January 2025 | CJ for You

January 2025

What is so special about Thai Amavasya and Aadi Amavasya? Are all new moons the same? Why do our people say something miraculous? Will you explain the truth?


தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் அப்படி என்ன சிறப்பு? எல்லா அமாவாசையும் ஒன்றுதானே? நம் மக்கள் எதற்கெடுத்தாலும் ஏதேனும் அதிசயமாக சொல்லிக்கொள்வது ஏன்? உண்மை விளக்குவீர்களா?

இப்படி அடிக்கடி, வருடத்திற்கு இருமுறை சொன்னாலாவது நீங்கள் ஆன்மீகத்திற்குள் வருவீர்களா? என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உண்மையாக வழிபாடு யாருக்கு வேண்டும் தெரியுமா? பக்தி, யோகம், இவைகளை பொதுவாக சொல்லும் ஆன்மீகம் ஆகியவற்றில், முற்றிலும் ஈடுபாடு இன்றி, எதிர்புறமாக, பொருளியல் உலகில் ஓடுபவர்களுக்குத்தான் தேவை. இதென்னய்யா? பொருளியல் உலகை விட்டுவிட்டா ஆன்மீகத்திற்கு வரமுடியும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

எல்லா நேரங்களிலும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? பிறந்தது முதல், வாழ்நாளின் முடிவுக்காலம் வரை பொருள் அவசியமே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. தேவையை நிறைசெய்யும் வகையில், அன்றாடம் அதற்கென நேரத்தை செலவழித்துவிட்டு, நமக்காக, நம் உடலுக்காக, மனதிற்காக, உயிருக்காக, நம்முடைய முன்னோர்களுக்காக, வரக்கூடிய சந்ததியினருக்காகவும், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கித் தரலாம் அல்லவா? அதற்கும் வழியில்லை என்றால் எப்படி?

இந்த உலகிற்கு நாம் எதற்கு வந்தோம்? என்ற ஒரு கேள்விக்கான் சிந்தனையே இல்லாமல், ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைவோம் என்பது மட்டுமேதான் நம் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? என்று என்றைக்காவது, உங்களுக்குள்ளாக கேட்டதுண்டா? நிஜமாகவே அப்படி ஒன்று இருக்கிறதா? ஆம் இருக்கிறது. ஒன்றல்ல மூன்று. அதென்னாய்யா அந்த மூன்று?

உங்கள் பிறவியின் நோக்கமும், பிறவியின் கடமையும் நிறைவேற்றிக் கொள்ளுதல், மெய்ப்பொருள் உண்மையை அறிதல் ஆகிய மூன்று ஆகும். ‘ஏங்க, இதெலாம் ஆகிற வேலையா? இதை தெரிந்து கொள்வது அவசியமா என்ன? எல்லோருமா தெரிஞ்சிகிட்டு போய் சேர்ந்தாங்க? அப்படி தெரிஞ்சிகிட்டு என்னதான்யா ஆகப்போக்குது? இதைச்சொல்லி உங்களுக்கு ஏதேனும் காரியம் ஆகனுமோ? என்கிட்ட அவ்வளவு பணமும் இல்லையே.’ என்று மறுபடி நீங்கள் சொல்லுவீர்கள் தானே?!

எனக்கு என் முன்னோர்கள் சொல்லிச்சென்ற வழிமுறைகளை, நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். அவர்கள் என்னிடம் ஏதும் எதிர்பார்க்கவில்லை, நானும் உங்களிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை, இது ஒரு உண்மையை, வழி வழியாக கடத்துதல். எரியும் அகல் விளக்கு கொண்டு, நெருப்பு அணைந்திடாமல், இன்னொடு அகல்விளக்கை ஒளியேற்றி வைப்பது போலவே ஆகும். ஆனால் நீங்களோ ‘எனக்கு ஒளியும் வேண்டாம். அதுவும் வேண்டாம்’ என்றால், எனக்கொன்றும் குறையில்லை. அது உங்கள் விருப்பமே!

தை அமாவாசை என்பது, புத்துயிர் பெற்ற சூரியனின் நகர்வைக் கொண்டும், அந்த சூரியனோடு கலக்கும் சந்திரனையும் கருத்தில் கொண்டு, வணங்கிக் கொள்வதாகும்.

ஆடி அமாவாசை என்பது, இதுவரை நமக்கு புத்துயிர் தந்த சூரியன், தன்னை புதுப்பிக்க நகர்வதை வாழ்த்துவதும், அதனோடு கலந்து நிற்கும் சந்தினையும் கருத்தில் கொண்டு வணங்கிக் கொள்வதாகும்.

இந்த வழிபாட்டின் உண்மை, அமாவாசை என்பது புனிதம் தரும் நாள், அந்தநாளில், சூரியனும், சந்திரனும் இணைந்த வகையிலான ஆற்றல் பூமிக்கு வருகிறது. அந்த ஆற்றல், நம்முடைய பிறப்பின் நோக்கத்தையும், கடமையையும் எளிமையாக்கும். மெய்ப்பொருள் உண்மையை உணர்வதற்கான வழிகளை உண்டாக்கும். நம் முன்னோர்களுக்கு செய்யும் வணக்கமும், வழிபாடும் நம் வாழ்வை வளமாக்கும்.

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக தந்திருக்கிறேன். மேலும் உண்மை அறிவதென்றால், காத்திருங்கள். அடுத்த பதிவுலும் தொடரலாம்.

வாழ்க வளமுடன்.

-

Karma is a lie, horoscope and astrology are false. In this case, is it correct to find karma through the horoscope?


ஐயா, கர்மா என்பதே பொய், ஜாதகம், ஜோதிடம் என்பதும் பொய். அப்படி இருக்கையில், ஜாதகம் வழியாக கர்மாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்புவது சரியா? எதற்கு இந்த ஏமாற்று வேலை?


நீங்கள் யாராக இருந்தாலும் சரிதான். என்னை ஆழம்பார்ப்பது மட்டுமில்லாமல், கர்மாவையும், கிரங்களையும், இயற்கையையும், மனித பிறப்பின் ரகசியத்தையும் ஆழம்பார்க்க நினைக்கிறீர்கள். நல்லதுதான், உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். அதில் உங்களுக்கு இருக்கிற அறியாமையை விலக்கிட, உண்
மை விளக்கம் தர முயற்சிக்கிறேன். ஆம், ஒன்றை குறை சொல்லுவது என்றால், அதில் இருக்கிற உண்மையும் தெரியவேண்டும், பொய்யும் தெரியவேண்டும் அல்லவா? ஆனால் உங்களுக்கு அதில் இருக்கிற பொய்யை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். 

நீங்கள் பிறந்து வாழும் இந்த பூமியாவது ஒரு கிரகம் என்பதை, அறிவீர்களா? இல்லையா? ஒவ்வொரு நாளும் இந்த பூமி, தன்னைச் சுற்றிக்கொண்டே, சூரியனை சுற்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள் தானே? இரவும் பகலும், பருவகாலங்களும் ஆண்டுமாறாமல், வந்துகொண்டே இருப்பதை புரிந்து கொண்டீர்களா? இன்றைய மார்கழி, தை அல்லது டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியஒளி குறைந்து, குளிர்காலம் நிறைந்திருப்பது தெரியும் தானே? அதுபோலவே சித்திரை, வைகாசி அல்லது ஏப்ரல், மே மாதங்களில் சூரியஒளி அதிகரித்து வெப்பம் அதிகமாவதும் தெரியும் தானே? இவற்றிற்கு காரணம் சூரியனிடம் இருந்து வரும் வெப்ப அலைகள் தானே? இல்லை என்று மறுப்பீர்களா?

ஒவ்வொருநாளும் குளிர் வெப்பம் இருந்தாலும், சாராசரியாக ஒரு குளுமையை, பொருத்தமான வெப்பத்தை தரும் சந்திரன் என்ற நிலாவை நீங்கள் அறிவீர்கள் தானே? அது ஒரு நாள் ஒளிதராமல், தன்னில் இருளைக் கொண்டிருந்தாலும், இந்த பூமிக்கு தகுந்த வெப்ப நிலையை தந்து, நம்மையும் மற்ற உயிர்களையும் காக்கும் அலைகள் எங்கிருந்து வருகின்ற என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறீர்களா?

இதையெல்லாம் ஏன் நீங்கள் ஏற்கவேண்டும்? இதையும் மறுத்து ஒதுக்கிட வேண்டியதுதானே? ஜோதிடம் என்பது நிஜம். அதை விவரித்து சொல்லுவதில்தான் மாற்றுக்கருத்தும், குழப்பமும், பொய்யும் கலந்திருக்கின்றன எனலாம். எப்போதுமே, எதிராளிடமும், அன்பர்களிடமும், மாணவர்களிடமும் ‘புரிகிறதா?’ என்று நான் கேட்பதே இல்லை. எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் அறிவு, நிச்சயமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதனால், அதை புரிகிறதா? என்று நான் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. அது கேட்பவரை கேவலப்படுத்தும் கேள்வி என்பதை நான் அறிவேன்.

அடுத்து கர்மா என்பதற்கு வரலாமா? ஒரு செயலுக்கு, ஆற்றலுக்கு எதிர்விளைவு உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆமாம். உங்களுக்கு பிடித்த ‘அறிவியல்’ விஞ்ஞானி நியூட்டன் சொல்லி இருக்கிறார். ஆனால் நீ ஒரு செயலை செய்தால், அதற்கு எதிர்விளைவாக, உனக்குள் கர்மா என்ற வினையாக பதிவாகிறது என்று முன்னோர்கள் சொன்னால் அது ‘பொய்’ ஆகிவிடுகிறது அல்லவா?

நல்லது செய்தால் ஏதும் குறையில்லை, ஆனால் தனக்கும், பிறருக்கும், இயற்கைக்கும் தீங்கிழைத்தால், அது கர்மா என்ற வினைப்பதிவாக, பாவப்பதிவாக, நமக்குள் பதிவாகிறது. அதை திருத்தும்வரை அது, நம்முடைய செயல்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. இத்தகைய தொகுப்பு, பரம்பரை பரம்பரையாக, கருவழியாகவே நமக்கு தொடர்ந்து வருகிறது. அந்த உண்மையை கண்டு அறிவதுதான் இந்த ‘ஜோதிட ஆய்வு’ ஆகும். 

ஒரு மனிதனின் பிறப்பில், இந்த கர்மா என்ற வினை முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இருக்கும். உங்களிடமிருந்து வெளிப்படும். அது உங்கள் உடல், மனம், உயிரை, பாதிக்கும். உங்களைச் சார்ந்தோர் வழியாக எதிரொலிக்கும். இந்த விளக்கங்களை மேலும் அறிய, இந்த காணொளி பதிவை காணலாம். 

உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா?

வாழ்க வளமுடன்.

-

Why does the mind often confuse me. No matter what you do, the mind refuses to budge. Shall we leave it as it is and go back to normal? Is it possible to separate the mind?


என்னுடைய மனம் ஏன் என்னை அடிக்கடி குழப்புகிறது. என்ன செய்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, வழக்கமான செயலை செய்து கொள்ளலாமா? மனதை பிரித்து வாழ முடியுமா? மனம் என்பதை ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை? 


மனமும் மனிதனும் இணைபிரியாத கூட்டணி ஆகும். எந்த வகையிலும் பிரிக்கமுடியாது. விலகி நிற்கவும் முடியாது. ஏதோ ஒரு சில நொடி மனம் இல்லாதது போலவும், பிரிந்து நிற்பது போலவும் தோன்றலாம். ஆனால் அது மாயை. மனதை விட்டு விலகி நின்று வாழ முயற்சிப்பது என்ற செயல் கேலியானது. மனம் இன்றி மனிதனே இல்லை என்ற நிலையில், இது எப்படி நிகழும்? விலகினாலும் அது உங்களோடுதான் இருக்கும். மனம் இல்லை என்றால், அவன் ஒரு ஜடப்பொருளாகி விடுவான். அதாவது உயிரற்ற தன்மைக்கு போய்விடுவான் என்பதுதான் உண்மை.

இங்கே, நான் மனதை வென்றுவிட்டேன். மனதை தள்ளி வைத்துவிட்டேன், என் வழக்கமான வேலைகளை உற்சாகமாக கவனிக்கிறேன். எனக்கு எந்த தடையும் இல்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கென்று பயிற்சிகளும்கூட கிடைக்கிறது. நல்லதுதான். அப்படியான மாற்றம் பெற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், அந்த நிலையில் அவர்கள், எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் அதே நிலைமையில் தொடர்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி மனதை தள்ளி வைத்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. உண்மையாக இது மிகப்பெரிய ஏமாற்றுவித்தை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எனினும், ஏதேனும் ஒருவகையில் மனம் குறித்த விளக்கம், உங்களுக்கு கிடைத்தால் சரிதான். நல்லதும் கெட்டதும் அனுபவபட்டால்தானே தெரியும்? அதனால் நான் வரவேற்கிறேன்.

மனதை புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு, அதன் இயக்கத்தோடு கலந்து, அதன் உண்மையை, அந்த மனதிற்கே புரியவைத்துவிட்டால் மட்டுமே, அது தானாக தன்னை முழுமை செய்துகொள்ளும். அப்போது அது உங்களோடு கைகோர்க்கும். இதற்கு தியானம் என்ற தவம், அகத்தாய்வு எனும் தற்சோதனை மிக முக்கியமாகும். 

மேலும் மனம் குறித்த உண்மைகள் அறிய, இந்த காணொளி உதவிடும்.


மனம் என்பது உங்களுக்கு இத்தனை அவசியமா? உண்மை விளக்கம் - Importance of the Mind

வாழ்க வளமுடன்.

-

Even if I take good care of my body by exercising, some problems keep coming up. What could be the reason for this? Some medicines don't work.


வாழ்க வளமுடன் ஐயா.  என் உடலை நல்ல வகையில், உடற்பயிற்சி செய்து காத்து வந்தாலும் கூட ஏதேனும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சில மருந்துகளும் தீர்வு தரவில்லையே? விளக்கம் தருக.


    நீங்கள் உடற்பயிற்சி என்று மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். எனினும், என்னிடம் கேள்வியாக கேட்ட காரணத்தால், அது வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு விளக்கம் தரும் முன்பாக, நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டுமே? சரியா? அந்த கேள்விகள் இதுதான்.

  • உடற்பயிற்சி என்றைக்கு இருந்து தொடங்கினீர்கள்? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
  • இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக, என்ன நிலைமையில் உங்கள் உடல் இருந்தது?
  • இதற்கு முன்பாக ஏதேனும், உடல் பிரச்சனைக்காக மருந்து எடுத்துக்கொண்டீர்களா? இல்லையா?
  • தேவையான மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டீர்களா?
  • நீங்களாகவே ஏதேனும் நண்பரின் ஆலோசனை தொடர்கிறீர்களா?
  • வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்து செய்துவருகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு நீங்களே பதிலை, தனியே எழுதிக் கொள்ளுங்கள். இப்போது இதற்கான பதிலை நானே யூகித்து அதற்கான விளக்கமும் தந்துவிடுகிறேன்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் பொதுவாக, நல்ல நிலைமையை நமக்கு உணர்த்தவும், அதை அறியவும், குறைந்தது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒருநாளில், ஒருவாரத்தில் முன்னேற்றம் என்பதெல்லாம் தவறான கருத்தாகும்.

ஏற்கனவே உடல் பாதிப்பு, உடலுறுப்பு பாதிப்பு இருந்தால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்த உடனே சரியாகிவிடும் என்று யாருமே சொன்னதில்லை. அப்படி நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவும் தவறான கருத்தாகும்.

உங்கள் உடலின் பிரச்சனை கருதி, மருத்துவரின் ஆலோசனையில், மருந்துகள் எடுத்துக்கொள்வதுதான் சிறப்பு. யாரோ சொன்னார்கள், உயிருக்கு உயிராக பழகும் நண்பர் சொன்னார் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது. அது உங்களை மேலும் சிக்கலில் சிக்கவைக்கும். உடல் மேலும் பாதிப்படையலாம். அதனால் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனை ஒன்றே மிகச்சிறந்த வழியாகும்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை, தினமும் அதிகாலை 4:30  மணி முதல் 7:30 மணிக்கு முடிக்கலாம். அதிகபட்சமாக காலை 11:00 மணி என்பதுவரை சரிதான். ஆனால், வெறும் வயிற்றில் என்பதும் முக்கியமானது. நொறுக்குத்தீனியும், Tea, Coffee என்று நிரப்பிய வயிறுடன் செய்வது, உடற்பயிற்சி ஆகாது. அதுப்போலவே மாலையில் உடற்பயிற்சி என்பது அவசியமில்லை. காலையில் ஒரு நேரத்தில், ஒருநாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானதுதான். ஒருநாள் விட்டு ஒருநாள், வாரத்தில் ஒருநாள், கிடைக்கும் நேரத்தில் ஏதோ ஒருநாள் என்று வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்துவந்தால், அதன் பலனை நாம் எதிர்நோக்கிடவும் வழியில்லை.

அடிப்படையில் உங்கள் உடல்போல இன்னொருவருக்கு இருப்பது இல்லை. ஓவ்வொருவருக்கும் தனித்தனி தன்மை இருக்கிறது. பொதுவான உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆனால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி முற்றிலுமாக, எல்லா வயதினருக்கும், எல்லா அன்பர்களுக்கும் பொருத்தமானது. மேலும் 14 வயது சிறுவர் சிறுமியும் செய்துவரலாம். முதுமையிலும் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம், எல்லோருக்குமான மாற்றம் பொதுவானதே ஆகும். அத்தகைய சிறப்பு வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் உண்டு.

எனவே நீங்கள், உங்கள் ஆசிரியரை சந்தித்து, உங்கள் நிலைமையை சொல்லி நேரடியாக ஆலோசனை பெறலாம். வாய்ப்பிருந்தால் என்னையும் நீங்கள் சந்திக்கலாம். உங்களுக்காக, ஒரு காணொளி பதிவை தருகிறேன், மேலும் பல விளக்கங்களை அறிந்து கொள்க.

உடலில் நோய் உருவாக முக்கிய காரணம் என்ன? உண்மை விளக்கம் - Main cause of disease in the body?

வாழ்க வளமுடன்.

-

Instead of analyzing and trying to solve the problem of man's life, how can it be solved by just doing sankalpa? You need to think a little wisely, don't you?


மனிதனுடைய வாழ்க்கைப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்ப்பதற்கு முயற்சிக்காமல், சும்மா சங்கல்பம் செய்தால் எப்படி தீரும்? கொஞ்சம் அறிவோடு யோசிக்கவேண்டும் அல்லவா? கதைவிடாதீங்க! என்ற இந்த பின்னூட்டத்திற்கு விளக்கம் காணலாம்.

பொதுவாக எல்லாவற்றையும் அறிவுக்கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் என்று இருப்பவர்கள்தான் இப்படியான கருத்தை, பொதுவெளியில் சொல்லுவார்கள். அதாவது ‘உன்னைவிட நான் சிந்திக்கிறேன். அதுவும் என் மூளையை கசக்கி யோசிக்கிறேன், அதுவும் சயின்ஸ் என்ற அறிவியல் (?!) துணையோடு செயல்படுகிறேன்’ என்று தனக்குள்ளும், மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். இருக்கட்டும் இது மிகச்சிறந்த செயல்பாடுதான். வரவேற்கலாம்.

ஆனால், இவர்கள் அடிப்படையை விட்டுவிட்டு, வேறெதோ பின்னால் செல்கிறார்கள் என்று சொல்லலாம். கிராமத்து சொல்வடை என்ற பழமொழிகளில் ஒன்றான ‘தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற’ ஆட்கள்தான் இவர்கள். 

சங்கல்பம் என்பது, ஒரு ஆரம்ப புள்ளியாகவும் இருக்கலாம். ஒரு செயல், நடவடிக்கை, பொதுவான நிலை என்ற வகையில், சங்கல்பம் செய்து ஆரம்பிக்கலாம். ஏதேனும் இடைப்பட்ட சிக்கலில், பிரச்சனையில், அதன் தீர்வுக்காக சொல்லி வரலாம். பிரச்சனையின் தாக்கம், பொருந்தா விளைவு வந்தாலும் கூட, அந்த இடத்திலும், சங்கல்பத்தை சொல்லி தீர்வுக்கு வழி தேடலாம். இப்படியாக, சங்கல்பம் என்பது எல்லா வகையிலும், எல்லா நிலைகளிலும் சொல்லி வரலாம் என்பதுதான் உண்மை. சங்கல்பம் இயற்கையோடு மனதை ஒன்றிணைக்கும் ஓர் பயிற்சி. இயற்கையின் ஆற்றலோடு நாம், நம்மை இணைத்துக்கொள்ளும் ஓர் முயற்சி. இது உண்மைதானா? என்றால். அதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். இனி இங்கே நாம் எழுத்தால் விளக்கிச் சொல்வதை விட, இந்த கருத்தில் நாம் ஏற்கனவே, @Vethathiriya காணொளியாக வழங்கி உள்ளேன். இதோ இந்த இணைப்பு வழியாக காணலாம். உண்மை விளக்கத்தை காணலாம்.

என்னுடைய பிரச்சனையை தீர்க்க தவம், சங்கல்பம் உதவுமா?  Will Meditation Sankalp help to fix My problems?

வாழ்க வளமுடன்.

-

There is no need to worry about exercising so much. Isn't this a common thing? If you are interested, let them do it. Why provoke people to say it so often? What is the need for that?


உடற்பயிற்சி செய்வதை இவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இது பொதுவான விசயம் தானே? ஆர்வமிருந்தால் செய்து கொள்ளட்டும். அதை ஏன் அடிக்கடி சொல்லி மக்களை தூண்டவேண்டும்? அப்படி என்ன அவசியம்? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.




ஒரு கேள்வி எப்போதுமே தவறாக இருக்கமுடியாது. அந்த கேள்விக்கான பதில்தான் தவறாக இருக்கும் என்பது பொதுவானது. எனவே நிச்சயமாக இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலை தருகிறேன்.

நீங்கள் மனவளக்கலை அன்பராகவும் இருக்கலாம், பொதுவான அன்பராகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் உடற்பயிற்சியால் என்ன நிகழ்கிறது? என்பதை மேலோட்டமான அறிவாக மட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. முக்கியமாக, உடற்பயிற்சி என்பது, ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அதிலும், இந்த உலகில் நன்றாக வாழ நினைக்கும் அனைவருக்குமே தேவையும் அவசியமும் ஆகும். உண்மையாக, உடற்பயிற்சி என்பது, ஏதோ ஒருவர் மற்றவருக்காக செய்யும் பயிற்சி அல்ல.

தன்னுடைய உடலுக்கு, உடலுறுப்புகளுக்கு ஊக்கம் தந்திடும் ஒரு செயல், 24 மணி நேரத்தில் சில நிமிடங்களை, உடற்பயிற்சியில் செலவழிக்கலாம். அதில் ஒரு இழப்பும் இல்லை. அதிகாலை உடற்பயிற்சி என்றால், அன்றைய நாள் முழுவதுக்குமான சக்தியாற்றல் கிடைத்துவிடுகிறது. உற்சாகமாக இரவு வரை, இயல்பாகவும் இருக்க முடிகிறது. இரவில் நல்ல தூக்கமும், அதுபோலவே அதிகாலை விழிப்பும் வந்துவிடுகிறது. இது உடற்பயிற்சி செய்துவருகின்ற ஒவ்வொரு அன்பரின் அனுபவமே ஆகும்.

மனித வாழ்வில், அவனுடைய ஆயுட்காலம் தனியாக யாருமே கணித்திட முடியாது. வாழும்வரை, இருக்கும்வரை, இயற்கைக்கு முரண்படாமல் வாழவேண்டும் அல்லவா? முரண் எங்கே எழுகிறது? இந்த இயற்கை அமைப்பை மீறிடும் பொழுது வருகிறது. 

உங்களை விட, உங்கள் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையும், அறிவும் உண்டு. ஆனால், நீங்கள்தான் உங்கள் விருப்பத்தின் வழியால், ஆர்வத்திலும், செயல்பாட்டிலும் அந்த ஒழுங்கமைப்பை கெடுத்துவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உடலின், உடல் உறுப்புக்களின் கட்டமைப்பு குலைந்து விடுகிறது. ஒரு நாளின் உணவு முறை, உடல் இயக்கம், தூக்கம் எல்லாம் மாற்றிவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உள் கட்டமைப்பு சிதறுகிறது. உடலுக்கும் மனதிற்கும் உள்ள ஒத்துழைப்பும் தடுமாறுகிறது. இப்படியான நிலை வந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் குறுகிவிடும். அதனால், உங்கள் பிறப்பின் நோக்கம், கடமை அறியமுடியாது என்பதுதான், தன்னையறிந்த சித்தர்கள், யோகியர்கள், மகான்கள் ஆகியோரின் வார்த்தைகளாகும். அதனால்தான் உடற்பயிற்சியை, முதல் பாடமாக வைத்தார்கள்.

இப்பொழுது உங்களுக்கு உண்மை தெரியவரும் என்று நினைக்கிறேன். இதனோடு, இந்த காணொளியும் நல்ல விளக்கத்தை தரும். இதோ அதன் இணைப்பு...

எளியமுறை உடற்பயிற்சி வழியே நிறைவேறும் பிறப்பின் நோக்கம் என்ன? உண்மை ரகசியம் - Purpose Truth Secret


வாழ்க வளமுடன்
-

Leave the mind as it is. Let it be what it is within. How then can one be without a mind? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, மனதை அப்படியே விட்டுவிடுங்கள். அது அகத்தில் எப்படி இருக்கிறதோ இருக்கட்டும் என்கிறார்கள். அப்படியென்றால் மனம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? விளக்குக.



வேறு எங்கே போகவேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன். ஆம். இது குறித்து, மற்றொரு யோகம் அல்லாத, மனம் விடுதலை குறித்து பேசும் அன்பர்களின் காணொளி சில கண்டேன். குறிப்பாக அது யார்? என்று அடையாளப்படுத்துவது வேண்டியதில்லை. எனினும் சில விளக்கங்களை காண்போம்.

பொதுவாகவே, மனம் ஒரு குரங்கு. அது இயல்பில் அடங்காது. உன்னை சும்மா இருக்கவிடாது. கண் போன போக்கில், கால் போகமுடியுமா? அது போல மனம் போன போக்கில், மனிதன் போகமுடியுமா? என்று பாடல்களும், கருத்துகளும் இருக்கின்றன. அவை விவரித்தால், இந்த கட்டுரையின் நீளமும் அதிகமாகிவிடும். மனம் இயல்பில் ஆற்றல் உடையது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் ரகசியங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

இன்னும் ஒருபடி மேலாக, ‘மனதின் அடித்தளமே நிலைபொருள்’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தை நினைவுகொள்க. அப்படியான மனதை, புறம்தள்ளி பழகுவதும், வாழ்வதும் சரியாகுமா? உங்கள் கேள்வியின்படி மனதை அகம், புறம் என்ற இரண்டாக பிரித்துக்கொண்டாலும், புறமனதை கவனி, அக மனதை விட்டுவிடு என்பதாக சொல்லப்படுகிறது.

மனமே மனிதனாகவும், மனிதனே மனமாகவும் இருக்கிறான் என்பது சித்தர்களின் கருத்தாகும். அதுவே வேதாத்திரியத்திலும் உள்ளது. எனவே புதிதாக எந்த திணிப்பும் இங்கே இல்லை. மேலும் மனதின் உயர்வுதான் மனிதனின் உயர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த பழக்கத்திற்காகவும் ‘அக மனதை புறந்தள்ளுங்கள்’ என்பது சரியாக இருக்காது. இது விளக்கமே தவிர, அறிவுரை அல்ல. வேதாத்திரியத்தில் சொல்லப்பட்டது போல வேறு எங்குமே, ‘மனம்’ குறித்து விளக்கம் தரப்பட்டது இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த அளவிற்கு மிக தெளிவாக, உண்மையாக, வேதாத்திரி மகரிஷி தன் விளக்கங்களை தந்திருக்கிறார்.

மேலும் எண்ணமோ, மனமோ, அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். மனம் தன் உணர்வுகளை எண்ணமாகவே பிரதி பலிக்கிறது. அவை எல்லாம் எது? என்று கேட்டால். ‘எல்லாம் நாம் போட்டு வைத்தவைதான்’ என்றே விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி.

மனதை பிரித்து, மனதை தவிர்த்து, மனதை ஒதுக்கிவைத்து, மனதை சும்மா விட்டுவிட்டு ஆகப்போவது ஒன்றுமே இல்லை. மனம் என்பது என்ன? என்று புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாடே ஆகும்.  எனவே மனதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது ஏற்பில்லாதது. அதை உங்கள் மனமே முதலில் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விளக்கம் குறித்தான காணொளி, மேலும் உங்களுக்கு புரிதலை கொடுக்கும் என்று நம்பலாம்.

மனம் என்பது என்ன? மனதை ஒதுக்கி வைத்து வாழமுடியுமா? What is the mind? Is it possible to live apart?

-

வாழ்க வளமுடன்
-

Do the rituals in our lives have meaning? Do you have to do it? Shall we exclude it? Can't you?


வாழ்க வளமுடன் ஐயா, நம் வாழ்வில் கலந்திருக்கும் சடங்குகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? அதை செய்யத்தான் வேண்டுமா? அதை விலக்கிவிடலாமா? கூடாதா? விளக்கம் தருக.



பொதுவாகவே, நம்முடைய இப்போதைய வாழ்வில், நம் முன்னோர்களின் சடங்குகள் காலாவதி ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை. அனேகமாக, நம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா செய்ததைக் கூட செய்வதில்லை அல்லவா? காரணம் அதில், அந்த சடங்குகளில், இக்கால சந்ததியினர் உண்மையையை தெரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்கு செய்வதற்கு விருப்பம் இல்லை. அது ஏன் செய்ய வேண்டும் அல்லது விலக்க வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்வதும் இல்லை. எனக்கு அதில் ஆர்வமில்லை, நேரம் இல்லை என்று விட்டுவிடுவார்கள்.

இதனால் அவர்கள் இழப்பது நிறைய நன்மைகளையும், உண்மைகளையும், விளக்கங்களையும் சேர்த்துத்தான் என்பது தெளிவு. எப்போதுமே மனிதனின் அறிவு, ‘ஏன்?’ என்று ஆராயும் பொழுதான் வளர்கிறது, தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. அது இல்லாமல், விட்டுவிடுதலும், விலகுப்போவதும் குறையாகவே நின்றுவிடும்.  அதுதான் இங்கே, இப்போது நடக்கிறது, நம்முடைய வாழ்வில். அதை நீங்களும் கண்டிருப்பீர்கள்.

ஆனாலும், நாம் செய்துவருகின்ற சில சடங்குகளில், வழிமுறைகளில் உண்மை இருக்கிறது. அது எது எது என்று ஆராய்ந்து பார்த்துக்கொண்டு ஏற்பதும் நல்லதுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். மனவளக்கலை என்பதே, மானிட உலகுக்கு ‘புதிய பாதை’ என்பது இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனினும் காலம் மாறிவருகிறது. மக்களிடமும் சென்று சேர்ந்திருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் உண்மை தத்துவங்கள் உலகம் முழுவதும் உள்ள மனிதர் மனதிற்குள்ளாக பரவிக்கொண்டு இருக்கிறது.

நம் வாழ்வில் நாம் பற்றிக் கொண்டிருக்கிற, சில சடங்குகள் குறித்து வேதாத்திரி மகரிஷி அவர்கள், உண்மை விளக்கம் தந்திருக்கிறார். அதை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே @Vethathiriya வில் பதிந்திருக்கிறோம். இதோ அந்த காணொளி வழியாக, அவரே சொல்லும் திருத்தங்களை கவனிப்போம்.

Rituals Fake Characters-சமூக சடங்குகளில் போலித்தன்மை -Vethathiri Maharishi


வாழ்க வளமுடன்
-

What is God really? How to know or realize? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.


இறை என்ற வார்த்தையிலேயே ஓர் உண்மை இருக்கிறது எனலாம். தமிழ் மொழியின் சிறப்பு, அந்த வார்த்தையிலேயே அதனுடைய இயல்பும் இருப்பது ஆகும். இறை, என்பது எங்கும் நிறைந்து இருக்கும் ஒன்றை குறிப்பதாகும். இதை இறைந்து இருக்கிறது என்றும் சொல்லமுடியும். உதாரணமாக, உங்களிடம் உள்ள ஒரு கண்ணாடி பொருளை கீழே போட்டால் உடைந்து சிதறும் அல்லவா? கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துகள்களாகவும் அவை இருக்கலாம். அவை எல்லாம் இறைந்து கிடக்கிறது எனலாம். தெரியாது ஆனால், காலை வைத்தால், ரத்தம் வரும் அளவிற்கு பாதத்தை பதம் பார்க்கும்தானே?

இந்த இயற்கையோடு, நாம் காணும் பொருட்களோடு, உயிர்களோடு, இந்த பிரபஞ்சத்தோடு ‘இறைந்து இருக்கும்’ ஒரு பேராற்றலையே ‘இறை’ என்று முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதையே நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய பேராற்றலை, குறிப்பாக உணர்த்தும் வகையில்தான்,  பக்தியாகவும் மலர்ந்தது. அதை ஏற்போரும் உண்டு, மறுப்போரும் உண்டு. அது அவரவர்கள் நிலைபாடும், உண்மை அறியாமையுமே ஆகும். ஆனால் இறைந்து கிடப்பது உண்மை என்பதை யாராகிலும் மறுக்கமுடியுமா? இதை மேலும், குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தைகளின் வழியாகவே அறியலாம். இந்த காணொளி காண்க.

இறை என்பது உண்மையில் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

வாழ்க வளமுடன்

Pongal is the festival of Tamils. There are some who call it the New Year. What's so special about it? Has Vethathiri Maharshi said anything? Explain


வாழ்க வளமுடன் ஐயா. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை. இதையே புத்தாண்டு என்று சொல்வோரும் உண்டு. இதில் என்ன சிறப்பு? வேதாத்திரி மகரிஷி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.

பொங்கல் தமிழர்களின் பாரம்பரியமான பண்டு ஈகை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மகிழ்ச்சி நம்மோடு பொங்கிட வேண்டும் என்ற கருத்தில், இயற்கையையும், சூரியனையும், நிலத்தையும், அதற்கு துணையாக இருக்கும் காளை மாடுகளையும் மதிப்பு செய்து, வணங்கி மகிழ்ந்து, சக்கரைப்பொங்கல் படையலிட்டு வழிபடும் நாள் இதுவே. மேலும், தங்களைடைய சந்தோசங்களையும், தன்னிடமிருக்கும் பொருளையும், பிறருக்கு தந்து மகிழ்ந்து, அவர்கள் தருவதை பெற்று மகிழும் பண்டு ஈகை என்ற பண்டிகையாகவும் இருக்கிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. எனினும் தற்போது சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

காரணம், அன்றைய காலம் போல, விவசாயம், விளைபொருட்கள் விளைவிக்கும் தொழில், வேலை என்பதில் இருந்து மனிதர்களாகிய நாம் விலகிவந்து, வெவ்வேறு தொழில்களில் வளர்ந்து விட்டோம். மேலும் அதில் புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டுவந்து, இயந்திரங்களே அதை செய்திடும் அளவிற்கு மாற்றமும் செய்துவிட்டோம். நாம் அந்த நுட்பங்களை கவனிக்கும், முறைப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் வேலைகளை மட்டும் செய்து வருகிறோம். அதனால், பாரம்பரியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போகிறது. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை. இவ்வுலக நடைமுறையில் பயணிப்பதுதான் நமக்கும் நல்லது. எதிர் திசையில் பயணிப்பது, நம்மை மட்டுப்படுத்திவிடும் அல்லவா?

பொங்கள் திருநாளை, தை முதல் நாளாக சொல்லுவதில், பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் நிலையில், நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. இதைக்குறித்து குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் எதும் சொன்னதில்லை. எனினும், மெய்ப்பொருள் உண்மையை, இந்த பொங்கல் திருநாளில், வாழ்த்தாக ஒரு கவிதை வழியாக சொல்லி இருக்கிறார். அதில் இருக்கும் உண்மையை, இந்த காணொளி பதிவு வழியாக அறியலாம். இதோ அதற்கான இணைப்பு.

வேதாத்திரி மகரிஷி பொங்கல் வாழ்த்து மதிவிருந்து கவிதை - Pongal Greeting Poems by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

-


Sir, who initiates a disciple into Kundalini and enhances his kundalini energy? Give an explanation.


ஐயா, ஒரு சீடனுக்கு குண்டலினி தீட்சை கொடுத்து, குண்டலினி சக்தியாற்றலை உயர்த்துவது யார்? விளக்கம் தருக.

நல்ல சிந்தனைக்குறிய கேள்வி. இந்த கேள்விக்கு, நம் வேதாத்திரியாவில், தனியாக ஒரு பதிவு தரப்பட்டுள்ளது. அதை இந்த பதிவோடு இணைத்துள்ளேன். அதற்கு முன்பாக சில உண்மைகளை இங்கேயும் காண்போம்.

மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, குரு மட்டுமே, ஒரு சீடனுக்கும், தன்னை நாடி வரும், சுய தேடல் ஆர்வம் உள்ள அன்பருக்கும், குண்டலினி தீட்சையை வழங்க முடியும். குரு என்பவருக்கு நிகராக யாரையும் சொல்ல முடிவதில்லை. எனினும் ஒரு சீடன், குருவால் உயர்த்தப்படும் பொழுது, சீடனும் பிறருக்கு மெய்விளக்கம் தரும் வாய்ப்பை பெற்றுவிடுகிறான். இங்கே சீடனுக்கு, தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உன்மை விளக்கமும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, குருவின் அன்பும், கருணையும் அவனுக்கு இருக்கிறதல்லவா?

அப்படியல்லாது, ஏதோ ஒருவருடம் படித்தேன், தவம் செய்ய பழகிக் கொண்டேன். படித்தேன், குருவின் விளக்கம் கேட்டேன். மெப்பொருள் உண்மை புரிந்து கொண்டேன், அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நானும் ஆசிரியர் என்ற ரீதியில், யாரும் மற்றவர்களுக்கு தீட்சை வழங்கிட முடியாது. அது இந்த இரு நபர்களுக்குமே பிரச்சனை ஆகிவிடும். ஒரு சீடன் உண்மையாகவே தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள,  சீடனின் தவம், தற்சோதனை, அகத்தாய்வு, ஆராய்ச்சி என்ற வகையில், பல ஆண்டுகளை செலவிட வேண்டிய அவசியம் உண்டாகும். குறைந்தது பத்தாண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம், ஆனாலும், அவனின் கர்மா என்ற வினைப்பதிவு தீர்க்கப்பட வேண்டும்.

எனவே, தீட்சை வழங்கும் நிலைக்கு, ஒருவர் உயர்ந்தாலன்றி, தீட்சை அளித்திட முடியாது. என்றாலும் கூட, வேதாத்திரியத்தில், குறிப்பிட்ட தகுதிநிலை பெற்றவர், முற்றிலும் புதிய ஒருவருக்கு தீட்சை அளிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இது, மகான் வேதாத்திர் மகரிஷி அவர்களே, ஏற்படுத்தித் தந்த வழிமுறை ஆகும். இந்நிகழ்வை, ஓவ்வொருவரோடும் இணைந்து, வான் காந்தத்தில் தன்னை கலக்கவிட்டுக் கொண்ட, வேதாத்திரி மகரிஷி அவர்களே, ஒழுங்குசெய்து கொள்கிறார். ஆனால் பெரும்பாலோர் இதை நம்ப மறுப்பார்கள்.

என்னுடைய அனுபவத்தில், எனது 21 வயதில்  அப்போதைய ‘Master’ பயிற்சி வழியாக, உயர்ந்த நிலையிலும், எனக்கு முழுயான, இறையுண்மை அனுபவமாக பெறாததாலும், பிறருக்கு தீட்சை வழங்க, தயக்கம் இருந்தது. அதனாலேயே, மூன்றாண்டுகளில், அந்த சேவையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, என்னளவில் முயற்சித்து, வேதாத்திரி மகரிஷி காட்டியவழியில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள முடிவு செய்து பயணித்தேன். கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் அனுபவம் அது. அந்நிலையில்தான் நான் நிறைபேற்று நிலை பெற்றேன். அதன் பிறகுதான், பிறருக்கு, உண்மை விளக்கம் தரும் பணியை கடமையாகக் கொண்டேன். இது உங்களுக்கும், ஒவ்வொரு வேதாத்திரிய அன்பருக்கும் நிகழலாம்.

தீட்சை வழங்கப்படும் பொழுது, தீட்சை பெறப்படும் பொழுதும் அங்கே ஓர் அதிசயமும் நிகழ்கிறது. அது என்ன என்பதை, இந்த காணொளி மூலமாக அறியலாம்.


ஆக்கினைசக்கரத்தில் குண்டலினி தீட்சை எனக்கு அளிப்பது யார்?  Who initiate My Kundalini in Agna Chakra?

வாழ்க வளமுடன்

-

Is it still fair to believe in karma? Outdated myths are no longer valid. That's what people all say. Is there really karma or not? Explain.


இன்னமும் கர்மாவை நம்புவதெல்லாம் நியாயமா? காலவதியான கட்டுக்கதைகள் இனிமேலும் செல்லுபடி ஆகாது. இப்படித்தான் மக்கள் எல்லோரும் சொல்லுகிறார்கள். உண்மையாகவே கர்மா உண்டா இல்லையா? விளக்குக.

என்னுடைய வாழ்விலும், இதை இப்பொழுது விளக்கிச் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றாலும், என் பதின்ம வயதுகளில், கர்மாவை ஏற்றுக்கொண்டவனில்லை. நான் செய்யாத ஒன்றை, என்னை ஏன் சுமக்கச் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்டிருக்கிறேன். அதுபோலவேதான், மக்கள் அனைவரும் ‘கர்மா’ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு அல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. பேசட்டும், விலக்கட்டும், ஒதுக்கி தள்ளட்டும். ஆனால், உண்மை என்ன? என்று ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அதை செய்யவேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். 

ஒன்றைப்பற்றி தெரியாமலேயே அதை புறம்தள்ளுவது, பாதிக்கப்பட்ட உடலுக்கு தேவையான மருந்தை, ‘எனக்கு வேண்டாம், இதை சாப்பிட்டால் நான் பிழைத்துவிடுவேன்’ என்று சொல்லுவது போல ஆகிவிடும். எத்தனை முரண்பாடு கவனித்தீர்களா?

முதலில் இந்த கர்மா என்ற வார்த்தையின், அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள். கர்மா என்ற வடமொழி சொல், அழகாக வினை என்று சித்தர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. வினை என்றால் செயல், இயக்கம் என்று அர்த்தமாகிறது. இதை இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பார்வையில் விளக்க முடியுமா? என்று கேட்கிறீர்களா? முடியும்.

'Every action has reaction'என்பது பொதுவான கருத்துதானே? இன்னமும் விளக்கமாக, Newton's third law of motion, every action has an equal and opposite reaction. These two forces act on two different bodies. இதன்படி, ஒரு செயலுக்கு அதற்கு சமமான எதிர் செயலோ, விளைவோ உண்டு என்று தெரியவருகிறதுதானே? அதுதான் இந்த கர்மாவில், இல்லையில்லை, வினையில் இருக்கிறது. ஒரு செயலை செய்கிறீர்கள். அந்த செயலுக்கு விளைவாக இன்னொரு செயல் விளைகிறது. அது நன்மையாகவும், தீமையாகவும் அமைந்துவிடுகிறது. இது உங்கள் அளவில் உண்மைதானே? 

நன்மையாக இருந்தால் அனுபவிப்பீர்கள், தீமையாக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும். இதில் நீங்கள், தீமையை அனுபவிக்காமல் தப்பித்துவிடலாம். ஆனால் செயலை செய்தது நீங்கள் தானே? அப்படியானால், தப்பித்துவிடுவது உங்கள் அளவில் என்றால், இயற்கை விதிப்படி அப்படி இல்லை. அந்த விளைவை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று உங்களை தண்டிக்கிறது. இது இயற்கையின் வினை விளைவு நீதி, Law of the Nature என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார்.

நான் சொன்னால் கூட நம்ப மாட்டீர்கள், ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களே விளக்கிச் சொன்னால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இதோ இந்த காணொளி பதிவில் உண்மை அறிக.

உங்களின் உண்மையும், உங்கள் கர்மாவின் ரகசியமும் தெரியுமா?

வாழ்க வளமுடன்

-

Is exercise necessary for humans? Do dogs, cats, tigers, lions, elephants all exercise? Doesn't that live well and long?


மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியமா? தேவைதானா? நாய், பூனை, புலி, சிங்கம், யானை எல்லாம் உடற்பயிற்சியா செய்கிறது? அதெல்லாம் நன்றாக, நீண்டநாள் வாழ்வதில்லையா? விளக்கம் தருக.


அதானே? மிருகங்களும், பறவைகளும் உடற்பயிற்சியா செய்கிறது? மனிதனும் அவ்வாறே இருந்து விடலாமே? உங்கள் கேள்வி மிகச்சரிதான். உங்கள் சிந்தனையையும் பாராட்டலாம். ஆனால், நீங்கள் கற்கால மனிதனா? நவீன கால மனிதனா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? குகையில் வாழ்கிறீர்களா? குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்கிறீர்களா? கையில் தீபந்தம் இருக்கிறதா? கைபேசி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையை சொல்லி விடுங்கள்.

பறவைகள், விலங்குகள் இன்னமும் இயற்கை ஒட்டித்தான் வாழ்கின்றன. அதன் வரம்பை மீறிட அதற்கு தெரியாது. இனிமேலும் கூட, அவைகள் அப்படித்தான் வாழும். துரதிஷ்டவசமாக அவைகளுக்கு ‘ஐந்தறிவுதான்’ இருக்கிறது.

ஆனால், மனிதனுக்கு ஆறறிவு. அதனால் அவன், வரம்புகளை அமைத்துக் கொள்கிறான். என்றாலும் இயற்கையை மீறிடவும் செய்கிறான். அதனால், அவனுக்குரிய, இயற்கையின் அமைப்பு, வழிமுறை இவற்றிலிருந்து விலகி விடுகிறான். அவனுடைய, உடல், மனம், உயிர் ஆகியன பிரச்சனைக்குள்ளாகிறது. இதை நீங்கள், உங்களுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இப்படியான கேள்வி பிறந்திருக்கிறது. அதை என்னிடமும் கேட்கிறீர்கள்.

எனினும் உங்களை உடற்பயிற்சி செய்க, என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். வற்புறுத்தவும் மாட்டார்கள். கட்டளை இடவும் மாட்டார்கள். இந்த அரசாங்கமும் கூட திட்டமிடாது. அதனால் கவலை வேண்டாம். ஏதோ திடீரென உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைப்பார்த்து, பரிசோதனை செய்துவிட்டு, ‘ஏதேனும் உடற்பயிற்சி செய்க, நடைப்பயிற்சி கூட சரிதான்’ என்று சொல்லுவார். அதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் என்னய்யா ஆகிவிடப்போகிறது? என்பதுதானே உங்கள் நினைப்பு. அப்படியே இருந்துவிடுங்கள்.

இப்போது இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காலத்தில், அடடா, ஏதோ தப்பு செய்துவிட்டோமோ? என்று நினைப்பு வரும். அந்த நேரத்தில்கூட அதை கடந்தும் விடலாம். ஆனால், நல்லதை சொல்லாமல் என்னால் இருக்க முடியாதே? அதனால் இந்த காணொளியில் சொல்லப்படும் விளக்கத்தை கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முடிவு.

மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது தேவைதானா? உண்மையும் ரகசியமும் என்ன? 

வாழ்க வளமுடன்

Is exercise a separate necessity when there is yoga? Yoga has everything, isn't it? Is that true?


வாழ்க வளமுடன் ஐயா, யோகாசனம் இருக்கும் பொழுது உடற்பயிற்சி என்பது தனியே அவசியமா? யோகாசனத்திலும் எல்லாமே இருக்கிறது அல்லவா? உண்மைதானே? விளக்குக.

யோகாசனம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன? என்பதை நீங்கள் பொதுப்பெயராக எடுத்துக் கொண்டீர்களா? அது வடமொழி சொல். யோக ஆசனம் என்பது உடலுக்கான பயிற்சி என்பதைத்தான் சொல்லுகிறது. யோகம் என்பது ஒழுங்குமுறை செய்தல், ஆசனம் என்பது உடலுக்கான நிலைகள். ஆனால் நீங்கள் யோகாசனம் வேறு, உடற்பயிற்சி வேறு என்று சொல்லுகிறீர்களே?  உண்மையாகவே இரண்டும் ஒன்றுதான்.

யோகாசனம் என்றால், கால்மடக்கி அமர்வது, மூச்சை கவனிப்பது, மூச்சை அடக்கி பிறகுவிடுவது, நிமிர்ந்து அமர்வது, வளைந்து நிற்பது, தலைகீழாக நிற்பது, கைகளால் உடலை தாங்குவது, கால்களால் உடலை தாங்குவது என்று பலவித ஆசனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும், எல்லோராலும் செய்ய முடியுமா?

மேலும் பொதுவாக உடற்பயிற்சி என்றால், ஓடுவது, நடப்பது, குதிப்பது, அமர்ந்து எழுவது, கைகால்களை சுழற்றுவது, குனிந்து நிமிர்வது என்றுதான் இருக்கிறது. கூடவே கைகளில் சில பொருட்களை தூக்குவதும், அவற்றை சுழற்றுவதும் இதில் உண்டு. இன்னமும் கூட கால்மூலம் குறிப்பிட்ட எடையை தாங்குவது, இழுப்பது என்றெல்லாம் நவின உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் எல்லோராலும் செய்ய முடியுமா?

பருவ வயதிலும், சுமாராக நாற்பது வயதுவரை உள்ள ஆண்கள் செய்யமுடியும். உடல் தளர்ந்தவர்கள் செய்யமுடியாதே? இந்த எல்லா பயிற்சிகளையும் பெண்களால் செய்யமுடிவதில்லை. சிலர் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் உடல்வாகு மாறியும் விடுகிறது.

இப்படியான நிலையில்தான், உடலுக்கு ஏற்றபடி, எல்லோரும் செய்யலாம், எப்போதும் செய்யலாம், எந்த நிலையிலும் செய்யலாம் என்ற வகையில்தான், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது. இப்போது ஒரு உண்மை புரியவரும். வழக்கமான யோகாசனம், உடற்பயிற்சி என்பதில் இருந்து சற்றே உயர்ந்த நிலையில் இருப்பது புரியவரும். அப்படி உங்கள் கருத்து இல்லை என்றாலும் சரி, இந்த  எளியமுறை உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு, செய்து பலன் பெறலாம்.

இங்கே எளியமுறை உடற்பயிற்சி என்பதை, எப்படி செய்யவேண்டும் என்றால், எதோ கை காலை அசைக்கிறோம் என்றில்லாமல், இது உடலுக்கான ஒழுங்கமைப்பை சீர் செய்கிறோம் என்ற கவனமும், நினைவும் அவசியம். அந்த அடிப்படையில் தான், எளியமுறை உடற்பயிற்சியை யோகமாக செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையை மேலும் அறிய, இந்த காணொளி உங்களுக்கு உதவும்.

உடற்பயிற்சியை யோகமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? உண்மை விளக்கம் ரகசியம்

வாழ்க வளமுடன்.

Why simple exercise? Why it is called by body penance? Give an explanation.


ஐயா, எளியமுறை உடற்பயிற்சி ஏதற்காக? ஏன்? உடல் தவம் என்று சொல்லப்படுகிறது? விளக்கம் தருக.


நம்முடைய இந்த உலக வாழ்க்கை, முதன் முதலில், அன்னையின் கருப்பைக்குள்ளாக உடலைக்கொண்டுதான் வடிவமைக்கப்படுகிறது. நாம் பிறந்தும் கூட, முன்று வருடங்கள் வரை, உடலை மட்டுமே வளர்த்தும் வந்திருக்கிறோம். அதுவும் நம்மால் அல்ல. அன்னை, தந்தை மற்றும் உறவுகளால் தானே? அதன் பிறகுதான் நமக்கென்று ஒரு பெயர் கூட இருக்கிறது என்று தெரியவருகிறது. அந்த வளரும் நிலையில் தான், தன்னையே நாம் அடையாளப்படுத்தவும் செய்கிறோம். நம் விருப்பு வெறுப்புக்களையும் வெளிக்காட்டுகிறோம்.

மூன்று வருடங்கள் வரை நமக்கு அடிப்படையாக அமைந்த உடலை, நாட்கள் செல்லச் செல்ல, அதில் கவனம் கொள்வதே இல்லை. அதனால்தான் இளமை கடந்த பிறகு, பலவிதமான உடல் சோர்வையும், நோய் தொந்தரவுகளையும் பெற்று துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம். 

இதெல்லாம் கவனத்தில் கொண்டுதான், இனிமேலாவது, உடலின் மேல் கவனம் செலுத்துக என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘எளியமுறை உடற்பயிற்சியை’ வடிவமைத்துத் தந்தார். இந்த உடலின்றி உலக வாழ்க்கை ஏது? நான் யார்? என்ற உண்மை அறியும் யோகப் பயணம் ஏது? அதனால், உடலின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எளியமுறை உடற்பயிற்சி  உடல் தவம் என்று சொல்லப்படுகிறது.

இந்த உண்மையை, இந்த வேதாத்திரிய காணொளி வாயிலாகவும் அறியலாம்.

வாழ்க வளமுடன்.

Sir, the burden of my anxiety seems to be increasing every day. Due to this, I could not concentrate on any work. Is there a solution to this?


ஐயா, ஒவ்வொரு நாளும் என் கவலையின் சுமை கூடிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு தீர்வு உண்டா? எந்தெந்த வகையில் என் கவலையை போக்கமுடியும்? எனக்கு விளக்கம் தருக.

கவலை என்பது மனிதர்களின் அடிப்படை குணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நீங்களும் நானும் இன்னும் பலரும் அந்த வரிசையில்தான் இருக்கிறோம் எனலாம். எனினும் இந்த கவலை என்பது, நிஜமாகவே மனிதனின் அடிப்படை குணமா? என்று கேட்டால் அதற்கு பதில், ஆமாம் என்று சொல்லுவதற்கில்லை. மகிழ்ச்சி, பயம், நிறைவு, சினம் என்ற இயற்கை குணங்களோடு, கவலை,  ஏக்கம் என்று சில கலந்துவிட்டது. நாமும் அதை விட்டுவிடுவதாக இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே கவலை வந்துவிட்டது. aவர்களும் நமக்கு போட்டியாக கவலையை எடுத்துகொண்டுவிட்டார்கள். நமக்கு பெரிய பெரிய என்றால், அவர்களுக்கு அவர்களளவில் சிறிய சிறிய என்பதாக இருக்கிறது. இந்த கவலை குறித்து வேதாத்திரி மகரிஷி, தனியாக பாடமே அமைத்துவிட்டார். அதுதான் தற்சோதனை எனும் அகத்தாய்வில் ‘கவலை ஒழித்தல்’ என்று வைத்திருக்கிறார். கவனியுங்கள். கவலையை தீர்த்தல் அல்ல, ஒழித்தல் ஆகும்.

இந்த கவலை குறித்து எந்த ஆன்மீக, யோக பெரியோர்களும் தனியாக சொன்னதில்லை. இறையிடம், மெய்ப்பொருளிடம் முறையிடு. தீரும் என்றுதான் சொல்லுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியோ அதை, அந்த கவலையை ஆராய்ந்து அலசிப்பார் என்கிறார். அதை வகைப்படுத்தி புரிந்து கொண்டு, விளக்கம் பெற்று கவலையை ஒழித்துவிடு என்று அறிவுறுத்துகிறார்.

உங்கள் கவலை எத்தகையது என்பதை, உங்கள் கேள்வியிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால் எதனால் அது ஆரம்பமாகிற்று? என்பதை தனியாக நீங்கள் மட்டுமே அறிவீர்கள். எனினும். அந்த கவலையை தீர்க்க, இல்லையில்லை ஒழிக்க வழி உண்டு. மனவளக்கலையில், நீங்கள் கவலை ஒழித்தலை பாடமாகவும் படிக்கமுடியும். கட்டுரையாகவும் படிக்கமுடியும். உங்களிடம் உள்ள மனவளக்கலை புத்தகம், பாகம் ஒன்றில், இருக்கும் ‘கவலை ஒழித்தல்’ தலைப்பிலான பதிவை படித்துப்பாருங்கள். கூடுதலாக. இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

மன ஆற்றலை, நம்பிக்கையை அகற்றும் கவலை தேவையா? 

வாழ்க வளமுடன்.

-

Should we accept that there is suffering in life? Can't suffering be solved completely? What is the reason for this? What is the way to solve it?


ஐயா, வாழ்வில் துன்பமும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? துன்பத்தை முழுமையாக தீர்க்க முடியாதா? இதற்கு காரணம் என்ன? அதை தீர்த்திட வழி என்ன?

நமக்கு வாழ்வதற்கு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அதில் இன்பமும், மகிழ்ச்சியும் இருக்கிறது. அதன் காரணத்தையும், அதில் இருக்கின்ற உண்மையையும் அறிந்து கொண்டால், நம் பிறப்பும், வாழ்வும், நம்முடைய மூலமான நிலையையும் அறிந்துவிட்டால், பேரின்பமாக இருக்கும். இதைத்தான் பிறவிக்கடமை, பிறவி நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் பேரின்பம் என்றால், வேறு ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் செயல்படுத்திடவும் செய்கிறோம் அல்லவா? புலன்களைக் கடந்த ஓர் இன்பம் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. அதெப்படி ஐயா, புலன் கடந்து இன்பமாவது ஒன்றாவது? என்று எதிர்கேள்வி கேட்டு, இந்த உண்மையையும், அதை சொன்னவரையும் கூட ஒதுக்கித் தள்ளிவிடுகிறோம்.

பொதுவாகவே நம் வாழ்வில், பலப்பல உண்மைகள், நமக்கு காலம் கடந்து தான் தெரியருகிறது. அது மனிதருடைய இயலாமைதான். நமக்கு முன்னே புகையும், பனியும் படர்ந்து இருக்குமானால், அருகில் இருப்பவரை பார்க்க முடியாது. அவர் யார் என்று அடையாளம் காணவும் முடியாது. இப்படியாகத்தான், பல உண்மைகளை நாம் மறுத்து, கடந்து போய்விடுகிறோம். இன்னமும் கூடுதலாக, இதெல்லாம் தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளாவிட்டால் என்னய்யா? என்ன குடிமுழுகி போய்விடப்போகிறது? என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படித்தான், உங்களுக்கு முன் பிறந்த, உங்களின் முன்னோர்கள், கைவிட்டு விட்டார்கள். நாமும் அதே தவறை செய்யலாமா?

இந்த காணொளி வழியாக, உண்மையும், தீர்வும் பெறலாம். மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்வில் துன்பச்சிக்கல் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன? உண்மை விளக்கம் Difficulties & problems

வாழ்க வளமுடன்

Isn't it wrong to grow a body? Is Siddhar Thirumoolar right? What is the truth?


ஐயா, உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் சித்தர் சொல்லுகிறாரே. அப்படியாக உடலை வளர்ப்பது தவறுதானே? சித்தர் திருமூலர் சொல்லுவது சரியா? உண்மை என்ன?

சித்தர் பெருமகான், திருமூலரின் திருமந்திரம் நூலில், அந்த பாடலின் ஒரு வரியை எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த அளவில், இந்த கேள்வியை கேட்கிறீர்கள். உண்மையில் உங்கள் முடிவு தவறு. அந்த பாடல் முழுமையாக என்ன என்பதை, இதோ இங்கே பார்க்கலாமா?

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!’

என்ற இந்த கவியில், உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று தான் சொல்லுகிறார். ஆனால், எதற்காக அப்படி சொல்லுகிறார் என்பதையும் விளக்குகிறார் அல்லவா? மிக எளிய தமிழில் இருப்பதால், தனியாக விளக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். எனினும் சுருக்கமாக சொல்லுகிறேன். நாம் வாழும் வரை உடலும், உயிரும் இணைந்திருக்க வேண்டும். எந்த ஒன்று பாதிக்கப்பட்டாலும், பிரிந்தாலும் எல்லாம் முடிந்தது. இதற்கிடையில், நான் யார்? என்று தன்னை அறியவேண்டும். பிறவிக்கடனான கர்ம வினைப்பதிவுகளை நீக்க வேண்டும் அல்லவா?

அதற்காக வாழ்வையும் வளமாக்கிட வேண்டுமே! என்பதையே இந்த திருமந்திர கவிதையில் விளக்குகிறார். பொதுவாக, சித்தர்கள் இந்த உடலை, ஒரு பொருட்டாக கண்டுகொண்டதில்லை. அப்படித்தான் அவர்கள் கருதி, பல கவிகள் தந்திருக்கிறார்கள். திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், ‘இந்த உடல் எனக்கு ஒரு தடையாக இருக்கிறது’ என்று சொல்லுகிறார். இறை உண்மையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு, அப்படித்தான் தோன்றும். ஆனால், மகான் திருமூலர், நமக்காகவே இந்த கவிவழியாக உண்மை சொல்லுகிறார்.

சராசரி வாழ்வில் இருக்கும் மக்களுக்கு உண்மை விளக்கம் தரும் வகையில்தான் இந்த கவிதை உதவுகிறது. உடலை கெடுத்துக்கொண்டு, ஆன்மீகத்திற்கும், யோகத்திற்கும் பயணிக்க வேண்டியதில்லை. உடலும் வேண்டும், உடலும் வேண்டும், உண்மைப்பொருள் தேடுதலும் வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரைதான் சொல்லுகிறார். மேலும் இந்த உண்மை விளக்கத்தை, இந்த காணொளி வழியாகவும் அறியலாம்.

வாழ்க வளமுடன்.

-

How Even if we see a Gnani or a Guru who has realized the truth, the mind becomes calm?


ஐயா,  உண்மை உணர்ந்த ஞானியை பார்த்தாலும், குருவை பார்த்தாலும் நமக்கு, ஏதோ பாரம் நீங்கியதுபோல தோன்றுவது எப்படி? மனம் அமைதியாகி விடுகிறது. ஏதேனும் சக்தி அவர்களிடம் இருந்து வெளிவருகிறதா? விளக்கம் தருக.


நல்லவேளையாக, அதை உணர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. பெரும்பாலோருக்கு அப்படியான அனுபவம் கிடைப்பதில்லை. ஒரு இசை நன்றாக இருக்கிறதா? இனிமையானதா? அது மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறதா? என்பதை இசையை ரசிக்கும் பொழுதுதான் அறியமுடியும். என்னமோ சத்தம் கேட்கிறது, இரைச்சலாக இருக்கிறது, என்று கடந்து போகும் மனிதர், அந்த இசையின் இனிமையை அறிவாரா? இல்லைதானே? அதுபோல, ஞானியை, குருவை பார்க்கும் பொழுது அத்தகைய மன நிலைக்கு, பார்ப்பவரும் வரவேண்டும். பரபரப்பாக, சுடுதண்ணீரை காலில் ஊற்றியதுபோல என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தால் எப்படி இந்த மாற்றத்தை அறியமுடியும்?

உண்மை உணர்ந்த ஞானி, உயர்ந்த குரு இவர்களின் மனம், மிக மிக அமைதியாக இருக்கும். இறைநிலையோடு ஒன்றிவிட்ட தன்மையிலும், பேரானந்த நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களைச்சுற்றி ஒரு நல்ல சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. வேதாத்திரியத்தில் இருப்பவர்கள் இதை ‘ஜீவகாந்தம்’ என்று எளிதாக அறிந்திட முடியும். இந்த ஆற்றல் செழுமையாக, வளம் குறையாததாக அவர்களிடம் இருக்கும். அது நமக்கு தேவையான அளவில் கிடைக்கும். நமக்கு ஊடுறுவி நிற்கும். நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் அத்தகைய ஆற்றல் தேவை. எனென்றால், பல வழிகளில் நாம் அந்த சக்தியை இழந்து விடுகிறோம் அல்லவா?

இப்படியான, முற்றுணர்ந்த ஞானி, உயர்ந்த குரு ஆகியோரிடம் இருக்கின்ற சக்தியாற்றலை, ஆரா என்று அழைக்கிறார்கள். புத்தர் பெருமகானுக்கு, கிட்டதட்ட ஒருமைல் தூரத்திற்கு, அந்த ஆரா பரவி இருந்தது என்று சொல்லுகிறார்கள். கெட்ட எண்ணங்களோடு அந்த, சக்தியாற்றல் வளையத்திற்குள் வரும் ஒருவன், உடனடியாக நல்லவனாக மாறிவிடுவான் என்றும் சொல்லுகிறார்கள். இது உண்மையும், நிகழக்கூடியதுமாகும்.

போலியான ஞானி, குருவைப்போல வேடம் தரித்த வேடதாரி, இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் பழகவேண்டும். தோற்றத்தை வைத்து, கையெடுத்து கும்பிடுவதும், காலில் விழுவதும் நல்லதில்லை. உங்கள் சக்தியை அவர் வாறி எடுத்துவிடவும் கூடும். இந்த ஆரா குறித்த மேலும் பல உண்மைகளை, இந்த காணொளி வழியாக அறியலாமே!

ஆரா என்பது என்ன? ஜீவகாந்தத்தோடு தொடர்புடையதா? What is Aura? Is it Related to Bio-Magnetism?

வாழ்க வளமுடன்.