CJ for You

What is the states of the people, who dislike and opponent the Bhakti and Yoga?


பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாதவர்கள், அதை எதிர்ப்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிலை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாதவர்கள், அதை எதிர்ப்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிலை என்ன?

பதில்:
மிக விரிவாகவே பதில் தரக்கூடிய கேள்வி, எனினும் சுருக்கமாகவே இங்கு காண்போம். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும், அவரவர் அளவில் அனுபவங்கள் உண்டு. அந்த அனுபவம், தங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றாலும், எதிர்பார்பதாலும் வரும். முக்கியமாக, ஒரு விளைவு என்பது தானாக வருவது என்பது இல்லை. இந்த இயற்கை மட்டுமே தானாக எதேனும் ஒரு விளைவை நொடிகொருதரம் தந்துகொண்டே இருக்கும்.

எந்த ஒரு மனிதனும், இன்னொரு மனிதனுக்கு துன்பம் நேரடியாக தருவதில்லை. ஒரு தலைமை, அதிகாரம், ஆளுமை, நீதி, சட்டம் என்ற உலக அரசு, அலுவலகம், பொது வாழ்வில் முறை என்ற வகையில்தான், நம்மை ஆளுமை செய்வார்கள். அதில்கூட துன்பம் என்பது, நாம் மீறினால்தான் வரும். மற்றபடி அது எல்லா மக்களுக்கும் பொதுவானதுதானே?!

ஒரு மனிதன், பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாது இருந்தாலும், அதை எதிர்த்தாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களுக்கு துன்பம் வந்துவிடுவதில்லை. இயற்கையும் தனியாக தண்டிப்பதில்லை. ஆனால், இவைகளுக்கு எதிராக, இதை கடைபிடிப்பவர்களுக்கு எதிராக, தன் கருத்தை திணிக்கும் பொழுதான் அது முறையற்ற செயலாக மாறுகிறது. இங்கேதான் இருபக்கமும் துன்பம் எழுகிறது. மேலும், எதிரான நிலையுள்ளவர்கள், நேர்மையாக, இயல்பாக, இயற்கைக்கு மாறான கருத்து இல்லாது செயலாற்றவேண்டியது அவசியமாகிறது. அதை மீறினால் அவர்களுக்கு அவர்களாலேயே துன்பம் எழுந்துவிடும்.

என்றாலும், பக்தியில் உள்ளவர்கள் தன்னை, தனக்கு மேலான ஒரு சக்தியிடம் தன்னை ஒப்படைத்து சரணாகதி அடைகிறார்கள். யோகத்தில் உள்ளவர்கள் தன்னையே உள் கடந்து, அந்த சக்தி எது என்பதை அறிந்து தன்னிலே முழுமை அடைகிறார்கள். அவர்களின் மனம் விரிந்த நிலையில், உலக விசயங்களில் இருந்து விடுபட்டு, உண்மை இன்பம், பேரின்பம் பெற்று அமைதியும், அதன் வழியே சாந்தியும் பெறுகிறது. எனவே, இந்த இரண்டிலும், மனிதனாக பிறந்த பிறவியின் கடன் தீர்க்கப்படுகிறது. 

எதிர்தரப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அதனால், இந்த இயற்கை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துகொண்டே இருக்கும். உள்முகமாக வருத்தங்களையும், துன்பங்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். எப்படியாவது, எக்காலத்திலாவது உண்மை உணர்க என்று வலியுறுத்திக் கொண்டே வரும். ஆனால் இது எதையும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். உதாசீனமும் செய்வார்கள். இதனால் அவர்களின் பிறவி நீண்டுகொண்டே போகும். கருத்தொடரின் காலமும் கூடும். சரி, அது அவர்களின் கவலையும், நிலையும் தானே?! அவர்களுக்கு இயற்கை கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கும். நாம் கடந்து செல்வோம்!
வாழ்க வளமுடன்.
-

What is called by Mahaakash, Boothaakash and Siddhaakash?


மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


பதில்:

மெய்ப்பொருளாக உள்ள, முழுமுதற்பொருளையும், அதன் பரிணாமத்தையும் விளக்கும் வகையில் சித்தர்கள் நமக்குத்தந்த நிலைகள்தான் இந்த மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்பதாகும். இறை, இறையாற்றல், மெய்ப்பொருள், வெட்டவெளி, சுத்தவெளி என்று பலவாறாக உயர்ந்த கருத்தில், மதிப்புத்தந்து அழைக்கக்கூடிய ஒன்றை, முழுமுதற்பொருளை, எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், காத்து, அன்பும், கருணையோடும் இருந்துவரக்கூடியைத்தான், கட+உள்=கடவுள் என்று அழைத்து, யோகத்தின் வழியாக அறியவும் முடியும் என்று வகை செய்தனர் சித்தர்கள்.

எவ்வகையிலும் உருவமில்லா மெய்யை, எளியவர்கள் உணரவே கருத்துருவாக இருப்பதை, உருவ வழிபாடாக சிவம் என்பதை சிவனாக அமைத்தார்கள், பின்னாளில் வந்தோர் சிவத்தின் இயக்கத்தை நாராயணன் என்று அமைத்தார்கள். பின்னாளிலும், இந்நாளிலும் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகாசம் என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுவது, மெய்ப்பொருளின் பரிணாமத்தில் வந்த காட்சியாக வந்த, எழுந்த முதற்பொருளாகும். இந்த ஆகாசம் வடமொழி சொல்லாகும். தமிழில் இதை விண் என்று அழைக்கிறோம். இப்படி ஆகாசம் என்ற ஒன்றை முந்தைய நிலையை, பரிணாமத்தில் எழுச்சி பெறாமல், மாற்றம் அடையாமல், உள்ளடக்கமாக, மெய்ப்பொருளாகவே இருந்த நிலையைத்தான் சித்தர்கள் ‘மகாகாசம்’ என்று அழைத்தனர். மகா என்றால் மிகப்பெரிய, அளவிட முடியாத, விரித்துச் சொல்லமுடியாத என்று அர்த்தமாகிறது.

அடுத்து வரும் ‘பூதாகாசம்’ என்பது மெப்பொருள், தன்னிறுக்கத்தால், நொறுங்கி, எழுச்சிபெற்று, பரமாணுவாக தோன்றி, அந்த பரமாணுவின் கூட்டாக அமைந்த ஆகாசம் என்ற பொருளாக, முதல் பஞ்சபூத (பௌதீக) தோற்றமாக மலர்ந்ததை சொல்லுவதாகும். இந்த ஆகாசம் என்பதற்கு பிறகுதான், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற மற்ற நான்கான, காற்று, வெப்பம், நீர், மண் என்ற் பஞ்சபூத தோற்றங்களாக வந்தது. இந்த ஐந்தும் கூட்டாகவும், இவற்றில் சில பல கூட்டாக இணைந்து உருவான பிரபஞ்சப் பொருள்கள், இயற்கைப் பொருட்கள் அனைத்தும் ‘பூதாகாசம்’ என்று குறிப்பிடுகின்றனர். பஞ்ச பூதங்களை, அதனால் ஆன ஆகாசம் என்ற தோற்ற முதற்பொருளை உள்ளடக்கியது என்று அர்த்தமாகிறது.

அடுத்ததாக வரும் ‘சித்தாகாசம்’ என்பது உயிராக மாறிய ஆகாசம் என்ற கருத்தில் சொல்லப்படுவதாகும். பூதாகாசத்தின் பரிணாமத்தில் இருந்து, அதன் தன்மாற்றமாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து உணர்வை அறியும் வகையில் அடுத்தாக எழுந்ததே ‘மனம்’ ஆகும், இதை உள்ளடக்கமாக, மனம் என்பதைக் கொண்டு மலர்ந்தது ஜீவன்கள் ஆகும், இவை ஓர் அறிவுமுதல், ஆறறிவு மனிதன் வரை முழுமையடைந்து நிற்பதாகும். மனம் என்பது, ஆகாசத்தின் படர்க்கை நிலையே ஆகும். மனம் அதன் ஆழ்நிலையில் கருமையமாகவும் அமைகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சித்து என்றால் உயிர் என்றும் பொருளாகும். உயிராக மாறிய ஆகாசம் என்ற பொருளில்தான் ‘சித்தாகாசம்’ என்று அழைத்தனர். இந்த சித்து என்று உயிரை உணர்ந்தால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்! 

வாழ்க வளமுடன்.

Why some of disease and problem not cure by the simplified exercise?


சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


பதில்:

அன்பரே, உங்களுடைய வயது தெரியவில்லை, எப்போது முதல், இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள்? ஏற்கனவே உங்களுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள், நோய்கள் இருந்தன? எந்தவகையான மருந்துகள் எடுத்துக்கொண்டீர்கள்? சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், யுனானி, அலோபதி இப்படி எந்தப் பிரிவு மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்று கடைபிடித்து வருகிறீர்கள்? அதன் விளைவு, மாற்றம் எப்படி இருக்கிறது? இருந்தது? மருத்துவம் தொடர்கிறதா? நிறுத்திவிட்டீர்களா? 

நீங்கள் தினமும் வேதாத்திரியம் வழங்கும் எளியமுறை உடற்பயிற்சி செய்து வரவேண்டும் என்பதே அதன் பலன் தருவதின் சிறப்பாகும்.  அப்படி அதனை தொடர்ந்து வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்களா? என்பதான இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. அதை நீங்களே ஒரு ஆராய்ச்சி குறிப்பாக எழுதி தயாரித்து, நேரடியாக ஆசிரியரிடம் கேட்டும் உண்மை அறியமுடியும்.

நிச்சயமாக, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் வழியாக பலன்கள் செய்துவருவதால் மட்டுமே கிடைக்கும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதை, எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்த பொழுது, அந்தந்த பயிற்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து, செய்யச்சொல்லி, மாற்றத்தை கணித்து, தானும் செய்து பார்த்து விளைவுகளை கண்டு, பயிற்சியிலும் தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், 96 வயது வரையும் இதை கடைபிடித்தார். தன்னோடு இருக்கும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டும் திருத்தி அமைத்தும்  கொண்டார்.

பொதுவாகவே இளமைக் காலத்திலும், பருவம் வந்த வயதுகளிலும், மனமும், உடலும் மிக மிக உற்சாகமாக இருக்கும். உறக்கமும் மிகச்சரியாக இருக்கும். இருபது வயதை கடந்து, உலக கடமைகளில் நம்மை இணைத்துக்கொண்டு பயணிக்கும் பொழுது, உணவாலும், அதிக உழைப்பாலும், தூக்கமின்மையாலும், அன்றாட இன்ப நுகர்வுகளாலும், ஓயாத சிந்தனையாலும் நம்முடைய உடலும், மனமும் கெடுகின்றது. தானாகவே நோயை வரவழைத்துக் கொள்கிறோம். மேலும் வித்துவழியாக பரம்பரை நோய்களும் நம்மிடம் எட்டிப்பார்க்கிறது. நம்மைச் சுற்றியுள்ள சுழல், கிரகங்களின் அலைத்தாக்கம், தொற்று நோய்கள் வழியாகவும் பாதிக்கப்படுவோம்.

இவ்வளவுக்கும், துணையாக நிற்கும் தீர்வு என்றால், பருவ வயதில் வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டால் சிறப்பு. உடல் உபாதை, வலி, பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் உருவாகி நம்மை வருத்தி, அதனால் மருத்துவ ஆலோசனை பெற்று, மருந்துகள் எடுத்துகொண்டிருக்கும் நிலையில், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறு. வருமுன் காப்பதும், வந்ததை ஓரளவில் தடுத்துக் கொள்வதுமே நன்று. இடைப்பட்ட காலத்தில், 30, 40 வயதுகளில், வயோதிகத்தில் நம்மால் இதைத்தான் பெறமுடியுமே தவிர, முற்றாக நோயை தீர்க்க முடியாது. ‘குணப்படுத்துவதை விடவும், தடுப்பதே சிறப்பு’ என்று மருத்துவ சொல் இருக்கிறது. 

உண்மையாக, நீங்கள் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வாருங்கள். உங்களுக்கான உடல் உபாதை, வலி, பிரச்சனை, நோய்க்கான மருந்து என்னவோ அதையும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை பெறுவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

Why can not practice meditation at home and is not satisfied too?


எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?


பதில்:

இன்றைய காலகட்ட விஞ்ஞான வளர்ச்சியில், அதன் முன்னேற்றங்களை நாம் எல்லோருமே இங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவழியாக வந்த பொருட்கள், வாகனங்கள் என்றும் நம்மிடையே குவிந்து கிடக்கிறது. இன்னமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதனுடைய தேவைகளும் நமக்கு வேண்டியதாகவும் உள்ளது. இவ்வளவுக்கு இடையிலும் நாம், நம்முடைய வாழ்க்கையை அமைத்து அதை திறமாக நடத்தவேண்டியுள்ளது, அதோடு அதில் விளையக்கூடிய பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும் உள்முக தேடலுக்கான தவமும் செய்ய விரும்புகிறோம். தடையாகிறது.

உதாரணமாக, அதிகாலை எழுந்து, தவம் செய்ய அமர்ந்துவீட்டீர்கள். கண்கள் மூடி சில நொடிகளில், உங்கள் கைபேசி அழைக்கிறது. அதை கவனம் செலுத்தாமல் தவம் செய்கிறீர்கள். இப்போது அழைப்பு நின்றுவிட்டது. ஆனால் மறுபடி அழைக்கிறது. இப்போது நாம் அதை எடுப்பதா? விடுப்பதா? குழப்பம்தானே வரும்?

இதுபோல, வண்டி, வாகனங்களின் ஒலி, இரைச்சல், சாலை வியாபார குரல்கள், எங்கேயோ இருந்து குரைக்கும் நாய்கள் அதன் சண்டை ஒலி, உங்கள் வீட்டில் சமையலையில் இருந்து, தீடீரென்று வரும் ஒலிகள். உங்கள் குழந்தைகளின், அவர்களுக்கிடையேயான பிரச்சனையில் அடிதடி சண்டை ஒலிகள். அழுகைக் குரல், எதிர்பாரமல், உங்கள் மடியில் வந்து உட்காரும், குழந்தை, செல்லப்பிராணிகள் என்று இப்படி இன்னும் பல உண்டு.  இவையெல்லாம் கடந்து, அமைதியாக தவம் இயற்றுவது என்பது கொஞ்சம் கடினமே!

உங்களின் தவத்திற்கான நேரத்தை, அதிகாலை 04:30 முதல் 05:30 மணிக்குள்ளாக முடித்துவிட முடிந்தால் மிக நல்லது. வாய்ப்பிருந்தால், அருகில் உள்ள, தவ மையத்திற்கு சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அதற்கென்று உங்கள் வேலைகளை, கடமைகளை கெடுத்துக்கொள்ளாது இருக்கவும் வேண்டும். உங்களை வருத்திக் கொள்ளவும் கூடாது. இதற்காக தனிமையான இடம் தேர்வு செய்வது கடினம், அது நல்லதும் இல்லை. கோவில், வழிபாடு தளங்களில் செய்யலாம் என்றாலும் அதுவும் பிரச்சனையாகலாம்.

உண்மையிலேயே உங்கள் இல்லம் போன்ற அமைதியான, பாதுகாப்பான, இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதே பொதுவானது.

இவ்வளவு பிரச்சனைகளையும் ஏற்று, கடந்து தவம் செய்தாலும், மனம் அதில் நிலைப்பது மிக கடினம். ஏனென்றால், தவத்தின் வழியாக, மனதை அதன் இயல்புக்கு திருப்ப முயற்சிக்கிறோம். ஆனால் சூழலின் காரணமாக அது மேலும் கொந்தளிக்கிறது என்பதால் அந்த தவம் உங்களுக்கு உதவாது. அதனால்தான் முன்பைவிடவும் குழப்பமாகிறது. திருப்தி அளிக்காது. நிம்மதியற்றும் போகிறது. இந்த தவம் இயற்ற தடையாக இருப்பது எல்லாம் என்ன? என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள். எதையெல்லாம், எவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்யுங்கள். அதை சரி செய்யுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்றால், தவம் செய்து உங்களை, உங்கள் இயல்பை கெடுத்துக்கொள்ளாமல், தவத்தையே கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விடுங்கள். அதுதான் நல்லது. சூழல் சரியானால் பிறகு ஆரம்பியுங்கள். தவறில்லை!

வாழ்க வளமுடன்.

-

Why do you have frequent disagreements, quarrels with your spouse?


வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான், வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை திருமணம் என்ற பந்தத்தின் வழியாக இல்லறத்தில் வாழ்ந்துவரும் எல்லோரும் அனுபத்திருப்பார்கள், அனுபவத்திக் கொண்டும் இருப்பார்கள். இப்போது காதல் வசப்பட்டு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உயர்ந்த வசனம் பேசுபவர்களும் பின்னாளில், கணவன் மனைவி என்று ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது, இப்போது நீங்கள் கேட்பதைப்போல யாரிடமாவது கேட்பார்கள்.

இந்த உலக உறவுகளிலேயே, மிக உயர்ந்தது, மதிப்புவாய்ந்தது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவுமுறை எது தெரியுமா? கணவன், மனைவி என்ற உறவுதான். மேலும், வாழ்நாள் முழுவதும் தொடர்க்கூடியதும் இந்த உறவுதான். நம் இந்திய வாழ்வியல் கலாச்சாரம், நீண்டநாள் தொடரும் இல்லற வாழ்க்கையை அமைத்திருக்கிறது. தனித்தனியாக பிறந்து வளரும் ஒரு ஆணும், பெண்ணும், உலகமும், நீதி அமைப்பும் ஏற்ற வயதில், திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவி என்ற ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்வை தொடங்குகின்றனர். அதன்வாழ்க்கை வழியாக, குழந்தைகளை வருங்கால சந்ததியாக பெற்றெடுத்து ஆளாக்குகின்றனர். ஆனால், பெருபாலான உலக நாடுகளில், ஒரே திருமண நிகழ்வும், ஒரே கணவன், ஒரே மனைவி என்ற நிலையும், மாறிக்கொண்டே இருக்கிறது. திருமணமும், திருமண முறிவும் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம் நீங்கள் இங்கே கேட்ட, அதே கருத்துவேறுபாடு, சண்டை, சச்சரவு தான். வேறுசில காரணங்களும் இதனுள்ளே அடங்கிவிடவும் கூடும்.

சரிங்க ஐயா, இதற்கு காரணம் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா?

இதோ, காதலிக்கும் பொழுது விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் தொடர்கிறது. அதுபோலவே, முன்பின் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பெரியவர்களின் ஆலோசனையில் திருமணம் வழியாக இல்லறத்தை ஆரம்பிக்கும் காலத்தில்  விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் சில காலம் தொடர்கிறது. காதலிப்பவர்களுக்கு திருமணத்திற்குப் பின்பும், திருமணமானவர்களுக்கு சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தும், இந்த கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் அடிக்கடி வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கணவன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான். அதுபோலவே மனைவி கணவன் மேல் அன்பும், பாசமும், அக்கறையும் தான்.

அமைதியாக, சிந்தித்துப் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கு புரியவரும். இதை எப்படி தீர்க்கலாம்? யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ? இருக்கிறது என்று கருதுகிறாரோ? அவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழக வேண்டும். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், தன் வாழ்வில் பெற்ற அனுபவமாக நமக்கும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

What is the meaning of Layman?


‘பாமரன்’ என்றால் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ‘பாமரன்’ என்றால் என்ன?

பதில்:
பாமரம் என்பதுதான் பாமரன் ஆனது. பாய் + மரம் = பாமரம். காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது பாய்மரம். அதுபோல் குறிக்கோள் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் ‘பாமரன்’ ஆவான். அறிவின் வழியில் செல்லாதவன்; அறிவற்றவன் என்று பொருள்.

மேலும் விளக்கமாக,
இத்தகைய பாமரன், வாழ்வில் நோக்கம் ஏதுமின்றி, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வதற்கு தயாராவான். அவன் தன் விருப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் செயல்கள் செய்துவருவான். அந்த செயலின் விளைவில், தனக்கு நன்மை கிடப்பதாக கருதினாலும் கூட, தனக்கும், பிறருக்கும், இந்த இயற்கைக்கும் பொருந்தாத விளைவை காலத்தால் உருவாக்கிக் கொள்கிறான்.

அதுவே பின்னாளில் அவனுக்கு கர்மா என்ற வினைப்பதிவாக வெளிவந்து, இன்னும் துன்பத்திலும் சிக்கலிலும் வருந்த வைத்துவிடும்!

இந்த பாமரன், ஏற்கனவே தன்னுடைய கர்ம வினைப்பதிவுகளின் தாக்கத்தால்தான், குறிக்கோள் இல்லாத, மனம்போன போக்கில் செல்ல தயாராகின்றான் என்பதை எளிதில் நாம் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் விளக்கம் பெறாத பாமரன், விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். இதனால் அவனுடைய பிறவியும் வீணாகப் போய்விட வாய்ப்புள்ளது. 

அவனின் வழியாக வரும் வாரீசுகளும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்ற வகையிலும் இது தொடரும். என்றாலும் கூட ஏதேனும் ஒருவழியில், இறையாற்றல் ஒரு பாடத்தை நடத்தி திசை திருப்பும் என்பது உறுதி. அந்த பாடத்தை ஏற்று, வாழ்க்கையில் திருத்தம் அமைத்துக்கொண்டால், பாமரன் என்ற நிலையில் இருந்து விலகி, நன்மையை நோக்கியும், பிறவி உண்மையையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். இல்லையே திசையற்ற, நோக்கமற்ற வாழ்க்கைபயணம் நீண்டகாலம் தொடரவே செய்யும்.
வாழ்க வளமுடன்.

Will anyone give up domesticity, the world, and the earnings in order to know the duty of birth?


பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?


பதில்:

பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா? ஆமாம், சரியான கேள்விதான். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் கேட்கிறார். எதற்காக விடவேண்டும்? உங்கள் இல்லறத்தை, உலகை, சம்பாத்தியதை விட்டு விலக வேண்டிய அவசியம் என்ன? அப்படி விட்டுவிட்டால் எப்படி இந்த உலகில் வாழ்வீர்கள்? யாரையாவது அண்டிப்பிழைத்தால் அது மிக கடினம் அல்லவா? அப்படியாக யாரேனும் நமக்கு வாழ்நாள் முழுதும் உதவமுடியுமா? என்று தான் கேள்விகளை அடுக்குகிறார்.

முதலில், உங்களை இதையெல்லாம் விட்டுவிட்டுத்தான், பிறவிக் கடமையை அறியவேண்டும் என்று சொன்னவர் யார்? அப்படி அறிவுரை சொல்லி உங்களை திசை திருப்பிவிட்டது யார்? மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? உங்களுக்கும் யோகசாதனைக்கும் உள்ள தூரத்தை அதிகப்படுத்தியது யார்? இப்படியாக சொல்லி, உங்களின் இந்த பிறப்பை, உலகவாழ்வை வீண் செய்ய முயற்சித்தது யார்?

பிறவிக் கடமை என்பது, ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டு, அதற்கான உண்மையை அறிந்து கொண்டு வாழ்வதுதான். இந்த ஆராய்ச்சிக்கும், அறிதலுக்கும் தடையாக, இல்லறம், உலகம், சம்பாத்தியம் தடையாக இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் இனியாவது விளக்கம் பெற்றவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

யோகம் என்பது, ஓர் வழி ஆகும். அறம் என்ற இயற்கைக்கு முரண்படாத நிலையில், விளக்கத்தில், விழிப்புணர்வில் வாழ்வதற்கான கற்றுத்தேர்தல், ஒரு பாடமும், பயிற்சி முறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு வெறுமனே பயிற்சி என்பது இல்லாமல், குண்டலினி எனும் உயிராற்றலை அறிந்து உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. இதில் எந்த குழப்பமோ, தடையோ, பிரச்சனையோ இல்லவே இல்லை.

நாம் வாழும் இந்த உலகில், பெரும்பாலோர் இன்பத்தை நுகர்வதற்கு பதிலாக, இன்பத்தோடு துன்பத்தையும், இன்னும் பலப்பல பிரச்சனைகளையும்தான் சுமந்துகொண்டு, தீர்க்க வழியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியான மனிதர்களுக்கு உதவுவதுதான் யோகம் ஆகும். எப்படியும், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையிலேயே வாழ்ந்து வாருங்கள். காலம் உங்களுக்கு உதவும்.

வாழ்க வளமுடன்.

-