October 2023 | CJ

October 2023

Method of realize the Divine by the words


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?


பதில்: 

பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.

ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.

அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!

இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.

அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும். 

வாழ்க வளமுடன்.

You know, foxes are living with us, so beware


நரிகள் ஊளையிட்டால் அதன் அர்த்தம் என்ன?

நரிகள் எப்போதும் நினைவில் புதியன.  அதனால் நம்மை புரிந்துகொள்ளவே விரும்பாது. இதுநாள் வரையிலான நன்றியையும், உதவியையும், பழைய தொடர்பையும், நட்பையும், சேவையையும்  மறந்துவிட்டு, நம்மிடம் இருப்பதை பறிக்கும் குணம் கொண்டது, அது நம்முடைய மரியாதையாக இருந்தாலும்கூட பறித்துவிடும். அதோடு நம் காலையும் வாறும் புத்தியுடையது. தந்திரத்தின் சிறப்பில், சிக்கல்லில்லாமல் தப்பி ஓடி ஒளியும் தன்மையும் கொண்டது. தன்னையே காட்டு ராஜாவாக காட்டிக்கொள்ளும் ஆர்வமும் மிக்கது. அப்படியான நரி, ஊளையிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது என்று சில நூல்களில் சொல்லப்படுகிறது. எனவே ஒருவகையில் இது நல்லதுதான்.

உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கும் அப்படியான பாடங்கள்,  சில நரிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நரிகள், நம்மிடையேயும் இருக்கின்றன. உலகில் நரிகளுக்குத்தான் மதிப்பு. அதனால் அதிகம் பரந்து வாழ்கின்றன. மேலும், நரிகள் நரிகளாலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றன, இந்த உலகம் முழுவதும்!

Are you missing yourself into the forest?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகையே மாற்றி அமைக்கும் அறிவியல் உச்சமான காலத்தில் கூட கடவுளை அறிதல் என்பது வேடிக்கை என்கிறார்களே?!


பதில்:

அப்படி சொல்லுபவர்கள் இப்போது மட்டுமா சொல்லுகிறார்கள்? அந்தக்காலம் முதலாகவே அப்படியான வார்த்தைகள் நிலையாக இருக்கின்றன. என்ன ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கட உள் என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் மட்டும் அவர்களுக்கு புரிந்தபாடில்லை. அதுகுறித்த சிந்தனைக்கும் அவர்கள் வருவதே இல்லை.

கடவுள் என்பது, எதையோ யாரையோ குறிக்கும் பெயர் சொல் இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்படும் Noun அல்ல. அது வினைச்சொல். ஆங்கிலத்தில் சொல்லப்படும் Verb ஆகும். கடந்து உள்ளே செல்க என்ற வார்த்தையின் சுருக்கமே கடவுள். எங்கே கடந்து உள்ளே செல்வது? என்று கேள்வி எழுப்பினால், பதிலாக வருவது, உனக்குள்ளாக! எப்படி நாம் நமக்குள்ளாக செல்லமுடியும் என்றால்? மனதால் செல்லமுடியும். ஆகவே மனதைக்கொண்டு, நமக்குள் கடந்து உள்ளே சென்றால், உண்மை அறியலாம். ஆகவே உண்மையை அறிவதுதான் கடவுள் என்று சொல்லப்பட்டதே தவிர கடவுளை அறிய கடவுள் தேவையில்லை. சரிதானே?!

அந்த உண்மையை பல்வேறு வார்த்தைகளிலும் குறிப்பிடுவது உலகில் உண்மை அறிந்தோர்களின் வழக்கம். சித்தர்கள் சுத்தவெளி என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் இறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் The God, Supreme Power, Divine, Almighty என்று சொல்லுகிறார்கள். இப்படி உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொடு சமூகமும் தங்களுக்குரிய உண்மையை, ஓவ்வொரு பெயரில் அழைத்து வணங்குகிறார்கள். இதில் இப்படியான கேள்வியை கேட்பவர்கள் எதை விளக்க முயற்சிக்கிறார்கள்? உலக மக்கள் வணங்குவதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் புரியவில்லை. அது குறித்து அவர்களிடம்தான் உண்மையை கேட்க வேண்டும். ஆனாலும் எப்படியாவது விளக்கம் கொடுப்பார்கள்தானே?! 

சரி, கடந்து உள்ளே இருக்கிற உண்மையை ஏன் அறியவேண்டும்? என்றும் ஒரு கேள்வி எழும் அல்லவா? உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டீர்கள் என்று உதாரணம் கொள்ளலாம். வீட்டுக்கு அருகே காடா? காட்டையே அழிச்சிட்டாங்க, எப்படிங்க இருக்கும்? என்று கேட்கக்கூடாது. அது அடர்ந்தகாடு, உள்ளே சென்றால் நிச்சயமாக பாதை மறந்துவிடக்கூடிய அபாயம் கொண்டது. அப்படியான காட்டுக்குள் உங்களை அறியாமல் சென்று மாட்டிக்கொண்டீர்கள். இப்போது நீங்கள் உங்கள் வீடு எங்கே, எப்படி போகவேண்டும் என்று சிந்திப்பீர்கள் தானே? அல்லது இந்தக்காடே எனக்கு போதுமானது, இங்கே நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன் என்று முடிவு செய்து அங்கேயே தங்கிவிடுவீர்களா?

உங்கள் வீடு எது என்று தேடுவதுதானே உண்மை?! அதைத்தான் நாம் கடந்து உள்ளே சென்று தேடுகிறோம். அவர்களுக்கு அந்த அடர்ந்தகாட்டை விட்டு வர விருப்பமில்லை, ஆர்வமில்லை, முயற்சியும் இல்லை. நம்மையும் தடுக்க முயற்சிக்கிறார்களே?! சரி, அவர்களை அப்படியே விட்டுவிட்டு நாம் மட்டுமாவது ‘வீடுபேறு’ என்ற சித்தர்கள் சொன்ன வீட்டை அடைவோமே!

வாழ்க வளமுடன்.

Get the Truth from the Bhakti


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்பதை ஏன் என்னால் ஏற்கமுடியவில்லை?


பதில்:

உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். உண்மையை விளக்கிக் கூறும் வாய்ப்பை இக்கேள்வி உருவாக்குகிறது. இனி பதிலை சிந்திப்போம்.

‘பக்தி என்பது சிறுபிள்ளைகட்கே' என்று ஒருகவிதையில் சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். உடனடியாக அந்த கவிதையை என்னால் இங்கே ஞாபகப்படுத்தவோ, குறிப்பிடவோ முடியவில்லை, கேள்வி கேட்ட நீங்களே குறிப்பிட்டால் நலம். பொதுவாக, கவிதை என்பது, கரும்புச்சாறு போல பெரிய நீண்ட கரும்பை, கசக்கிப் பிழிந்து உருவாக்கிய சாறு. அதை நீங்கள் கரும்பாக நினைக்க முடியுமா? அதுபோலவே ‘பக்தி என்பது சிறுபிள்ளைக்கானது அது ஒரு விளையாட்டுப் போல' என்றால் அதற்கான காரணமும், விளக்கமும் ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் அல்லவா? அதெப்படி இந்தமாதிரி சொல்லலாம் என்று நினைக்கலாமா?

சரி சிறுபிள்ளை விளையாட்டு என்பது என்ன? நீங்கள் அந்த சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியது இல்லையா? ஞாபகமும் இல்லையா? ஆனால் இப்போதுள்ள சிறுபிள்ளைகளுக்கு படிக்கவும், வீட்டுப்பாடம் செய்யவுமே நேரமில்லை. இன்னும் சொல்லப்போனால், சாப்பிடக் கூட நேரமில்லை என்று வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள் நம் பெற்றோர்களாலும், சமூகத்தாலும், உலகத்தாலும்.

உதாரணமாக பார்க்கலாமே, சிறுபிள்ளைகள், ஆண் பெண் என்ற பேதமற்று பழகி விளையாடுவார்கள். அப்படியான அனுபவம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வருத்தமே! அந்த விளையாட்டில் அம்மா, அப்பா, பிள்ளை, குடும்பம் என்ற விளையாட்டும் உண்டு. சாமியும், கோவிலும் கூட உண்டு. அப்படி அந்த குடும்பத்தில் அம்மா என்ற குழந்தை சமைக்கும், மற்றவர்கள் உண்டு மகிழ்வார்கள். அதாவது நெருப்பில்லாத சமையல், பொருளில்லாத சாப்பாடு. சிலவேளைகளில் அப்படி எதுவுமே இல்லாமல் நடிப்பார்கள் அவ்வளவுதான். இந்த சாப்பாடால் உங்கள் பசி ஆறுமா? இல்லை ஆனால் இது ஒரு அனுபவ விளையாட்டு. ஒரு பகிர்வு, அன்பு, நட்பு, பழக்கம் என்ற ரீதியில் அமைந்திருக்கும். உண்மையைப் போன்ற பொய். இதைத்தான் இப்போது மெய்நிகர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிறுபிள்ளை விளையாட்டு போலவேதான் நம்முடைய ‘பக்தி’ இருக்கிறது. அந்த பக்தியில் இருக்கின்ற, சொல்லப்பட்ட, மறைக்கப்பட்ட, மறைந்திருக்கிற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் பக்தியை கடந்து ‘யோகத்திற்கு’ வரவேண்டும். வந்தாகவேண்டும். 

இதைத்தான், இந்த விளக்கத்தைத்தான், கவிதையில் சுருக்கமாக ’பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இப்பொழுது உண்மை உங்களுக்கு விளக்கமாவிட்டதா?!

வாழ்க வளமுடன்.

குறிப்பு: இந்தப்பதிவில், பக்தியை குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் எண்ணினால் அது அறியாமையாகும்!

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.

யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னதான் யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


பதில்:

பக்தி என்பது நிச்சயமாக வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு சிலருக்கு, பக்தியும், கடவுளும், வழிபாடும் அவசியம் இல்லை என்று முடிவுக்கு வரலாம். அவ்வாறே வாழ்ந்தும் வரலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் ஒரு சராசரி மனிதருக்கு பக்தி அவசியமே! முக்கியமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது, இந்த உலகுக்கான நல்ல பழக்க வழக்கங்களை, அக்குடும்பத்தின் பக்தி வழியில்தான் பெற்று வளர்ந்து வருகிறது. மிகச்சில குடும்பங்களில் அந்த பக்தியும் இல்லாது போவதும் உண்டு. அதாவது, பெற்றோருக்கு பக்தி இல்லை என்றால் அது குழந்தைக்கும் இல்லை என்றே வளர்ந்து வரும். இப்படியான குழந்தைகள் தான் பக்தியும் இல்லை, கடவுளும் இல்லை, வழிபாடும் தேவையில்லை என்ற நிலையில் வளர்ந்து நம்மோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

யோகத்திற்கு அடைப்படையே பக்தி தான். அந்த நோக்கத்தில்தான், அந்நாளில் முன்னோர்கள், பக்தியில் மக்கள் தங்களை உயர்த்திக்கொண்டால், யோகமும் எளிதாகும் என்று வழிபாடு முறைகளை அமைத்தார்கள். ஆனால் அது இந்நாளில் உண்மை சிதைந்துவிட்டது.

யோகத்தில் இணைகின்ற யாருமே, பக்தியை விட்டு விலகவேண்டியதில்லை. மாறாக அந்த பக்தியில் இருக்கிற உண்மை என்ன? என்பதை புரிந்துகொண்டால் போதும். இதுவரை எதை வணங்கினோம்? எதற்காக வணங்கினோம்? அது அந்த இறை என்பதும், கடவுள் என்பதும் என்ன? என்ற உண்மைகளை விளங்கிக் கொண்டால் போதுமானது. விளங்கிக் கொண்ட உண்மையின் வழியாக நீங்கள் பயணித்தால் போதுமேதவிர, பக்தியை தவிர்க்கவோ, விட்டு விலகிடவோ தேவையில்லை.

எனவே, பக்தியையும் யோகத்தையும் குழப்பிக்கொள்ளாமல். பக்தியில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தானாக மாற்றத்தை உருவாக்கித் தந்திடும்! 

வாழ்க வளமுடன்.

Practice of Vethathiriya simplified exercise for life!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியை எவ்வளவு காலம் தொடர்ந்து செய்யவேண்டும்?


பதில்:

இதற்கு சரியான பதில் தரவேண்டுமென்றால், எவ்வளவு காலம் நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நாள் வரையிலும் தொடர்ந்து செய்துதான் ஆகவேண்டும். இந்த கேள்வி, தற்கால அவசர உலகில் எழுவது சகஜமானதுதான். ஏனென்றால் நமக்கு எப்போதும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று எதையும் தவிர்ப்பதுதானே வழக்கம். உடலுக்கு என்ன குறை? ஏதேனும் வந்தால் சரி செய்து கொள்ளலாம். இருக்கவே இருக்கிறது நிறைய மருத்துவமனை, நிறைய உடனடி பலன் அளிக்கும் மருந்துகள். பற்றாக்குறை இல்லாமல் பணமும் இருக்கிறது, அப்புறம் என்ன கவலை? என்றுதான் மனம் எண்ணுகிறது!

ஒரு நாளுக்கு, 24 மணி நேரம், அதில் தூக்கத்திற்கு, குறை நிறையை கூட்டி கழித்து பார்த்தால் 8 மணி நேரம். எனவே மிச்சம் இருப்பது 16 மணி நேரம், இதில் வேலை நேரம், மாணவர்களுக்கு படிப்பு நேரம், பெண்களுக்கு ஒரு நாள் சமையல் நேரம் 8 மணி நேரமோ, 10 மணி நேரமோ ஆகலாம். ஆக கையிருப்பு 8 மணி நேரம். இந்த 8 நேரத்தில், ஏதேனும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், சுறுசுறுப்பாக இருக்கலாம். நன்றாக உடல் உற்சாகதில் இயங்கலாம். மிகச்சரியாக தூங்கி எழலாம். அதனால் தூக்க நேரம் அதிகப்படுத்தாமல் மிச்சப்படுத்தலாம். எப்படிப்பார்த்தாலும் 2 மணி நேரம் உங்களுக்கு, ஒரு நாளில் கிடைக்குமே?! அந்த பயனை நாம் இழக்கலாமா?

ஒரு நாளுக்கு, 40 நிமிடம் முதல் 60 நிமிடங்களுக்குள் செய்து முடித்துவிட க்கூடிய, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்வதற்கு என்ன குறை இருந்துவிட முடியும்? ஏற்கனவே அது எளியமுறை என்ற அமைப்பில்தான் இருக்கிறது, மேலும் எளியமுறை என்று செய்யாமல் விட்டுவிடலாம் என்றா எண்ணுகிறீர்கள்?! உடலில் நோய் வராமல், பாதுகாப்பு தன்மையோடு, வலி, சதை பிடிப்பு பிரச்சனை எழாமல், உடல் உள் உறுப்புக்களுக்கு ஊக்கம் அளித்து காக்கும் இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி. மேலும் உடலுக்கு, அதன் தன்மைக்கு பாதுகாப்பு அளிக்கும் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டம் ஆகியன சீராக இயங்கிடும் நிலைக்கு மாற்றியமைக்கும். இதனால் நோய் வருமுன் காக்கக்கூடிய தன்மை உடலுக்கு கிடைத்துவிடுகிறது.

நீங்கள் கேட்ட இந்த கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே, ஒரு பேராசியர் கேட்ட பொழுது, ‘நான் இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறேன், மகராசனம் செய்வதுதான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது’ என்று தன்னுடைய 80, 90 வயது காலங்களில் பதிலாக சொல்லியிருக்கிறார்.

எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்துத் தந்த வேதாத்திரி மகரிஷியே அவ்வளவு காலமாக செய்துவரும் பொழுது, கற்றுக்கொண்ட நமக்கு என்ன? தொடர்ந்து செய்யலாம். வேறெந்த குழப்பமான சிந்தனையும் இல்லாமல்,  எளியமுறை உடற்பயிற்சியை தினமும் தொடருங்கள்.

வாழ்க வளமுடன்.

Are you feared because someone has teased your face and by comment? Is that true?!


உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!

[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]


பதில்:

என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்

இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன். 

மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?

இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.

இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள்  முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!

எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.

சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!

மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!

இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது. 

சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!

நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன். 

உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும்,  என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.

When my turn come to me from the god, divine and supreme almighty?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் வேண்டியது, வேண்டுவது எனக்கு தெய்வீகம், மெய்ப்பொருள், கடவுள், இறையாற்றல் எப்போது வழங்கும்?


பதில்:

குரு மகான் வேதாத்திரி மகரிஷி இதற்கு நல்ல பதில் தந்துவிட்டார் எனினும், அதை அன்பர்கள் புரிந்துகொள்வதில் தயக்கமும், ஏமாற்றமும் அடைகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். ‘இறையாற்றல் நமக்குத் தேவையான எல்லாம் தந்துவிட்டுத்தான் நம்மை பரிணாமத்தில் உச்சத்தில் அமைத்திருக்கிறது’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். மேலும் நாம் குழந்தையாக இருக்கும்பொழுது, நம் பசியாற்றிட தாய்ப்பாலையும், கவனமாக போற்றி பாதுகாப்பளிக்க தாயையும், அவருக்கு துணையாகவும், குழந்தைக்கு துணையாக தந்தையையும் தந்திருக்கிறது அல்லவா?! பெற்றோர்களாகிய அவர்களே நம்மை வளர்த்து ஆளாக்கிடவும், சமூகத்தில் ஒருவராக அமைக்கவும் உதவுகிறார்கள். மூன்று வயதிற்குப்பிறகுதானே நமக்கே நாம் யார் என்பதும் தெரிகிறது?! உண்மைதானே?

சரி, இப்போழுது உங்கள் கேள்விக்கு வருவோம். வேண்டியது, வேண்டுவது என்றால் என்னென்ன என்று ஒரு பட்டியல் இட்டால் அதில் என்னென்ன இருக்கும்? என்று எழுதிப்பாருங்கள். எல்லாமே இயற்கைக்கும், இறைக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

முதலில் வேண்டியது என்று எடுத்துக்கொண்டால், அது எப்போது வேண்டினீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வேண்டுதல் நிறைவேறிட, அதற்கென்று ஒரு காலம் வரவேண்டுமே?! சென்னையில் இருந்து டெல்லிக்குக்குப் போக பயண நேரம் (விமானத்தில்) மூன்று மணி நேரம் ஆகும். இல்லை நான் ஒருமணி நேரத்தில் அங்கே இருக்கவேண்டும், நினைத்த உடனே அங்கே இருக்கவேண்டும் என்று நாம் சொல்லிவிட முடியுமா? அது சாத்தியமா? இங்கே விமானம், அதன் செயல்பாடு, விமானி, அவரின் அனுபவம், கால சூழல், வான்வெளி போக்குவரத்து தெளிவு, கட்டுப்பாட்டு அறை தொடர்பு, உங்கள் நேரம், காலம், சூழ்நிலை, தேவை... அப்படி இப்படி என்று எத்தனை இருக்கிறது? இதெல்லாம் சரியாக இருந்தால்தானே பயணம் அந்த மூன்று மணி நேரம் அமையும்? இதற்கு நாம் ஒத்துழைக்கத்தான் வேண்டும், காத்திருக்கத்தான் வேண்டும் அல்லவா?

அதுபோலவே நம் வேண்டுதலுக்கும், அது வேண்டியது, வேண்டுவது என்று இருந்தாலும் அதற்கென்ற காத்திருப்போடு இருக்க பழகவேண்டும். மேலும் நிச்சயமாக உங்களுக்கு எது வேண்டுமோ அதையே, அதைமட்டுமே வேண்டியும் பழகவேண்டும். அதுதான் உங்களுக்கு வழங்கப்படும். அதை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். இறையாற்றல், தெய்வீகம், கடவுள் என்றுமே வழங்குவதில் குறையே வைப்பதில்லை. நாம் வேண்டுவதில் இருக்கிற குறைகள்தான் நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

Why I can't understand my mind itself? Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனதை என்னாலேயே ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? உதவுங்கள்!


பதில்:

உங்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை விடவும், இதுவரையில் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். உதராணமாக சொல்லுவதென்றால், ஒரு இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். அது புத்தம் புதிது. அதற்கென்று ஒரு அமைப்பு, இயக்கம், வேகம் உண்டு. அது அந்த தயாரிப்பு நிறுவனமே தெளிவுபடுத்திவிடும். அதற்கென்று தனி கையேடு நூலும் தந்து விளக்கம் தந்துவிடும். ஆனால் நாம் படிக்கிறோமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. நான் காசு கொடுத்து வாங்கிய வாகனம், என்சொல்படிதான் கேட்க வேண்டும் என்பது சரியாகுமா? அந்த வாகனத்துக்குத் தகுந்தபடி நாம் கற்று நம்மை மாற்றிக்கொள்ளுதல் சரியாகுமா?

உங்கள் மனம் உங்களுடையதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை எப்படி இதுநாள் வரை பயன்படுத்தி வந்தீர்கள் என்பதுதான் சந்தேகமும் பிரச்சனையும். ஆனால் அற்புதமாக, வேதாத்திரிய யோகத்தில் இணைந்துவிட்டீர்கள் அல்லவா? அதுவே மிகப்பெரிய விளக்கம் தந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனவே கொஞ்சம் தாமதமாகவே மனதை புரிந்துகொள்ள முயற்சித்தாலும் கூட தவறில்லை. இதுவரை மனம் பலதரப்பட்ட கணக்கீடுகளை தன்வயப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் பல ஜென்ம வாசனையை மனம் புதைத்து வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவையும் உடனடியாக மாற்றவும், அவ்வளவு நுண்ணிய / பிரமாண்டமான மனதை புரிந்துகொள்வதும் உடனடியாக சாத்தியமானதா என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

எனவே, உங்கள் மனதை, உங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என்று வருந்தவேண்டாம். இனியாவது புரிந்துகொள்ள முயற்சிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள். மனதில் எழும் எண்ணங்களில் கவனமும், விழிப்பும் கொள்க. ஆக்கினை தவமும், துரிய தவமும் நன்கு தொடர்ந்து செய்துவருக. மேலும் அகத்தாய்வு எனும் தற்சோதனையை தினமும் ஒரு மணி நேரம் செய்துவாருங்கள்.  மூன்று மாதத்திற்குள்ளாக, நீங்கள் உங்கள் மனதை ஓரளவிற்காவது புரிந்துகொள்ளமுடியும். இன்றே பயிற்சியாக தொடங்கிவிடுங்களேன்!

வாழ்க வளமுடன்.

How to accept critic on our home and life circle?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எப்போதுமே நம்மை குறைசொல்லுபவர்களை, அது வாழ்க்கை துணையாகட்டும், மாமியாராக ஆகட்டும், யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். எப்படி சரி செய்வது?


பதில்:

இது எல்லா குடும்பங்களிலும், வேலைகளிலும், தொழில்களிலும், வியாபார தளங்களிலும் நிகழக்கூடியதுதான். உங்களை குறை சொல்லும் நபர்கள் மூன்று விஷயங்களுக்காக இதைச் செய்கிறார்கள் எனலாம். அதென்ன அந்த மூன்று விஷயங்கள் என்றால்...

1) அவர்களுக்கு பொழுதுபோகவில்லை. ஏதேனும் பரபரப்பாக செய்யவேண்டும் என்ற நினைக்கிறார்கள்

2) எதிராளோடு வம்பு தும்பு செய்யவும், சண்டை போடவும், அதனால் ஒரு தன்மீது ஒரு பரிதாபத்தை சும்மாவேணும் ஏற்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறார்கள்

3) தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று மமதையில் இருக்கிறார்கள் அதை நிரூபிக்க ஆசை கொள்கிறார்கள்.

இதற்கு நீங்கள் ஏன் பலி ஆடாக இருக்கவேண்டும்? தேவையே இல்லையே. இனிமேலும் யாராவது உங்களை குறைசொன்னால், அந்த வார்த்தைகள், உங்கள் காதில் விழாதது போல நடித்துவிடுங்கள். உங்களை தட்டி சொன்னால் கூட, நான் வேறேதோ கனவத்தில் இருந்தேன் என்று பொய்யாக சொல்லுங்கள். மறுபடியும் சொன்னால், அப்படியா சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, உங்கள் வேலையை கவனியுங்கள். இல்லையானால் அந்த இடத்தை விட்டு நகருங்கள். குறை சொல்லுபரை உங்கள் அருகில் வர விடாது நகர்ந்துகொண்டே இருங்கள். 

இந்த இடத்தில், உங்களை குறை சொல்லுபவரை நீங்கள் அவமானபடுத்துவதாக, புதிய ஒரு குறையை அவர் அடுக்கினாலும், கண்டுகொள்ளாதீர்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அப்படியே நடந்துகொள்ளுங்கள். பிறகு என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்.

மேலும் நீங்கள் தவம் செய்யும் பொழுது, அவரை நினைத்து ‘வாழ்க வளமுடன்’ என்று வேறெந்த நினைப்பும் இல்லாமல் வாழ்த்தி வாருங்கள். அவரை நினைத்து ஏற்கனவே நீங்கள் வருத்தப்பட்டிருந்தால் அதை அகற்றிவிடுங்கள். அவரை நல்லவராகவோ, கெட்டவராகவோ கூட நினைக்கக் கூடாது. உங்களுக்கு தெரிந்த, பழக்கமான, புதிய அன்பரைப்போல மட்டுமே நினைத்துக் கொள்ளுங்கள். அவரால் இதுவரை உங்களுக்கு எந்த துன்பமும் இல்லை, இன்பமும் இல்லை என்ற நிலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இனி நலமே விளையும். 

வாழ்க வளமுடன்.

Society, which does not respect a contemporary, celebrate after death? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறதே? ஏன்?


பதில்:

நல்ல சிந்தனைக்குரிய கேள்வி. ஆம் உண்மையே.சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறது. சமூகம் மட்டுமல்ல, இந்த உலகமே என்றும் சொல்லலாம். ஒரே காலத்தில் பிறந்து வளர்ந்த மக்களிடையே, ஒரு சம அளவிலான மனோபாவம் மட்டுமே இருக்கும். ஆனால் அனுபவத்திலும், அறிவின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும், செயலிலும், திட்டங்களிலும் மாறுபட்டு இருப்பதை மறுப்பார்கள். ‘அப்படி என்னய்யா இவர் பெரிய ஆளு?’ என்று வெளிப்படையாகவும் சொல்லுவார்கள்.

நீங்களே உங்களை பரிசோதிக்கலாம். உங்கள் மாணவ பருவத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். உங்களோடு படித்த மாணவர்கள் ஒவ்வொருவரையும் இப்போது பார்த்தால், அவர்களின் வளர்ச்சி, திறமை, சிந்தனை, செயல்பாடு மாறி இருப்பதை கண்டு நீங்கள் வியக்கலாம் அல்லது வருந்தலாம். அதுபோலவே உங்களையும் அதே கண்ணோட்டத்தில் அவர்கள் பார்ப்பார்கள். இதுதான் நிகழும். இதற்கு மேலே உங்களை அவர்களும், அவர்களை நீங்களும் மாறுதலாக பார்க்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் சமகாலத்தவர்கள், ஒன்றாக இருந்தவர்கள் ஆயிற்றே!

இன்னொரு உதாரணமாக, ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்கப்படும் நம் தேசப்பிதா, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’  தன்னுடைய வாழ்நாளில், தான் நினைத்த எண்ணப்போக்கை செயல்படுத்திடும் பொழுது, மற்றவர்களால் அவமானங்களைத்தான் சந்தித்தார். இந்திய சுந்திர போராட்ட காலத்தில், ‘இவருக்கு இதெல்லாம் தேவையா?’ என்றுதான் விமர்சனங்களை பெற்றிருக்கிறார். ஆனால் அவரின் துணிவான, உறுதியான செயல்பாட்டின் வழியாகவே, விமர்சனங்கள் வைத்த்தவர்களை வாயடைக்கச் செய்துவிட்டார். காந்திஜியின் தலைமுறையினரை விட, அடுத்த தலைமுறைதான் அவரை கொண்டாடியது. ஆனால் காந்திஜியின் நோக்கம் வாழும் தலைமுறையின் விடுதலையோடு அடுத்த தலைமுறைக்கான விடுதலையும் இனி வரக்கூடிய தலைமுறைக்கான விடுதலையும் தானே? மேலும் காந்திஜி என்பவரை விரும்பாத, பிடிக்காத நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள் தானே?!

இதுபோல அறியப்படாதவராகவும்,  தவறாக கருதப்படுவோராகவும், இந்திய சுந்திர போராட்டங்களில் அவர் பங்கை மறைத்தும் காட்டப்படுபவர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆவார். அவருடைய வாழும் காலம் முதல் இப்போதுவரை பலப்பல விமர்சனங்களை, கதைகளை, கருத்துக்களை வைக்கிறார்களே தவிர, அவரின் உண்மை சாதனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்றே அறியமுடிகிறது. காந்திஜியின் வழியான அஹிம்சா சுதந்திர போராட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் மாறுதலான நிலையில்தான் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் செயல்பட்டார். இதற்காக, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிரான நாட்டு அரசுகளின் ஆதரவையும் தேடி ஏற்றுக்கொண்டார். அப்போது நடந்த போர்களிலும், சண்டைகளிலும், பிரச்சனைகளிலும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலேய அரசுக்கும் எழுந்த பிரச்சனைகள் பல. அதில் என்னென்ன ரகசியங்கள் இருந்தன என்று யார் அறிவார்? 

குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், தான் பிறந்து வளர்ந்த ‘கூடுவாஞ்சேரி’ ஊரில் பலவித இன்னல்களை சந்தித்தார். அந்த குறிப்புக்கள் அவரின் என்வாழ்க்கை விளக்க நூலில் சொல்லப்படவில்லை என்றாலும், பிறர் எழுதிய மகரிஷியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தொகுப்பில் படிக்கமுடியும். ‘கூடுவாஞ்சேரி’ ஊரில், வேதாத்திரி மகரிஷி அமைத்த தியான குடில், மாவட்ட கலெக்டர் அவர்களால், அரசு வழங்கிய நிலத்தில், மகரிஷியின் தொண்டு செய்யும் கருத்தை ஏற்று அரசாங்கமே அளித்த நிலம் அது. ஆனால். அக்குடில் உடனடியாக அந்த ஊர்கார்களால் கலைக்கப்பட்டு, பெரும் பிரச்சனையாகி, மகரிஷியின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்ததை சொல்லலாம். இதை மகரிஷி அவர்கள் ‘ எனக்கு இந்த ஊரில் வேலையில்லை, என்ற பாடத்தை இறைநிலை எனக்கு சொல்லுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

வேதாத்திரி மகரிஷி குறித்த உண்மைகளை உணர்ந்த நாம், குரு மகான், தத்துவஞானி, அருட்தந்தை, மகரிஷி, என்று புகழ்பாடுகிறோம். இப்போதைய தலைமுறையும் போற்றுகிறது. வரும் தலைமுறையும் உலகமும் போற்றும். இதுதான் புரிந்துகொள்ளும் நிலை.

ஆனாலும் வாழும் காலத்தில் சக மனிதர்கள், அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்பதுதான் உலக நிலைபாடு. அது அவர்கள் குறை மனமும், அறிவும் செய்யும் மாயமாகும்.

வாழ்க வளமுடன்.

To whom does Vethathiriyam give importance to living people? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். ஏன்?


பதில்:

குரு மகான் வழங்கிய வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆம், உண்மைதான். தெய்வீக பேராற்றலே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றதே? நாம் தந்தால் ஏதும் குறைந்துவிடுவோமா? இந்த இயற்கையின் பரிணாமத்தில் இருக்கிற பெண் என்ற தன்மைக்கான முக்கியத்துவத்தை, நாம் இன்னமும் சரியாக தரவில்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. ஆனாலும் வேதாத்திரியம் முழுமையான முக்கியத்துவம் தருகிறது.

எனக்கும், இந்த வேதாத்திரி மகரிஷி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெண்களுக்கு தருகிறார்? என்ற கேள்வியும் சிந்தனையும் எழுந்தது உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கும்பொழுதான், மகரிஷியின் தெளிந்த பார்வை எனக்கும் கிடைத்தது. அதை நான், என் வாழ்க்கையூடாக அனுபவமாகவும் பெற்றேன் என்பதே உண்மை.

உலக வரலாற்றில், பெண்மைதான் ஆளுமை என்பதாக இருந்தது என்பதை அந்த வரலாற்று சுவடுகள் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதில் குழப்பம் விளைவித்து, பெண்களை இப்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதில் கலாச்சாரம் என்ற விதியையும் அவர்களுக்கு புகுத்திவிட்டனர். பெண்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆண்கள்.

இந்த ஆண்களையும், பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கிறாளே ஒரு பெண்? அவளுக்குத் தெரியாதா தன்னை பாதுகாத்துக்கொள்ள? அவள் தன்னை மட்டுமல்ல, தன் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் உள்ளமைப்பும், திறமையும் கொண்டவள்தான். இல்லையென்றால், இந்த உலகை, புதிய பரிணாமத்தில் நிலை நிறுத்த, குழந்தை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்ப்பதை, இயற்கை அவளிடம் ஒப்படைக்குமா? ஏன் இதை ஆண்கள் வசம் இயற்கை கொடுக்கவில்லை?! பதில் தருவார்களா இந்த ஆண்கள்?!

ஒரு ஆணுக்கு, அவனுடைய வாழ்வில், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக அமைவது பெண் தானே?! மேலும் உறவுகளிலும், நட்புவட்டத்திலும் பெண்கள் உண்டுதானெ? ஆனால், உலகில் பிறந்து இப்போது இருக்கிற பெரியவர்களான ஆண்களும், நடுத்தர வயதுள்ள ஆண்களும், இளையோர்களான ஆண்களும், சிறுவர்களான் ஆண்களும் தன்னுடைய வாழ்வில், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இல்லை என்று சொல்லமுடியும். இதெல்லாம் பிற ஆண்களைப்பார்த்து, பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கற்பிதங்கள். மேலும் வரவேற்பரை வரை வந்து பாடம் நடத்தும் தொலைகாட்சியும், சினிமாவும், இன்னும் பலவும் கூட இருக்கிறதே?!

ஒரு ஆண், தன்னுடைய வாழ்வில், எல்லாமாக இருக்கும் ‘அவனுக்குரிய’ பெண்ணை இழந்தால்தான் அவன் ஒரு நல்ல பாடம் படிப்பான். ஆனால் அந்த திருத்தத்தை பெற்று, வருந்திடவும், இதுநாள் வரை இப்படி செய்துவிட்டேனே என்று மன்னிப்பு கேட்கவும், அவனுக்குரிய பெண் அங்கே இருக்கமாட்டாளே?! ஆனால், பெண்ணுக்கு இதுதான் மதிப்பு என்ற உலகியல் வழக்கம் உடனே மாறிடாது. நாம் நம் குடும்பத்தில் மாற்றினால், நம்முடைய ஆண் குழந்தைகள் மாற்றிக்கொள்ளும், அதைக் கண்டு சமூகத்தில் உள்ள ஆண்குழந்தைகள் மாற்றிக்கொள்ளும். அதன்வழியாக உலக ஆண்களும் மாற்றம் பெறுவார்கள்.

வாழ்க வளமுடன்.

What is the reply for someone not accept the Mahalaya Amavasya and all truths?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த நவீன அணுயுக அறிவியல் முன்னேற்ற காலங்களிலும் மஹாளய அமாவாசை, கிரகணம் அது இது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? 


பதில்:

நான் என்னுடைய பதிலாக சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே இருக்கிற உண்மைகளை பதிலாக இங்கே அறியத்தருவதுதான் என்னுடைய வேலை. நான் புதிதாக ஆராய்ந்து பார்த்து சொல்லும்படி எதுவுமே இல்லை. எல்லாவற்றிற்கும் முறையான விளக்கங்களை தந்து, மிச்சம் வைக்காமல் முடித்துவிட்டார்கள். வேண்டுமானால், உங்களிடம் அப்படி சலித்துக் கொண்டார் அல்லவா? அவர் பரிசோதனை செய்து பார்த்து, உண்மை விளக்கம் பெறட்டுமே?!

இப்படி சலித்துக் கொண்டவர்களுக்கு, முதலில் சொல்லவேண்டியது Science என்றால் அறிவியல் (அறிவு+இயல்) அல்ல. விஞ்ஞானம் (விண்+ஞானம்) தான். Science என்பதை அறிவியல் என்று தவறாக மொழியாக்கம் செய்துவிட்டார்கள் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார்.  அந்த நபர், உங்கள் நண்பரா என்பது எனக்குத்தெரியாது. இதை படிப்பாரா என்பதும் எனக்கு தெரியாது. எனினும், அவரைப்பொறுத்தவரை...

1) கடவுள் இல்லை 2) தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கை 3) முன்னோர்கள் சொன்னது எல்லாமெ பொய் 4) வானியலை உள்ளடக்கிய ஜோதிடம் பொய் 5) ஜாதகமும் பொய் 6) அமாவாசை பௌர்ணமியும் பொய் 6) சந்திர சூரிய கிரகணமும் பொய் 7) ராகு கேது நிழல் கிரகமும் பொய் 8) உயிர் பொய் 9) ஆத்மா ஆன்மா பொய் 10) வழிபாடு பொய்... இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பிரபஞ்சம், பேராற்றல் மற்றும் பேரறறிவு கொண்ட ‘தெய்வீகத்தால்’ தன்மாற்றம் அடைந்ததாகும். தன்னை மிஞ்சிய, தனக்கு மேலான, கண்களால் காணாத, புலன்களால், கருவிகளால் அறியமுடியாத, மனதால் பகுத்துணர முடியாத, காலம், தூரம், பருமன், வேகம் இவற்றில் சிக்காத அந்த தெய்வீகத்தை ‘இறைவன், கடவுள், தெய்வம், மெய்ப்பொருள்’ என்று அழைத்து வணங்குவதில் என்ன தவறு? 

பயிற்சியின் வழியாக அந்த தெய்வீகத்தை உணர யோகமும், வாழும் வாழ்வில் சராசரி மனிதர்கள் அறிய பக்தியும், அறிவில் உயர்ந்தோர்கள் தான் கொண்டுவந்தனர். அதை சிலர் உண்மையை தடுத்து குழப்பம் செய்துவிட்டனர். அதை மாற்றிடாமல் மொத்தமாகவே தவறு, இல்லை என்றால் எப்படி?! 

ஒருவரிடம், உன்னுடைய 10 வது தலைமுறைக்கு குழந்தையே இல்லை என்று சொன்னால் அது உண்மையாகுமா? அது உண்மை என்றால், அந்த ஒருவர் இப்போது இருக்கமுடியுமா? இப்படித்தான் அறியாது எள்ளி நகையாடுகின்றனர். இதற்கு அவர்கள் அறிந்த அறிவியலின் (?!) துணைவேறு.

மனிதனின் பிறப்பு இறப்பும் சாராசரி சிந்தனையில் சிக்கிடாது. கேள்வி கேட்டவருடை அறிவியலும் கைவிரித்துத்தான் நிற்கிறது. பிறப்புக்கு முன்னம் என்ன இருந்தது? இறப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதும் அங்கே இல்லை. அதில் இருக்கின்ற உண்மையை, தன்னை அறிதலின் வழியாகவும், இறையுணர்வு பெற்றதன் வழியாகவும், சித்தர்கள், யோகியர்கள், மகான்கள், ஞானியர்கள் தந்த விளக்கம்தான் நாம் பெற்றிருக்கிற தகவல்கள். இதில் ஒன்றோடு ஒன்றாக சில தவறுகள் இணைக்கபட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதில் உள்ளதுதானே?

எப்போதுமே தனக்குத் தெரிந்ததை இடைச்சொருகலாக சொல்லுவது மனிதனின் பண்பு. அது காதுவழியாக கடத்தப்பட்டாலும், எழுத்தால் எழுதப்பட்டாலும் மாறிடவே செய்யும். ஏனென்றால் தன்னுடைய புரிதலும், அனுபவங்களும் அந்த உண்மையான வார்த்தைகளையும், அர்த்தங்களையும் மாற்றிவிடும். அப்படி உண்மையில் சில பொய்மை கலந்துவிட்டிருக்கிறது. இன்றும் கூட சமூக வலைத்தளங்கள் வழியாக எண்ணற்ற பொய்கள் மிதக்கின்றன. அவற்றில் எது உண்மை என்று அறிவதும் நம் கடமையல்லவா?

இவ்வளவு விளக்கங்களும், இதற்கு மேலும் சொல்லி அவரை திருத்திட முயற்சிப்பது நமக்கு வேண்டாத வேலை. எனவே அவரை அவர்போக்கில் விட்டுவிடுங்கள். நீங்கள் அவருக்கான ஒரு வாழ்த்தை சொல்லிவிட்டு, நீங்கள் உங்களுக்கான உண்மை அறிதலில் இருங்கள். அவர் வழியை அவரே தீர்மானித்து செல்வார். அனுபவங்களை பெறுவார்.

மஹாளய அமாவாசை குறித்த விளக்கத்திற்கு இந்த சிறிய காணொளி உதவும்.

இங்கே காண்க

வாழ்க வளமுடன்.

Why is difficult as following the Vethathiriyam? Only easy to Maharishi.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தை கடைபிடிக்க கடினமாக இருக்கிறது. மகரிஷி தனியாள் என்பதால் அவருக்கு சுலபம் தானே?!


பதில்:

இப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தவிதமான கேள்வியை, குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் மூலமாக எதிர்கொண்டுள்ளார். அதை அவரே சொல்லியும் உள்ளார் என்பதுதான் சிறப்பு. ஒரு தத்துவ விளக்கம், வெளிநாட்டில் நடத்திக்கொண்டிருந்த பொழுது ஒருவர், உங்கள் கேள்வி போலவே கேட்டுள்ளார்.

‘சுவாமிஜி, நீங்கள் ஒரு துறவி. அதனால் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது உங்களுக்கு சுலபமானது. ஆனால் நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்கு மிக கடினம், முடியாததும் கூட’ என்று கேட்கிறார்.

‘நான் துறவி என்று சொல்லவில்லையே, நீங்கள் நினைப்பதுபோல் நான் துறவியும் அல்ல. நானும் உங்களைப்போல இல்லறத்தில் வாழ்ந்து நிறைவு கண்டு, பிறகு யோகத்தில் என்னை இணைத்துக்கொண்டு பயணிக்கிறேன். மேலும் ஒன்று அல்ல இரண்டு மனைவிகள்’ என்று மகரிஷி பதில் தந்திருக்கிறார்.

இப்போது கேள்வி கேட்டவர் எப்படியான வியப்புக்கு உள்ளாவார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? மேலும் நான் விளக்கமாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

சரி, நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறலாமா? நீங்கள் வேதாத்திரியத்தை இதற்கு மேலும் தொடரவேண்டாம். சற்று நிறுத்தி வைத்துவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய, என் வாழ்க்கை விளக்கம் என்ற தலைப்பிலான நூலை வாங்கி படியுங்கள். முழுவதும் படித்து முடித்துவிட்டு, இரண்டு மூன்று நாள் சிந்தனை செய்யுங்கள். இந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியமும், நான் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளும் தேவைதானா? இதை தொடரலாமா? விட்டுவிடலாமா? வேறு என்ன செய்யலாம்? என்று கேள்விகள் கேட்டு அதற்குறிய பதிலை தேடுங்கள். என்னிடமோ, வேறு யாரிடமோ ஆலோசனை கேட்காதீர்கள். உங்களுக்குள்ளாக என்ன பதில் விளக்கம் வருகிறதோ அதை கடைபிடியுங்கள். முடிவு எதுவாக இருந்தாலும் அது ‘உங்களுக்கு நல்லதே’ ஆகும்!

வாழ்க வளமுடன்.

How to deal with cheaters in our everyday life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முதுகில் குத்துபவர்களையும், காலைவாரி விடுபவர்களையும் எப்படி சமாளிப்பது?


பதில்:

யோகத்தின் பாதையில் செல்லுகிறவர்களுக்கும் இப்படியான சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். ஏனென்றால் ஏதேனும் ஒருவகையில், நாம் உலகில்போக்கில் போகத்தானே வேண்டியுள்ளது. அந்த வகையில், நாம் என்றோ செய்த ஒரு தவறு, அதாவது நமக்கு சரியாக இருந்து பிறருக்கு அதில் விளைந்த துன்பம் என்றும் புரிந்துகொள்ளலாம். நான் அப்படி எதுவுமே செய்யவில்லையே என்று நீங்கள் சொன்னாலும் கூட, உங்கள் தாய், தந்தையரோ, அவர்களுக்கு முன்னோர்களோ செய்திருக்கலாம். அது உங்கள் வழியாக தீர்க்கவும் இப்படியாக நிகழலாம். இதுவெல்லாம் காலத்தின் கணக்கு என்பதால் நாம் ஏதும் முன்கூட்டி அறியவோ, தீர்க்கவோ முடியாது. அதை ஏற்று அனுபவித்தே தீர்க்க முடியும்!

முக்கியமாக இந்த புரிதல் வந்துவிட்டால், நாம் எந்தவகையிலும் நம்மை வருத்திக் கொள்ளாமல், இந்த அளவில் என்னுடைய வினைப்பயன் ஒன்று கழிந்துவிடுகிறது, என்ற நினைவில் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி அதை கடந்துவிடலாம். நடந்ததை எண்ணியும், இப்படியாகிவிட்டதே என்ற மன வருத்தமும் ஏற்படுத்த தேவையில்லை. அந்த நபர்களை நினைத்து திட்டவோ, சாபமிடவோ, பழிவாங்கிடவோ தேவையும் இல்லை. நல்ல புரிதல் உங்களுக்கு வந்துவிட்டால் அவர்களை வாழ்த்திடவும் செய்யலாம்.

உங்கள் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம், இனிமேலும் நிகழாத விழிப்புணர்வோடு நீங்கள் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், உடனடியா தொடர்புடைய அந்த நபரிடம், விளக்கம் சொல்லி, மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு அவரால் வேறெதும் துன்பம் நிகழாமல் செய்துவிடலாம். குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல ‘விளைவறிந்த விழிப்புநிலை’ என்ற அளவில் உங்கள் கடமைகளை, வேலைகளை, தொழிலை,  வியாபாரத்தை செய்துவாருங்கள். நன்மை அடைக!

வாழ்க வளமுடன்.

-

What is your reply someone corner you on your past post?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் ஜோதிடர் என்றால் அதை பார்க்க வேண்டியதுதானே? எதற்காக வேதாத்திரியத்தை அதனோடு இணைக்கிறீர்கள்? மகரிஷி ஜாதகம் குறித்து தனியாக சொல்லியிருக்கிறாரா? இல்லையே, அதற்குத்தான் நவக்கிரக தவம் இருக்கிறதே? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்த அன்பருக்கு உங்கள் பதில் என்ன?


பதில்:

ஆம், கடந்த என்னுடை சோதிட ஆராய்ச்சி பதிவில் அப்படியான பின்னூட்ட கேள்வி வந்தது. கேள்வி கேட்ட அந்த அன்பர், பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் என்பதும் அறிந்து கொண்டேன். மேலும் அவர் பக்தி மார்க்கத்தில் செல்லுபவராகவும் இருக்கிறார். ஒரு வேகமான, தன்முனைப்பான நபர் என்பதும் தெரியவருகிறது. சரி இப்பொழுது கேள்விக்கு வரலாம்.

இந்த அன்பர், வேதாத்திரியத்தில் இருக்கிறாரா? வந்து விலகிவிட்டாரா? தொடர்கிறாரா? என்பது தெரியவே இல்லை. இதுவரை நம்முடைய வேதாத்திரிய யோகா காணொளி தளத்தில் என்னென்ன பதிவுகள் கண்டார்? விளங்கிக் கொண்டார்? கருத்து விளக்கம் தருபவர் யார்? அவர் பின்னணி என்ன? இதுவரை அவர் குறித்து புரிந்து கொண்டது என்ன? இந்த சேவை ஏற்கனவே கொடுத்திருக்கிறாரா? எத்தனை ஆண்டுகளாக இந்த காணொளி தளத்தை நடத்திவருகிறார்? என்றெல்லாம் அவர் தெரிந்து கொண்டாரா என்பதும் அறியமுடியவில்லை. இதற்கு முன்பாக அந்த பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் பின்னூட்டம் இட்டதாகவும் அறியமுடியவில்லை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி, கிரகங்கள் கோள்கள் என்பன குறித்து நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். அவைகளின் காந்த அலை இயக்கம், கோள்களின் அன்மை, சேய்மை தூரம், அவற்றின் இரசாயன இயக்க, மன இயக்க தூண்டுதல் என்றும் விளக்கி இருக்கிறார். ஜாதகம் எப்படி கணிக்கிறார்கள், அதில் இருக்கிற உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லியுள்ளார். அதில் போலியான கருத்துக்கள் உள்ளதை சொல்லியும் தெளிவுபடுத்தியுள்ளார். பஞ்சபூத நவக்கிர தவ தத்துவ விளக்கம் கேட்டோர் சில உண்மைகளை அறியமுடியும்.

முக்கியமாக, என் 18 வயதிலேயே வேதாத்திரிய தீட்சை பெற்று 21 வயதில் அருள்நிதி பட்டத்தை வேதாத்திரி மகரிஷியின் கைகளால் பெற்றுக்கொண்டவன். அதற்குப் பிறகு ஆர்வத்தின் வழியாக, ஜோதிடம் பட்டய வகுப்பில் கற்றுத்தேர்ந்தவன். ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை. மேலும் என்னுடைய இந்த சோதிட ஆராய்ச்சி, வருங்காலம் குறித்த தகவல்களை தருவதல்ல. ஏற்கனவே இருக்கிற, கர்மா என்ற வினைப்பதிவுகள் குறித்தான ஒரு ஆய்வு. அதை எப்படி வேதாத்திரிய வழியில், தவமும் தற்சோதனை அகத்தாய்வும் கொண்டு தீர்க்கலாம்? என்ற ஒரு விளக்கமே ஆகும். இதை நான் சும்மா பிறருக்கு தரமுடியுமா? அதற்காக சேவை கட்டணம் சொன்னேன். அதையும் கிண்டலடித்து விட்டார்கள். இவர்கள் விரித்திருக்கின்ற கைகளில் எவ்வளவு சும்மா கொடுத்தாலும் பத்தாது என்று என் நண்பர் சொல்லுவார். அது உண்மையே!

முக்கியமாக, பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் நபர், அது போன்ற கருத்து பின்னூட்டம் போடுகின்ற பலர், பகல் வானில் நட்சத்திரங்கள் இல்லை என்று வாதிடுகிறார்கள். இருக்கிறது ஐயா, அது சூரியனின் ஒளியில் மறைந்திருக்கிறது என்று நான் சொன்னால், அவர்கள் ‘அப்போ நான் என்ன குருடா? என் கண்ணால் பார்ப்பது பொய்யா? நான் நிஜமாக பார்ப்பதை சொல்லுகிறேனே?! அதை நீ ஏற்காமல், நீ சொன்னால் மட்டும் நான் ஏற்றுக்கொள்வேனா? அவ்வளோ பெரிய முட்டாளா நான்?’ என்று எதிர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளை புரியவைப்பது?! யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த கேள்வி பதிலுக்குக் கூட, ‘நான் அப்படியெல்லாம் இல்லை, நீதான் குழப்புகிறாய்’ என்றும் பின்னூட்டம் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Please let me know the rules for a Yogam who one follows!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?


பதில்: 

நிச்சயமாக இருக்கிறது. ஆனால் இப்போது நம்மிடையே இருக்கும் அறிவிலிகள் சொல்லுவது போன்ற சட்ட திட்டங்கள், வரைமுறைகள் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் இணைவதற்கே பல ஆண்டுக்காலம் ஆகும் என்பது நடைமுறையில் இருந்தது. அதுவும் குருவின் ஆசி என்ற கடைக்கண் பார்வையும் வேண்டும் என்பார்கள். பிறந்தபொழுதே யோகத்தில் சிறக்க அமைப்பு இருந்தாலும்கூட உடனடியாக இணைய வாய்ப்பில்லை. 

காலமாற்றத்தில், அஷ்டாங்க யோக சூத்திரத்தை, பதஞ்சலி முனிவர் வகுத்துவைத்தார். ஒரு குருவை அணுகி யோகத்தில் இணைந்து உயர்வது போலவே, தானக்குதானாகவும் இந்த அஷ்டாங்க யோக சூத்திரத்தை கடைபிடித்தால், யோகத்தில் உயரலாம் என்பது உண்மையாகிற்று. எனினும் கூட, தீட்சை என்ற குண்டலினி உயர்த்துதல் என்பதை, யாருமே தானாக கற்றிட முடியாது. அப்படி தானாக கற்றிட பல முறைகள் உண்டு என்றாலும் கூட, உயர்ந்த குண்டலினி பலவித உடல், மன, உயிர், வாழ்க்கை பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தவிர்க்கமுடியாதது. இதனால் நிச்சயமாக குரு வேண்டும்.

இந்த பதஞ்சலி முனிவரின், அஷ்டாங்க யோக சூத்திரத்தை கவனித்தால், அதில் அடிப்படையான சில பாடங்களும் வழிமுறைகளும் இருப்பதை காணலாம். இயமம் என்ற தன்னை திருத்திக் கொள்ளும் சட்டமும், நியமம் என்ற யோகத்திற்காக தான் ஏற்றுக்கொள்ளும் சட்டமும் கடைபிடிப்பது அவசியமாகிறது. அதற்கான பிறகுதான் ஆசனம் என்ற உடற்பயிற்சியை கற்று உடலை, மனதை வளமும், திடமும் செய்துகொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது.

இதை நீங்கள் கவனித்தால், இயமம், நியமம் இந்த இரண்டிலேயே முழுமையாக, அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு யோகி, யோகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டு, அதன்படி வாழவும் தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறார். அப்படியான நிலை இருக்கும் பொழுது, பொதுவாழ்வில் இருக்கின்ற அறிவிலிகள் அப்படி, இப்படி என்று இல்லாத சட்டங்களை சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்னென்ன என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இங்கே அதைச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே யோகத்தில் ஒருவர் இணைந்துவிட்டால் அதற்கான சட்டம் இருக்கிறது. இதுவழிவழியாக தொடரப்பட்டும் வருகிறது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்.

What is the meaning of yoga instead of enjoying the earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?


பதில்:

நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?

நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.

மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.

வாழ்க வளமுடன்.

How long the Master's help we need? After completion anyway we request more!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோக குருவின் உதவி எவ்வளவு காலம் தேவைப்படும்? எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை இருக்கிறதே?!


பதில்:

எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை எழுவது உண்மைதான். என்றாலும் கூட, தன்னை இந்த வான்காந்தத்தில் கலக்க விட்டுக்கொண்ட பிறகு நாம் அப்படி நினைப்பது சரிதானா? என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம். மனதின் இயல்பு என்னவென்றால், இழப்பை பதிவு செய்துகொண்டு அவ்வப்பொழுது வருந்துவதுதான். ஆனால் குண்டலினி யோகம் பயிலும், மனவளக்கலை அன்பராகிய நாம் அதை மாற்றி அமைக்கவும் வேண்டும். 

ஒரு யோக குருவின் உதவி, எல்லாம் கற்கும் வரை தேவைதான். அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். கைபிடித்து அழைத்து வந்து இதுதான் பாதை, என்று காட்டிவிட்டால், பயணம் போகவேண்டியது நாம் தானே? இனி எந்த பயணத்தில் தயக்கம் எதற்கு? நாம் என்ன நினைக்கிறோம் என்றால், இந்த பாதையில் ஏதேனும் குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது? எனக்கு அதெல்லாம் தெரியாதே? என்று நினைக்கிறோம். தன்னையறியும் வழியிலும், இறையுணர்வு பெறும் வழியிலும் எப்படி குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வரலாம் என்று நம்புகிறீர்கள் அல்லது நினைக்கிறீர்கள்? இது சரிதானா?

அப்படியே வந்தாலும் கூட, நம்முடைய குரு கைவிட்டுவிட்டாரே என்றா நினைப்பீர்கள்? அதற்கும் வழி இல்லையே? எனவே இது நீங்களாகவே உருவகப்படுத்திக் கொண்ட சிந்தனைதானே தவிர ஏதும் உண்மையில்லை. முக்கியமாக நம்முடைய குரு, நம் உயிரோடு கலந்துவிட்டதை நீங்கள் மறக்கலாமா?

நம் ஒருவரை மட்டுமே, இறுதிவரை உயர்த்திதர வேண்டும் என்பதும் முறையாகுமா? குருவின் நோக்கமும், செயலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், உய்யவேண்டும் என்பதல்லவா? அதற்கு நாம் தடையாக நினைக்கலாமா? அவரை துணையாக நினைத்துக்கொண்டு, அவரைப் போற்றி வணங்கிக் கொண்டு, பயணித்துகொண்டே இருப்பதுதான் நம்முடை வேலை. அதுதான் நம்முடைய குருவுக்கு முழுமை தருவதாகும், முடிந்தால் நீங்கள் இன்னொருவரையும் உயர்த்துங்கள். வேறு எந்தவித குறையும் வேண்டாம், தொடர்ந்து பயணியுங்கள். உண்மை உணருங்கள்.

வாழ்க வளமுடன்.

Is any solution on simplified exercise for weight loss and body heat?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடல் எடை இழப்பு ஆகிறது, அடிக்கடி உடல் சூடும் ஆகிறது. இதற்கு எளியமுறை உடற்பயிற்சி உதவிடுமா?


பதில்:

உங்கள் உடலின்மேல் அக்கறை வந்தது மிகப்பெரிய விசயம். அதற்காக உங்களை பாராட்டலாம். உடல் எடை இழப்பு அடிக்கடி நிகழ்வது தவறு. இதற்கு நீங்கள் உண்ணும் உணவின் தன்மையில் மாறுபாடுகள் இருக்கலாம். உணவின் விஷத்தன்மையால், செரிமான உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் உடல் சூடு என்றும் சொல்லுகிறீர்கள். சூடு எப்போது ஒரு அளவோடுதான் இருக்கவேண்டும். அதன் சராசரி வெப்ப அளவு 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செண்டிகிரேட்) என்று சொல்லுவார்கள். அது அதிகமாகிறது என்றால், உடலில் காற்றோட்டமும், இரத்தஓட்டமும் தடையாகி உள்ளது என்பதை உணர்த்துகிறது.

இதற்கு தீர்வாக, எளியமுறை உடற்பயிற்சி பலனளிக்கும் என்று உடனடியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, வருமுன் காப்பதுதான். எனவே, முதலில் ஒரு தேர்ந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நிலைமையை சொல்லி அதற்கான ஆலோசனை பெறுக. அவர் தருகிற மருந்துகள் வழியாக, இருக்கும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, அதற்குப்பிறகு, அதாவது ஓரளவு, உங்கள் உடல் நலம் தேறிய பிறகு, எளியமுறை உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

பொதுவாகவே நாம் வாழும் இந்த சூழலில், உடலில் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்தஓட்டம் (வாதம், பித்தம், கபம்) ஆகிய மாறுதலுக்கு உண்டாகிறது. அதை மிகச்சரியாக தக்கவைக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. ஆனாலும், நோய்தன்மை வந்துவிட்டால், அதற்குறிய மருத்துவ ஆலோசனையும், மருந்துகளை எடுத்துக்கொண்டுதான் சரி செய்யவேண்டும். அதுதான் உடனடி தீர்வாக அமையும்.  உங்கள் உடல் நலம் பெற வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு,  எளியமுறை உடற்பயிற்சியில் கைபயிற்சி, தொடர்ந்து, கால்பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சுப்பயிற்சி, கண்பயிற்சி, கபாலபதி, மகராசனம், உடலை தேய்த்து விடுதல், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் ஆகிய எல்லா பயிற்சிகளையும் செய்துவரவும், பலன் கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.

What is the part of yoga in earing money for life? is it there or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு  என்ன? அப்படி உள்ளதா இல்லையா?


பதில்:

உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!

பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!

இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!

யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

வாழ்க வளமுடன்.

-

Why they always replied as practice meditation it is the solution


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யாரிடம் எந்த சந்தேகம் கேட்டாலும், பொதுவான பதிலாக ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்கிறார்களே? 


பதில்:

அந்த பதிலிலும் ஓர் உண்மை இருக்கிறதுதானே?! என்றாலும் கூட, கேட்கிற அன்பரின் சந்தேகம் எத்தகையது என்பதை, கேட்பவருடைய பார்வையிலேயே பார்க்க வேண்டியதும் அவசியம். ஒரு சிலருக்கு, மூன்றாம் பார்வைகோணம் கிடைப்பதில்லை அல்லது பழகுவதில்லை. இதெல்லாம் எதற்கு என்று தள்ளி வைத்துவிடுவார்கள். தனக்கு புரிந்ததுபோலவே, இன்னொரு நபருக்கும் புரிந்திருக்கும் என்பதும், புரியவேண்டும் என்பதும் நிகழ்வதில்லையே!?

கருமையம், மனம் என்பது எல்லா மனிதருக்கும் பொதுவானது என்றாலும், அதில் இருக்கின்ற களங்களும், பதிவுகளும், அனுபவங்களும் வேறுவேறானவை தானே? அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதனால், அவரவர் தனித்தனியான எண்ணம், சொல், செயல்பாடு என்றுதானே இருப்பார்கள்?! இதுபொதுவானது!

ஆனால், ஏன் தவம் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது என்றால், மனம் இயல்பு நடவடிக்கைகளில் இருந்தும், வாழ்க்கைச்சூழலுகான பரபரப்பில் இருந்தும் கொஞ்சமாக விலகி, தன்னுடைய மூலம் நோக்கி நகரத்துவங்கும். மனதின் அலைச்சுழல் ஆல்பா என்ற தூக்கத்திலும் விழிப்பு நிலை என்ற அலைநீளத்தில், இயங்கிட ஆரம்பமாகும். அந்த நிலையில், மனமே தன்னுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, காட்சிவடிவமாக காணத்துவங்க நல்ல வாய்ப்பு கிடைத்திடும். அதனால்தான், ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

அதாவது, உங்களுக்கான தீர்வு உங்களிடமே இருக்கிறது என்பதுதான் இதன் நோக்கமாக இருக்கிறதே தவிர வேறெந்த காரணமும் இதில் இல்லை! வேதாத்திரியத்தில் அப்படியான குறை காணவும் அவசியமில்லை.

வாழ்க வளமுடன்.

My spouse is suffering from some bad habits. Can correct him by blessing him?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைத் துணைவர் சில பல கெட்ட பழக்கங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை வாழ்த்தால் திருத்தமுடியுமா?


பதில்:

நிச்சயமாக நாம் விரும்பி செய்யும் வாழ்த்தினால், அவரை நல்வாழ்வுக்கு திருத்திட முடியும். என்றாலும் வாழ்த்து மட்டுமே போதாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. சில பல கெட்ட பழக்கம் என்பது தெளிவாக இங்கே சொல்லவில்லை என்றாலும், அதை புரிந்துகொள்ள முடியும்தானே?! இத்தகைய கெட்ட பழக்க வழக்கங்கள் மனதையும் உடலையும் பாதிக்கும். அதனுடைய இயல்பை மாற்றி அடிமையாகவும் மாறிவிடும். அது இது இருந்தால்தான் நான் நன்றாக இருப்பேன் என்ற நிலைக்குப் போய்விடும். உடனடியாக மாற்றம் கொண்டுவருவது மிக கடினமே. இந்த காரணத்தினால்தான் ‘வாழ்த்து’ மட்டும் உதவாது.

ஏதேனும் ஒரு நல்ல, இயல்பான சூழலில், உங்கள் வாழ்க்கைத்துணைவரோடு பேசவேண்டும். உங்களால் முடியாது என்றால், அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் வழியாக, இந்த பழக்கத்தால் என்னென்ன கேடுகள், குடும்பத்தில் தடுமாற்றம், பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் சிதைகிறது என்பதையெல்லாம் சொல்லி புரியவைக்க வேண்டும். ஒருவேளை அந்த நண்பரும், உங்கள் வாழ்க்கைத்துணைவரின் கெட்டபழக்க கூட்டாளியாக இருந்தால் இது வேலைக்கு ஆகாது. எனவே நல்ல நண்பராக இருக்கவேண்டும். நீங்கள் மனவளக்கலை பயின்றவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைதுணைவரை அங்கே ஒரு பார்வையாளராக கட்டாயம் அழைத்துச் செல்லலாம். தினமும் என்றால் நிச்சயமாக ஒரு மாற்றம் கிடைக்க வாய்ப்பு வரலாம் அல்லவா?

பொதுவாகவே, கெட்டபழக்கங்களில் இருக்கிற எந்த நபருக்குமே, அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தாங்கள் செய்வது தவறு என்று நன்றாக தெரியும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால், அதிலிருந்து விடுபட முடியாத அளவிற்கு அந்த பழக்கத்திற்கு, அந்த செயலுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தமாகிறது. இதனால், அவர்கள் செய்வது தவறுதான் என்று நிச்சயமாக, நீங்கள் உணர்த்திவிட்டால் போதும், அவர்கள் திருந்தி மாறிவிட முடியும்.

இதற்கான சில மருத்துவ முறைகளும் கூட ஆலோசனை பெறலாம். என்றாலும் நேரடியாக, பாதிக்கப்பட்டவரோடு கலந்து பேசி, அவருக்கு தெளிவுபட விளக்கம் தந்தால்தான், நிலையான மாற்றம் கிடைக்கும். அவரை யோகத்தில் இணைத்துவிட்டால், உடற்பயிற்சி மற்றும் தவம் வழியாக, உண்மையான உற்சாகமும், மன உறுதியும் கிடைக்கும். எந்தவித தவறான பழக்கமும் நிச்சயமாக மாறி நல்வாழ்வு வாழமுடியும். எனவே, வாழ்த்துவது நல்லதுதான் எனினும், நேரடியான செயல்முறை மாற்றமும் தரவேண்டியதும் அவசியம்!

வாழ்க வளமுடன்.

-

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.

Why does when practice meditation my body get to tremble and anxiety?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுதெல்லாம், உடல் நடுக்கமும், பதட்டமும் உருவாகிறது. நீண்ட நேரம் உட்காரவும் முடியவில்லை ஏன்?


பதில்:

தவம் இயற்றுவதற்கான பொதுவான நேரம் குறைந்தபட்சமாக 15 நிமிடம் தேவைப்படும். பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றினால் மட்டுமே அதிகபட்சமாக 45 நிமிடம் தேவைப்படுகிறது. இத்தகைய தவத்தில் அதற்கான நேரத்தை நாம் மாற்றி அமைக்கலாமா? குறைத்துக்கொள்ளலாமா என்றால் கூடாது என்பதுதான் பதிலாகும். ஏனென்றால், நம்முடைய மனதை அந்தந்த நிலைகளில், ஆதாரங்களில் செலுத்தி கவனத்தில் நிலைப்பதற்கும். மனம் பழகுவதற்கும் தகுந்த நேரம் வழங்கியே ஆகவேண்டும். சும்மா வெறுமனே, ஆக்கினை துரியம் என்று மனதையும் வார்த்தைகளையும் ஓட்டுவதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உங்களால், தவம் இயற்றும் பொழுது நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை என்றால், உங்கள் உடல் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். தவம் இயற்றுவதற்கு முன்பாக, எளியமுறை உடற்பயிற்சியை முழுதுமாக செய்துவிட்டு, பிறகுதான் தவம் என்று மாற்றிக்கொள்க. மேலும், தூக்க கலக்கத்தில் தவம் செய்யக்கூடாது. படுக்கையில் உட்கார்ந்தும் தவம் செய்வதை தவிர்க்கலாம். முக்கியமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு தவத்திற்கு செல்லுதலே நன்று. தவம் இயற்றும் நேரத்திற்கு முன்பாக நேரத்தில், உற்சாகப்படுத்தும், தேனீர், காஃபி, பழரசம் ஆகியன தவிர்த்தாக வேண்டும். அடுத்தடுத்து வரிசையாக வேலைகளை வைத்துக்கொண்டு தவம் செய்ய அமரவேண்டாமே. மேலும் உங்கள் சூழல் தவம் இயற்ற பொருத்தமானதா என்பதை நன்கு சோதனை செய்துகொள்க.

சிலருக்கு தவம் இயற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால்தான், உடல் நடுக்கமும், பதட்டமும் தோன்றும். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள தவமையங்களுக்குச் சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அப்படியாக கூட்டுத்தவத்தில் நன்கு பழகிக்கொண்ட பிறகு, தனியாக தவம் செய்தால் உடல் நடுக்கமும், பதட்டமும் வருவதற்கில்லை. இன்னும் தவம் செய்யலாமே என்ற ஆர்வமும், உற்சாகமும் பிறக்கும் என்பதே உண்மை. உடனடியாக் உங்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பியுங்கள். நலம் பெறுங்கள், தவத்தில் உயருங்கள்.

வாழ்க வளமுடன்.