August 2021 | CJ

August 2021

Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 02


 குருவை சரணடைவோம் - பாகம் 02


கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும்.  வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.


கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!

இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம். 


குருவை தேடும் காலம் எது?

ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள். 

கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.


நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை

அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும். 


அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!

எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. 

உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.

உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே.  வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம். 

வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 01


 குருவை சரணடைவோம் - பாகம் 01


உலகின் சிறப்பு என்ன?

இந்த உலகின் சிறப்பே, நேற்றிருந்தோர் இன்றில்லை என்பதே என்றார் அய்யன் திருவள்ளுவர். ஒரு மனிதனின் வாழ்க்கை, சாராசரியாக அறுபது ஆண்டுக்காலம் என்று வைத்துக்கொண்டால். அந்த ஆண்டுகளில் இறை உணர்வு பெற்று, உண்மை விளக்கத்தோடு பிறப்பின் கடமையை முடித்துவிட முடிகிறதா என்றால், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. ஒரு சிலருக்கே நிகழ்கிறது என்பதும் உண்மை.


வாழும்காலம் போதவில்லையே?!

பெரும்பாலான மனிதர்களுக்கு, தான் பிறந்த குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை தீர்க்கவே முழுகாலமும் செலவாகிறது. சிலருக்கு கல்வி கிடைப்பதில்லை, சிலருக்கு வேலை கிடைப்பதில்லை, வேலையும் தொழிலும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் கெட்ட நட்புக்கள், வழக்க பழக்கங்கள் இவற்றில் சிக்கி திசை மாறுதல் நடந்துவிடுகிறது. தன் தவறுகளால் சிக்கிக்கொள்ளுதல், தானாக, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைதல் உண்டு. சிலர், எதிர்கால பயம், குழப்பம் இவற்றால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கின்றனர். சிலருக்கு தீடீரென வரும் நோய் அவற்றால் முடக்கம் அல்லது நோய்தொற்று இவற்றாலும் வாழ்க்கை பாதிக்கிறது. இப்படியாக வாழ்க்கையை முழுமையாக வாழக்கூட வழியில்லை.

இத்தகைய சூழலில், பிறப்பின் கடமையாக, தன்னை அறிதல், இறை உணர்தலுக்கு ஏது வழி? என்றுதான் பொதுவாக தோன்றும். உண்மையாகவே, இத்தனை குழப்பங்கள் உங்களை சூழ்வதே இறையாற்றலின் விளைவால்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த புவியில் உங்களின் பிறப்பு நீங்கள் கேட்டு வாங்கவில்லையே? அது உண்மைதானே? அப்படியென்றால் உங்கள் பிறப்பின் உள் அர்த்தம், உண்மை என்னவாக இருக்கும்? 


உங்கள் பிறப்பின் ரகசியம்!

என்னையா இது? ஆண் பெண் சேர்ந்தால் ஒரு குழந்தை பிறக்காதா? என்று கேட்பீர்கள். எல்லா சேர்க்கையிலும் குழந்தை என்றால் இப்புவி தாங்காது. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம், வினைப்பயனே ஆகும். கர்மா என்று வடமொழியில் சொல்வார்களே அதுவே. அவ்வினைகளை தீர்க்க, புதிய அவதாரமாகவே ஒரு குழந்தை இந்தபுவியில் பிறக்கிறது. ஏன் தீர்க்க வேண்டும்? அப்போதுதான் உங்கள் பிறவி முழுமை அடையும். பிறப்பது யார் என்பதும் தெரியும். ஆதிகால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை தன் வாழ்க்கையை, திசைமாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கிறான், தன் இலக்கை எதுவென்று தீர்மானிக்காமல்.


வழிகாட்ட வந்தவர்கள்!

அந்த இலக்கை சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள் சொல்லிச்சென்றார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறையும் ஞானிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பக்தி மார்க்கம் வணிகமாகி, வாழ்க்கையை சிறப்பிக்காத நிலையிலும், அதை விட்டு விலகினால், இறையின் சாபம் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். யோகமார்க்கத்தை விட பக்தி மார்க்கம் எளிதாக இருக்கிறது. ஏதோ மனிதனால் ஆன, வழிபாடு, பூஜை, படையல், தேங்காய் உடைத்தல், பொங்கல் படைத்தல், அம்மாவாசைக்கு பிண்டம் வைத்தல் என்று சுலபமாக செய்யமுடிகிறது, இது போதாதா? இறைவனையும், முன்னோர்களையும் குளிர்விக்க! இதெல்லாம் இந்து மதத்தில் மட்டுமா என்ன? எல்லா மதங்களிலும் கடவுளை குளிர்வித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

 எத்தனையோ ஞானிகள் சொன்னாலும், வழி நடத்தினாலும்,  இவன் கேட்டபாடில்லை. நான் வாழப்பிறந்தேன், உண்ணப்பிறந்தேன், அனுபவிக்கப்பிறந்தேன் என்றே சொல்லிச்சொல்லி வாழ்க்கை சூழலில் சிக்கி சிதறடிக்கப்படுகிறார்கள். 

சரி கர்மா என்பது என்ன? அது என்ன தலைவிதியா அல்லது தலைஎழுத்தா? அடுத்த பதிவில் காண்போம். 

வாழ்க வளமுடன்.


Note: அடுத்த பதிவில் தொடர்கிறது