CJ for You: leave it

leave it

Showing posts with label leave it. Show all posts
Showing posts with label leave it. Show all posts

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?


வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!

பதில்:

உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.

மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.

வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?

உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?

அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?

இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்
-

What would happen if my self-realization did not take place within my life?


வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


பதில்:

நல்ல புரிதல் உள்ள கேள்வியாக கருதுகிறேன். பொதுவாகவே எல்லோருக்கும் இந்த கேள்வி உண்டு எனினும், சிலர்தான் வாய்விட்டு கேட்பார்கள். அத்தகையவர்களுக்கும் இந்த பதில் உதவும் என்பது உண்மை. இந்த கேள்வி எழுந்துவிட்டால், அவர்களுக்கு ஒரு திசை மாற்றம் ஏற்பட்டுவிடும். அதாவது அவ நம்பிக்கை. ‘இனிமேலாவது தன்னையறிவதாவது’என்று கைவிட்டுவிடுவார்கள். மேலும் இதுவரை வாழ்ந்தவர்கள் எல்லோரும், தன்னையறிந்தா போய்ச்சேர்ந்தார்கள்? இல்லையே? என் குடும்பத்தில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்தவரையிலும், அறிந்தவரையிலும் யாருமில்லையே? அதனால் எனக்கென்ன அக்கறை வந்ததது? அவர்களைப்போலவே நாமும் போய்ச்சேர்வோம். என்ன குறை ஆகிவிடப்போகிறது? போகும் காலம் வந்தால் போய்த்தான் சேரவேண்டும், நிலைத்து நிற்கவா முடியும்? என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, வழக்கமான பக்தியிலேயே தன்னை கரைத்துக்கொள்வார்களே தவிர, யோகத்தின் பக்கம் வரமாட்டார்கள்.

உண்மையிலேயே யோகம் யாருக்கும் கட்டாயமில்லை, ஆனால் யோகம் தான் தனையறிதலுக்கான சிறந்த தீர்வு. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும்படி, பிறப்பு நீண்டுகொண்டே போகும். இங்கே பிறப்பு நீளும் என்றால் அவரே பிறந்துகொண்டே வருவார் என்று நினைத்துவிடக்கூடாது. அது அறியாமை. ஒருவர் உலகில், பிறந்து வாழ்வில் மறைந்துபோனாலும், அவரின் கர்மா என்ற வினைப்பதிவு, அவரின் குழந்தை, வாரிசுகள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் பிறவித்தொடர் ஆகும். அது அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு தலைமுறையில், யாரெனும் ஒருவர் யோகத்தின் வழியில் தீர்க்கும் வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அது இயற்கையின் வினை விளைவு நீதியும் ஆகும்!

ஆனால், யோகத்தின் உண்மை அறிந்து, தங்களை இணைத்துக்கொண்டு, குருவின் வழிகாட்டலோடு பயணிக்கும் ஒருவருக்கு காலத்தால், எத்தகைய கர்ம வினைப்பதிவு சுமையாக இருந்தாலும் கூட அது களைந்து, தூய்மைக்கு வழி பிறக்கும். இதற்கு தேவை, ஆர்வம், முயற்சி, பயிற்சி, செயலாக்கம், ஆராய்ச்சி என்பதுதான். எனவே, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழுமா? என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது? நீங்கள் யோகத்தில் உங்களை இணைத்துக்கொண்ட பிறகு.

யோகத்திற்கு வராமலேயே, முடியுமா? நிகழுமா? என்று கேட்பது நியாயமும் இல்லை. ஒருவேளை, யோகத்தில் இணைந்துகொண்ட பிறகும், தவம் தியானம் செய்துவரும் பொழுதும், வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுமானால். நீங்கள் யோகத்தில் பயணிப்பதால், உங்கள் முயற்சி, செயல், ஆராய்ச்சி என்ற அளவில் அதில் மாற்றம் நிச்சயமாக நிகழந்திருக்கும். எனவே இங்கே வருத்தமும், கவலையும் பெறவேண்டிய அவசியமில்லை. அந்த வழியில் இருக்கும் அடுத்தவற்றை, உங்கள் வழியில் வந்த, வரும் வாரீசுகள், தலைமுறைமுறையினர் தீர்த்துவைப்பார்கள் என்பது உறுதி, மாற்றுக்கருத்தும் இல்லை.

வாழ்க வளமுடன்.

-

Why do you have frequent disagreements, quarrels with your spouse?


வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான், வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை திருமணம் என்ற பந்தத்தின் வழியாக இல்லறத்தில் வாழ்ந்துவரும் எல்லோரும் அனுபத்திருப்பார்கள், அனுபவத்திக் கொண்டும் இருப்பார்கள். இப்போது காதல் வசப்பட்டு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உயர்ந்த வசனம் பேசுபவர்களும் பின்னாளில், கணவன் மனைவி என்று ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது, இப்போது நீங்கள் கேட்பதைப்போல யாரிடமாவது கேட்பார்கள்.

இந்த உலக உறவுகளிலேயே, மிக உயர்ந்தது, மதிப்புவாய்ந்தது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவுமுறை எது தெரியுமா? கணவன், மனைவி என்ற உறவுதான். மேலும், வாழ்நாள் முழுவதும் தொடர்க்கூடியதும் இந்த உறவுதான். நம் இந்திய வாழ்வியல் கலாச்சாரம், நீண்டநாள் தொடரும் இல்லற வாழ்க்கையை அமைத்திருக்கிறது. தனித்தனியாக பிறந்து வளரும் ஒரு ஆணும், பெண்ணும், உலகமும், நீதி அமைப்பும் ஏற்ற வயதில், திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவி என்ற ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்வை தொடங்குகின்றனர். அதன்வாழ்க்கை வழியாக, குழந்தைகளை வருங்கால சந்ததியாக பெற்றெடுத்து ஆளாக்குகின்றனர். ஆனால், பெருபாலான உலக நாடுகளில், ஒரே திருமண நிகழ்வும், ஒரே கணவன், ஒரே மனைவி என்ற நிலையும், மாறிக்கொண்டே இருக்கிறது. திருமணமும், திருமண முறிவும் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம் நீங்கள் இங்கே கேட்ட, அதே கருத்துவேறுபாடு, சண்டை, சச்சரவு தான். வேறுசில காரணங்களும் இதனுள்ளே அடங்கிவிடவும் கூடும்.

சரிங்க ஐயா, இதற்கு காரணம் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா?

இதோ, காதலிக்கும் பொழுது விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் தொடர்கிறது. அதுபோலவே, முன்பின் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பெரியவர்களின் ஆலோசனையில் திருமணம் வழியாக இல்லறத்தை ஆரம்பிக்கும் காலத்தில்  விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் சில காலம் தொடர்கிறது. காதலிப்பவர்களுக்கு திருமணத்திற்குப் பின்பும், திருமணமானவர்களுக்கு சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தும், இந்த கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் அடிக்கடி வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கணவன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான். அதுபோலவே மனைவி கணவன் மேல் அன்பும், பாசமும், அக்கறையும் தான்.

அமைதியாக, சிந்தித்துப் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கு புரியவரும். இதை எப்படி தீர்க்கலாம்? யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ? இருக்கிறது என்று கருதுகிறாரோ? அவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழக வேண்டும். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், தன் வாழ்வில் பெற்ற அனுபவமாக நமக்கும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

Keep mind calm, no need meditation. Is it correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது உதவுமா? அது உண்மையா?!


பதில்: 

தவம் தியானம் தேவையில்லை என்பது உதவிடாது. அது தவறான கருத்தே ஆகும். மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும் என்பது மட்டுமே சரி. அந்த மனம் எப்படி இயல்பாக இருக்கும்? இருக்கமுடியும்? காலம்காலமாக அது தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டேதானே இருக்கிறது! நாம் எப்பொழுதும் அதனோடுதான் கலந்து இருக்கிறோம். அந்த மனதின் வழியாகவே செயல்படுகிறோம். இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பங்களால் வருந்துகிறோம். திட்டமிடுகிறோம், தவறை திருத்த முயற்சிக்கிறோம் இப்படியாக எல்லாமே மனதின் வழியாகத்தானே நிகழ்கிறது. அப்படியான மனதை இயல்பாக வைக்க உதவும் ஒரு பயிற்சிதான் தவம் தியானம் ஆகும்.

தீடீரென்று நீங்கள் முடிவு செய்து ‘மனமே சும்மா இரு’ என்று சொல்லிவிட்டால் சும்மா இருந்திடுமா? இனி இயல்பாக மனதை வைத்திருப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், மனம் அதன்படி நடந்திடுமா? உங்கள் கட்டளைக்கும், வார்த்தைக்கும், செயல்பாட்டுக்கும் அடிபணிவதாகவா உங்கள் மனம் இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் மனம் விரும்பும்படி நடக்கிறீர்களா? அல்லது மனம் உங்கள் விருப்பத்தின் படி நடக்கிறதா? என்று கேள்விகேட்டால் என்ன பதில் தருவீர்கள்? 

தவம் தியானம் வழியாக, நாம் நம்முடைய செயல்பாட்டை, சிந்தனைகளை, எண்ணங்களை ஒழுங்கு செய்து, புலன்களை கட்டுப்பாடாக வைத்திருந்து, மனதை கவனிக்கிறோம் என்பதே உண்மை. மனம் தன்னையே கவனிக்கிறது என்பது கூட இங்கே உண்மைதான். அப்படியாக, மனதிற்கு தரப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிதான் தவம் தியானம். எனவே அது இல்லாமல், மனதை வெறுமனே சும்மா இரு, இயல்பாக இரு என்று இருக்கவைத்தால் இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது பேசுவதற்கும், சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், செயல்பாட்டிற்கு வராது! இல்லை ஐயா, இதை உலகெங்கும் கடைபிடிக்கிறார்கள், அனுபவசாலிகள் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் தொடருங்கள், சிறிதளவு மாற்றம் பெறுவதற்குக் கூட பல ஆண்டுக்காலம் ஆகலாம். அத்தகைய வலிமை படைத்தது நம் மனம்! 

வாழ்க வளமுடன்.