CJ for You

How we get extreme feel in life bond and why called is as eroticism


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடலுறவின் பொழுது அதிக இன்பம் எழுவது ஏன்? ஆனாலும் அதை சிற்றின்பம் என்று சொல்லுவது ஏன்?


பதில்:

இந்தக்கேள்வி, எல்லோருக்கும் பயன்பெறும் பதிலை பெற்றுத்தரக்கூடிய கேள்வி, மனிதவாழ்வின் தொடக்கமே, பாலுறவில்தானே ஆரம்பிக்கிறது. ஆணும்  பெண்ணும் இணைந்துதான் ஒரு புதிய உயிரை உருவாக்ககூடிய தேவையை, இந்த இயற்கையும், தெய்வீகமும் ஏற்படுத்தி, பாதுகாத்து முழுமையாக்கியும் உள்ளது. இந்த பாலுறவு, அதன்வழியான புதிய உயிரனம் என்ற பண்பு, ஈர் அறிவு பரிணாமத்தில் தொடங்கிவிடுவதாக, விஞ்ஞான அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், தன்னுடைய பருவ வயதில் ஏற்படும் பாலுறவு ஆர்வம் இயல்பானதே, இயற்கையானதே அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாம் வாழும் உலகில், சமூக அமைப்பில், ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அளவுமுறை, வயது, வழிகள், சட்டம், விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியநாட்டில் பருவ வயது என்பது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என்றும் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆணுக்கு 14 வயதிலும், பெண்ணுக்கு 10 முதல் 14 வரையிலான காலத்தில் பருவ தூண்டலும், அதன் உயர்வும் கிடைத்துவிடுகிறது.

உண்மையாகவே இந்த 10 முதல் 14 வயதில், பாலுறவு குறித்த விளக்கமும், அதன் விளைவும், அதை சமாளிக்கக் கூடிய தகுதியும் இருக்குமா என்றால் இல்லை. அதனால், இக்கால கட்டத்தில் பெரியவர்கள் / பெறோர்களின் / அறிஞர்களின் உதவியும், அக்கறையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. இல்லையேல், பருவ வயது ஆணும் பெண்ணும் பாலுறவு இன்பத்தில் ஆழ்ந்து, அதன் தாக்கத்தில் தங்கள் வாழ்வையும், எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்ணுக்கு அந்த வயதில், குழந்தை உருவாகிவிடுமானால், அது மிகப்பெரும் சமுதாய கேடாக மாறிவிடும். அந்த வயதில் அவள் குழந்தையை பெற்றெடுக்கவும் வலிமையற்று இருப்பாள், வளர்க்கவும் முடியாது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, திருமணம் என்ற பந்தம் அமைத்து, இவளுக்கு இவன், இவனுக்கு இவள் என்று ஒப்புதலையும், சமூகம் ஏற்கும் நிலையையும், இவனின், இவளின் குழந்தை இது என்ற நிலைபாட்டையும் உருவாக்கிக் தருகின்றனர். இதனால்தான், பாலுறவை, தகுந்த வயதுவரை காத்திருந்து பெறவேண்டும் என்ற நிலையில்தான் அதை ‘சிற்றின்பம்’ என்று வாழ்வோர், அறிஞர்கள் சொல்லிவருகின்றனர், 

மேலும் யோகத்தில் இருப்பவர்களும் ‘சிற்றின்பம்’ என்று சொல்லுவது வழக்கம். அதற்கான காரணம், யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுணர்வு பெற்றால், அதுதான் பேரின்பம் என்ற கருத்தில், மற்றது எல்லாம் சிற்றின்பம், குறையுடைய, முழுமையடையாத, நிறைவைத்தராத இன்பம் என்று சொன்னார்கள்.

சரி, உடலுறவின் பொழுது ஏன் அதிக இன்பம் எழுகிறது? அல்லது அப்படித்தோன்றுகிறது? இதற்கான காரணம், நாம் உணர்கின்ற, பெறுகின்ற, அதீத இன்பத்தை, நம்முடைய உயிராற்றலின் மூலமாகவும், அதன் வழியாக வருகின்ற ஜீவகாந்தம் என்ற இயக்கத்தாலும் பெறுகின்றோம். பாலுறவில் இந்த ஜீவகாந்தம் தன் இழப்பில் கூடுதலாக செலவாகிறது என்பதும் உண்மை. அதனால் அந்த இழப்பை ஈடு செய்ய, உயிரில் ஏற்படும் மாற்றம், ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், அது நமக்கு அதீத இன்பமாகவும் தோன்றுகிறது. ஆனால் அது தொடருமானால், உயிரிழப்பும் நேரலாம். கவனம்.

வாழ்க வளமுடன்.


How shanti meditation works? is it okay to store the kundalini there?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் மறுபடி கொண்டு செல்வது நல்லதா? அப்படியானால் சாந்தி தவம் எப்படி வேலைசெய்கிறது?


பதில்:

நல்ல புரிதலுக்கான கேள்வி இது. நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்டால் உங்களுக்கு, குருவால் தீட்சை தரப்படும். சில யோக அமைப்புக்களில் குண்டலினி தீட்சை என்பது பெயரளவில்தான் இருக்கிறது. நீங்களாகவே உயர்த்திக்கொள்ளவோ, தானாகவே எழும்படி செய்யவோதான் பயிற்சி தரப்படுகிறது. இதற்கு கொஞ்சம் காலமும், முயற்சியும் ஆகலாம். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், மனவளக்கலை மிக எளிமையான யோகமுறை ஆகும். உயர்ந்த குருவால், பயிற்சி பெற்ற ஆசிரியரால், தொட்டுத்தரும் தீட்சை மூலமாக, குண்டலினி சக்தி, ஆக்கினை சக்கர மையத்திற்கு உயர்த்தப்படுகிறது. உடனடியாக நாம் அதை உணர்ந்து, தவம் இயற்றவும் முடியும்.

ஆர்வமும், முயற்சியும், ஏற்கனவே பக்தியில் ஈடுபாடு உள்ளோர்க்கும், ஆக்கினையில் தவம் இயற்றிவர, மூன்று நாட்களுக்குள் நல்ல ஆற்றல் பெருகிவரக் காணலாம். ஆனாலும் ஒருவாரம் ஆக்கினையில் இருப்பது நல்லதே. தவ ஆற்றல் ஆக்கினையில் பெருகிவிட்டால், ஆரம்பகாலத்தில், அதாவது தவம் புதிதாக கற்றுக்கொண்ட நிலையில் உள்ளவர்களுக்கு, தலைவலி, தலைபாரம், உடல் சோர்வு வரும். இது இயல்பு. அந்தநிலையில், அவர்களுக்கு உண்டாகிய தவ ஆற்றலை, குறைக்கவேண்டும். அதற்காகவே, சாந்தி தவம் என்ற முறை இருக்கிறது. மிக நீண்டகாலமாக இத்தவம் இல்லை. ஆனால், சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, மகரிஷியின் காலத்தில், நடைமுறைக்கு வந்துவிட்டது.

சாந்தி தவம் என்பது, ஆக்கினையில் நின்றிருக்கும் குண்டலினி சக்தியை, மீண்டும் மூலாதார சக்கர மையத்திற்கு கொண்டு வருவதாகும். இது வாரம் ஒருநாளில், வெள்ளிக்கிழமையில் செய்வதுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இங்கேதான் உங்கள் சந்தேகம் எழுகிறது. எழுப்பிய, உயர்த்திய குண்டலினி சக்தியை, மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டுவந்தால் என்ன ஆகும்? 

அதீத தவ ஆற்றலை, சக்தியை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தன்மை அங்கேதான் கிடைக்கிறது. அதனால்தான் குண்டலினியின் இடத்தை மாற்றி அமைக்கிறோம். எனவே இது நல்லதுதான். மேலும் முக்கியமாக, ஒருவரது வாழ்வில், ஒருமுறை எழுப்பி, உயர்த்தப்பட்ட குண்டலினி மீண்டும் அடங்கிவிடாது. எப்போதும் தவம் பழகப்பழக, தானாக எழுந்து உயர்ந்து, தவ நிலைகளில் நம்மோடு, நம் விருப்பத்திற்கு துணை நிற்கும் என்பதே உண்மை ஆகும்.

வாழ்க வளமுடன்.

Is sangalpa and mantra working? Or is it deception?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சர்வ வஷிய தன ஆகர்ஷண சங்கல்பம் உண்மையிலேயே வேலை செய்கிறதா? அல்லது ஏமாற்றுவேலையா?


பதில்:

இதற்கான பதில் உங்களுக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்றால், நீங்கள் அதை செய்துபார்க்க வேண்டியது அவசியம். அது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதே உண்மை. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதற்காகவும், நான் சொல்கிறேன் என்பதற்காகவும், பிறர் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ள தேவையும் இல்லை. சில நல்லதை, விளக்கங்களை சொல்லுபவரின் அனுபவம் கொண்டுதான் ஏற்கவேண்டும். சந்தேகம் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் தவிர்த்துவிடலாம். இது அவரவர் விருப்பமே அன்றி, கட்டாயம் என்ற நிலைபாடு இல்லையே. அதுப்பொல பிறரின் நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதும் நம் வேலை இல்லையே!

நமக்குள்ளும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலை, சக்தியை, நம் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறைதான், சங்கல்பம் அல்லது மந்திரம். இதை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொழுது, அங்கே ஏற்படும் மாற்றம், நம் விருப்பத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதுதான் உண்மை. இதை விஞ்ஞான அறிவுகொண்டும் நிரூபணம் செய்யலாம். ஆனால் விஞ்ஞானிகள் விளைவினை உடனே எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏற்க மாட்டார்கள். விளைவு என்பது உண்மை, ஆனால் அது நம் எதிர்பார்ப்புக்குள் அடங்கிடாது! அதில் இயற்கையின் பங்கும், இயற்கையின் தவறாத விதியும் உண்டு. அதை நாம கணிக்கவும் முடியாது.

சங்கல்பமும், மந்திரமும் மிகச்சாதாரண மனிதர்கள் உருவாக்கிடவும் முடியாது. அதற்கு ஆழ்ந்த அனுபவமும், உண்மை விளக்கம் பெற்ற நிலையும், இயற்கையோடு தன்னை அறிந்த நிலையும், புரிதலும் தேவை. அப்படியான மகான்கள் உருவாக்கியதே, இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சங்கல்பம் மற்றும் மந்திரம். யாருக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் அதை செய்யட்டும் பலன்பெறட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் அதை செய்யவேண்டியதில்லை!

வாழ்க வளமுடன்.

After does good, had more problems, so Karma is fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?


பதில்:

உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும். 

முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை  வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி? 

அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.

எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.

வாழ்க வளமுடன்.

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.

Explain the someone says, kayakalpa yoga will reduce the happiness of life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா?


பதில்:

காயகல்பம் கற்றுக்கொண்டவர்கள் அப்படி சொன்னார்களா? காயகல்ப யோகபயிற்சியின் உண்மை அறியாதவர்கள், அதை கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், அதை விரும்பாதவர்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைதான் அது. லட்டு இனிப்பானது என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். இல்லவே இல்லை இனிப்பு என்று நிச்சயமாக சொல்லுவீர்கள். ஏன்? எப்படி? ஏற்கனவே லட்டு சாப்பிட்டு இனிப்பை சுவைத்த அனுபவம் இருக்கிறது அல்லவா? அதன் வழியாக அந்த பதிலை சொல்லுவீர்கள். யாரேனும் ஒருவர், உங்களிடம் ‘லட்டு சாப்பிடாதே கசக்கும்’ என்று சொல்லியிருந்தால், இன்று நீங்கள் லட்டின் சுவையை சொல்லமுடியுமா?

காயகல்ப யோகக்கலை, வேண்டாத, முரண்பாடான, காம இன்ப நினைவுகளை, அந்த ஊக்குவித்தலை தடுக்கிறது. சரி செய்கிறது. ஆனால் இயற்கையாக இருக்கின்ற, எழுகின்ற காம இன்பத்தை குறைக்கிறது என்று உங்களை ஏமாற்றுகிறார்களே, அதற்குப் பதிலாக, இன்னமும் நிறைவாக, முழுமையாக அனுபவிக்க துணை செய்கிறது என்பதுதான் உண்மை. எனவே கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

காம இன்பதை அதிகப்படுத்தினாலும் நோய்வரும், இயற்கைக்கு முரணாக குறைத்தாலும் நோய்வரும் என்பதை நீங்கள் அற்வீர்களா? அப்படி இயற்கையாக உள்ளபோது எப்படி, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை, தானும் பெறாமல், உங்களையும் பெற விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு இடமளிக்காமல், நீங்களே நேரில் மனவளக்கலை மன்றம் சென்று, வேதாத்திரிய காயகல்ப யோகப்பயிற்சியின் உண்மை அறிந்து, உடனே கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.