September 2024 | CJ

September 2024

How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-  


Vethathiri Maharishi's Realization moved to 21 years backward, Is it Correct?


இருபத்தொன்று ஆண்டுகள் பின்னோக்கிய வேதாத்திரி மகரிஷியின் உண்மை உணர்தல்! சரிதானா?


ஒரு சாராசரி, தனி மனிதருடையை சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் மாறாது நிலைபெறும் காலம் இது. ஒரு ஞானியின் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் அதைவிடவும் மகத்துவமானது. காலம் மாறினாலும், சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிடாது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன் காலத்திலேயே, தன் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார். அதில் எப்போதும் எந்த மாற்றமும் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார். இதற்கு காரணமும் அவரே சொல்லுகிறார்.

ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளுக்குக்கூட, தமிழறிந்த யார் வேண்டுமானாலும், விளக்கவுரை எழுதலாம் என்ற நிலை இன்னமும் தொடர்கிறது. ஒரே குறளுக்கு, வேதாத்திரி மகரிஷியின் விளக்கவுரையையும், இன்னொருவர் விளக்கவுரையையும் நீங்கள் ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்'  நூல்வழியே ஒப்பிட்டுப்பார்த்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக மறைபொருளை விளக்கும், ஐம்பது திருக்குறளுக்கு மட்டுமே விளக்கம் தந்திருக்கிறார். வேதாத்திரியத்திற்கு ஏற்றபடி இது போதும் என்றும் சொல்லிவிட்டார்.

‘நான் பேசவும், எழுதவும், விளக்கவும் ஆரம்பித்தது, எல்லாம் உணர்ந்த பிறகுதான். அதனால், அன்று சொன்னதையே இன்றும் சொல்லுவதுபோல உங்களுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலோர், ஆரம்பத்தில் ஒரு விளக்கத்தையும், உண்மை உணர்ந்த பிறகு வேறெரு விளக்கத்தையும் தருவார்கள்’ என்று உண்மையான காரணத்தை சொல்லுகிறார். மேலும், தன்காலத்திற்கு பிறகும், இப்படியே தொடரவேண்டும் என்பதையும் விளக்குகிறார். ‘ஒரு ஞானி, தான் உணர்ந்ததை பிறருக்கு வார்த்தைகளால் விளக்க முயற்சிப்பார். சீடரோ, மாணவனோ அந்த குறிப்பை எழுதிக்கொள்வான். ஆனால் அவன் அதை உணர்ந்தறிய மாட்டான். இதனால், ஞானியின் மறைவுக்குப்பின், தனக்கு தெரிந்ததை இணைத்துக்கொள்வான். அவன் காலத்திற்குப் பிறகு இன்னொருவன் வருவான். அவன் கூடுதலாக இன்னொன்றை சேர்த்துக்கொள்வான். இப்படியே கதை, கட்டுரை போல உண்மை, இவ்வுலகில் திரிந்து விட்டிருக்கிறது’ என்று சொல்லுகிறார். எனினும் வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்துவிட்டபிறகும், அவரின் கனவு நிறைவேறிட பிரமாண்டமாக, வேதாத்திரியம் வளர்ந்திருக்கிறது. வளர்ந்துகொண்டும் இருக்கிறது. அந்த வகையில் வேதாத்திரி மகரிஷியும் மகிழ்ந்திருப்பார்.

எனினும், கண்ணில் பட்ட ஒருபதிவு என்னை உறுத்தியது. இதோ அந்த பதிவிற்க்கான காட்சிப்படம். 


        வழக்கமாகவே நான் அடிக்கடி, வேதாத்திரிய ஞானக்களஞ்சிய கவிகளை படித்துக் கொண்டிருப்பவன். என்னுடைய உண்மை விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷியின் நேரடியான உரைகளும், கட்டுரைகளும், நூல்களும், கவிதைகளுமே உதவின. கவிதையை, பதிவில் படித்த பொழுது, எனக்கு ஒரு வரி இடித்தது. உடனே மூல ஞானக்களஞ்சிய கவி நூலைப் பிரித்தேன் படித்தேன். உண்மை அறிந்தேன்.

ஞானமும் வாழ்வும் கவிகள்: (கவி எண் 238) ‘இனி பிறவி இல்லை’ ‘நிறை உணர்வு’ என்பதை தாண்டி, ‘உருவெடுத்த காரணமும்’ என்று ஆரம்பித்து ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று யாரோ, வேதாத்திரி மகரிஷியின் கவிதையில், கை வைத்திருக்கிறார்கள்.


வேதாத்திரி மகரிசி 96 ஆண்டுகள் வாழ்ந்தது இருக்கட்டும். அதை சொல்லுவதற்கு, அவரே 28/05/1986 ல் எழுதிய கவிதையில் கை வைக்கவேண்டுமா? யார் செய்த திருத்தம் என்பது தெரியவில்லை. கிட்டதட்ட, வேதாத்திரி மகரிசியின், இறையுணர்தலை, உண்மை விளக்கத்தை, 21 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார்களே? ‘உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து’ என்பதை ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று மாற்றிவிட்டது தகுமா? திருத்தியதை படிக்கும் சமூகம், எதோ இறக்கும் தருவாயில்தான், உண்மை உணர்ந்தாரோ? என்று கருத இடமிருக்கிறதே?! உங்களுகு சந்தேகம் இருந்தால், கவி எண் 709, ‘நிறை உணர்வு’ எனும் தலைப்பில், ஞானக்களஞ்சிய கவிதை நூலைப்பாருங்கள்.

அட, ஏனய்யா இதெல்லாம் பெரியவிசயமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விடுங்க இதெல்லாம் சகஜம் என்று என்னையும், உங்களோடு அழைக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது. சரி விட்டுவிடுவோம். ஆனால் வேதாத்திரியம் சிறுகச்சிறுக தன் மதிப்பிழக்க விடலாமா? ஏற்கனவே, வேதாத்திரியத்தில் உள்ளவர்களே, வேதாத்திரி மகரிசி அவர்கள் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? மருத்துவ மனையில்தானே இறந்தார்?’ என்று உண்மை அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில், கூடுதலாக 21 ஆண்டுக்கால உண்மை விளக்கமும் தள்ளிப்போய் விட்டது. இனி காலப்போக்கில், பதினோராவது மடமாக மாறிவிடக்கூடும் அல்லவா?

        வேதாத்திரி மகரிஷி, தன் அன்பர்களிடம் உரை நிகழ்த்தினாலும், பொதுமக்களுக்காக உரை நிகழ்த்தினாலும், அவர்களை உயர்த்திடவே, தன் கருத்துக்களை, தன் உதாரணங்களைக் கொண்டே விளக்குவார். ஒருபோதும் பொது தளத்தில் உள்ளவர்களை சொல்லி பேசுவதில்லை. மக்களின் அககாட்சி மாறக்ககூடாது என்பதில் கவனம் கொண்டிருப்பார். ஆனால் இப்போது, எல்லோருமே, மக்களின் தளத்திற்கு இறங்கிவிட்டனர், இப்படி சொன்னால்தான் மக்களுக்குப் புரியும் என்று, வேதாத்திரி மகரிஷி கண்டுபிடிக்காத கருத்தியலை கண்டுபிடித்துவிட்டார்கள். மணி நேரம் பேசினாலும் அப்படித்தான், குறைந்த நிமிடத்தில் பேசினாலும் அப்படித்தான். இதை நீங்களும் உணர்ந்திருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும்கூட நல்லதே நடக்கட்டும்.

உலக பேச்சு வழக்கில், உண்மைக்கு புறம்பாக, ஒரு மனிதர் இறந்த பிறகு, இறந்தவரின் கருத்தை பேசினாலும், பேசும் பொருளானாலும், அவர் தன் கல்லறையில் நெளிகிறார் என்று சொல்லுவார்கள். அதாவது அந்த அளவிற்கு வருத்தம் தரும் என்று குறிப்பிடுவார்கள். அப்படி ஆகிவிட வேண்டாமே?!

        ஒரு அன்றாடம் நிகழ்வதையே தவறான செய்தியாக தருவது, தவறு, குற்றம் எனும்போது, ஒரு ஞானியின், மெய்யுணர்தலை, தன் விளக்கத்தை, பொருத்தமாக மாற்றி அமைப்பது என்னவாகும்? ‘ஐயா, இதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்கிறீர்களா? சரி தான். அப்படியே ஆகட்டும்.  

வாழ்க வளமுடன்.

-

Moving towards fulfill or standing on fulfill. Which one is better?


நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது என்பதும், ஏன் என்பதும் விளக்கம் தருக.

        மனிதர்களாகிய நாம், எப்போதும் குறை என்ற நிலையிலேயே இருப்போம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு கொடுத்தாலும், இன்னும் கொடு என்று கேட்குமே, அந்தக் குழந்தைபோலவே, நாம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த குறையை நிறையாக்க, ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிறை கிடைத்தபாடில்லை. இப்படியாக, குறை என்பது என்ன? நிறை என்பது என்ன? நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது, ஏன் என்பதும் விளக்கம் தெரிந்து கொள்வோமா? .

ஒரு மனிதனுக்கு நிறை என்பது எதன் அடிப்படையில் என்று பிரித்தால், இந்த வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும், ஒரு கடற்கரையில் எத்தனை மணல்துளிகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும் நீண்டுகொண்டே இருக்கும். இந்தியாவை பொறுத்தமட்டில், நூற்றி நாற்பது கோடி மக்கள் இருப்பதாக சமீபத்திய, மக்கள் தொகை கணக்கு சொல்லப்படுகிறது. இந்த நூற்றி நாற்பது கோடி மக்களுக்கும், பல நூறு குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள், பயணித்துக்கொண்டே இருப்பார்கள். எதுவரை? அதை பிறகு பார்க்கலாம்.

எனவே எதுவெல்லாம் நிறை? என்று பட்டியலிட்டால், இந்த கட்டுரையையும், உங்களுக்கான  பதிலையும் இன்றைக்கு தரமுடியாது. என்றைக்கு தருவேன் என்று என்னாலும் உறுதிபட சொல்லமுடியாது. ஆனால் நிறை என்பது என்ன? குறை என்பது என்ன? என்ற விளக்கம் ஓரளவு உதவியாக இருக்கும். ஒரு முக்கியமான விசயத்தையும், இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழில், ஒரு சிந்தனையும், தத்துவ உண்மையையும் ஒருவர் தந்தால், அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவரெல்லாம் இப்படி சொல்லுமளவுக்கு பெரிய ஆளா? என்று கடந்துவிடுவார்கள். ஆனால், இந்தியா கடந்த, மற்ற மொழியில், யாரேனும் ஒற்றைவரியை சொன்னால், ஆகா, ஓஹோ என்பார்கள். எல்லோருக்கும் பகிர்வார்கள்.

இந்தியா நாடும், நம் தமிழகமும் ஆயிரக்கணக்கான, மெய்யான உண்மைகளை பொதிந்து வைத்திருக்கிறது. அந்த சிந்தனையாளர்களும், சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் சொன்னதை படிக்கவும், பொருள் உண்மை அறியவும், தனிமனிடனுடைய வாழ்நாள் போதாது. ஆனால் நாம்தான் அதையெல்லாம், தொட்டுப்பார்ப்பதும் இல்லை, கண்ணால் பார்ப்பதும் இல்லை. கிட்டப்பார்வை குறையுள்ளவருக்கு, அருகில் இருப்பது தெரியாது என்பதுபோல, நாம் தூரப்பார்வைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிறை என்றால் என்ன? குறை என்றால் என்ன? இந்த இரண்டுக்குமே பொதுவான விடை எங்கே இருக்கிறது தெரியுமா? ஒவ்வொருவருடைய மனதில் இருக்கிறது. ஆங்கிலத்தில், முன்னோர் சொன்னதை, வழிமொழிந்து மட்டுமே நகர்வார்கள். சொந்த அறிவுக்கும், சிந்தனைக்கும் அங்கே இடமில்லை. அதை தமிழில், அதே போல, ‘இன்னொருவனின் முன்னெடுப்பில்’ சொன்னால், ‘நீ ஏன் அவர் புகழ்பாடுகிறாய்?’ அவரை வைத்து பிழைக்கிறாயா?’ என்று கேட்பார்கள். ‘சொந்த புத்தி இல்லையா?’ என்று கூடுதலாகவும் கேள்வி கேட்பார்கள். சரி, சொந்த புத்தியில் சொல்ல ஆரம்பித்தால், சொல்லுபவரின், சொல்லையும், கருத்தையும் விட்டுவிட்டு, சொல்லுபவரை, ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் நம் மக்களின் நடைமுறை வழக்கமும், பழக்கமும். இதனாலேயே, விளக்கமான கட்டுரை எழுதவே தயக்கமாகவும் இருக்கிறது. ஆனால், எனக்குப்பின் இச்சமூகத்திற்கு தரக்கூடிய பதிவுகள் தேவை என்பதால், ஒவ்வொருவரும், தங்கள் அனுபவத்தை, விளக்கத்தை, உண்மையை, பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான், நாம் பல சங்ககால கல்வெட்டு எழுத்துக்களையும், ஓலைச்சுவடிகளையும் பெற்றோம்.

தமிழகத்தின் வாழ்வியல் சொல்லும், சங்க கால படைப்புக்கள், தன் அனுபவத்தின்படியே வந்தவை. இவர் இப்படிச் சொன்னார் என்று எவருமே தொகுப்பாக தந்ததில்லை. அதுபோலவே, என்னுடைய எழுத்துகளும் அமைகின்றன. என்றாலும் தேவைப்படும்பொழுது, முன்மொழிவு, வேதாத்திரியம் தான். 

இந்த நிறை, குறை கேள்விக்கு, கூடுதல் உண்மையை, வேதாத்திரி மகரிஷி இப்படிச் சொல்லுகிறார். ‘மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.’

இந்த நிலையில், நிறையும், குறையும் எங்கே? எதனிடத்தில்? எப்படி? என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த நிறையும், குறையும் எங்கே சம நிலை அடைகிறது? எங்கே மறைகிறது? முழுமை அடைகிறது? என்ற கேள்வியை முன்வைத்தால், அது ‘மெய்ப்பொருள் உண்மையை அறியும்பொழுது’ என்பதுதான் பதிலாகும்.

ஆனால், வாழ்கின்ற, இந்த பொருள்முதல்வாத உலகில், குறைதான் இருக்கும் என்பது உறுதி, அதுவரை, நிறைவை நோக்கி நகர்கின்ற வாழ்க்கைதான் சரியானது. நிறைவில் நின்றால், மற்றொரு குறையில் சிக்கி இருப்பதை உணர்வீர்கள். ஆனால், எது நிறை? என்ற கேள்வியோடு நகருங்கள். அனுபவம், காலம், அதைத்தரும் இயற்கை ஆகிய மூன்றும், உங்களை வழிநடத்தும்.

வாழ்க வளமுடன்

-

Why is it important to give importance to exercise? Why point it out so often?


உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன? அடிக்கடி அதையே சுட்டிக்காட்டுதல் ஏன்?


உண்மையாகவே இரண்டுவிதமான காரணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டையுமே நீங்கள் அறிந்தீர்களா? என்பதும் இந்த கேள்வி வழியாக தெரியவும் இல்லை. அதனால்தான் அடிக்கடி, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், அதையே சுட்டிக்காட்டுதலும் நிகழ்கிறது. அப்படியாவது நீங்கள், இந்த உண்மையை புரிந்துகொள்ள மாட்டீர்களா? என்ற உள்நோக்கம் தான் காரணம்.

அக்கால கிராமங்களில், அதிகாலை ஏதேனும் சாப்பிடும் பொழுது, ஒருவர் கேட்பார், ‘என்னய்யா, பல்லை விளக்காம சாப்புடுறே?’ இந்த கேள்விக்கு மற்றொருவர், ‘அடப்போப்பா, ஆடு, மாடெல்லாம் பல்லா விளக்குது?’ என்று பதில் சொல்லுவார். இதை நீங்களும் கேட்டிருக்கலாம். ஆனால், ஆடு, மாடுகளின் பல்லுயிர் பெருக்கம் வேறு. மனிதனுடைய பல்லுயிர் பெருக்கம் வேறு. அதனால், மனிதன் தன்னைச்சார்ந்த சூழலில், தூய்மையாக இல்லாவிட்டால், பலவிதமான நோய் தாக்கங்களுக்கு ஆளாகிவிடுவான். இது இயல்பானதாகும்.

மேலும் மனிதபிறப்பில் ஓர் இயற்கை உன்னதமும், முழுமையும் இருக்கிறது. அது உள்ளடங்கி இருக்கிறது. சாதாரணமாக, அதை மனிதனே அறிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு யோகம் தேவைப்படுகிறது. குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு மனிதன் தானாக, இந்த உண்மையை நோக்கி நகர்வது, அவனுக்குள் நிகழ்வதில்லை. மாறாக ஏதோ ஒரு, பரம்பரை வழியான தாக்கத்தில், யாரோ ஒரு சிலருக்கு நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில், நீங்கள் எப்படி வாழ்வது? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால், அதற்கு விடை, உங்கள் சூழலும், அதற்கேற்ப கிடைக்கும் வாய்ப்புக்களும், நீங்கள் தேர்ந்தெடுப்பதும்தான் மூலமாக அமைகிறது. மேலும், ஒரு நாட்டின் சட்ட திட்ட, ஒழுக்க, பழக்க முறைகளும் துணையாக அமைந்துவிடுகிறது. இதற்கு உட்பட்டு, நீங்கள் வாழ்க்கையை, எப்படி வேண்டுமானாலும் வாழமுடியும். அது உங்கள் உரிமையாகி விடுகிறது. அன்றாடம் உழைத்து, சலித்து, களைத்து, நன்றாக தூங்கி, எழுந்து வாழலாம். எதுவுமே செய்யாமல் சோம்பேறியாகவும் வாழலாம். இன்பங்களை மட்டுமே தேடி, திளைத்து, அனுபவித்து வாழலாம். இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றின் வரிசையில் வருவதுதான், எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் வாழ்வதும் ஆகும். தவறு செய்வதும், வருந்துவது, துணைக்கும், பாதுகாப்புக்கும் கடவுளை வேண்டுவதும், பரிகாரங்கள் செய்வதும், வழிபாடு செய்வதும் நிகழும்.இருப்பதை அனுபவித்து, இயற்கையோடு முட்டி மோதி, விளைவுகளை ஏற்று, எப்படியாவது வாழ்வது இந்த வகையாகும்.

இது இப்படி இருக்க, வழக்கமான கடமைகளை செய்துகொண்டே, இயற்கைக்கும், பிற மனிதர்களுக்கும் எந்த தீங்கும் நேராமல், முரண்படாமல், நிறைவான, மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், தனக்குள்,  மனிதனாக பிறந்திருக்கும் நான் யார்? ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? எனக்கு மூலமாக இருப்பது என்ன? நான் உடலா? மனமா? உயிரா? ஆத்மாவா? வேறொன்றா? என்ற சிந்தனை எழுந்தால், அது உண்மையை தேடும் வாழ்க்கை முறை ஆகும். கடவுள் என்பது என்ன? தெய்வீகம் என்பது என்ன? ஏன் வணங்குகிறோம்? என்ற கேள்வியும் அவனுக்குள் எழும். அதற்கு விடைகானவும் முயற்சிப்பான். உண்மையில், மனிதனுக்கு பிறப்பின் கடமையும், நோக்கமும் இருக்கிறது. ஆனால் அவன் அதை மறந்துதான் வாழ்கிறான். அந்த உண்மையை, குரு தான் தூண்டி விடுகிறார்.

இந்த இரண்டு வாழ்க்கை முறையில், எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். அது உங்கள் பரம்பரையாலும், குடும்பத்தாலும், சூழ்நிலையாலும், பிறராலும் நிகழும். முதல் நிலையில் உடற்பயிற்சி விருப்பமில்லை. அது அவசியமும் இல்லை. இரண்டாவது நிலையில், அது முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கு இந்த உடல் தேவைப்படுகிறது.  ஆன்மா இயக்க ஆற்றலாகவும், உடல் ஆன்மாவுக்குக் கருவியாகவும் இருப்பது விழிப்பு நிலையில் தெளிவாகும். உண்மை உணர்வாகும்.’ என்று சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்

-


Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 01


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 01


வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஒவ்வொரு நாளும் புதிது. இந்த ஒருநாள் என்பது, அவன் தூங்கத்தில் இருந்து விழுத்து எழுவதை சொல்லலாம். ஆர்பரித்த புயல், அடங்கி அடுத்ததாக ஒரு புதிய ஆர்பரிப்புக்கு தயாராவது போல, மனிதன் ஒருநாளில் களைத்து, சோர்ந்து, தூங்குகிறான், தூங்க முயற்சிக்கிறான். மறுநாளில் கண்விழித்து எழுகிறான். அவனுக்கான புதிய நாள் காத்திருக்கிறது. இது தினமும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், உண்மை என்ன? நொடிக்கு நொடி எதுவுமே, பழசில் இல்லை. அது தன்னில் இருக்கும் பழசை உதிர்த்துக்கொண்டே, புதிதாக மலர்ச்சியை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த பூமி, நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று, பதினைந்து லட்சம் மைல் தூரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதற்காக, இவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது என்றால், எதுவுமே புதிதாக மாறிக்கொண்டே, நிகழ்ந்துகொண்டே இருக்கையில், மனிதன், தன்னை பழசில் தான் இணைத்துக் கொண்டிருக்கிறான். அதை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, அதிலே தங்கி நிற்கிறான். பிரபஞ்சத்தின் மலர்ச்சியோடு, தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இணைத்துக் கொள்ள விரும்புவதும் இல்லை.

ஒரு மழை பொழிந்து, ஓடுகின்ற மழைநீர், ஓடி மண்ணில், ஊறி, மறைந்துபோனால் அது மிக இயல்பானது. ஆனால் எங்கேயாவது, தேங்கி நின்றால், மண்ணும், நீரும் கலந்து, மற்றொரு வளர்ச்சிக்கு ஆளாகிவிடும். நீர் தேங்குதல், சிறு பூச்சிகள், புழு, கொசு என்று பலவித உயிர்களை தோற்றுவிக்கும். பாசம் பிடித்து சிறுசெல் பூச்சிகளும் உருவாகும். மனிதர்களுக்கு ஒவ்வாத பல பிரச்சனைகள் அங்கிருந்து உருவாகும். அதுபோலவே, மனிதன் தேங்கி நின்றால், பலவித உடல், மன பிரச்சனைகளுக்குள் சிக்குகிறான்.

முதலில் மன நலம் பாதிப்பும், அதன்வழியே உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும் நிகழும், அதேவேளையில் முதலில் உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும், அதன்வழியே மன நலம் பாதிப்பும் நிகழக்கூடும். மனித நோய்களின் அடிப்படை இதுதான். இதை வருமுன் காக்கவே உடற்பயிற்சி, மனித வாழ்வின் கலாச்சாரமாக உருவானது. அன்றாட வேலைகளும் கூட, உடற்பயிற்சிக்காகவே உருவாக்கமும் செய்யப்பட்டன. உடல் உழைப்பு இல்லாத மனிதன், நோய்க்கு இடம் தருகிறான் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை தானே?

உடலுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் காற்று, வெப்பம், ரத்தம் இவற்றின் ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு ஈடாக, உடலுறுப்புக்கள் இயல்பாக, இயற்கையாக செயல்படும். இதற்கு வழியும், உறுதுணையும் தர, உடலை தகுந்த அளவில், இயக்குவதும் முக்கியம் அல்லவா? ‘நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் நான் நலமாக இருக்கவேண்டும்’ என்று நினைப்பதும், வாழ்வதும் எப்படி சரியாகும்? இந்த நிலையில்தான், வாழ்வில் உடற்பயிற்சி அவசியமாகிறது.

இப்படி மாற்றத்தை செய்யாமல், உடலில் சோர்வு, வலி, நோய் என்று வரும்பொழுதுதான், மரு உந்து என்ற மருந்து அவசியமாகிறது. உடலின் குறைபாட்டின் அடிப்படையிலே, மருந்தின் தன்மையும், வீரியமும், அளவும், எடுத்துக்கொள்ளும் காலமும் மாறுபடும். இந்த கருத்தின் மற்றொரு வகையில்தான், யோகம் என்பதும் உதவுகிறது. 

அடுத்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

வாழ்க வளமுடன்.

-

How do you want to live in this World? Upgrade of the human enlightenment!


நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இந்த உலகில், மனிதன் தனித்த ஒருவன் அல்ல. குடும்பம், உறவுகள், சமூகம் என்ற உறவுகளை அடிப்படையாக கொண்டுதான் பிறக்கிறான். ஒருவன், தன்னை அனாதையாக கருதவும் முடியாது. ஏனென்றால், அவனுக்கு, இந்த சமூகம் உதவிகளை தானாகவே, விரும்பி செய்யும் என்பது உண்மை. அதுபோலவே, தன்னை அனாதையாக கருதியவனும், இந்த சமூகத்திற்கு உதவவேண்டிய வகையிலும் இருப்பான். இந்நிலையில், ஒரு மனிதனின் வாழ்வு அமைந்துவிடுகிறது. எனக்கு யாரும் தேவையில்லை. எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நானும் யாருக்கும் உதவ தயாரில்லை. என்பதாக தனக்குள்ளாக வட்டம் போட்டுக்கொண்டு வாழ்வது, பொருத்தமற்றது ஆகும். அது மனித பிறவிக்கே இழுக்கு என்று கருதலாம். அதுபோல, அப்படி வாழ்வது, இயற்கைக்கும் விரோதமானது. மனிதன் என்பவன், இதமான மனதைக் கொண்டவன், மன+இதன் என்பதுதான், மனிதன் என்றாகிவிட்டது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். 

இப்போதுள்ள வாழ்க்கைமுறை, ஒரு தனி மனிதனை, எல்லாவகையிலும், இந்த உலகம் பிணைத்திருக்கிறது. அதாவது விட்டு விலகிடாத அளவுக்கு இணைத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதை உலகம் சுருங்கி விட்டது என்று, சமூக ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். மேலும் கைபேசி என்ற, தகவல் தொடர்பு சாதனம், உலகவே ஒரு சமூகம் என்ற மாயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த மாயம், சிலவேளைகளில் நிஜமாகவும் வந்து நிற்கிறது. இது விஞ்ஞானத்தின் கட்டாயமும், வளர்ச்சியும் என்பதாகவே அமைந்துவிட்டது. இதிலிருந்து, சராசரி மனிதனும் தப்பிக்கமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுது, இந்த உலகம், ஒன்றாக, ஒரே சமுகம் என்ற நிலைபாடுக்கு வந்துவிட்டதை, நாம் நம்பித்தான் ஆகவேண்டும். என்றாலும் கூட, எங்கோ ஏற்படும் மாற்றம், உடனடியாக, நமக்கும் நேர்ந்துவிடுவதையும், அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், தடுமாற்றமே ஏற்படுகிறது. ஏனென்றால், மனிதன், தன்னையும், சமூகத்தையும் பார்க்கிற பார்வை, நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஏற்பான ஒன்று, எல்லோருக்கும் ஏற்பாக இருப்பதும் இல்லை. ஆனால், திடீரென்று, அவருக்கு நிகழ்ந்தது, எனக்கும் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிவிடுவதை காணலாம். நாமும் கூட சில நேரங்களில், சில நிகழ்வுகளில் அப்படி நினைப்பதுண்டு, விரும்புவதும் உண்டு.

இந்த நிலைகளை எல்லாமே, வாழ்ந்து அனுபவம் கண்ட முன்னோர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவ ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மக்களின் வாழ்வியலுக்கு, ஒரு நடைமுறை அமைத்து தந்திருக்கிறார்கள். அதனோடு, தன்னையும், மெய்ப்பொருளையும் உணர்ந்த ஞானிகள், ஒரு தனிமனிதனை, இப்படி வாழ்க என்று அறிவுறுத்துகிறார்கள். அதையே இயற்கைக்கும், தனக்கும், குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வாக கருதுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியும், ‘தனிமனிதனின் அமைதியே, உலக அமைதிக்கு வழியாகும் ’ என்று சொல்லுகிறார்.

இந்நிலையில், ஒரு மனிதன் எப்படி வாழலாம்? எப்படி வாழவேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பாகும். இதை யாரிடமாவது கேட்டால், என்ன பதில் சொல்லுவார்? நமக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய பதில், ‘நான் நன்றாக வாழவேண்டும். இன்பமாக வாழவேண்டும். நோய் நொடி இல்லாமல், எல்லாம் அனுபவத்தி வாழவேண்டும். நீண்ட ஆயுட்காலமும் வேண்டும், சுகபோகமாக, உலகில் மதிப்பாகவும் வாழவேண்டும்’ என்று தன்னலம் கருத்தாக சொல்லுவார். இந்த பதில் எபோதும் பொதுவானது. இன்னும் சிலர், ‘தானும் நன்றாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன்’ என்ற வார்த்தையை, இணைத்துக் கொள்வார்கள்.  கூடுதலாக‘நானும், என்குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்’என்று சொல்லுவார்கள்.

முரண்பாடானவர்கள் ‘மற்றவர்கள விட, நான் நன்றாக வாழவேண்டும்’ என்று சொல்வார்கள். அதையே வாழ்வில் கடைபிடிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனுடைய இந்த எண்ணங்கள்தான், அவனின் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறது. ஒரு குறிபிட்ட வட்டத்திற்குள் நீங்கள், ‘சுயநலமாக, எனக்கு மட்டும்’ என்று எதையாவது நினைத்தால், அது உங்கள் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுகிறது என்பது உறுதி. அது இயற்கையின், நீதிக்கு எதிரானது என்பதை மறவாதீர்கள். ஒரு சுவறில் எறிந்த பந்து, திரும்ப உங்களிடமே வருவதுபோல, உங்களை தாக்கும். இதை பெரும்பாலோர் தன் வாழ்நாளிலேயே, உணர்ந்திருப்பார்கள்.

ஒரு மனிதன், எப்படி வாழவேண்டும் என்பதையே, இன்றைய யோககல்வி முறைகள் போதிக்கின்றன. இதை பக்திவழியிலான கதைகள், ஓர் அளவில் தடுமாறுகின்றன. காரணம் என்னவென்றால், அக்கால மனிதர்களின், அறிவுநிலை, வாழ்க்கைமுறை, செயல்பாடுகள், தகவல் தொடர்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நிலையில் இருந்தது. இன்றோ உலக மக்கள் அனைவருமே, தன் அறிவிலும், வாழ்விலும் மிக உயர்ந்திருக்கிறார்கள். பக்தி என்ன உண்டோ, அதில் அடிப்படை மாறாமல், எடுத்துக்கொண்டு, கூடுதலாக யோகம் என்ற மெய்ப்பொருளும், இயற்கையோடு தன்னையும் அறியும் பயிற்சி (Upgrade of the human enlightenment) தேவைப்படுகிறது.  இதை அறிவறிந்தோர் உணர்வார்கள். அவர்கள் தன் வாழ்விலும் அதை கடைபிடிக்கிறார்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறார். உங்களுக்குள்ளாகவும், ‘நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’என்ற இந்த கேள்விக்கு, ஆராய்ச்சியை தொடங்குங்கள், உண்மை அறியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 02


        வாழ்க வளமுடன். மனிதனாக இவ்வுலகில் பிறந்தவனுக்கு, வாழும்வரை உடல் சொந்தம், அந்த உடல் இருக்கும்வரைதான், அவனும் இந்த உலகில் இன்பங்களை அனுபவித்து மகிழவும் முடியும். இந்த உண்மையின்படி, மனிதன் என்பவன் உடலா? என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் தருவீர்கள். உடல் என்பது மனிதன் இல்லையானால், மனிதனாக இருக்கும் நீ யார்? என்ற கேள்வியை கேட்டால், அந்த கேள்வியை உங்களுக்குள்ளாக திருப்பிவிட்டு, நான் யார்? என்று கேட்க வேண்டும். அப்படி இந்த கேள்விக்கு பதில் அறியவேண்டுமானால், நீங்கள் யோகத்திற்கு வரவேண்டும்.

        நான் யார்? என்ற கேள்விக்கான பதில், எப்போது கிடைக்கும்? என்று உறுதியாக சொல்ல முடியாது. வேறு யாரும் கணித்து சொல்லவும் முடியாது. உங்களுக்கு தீட்சை வழங்கிடும், ஆசானும், குருவும் கூட, இதை சொல்லமுடியாது. உங்களை அந்த நிலைக்கு உயர்த்தித் தருவது அவர்களின் வேலை. விடையை, பயிற்சியாலும், முயற்சியாலும், ஆராய்ச்சியாலும் கண்டுபிடிப்பது உங்களின் வேலைதான். சந்தேகமில்லை. இந்த பதில் கிடைக்கும் வரை, நீங்களும், உடலும் நலமாக இருக்கவேண்டுமே? அதற்கு உடலும் துணையாக இருக்கவேண்டும் அல்லவா? இல்லையேல், நோக்கம் நிறைவேறாது.

        இந்த உண்மையை அறிந்த சித்தர்களும், ஞானியர்களும், குண்டலினி எனும் தீட்சைக்கு முன்னால், உடலை வளப்படுத்தி தக்கவைக்கும், பயிற்சிகளை கண்டறிந்தார்கள். அதுதான் உடற்பயிற்சியாகவும், யோக ஆசனங்களாகவும், காயகல்ப யோக கலையாகவும் மலர்ந்திருக்கிறது. அப்படியும் கூட, சிலருக்கு, வாழ்நாள் போதாமல் கவலைப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம், பதஞ்சலி முனிவர், அஷ்டாங்க யோகம் என்ற எட்டு படி நிலைகளாக அமைத்துத் தந்தார். இயமம், நியமம், ஆசனம், பிரணாயமம், தாரணா, பிரத்தியாகாரா, தியானம், சமாதி ஆகினவே அந்த எட்டு படி நிலைகள் ஆகும்.

        இந்த இயமம், ஏற்கனவே இருக்கும் வழக்கங்களை விட்டொழிப்பது ஆகும். நியமம், புதிய வழங்கங்களை பற்றிக்கொள்வது ஆகும், இதன் பிறகுதான், உடலை, மனதை, உயிரை வலுப்படுத்தி, உரமூட்டும் ஆசனம் கிடைக்கிறது. வடமொழியில் ஆசனம் என்றால், தமிழில் அது உடற்பயிற்சிதான். அத்தகைய பயிற்சியே யோகத்தில் பலவாறாக வழங்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய அன்பர்களின் மேல், அக்கறை கொண்டு, உடற்பயிற்சிகளை கற்று, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, விளைவுகளுக்கு ஏற்றபடி மாற்றமும் செய்து கொண்டார். மேலும் புதிய முறைகளும் தந்தார்.

        வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஹோமியோபதி சிகிச்சை முறையில், மருத்துவர் என்பதால், அதற்கு ஏற்றபடியும், உடற்பயிற்சியை திருத்தி அமைத்தார். உலக நாடுகள் பலவற்றுக்கும், ஆன்மீக வகுப்பு காலங்களில், மக்களின் கலாச்சாரங்களையும், அதனோடு கலந்த உடற்பயிற்சிகளை அறிந்து, உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவான, எளியமுறை பயிற்சியாக, அதை வடிவமைத்தார். இந்த வகையில்தான், குண்டலினி யோகம் கற்கும் முன்பாக, உடலை வளப்படுத்தியாக வேண்டும் என்ற நிலைபாடுகளில்தான், உடற்பயிற்சி கட்டாயம் என்பதாக மாற்றம் பெற்றது. அதுவே இன்றும் தொடர்கிறது.

 வாழ்க வளமுடன். 

-

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 01


        வாழ்க வளமுடன். உலகில், அக்காலம் முதல் இக்காலம் வரை, பொதுவாகவே உடலை வளமாக்கும் வேலைகளும், ஆசனங்களும், உடலுக்கான பயிற்சிகளும் நடைமுறையில் இருந்தன. கால மாற்றத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும், வேலைகள் எளிதானதாக மாறிவிட்டது, மனிதனுக்கு நடைப்பயணம் என்பது கூட இல்லை, இதனால், உடல் தன் இயக்கங்களில் பெரும் மாற்றம் பெற்றுவிட்டது. வேலை, வியாபரம், தொழில் ஆகியன எல்லாமே, உட்கார்ந்து செய்யக்கூடிய நிலைக்கு மனிதவாழ்வு மாறிவிட்டது. எனினும் கடின உழைப்பாளிகள் இருப்பதை மறுக்க முடியாது. உடலுக்கு எப்போதும் அசைவுகள் தேவை.

ஏனென்றால், உடல் பஞ்சபூத தோற்றங்களால் ஆனது. மண் என்ற கெட்டிப்பொருள் உடலாகவும், உடல் உறுப்புகளாகவும். நீர் என்பது உடலெங்கும் ஓடும் ரத்தமாகவும், வெப்பம் என்பது, உடல் நடத்திட உதவும் மின்சாரமாகவும், காற்று என்பது உயிர்காற்றாகவும், சுவாசமாகவும், விண் என்பது மனிதனுக்கும், ஜீவன்களுக்கும் உயிராகவும் இருக்கிறது. இவை எல்லாமே அணுக்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. அணுக்கள் என்றாலே, எப்போதும், என்றும் இயக்கமும் இருக்கும். அந்த இயக்கங்களில், தடை ஏற்படாத நிலையில், பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.

முக்கியமாக, உடலாக நாம், நம்மை அறிகிறோம். அது நிலையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால், உடல் செல்கள் அன்றாடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதியது உருவாகவும், பழையது உதிரவும் செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. உடலுக்குள் காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் சீராக, ஓடிக்கொண்டே வருகிறது, இதனோடு உயிரோட்டமும், ஜீவகாந்தம் என்ற அலை இயக்கமும் ஓடுகிறது. காற்று, வெப்பம், ரத்தம் இவைகளின் ஓட்டத்தில், எந்த தடை வந்தாலும், அங்கே வலி உண்டாகும். வலி தேக்கமுற்றால், அது நோயாக மாறிவிடும். நோய் உறுப்புக்களை சிதைக்கும்.

வலி, நோய், உறுப்புகளின் சிதைவு ஆகிய எல்லாமே, மனதையும், உயிரையும் தாக்கும். மருந்துகளால் சரி செய்யமுடியும் என்றாலும் கூட, பழைய நிலைமைக்கு கொண்டு வருவதிலும், திருத்தி அமைப்பதிலும் சிக்கல் உண்டு. இயந்திரங்கள் போல, மாற்று உறுப்புக்களும் உடனடியாக பொருந்துவதும் இல்லை. எனவே, மனிதன் வருமுன் காப்பதில், கவனமும், அக்கறையும் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உடலியக்கம் சுருங்கிவிட்ட இக்காலத்தில், உடற்பயிற்சி மிக முக்கிமானதாக அமைகிறது. உடல், மனம், உயிர் என்ற இணைப்பு சிறப்பாக இருந்தால்தான் வாழ்நாளும் நீடிக்கும்.

உடற்பயிற்சி என்பதை விட, குறிப்பிட்ட நேரம், நடந்தால் கூட நல்லதுதான் என்ற நிலைக்கு, மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், வெறுமனே நடப்பது மட்டும், முழுமையான உடல், உடல் உறுப்பு மாற்றங்களை, நலத்தை உருவாக்கி விடுவதில்லை. இதனால், உடலுக்கும், உடலுறுப்புக்கும், தனித்தனியான பயிற்சிகள் அவசியமாகிறது. பருவ வயதில் இருந்து, உடற்பயிற்சியை செய்துவர ஆரம்பித்தால், உடல், மன, உயிர் இயக்கம் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி. உடல் இல்லாமல் உணர்வு ஏது? இன்பங்கள் ஏது? உலக வாழ்க்கையும் ஏது? இன்னும் தொடரும்.

வாழ்க வளமுடன். 

-

Why Vethathiri maharishi not form as a Jeevasamati? Answer for the unwise question


வேதாத்திரி மகரிஷி ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? கேட்கும் பாமரனுக்கு பதிலும் விளக்கமும்.

உலகம் தோன்றி, ஜீவ பரிணாம எழுச்சியில், கடைசியாக பூத்த மலர்தான் ‘மனிதன் ' என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். என்றாலும் கூட, மனிதன் இப்போதைய மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. சக ஜீவராசிகளைப் போல, மிருகங்களின் நடவடிக்கை போல, அதன் செயல்களை பார்த்துத்தான் வாழ்ந்திருந்து வந்தான். ஐந்தறிவு மிருகங்கள் செய்கின்ற, 1) பிற உயிரை கொலை செய்தல், 2) பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை பறித்தல், 3) பிற ஜீவனின் உடலை உணவாக்கிக் கொள்ளுதல் ஆகிய, மனித இனத்திற்கு ஒவ்வாத குற்றங்களை செய்துவந்தான்.

எனினும், அவனுக்குள் இருக்கின்ற, தெய்வீகம், ‘இது உனக்கானது அல்ல’ என்ற விளக்கத்தை, தந்துகொண்டேதான் இருந்தது. அவனுக்குள் அறிவாக நிறைந்திருந்த, அந்த தெய்வீகம், மனித செயல்களின் விளைவுகளால், திருத்திக்கொண்டே வந்தது. அந்த விளக்கத்தை உணர்ந்த மனிதர்களில் சிலர், சிந்திக்கலானர்கள். தன் சிந்தனையில், எண்ணத்தில், சொல்லில், செயலில் திருத்தம் கொண்டு, நன்மையான, இன்பமான விளைவுகளில் மகிழ்ந்தார்கள். இயற்கையில் உள்ள, எங்குமே, எப்போதுமே நிறைந்திருக்கும் இன்பத்தையும், அதனோடு கலந்திருக்கும் தெய்வீகத்தையும் கண்டு, பிறருக்கும் வாழ வழிகாட்டினார்கள். தெய்வம் என்ற உண்மையையும் அறிந்து உணர்ந்தார்கள். அத்தகையோர், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் என்றானார்கள். 

நாம் வாழும் இத்தகைய நவீன விஞ்ஞான உலகிலும் கூட, ஆறாம் அறிவில் உயர்ந்ததாக கருதி வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனத்தினோடு, உண்மையான திருத்தம் வழங்கிட, இன்றும் இத்தகைய சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாகிக் கொண்டும், நல்ல வழிகளை அம்மனிதர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அக்காலம் முதல், இக்காலம் வரை, பாமரர் என்ற நிலைபாடுகொண்ட மனிதர்கள் உண்டு. இவர்களை பொதுவாக அறிவிலி என்று சொல்லுவது, பொருத்தமாகாது. அறிவு எல்லோருக்கும் உண்டு. அதில் மாற்றுகருத்து இல்லை. எனவே அறிவு இல்லாதவர் என்று சொல்லுவது தவறு. அந்த அறிவை பயன்படுத்த தெரியாதவர், பயன்படுத்த வழிகள் கற்றுக்கொள்ளாதவர். அந்த மாற்றத்திற்கு ஆர்வமில்லாதவர் என்று சொல்லலாம். எனவே இவர்களை பொதுவாக ‘பாமரன்’ என்று சொல்லுவது சிறப்பு.

இத்தகைய பாமரன் அன்றும் இருந்தான், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உங்களோடும் உண்டு. இவர்களை எப்படி அடையாளம் கொள்வது? அவனின், அறிவார்ந்த நிலை என்று நினைத்துக்கொண்டு, நம்மிடம் கேட்கும் கேள்விகளால் அடையாளம் காணலாம். உங்களிடமும் அப்படி சில கேள்விகளை கேட்பவர்களை அடையாளம் காண்பது எளிதுதான். இந்த பாமரர்கள் மேல் அக்கறை கொண்டு, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகியோர், பாமரர்களுக்கு விளக்கங்கள் சொல்லி, தெய்வீகத்தையும், மனித பிறப்பின் மூலத்தையும் பாடம் நடத்தினார்கள். என்றாலும் அது சிலவகையில்தான் உதவியது. அதனால், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தங்களுடைய, வாழ்நாளுக்குப் பிறகும், இவர்களுக்கு உதவலாம் என்று, தன் உயிரை தன் உடலிலேயே சுவரவிட்டு, உடலை விட்டு உயிர்பிரியாத நிலையில், தன் மூச்சை, வாழ்நாளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் உடலை சமாதியாக அமைத்து, அதன் மேலாக, ஆலயங்கள் எழுப்பி, ஜீவசமாதி என்றாக்கினார்கள். 

இத்தகைய ஜீவசமாதி, குடமுழுக்கு தேவையில்லாத, சக்தியாற்றல் நிரம்பியது ஆகும். வந்து வணங்கிச் செல்லும் அன்பர்களுக்கு, குறிப்பாக ‘பாமரர்களுக்கு’ உதவிடும். ஆனால் காலம் மாறியது. மக்களின் தரம் உயர்ந்தது. கல்வி எல்லோருக்கும் கிடைத்தது. ஆறாம் அறிவின் அற்புதம் விளங்கியது. மருத்துவம், விஞ்ஞானம், வானியல் மிக உயர்ந்தது. மனிதனின் வாழ்நாளும் உயர்ந்தது. ஆனால் பாமரன் பாமரனாகவே வந்துகொண்டு இருக்கிறானே?! ஒரு குரங்கிடம், ஒரு நிலக்கடலையை கொடுத்தால், வாங்கிக்கொண்டு, அதை இரண்டாக உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை உண்ணும் அனுபவ அறிவு அதற்கு இருக்கிறது தெரியுமா? ஆனால் இந்த பாமரன்?!



இக்காலத்திலும், உண்மை அறியாமலும், விளங்கிக் கொள்ளாமலும், அதை ஆராயாமலும், சிந்திக்காமலும், இன்னமும் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? உங்களை உயர்த்திடத்தான், வேதாத்திரியத்தின் வழியாக, மனவளக்கலை பயிற்சிகளை, முழுமையாக தந்துவிட்டாரே? அதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா? அதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாடமும் பயிற்சியும் வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

மனவளக்கலை பாடங்களை புரியாதவர், அதை கற்றும் செய்திட ஆர்வமில்லாதவர், தன்னை உயர்த்திக்கொள்ள விருப்பமில்லாதவர், சுலபமாக தன்னை, பிறரால் உயர்த்திக்கொள்ள பேராசை கொண்டவர், குறுக்குவழியை தேடக்கூடிய இவர்கள்தான், தன்னை ‘பாமரன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு  சித்தராக, மகானாக, ஞானியாக உங்களை நீங்களே உயர்த்திட, வழிகளை தந்த வேதாத்திரி மகரிஷியையே, ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? அப்படியானால் நீங்கள் பாமரன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    உங்களுக்காகவே, உங்களின் உயர்வுக்காகவே தன் வாழ்நாளெல்லாம் செயல்பட்டு, தன்னை வான்காந்தத்தில் நிரப்பிக்கொண்டு, இன்னமும் நம்மோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ‘குரு மகானை’ ஒரு சமாதிக்குள் அடைத்துவைக்க நினைக்கிறீர்களே? நியாயம் தானா பாமரனே?!

வாழ்க வளமுடன்.

-


Is Simplified Exercise Suitable for You? Truth Explanation


 எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? உண்மை விளக்கம்.


        இந்த கட்டுரையின் நோக்கம், எளியமுறை உடற்பயிற்சியின் நோக்கத்தை தவறாக மதிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும்.

ஒரு மனிதன் என்று எடுத்து ஆராய்ந்தால், எல்லோரும் ஒரே மாதியான அமைப்பு என்று பொதுவாக கருதினாலும், உடலின் இயக்கம், உடலுறுப்பின் இயக்கம், மனம் செயல்பாடு, உயிரின் தன்மை ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் கொண்டிருக்கிறான். மேலும், ஆண், பெண் என்ற பேதமும், அவர்களுக்குள் இருக்கும் உடறுலுறுப்பு மாறுபாடுகளும் அவர்களை பாதிக்கின்றன. இதில் மூன்றாம் பாலினமும் உண்டுதான்.

இதனாலேயே, ஒரே ஒரு பயிற்சி எல்லோருக்கும் பொருந்துமா? என்ற கேள்வி எழுவது உண்மைதான். ஆனால், தற்போதைய உலகம், எல்லோருக்கும் பொதுவான உடலமைப்பையும், உடலுறுப்பும் கொண்டதாகவே கருதி, எந்த உடல் நல குறைபாடு வந்தாலும், இதுதான் தீர்வு என்று பயிற்சிகளும், சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில், ஏதோ சரியாகிவிடுவது போல இருந்தாலும், பலவிதமான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் பழைய அதே நிலைக்கோ, அதைவிட மோசமான நிலைக்கோ போய்விடக்கூடும். இதை நாம், நம்முடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறோம். உண்மைதானே?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர், தன் திருக்குறளில், ‘நோய் நாடி, நோய் முதல்நாடி’ என்று ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தானே? ஆனால் அக்கால மருத்துவ முறைகளும், கைவிடப்பட்டுவிட்டன. ஒரு நோயுற்ற மனிதனின் நாடி பார்த்தே, குறித்த மருந்து தரும், மருத்துவர்களும், மருந்துகளும் இப்போதில்லை, இருந்தாலும்கூட ஏதோ ஒரு சிலர்தான். அதில் நம் மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை. வீட்டிலேயே வருமுன் காக்கும் ‘பாட்டி வைத்தியமும்’ இப்போதில்லை. சொல்லப்போனால் பாட்டியே வீட்டில் இல்லை.

இதை எழுபதாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த, வேதாத்திரி மகரிஷி அவர்கள், திருத்தமான வாழ்வியலுக்கு உதவ எண்ணம் கொண்டிருந்தார் எனலாம். தன்னுடைய குரு, வைத்திய பூபதி கிருஷ்ணாராவ் வழியில், ஹோமியோபதி கற்றுத்தேர்ந்து, அதில் பட்டயமும் பெற்று உயர்ந்தார். மருந்துகளும் தயாரித்து வழங்கி சேவை செய்துவந்தார். தன் தொடர்ச்சியாகவே, தவமும் கற்று, அதன் முறையான பயிற்சியை, பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுக்கொண்டார். தன் ஆராய்ச்சியின் வழியாகவும், பிறரின் அனுபவத்தின் வழியாகவும், உலக மக்கள் சமுதாய வாழ்வில் கலந்திருக்கும் செயல்கள் வழியாகவும், ஒரு முழுமையான, உடற்பயிற்சியாகவே, தன்னுடைய வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்தார்.

உலகில் இருக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது என்றில்லாமல், உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் வளம் தருகின்ற, ஊக்கமும், ஊட்டமும் தருகின்ற பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடலை எந்தவகையிலும், வருத்தாமல், வலி உண்டாக்காமல், மிக எளிமையாக, பதிநான்கு வயதுமுதல் உடல் அசைவுள்ள எந்த வயதினரும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிகளை செய்து பயன்பெறலாம். இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், வருமுன் காப்பதும், இருப்பதை சரி செய்து குறைப்பதும் ஆகும். நோய் தீர்வு என்பது தொடர் பயிற்சிகளாலும், மருந்துகளாலும் மட்டுமே அமையும்.

இப்போது கேள்வியின் முக்கிய பகுதிக்கு வருவோம். எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? என்று கேட்டால், நம்முடைய பெரும்பாலான அன்பர்களின் பதில் ஆம் என்பதுதான். கற்றுக்கொண்டேன், தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் பலனை அனுபவிக்கிறேன் என்றுதான் கருத்திடுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான, உடலமைப்பும், காற்றோட்டமும், வெப்ப ஓட்டமும், ரத்த வோட்டமும் இருக்கிறது அல்லவா? வயது வித்தியாசமும், உடலுறுப்பின் இயல்பு, இயக்க வித்தியாசமும் இருக்கிறது. உறுப்புக்களின் இயற்கை நிலை மாறாதிருப்பதும், நோய் தாக்கம் பெற்றிருப்பதும் உண்டுதானே? இந்த அடிப்படையில், ஒரே தீர்வு என்று, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது சரிதானா?

இதற்கு வழி என்ன? வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொள்வது நல்லதுதான் எனினும், உங்கள் உடல் எப்படி? எந்த நிலையில் இருக்கிறது? நோய் தாக்கம் உள்ளதா? பயிற்சியால் குணமாகுமா? மருந்துகள், சிகிச்சை அவசியமா? என்ற ஆய்வும் அதன் முடிவும் அவசியமாகிறது. உடலில் ஏற்கனவே உள்ள தொந்தரவோடு, எந்த பயிற்சியை செய்தாலும். அது உடலுக்கு பொருந்தாது. இதையும் நீங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். எனவே, உங்களுக்கு தேவை, நல்ல ஆலோசனை. அதை தகுந்த மருத்துவரிடமோ, ஆசிரியரிடமோ பெற்றுக்கொண்டு, அதற்கான தீர்வையும் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது மிகுந்த பலன் அளிக்கும் என்பது என்னுடைய முடிவாகும். உடனே இதற்கு மாற்றுக்கருத்து, உங்களுக்குள் எழலாம். ஆனால், சில அனுபவம் மற்றும் ஆய்வுகளின் வழியாகவே இந்த விளக்கங்களை தருகிறேன் என்பதே உண்மை.

வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொண்டு செய்து வாருங்கள், அதில் எந்த குறையுமே இல்லை. ஆனால். உங்கள் உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தை கவனியுங்கள். அதில் பிரச்சனை எழுந்தால், உடல் தொந்தரவு எழுந்தால், நீங்கள் செய்கின்ற ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி’ குறை கொண்டது என்று தீர்மானித்து விடக்கூடாது அல்லவா? ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி செய்தும் கூட, எனக்கு இந்த உடல் பிரச்சனை, மன பிரச்சனை தீரவில்லையே’ என்று நீங்கள் புலம்பத்தயாரானால், அது சரியான நிலைபாடு ஆகுமா? இப்போது நீங்கள் எதை தொடருவீர்கள்? எதை கைவிடுவீர்கள்? கேள்விகள் சரியானது தானா? உங்கள் அனுபவம் என்ன? என்பதை பின்னூட்டத்தில் தரலாம், வரவேற்கிறேன்.


வாழ்க வளமுடன்.

-