, உயர வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்கு அடுத்த பயிற்சிகளில் நீங்கள் இணைந்து, அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதி என்ற வகையில் உயரலாம். அது உங்கள் விருப்பம் மட்டுமே தவிர, கட்டாயம் இல்லை.

பொதுவாகவே, நீங்கள் சொல்லுவது போல, சிலர் தொடர்ந்து செய்வதில்லை. ஏதோ வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்றுதான் போகிறது. காரணம், நீங்கள் சொன்ன அதே வாழ்க்கை சூழ்நிலைதான். இந்த பொருள்முதல்வாத உலகில், எல்லோருக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் உறங்கி எழுவதற்கு கூட போதாமல் இருக்கிறதுதானே? வேறுவழியும் இல்லை.

ஆனால், இந்த உழைப்புக்கும், ஓட்டத்திற்கும் நம்முடைய உடல், மனம், உயிர் ஈடு கொடுக்க வேண்டுமே? அது முக்கியமாயிற்றே? அதற்கு வழி என்ன? அதற்குத்தான் இருக்கிறது வேதாத்திரிய மனவளக்கலை. அதனால், ஏதேனும் ஒரு வகையில் அரைமணியோ, ஒருமணியோ நேரம் ஒதுக்கி, பயிற்சி மற்றும் தவம் செய்ய முறைப்படுத்திக் கொள்ளவேண்டும். அது மிக மிக அவசியம். எனவே இன்றே திட்டமிடுங்கள்.

இந்த காணொளியும் உங்களுக்கு உதவக்கூடும்.

தீட்சை எடுத்துக்கொண்ட பிறகும் தவம் செய்யாமல் தவிர்க்கலாமா? #vethathiriyayoga #meditation #thavam

வாழ்க வளமுடன்.

-

How do the planets tell the record of human sins and karma? Isn't that unbelievable? Do we humans have anything to do with the planets? Sounds like a myth, isn't it? Aren't these planets, planets, stars and horoscopes paralyzing a living person?


ஐயா, கிரகங்கள் எப்படி மனிதனின் பாவப்பதிவுகளை, கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறது? அது நம்பமுடிவதாக இல்லையே? மனிதனாகிய நமக்கும் கிரகங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? ஏதோ கட்டுக்கதை போல இருக்கிறதே? வாழும் மனிதனை முடக்குவது போலத்தானே இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரம், ஜாதகம் என்பதெல்லாம் இருக்கிறது? சரிதானே?

உங்களைப்பொறுத்தவரை அது சரி என்றே வைத்துக்கொள்க. ஆனால், அது பொய் என்றால், நீங்கள் ஆராய்ந்தீர்களா? விஞ்ஞான அறிவோடு, மற்றவர்களோடு கலந்து, சில வானியல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிட ஆய்வாளர்கள் இவர்கள் தரும் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவு கண்டீர்களா? நீங்களே ஏன் ஜோதிடம் படித்து அதன் உண்மைதன்மையை அறிய முயற்சிக்க கூடாது? அட அது பொய்தான் என்று நிரூபணம் செய்வதற்காக படிக்கலாமே?

உங்கள் விஞ்ஞானத்தின், வானியல் ஆராய்ச்சியாளர், Brain Cox என்பவர், மனிதன், நட்சத்திரங்களில் இருந்து வந்தவன் என்கிறாரே? அது சரியா? மனிதனின் மூலம், நட்சத்திரங்களிடம் உள்ளது என்றும் அவர் சொல்லுகிறாரே? அது குறித்தாவது சிந்தனை செய்தீர்களா?

வழக்கமாகவும், ஏற்கனவே சொன்னது போலவும், இங்கே ஒன்றை சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வது ஒரு பூமியில். இந்த பூமி ஒரு கிரகம் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா? இது வான்வெளியில், சூரிய குடும்பத்தில் உள்ளது என்பது தெரியுமா? மிதந்து சுழன்று, உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அன்றுவந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா! அது உண்மைதானே? நீங்களும் நானும் பார்க்கும் நிலா என்ற சந்திரன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது அல்லவா? நமக்குப்பிறகும் அது நிற்கும். அது தன்னுடைய ஒளியை, ஆற்றலை, அலைகளை பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கும். பாதிப்புக்களை தந்துகொண்டுதான் இருக்கும். அதை இந்த பூமியும், மனிதர்களும், உயிர்களும், பொருட்களும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கும் அல்லவா? இல்லை என்று மறுப்பீர்களா? உங்களுக்கு தெரியவில்லை என்பதால், இல்லை என்று மறுப்பது சரியாகுமா?

ஜோதிடம் ஒரு வழிகாட்டி. அப்படியாக புரிந்து கொள்ளாமல், அதை நம்பி முடங்கிக் கொள்வதுதான் முட்டாள்தனம். ஆனால், எனக்குப்பிடிக்காது என்று அதை அறியாமல், புரியாமல் ஒதுக்கித்தள்ளுவது அதைவிட கீழானதுதான். வேப்பங்காய் கசக்கும் பிடிக்காது என்றால், அதை நீங்கள் மருந்தாகவும் உட்கொள்ள முடியாது அல்லவா?

எனவே, இப்பொது உங்களுக்கு தேவை, புரிந்துகொள்வது முக்கியம். அதை உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள். அதில் ஏமாற்றம் வந்தால், பிறகு உங்கள் நிலைபாட்டை தொடரலாம். அது உங்கள் விருப்பம். இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரலாம்.

உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா? #astrology

வாழ்க வளமுடன்.

-

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

I don't know why my spouse is at odds with me. Every day there is a problem. There is no peace between us. How will this be solved? Can a third person come and solve it?


வாழ்க வளமுடன் ஐயா. என்னுடைய வாழ்க்கைத்துணை ஏன் என்னோடு முரண்பாடு கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தினமுமே ஒரு பிரச்சனை உண்டாகிறது. எங்கள் இருவருக்குள்ளும் சமாதானம் கிடைப்பதே இல்லை. இது எப்படி தீரும்? மூன்றாம் மனிதர் வந்துதான் தீர்த்துவைக்க முடியுமா? விளக்கம் தருக.


இல்லறம் என்பது நீண்ட கால தொடராக வரும் நிகழ்வு. ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற வகையில் வாழ்க்கைத்துணை அமைவதும் இயற்கையின் உன்னதம். யாருக்கு யார் என்பதும் ரகசியமாகவும் இருக்கிறது. நாமே விரும்பி காதல் கொண்டு, திருமணம் நிகழ்த்தி, இல்லற வாழ்வை தொடங்கினாலும்கூட, அதில் இயற்கையின் பங்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இல்லறமே சமூகத்தின் வளர்ச்சி நிலை என்று இருந்தாலும், சிலருக்கு திருமணம் தள்ளிப்போவதும் உண்டு, நிகழாமல் போய்விடுவதும் உண்டு. இதற்கும், நாம் அறியாத காரணம், நம்மோடு தொக்கி நிற்கிறது.

இல்லறம் என்பதின் நோக்கம், ஒருவரை ஒருவர் காத்துக்கொண்டு, அதன் வழியாக வாரீசுகளை உருவாக்கி, நிறைவாக வாழ்தல் ஆகும். இதில் வாழ்க்கைத்துணை என்பவர், நமக்கு சமமாக எப்போதும் அமைவதே இல்லை. நம்மைவிட உயர்வான, குறைந்த அறிவு, அனுபவ நிலை இதோடு கர்மா என்ற வினைப்பதிவு தாக்கமும், அதற்கான தீர்வும் என்றுதான் அமைவதுண்டு. ஒருவகையில் என்னிடம் இருக்கும் குறைகளை அவர் நிவர்த்தி செய்வார், அவரிடம் இருக்கும் குறைகளை நான் நிவர்த்தி செய்வேன் என்ற வகையில்தான், வாழ்க்கத்துணை அமைகின்றார். வெளிப்படையாக நமக்கு இது தெரியாவிட்டாலும்கூட, உள்ளாக இந்த ஏற்பாடுதான் இயற்கையால் அமைக்கப்படுகிறது.

இந்த ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு, பகிர்வு, சமன் செய்தல் என்பதை அறியாமல், என்னை திருத்துகிறாயா? என்று நாம் கேட்பதும். நீ சொல்லித்தான் நான் திருந்தவேண்டுமா? என்று முரண்படுவதும் அவசியமில்லை. கணவன் மனைவிக்குமான இல்லறத்தில் இன்பம் நிலைத்திருக்க, வேதாத்திரி மகரிஷி தரும் மூன்று முக்கியமான வழிமுறை 1) பொறுமை 2) விட்டுக்கொடுத்தல் 3) தியாகம் என்பவனவாகும். நான் இதையெல்லாம் செய்யமாட்டேன் என்று, கணவன் மனைவி இருவரும் முடிவெடுத்தால்? இல்லறம் எப்படி சிறக்கும்?

இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போல, அமைதியாக உட்கார்ந்து, ஏன் இப்படி நாம் சண்டை போடுகிறோம்? கடினமாக பேசிக்கொள்கிறோம் என்றும் விளக்கமாக கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், யார் இதை முதலில் ஆரம்பிப்பது என்றுதான் நாம் தள்ளிவைத்து, சண்டையை தொடர்கின்றோம் அல்லவா? நமக்குள்ளாக இருக்கும் பிரச்சனையை, எளிதில் நாமாகவே தீர்த்துக் கொள்ளமுடியும். மூன்றாம் மனிதர் தேவையில்லை. தேவையில்லாமல், அவருடைய பிரச்சனைவேறு உங்களோடு கலந்து, இன்னும் அதிகமாகலாம். உலக நாடுகளே சமாதானம் நோக்கி நகர்கையில், இரு நபர்கள், இல்லறத்தில் சமாதான தீர்வு காணமுடியாதா? நிச்சயமாக முடியும்.

இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரும்.

உங்களுக்கு வாழ்க்கைத்துணைவரை அமைப்பதில் பெரும்பங்கு யாருக்கு உண்டு?

வாழ்க வளமுடன்.

-

If you do Navagraha penance, how is it beneficial? Does the horoscope have anything to do with it? Will this penance serve as a form of atonement? What is the truth? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, நவக்கிரக தவம் செய்தால், அது எப்படி நன்மை தருகிறது? ஜாதகத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த தவம் ஒருவகையில் பரிகாரமாக செயல்படுமா? உண்மை என்ன? விளக்குக.

மனிதனின் பிறப்பு, அவனுடைய வாழ்வின் நோக்கம், அதிலிருக்கும் கடமை இப்படி எதுவுமே அறிந்துகொள்ளாது, பிறந்தோம் வாழ்ந்தோம் போகப்போகிறோம் என்று வாழும் மனித கூட்டம் ஒருபுறம். இறைவனாவது, இயற்கையாவது, கிரகங்களாவது, ஜாதகமாவது ஒன்றாவது, எல்லாமே நம்ம கையில்தான் என்று, தனித்து எல்லாம் அனுபவித்து வாழும் கூட்டம் ஒருபுறம். இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அடுத்தவரின் வளம் பறித்து தான்மட்டுமே வாழும் கூட்டம் இன்னொருபுறம். இப்படியாக பல்வேறு மனிதக்கூட்டம், நம்மோடுதான் வாழ்ந்து வருகிறது.

இந்த கூட்டங்களோடு, மனிதவாழ்வை உயர்த்திட விரும்பிய, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் அறிவுரை நாடிச் சென்று, தன்னையும், தன் வழியாக வரும் வாரீசுகளையும் நல்வழிப்படுத்த நினைப்பவர்கள் பலர். இந்த உலகம் இவர்களால்தான், இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. உண்மையை மறுப்பது என்பது வேறு, எது உண்மை என்று அறிந்து கடைபிடிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்குமான வித்தியாசம் அறியாதவர்களின் வாழ்க்கைதான், இவ்வுலகில் ஏனோதானோ என்று இருக்கிறது. உண்மை என்னவென்றால், அது குறையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் அந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடவும் வாய்ப்பின்றி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

இந்த நிலையில், இப்படியான கேள்வியும், அதை அறிய விரும்பும் ஆர்வமும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மனித உயிர்கள் மட்டுமல்ல, இந்த உலகில், நாம் காணும் எல்லா பொருட்களும், உயிர்களும் உருவாகவும், இயங்கிடவும் ஒரு பேராற்றல் துணையாக இருக்கிறது. அதைத்தான் நாம் இறையாற்றல், மெய்ப்பொருள் என்று உயர்வாக சொல்லி வணங்குகிறோம். அந்த ஆற்றல், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்கள், சூரியன்கள், கோள்கள் இவற்றோடும் கலக்கிறது. பலவேறு தன்மைகள் கொண்ட அந்த ஆற்றல், நாம் வாழும் பூமியை வந்தடைகிறது. அதை நாம் பன்னிரெண்டு ராசிகளாக அமைத்திருக்கிறோம். அந்த ராசிகளை கடக்கும் கோள்களைக் கொண்டு, அதன் தன்மையை, நமக்கு கிடைக்கும் பாதிப்புக்களை, நன்மைகளை அறிந்து கொள்கிறோம். இது அடிப்படை தாக்கம் அல்ல எனினும் நமக்குள்ளாக தூண்டுதல் நிச்சயமாக இருக்கிறது. அதை ஜோதிட கலை வழியாக கணிக்கிறோம்.

இங்கே பரிகாரம் என்றால் அது நம்மை திடப்படுத்திக் கொள்வதுதானே தவிர தப்பிப்பது அல்ல. ஆனால், இவ்வுலகில் பரிகாரம் பலவகைகளில், பொய்யும் புரட்டும் கலந்து ஏமாற்றம் அளிக்கிறது எனலாம். இந்நிலையில்தான், வேதாத்திரிய பஞ்ச பூத நவக்கிரக தவம், பரிகார தவமாக அமைந்துவிடுகிறது. இங்கே நாம், நம்முடைய ஜாதகத்தை நினைப்பதில்லை. நேரடியாக அந்தந்த கிரகங்களை நினைத்து தவம் இருக்கிறோம். அதன் ஆற்றலோடு கலக்கிறோம். நன்மை செய்ய வேண்டுகிறோம். அதனால் இது பரிகாரமாகவே மாறிவிடுகிறது. மனம் ஒன்றி நின்று தவம் செய்வதைத்தவிர, இங்கே எந்தவித செலவும் இல்லை.

இந்த காணொளி வழியாக, இன்னும் சில உண்மைகளை அறிந்து கொள்க!

நவக்கிரக தவம் செய்வதில் ஏற்படும் நன்மைகள் உண்மையா? எவ்வாறு இத்தவம் உதவுகிறது?!

வாழ்க வளமுடன்.

-

Who are Siddhars? Why is it that only Tamil Siddhas are spoken of? Are there still Siddhas? How useful is their support to us? Will you explain?


வாழ்க வளமுடன் ஐயா. சித்தர்கள் என்பவர் யார்? அது ஏன் தமிழக சித்தர்கள் மட்டுமே உயர்வாக பேசப்படுகிறார்கள்? இன்னமும் சித்தர்கள் இருக்கிறார்களா? அவர்களின் துணை நமக்கு எந்த அளவில் பயன்படுகிறது? விளக்குவீர்களா?



இந்த உலகில், பல்லாயிரம் ஆண்டு பரிணாம எழுச்சியில், இயற்கையின் உன்னதமாக, முழுமை வடிவமாக வந்த அமைந்த ஒரு ஜீவ, உயிரினம்தான் மனிதன். மனிதன் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரும் ஒருநாளில் உருவாக்கிடவும் இல்லை. ஒரு பெரிய மரத்தின் மூலம், சிறிதாக, அணுவாக இரு விதைக்குள் இருந்ததுதானே? அதுபோலவே மனிதனின் மூலமும், அணுவில் இருந்துதான் தொடங்கியது. அந்த அணு ஒருசெல் உயிரியாக மலர்ந்து, ஒர்ரறிவு தாவரமாக மலர்ந்து, ஐந்தறிவு விலங்கினங்களாக உயர்ந்து, அந்த அறிவு வேட்கை நின்றிடாமல், முழுமைபெற துடித்து, பல்வேறு பிறவிகளுக்கு அப்பால் வந்ததே, மனிதப்பிறவியாகும். ஆறாம் அறிவில் முழுமைபெற்று, தன் மூலம் நோக்கி நகர்ந்து நின்றவனே மனிதன்.

இந்த தற்கால, நவீன விஞ்ஞானம் சொல்லும் முன்பாகவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சித்தர்கள் கண்டறிந்தனர். சும்மா வெறுமனே யூகமாக அவர்கள் சொல்லவில்லை. சித்து என்ற உயிரின் மூலம் எது? என்று தேடி அதை முழுமையாக அறிந்ததனால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மனித பிறப்பின் ரகசியமும், நான் யார்? என்ற தேடல் முழுமையும், பொருளுக்கும், உயிருக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும், மூலமாகவும் இருந்து, இயக்கிக் கொண்டும் இருக்குமந்த, மெய்ப்பொருளையும் கண்டார்கள்.

தன் ஆரம்ப புள்ளியை, அதில் கண்டு, உண்மை அறிந்து அதுவே மனித பிறப்பின் நோக்கமும், முடிவும், கடமையும் என்று, உலக மக்களுக்கு அறியத்தந்தார்கள். விரும்பியோர்க்கு யோகமாகவும், எளியோருக்கும், பாமரரருக்கும் பக்தியாகவும் தந்தார்கள். 

சித்தர்கள், தங்களை ஒழுக்கம், கடமை, ஈகை வழியாக, உலகோர்க்கும் சேவை செய்வதையே முழுமையாக்கிக் கொண்டார்கள். இன்றும் பலப்பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்களும் நானும் நினைப்பதைப்போல அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இப்படியான சித்தர்களை தமிழ்நாடு கொண்டது, மிகச்சிறப்பு. தமிழ்நாட்டின் காலநிலையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சித்தர்களால், நாம் பெருமைமட்டும் அடையவில்லை. வாழ்வின் முழுமையையும் அடைகிறோம்.
 
இந்த காணொளி வழியாக இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வோம்.

தமிழக சித்தர்களின் கடவுள் தேடல்! The search for God by the Siddhars of Tamil Nadu! Part 01
வாழ்க வளமுடன்.
-

Do people benefit from this service called Vethathiriyam or not? Is there truth in the records? Can't you give it away for free? What is this Vethathiriya journey like?


பத்தோடு பதினொன்றாக, அரைகுறையாக ஏதோ சொல்லுகிறீர்கள். இதில் வேதாத்திரியம் என்று பெயர்வேறு? உங்களுக்குத் தோன்றுவதை சொல்லி பெரிய ஆளாக நினைக்கிறீர்கள். பதிவுகளில் உண்மை இல்லாமல், வளவள என்று பிதற்றலாக இருக்கிறது. பதிவுகள் இப்படி இருக்க, இதில் அடிக்கடி ஜாதகம் பார்க்கிறேன் என்று காசு வேறு கேட்கிறீர்கள். பதிவுகளை காண மெம்பராகவும் ஆகவேண்டுமா? யோகம் இலவசமாக எல்லோருக்கு போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இதில் முகத்தை வேறு காட்டுகிறீர்கள், சகிக்கவில்லையே. பேசாமல் சும்மா இருக்கலாம்!




வழக்கமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதற்கு பதிலாக, கருத்து பதில் தருவது இந்தப்பதிவாகும். மேலே நீங்கள் படித்த கருத்து, ஒருவர் தந்ததல்ல. என்னுடைய வேதாத்திரிய காணொளி பதிவுகளை கண்டுவிட்டு, சில அன்பர்கள் தந்த பின்னூட்டத்தின் தொகுப்பு இது. பல்வேறு காலங்களில் இப்படியான பின்னூட்டங்களும், இதைவிட பலமான பின்னூட்டங்களும் வந்தன. இப்போதும் ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் இப்படி வருவதுண்டு. அவைகளை, நான் பொதுவெளிக்கு வரமால் தடுத்து அழித்துவிடுகிறேன். ஆனால் குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்வேன்.

இத்தகைய நபர்கள், தங்களின் ஈகோ என்ற தன்முனைப்பை, இப்படி பொதுவெளியில் காட்டிக் கொள்கிறார்கள். கூடுதலாக, ஏன் இணைய பிச்சை எடுக்கிறாய்? என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லுவது, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போலாகும். என்னுடைய கைபேசி எண் பொதுவெளியில் தான் இருக்கிறது. அதோடு, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, உலக அளவில், இணைவழியில்தான், என் ஓவிய வேலைகள், கட்டண சேவையாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், காசுக்காக, இந்த வேதாத்திரிய சேவை என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கைபேசி எண் கொடுத்தால், நான் பேசி பதில் தரவும் தயார், ஆனால் அவர்கள் அதை தருவதில்லை.

வேதாத்திரியத்தில், என்னுடைய பதினெட்டு வயதில், இணைந்து தீட்சை பெற்றுக்கொண்டு, இன்றுவரை (2024 வரை) கிட்டதட்ட, முப்பத்தியாறு ஆண்டுகள் அனுபவம் எனக்குண்டு. சும்மா வெறுமனே, வேதாத்திரியா காணொளி சேவை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்குமானால், நான் உங்களோடும், வேதாத்திரியாவோடும் ஏழு ஆண்டுகள் பயணத்தை பெற முடிந்திருக்குமா? ஆம். வேதாத்திரியா ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.

வேதாத்திரி மகரிஷியிடம் ஒரு அன்பர் கேட்டார். ‘சுவாமிஜி, நீங்கள் ஆரம்ப காலத்திலே சொன்னதிற்கும், இப்போது சொல்லுவதற்கும் மாற்றமே இல்லையே. அதே கருத்தையே விளக்கிச் சொல்லுவதாகவே அமைகிறதே எப்படி?’

இதற்கு வேதாத்திரி மகரிஷி ‘நான், எல்லாமே முழுமையாக உணர்ந்த பிறகுதான், எழுதினேன், சொன்னேன். அதனால் அதில் உண்மை மட்டும் தான் இருக்கிறது. அதுதான் இன்னமும் தொடர்கிறது. மற்றவர்கள், தங்கள் ஆரம்ப காலத்தில் ஒருவகையிலும், உண்மை உணர்ந்த பிறகு மற்றொருவகையாகவும் சொல்லுவார்கள். ஆனால் நான், உண்மை உணர்ந்து கொள்ளாமல் எதையுமே பகிரவில்லையே’ என்று சொல்லுகிறார்.

இந்த அடிப்படையில்தான். நானும், 1988ம் ஆண்டு தீட்சை பெற்று, 1991ல் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1993 வரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக சேவையில் இருந்தும், பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை. 2018ம் ஆண்டு, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொண்ட பிறகுதான், வேதாத்திரியா எனும் காணொளி தளத்தை ஆரம்பித்து, என் பதிவுகளை தந்தேன். எனக்கு இணையத்தில் கிடைத்த ஏமாற்றம், மற்ற அன்பர்களுக்கு கிடைக்கவேண்டாமே? என்ற நோக்கத்தில்தான், வேதாத்திரிய அன்பர்களுக்கு உதவும் வகையில், பதிவுகளை தந்துகொண்டு இருக்கிறேன்.

வேதாத்திரிய தத்துவ உண்மை மாறாமல், அதன் வழியிலே மட்டும் நின்று, வேறெந்த யோக, வேத, புராண, இதிகாச, யோகி, முனிவர், ஞானி, மகான், சாதனையாளர், தத்துவமேதை இப்படி எந்த கருத்துக்களையும் இணைக்காமல், எடுத்துக்காட்டாமல் பதிவுகளை தருவது வழக்கம். அந்த வகையில்தான். இந்த ஏழு ஆண்டு பயணம் தொடர்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில்தான், கிட்டதட்ட 38 ஆயிரம் அன்பர்கள், பகிர்வாளர்களாக இருக்கிறார்கள்.

வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை தருவதில், இது பத்தோடு பதினொன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு தோன்றுவதை சொல்லாமல், என் அனுபவத்தை, வேதாத்திரியத்தோடு சொல்லுகிறேன். அதுதான் உண்மை. நான் யார்? என்று எனக்குத் தெரியும். நான் எளியவன். எனக்கென்று பிம்மத்தை கட்டிக்கொண்டிருப்பவன் அல்ல. பதிவுகள் பிதற்றல் என்றால், ஏழு ஆண்டு பயணம் இருக்கமுடியுமா? அன்றாடம் வளரமுடியுமா?

கர்ம வினை குறித்த ஜோதிட ஆய்வு என்பது நன்கொடை சேவை. இதில் என்னுடைய பல்லாண்டுகால அனுபவ அறிவு, நேரம், ஆராய்ச்சி, முடிவு, திருத்தம், அதை ஒழுங்கு செய்து, கட்டுரையாக மாற்றுதல் என்று பல்வேறு செலவுகளும், வேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு சும்மா தந்தால், எனக்கு கிடைப்பதெல்லாம் சும்மா இல்லையே?! அதற்கு நீங்கள் மாற்றுவழி செய்வீர்களா? விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு என்றுதான் தலைப்பு தந்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையா?!

வேதாத்திரிய பதிவுகள், முன்கூட்டியே பார்க்க, உறுப்பினர் சேவை உண்டு, இது யூடுயூப் தரும் சேவைதானே தவிர நான் ஏற்படுத்தவில்லை. என்வழியாக, யூடுயூப் நிறுவனமும் காசு பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

யோகம் இலவசமாக எல்லோருக்கும் போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இந்த கருத்தை, நீங்கள் ஆழியார் சென்று, அங்கே உள்ள தலைமை குழுவிடம் சொல்லுங்களேன். நான் ஒரு சாதாரணன். என்னிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.

        முகத்தை காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும் முடிவும். ஆனால், என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க முகம் அவசியம் என்பது எனக்குத்தெரியும். உங்களுக்கு சகிக்கவில்லை  என்பதற்காக, நான் முகத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. நீங்கள் இனி பார்க்காதீர்கள், என் முகத்தை இணையத்திலும், நேரிலும் கூட. போதுமா?!

இப்படியெல்லாம் பதில் சொல்லி, ஏனெய்யா உன் நேரத்தை வீணாக்குகிறாய்? என்று என் நண்பர் கேட்டார். ஆனால் இந்த பதிலை எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த தூண்டுதலும், URGEம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இனி அவர்கள் திருப்தி அடையலாம். இனி பின்னூட்டம் தந்தாலும், அதற்கும் பதில்தர நான் தயார்.

வேதாத்திரிய காணொளி சேவையின் பயணம் குறித்த காணொளி, இதோ.

வேதாத்திரியாவும் நீங்களும் உண்மை தத்துவ விளக்கமும் ஏழாமாண்டு பயணமும் Vethathiriya & Your Realization
வாழ்க வளமுடன்.
-