CJ for You

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

Why astrology prediction is available for Jupiter, Saturn and Rahu Ketu only?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குரு கிரக பெயர்ச்சி, சனி கிரக பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று மட்டுமே ஜோதிடர்கள் பலன் சொல்லுவது ஏன்?


பதில்:

ஜோதிடர்கள், உங்களுடைய ஜாதக கணிப்புப்படி எல்லா கிரக நிலைகளையும் ஆராய்ந்து, இப்போதுள்ள கோள் சார பெயர்ச்சி நிலைகளையும் கொண்டுதானே பலன் சொல்லுகிறார்கள். என்றாலும் பொதுவெளியில், ஜாதகம் கொண்டு சொல்லாமல் பொதுபலன் சொல்லும் பொழுது, ராசிகட்டங்கள் படி, குரு, சனி, ராகு, கேது கிரங்களின் பெயர்ச்சிகளை சொல்லுவார்கள். அப்படி இந்த நான்கு கிரங்களை மட்டும் மைப்படுத்திக் கொண்டு சொல்லுவதற்கும் சில காரணங்கள் உண்டுதான்.

ஏனென்றால், இவற்றின் நகர்வு கடந்து நீண்டகாலம் ஒரே வீட்டில் சஞ்சரிக்கும் தன்மை கொண்ட கிரகங்கள் ஆகும். உதாரணமாக சனி கிரகம், கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஒரு ராசி வீட்டில் தங்கிச்செல்லும். சில காலம், பின்னோக்கியும் நகர்ந்திடும். அதை வக்கிர நிலை என்று சொல்லுவார்கள். மேலும் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகமும் ஆகும். இதனால் எப்படிப் பார்த்தாலும் 3 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மூன்று ஆண்டுகள் ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பது ஆராய்ச்சிக்குறியதுதானே?! எனவே சனி கிரகம் பட்டியலில் இருக்கிறது.

குரு கிரகம் அளவிலும், நன்மையான சக்தி அளிப்பதிலும் பெரியது. கிட்டதட்ட 1 ஆண்டுக்காலம் ஒரு ராசியில் தங்கி செயல்படும். இக்கிரகத்திற்கும் வக்கிர நிலை உண்டு. அதனால் குருவும் பட்டியலில் இருக்கிறது.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி, அந்த ராசிக்குரிய கிரக பலன்களை தருவார்கள். இக்கிரங்களுக்கும் வக்கிர நிலை உண்டு. நம்மை வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களில், ராகு கேது கிரங்களே முக்கியமானவையாகும். இதனால் ராகுவும் கேதுவும் பட்டியலில் இருக்கிறது.

மற்றபடி சூரியன், செவ்வாய், சுக்கிரன் 1 மாதம் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த ராசிகளுக்கு போய்விடுகிறது. புதன் கொஞ்சம் சீக்கிரமாகவே ஒவ்வொரு ராசிவீடாக போய்வரும். சந்திரன் 2.5 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசிக்கட்டமாக நகர்ந்துவரும். இந்த சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவையும் ஒரு ஜாதகருக்கு பாதிப்பை தருகிறது என்றாலும் கூட காலம் சிறியதாக இருப்பதால், உடனடியாக அது கடந்தும் விடுமே? அதனால் பொதுவாக சொல்லும் பொழுது தவிர்த்துவிடுகிறார்கள். இதுதான் காரணம்! 

மேலும் இத்தகைய பெரிய கிரகங்களின் அருகாமையும், தூரமும் கூட நம்மை பாதிக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

What is the purpose of worship the Deepa Aradhana?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நெருப்பை தீபமாக வணங்குவதால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது என்று விளக்குவீர்களா?


பதில்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்களிடம் நெருப்பை வணங்கும் பழக்கம், உளப்பூர்வமாக இருக்கிறது. காரணம் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் அப்படி வணங்கிவந்த பழக்கம்தான். தற்கால நவீன விஞ்ஞான காலத்தில், ‘இதையெல்லாம் வணங்குவதா? என்ன ஒரு மூட நம்பிக்கை’ என்று விலகி இருக்கிறார்கள் எனலாம். ஒன்றை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம்தானே தவிர குறை சொல்லுவதற்கு ஏதுமில்லை.

ஆனாலும் நெருப்பு என்றால் கொஞ்சமாவது பயம் இருக்கத்தானே செய்கிறது? இல்லை என்று மறுப்பீர்களா? பெரும் நெருப்பு உண்டாக சிறு பொறி போதுமே, உலகில் பெரும் காடுகள் பற்றி எரிந்து சாம்பலாகின்றன. காரணம் அறியமுடியாமல் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் அந்த நெருப்பை வெறுமனே கண்டு ஒதுக்கிடாமல், அதை ஒரு முறை அனுபவமாக பெற்றிருக்கிறீர்களா? அந்த அனுபவம் இன்னும் பலவிதமான உண்மைகளை உங்களுக்குச்சொல்லும்.

ஆதிகால மனிதன், நெருப்பைக்கண்டு அஞ்சினான். நெருப்பின் தன்மை, தாக்கம், வளர்ச்சி, படருதல், அழித்தல், சாம்பலாக்கிடுதல் என்று எல்லாம் கண்டு திகைத்தான். அதனால் அதில் ஏதோ தெய்வத்தன்மை உள்ளது என்று உணர்ந்து அதை வணங்கினான். என்றாலும் கூட அந்த நெருப்பை, பக்குவமாக கையாண்டு, உணவை சமைக்கவும் கற்றுக்கொண்டான் என்பது மகத்தான உண்மைதானே?!

இப்போது உங்களுக்குத்தோன்றும் ‘அடுப்பில், சமையலுக்கு எரியும் நெருப்பை ஏன் தீபமாக வணங்க வேண்டும்? முட்டாள்தனம் இல்லையா?’ என்று கேட்ப்பீர்கள். இப்படி நீங்கள் கேட்பதாக இருந்தால், உங்களுக்கும் நெருப்பிற்கும் உள்ள தொடர்பில் விலகி இருக்கிறீர்கள். அந்த நெருப்பை அனுபவமாக பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம்! முக்கியமாக, வெப்பம் தான் நெருப்பாக மாறுகிறது. நம் உடலில் சராசரி வெப்ப நிலையாக 98.6 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் இருக்கிறது. அது அந்த அளவில் இருந்தாகவேண்டும். குறைந்தாலும், கூடினாலும் உயிர்வாழ்தலில் சிக்கல்தான்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் பௌதீக தோற்றத்தில் மூன்றாவது நிலையே, வெப்பம் ஆகும், இந்த வெப்பம் தன்மாற்றம் பெற்றால் நெருப்பாக மாறிவிடும். நெருப்பு நிலையானதல்ல, உடனே அது எரிந்து / எரித்து மறைந்துவிடும். அந்த நிலையில் அங்கே ஒரு தெய்வீக மாற்றமும் நிகழ்கிறது. இந்த உண்மை அறிந்த அறிவார்ந்த முன்னோர்கள், ஆதிகாலத்தில் பயந்துபோய் வணங்கிய தன்மையை விலக்கி, உண்மையோடு தெய்வீகமாக, தீபாராதனை வழியில் வணங்கலாம் என்று வழியமைத்தார்கள். தீபராதனையை கண்களால் பார்ப்பதும், தீபத்தை கைகளால் ஏற்று கண்களில் ஒற்றிக்கொள்வதும் அந்த ஆற்றலை, சக்தியை நமக்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். இதுதான் நெருப்பை தீபமாக வணங்குவதால் கிடைக்கும் நன்மையாகும்.

வாழ்க வளமுடன்.

What is truth and benefit of the Thiruvannamalai Girivalam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கார்த்திகை நாளில், திருவண்ணாமலை சிறப்புப் பெறுவது ஏன்? யோகத்தில் உள்ளவர்களுக்கு உதவுமா?


பதில்:

நாம் யோகத்தில் வந்துவிட்டதினால், இப்படியான விசயங்களை தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அதில் இருக்கின்ற நன்மைகளை மட்டும் ஆராய்ந்து, வேண்டுவோருக்கு நீங்களே உதவலாமே?! திருவண்ணாமலை, நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு பஞ்சபூத வழிபாடு தலங்களில், நெருப்புக்கானது. மேலும் சித்தர்களின் போற்றுதலுக்கும் உரியது. அங்கே சித்தர்கள் ஜீவசமாதியாக அடக்கமும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்களுடை நோக்கம், எந்த ஒரு மனிதரும், இங்கே வந்து திருவண்ணாமலையை வணங்கும் பொழுது, கருத்தாக, உள்முகமாக உள்ள மெய்ப்பொருளையே வணங்குகிறார். 

மேலும், மலையை கிரிவலமாக, பௌர்ணமி தினத்திலும், கார்த்திகை நாளிலும் சுற்று வரும் பொழுது, அங்கே இருக்கக்கூடிய காந்த அலைகளை, உடலும், மனமும், உயிரும் ஏற்றுக்கொள்கிறது.

திருவண்ணாமலை என்ற மலையே குறிப்பிட்ட தன்னதிர்வினால் அலைகளை பரப்ப, பௌர்ணமி நிலவும் தன்னுடைய காந்த அலைகளை பரப்பி பக்தர்களுக்கு உதவுகிறது. இதில் பெரும்பான்மையாக யோகம் கற்காத நபர்கள், இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வர். யோகத்தில் இருக்கிற நாம், அதன் உண்மை அறிந்து ஏற்றுக்கொள்வோம். 

உண்மையாக இந்த பௌர்ணமி கிரிவலம் என்பதில், பக்தி யோகமும், கர்ம யோகம் இணைந்தே இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி, கிரிவலமாக சுற்றி வருகையில், காந்த அலைகளின் செறிவை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அந்த அலைகள், எந்த மனிதருடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது.

மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்கள், சில உண்மைகளை உணர்வுபூர்வமாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அந்த அன்பர்களை சிரமமப்படுத்தாமல், இப்படி இப்படி செய்துவா, இந்த பக்தி முறை உனக்கு போதுமானது என்று எளிமைப்படுத்திவிட்டார்கள். அதுதான் இன்றும் தொடர்கிறது.

மனம் ஒன்றி மௌனமாக, கிரிவலம் சுற்றுவந்த பிறகு, ஒரு ஆழமான அமைதிய அன்பர்கள் உணரமுடியும் என்பதே உண்மையாகும். யோகத்தில் ஆரம்ப சாதகரும், அதில் ஆழ்ந்து பயணிக்கும் சாதகரும் கூட பயன்பெறலாம். இங்கே மனம் ஒன்றி, லயித்து இருத்தல்தான் பலன் தரும். சில மந்திரங்கள் சொல்லிக்கொண்டும் கிரிவலம் வரலாம். மற்றவர்களோடு பேசாத தனிமையில் சுற்றிவருதல் சிறப்பு.

வாழ்க வளமுடன்.

Any solution for thyroid problems in the Vethathiriyam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாளாக தைராய்டு பிரச்சனையினால் அவதிப்படுகிறேன். இதற்கு எளியமுறை உடற்பயிற்சி, தவம் உதவுகிறதா?


பதில்:

உலகில் வாழும் பெரும்பாலோருக்கு இந்த தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பியின் செயல்பாடு இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. அனேகமாக பெண்பாலருக்கு இந்த நோய் தொல்லை அதிகம் எனலாம். அவை 1) அதிகமாக சுரப்பதினால் வரும் பிரச்சனை 2) இயல்பை விட சுரப்புத்தன்மை குறைவதால் வரும் பிரச்சனை ஆகியன ஆகும். இதை ஆங்கிலத்தில் Hyperthyroidism and Hypothyroidism என்கிறார்கள். பெருபாலாக, பெண்களுக்கே இந்த அதிக, குறைவு பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்லுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள குறைகளும், நம்முடைய அன்றாட எண்ணம், செயல் ஆகியனவும் காரணமாக அமைகிறது என்றும் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

முக்கியமாக இந்த பிரச்சனை வந்துவிட்டால், உடலின் வெப்ப சமநிலை மிகவும் பாதிப்படைகிறது. இதுவே அடுத்தடுத்த பல உடல், மன, நல பிரச்சனைகளுக்கு ஆதாரமாகிவிடுகிறது. எனவே முதலாவதாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. அவரின் வழிகாட்டுதலின்படி, உங்களுடைய பிரச்சனை எப்படிப்பட்டது என்று நீங்களே புரிந்துகொள்ளவும் முடியும். அதற்குப்பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த நிலையில் இருந்தவாறே, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை நீங்கள் தொடரலாம். குறிப்பிட்ட பயிற்சியைமட்டும் செய்து பலன் பெற நினைக்காமல், முழுமையாக எல்லா பயிற்சிகளையும் செய்துவந்தால், மாற்றத்தை பெறமுடியும். நீங்கள் தொடர்ந்து செய்வதில்தான் உங்களுக்கான முன்னேற்றம் அமையும்.

மனவளக்கலை மன்றத்தை அணுகி, ஆமைப்பயிற்சி என்ற பயிற்சியை (பெண்பாலருக்கு மட்டும்) கேட்டு கற்றுக்கொள்ளலாம். கூடுதலான முன்னேற்றம் கிடைக்க வழியுண்டாகும். இந்த ஆமைப்பயிற்சியின் பெயர் காரணத்தை அறிந்தாலே, இதன் உண்மையும் பலனும் உங்களுக்குத் தெரியவரலாம். ஆமையின் சிறப்பான அந்த தன்மையை உணர்ந்துதான், உலகெங்கும் ஆமைப்பயிற்சி சொல்லித்தரப்பட்டு வருகிறது. நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். ஆனால் முறையாக, முழுமையான பயிற்சி முறையோடு, மன்றத்தில், தகுந்த அனுபவம் மிக்க ஆசிரியரின் வழியாகவே கற்றுக்கொண்டால், தெளிவான நிலை கிடைக்கும் பலனும் உறுதியாகும், முக்கியமாக ஏதோ ஒருவாரம், பத்துநாள், ஒருமாதம் செய்தேன் ஒரு பலனும் இல்லை என்று புலம்புவதிலும், அதனால் கைவிடுவதிலும் பிரயோஜனம் இல்லை. மருந்து இல்லாமல் பயிற்சி மூலம், முழுமையாக குணப்படுத்துவதற்கு நிச்சயமாக நாட்கள் ஆகலாம். மேலும் அதன் நோய்தன்மை எப்படி இருக்கிறது என்பதும் முக்கியமானது.

என்றாலும் கூட, ஆமைப்பயிற்சியை விடுத்து, நீங்கள் இதற்கென்று, பொதுவெளியில் கிடைக்கும் முத்திரைகள் செய்தும் பழகலாம் என்றாலும் கூட, தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் செய்யவும். இல்லையென்றால், இருக்கும் பிரச்சனையை நீங்களே அதிகப்படுத்தும் விதமாக மாறிவிடும்! கவனம் தேவை.

சில அக்குபங்க்சர் முறைகளும், ஹோமியோபதி மருந்துகளும் உதவுகிறது என்றாலும் கூட, முறையான வழிகாட்டல் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம். வேதாத்திரிய எளியமுறை பயிற்சி நல்ல தீர்வாக, உடல் வெப்பத்தை சமன் செய்து, நாளமில்லா சுரப்பிகளை சரியானபடி செயல்பட ஊக்குவிக்கிறது. உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட துணை செய்கிறது. சுவாசம், தூக்கம் இயல்பாக்குகிறது! என்றாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை தவிர்த்துவிடாதீர்கள்!

தவம் உதவுகிறதா என்ற கேள்விக்கு, மிகச்சிறந்த வழியாக, ஆக்கினை தவம் உதவுகிறது. ஏனென்றால், ஆக்கினை தவம், நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் மொத்தமான செயல்பாடுகளை நிர்ணயித்து, வழி நடத்துகிறது எனலாம். அதன்வழியாக, இந்த தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும். இங்கே தகுந்த குருவின் / ஆசிரியரின் ஆலோசனை முக்கியமாகும்!

வாழ்க வளமுடன்.