CJ for You

Oh God, don't you have any mercy? Part 01


 இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா?!

கடவுளே இல்லை என்ற மாற்றுக்கருத்து கொண்டவர்கள், இந்த கட்டுரையையும், எழுதுபவனையும் கூட புறம் தள்ளி விடலாம். அவர்களுக்கு இந்த விளக்கம் அவசியமற்றது. ஒரு வார்த்தைக்காக, ‘இறைவனே’ என்று எழுதினால் கூட, ஆண்பாலாக சொல்லுகிறாய், இதை எதற்கு நான் படிக்கவேண்டும் என்று தூர தள்ளும் ‘அதி மேதாவிகளுக்கும்’ இக்கட்டுரை தேவையில்லை.  அப்படியானால் யார் படிக்கலாம்? இறை என்பது என்ன? என்ற தேடுதலும், அதன் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்களும், யோகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களும் வருக, நீங்கள் தொடரலாம்.

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறீர்களா? இல்லவே இல்லை என்று மறுத்தால், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தகூடும். எனவே பிறர் அறியாமல், ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஏன்? இப்படியான வார்த்தையை, இறையை நோக்கி, வானத்தை நோக்கி, ‘என்மேல் இரக்கமே இல்லையா?’ என்று கேட்க ஆரம்பிக்கிறோம்? கவனிக்கலாமா?

காலம் காலமாக, வழிவழியாக இறை என்ற தெய்வீக தன்மையை, நாம் அறிந்திருக்கிறோம். அறிந்து என்பதை விட தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம். நம்முடைய தாய் தந்தை வழியாக, தாத்தா பாட்டி வழியாக நிச்சயமாக வந்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில், ஒவ்வொரு குடும்பத்திலும் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, இந்த இறை நம்பிக்கை அவசியமற்று போய்விட்டது. அதனால் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற மாற்றத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஒரு குடும்பத்தின் பரம்பரை உறுப்பினர்கள் வழியாக, பக்தியும், வழிபாடும், அதில் ஒழுங்கும், ஒழுக்கமும் குழந்தை பருவத்தில் இருந்தே கிடைக்கிறது. பக்தி தேவையா? என்று கேட்டால், வேதாத்திரி மகரிஷி ‘அவசியம்’ என்றுதான் சொல்லுகிறார். காரணம், குழந்தையை அதன் இயற்கை தன்மையோடு பொருந்தி வளர்வதற்கும், சமூகத்தின் நன்மைக்கும், உயர்வுக்குமான வழக்க பழக்கங்களை பெற்று, தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்காத விழிப்புணர்விக்கும் ‘பக்தி’ அவசியமே என்று சொல்லுகிறார். ஆனால், அங்கே இன்னொரு தொடர் விளக்கத்தை தருவதை மறந்துவிடக்கூடாது.

எதுவரை பக்தி அவசியம்? இறை என்பது என்ன? என்ற கேள்வி எழும்வரை அவசியமானது. இந்த இறை என்பது என்ன என்று தேடவேண்டுமானால், யோகத்திற்கு வந்துவிட வேண்டும். ஆனால், நம்முடைய வாழ்நாள் முழுவதும் நமக்கு பழக்க தோசத்தில், பக்தியே போதுமானதாக இருந்துவிடுகிறது. யோகத்திற்கு வருவதற்கு நிறைய முட்டுக்கடைகள், தடைகள், தடுமாற்றம், யோசனைகள் உண்டாகிவிடுகிறது. எளியமுறை குண்டலினி யோகம் இருப்பதையும் மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாத்திரியர்கள் அப்படியல்ல. தானாக யோகத்தில் ஆர்வம் கொண்டு பயணிப்போரும் அப்படியல்ல.

என்றாலும் கூட, பக்தி என்ற பழக்கதோசம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடவில்லை என்பது தான் உண்மை. என்னய்யா, இப்படி சொல்லுகிறாயே? என்று நீங்கள் கேட்கலாம். மறுக்கலாம். ஆனால் உண்மையாகவே சொல்லுகிறேன். இன்னும் பக்தியின் மயக்கம் நமக்கு, நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதில் ஆரம்பகால வேதாத்திரி மகரிஷியும் சிக்கித்தான் இருந்தார். ஆனால், பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் வழியாக, அந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உண்மை தெளிந்தார் என்பதை ‘ஞானக்களஞ்சியம்’ கவிதைகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.

‘சரிய்யா, இப்போ அதுல என்ன பிரச்சனை? அதைச்சொல்லு’ என்கிறீர்களா? எழுகின்ற பிரச்சனைக்கே நாம் தான் காரணம் என்கிறேன் நான். ஆனால் நாம் அதை நம்பத் தயாராகாமல், இறை மேல் பழியைப் போட்டு. ‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’ என்று இங்கேதான் ஆரம்பிக்கிறோம். சரியா? உண்மைதானே?

‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’

என்று நம்மிடமிருந்து ஒரு கதறல், புலம்பல், வேதனை வந்தால் என்ன அர்த்தம்? அதில் இருக்கும் உண்மை என்ன? விளக்கம் என்ன? என்று அறியலாமா? அடுத்த பதிவில் அறியலாமே!



The Game Changer


 வணக்கம் அன்பர்களே.

கடந்த  2023 ஆண்டு ஜூலை மாதம் முதலாகவே, @வேதாத்திரியா (@Vethathiriya) எனும் YouTube வழியாக தரக்கூடிய பதிவுகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதை அறிவீர்கள். என்னுடைய இருப்பிட இடமாறுதல், வேலை மாற்றம், உடல்நிலை, குடும்பத்தினர் உடல்நிலை என பல்வேறு சோதனை காலமாக ஆரம்பமானது. தெளிவாக சொன்னால், கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பான சூழலே, வழக்கமான வேலைகளை குறைத்துவிட்டது. அந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளாகவே, அருள்துறையில் அதிசயதக்க உயர்வுகளை அடைந்தாலும் கூட, பொருள்துறையில் பெரும் தடுமாற்றத்தை பெற்றேன். முக்கியமான காரணம், கடந்த இருபது ஆண்டுகளாக, தனி நபராக, சுயசார்பாக இயங்கியதுதான். தனிப்பட்ட எந்த நிறுவனத்தையோ, எந்த நபரையோ சார்ந்து நான் இயங்கியதில்லை. இதனால், கரோனா நோய்தொற்று காலம், வேலைகள் இல்லாது, பொருளாதாரத்தில் வீழ்ச்சி. தடுமாற்றம். சிக்கல்கள் ஏற்பட்டு சமாளிக்க முடியாத திண்டாட்டம் ஆகிவிட்டது.

‘எனினும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதை தெரிந்து கொண்டிருந்ததாலும், பல்வேறு மாற்றங்களை தந்து, நமக்கு பாடம் நடத்தும் இறையின், இயற்கையின் நீதி அறிந்ததாலும், ‘நடப்பது நடக்கட்டும் எனினும் நான் என் முயற்சிகளில் தயங்கி நின்றிடமாட்டேன்’ என்ற உறுதியில், என்னால் முடிந்ததை, சரியான வழியிலே செயல்பட்டுக்கொண்டே இருந்தேன். வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை ஒன்றை அவ்வப்பொழுது நான் நினைவில் கொண்டுவருவேன்.

-

இயற்கை என்னும் பேராட்டக்காரனுக்கு

எல்லோருமே ஆட்டக்காய்கள், பெயர்த்து

இடமாற்றி வைப்பான், பிய்த்தெறிவான்,

அருள்வான். குறையென்று சொல்லுவதற்கு

பிறந்தோர் உலகில் யாருளர்!

-

இந்த கவிதையின் உண்மை அறிந்தோர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று மனம்வருந்த முடியாது. எதனால்? என்ன காரணம்? என்று நம்முடைய குறை அறிவுக்கும் விளங்கிடாது. ஆனால் எங்கோ தவறு இழைத்திருக்கிறோம். அதனால், இதை, இந்த சூழலை, அதற்கான திருத்தமாக ஏற்றுக்கொள்வோம் என்ற முழுமையான முடிவுக்கு வந்து நிற்பதற்கு தயாராகிவிடுவோம். அதுதான் எனக்கும் நிகழ்ந்தது. இதில், மறுபடியும் எழமுடியுமா? என்ற கேள்விகூட எழலாம். ஆனால், மனிதன் தாங்கமுடிகிற துன்பத்தைத்தான் ‘இந்த இயற்கை நீதி’ வழங்குகிறது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது நமக்கான திருத்தம் என்பதை ஆழமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்குப்போய் இப்படியா? என்று தனை வருத்தம் செய்துகொண்டால், யாராலும் உங்களை தேற்றிட முடியாது. நடப்பது எனது தவறுகளுக்கான திருத்தம், தண்டனை என்று ஏற்றுக்கொள்ளலாம். அந்த நிலைக்கு மனம் தெளிவு வரவேண்டும் என்பதும் முக்கியம். இல்லையானால், உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட சில முயற்சிப்பார்கள்.

எனக்கான சூழலில், அதை சரி செய்திட குடும்பத்தினரும், நண்பர்களும் உதவினர். அதன்வழியாக சில சிக்கல்களை கடந்து வந்தேன். எனினும் வேலை தாமதமாகவே அமைந்தது. முழுமையாக, என்னையே மாற்றி அமைக்கும்படி, என் அடையாளத்தையும் மாற்றும்படி வேலை அமைந்தது. என்றாலும், நிறைவான வேலைதான். சொந்தமான தொழில் என்ற நிலை கடந்துவிட்டது. எனினும் இதுவும் ‘இதுவும் நீதிக்காகவே’ என்று ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை பயணிக்கிறேன், இனிமேலும் அதிலே பயணிப்பேன். எனக்கு அல்லது எனக்குள் எந்த குறையும் இல்லை.

வேதாத்திரியத்தில் விளக்கம் பெற்ற பிறகுமட்டுமல்ல, அதற்கு முன்பாகவேகூட என் தேவைகள் மிகக்குறைவு. எந்த திட்டமும், முனைப்பும், முயற்சியும் கொண்டவனில்லை. இருப்பது போதும், இதில் குறைவின்றி இருந்தாலே நிறைவுதான் என்ற மன நிலை எப்போதும் உண்டு. இது என் குடும்பத்தின் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் நற்பண்பு என்றுதான் சொல்லுவேன். பெயருக்கும், புகழுக்கும், பெருமைக்கும் என்றும் ஆசையும், அதற்கான திட்டமும், குறுக்குவழிகளும் என்றுமே இருந்ததில்லை. என்னுடைய இருபதாண்டு ஓவிய வேலைகளிலேயே அது நிறைவும் பெற்றுவிட்டேன். ஆனால், நான் வேதாத்திரியா வழியாக எதைச் சொன்னாலும், நான் ஏதோ காசுக்கு ஆசைப்பட்டு செயல்படுவதாகவே சில அன்பர்கள் பின்னூட்டம் தந்ததை அறிவேன். அது அப்படித்தான் நிகழும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இத்தகைய அன்பர்களின் பின்னூட்டம், மற்ற அன்பர்களையும், ஆர்வத்தையும், உயர்வையும் திசை திருப்பிவிடும், நான் ஒன்று சொல்ல, அவர்கள் அதற்கு ஒரு பின்னூட்டம் இட, இப்படி நீண்டுகொண்டே இருக்கும் என்பதன் காரணமாகவே பின்னூட்டம் தடையும் செய்யப்பட்டது.

இப்படியாக, ஆறுமாதங்களாக இரு புதிய பதிவுகள் மட்டுமே என்னால் தரமுடிந்தது. இதற்காக அன்பர்கள் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். என்றாலும், எழுத்துப்பதிவுகளும், வேதாத்திரிய கேள்வி பதில்களும் தொடர்கின்றன. அருள்தந்தை, மகான், வேதாத்திரி மகரிஷி தந்த, உங்களுக்கான விளக்கங்களை, என்வழியாக, என்னுடைய புரிதல் கொண்டு, இன்னும் எளிமையாக தந்திருக்கிறேன் என்பது உண்மை. புதிய பதிவுகள் இல்லாத இந்த நிலையிலும், மிக சிறப்பான பார்வைகள் வந்துகொண்டிருப்பதை YouTube தருகிற மாத அறிக்கை சொல்லுகிறது. அன்பர்களாகிய உங்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.

உலகமெங்கும், எண்ணற்ற வேதாத்திரியர்கள் தம் மக்களுக்கான பகிர்தலை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்த பதிவுகளை தந்திருக்கிறேன். இன்னும் தருவேன்.

ஒவ்வொரு நொடியும் பல்வேறு சூழல் வழியாகவும், பிறர்மூலமாகவும், எண்ணங்களாலும் வழிநடத்தும் இறையாற்றலுக்கு என்னுடைய வணக்கங்கள், அந்த இறையை உணரத்தந்த மகான் குரு வேதாத்திரி மகரிஷிக்கும் வணக்கங்கள். அன்பர்களாகிய நீங்கள் அனைவரும், இறையாற்றலின் கருணையினால், உடல்நலம், நீள் ஆயுள் நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்.


French Beard and Spiritual Journey by Sugumarje


குறுந்தாடியும் ஆன்மீக பயணமும் - ஒரு அலசல்


Sugumarje - Image Created by AI based on prompt

        இந்த குறுந்தாடிக்கு பின்னால், நான் தான் இருக்கிறேன் எனினும், அதற்கென்று தனிக்கதை ஏதுமில்லை. இராயிரத்து மூன்றுவரை மீசை மட்டுமே பிரதானமாக (மூக்கின் கீழே) இருந்துவந்தது. பொதுவாகவே வாரத்தில் ஆறுநாள் தாடியும், மறுநாள் அதை (சுய) வழித்தலும் தொடர்ந்தது. எப்போதாவது மீசை ஓரம் ஒதுங்கிப்போக, முழுமையான வழித்தலும் நிகழ்ந்ததுண்டு. இராயிரத்து ஐந்துகளில் சிலமாதங்கள், மீசையும் இல்லாத நிலை நீடித்தது. எனினும், வாழ்க்கை தந்த அடியில், பாடம் நிறைய படித்ததால், அந்த அனுபவத்திற்குப் பின், மாற்றம் தேடி, இராயிரத்து ஏழில், சென்னையில் ஒருமாதம் தங்கி இருந்து சில வேலைகள் செய்யவேண்டி அமைந்தது. 

வேலைப்பளுவில், வழித்தலுக்கு நேரமும், ஆர்வமும் இன்றி தாடி, மீசையோடு ஆள் மாறி இருந்தேன். அப்போதுதான் இந்த குறுந்தாடி வைக்கலாமா? என்ற சிந்தனையும் வந்தது. அந்த குறுந்தாடிக்குறிய சில குணாதசியங்களையும் நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். அதனால் நம்பிக்கையும் வந்தது. உடனடியாகவே அது செயல்வடிவமும் பெற்று, என் அடையாளமாக மாறிக்கொண்டது.

விமர்சனங்களை கடந்த மனநிலையும், பக்குவம்பெற்ற அனுபவ நிலையும், நிறைத்துக்கொண்ட தகுதியும், ஒழுங்கும், நடவடிக்கைகளும் எனக்கு உறுதியை தந்தது. கேரிகேச்சர் ஓவியர் சுகுமார்ஜெ என்பதற்கான அடையாளமாகவும் மாறிவிட்டது.  இந்த வடிவ அமைப்பை, சுய வழித்தலில் கொண்டுவருதல் கடினம் என்றுதான் பலரும் சொல்லிக்கொண்டனர். சொல்லுகின்றனர். ஆனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை. ஒரே அளவில் நிறுத்துக் கொள்ளுதல் என்ற நிலை, இராயிரத்து பதினெட்டுகளில் மாறிவிட்டது. காரணம், அந்த காலத்தில், வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நெடும் பயணம், பல்வேறு பிரச்சனைகளை விளைவித்தது. 

வாழும் பொழுதே இறத்தல் என்பது போல, இருக்கும் சுமையெல்லாம் கழித்தல் (கர்ம வினை) அவ்வளவு சுலபமா என்ன? இன்றுவரை வாழ்வியலில் சில கடினம் தொடர்கிறது. என் நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. 'by Spiritually I am a winner and loser in Matirialistic' எனினும், ஒவ்வொரு நாளையும், இறையாற்றல் எனக்கு கொடுக்கும் கொடையாக, நிறைவாக, புரிந்து கடந்து போகிற மனபக்குவம் எனக்கு கிடைத்துவிட்டதால், இயல்பாக ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன். படகில் பயணிக்கிறேன். படகின் துடுப்பை நான் இயக்குவதில்லை. இலக்கின்றியும் நான் பயணிக்கவில்லை என்பதையும் தெளிவு செய்கிறேன். என் இலக்கு நிறைவுற்றது. நீண்ட நேரம் குளத்தில் குளித்தபிறகு, சும்மா மிதக்கலாமே என்று தோன்றுமல்லவா? அது தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதை என் அனுபவமாக கொண்டாலும், அதுகுறித்து விளக்கிட எனக்கு ஆர்வமில்லை. அதை எத்தனையோ குருமார்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய ‘Vethathiriya Sky Lead' என்ற Youtube-லும் கூட மூன்று மாதங்களாக ஏதும் பதிவிடவில்லை. போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் சில பதிவுகள் அன்பர்களுக்காக இனிமேல் வரும். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, மறுபடியும் சில மாற்றங்கள் குறுந்தாடியில் நிகழ்கிறது. தேடல் முடிந்துவிட்டாலும், வாழ்க்கை தொடர்கிறது அல்லவா? அந்த வாழ்விற்காக. இதன் காரணமாகவே, இங்கேயும் தொடர்கிறேன்.

உலகில் பிறந்துவாழும் நாம் ஒவ்வொருவருக்கும், அந்த தேடலும், கடமையும் இருக்கிறது. ஆனால், நாம் நம்மை அதில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இறையாற்றலை செயல்படு, செய்துகொடு, வரமாக கொடு, வழிநடத்து, துணை இரு, சாட்சியாக இரு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யோகம், ஆன்மீகம், பொருளாதாரம், வாழ்க்கை, உறவுகள், பிறவிக்கடமை, கர்ம வினை, இறை, தெய்வம், கடவுள், இயற்கை, கோள்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம், மெய்ஞானம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்னோடு உரையாடலாம். 

#vethathiriya #vethathiriyaskylead #sugumarje #caricaturist #caricatureartist #youtube #facebook #instagram #vethathiri #maharishi #manavalakalai #skyyoga 


Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje


தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது தெரியுமா?

வாழ்க வளமுடன் ஐயா, தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? என்று விளக்குவீர்களா? என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். தன்னையறியும் யோக பயணத்தில், நாம் ஏதேனும் சொன்னால், சொல்லுபவரையே எடைபோட்டு, நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று கேட்டு காலை வாறிவிடும் அன்பர்கள் மத்தியில், இப்படியான கேள்விகளை கேட்டு தன்னைப்போல பிறரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதுபோலவே, என்ன சொல்லியிருக்கிறேன் என்றே அறியாமல், மேலோட்டமாக படித்துவிட்டு, ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?!’ என்று ஏளனம் செய்து, தன் தகுதியை வெளிப்படுத்திக்கொண்ட அன்பர்களையும் வாழ்த்துகிறேன். இத்தகைய அன்பர்கள்தான், என்னைப்போன்ற சாதகர்களுக்கு, படிகற்கள். நாம் சரியாக அடுத்தபடியில் நடக்கிறோமா? இல்லையா? என்று சோதனை செய்து, உறுதி செய்து கொள்வதற்கு உதவுகிறார்கள். இப்படி சொல்லுகிறாரே? என்று நானும் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் சொன்னால், அவருக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படியாக உணர்ச்சி வசப்பட்டால்கூட அது எனக்கு தளைதான்.

தளைகள் என்பது நமக்கு வேண்டாத சுமைகள் என்று சொல்லலாம். நம்மை தடுக்கும் கண்ணாடி சுவர்கள் அது. நம் கைகளை, கால்களை சுற்றி சிக்கலாகிக் கிடக்கும் கயிறு என்றும் சொல்லலாம். நம்முடைய முதுகில் ஏற்றி இருக்கும் பாரம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யோக வழித்துணையில் சுமை தேவையில்லை தானே? அத்தகைய சுமைகள் தான் தளை என்று சொல்லப்படுகிறது.

ஒரு பாறையில் ஒளிந்திருக்கும் சிலைக்கு, அதன் தேவையற்ற பாறைகள் தான் தளையும், சுமையும் ஆகும். அந்த பாறை சிற்பமாக மாறுவதற்கு, சிற்பி என்ற குரு தேவைப்படுகிறார். உளி என்ற யோக வழி தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாறைக்கு ஒன்றும் வேலையில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது தானே? ஆம். பாறைக்கு வேலை இருக்கிறது. அது, தான் சிற்பமாக மாற்றப்படும் வரை, பொறுமையாக குருவின் துணையையும், உளியின் செதுக்குதலையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, யோக பயிற்சியில், அதை சாதனையாக்கிட, மனம் ஒன்றி செயல்பட வேண்டும். இப்போது, இந்த தளை என்பதில் விடுதலையானது, எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருக்கும் அல்லவா?!

தளைகளை விடுவிப்பதிலும், யோக பயணத்தில் முன்னேறுவதிலும் அவசியமாக தேவைப்படுகின்ற ‘பொறுமை’ எல்லாவிதங்களிலும் நிலைபெற்று, உங்கள் வாழ்க்கையை, செயல்முறைகளை, வழக்கம் பழக்கங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லலாம். அப்படி இருந்த மனிதரா இப்படி மாறிவிட்டார்? என்று உங்கள் காதுபடவே பேசி அதிசயிக்கும் மனிதர்களை நீங்கள் காணமுடியும். ஆம். ஒரு புது மனிதராக நீங்கள் மாறிட முடியும் என்பதே உண்மை.

எனினும், தளைகளை களைதல், உடனடியாக நிகழக்கூடியதல்ல. இதற்கு பல காலங்கள் ஆகலாம். உதாரணமாக சொன்னால், பல பிறவிகள் கூட ஆகலாம் என்பதே உண்மை. அந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. இந்த தளைகள், நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக நம்மை வந்தடைந்தது. வந்துகொண்டும் இருக்கிறது. கூடுதலாக, பரம்பரை வழியாக, கருமூலமாகவும் நமக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை முற்றுணர்ந்த குரு, நமக்கு உதவியாக இருந்து, இந்த தளைகளில் இருந்து, நம்மை விடுவிக்க துணையாகவும் இருக்கிறார். அவர் காட்டுகிற வழியில், அந்த அறிவுரைகள்படி நாம் நம்மை திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் போதும். தளைகள் தானாகவே நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்த உண்மையை உங்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்தில்கூட, புதிதான தளைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளலாம். நம்மையறியாமல் சில தளைகள் நம்மீது படர்ந்துவிடும். அதை லாவகமாக, விட்டு விலகிட, விலக்கிவிட நாம் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. தளை என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்கள் யோக பயணத்தில் சிறக்க, உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.

Time is wasted in the economy to satisfy its own needs. Where do I join yoga, get Kundalini initiation and get true explanation? Very confusing. Is this why they ask me that I am not interested in yoga? What is your response to them?


வாழ்க வளமுடன் ஐயா, பொருளாதாரத்தில் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்திடவே காலம் வீணாகி விடுகிறது. இதில் நான் எங்கே யோகத்தில் இணைந்து, குண்டலினி தீட்சை பெற்று, உண்மை விளக்கம் பெறுவது? மிகவும் குழப்பமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கு யோகத்தில் ஆர்வம் இல்லை என்று கேட்கிறார்களே? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?


அவர் சொல்லுவது உண்மைதான். பக்தியில் இருக்கும் மனிதர், அதிலிருக்கும் உண்மை தத்துவங்களை அறிந்திட நினைத்தால், அவர் யோகத்திற்கு வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒரு சிலருக்கு, யோகத்தில் தானாகவே ஆர்வம் வந்துவிடும். அதற்கு காரணமாக இருப்பது, அவருடைய மூதாதையர்கள், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையின் ஊக்குவிப்பு. இவர்களுக்கு, தங்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொருளாதார வாழ்க்கையோடு போராடிக்கொண்டே யோகத்திலும் இணைந்து உயர்வார்கள்.

எனினும் ஒருவர், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பிறகுதான் யோகத்திற்கு வரவேண்டும் அல்லது வரமுடியும் என்பது தவறான கருத்து. அப்படிப்பார்த்தால், உலகில் உள்ள எல்லா பணக்காரர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் யோகத்திற்கு வந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்துவிட்டதா என்ன? இல்லைதானே?

ஆனால், ‘அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய பாமரனுக்கு யோகம் தேவையில்லை’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆமாம். அவனுக்கு ஒவ்வொருநாளும் மிகுந்த போராட்டமாகவே இருக்கும் அல்லவா? எப்படி வாழ்வது? எப்படி உணவு கிடைக்கும்? எதை சாப்பிடுவது? என்ன வேலை கிடைக்கும்? எப்போது தூங்குவேன்? என்ற சிந்தனை ஓட்டத்திலேயே இருக்கும் மனிதனுக்கு, யோகம் கற்க வாய்ப்பிருக்காது. அவன் பக்தியிலும் இருக்கமாட்டான். ஆனால், கடவுளே, என் நிலமை ஏன் இப்படி இருக்கிறது? என்று புலம்பிக்கொண்டுதான் இருப்பான். சரிதானே?

பொதுவாகவே, உலகில் வாழும் மனிதனுக்கு, பொருளாதாரம் அவசியம். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருள் பலம், அதன் உபயோகம் இல்லாமல் வாழமுடியாது. அந்த பொருளுக்காக, இன்னொரு மனிதரை சார்ந்தும் வாழமுடியாது. அப்படி சார்ந்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அது உண்மைதான், அதற்காக, தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை, சம்பாதித்துக் கொண்டே இருக்கமுடியுமா? அதுமட்டுமேதான் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? நாம், இந்த உலகில் பார்க்கின்றோமே? பலகாலம் ஓடிஓடி சம்பாதித்த பணத்தையெல்லாம், தீடீரென்று ஒருநாள், தன்னுடைய உடலில் ஏற்பட்ட நோய் தொந்தரவுகள் தீர்க்கும் மருத்துவமனைக்குத்தானே செலுத்துகிறார்?. உண்மைதானே? சிலர், தன்னுடைய சொத்துக்களையும் கரைத்துவிடுகிறார்கள். இதுபோலவே சில வழக்கு விசாரனைக்கும் தன் சம்பாத்தியத்தை வழங்கிவிடுகிறார்கள் அல்லவா?

சாரசரியான பொருளாதர உலகின் பார்வையில், பொருளாதார உயர்வை விட்டுவிட்டு, யோகத்திற்கு எப்படி வருவது? என்று உங்கள் நண்பரோ, வேறு சிலரோ கேட்பது உண்மையாகவே தோன்றும். யாருமே, பொருளாதரத்தை விட்டுவிட்டு யோகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை. நிச்சயமாக, வேதாத்திரியம் அப்படி சொன்னதே இல்லை. பொருளாதாரத்தில் நன்கு உயருங்கள். இந்த அளவில் போதும், நான் நிறைவாக இருக்கிறேன் என்ற நிலைக்கு வாருங்கள். உங்களுடைய பொருளாதாரம் பலமாக இருக்கட்டும்.  உங்கள் வாழ்நாளுக்கும் போதுமானதாகவே இருக்கட்டும். அதில் ஒருவகையான மன நிறைவை கொண்டுவாருங்கள். பொருளாதாரத்தில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இருப்பது வேறு. போதும் என்ற மன நிறைவை அடைவது வேறு.

இந்நிலையில், எனக்கு இருப்பது போதும் என்ற நிலையிலும், இந்த நிலையில் இருந்து என்னை நிறைவு செய்துகொண்டு, ‘என் பிறப்பின் நோக்கத்தை அறிவதையும், பிறப்பின் கடமையை தீர்த்திடவும் யோகத்தில் இணைகிறேன்’ என்று மாற்றம் கொள்ள வேண்டும். பொதுவாகவே, யோகத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொல்லுவார்கள். அதில் 1) வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு, 2) வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவு. இந்த இரண்டில் எது அவருக்கானது என்பதை சிந்தனை செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், ஒருபோதும், சம்பாத்தியத்தை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதையும் அவருக்கு விளக்குங்கள். அவர் அதில் நிறைவு பெறும் வரை, போதும் என்ற மனநிலை வரும்வரை பொருளாதாரத்திலும், சம்பாத்தியத்திலும் தொடரட்டும். அதுதான் அவருக்கு நன்மையுமாகும்.

இந்த உலகில் வாழும், ஓவ்வொரு மனிதனும், தன்னுடைய வேலை, வியாபாரம், தொழில் என்ற வகையில், பொருளாதார உயர்வை பெற்றே ஆகவேண்டும். தானும் உயர்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் வகையிலும் மாற்றத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். பிறரை உடலாலும், மனதாலும் வருத்தம் செய்யாத அளவில் தன்னளவில், பொருளாதார உயர்வை பெறவும் வேண்டும். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, இந்த அளவிலான பொருளாதார உயர்வு எனக்கு போதும் என்ற நிறைவை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விளக்கம் பெறாமல் யோகத்தில் இணைவதை தவிர்க்கலாம்.

என்ன இப்படி சொல்லுகிறீர்கள்? ஒரு யோகி இப்படி சொல்லலாமா? என்று கேட்பீர்கள். வேதாத்திரி மகரிஷியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். இதில் என் கருத்தாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒருவேளை, இயல்பாகவே, தானகவே, யோகத்தில் இணைந்திட வாய்ப்பு கிடைத்தால், கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. எதுவும் குழப்பம் அடையப்போவதும் இல்லை. வழக்கமான உங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகிடாமல், யோகத்தையும் தொடரலாம். நன்மையும் அடையலாம். இதனால் அதுவும், அதனால் இதுவும் கைவிட்டு போய்விடுவதில்லை. நிச்சயமாக, பொருளாதார நிறைவு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், யோகத்திலும் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள் என்பது உண்மையே. இதற்குச் சான்றாக நிறைய அன்பர்களும் இருக்கிறார்கள். சரிதானே?

மறுபடியும் நினைவுறுத்துகிறேன், பொருளாதார நிலையை, வாய்ப்புக்களை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை. அதுபோலவே பொருளாதார நிலையும், வாய்ப்பும் மட்டுமே அவசியம் என்று யோகத்தை கைவிட வேண்டியதும் இல்லை.

இந்த விளக்கத்தை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். நேரடியாக அவரை, இந்த பதிவை படிக்கச்செய்யுங்கள். தானாக உண்மை விளங்கிக் கொள்வார். சில நாட்கள் சிந்தனை செய்தார் எனில், நல்ல விளக்கமும் அவருக்கு கிடைக்கும். அதன்வழியில், அவருக்கு விருப்பமானதை தொடர ஆயத்தமாவார். உங்களுக்கும் ஒருவரை நன்வழிக்கு கொண்டுவந்த திருப்தியும் கிடைத்துவிடும் அல்லவா?

வாழ்க வளமுடன்.

-

At the end of the Vethathiriya meditation, instead of saying Om Shanti three times, it is a bit difficult to say Amaiti or peace. I don't think there's really peace there. Is it right to change it like this without saying Om Shanti? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவத்தின் முடிவில், ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்லுவதற்குப் பதிலாக, அமைதி என்று சொல்லுவது, சற்று நெருடலாக இருக்கிறது. உண்மையிலேயே அங்கே அமைதி வரவில்லை என்று கருதுகிறேன். ஓம் சாந்தி என்று சொல்லாமல் இப்படி மாற்றுவது சரிதானா? விளக்குக.


நீங்கள் வேதாத்திரி மகரிசியின் காலத்து வேதாத்திரிய அன்பர் என்று கருதுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்து கொண்டது 2006ம் ஆண்டில் தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே, ஓம் ஷாந்தி, அமைதியாக மாறிட்டது. இந்த மாற்றத்தற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்று நமக்குத் தெரியாது. எனினும், இந்திய அரசும், அரசியலமைப்பும், மக்களும், மதம் சார்ந்த அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே, தனித்த நிலையில் ‘அமைதி’ என்று மற்றம் செய்யப்பட்டது.

இதில் வேதாத்திரி மகரிஷிக்கு ஏற்பு உண்டா? என்றால் இல்லை என்றுதான் கருத இடமிருக்கிறது. காரணம், வேதாத்திரியம் என்பதே எந்த எல்லைக்குள்ளும் சிக்கிடாத தன்மை கொண்டது. ஆண் பெண் என்ற பேதம் கூட அதற்கு இல்லை என்பதுதான் நிச்சயமான உண்மை. அப்படி இருக்கும் நிலையில், ஓம் ஷாந்தி என்பது மதரீதியாக இருக்கிறது என்பது, புரிந்து கொள்ளாத தன்மை. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் உருவாகாமல இருக்க, மாற்றித்தானே ஆகவேண்டும்? அதனால் மாற்றப்பட்டுவிட்டது.

உங்களுக்கும் எனக்கும் ‘அமைதி’ என்று சொன்னால், அந்த வார்த்தை அமைதியை தருவதில்லை என்பது நிஜமே. ஏனென்றால், ஓம் ஷாந்தி என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால் கடந்த இரு தசாம்ச ஆண்டுகளாக, வேதாத்திரியம் பழகுவோரும், கற்பிக்கும் ஆசிரியரும், ‘அமைதி’ என்று சொல்லித்தான் அமைதியை நிலை நாட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. ஒரே நல்லது என்னவென்றால், இனிமேல் யாரும் ‘ஓம் ஷாந்தி’ என்று சொல்லி தவத்தை முடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தவில்லை. அந்த வகையில் விரும்புவோர் ‘ஓம் ஷாந்தி’ என்றும் சொல்லலாம். ‘அமைதி’ என்றும் சொல்லலாம். நீங்கள் கேட்ட இதே கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே ஒரு அன்பர் கேட்டுள்ளார். அந்த பதிவை இப்பொழுது உங்களுக்காக பகிர்கின்றேன்.  இந்த பதில் வழியாக, நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவரும் என்பது உண்மை. இதோ!

-

கேள்வி: சுவாமிஜி! உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

மகரிஷியின் பதில்: “ஓம்” என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கேத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று. அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க மௌனம் என்ற குணத்தை வைத்து மாத்திரைக் குறைவான “ம்” என்ற மகர மெய்யைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம். அதனுடன் சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலாதாரத்தில் எழுந்து, துரியத்தில் முடியும் உயிர் எழுத்தாக வருவது “ஓ” என்ற சப்தம் தான். “ஓ” என்ற சப்தத்துடன் “ம்” என்ற மகர ஒற்றை இணைத்து “ஓம்” என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது. இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். “ஓம் சாந்தி” என்று தவ முடிவில் கூறுவது நாம் எல்லோரும் இறையருளான அமைதி பெறுவோம் என்பதேயாகும். விருப்பப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தைகளைக் கூறாமல் விட்டு விடட்டுமே.

அப்படி விட்டுவிட்டால் அதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் ஏற்பட்டு உலக சமுதாயம் என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது தவமுறையில் ஒரே சீரானமுறை (Uniformity) போய்விடும்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

-

வாழ்க வளமுடன்!