November 2020 | CJ

November 2020

Why stopped to draw human faces - Part 02



ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை கவனித்து, அதில் கூடுதலாக ‘இன்னும் என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனை தெளிவோடு வரைவான்.

காட்சிப்பொருளை வரையாது, தன் மனதிற்குள் எழுவதை வரைகிறேன் என்ற, மாடர்ன் ஆர்ட் ஓவியர்கள் இதில் சிக்கமாட்டார்கள். அவர்கள் தனி உலகம்.

இத்தனை காலமாக, நான் ஒருபோதும் இயற்கை காட்சிகளையோ, தெரு, நகரம் இப்படியான காட்சிகளையோ வரைந்ததில்லை. அதில் நிறைய நுணுக்கங்களை சேர்க்கவேண்டியதிருக்கும் என்பதால், அதற்கான பொறுமை என்னிடமில்லை.  ஒரு ஓவியத்தை நீண்ட நாளாக வரைந்துகொண்டே இருக்கும் பழக்கமும் என்னிடமில்லை. அதோடு நாம் உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கவேண்டுமேயன்றி, சும்மா ‘எனக்கும் வரையத்தெரியும் என்பதற்கோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வரைந்தேன்’ என்று பெருமையடித்துக்கொள்வதற்கும் நான் வரைவதில்லை. ஒரு ஓவியம் வரைந்தால் அது எனக்கு என்ன கொடுக்கும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. எனவே, நான் ஒரு ஓவியன் என்பதை வெளிக்காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களைத்தவிர வேறெந்த ஓவியமும் நான் வரைந்து வைத்துக்கொள்வதில்லை. சில நண்பர்களுக்கு சும்மாவேணும் நட்புக்காக வரைந்து கொடுத்ததுண்டு, இன்னமும் அப்படி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதனால், கேட்பதை வரைந்து தருகிறேன் என்றவகைக்கு வந்துவிட்டேன். ஒரு நிறுவனம் மூலமாக வரையும் வேலைகளும், தனி நபர் வேலைகளும் நீண்டகாலமாக செய்துவந்தேன். அவ்வப்போது அதற்கான வருமானமும் வந்துகொண்டிருந்தது. நீங்கள் யார்? என்றால் நான் ஒரு ஓவியர் என்று பதிலளிக்கமுடிந்தது. இதைத்தவிர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்ற அர்த்தமில்லா கேள்விக்கு என்னால் புன்னகைக்க முடிந்தது.

நிறுவனம் மூலமாக கிடைக்கும் வேலைகளில் 10:2 என்ற அளவில் திருத்தங்கள் வரும். அந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், திருத்திக்கொடுப்பதுண்டு. சில இப்படித்தான் அந்த ஓவியத்தில் வரையமுடியும் என்ற நியாயமான விசயத்தை சொல்லி புரியவைப்பதும் உண்டு. தனி நபர்களில், என் ஆரம்ப காலங்களில் வரைந்து தருவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள் 50:50 மட்டுமே.

முக்கியமாக, தனி நபர் கேட்கும் திருத்தங்களை கவனித்தால், அவர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெரியவரும். அடுத்தவருடைய ஓவியத்தைப்பார்த்து “அப்படியே நிஜமாக இருக்கு, அருமை” என்பவர்கள் தன் முகம் வரைந்தால்மட்டும் “வேறே யாரோ மாதிரி இருக்கு” என்று ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதோடு தோலின் நிறம், நிழலின் அடர்த்தி, வெளிச்சத்தின் பாதிப்பு இவைகளும் பெரும் குறையாக அவர்களுக்கு தோன்றும். 

ஒருவருடைய முகத்தை வரைய பல நுட்பமான வழிகள் உள்ளன. இதில் கணித சமன்பாடுகளைக்கூட உபயோகப்படுத்தலாம். நான் அதிலும் சில வழிகளை தேர்ந்தெடுத்தே, கோட்டு ஓவியம் வரைந்து, அவர்களிடம் காட்டி, உங்கள் முகம் போல இருக்கிறதா? என்று கேட்டுவிட்டே அடுத்த நிலைக்கு செல்வது வழக்கம்.  கோட்டு ஓவியம் அருமை என்று பதில் தந்துவிட்டு, கடைசியில் என் முகம் இல்லை என்று சண்டைபோடுவது பெரும்பாலோரின் வழக்கம். சரி, எனக்கு இது பிழைப்பு, நீ பணம் தருகிறாய் எனவே, திருத்தங்கள் தருகிறேன் என்று அவர்கள் சொல்லுகிறவகையில் திருத்தி வரைந்து அனுப்பிவைப்பேன்.

ஒரு முகம், வெளிச்சத்தில் ஒருமாதிரியும், அதிகவெளிச்சத்தில் ஒருமாதிரியும், லேசான வெளிச்சத்தில் ஒருமாதிரியும் இருப்பது உண்மை. எனக்கு அவர்கள் அனுப்பிவைக்கும் ஒளிப்படத்தைக்கொண்டே, மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. எனவே அதில் என்ன அளவில் ஒளியும், நிழலும் இருக்கிறதோ அதைத்தான் ஓவியத்தில் கொண்டுவர முடியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 

ஓவியத்தில் எல்லாம் முடித்தபிறகு, இன்னொடு ஒளிப்படத்தை உடனே அனுப்பி “இதைபாருங்கள், நான் இப்படித்தான் இருப்பேன், நீங்கள் வரைந்தது நான் அல்ல” என்பார்கள். அப்படியானால் முந்தைய ஒளிப்படத்தில் இருப்பது நீ இல்லையா? பிறகு ஏன் அந்த ஒளிப்படத்தை எனக்கு அனுப்பினாய்? இந்த ஒளிப்படத்தை முன்னதாகவே அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டால் பதில் வராது.

இதில் இன்னும் சிலர், பக்கவாட்டில் முகம் திரும்பிய ஒளிப்படத்தை அனுப்பிவிட்டு, நேராக பார்க்கிறமாதிரி வரைந்துகொடுங்கள் என்று கேட்பார்கள். “ஐயா, எனக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை, என்னால் முடியாது” என்று சொல்லிவிடுவேன்.

எனக்குத்தெரிந்து, கிட்டதட்ட நான்கு தலைமுறைகள், ஓவியம் குறித்த அறிவே இல்லாது வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.இந்நிலை இந்தியா முழுதும் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கு ஒரு ஓவியன், விளக்கி சொன்னாலும் கூட புரிந்து கேட்டுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 

முக்கியமாக ஒளிப்படத்தில் இருக்கிற குறைகளையும், அவர்கள் முகத்தில் இருக்கிற குறைகளையும் சரி செய்துதான் ஓவியன் வரைவான். அதாவது மேலும் அழகுபடுத்துவான். கேரிகேச்சர் (இருப்பதை மிகைப்படுத்தும் கலை) என்று வரைந்தாலும் கூட, நான் குறைகளை மிகைப்படுத்துவதில்லை. 

சரி, இருப்பதை அப்படியே வரைவதற்கு ஓவியன் தேவையா? ஒரு கேமரா மூலமாகவே அதை செய்துவிடலாமே? அதோடு ஓவியன் கற்றுத்தேர்ந்ததையும் இணைத்துத்தானே தருவான். அவன் என்ன இயந்திரமா? அப்படியே நகலெடுக்க? 


அடுத்ததாக, கிடைக்கின்ற மென்பொருள்களில், Photoshopல்  Smudge என்றெரு tool இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ஒளிப்படத்தையே, அப்படியும், இப்படியும் தேய்த்து மழுக்கி, லேயர் லேயராக வண்ணத்தை பரப்பிவிட்டு, டிஜிட்டல் ஆர்ட் என்று தடவும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்கள் (Digital Art - Digital Artist) செய்கிற, இருப்பத்தை அப்படியே வரைந்து தரும் ஓவியம் என்ற திருட்டுத்தன வேலைகள், மக்களை மயக்குகின்றன. 

எனவே ஓவியவேலை தருபவர்கள், ஒரு ஓவியன் “அப்படியே, அப்படியே” வரைந்து தரவேண்டும். இல்லையேல் அவன் தேறாத ஓவியன், அனுபவமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  

நீ சும்மாவா கொடுக்கிறாய்? பணம் வாங்குகிறாய் அல்லவா? நான் கேட்பதை வரைந்து கொடுக்காமல் வேறெதாவது வரைந்து கொடுத்தால், வாங்குவதற்கு நான் முட்டாளா? எனக்கும் ஓவிய அறிவு இருக்கிறது(?!) என்று ஓவியனிடம் மல்லுகட்டுவார்கள். அதற்காகவே ஒரு ஓவியன் “குரங்காட்டம்” ஆடவேண்டிருக்கிறது.

முக்கியமாக, ஒரு படைப்பை திருத்துகிற உரிமை எவனுக்குமே இல்லை. மறு பதிப்பு என்பதுதான் நியதியே தவிர வேறெதுமில்லை. அந்தவகையில் கதை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கிற, துணிச்சலான, தைரியமான, நம்பகமான வெளிப்பாடு ஓவியனுக்கு இல்லை.  இன்னும் விளக்கமாக காசுவாங்கிக்கொண்டு வரைந்துதரும் ஓவியனுக்கு இல்லை என்று சொல்லலாமா?

இத்தகைய அறிவு எனக்கு உள்முகமாக வந்த பிறகு, முகம் வரைவதற்கான ஆர்வம் எனக்கில்லை. ஒரு ஓவியனாக மக்களிடம் தோற்கிறேன். நான் ஓவியன் என்று சொல்லுவதற்கு குறைபட்டதில்லை, ஆனால் ஒரு ஓவியம் வரைய என் கைகள் கூச ஆரம்பித்துவிட்டது. கூடவே கரோனா தொற்றும் வேலைகளை குறைக்க, சரி இதுதான் நல்ல சமயம் என்றெண்ணி, வரும் வேலைகளையும் “பார்க்க ஆளில்லை, வரைந்துதரவும் ஓவியர்களில்லை” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டேன்.

அப்படியானால் வயிற்றுப்பாட்டு? நல்லவேலையாக எனக்கு தெரிந்த ஓவியமல்லாத வேறு சில வேலைகளை செய்துவந்ததினால் தப்பித்தேன். இன்றும்கூட அவைதான் என் வாழ்க்கைக்கு உதவுகின்றன. முக்கியமாக இந்த வேலைகளில், எந்த திருத்தமும் இல்லை. யாரும் குறைசொல்லும் வழியும் இல்லை. எனக்கு நேரடியாக வேலைக்கு பணம் வழக்கும் மக்களுமில்லை. அவர்களின் திருத்தங்களை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு இவ்வளவா என்று கேட்டவர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு புரியவைக்கும் வேலையும் இல்லை.

நிம்மதியாக, சுதந்திரமாக, தைரியமாக, உண்மையாக என்படைப்புக்களை தந்துகொண்டிருக்கிறேன். பலன் பெறுகிறேன்.  என் ஓவிய கைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அது நல்லதுதான். 

பின்குறிப்பு: ஆனால் இன்னமும்  அங்கே  ஆர்டர்கள் பெறப்படும் என்று இருக்கிறதே? என்று கேட்டால், அதன் விலைப்பட்டியலை, தெளிவான விபரங்களை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Why stopped to draw human faces - Part 01


 மனித முகங்களை வரைவது மற்றெல்லாவகை ஓவிய நுணுக்கங்களைவிட கடினமானது. அது எனக்கும் அவ்வளவு இயல்பாக வந்துவிடவில்லை.

Pen Art_Sugumarje (6)
(பள்ளிக்காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியங்கள்)

ஆனால்  சிறுவயது முதல், ஒருவருடைய முகத்தை அதில் அமைந்திருக்கிற வடிவங்களை கவனிப்பேன். இவருடைய காது நீண்டு இருக்கிறது, யானைக்காது போல இருக்கிறது. முகத்திற்கு, வழக்கத்தைவிட வெளியே தள்ளி அமைந்திருக்கிறது, இவருடைய மூக்கு ஊசி முனை, இந்த மூக்கு மிக விரிந்தது, நுனி மேல் தூக்கி நிற்கிறது,  மூக்கின் மேலே இரண்டு வளைவுகள் இருக்கின்றன, கண்கள் சுருங்கியுள்ளது, விரிந்து முட்டைக்கண்ணாக உள்ளது, நெற்றி இவ்வளவு அகலமா? நெற்றிக்கு முன்பே இவ்வளவு முடி இருக்கிறதே என்று இப்படியெல்லாம் பார்த்து மனதிற்குள்ளாக குறிப்பெடுத்துக் கொள்வேன். 


இன்னொரு முக்கிய விசயமாக, ஒரு கணவன் மனைவி என்று எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இடையே இருக்கிற முக ஒற்றுமையை கவனிக்கமுடியும். கூடுதலாக அவர்களின் குழந்தைக்கு, தாயின் முகமா, தந்தை முகமா, தாய்வழி பெற்றோர், தந்தைவழி பெற்றோர் முகமா என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்யலாம்.  

சிறுவயதில் இருந்தே யாரோடும் பேசும் பிள்ளை அல்ல நான். முக அறியாத மனிதரோடு பேச தயக்கம் கொண்டவனும் அல்ல. யாராவது எதேனும் கேட்டால், எனக்குத்தெரிந்த அதற்கான பதிலைசொல்லுவேன். என்வீட்டிலேயும் “ரொம்ப அமைதியான பையன்”. ஆனால் என் மனஓட்டம் மிக சிந்தனைக்குறியதாக இருக்கும். என் நேரத்தை எனக்குள்ளாக சிந்தனைகளாக ஓட்டிக்கொண்டிருப்பதே என் அன்றாட நடவடிக்கையாக இருக்கும். ஒருவேளை அது கற்பனை கோட்டையாகவும் இருக்கலாம், ஆனால் நான் கற்பனையில் பறந்தாலும், தரையில் நிற்பதை மறக்கமாட்டேன், அந்த சிறுவயதிலேயே. போதும் சுயபுராணம் என்றாலும், இந்தக்கட்டுரையில் சொல்லித்தான் ஆகவேண்டும்.


ஒரு செவ்வகம் போட்டு அதன் அடிப்படையில் எம்ஜியார் அவர்களை வரைவதுதான் என் ஆரம்பகால முகம். என் சகோதரன் அப்படி வரைந்து காட்டியதை நான் பழக முயற்சித்தேன். ஆனாலும் பின்னாளில் நான் அவரைவிட பொறுமை பெற்றிருந்ததால், இன்றுவரையிலும் ஓவியனாக நிற்க முடிந்திருக்கிறது. அந்த எம்ஜியார் “நல்ல நேரம்” திரைப்பட தோற்ற கொண்டவர். அதோடு அப்போது எங்களுக்கு படிக்க கிடைத்த, வார, மாத தமிழ் நூல்கள், அதில் இருந்த ஓவியங்கள் கூடுதலாக முகம் வரைவதற்கு பயிற்சி அளித்தன.  அந்த ஓவியர்களின் பெயர்கள், செல்லம், புஜ்ஜாய், ஆழி, மணியம், சில்பி, ஸ்ரீ தர், லதா, ராமு, மாருதி, கோபுலு, ஜெ, ஜி.கே. சங்கர், அரஸ், ம.செ., மதன், நடனம்,  (மன்னிக்கவும், சில பெயர்கள் ஞாபகமில்லை) இவர்கள் காலத்திற்குபிறகு ஸ்யாம் பிறகு கதைகளும் அதற்கான ஓவியங்களும் அருகிப்போகின.

ஓரளவு எனக்கு முகம் வரையபழகிய பிறகு, விதவிதமாக முகங்களை வரைந்து பழகிக்கொண்டேன். ஒருபக்கமாக திரும்பிய முகம், மேல்புறம் பார்க்கும் முகம், கீழே குனிந்த முகம், முக்கால் பாகம் முன்னால் தெரியும் முகம், முழு நேர்பார்வை முகம் இப்படியாக முகங்கள், முகங்கள். அதுவும் கை எடுக்காமலும் வரையும் வேகமும் உண்டு. சில நண்பர்கள், ஏதேனும் வரைந்து காட்டுங்களேன் என்று கேட்டால், உடனே எதேனும் ஒரு பெண்ணின் முகம் வரைவேன், அழகிய கூந்தலோடு, கொஞ்சம் மலர்கள் வைத்து காண்பிப்பேன். 

என் ஓவிய பாடசாலைக்கு, தன் தந்தையோடு வந்த ஒரு சிறுமி, 

“ஏன் அங்கிள், எப்போ சாம்பிள் வரையச்சொன்னாலும், கேர்ள்தான் வரையனுமா?”

“இல்லடா, அவங்கதானே பார்க்கவும் அழகா இருக்காங்க, ஓவியத்திலும் அழகா இருப்பாங்களே அதான்” என்று சமாளித்தேன்.

ஒரு ஆணுக்கு முதல் கவர்ச்சி பெண் தானே?! இதில் ஓவியன் விதிவிலக்கா? மேலும் வளைவு, நெளிவையும் ரசித்து கோடுகளிலும், வண்ணங்களிலும் பதிப்பவன் தானே ஓவ்வொரு ஓவியனும்.

எனக்கு சில தொழில்முறை ஓவியர்களின் பழக்கம் இருந்ததால், அவர்களிடம் நான் வரைந்த முக ஓவியங்களை காட்டி திருத்தங்கள் கேட்பேன். அவர்கள் சொல்லும் திருத்தம், வேண்டுமென்றே குறை சொல்லுவதுபோல தோன்றும். ஆனாலும் அந்த இடத்தில் பொறுமையாக கேட்டுக்கொண்டு, வழக்கமான என் பாணியிலே கொஞ்சம் மாற்றம் செய்துவருவேன். பள்ளியிலேயே, ஒரு நடிகை (சுஹாசினி) ஓளிப்படம் கொடுத்து இதை பென்சில் ஆர்ட்டாக கொடு என்று கேட்ட நண்பனிடம் பணம் (வாழ்வின் முதல் ஆர்டர்?!) பெற்று வரைந்துகொடுத்தேன். 


Girl_Sugumarje_Pencil (7)
(பள்ளிக்காலத்தில் பென்சிலால் வரைந்த ஓவியங்கள்)

கிட்டதட்ட 2005 ஆண்டு வரை, முகங்களை வரைவதும், அதை பாதுகாப்பதும், பிறகு அந்த ஓவியத்தை மறந்துவிடுவதுமாக,  ஓவியத்தைச் சாராத வேறு சில பணியில் இருந்ததால், நேரமிருந்தால் வரைவது என்றிருந்தேன். எந்த ஓவியத்தையும் கண்காட்சி வைத்ததும் இல்லை, விற்பனை செய்ததும் இல்லை. ஆனால் 2007 தனித்து இயங்க துவங்கியபொழுது, எனது யாகூ வெப் பேஜிலும் (Yahoo web page), கூகுள் சைட்டிலும் (Google site), பிறகு பிளாக்கிலும் (Blog) என் ஓவியங்களை கண்டு, எனக்கு ஓவியங்கள் வரைந்துதர இயலுமா? என்று சில வெளிநாட்டினர் கேட்க, இதற்கென இருக்கும் பெரிய சந்தையை அறிந்துகொண்டேன். அந்த சில வேலைகளுக்காகவே, உலகில் இருக்கக்கூடிய ஓவியர்களின் தரத்தை ஒத்த அளவில் நானும் என்னை, பல நாட்கள் வரைந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பத்திற்கு ஒன்பது தேர்ச்சி என்று அவர்களே பாராட்டும் அளவுக்கு உயர்ந்தேன். முக்கியமாக இன்னமும் கூட, புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களையும், புதிதாக ஓவியம் கற்றுவரும் இளைஞர்களின் ஓவியங்களையும் கூட கவனித்து, அவர்கள் தரும் நுணுக்கங்களை பழகிக்கொண்டுதான் வருகிறேன். இந்த மாற்றங்களை ஒரு ஓவியன் ஏற்று தேரவில்லை என்றால், அவன் காலத்தால் பின் தங்கிவிடுவான். ஓவியனின் கையை, மரணம் மட்டுமே நிறுத்தமுடியும் என்று நம்புகிறேன்.

இப்பொழுது ஒரு உண்மை தெரியவரும். ஒரு முகத்தை வரைவதற்கான சிரமமும், அதில் எத்தகைய தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது என்பதும். என் கையால் வருவதுதான் ஓவியம் என்று சும்மாவேனும் கிறுக்கித்தள்ள முடியாது. ஒரு ஓவியம் என்பது படைப்பு, அதில் மறைந்திருக்கும் செய்தியும் உண்டு, வெளிப்படையான காட்சிப்பொருளும் உண்டு. 

என் ஓவியங்கள், பார்ப்பதை வரைவது என்ற வகையை கொண்டது, அதிலும் மனிதர்களுக்கானது. அத்தேர்வு, ஓவியரின் மன நிலையையும், பண நிலையையும் சார்ந்தது. எனக்கோ இரண்டாம் நிலை. வரைந்து வைத்துக்கொண்டு, ஊர் ஊராய் தூக்கிக்கொண்டுபோய் காட்சிப்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை. வரைகிறோமா, வித்தோமா என்பது என்பாணி. 

Vethathri_Sugumarje_Pencil (1)
(18 வயதில் வரைந்த சில ஓவியங்கள்)

எனது மாணவர் 

“சார், உங்க வீட்டிற்கு வந்து உங்க ஓவியங்களை பார்க்கலாமா?”

“வீட்டில், பெரிய பெரிய கேன்வாசில் வரைந்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறாயா?”

“ஆமாம் சார்”

“அப்படியெல்லாம் ஒன்று கூட இல்லை, அப்படி வரைந்த ஓவியங்களைக்கூட பரிசாக பிறருக்கு தந்துவிட்டேன். என்னிடமிருப்பது, இந்த கணிணியில் இருக்கும் ஓவியங்கள் மட்டுமே. ஒரு சில பேப்பர் ஓவியங்கள் கைவசம் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கற்றுக்கொள்ள வரைந்தவை, காட்சிப்படுத்தலுக்கு அல்ல”

கடைசிவரை அந்த மாணவர், நான் சொன்னதை நம்பவே இல்லை.

இப்படியாக, முகங்களை வரைந்து, காசாக்கிக் கொண்டிருந்த நான், கடந்த நவம்பர் 2019 முதல் இனி யார் ஓவியம் கேட்டாலும் வரைவதே இல்லை என்று சபதம் எடுத்தேன். என் வாட்சப்பில் கூட “We stopped new orders" என்று வாசகம் வைத்தேன். அது கரோனா (Covid-19) பாதிப்பால் அல்ல.


தொடரும்...