CJ for You

Is it necessary to worship God? Can anyone get away from it? What happens if you don't? Give an explanation.


இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

பதில்:

ஒவ்வொரு மனிதனின், வாழ்க்கைச் சூழலிலும் இப்படியான கேள்வி எழுவதுண்டு. காரணம் என்னவென்றால், அவர்கள் இறையை, கடவுளை வேண்டிக் கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம், எதுவுமே உடனடியாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் கூட, பற்றாக்குறை ஆகிவிட்டது என்று கருதினார்கள். இதனால், அவர்களுக்கு ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் கிடைத்தது. அந்த அனுபவத்தின் வழியிலே, ‘அது’ இல்லையோ? என்ற கருத்துக்கு உடன்பட்டார்கள். இது இயல்புதான். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம்.

சமீபத்தில் ஒரு மீம்ஸ், நல்லவங்களை, கடவுள் சோதிப்பாரு, ஆனா கைவிட மாட்டாரு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர், அதான் நல்லவங்கன்னு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் சோதிக்கிறாரு? என்று கேள்வி கேட்கிறார். மேம்போக்காக, இது கிண்டல் கேலி என்று இருந்தாலும், நல்லவனாக இருந்தவன், ஏன் தவறு செய்தான்? எப்போது செய்தான்? என்ற கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய உண்மை விளக்கமாகலாம்.

முதலில், நாம் ஏதேனும் கேட்பதற்காகத்தான், இறை வழிபாடு என்ற எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். கேட்டால் கொடுக்கவும், உடனே கொடுக்கவும் எதிர்பார்ப்பதும் தவறு. பிறந்த பொழுது, நீ அழுதாய், உனக்கான உணவை, தாயின் பாலாக்கித் தந்தது யார்? பதிலாக ‘இயற்கை’ என்பார்கள். அந்த இயற்கைக்கு மதிப்பளித்து, உயர்வாக, இறைநிலை, அதை அறியும் வழி கட உள் (கடவுள்) என்பதாகத்தான் உண்மை இருக்கிறது. ஆனால், இதை நாம், கைவிட்டு விட்டோம். கேட்கும் பொழுதெல்லாம் கொடுக்கவும், கேட்பதெல்லாம் கொடுக்கவும் இறைநிலை எப்படி அசைந்து கொடுக்கும்? உனக்கானது எல்லாமே, உன் வாழ்க்கையோடு, செயல்களோடு, விளைவுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அது கண்ணுக்கும், வெளிப்படையாகவும் தெரிவதில்லை. ஒரு விதைக்குள் அந்த மரத்தைத் தரும் விதை இணைக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறதா? ஆனால், கருத்தாக உணர முடியும் தானே?

நம் வாழ்வோடும், செயல்களோடும், விளைவுகளோடும் நமக்கானது எல்லாம் கிடைப்பதை அறியாமல், அதையெல்லாம் மறந்துவிட்டு, கேட்டால் கொடுக்க வேண்டும், அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இறைநிலையை, நம் அளவிற்கு ஓர் சாராசரி மனிதராகவா நினைக்க முடியும்?

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, தரும் நேரடியான விளக்கத்திற்கு, மேற்கண்ட முன்னோட்டம் உதவலாம் என்று கருதுகிறேன். இனி, அவர் தரும் விளக்கத்தை காண்போமா? 

‘எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம் பொருள், இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது, நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?’

‘செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. 

உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.’

‘ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும், அங்கே விளைவு, கடவுள் செயல்தான். (That is the cause and effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு, உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ, அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை, உன்னுடைய செயலின் விளைவாக, காலையிலிருந்து மாலை வரையில் பார்த்தும் மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம். வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும்,

அந்நோக்கத்திற்கேற்ப, வாழும் முறை என்ன என்பதை அறிந்து கொள்வது ஞானம்.’

என்றவகையில், நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். நமக்குள்ளாக, அமைதியான நிலையில், சிந்தித்தாலும், அந்த சிந்தனையின் வழியில் ஆராய்ந்தாலும், உங்களுக்கு உண்மை விளக்கம் கிடைத்துவிடும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையும், எந்த வகையிலும் முரண்படாத செயல்முறைகளும் உண்டாகும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

-

What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-

Truth and Secret Explanation of Vethathiriya Kayakalpa Yoga Exercise by Vethathiri Maharishi


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?


பதில்: 

இதோ, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமில்லாமல், உலகில் உள்ள எந்த மனிதருக்கும், வளரும் பருவம் வந்த அனைவருமே கற்று பயன்பெற்று, உலகில் நிறைவாக, தன்னையறிந்து, முழுமைபெற, வாழ்நாளை சிறப்பிக்க, இப்பயிற்சியின் விளக்கம் தருகிறார். முற்றிலும், நோக்கம் திசைமாறி, சிதறிக்கிடந்த, சித்தர்களின் ‘காயகல்ப யோக கலையை’ ஒருங்கிணைத்து, திருத்தி அமைத்து, எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நமக்குத் தந்த, வேதாத்திரி மகரிஷிக்கு நம் வணக்கத்தை செலுத்துவோம். வாழ்க வளமுடன்.

        வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ’மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி - கற்றுணர்ந்து பயன் கொள்வீர்! விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும்.

அது நாம் உண்ணும் உணவு.

1. ரசம்

2. ரத்தம்

3. சதை

4. கொழுப்பு 

5. எலும்பு

6. மஜ்ஜை மற்றும்

7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். 

இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. 

        மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். 

இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.  எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக,

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் (வேதாத்திரி மகரிஷியின் வார்த்தையில்) ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.’ என்பதாக விரிவான விளக்கங்களை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்.

வாழ்க வளமுடன்.

-

Do planets affect an individual's living environment? Changing? What is the truth?


கிரகங்கள் தனி மனிதனின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கிறதா? மாற்றுகிறதா? உண்மை என்ன?


இதை ஒரு நீண்ட, விளக்கத்தின் வழியாகவே காணலாம். இல்லையேல், உங்களுக்கு, சரியான புரிதல் கிடைக்காது என்பது உறுதி. நாம் வாழும் இந்த புவியும் ஒரு கிரகம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் முக்கியமாக, நாம் நிலத்தில் நிலையாக வாழ்வதாகவே ஒரு கற்பனையில் இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? நாம் பிறந்தது முதல், வாழ்க்கையின் முடிவுவரை, நாம் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். எங்கே? இந்த பிரபஞ்சத்தில், நாம் அறியமுடியாத ஏதோ ஒரு இலக்கு நோக்கியே. இதை எப்படி அறியலாம்? மிக எளிமையாக, சூரியன் கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதும் போதுமானது. உண்மையிலேயே, சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதா? என்று கேட்டால், ஆம் என்பது உங்கள் பதிலா? அப்படியானால் நீங்கள், மாய உலகில் இருக்கிறீர்கள்.

உண்மை என்ன? நாம் வாழ்கின்ற பூமிதான், வடக்கு தெற்கை அச்சாக கொண்டு, மேற்கிலிருந்து கிழக்காக, தனக்குத்தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. கூடுதலாக சூரியனோடு இணைந்து, சூரியனை அச்சாக கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. இந்த உண்மையை நன்கு விளக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.

நாம் வாழும் பூமியோடு, கூடுதலாக பூமியை சுற்றும் சந்திரனையும் அறிந்து கொள்க. மேலும் சூரிய குடும்பத்தில் பூமி, மூன்றாவது கிரகம். நாம் வாழும் இந்த பூமியோடு, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களும் இணைந்து சுற்றி வருகின்றன. சனிக்கு அடுத்தும் நெப்டியூன், புளூட்டோ இரண்டு கிர்கங்கள் இருந்தாலும், அதனுடைய தூரம் காரணமாகவும், பலமில்லாத அலைகள் கொண்டிருப்பதால், இந்திய ஜோதிடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில், ‘இல்லை அவை கண்டுபிடிக்கபடவில்லை, பிறகுதான் அதை விஞ்ஞானம் கண்டுபிடித்தது’ என்று ஒருவர் சொன்னால், அது அவரின் அறியாமை. சாதாரண கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நட்சத்திரங்களை எப்படி இணைத்தார்கள்? அப்படியானால் அதெல்லாம் பொய்யா? அல்லது அப்போதே விஞ்ஞானம் இந்த, நட்சத்திரங்களை கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னதா? இதற்கு உங்கள் விடை என்ன?

இப்போது, உங்கள் கேள்வியின், பதிலுக்கு வருவோம். இப்படி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கும் கிரகங்கள், தன்னிலிருந்து அலைகளை வீசிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாம் நிலையாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும், சூரியனும், தன் குடும்பத்தை எடுத்துகொண்டு, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்தான் நட்சத்திரங்களின் அலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நட்சத்திரங்களும் கிரகங்கள்தான். வெகுதூரத்தில் இருப்பதால், அதை நட்சத்திரங்கள் என்கிறோம்.

இந்த அலைகள் எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்து, அதன் தூரம், அருகாமை என்கிற வகையில், பூமியை வந்தடைகிறது. பூமியும் ஓரளவில் பாதிப்படைகிறது எனினும், அதை நாம் உணர்வதில்லை. ஆனால் பூமியில் வாழும் நமக்கு, அந்த அலைகள், தனித்தனியாக, ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஏன்? மனிதன் முதற்கொண்டு எல்லா உயிரினமும், எல்லா பொருட்களும், அணுக்களால் ஆனவையே. காணும் பொருட்களெல்லாம் அணுக்களின் கூட்டு, காண்கின்ற நாமும் அணுக்களின் கூட்டுத்தான். இதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?

இதில், மனிதனுக்கு எப்படி, தனியான பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்துகின்றன? என்று சிந்தித்தால், உயிரின பரிணாமம் என்ற முதல் நிலைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். Evaolution என்று சொல்லப்படும் ஒன்றன் பின் ஒன்றான, சங்கிலித்தொடரான பரிணாமத்தில், உடலின், உடலுக்குள்ளாக அந்தந்த உறுப்புக்களின், உயிரின், மனதின் உருவாக்கத்தில், தனித்தனியான கிரகங்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது. இதை ஜோதிடத்தின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும். நாம் பிறக்கும் பொழுது, ஆங்காங்கே இருக்கக்கூடிய கிரகங்கள், ஒரு பதிவை தருகின்றன. அதை நாம், நம்முடைய ஜாதகமாக எழுதிக்கொள்கிறோம். அன்றிலிருந்து, நமக்கு ஏற்படும் தூண்டுதல்களில், நம் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த தூண்டுதலை புரிந்து, அறிந்து அதற்கு விளக்கமான பாதையில், நாம் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், உங்கள் வாழ்க்கைச் சூழல் மாற வாய்ப்புள்ளது. அதுபோல பாதிக்கப்படவும் செய்யும். மாறுதல் கொள்ளவும் செய்யும். உங்கள் ஜாதகம், உங்களுக்கான கையேடு என்பதை மட்டும் நினைவில் கொள்க. ஆனால் அது உங்கள் தலையெழுத்து என்று நம்பி விடாத விழிப்புணர்வு தேவை.

வாழ்க வளமுடன்.

-


If everything has already been provided, is it okay to ask for it?


எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?


கேள்வி

        ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.

        பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?


பதில்

பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.

‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே. 

எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது. 

மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.

இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.

அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’

வாழ்க வளமுடன்.

-

What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?


கடவுள், அவதாரம், பக்தி, வழிபாடு, சடங்குகள், விழாக்கள் ஆகியன தற்கால மக்களிடம் எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவீர்களா?


இந்த கேள்விக்கான பதிலை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிகத்தெளிவான பதிலும் தந்து, அதற்கான தீர்வும் தந்திருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே படிப்போம். இதோ,

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார், ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள், அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில், பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு, சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது, சிரமமாக இருக்கிறது.

அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும், இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும், ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும், அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது, குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும், ஒரு வடிவத்தையும் குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு, அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். 

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர், தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால், அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான், வழிபடுகிற பொருளையும் காண்கிறார்.  இத்தகைய வழிபாடானது, ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை, அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை வாழ்க்கை, எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?

வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். 

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன், ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. 

இந்த நிலைமை நீடிக்க விட்டால் தனி மனிதன், குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். 

ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே, அறியாமையினால் போட்டுக் கொண்ட, இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’என்று விளக்கிச்சொல்லி, அறிவுறுத்துகிறார்.

இதை நீங்கள் மேலோட்டமாக படித்து நகராமல், மறுபடி மறுபடி படித்து, அதன் வழியாக சிந்தனையில் ஆழ்ந்து, யோசிக்கும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மை, உள்ளது உள்ளபடியே புரிந்திடும் என்பது உறுதி. இத்தகைய உண்மை விளக்கம், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று நம் குருவோடு இணைந்து, நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

What is the relationship between man and God? Is that true and necessary?


மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? அது உண்மையும், அவசியமும் தானா?


இந்த கேள்வியை கேட்கும் வகையில், உங்களுக்கு இறை நம்பிக்கையும், அதுகுறித்த சிந்தனையும், மனிதன் பிறப்பு குறித்த ஆராய்ச்சியும், இயற்கை குறித்த வியப்பும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கடவுள் என்பதே பொய் என்ற கருத்து, அவ்வப்பொழுது மேலோங்கி, இளையோர்களிடம் திணிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். எனினும் அதுகுறித்து நாம் கவனம் கொள்ள அவசியமில்லை. ஏனென்றால், இந்த பிரச்சனையை, அவர்களுக்குள்ளாக இருக்கும், இறையாற்றலே சரி செய்துகொள்ளும் என்பது உறுதி. என்ன அதுவரை அவர்களுடைய வாழ்க்கை, பல திசைமாற்றங்களை சந்தித்து, இறுதியாக ‘ஓ, இதுதான் கடவுளா?’ என்று அவர்களின் கேள்விக்கு பதிலை, காலமே தந்துவிடும். சிலருக்கு தன் வாழ்நாளிலேயே கிடைக்கும். சிலருக்கு அவர்களின் வழியாக வரும் வாரீசுகளுக்கு கிடைக்கும். நாம் அதை எப்போது என்று தீர்மானிக்க வழியில்லை. எனவே, நாம் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். அது அவர்கள் பாதை, சென்று சேரட்டும், நாம் நம் பாதையில் பயணிப்போம்.

மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு அறியவேண்டும் என்றால், நாம், விஞ்ஞானத்தில் சொல்லப்படுகின்ற, ரிவர்ஸ் இன்ஞ்ஜீனியரிங் டெக்னாலஜிக்கு ( Reverse Engennering Technology) செல்லவேண்டும். இந்த பின்னோக்கிய அமைப்பியல் நுட்பம் என்பது, மனிதனின் மூலம் என்ன? என்ற கேள்வியாக ஆரம்பிக்கலாம். உயிர்வியல் ஆய்வாளரான, சார்லஸ் டார்வின், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றார். நவீன விஞ்ஞானம், இல்லை, குரங்குக்கு முன்னேயும், குரங்குக்கு பின்னேயும் பல நூறு பிறப்புக்கள் வந்தன. பிறகுதான் நவீன மனிதன் வந்தான் என்று சொல்லுகிறது. இந்த விஞ்ஞானம் எப்போது தொடங்கியது? புவியீர்ப்பு என்பதையே 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்கும் முன் இல்லையா? இருந்தது அதை, பதிவு செய்து விஞ்ஞானமாக்கவில்லை. அவ்வளவுதான்.

இவையெல்லாம், மக்களின் வாழ்வியலில் எல்லாம் கலந்துதான் இருந்தது. Proof என்று சொல்லக்கூடிய சான்று, தனியாக இல்லை. விஞ்ஞானம் என்ற அமைப்பும் உருவாகவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக, செய்யுள் வழியாக, கவி வழியாக வந்து கொண்டுதான் இருந்தது. இதையெல்லாம், பக்தி என்பதாக, சிலர் ஒதுக்கிவைத்தது, வாழும் மக்களுக்கான அநீதி. எனினும் உண்மை மறைவதில்லை.

இறை நிலை, தெய்வீகம், கடவுள், இயற்கை இப்படி எந்தெந்த வார்த்தையில் சொன்னாலும், ஒரே பொருளைக்குறிக்கும், மெய்பொருளை நாம், அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடவும் முடியாது. உயர்வான, மூலமான, என்றும், எங்கும், எப்போதும் இருக்கும் ஒன்றான முழுமை அது. வார்த்தைக்குள் சிக்கிடாதது. ஆனால், உணர்வுக்கும் அறிவுக்கும் கிடைப்பது. நிச்சயமாக அது கற்றறிவும், படிப்படிவும், அனுபவ அறிவும் அல்ல. சிந்தனையும், எண்ணமும் அற்ற ஓர் ஒப்பற்ற நிலை. இதை, வேதாத்திரி மகரிஷிதான், உள்ளது உள்ளபடி, விஞ்ஞானிகளுக்கும் புரியவைத்தார்.

அறிவும், விரைவுமாக, வேகமும் விவேகமுமாக, பேராற்றலும் பேரறிவுமாக, தன்னியல்பாக அதிர்ந்துகொண்டே இருப்பதும், தன்னிருக்க சூழ்ந்தழுத்தமாக இருப்பதும் எதுவோ அதுவே மெய்பொருள் என்கிறார். இதை உங்கள் வார்த்தை படி எப்படி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், ஒதுக்கித்தள்ளினாலும்கூட ‘அது இருக்கும், அதற்குள் நாம் இருப்போம், நமக்குளும் அது இருக்கும்’.

பரிணாமத்தில் எழுச்சியில், தன்மாற்றமாக உண்டான, பரமாணு முதல், மனிதன் வரையில் வந்த பயணம், மனிதன், நான் யார்? என்று தன்னை அறிந்த பொழுது முழுமை அடைந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஓர் மனிதனில் அது திருப்தி அடையவில்லை. ஒவ்வொரு மனிதனும், அந்த பயணத்தை முடிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவரை, பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக. உங்களிடம் எப்படி உங்கள் தாத்தா பாட்டியின் குணாதசியம் இருக்கிறதோ, அதுபோல உங்கள் குணாதசியம், உங்கள் பரம்பரைக்கு, வாரீசுகளுக்கு கடத்தப்படும். இல்லை என்று மறுப்பீர்களா?

இதையே கர்ம வினை என்று அமைகிறது. கர்மா என்ற வார்த்தை, உங்களை ஏதோ செய்கிற்து என்றால், செயல் விளைவு தத்துவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இயற்கையின், வினை விளைவு நீதி உள்ளடக்கமாக இருக்கிறது. யாரும், எதுவும், இதிலிருந்து தப்பமுடிவதில்லை. அதை புரிந்து கொண்டு, உங்களுக்கும், பிறருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பதிவுகளை நாம் விலக்கி, தூய்மை செய்துகொள்வது அவசியம். பிறப்பின் நோக்கமும் அதுதான். இறைநிலையின் தீர்ப்பும் அதுதான். அதை புரிந்து கொள்ளாதவரை, உங்கள் வாழ்க்கைப்பாடு திண்டாட்டம் தான். அதை தனியாக, இங்கே வார்த்தைகளால் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில், உங்கள் கேள்விக்கு விடை, புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-