October 2024 | CJ

October 2024

Did you know Vethathiri Maharshi's explanation of natural consciousness and knowledge?


இயற்கை உணர்வும், அறிவும் குறித்து வேதாத்திரி மகரிஷி விளக்கம், உங்களுக்குத் தெரியுமா?

        இயற்கை உணர்வும், அறிவும் உலகில் வாழும், எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. அது இயற்கையின் கொடையாகவும் அமைந்துள்ளது. வாழும் அந்த வாழ்நாள் முழுவதும், அந்த உணர்வையும், அறிவும் பயன்படுத்திக் கொள்கிறது. நாமும் பயன்படுத்துகிறோம். அதுபோலவே புதிதாக, தன் அனுபவத்தால், மனிதனைத் தவிர மற்ற ஜீவன்கள், கற்றுக் கொள்கிறது.  ஆனால் மனிதனோ தன் ஆறாம் அறிவால், சிந்தித்து தன்னை மேம்படுத்தியும் கொள்கிறான். இதை வேதாத்திரி மகரிஷி எப்படி விளக்குகிறார்? 

உலகில் வாழ்கின்ற காலத்தில், இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு 'Instinct' என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த 'Instinct' என்பதற்கு மேலே 'Intelligence' அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் 'Intelligence' என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த “Intelligence” வந்த பிறகு தான் “அறிவு”, 'Knowledge' வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது 'Intelligence'. அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' 'Knowledge' என்று சொல்லலாம்.

இந்த 'Collective Knowledge' வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் 'Intuition' உண்டாகிறது, அதில் இருந்து தான் எல்லாம் வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. என்றவகையில், பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

What is wave motion? Where does it start? We know the true explanation.


அலை இயக்கம் என்பது என்ன? அது எங்கிருந்து தொடங்குகிறது? உண்மை விளக்கம் அறிவோம்.

அலை இயக்கம் என்பது, விஞ்ஞானம் சொல்லுகின்ற டார்க் மேட்டர் (Dark Matter)என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் இன்னமும் அந்த விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் என்பதையே ஒன்றுமில்லாதது என்கிறபொழுது, அதனையும் கடந்த டார்க் மேட்டரை என்ன சொல்லும்? இப்படித்தான் சொல்லுகிறது. ‘ hypothetical form of matter that is believed to make up 90 percent of the universe; it is invisible (does not absorb or emit light) and does not collide with atomic particles but exerts gravitational force. 

    இதன் விளக்கம், ‘பிரபஞ்சத்தின் 90 சதவிகிதம் என்று நம்பப்படும் பொருளின் கற்பனையான, அனுமானமாக வடிவம்தான் இந்த கருமைப் பொருள். இது பார்வைக்கு அகப்படுவதில்லை. ஒளியை ஏற்காது, பிரதிபலிக்காது. எந்த அணுக்களோடும், அணுக்கூட்டங்களோடும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஈர்ப்பு ஆற்றலை செலுத்துகிறது’. 

இந்த கருமைப்பொருள்தான், அலை இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அது அணுக்களின் சுழற்சியில் இருந்துதான் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் எங்கோ தொடங்கும் அலை, இங்கே வரலாம். இங்கே உருவாகும் அலை, அங்கேயும் போகலாம். இனி, அலை இயக்கம் ( Wave Theory) குறித்த உண்மைகளை காணலாம்.  

எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது.இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல்தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம். 

அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்துவரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection). அதனால் அது திரும்பிவருகிறது. 

ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை. அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது. 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், அதோடு மற்றொரு அலை மோதும்பொழுது ஊடுருவியும் (Penetration) போகிறது. 

அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக் கொண்டேயும் (Interaction) இருக்கும். 

ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக்கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.

நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுருவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக்கொண்டுமிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக அது கருமையத்தில் (Genetic Center) ஒரு பதிவு ஏற்படும். 

அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்ட இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக (Imprints) மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். 

ஆகவே நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில், அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இது தான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. 

இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் (Wave Theory) என்ற ஒரு நியதியை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடல் அலைபோல ஒயாது, எழும்பி, இறங்கி முடிந்து, மீண்டும் வந்து கொண்டே இருக்கக்கூடிய, இந்த அலை இயக்கம் வழியாக, மெய்ப்பொருள் உண்மையை, நாம் மிக எளிதில் புரிந்து கொள்ள வழி இருக்கிறது. அந்த வழி, மனவளக்கலை மன்றத்தில் தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் அந்த வழியாக, ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

கட்டுரையின் மூல வடிவம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

-

Do you know the importance of simple exercise and the completion of human life?


எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், மனிதனின் வாழ்க்கை உயர்வும் உங்களுக்குத் தெரியுமா?



மனிதனாக பிறந்தால், மற்ற எந்த உயிரினங்களையும் விட, உயர்ந்த நோக்கமும், கடமையும் அவனுக்கு உண்டு, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போகப்போகிறோம் என்று இல்லை. மனிதனாக ஏன் பிறந்தோம்? எதற்காக? நான் யார்? என்னுடைய மூலம் என்ன? என்று சிந்தித்து விடை அறியவும் வேண்டும். இயற்கை என்பது என்ன? பிரபஞ்சமும் என்ன? பிரபஞ்சத்திற்கு அப்பாலும் என்ன? என்று முன்னோர்கள் சொன்னதையும் ஏற்று, நாமும் உண்மை அறிய முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அதற்கு விடையும் கிடைத்துவிடும். மனிதனின் வாழ்வும் முழுமை பெறும். இந்த நோக்கமும், கடமையும் நிறைவேற வேண்டும் என்றால், வாழும் வரை உடல் வேண்டும் அல்லவா? உடலின்றி மனிதனுக்கு வாழ்வும், உலகமும் ஏது? சிந்திப்பீர்.

இத்தகைய உண்மையை கருத்தில் கொண்டு, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி, விளக்கமளிக்கிறார். ‘உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான்  இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். 

உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.

        உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது 'மனவளக்கலை' (Simplified Kundalini Yoga - SKY) பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

உடலும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். 

உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்:

1.  கைப்பயிற்சி (Hand Exercise)

2.  கால் பயிற்சி (Foot Reflexology)

3.  மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)

4.  கண்பயிற்சி (Eye Exercise)

5.  மகராசனம் (Maharasanam) 

6.  உடல் வருடல் (Massage)

7.  ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation)

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை.  ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.’

மனிதன், தன் உடல் குறித்து, திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்லுகிறது, கவனிப்போம்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’ 

என்றும், உடலை காத்திட வேண்டிய அவசித்தையும், இந்த கவி வழியாக விளக்குகிறார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே’

என்றும், திருமூலர் கூறியுள்ளார். எனவே ‘இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்’ என்று உறுதிபட வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்

-

Is Blackhole as a Dark matter in the DNA? What is result of the bio-chemical research?


கருந்துளை எனும் கருப்பொருள், உயிர்களின் மரபணுக்களிலும் உள்ளதா? உயிர் வள விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது?

Source from Hashem Al-Ghaili
  

        நாம் வாழும் காலத்தில், விஞ்ஞானம் என்ற Science (அறிவு இயல் அல்ல, விண் அறிவு அல்லது விண் ஞானம் என்பதுதான் சரியானது), பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்திய நாட்டின் ஆதாரமாக, திகழும் மெய்யியலுக்கு காட்சி வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது எனலாம். சிலர் இந்தியாவை, அவர்கள் வணிக ரீதியாக அணுகி, இங்குள்ள பல உண்மை தத்துவங்களை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுவார்கள். அதில் எதோ சில வகையில், உண்மை இருக்கலாம். மதிப்பு வாய்ந்தது என்று எதையேனும் நினைத்தால், எனக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்வது, மனிதனின் இயல்பு. மேலும், அது நம்மிடம் இருக்கும் பொழுது, அவற்றை மதிப்பில்லாததாக வைத்துக் கொண்டதும், நம்முடைய தவறுதானே?

ஆனால், எப்படி ஒரு மனிதனுக்கு, தன்னளவில், அறிவு பல நிலைகளில் இருக்கிறதோ, அதுபோல, பிரபஞ்ச அறிவு என்ற ஒன்று நிலைபெற்றிருக்கிறது. எங்கே? இந்த பிரபஞ்சத்தில்! இந்த பிரபஞ்ச அறிவு, மனித உயிர்களின் அறிவை, தன்னோடு இணைத்துக் கொள்கிறது.  இதனால்தான், ‘நான் நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய்’ என்றும், ‘நான் இதைத்தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், நீ செய்துவிட்டாய்’, என்றும், ‘இதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது, அதை நீ நிறைவேற்றி விட்டாய்’ என்றும் அதிசயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அதனால், இங்கிருந்து, திருடித்தான், அதை இன்னொருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நுணுகி ஆராய்ந்து கொண்டே இருந்தால், சிந்தித்துக்கொண்டே இருந்தால், பிரபஞ்ச அறிவானது, அதற்கான விளக்கத்தை, தூண்டுதலை கொடுத்துக் கொண்டே இருக்கும். மிகச் சரியாக, அதைபற்றிக் கொண்டு உயர்ந்தால், நம் கேள்விக்கான பதிலை, சந்தேகத்துக்கான விளக்கத்தை பெறமுடியும் என்பது உறுதியே. இதெல்லாம் நம்புறமாதிரியாய்யா இருக்கு?! என்று கேள்வி எழுப்புவோருக்கு, இதில் எந்த புனைவும், மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எல்லாம் பொய், கட்டுக்கதை, ஏமாற்றுவித்தை என்போருக்கு, தனியே எந்த விளக்கமும் இல்லை.

இனி, இன்றைய, விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு விளக்கத்தை இங்கே காண்போம். விஞ்ஞானம், மெய்யியலை விரும்புவதும், அணுகுவதும் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே, கருத்துக்கு நிகரான காட்சி, உருவம், வடிவம்  வேண்டும். அப்போதுதான் நம்பும். மெய்யியலை பொய்யியல் என்றுதான் நம்மில் பெரும்பாலோரும் சொல்லுகிறோம் அல்லவா? இந்த விஞ்ஞானம், தனக்கு புரியாத இரண்டு உண்மைகளை, விளக்க முயற்சித்து, தோற்றுக்கொண்டே இருக்கிறது, அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு விருப்பமில்லை, தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்கிறது, இன்னும் நகரும். சரி, அது என்னாய்யா அந்த இரண்டு? அது பொருள் மற்றும் ஆற்றல் (Matter and Power). இரண்டும் இருக்கிறது. ஆனால் அதன் மூலம் நாம் அறியோம் என்று கைவிரிக்கிறது. இன்றைய பதிவு, அந்த விஞ்ஞானம், கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்சிக்கிறது. காண்போம்.

உயிரியல் கருப்பொருள் (Dark Matter) - ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக் குறியீட்டிலும் இருண்ட பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எந்த அளவுகளில் என்றால், நமது முழு மரபணுவிலும், புரதங்களுக்கான டிஎன்ஏ குறியீடுகளில் 1 முதல் 2% மட்டுமே நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 98% மரபணு எதற்கும் குறியிடாது, இடமாக மட்டும் இருக்கிறது. இதை வெறுமை (Emptiness) என்று சொல்லுவார்கள். நான் அறிந்த, அன்பர் ஒருவர், இடமாக இருக்கிறது (Spaceness) என்கிறார்.

இந்த பெரிய அளவிலான, காலி இடமான, மரபணு குறியீடு, டிஎன்ஏவின் டார்க் மேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உயிரியல் இருண்ட பொருளில், குறியீட்டு அல்லாத டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பகுதிகள் அடங்கும். இந்த DNA வரிசைகளின் சரியான செயல்பாடு அல்லது அவை ஏன் நமது மரபணுவில் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. 

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த, இந்த குறியீட்டு அல்லாத டிஎன்ஏ உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அருகிலுள்ள மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன? மற்றும் எந்த வகையான உயிரணுக்களில் இது பாதிக்கிறது? என்பது ஆய்வில் இருக்கிறது.

இந்த இருண்ட பொருளில், ஆயிரக்கணக்கான புரோட்டீன் அல்லாத குறியீட்டு மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவற்றின் செயல்பாடுகள் அல்லது நோய் தாக்கத்தில், அவற்றின் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதர்கள், எலிகள் மற்றும் கோழிகள் போன்ற பல்வேறு உயிரினங்களில், இந்த இருண்ட பொருளின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உருவாகி வருகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மரபணு வரிசைகள் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறியிடப்படாத பகுதியிலிருந்து, இந்த நான்கு மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் நீக்கியபோது, ​​ எலிகளின் மூளையில் அசாதாரணங்களை அவர்கள் கண்டறிந்தனர், டிஎன்ஏவின் இந்த குறியீட்டு அல்லாத, டார்க் மேட்டர் பிரிவில் உள்ள பிறழ்வுகள், அல்சைமர் போன்ற மூளை நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இன்னொரு ஆராய்ச்சியின் முடிவாக, நமது இரைப்பைக் குழாயில் காணப்படும் சுமார் 40% முதல் 50% வரையிலான மரபணு தகவல்கள், எந்த விலங்கு, தாவரம், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது மனிதர்களுக்கு முன்னர் வகைப்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட எந்த வகையான உயிரினங்களுடனும் பொருந்தவில்லை என்று அறியப்படுகிறது.

அன்பர்களே, இந்த ஆராய்ச்சியின் மூலக்கட்டுரை உதவி, Hashem Al-Ghaili. இணையத்தில் கிடைப்பதால், நீங்களும் நேரடியாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி விளக்கங்கள், நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைதானே?

வாழ்க வளமுடன்.

-


Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?


உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள் உள்ளதா?

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா. உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள், வழிமுறைகள் சொல்லியிருக்கிறாரா? 


பதில்

தன்னுடைய வாழ்நாளில், தன் இறையுணர்தல் பயணத்தோடு, அதை மற்றவர்களுக்கும், அறித்தரும் வேளையில், அன்பர்களின் உடல்நலம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிறருக்கு அப்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதன் வழியாக கிடைத்த, அந்த மாற்றங்களையும், விளைவுகளையும் கூட ஆராய்ந்து, திருத்தி, முழுமை செய்திருக்கிறார்.  பல்வேறு வகையான ஆசனம், மூச்சுப்பயிற்சி, உடலியக்கம், அக்குபிரஷர் என்று எல்லாம் கலந்த ஒன்றாகவே, எளியமுறை உடற்பயிற்சியை அமைத்துத் தந்திருக்கிறார். 

    முக்கியமாக, கிட்டதட்ட உண்மையை இழந்திருந்த, சித்தர்களின், அற்புதமான காயகல்ப யோக கலையை, முழுமை செய்தும் தந்தார். எளிமையான குண்டலினி யோகத்தையும் கற்றுத்தந்தார். தன்னைப்போலவே நாமும், மெய்ப்பொருள் விளக்கம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அந்த வகையில், அவர் சொன்ன, உடல் நலம் பெறுவதற்கான அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளை இங்கே காணலாம். வாழும் வாழ்க்கையில், உடல் நலம் மீது அக்கறை கொண்டோர் யாவரும், கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று கூட சொல்லமுடியும். தங்களின் உடலின் மீதும், உயிரின் மீதும், வாழ்நாளின் மீதும் விருப்பம் கொண்டோர், இந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். மற்றவர்கள், வழக்கம்போல, ஒதுக்கி, தள்ளி வைத்துவிடலாம்.

இனி, 

  அடிப்படை: அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.  அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

        அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

ஐந்தில் அளவுமுறை: உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

உணவில் எளிமை: வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

சமநிலை தாக்கங்கள்: கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.  விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

மரு உந்து சக்தி: நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

ஆர்வமும் மாற்றமும்: நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

அகத்தாய்வு: மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை: உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது. 

தூய்மை பெறல்: உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

தன்னில் அக்கறை: எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின், இந்த விளக்கத்தை, நன்கு அறிந்து, நினைவில் கொண்டு, அதன்படி, நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால். தனிமனிதனாகவும் இன்புறலாம். குடும்பமாகவும், சமூகமாகவும் இன்புறலாம். உலக மக்கள் யாவருமே இன்புறலாம். இனிமை நிறைந்த வாழ்வை, எல்லோரும் வாழவும் வழியுண்டாகும்.

வாழ்க வளமுடன்.

-

How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?


வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.


பதில்: 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.

இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.

‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும்.  உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே.  அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்.  சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும்.  சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது.  அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’

‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு.  நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’

‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும். 

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.  தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’

வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Is it necessary to worship God? Can anyone get away from it? What happens if you don't? Give an explanation.


இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

பதில்:

ஒவ்வொரு மனிதனின், வாழ்க்கைச் சூழலிலும் இப்படியான கேள்வி எழுவதுண்டு. காரணம் என்னவென்றால், அவர்கள் இறையை, கடவுளை வேண்டிக் கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம், எதுவுமே உடனடியாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் கூட, பற்றாக்குறை ஆகிவிட்டது என்று கருதினார்கள். இதனால், அவர்களுக்கு ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் கிடைத்தது. அந்த அனுபவத்தின் வழியிலே, ‘அது’ இல்லையோ? என்ற கருத்துக்கு உடன்பட்டார்கள். இது இயல்புதான். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம்.

சமீபத்தில் ஒரு மீம்ஸ், நல்லவங்களை, கடவுள் சோதிப்பாரு, ஆனா கைவிட மாட்டாரு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர், அதான் நல்லவங்கன்னு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் சோதிக்கிறாரு? என்று கேள்வி கேட்கிறார். மேம்போக்காக, இது கிண்டல் கேலி என்று இருந்தாலும், நல்லவனாக இருந்தவன், ஏன் தவறு செய்தான்? எப்போது செய்தான்? என்ற கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய உண்மை விளக்கமாகலாம்.

முதலில், நாம் ஏதேனும் கேட்பதற்காகத்தான், இறை வழிபாடு என்ற எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். கேட்டால் கொடுக்கவும், உடனே கொடுக்கவும் எதிர்பார்ப்பதும் தவறு. பிறந்த பொழுது, நீ அழுதாய், உனக்கான உணவை, தாயின் பாலாக்கித் தந்தது யார்? பதிலாக ‘இயற்கை’ என்பார்கள். அந்த இயற்கைக்கு மதிப்பளித்து, உயர்வாக, இறைநிலை, அதை அறியும் வழி கட உள் (கடவுள்) என்பதாகத்தான் உண்மை இருக்கிறது. ஆனால், இதை நாம், கைவிட்டு விட்டோம். கேட்கும் பொழுதெல்லாம் கொடுக்கவும், கேட்பதெல்லாம் கொடுக்கவும் இறைநிலை எப்படி அசைந்து கொடுக்கும்? உனக்கானது எல்லாமே, உன் வாழ்க்கையோடு, செயல்களோடு, விளைவுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அது கண்ணுக்கும், வெளிப்படையாகவும் தெரிவதில்லை. ஒரு விதைக்குள் அந்த மரத்தைத் தரும் விதை இணைக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறதா? ஆனால், கருத்தாக உணர முடியும் தானே?

நம் வாழ்வோடும், செயல்களோடும், விளைவுகளோடும் நமக்கானது எல்லாம் கிடைப்பதை அறியாமல், அதையெல்லாம் மறந்துவிட்டு, கேட்டால் கொடுக்க வேண்டும், அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இறைநிலையை, நம் அளவிற்கு ஓர் சாராசரி மனிதராகவா நினைக்க முடியும்?

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, தரும் நேரடியான விளக்கத்திற்கு, மேற்கண்ட முன்னோட்டம் உதவலாம் என்று கருதுகிறேன். இனி, அவர் தரும் விளக்கத்தை காண்போமா? 

‘எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம் பொருள், இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது, நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?’

‘செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. 

உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.’

‘ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும், அங்கே விளைவு, கடவுள் செயல்தான். (That is the cause and effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு, உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ, அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை, உன்னுடைய செயலின் விளைவாக, காலையிலிருந்து மாலை வரையில் பார்த்தும் மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம். வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும்,

அந்நோக்கத்திற்கேற்ப, வாழும் முறை என்ன என்பதை அறிந்து கொள்வது ஞானம்.’

என்றவகையில், நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். நமக்குள்ளாக, அமைதியான நிலையில், சிந்தித்தாலும், அந்த சிந்தனையின் வழியில் ஆராய்ந்தாலும், உங்களுக்கு உண்மை விளக்கம் கிடைத்துவிடும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையும், எந்த வகையிலும் முரண்படாத செயல்முறைகளும் உண்டாகும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

-

What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-

Truth and Secret Explanation of Vethathiriya Kayakalpa Yoga Exercise by Vethathiri Maharishi


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?


பதில்: 

இதோ, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமில்லாமல், உலகில் உள்ள எந்த மனிதருக்கும், வளரும் பருவம் வந்த அனைவருமே கற்று பயன்பெற்று, உலகில் நிறைவாக, தன்னையறிந்து, முழுமைபெற, வாழ்நாளை சிறப்பிக்க, இப்பயிற்சியின் விளக்கம் தருகிறார். முற்றிலும், நோக்கம் திசைமாறி, சிதறிக்கிடந்த, சித்தர்களின் ‘காயகல்ப யோக கலையை’ ஒருங்கிணைத்து, திருத்தி அமைத்து, எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நமக்குத் தந்த, வேதாத்திரி மகரிஷிக்கு நம் வணக்கத்தை செலுத்துவோம். வாழ்க வளமுடன்.

        வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ’மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி - கற்றுணர்ந்து பயன் கொள்வீர்! விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும்.

அது நாம் உண்ணும் உணவு.

1. ரசம்

2. ரத்தம்

3. சதை

4. கொழுப்பு 

5. எலும்பு

6. மஜ்ஜை மற்றும்

7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். 

இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. 

        மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். 

இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.  எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக,

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் (வேதாத்திரி மகரிஷியின் வார்த்தையில்) ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.’ என்பதாக விரிவான விளக்கங்களை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்.

வாழ்க வளமுடன்.

-

Do planets affect an individual's living environment? Changing? What is the truth?


கிரகங்கள் தனி மனிதனின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கிறதா? மாற்றுகிறதா? உண்மை என்ன?


இதை ஒரு நீண்ட, விளக்கத்தின் வழியாகவே காணலாம். இல்லையேல், உங்களுக்கு, சரியான புரிதல் கிடைக்காது என்பது உறுதி. நாம் வாழும் இந்த புவியும் ஒரு கிரகம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் முக்கியமாக, நாம் நிலத்தில் நிலையாக வாழ்வதாகவே ஒரு கற்பனையில் இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? நாம் பிறந்தது முதல், வாழ்க்கையின் முடிவுவரை, நாம் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். எங்கே? இந்த பிரபஞ்சத்தில், நாம் அறியமுடியாத ஏதோ ஒரு இலக்கு நோக்கியே. இதை எப்படி அறியலாம்? மிக எளிமையாக, சூரியன் கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதும் போதுமானது. உண்மையிலேயே, சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதா? என்று கேட்டால், ஆம் என்பது உங்கள் பதிலா? அப்படியானால் நீங்கள், மாய உலகில் இருக்கிறீர்கள்.

உண்மை என்ன? நாம் வாழ்கின்ற பூமிதான், வடக்கு தெற்கை அச்சாக கொண்டு, மேற்கிலிருந்து கிழக்காக, தனக்குத்தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. கூடுதலாக சூரியனோடு இணைந்து, சூரியனை அச்சாக கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. இந்த உண்மையை நன்கு விளக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.

நாம் வாழும் பூமியோடு, கூடுதலாக பூமியை சுற்றும் சந்திரனையும் அறிந்து கொள்க. மேலும் சூரிய குடும்பத்தில் பூமி, மூன்றாவது கிரகம். நாம் வாழும் இந்த பூமியோடு, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களும் இணைந்து சுற்றி வருகின்றன. சனிக்கு அடுத்தும் நெப்டியூன், புளூட்டோ இரண்டு கிர்கங்கள் இருந்தாலும், அதனுடைய தூரம் காரணமாகவும், பலமில்லாத அலைகள் கொண்டிருப்பதால், இந்திய ஜோதிடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில், ‘இல்லை அவை கண்டுபிடிக்கபடவில்லை, பிறகுதான் அதை விஞ்ஞானம் கண்டுபிடித்தது’ என்று ஒருவர் சொன்னால், அது அவரின் அறியாமை. சாதாரண கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நட்சத்திரங்களை எப்படி இணைத்தார்கள்? அப்படியானால் அதெல்லாம் பொய்யா? அல்லது அப்போதே விஞ்ஞானம் இந்த, நட்சத்திரங்களை கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னதா? இதற்கு உங்கள் விடை என்ன?

இப்போது, உங்கள் கேள்வியின், பதிலுக்கு வருவோம். இப்படி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கும் கிரகங்கள், தன்னிலிருந்து அலைகளை வீசிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாம் நிலையாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும், சூரியனும், தன் குடும்பத்தை எடுத்துகொண்டு, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்தான் நட்சத்திரங்களின் அலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நட்சத்திரங்களும் கிரகங்கள்தான். வெகுதூரத்தில் இருப்பதால், அதை நட்சத்திரங்கள் என்கிறோம்.

இந்த அலைகள் எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்து, அதன் தூரம், அருகாமை என்கிற வகையில், பூமியை வந்தடைகிறது. பூமியும் ஓரளவில் பாதிப்படைகிறது எனினும், அதை நாம் உணர்வதில்லை. ஆனால் பூமியில் வாழும் நமக்கு, அந்த அலைகள், தனித்தனியாக, ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஏன்? மனிதன் முதற்கொண்டு எல்லா உயிரினமும், எல்லா பொருட்களும், அணுக்களால் ஆனவையே. காணும் பொருட்களெல்லாம் அணுக்களின் கூட்டு, காண்கின்ற நாமும் அணுக்களின் கூட்டுத்தான். இதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?

இதில், மனிதனுக்கு எப்படி, தனியான பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்துகின்றன? என்று சிந்தித்தால், உயிரின பரிணாமம் என்ற முதல் நிலைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். Evaolution என்று சொல்லப்படும் ஒன்றன் பின் ஒன்றான, சங்கிலித்தொடரான பரிணாமத்தில், உடலின், உடலுக்குள்ளாக அந்தந்த உறுப்புக்களின், உயிரின், மனதின் உருவாக்கத்தில், தனித்தனியான கிரகங்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது. இதை ஜோதிடத்தின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும். நாம் பிறக்கும் பொழுது, ஆங்காங்கே இருக்கக்கூடிய கிரகங்கள், ஒரு பதிவை தருகின்றன. அதை நாம், நம்முடைய ஜாதகமாக எழுதிக்கொள்கிறோம். அன்றிலிருந்து, நமக்கு ஏற்படும் தூண்டுதல்களில், நம் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த தூண்டுதலை புரிந்து, அறிந்து அதற்கு விளக்கமான பாதையில், நாம் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், உங்கள் வாழ்க்கைச் சூழல் மாற வாய்ப்புள்ளது. அதுபோல பாதிக்கப்படவும் செய்யும். மாறுதல் கொள்ளவும் செய்யும். உங்கள் ஜாதகம், உங்களுக்கான கையேடு என்பதை மட்டும் நினைவில் கொள்க. ஆனால் அது உங்கள் தலையெழுத்து என்று நம்பி விடாத விழிப்புணர்வு தேவை.

வாழ்க வளமுடன்.

-


If everything has already been provided, is it okay to ask for it?


எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?


கேள்வி

        ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.

        பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?


பதில்

பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.

‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே. 

எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது. 

மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.

இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.

அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’

வாழ்க வளமுடன்.

-

What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?


கடவுள், அவதாரம், பக்தி, வழிபாடு, சடங்குகள், விழாக்கள் ஆகியன தற்கால மக்களிடம் எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவீர்களா?


இந்த கேள்விக்கான பதிலை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிகத்தெளிவான பதிலும் தந்து, அதற்கான தீர்வும் தந்திருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே படிப்போம். இதோ,

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார், ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள், அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில், பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு, சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது, சிரமமாக இருக்கிறது.

அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும், இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும், ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும், அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது, குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும், ஒரு வடிவத்தையும் குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு, அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். 

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர், தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால், அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான், வழிபடுகிற பொருளையும் காண்கிறார்.  இத்தகைய வழிபாடானது, ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை, அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை வாழ்க்கை, எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?

வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். 

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன், ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. 

இந்த நிலைமை நீடிக்க விட்டால் தனி மனிதன், குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். 

ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே, அறியாமையினால் போட்டுக் கொண்ட, இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’என்று விளக்கிச்சொல்லி, அறிவுறுத்துகிறார்.

இதை நீங்கள் மேலோட்டமாக படித்து நகராமல், மறுபடி மறுபடி படித்து, அதன் வழியாக சிந்தனையில் ஆழ்ந்து, யோசிக்கும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மை, உள்ளது உள்ளபடியே புரிந்திடும் என்பது உறுதி. இத்தகைய உண்மை விளக்கம், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று நம் குருவோடு இணைந்து, நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

What is the relationship between man and God? Is that true and necessary?


மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? அது உண்மையும், அவசியமும் தானா?


இந்த கேள்வியை கேட்கும் வகையில், உங்களுக்கு இறை நம்பிக்கையும், அதுகுறித்த சிந்தனையும், மனிதன் பிறப்பு குறித்த ஆராய்ச்சியும், இயற்கை குறித்த வியப்பும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கடவுள் என்பதே பொய் என்ற கருத்து, அவ்வப்பொழுது மேலோங்கி, இளையோர்களிடம் திணிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். எனினும் அதுகுறித்து நாம் கவனம் கொள்ள அவசியமில்லை. ஏனென்றால், இந்த பிரச்சனையை, அவர்களுக்குள்ளாக இருக்கும், இறையாற்றலே சரி செய்துகொள்ளும் என்பது உறுதி. என்ன அதுவரை அவர்களுடைய வாழ்க்கை, பல திசைமாற்றங்களை சந்தித்து, இறுதியாக ‘ஓ, இதுதான் கடவுளா?’ என்று அவர்களின் கேள்விக்கு பதிலை, காலமே தந்துவிடும். சிலருக்கு தன் வாழ்நாளிலேயே கிடைக்கும். சிலருக்கு அவர்களின் வழியாக வரும் வாரீசுகளுக்கு கிடைக்கும். நாம் அதை எப்போது என்று தீர்மானிக்க வழியில்லை. எனவே, நாம் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். அது அவர்கள் பாதை, சென்று சேரட்டும், நாம் நம் பாதையில் பயணிப்போம்.

மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு அறியவேண்டும் என்றால், நாம், விஞ்ஞானத்தில் சொல்லப்படுகின்ற, ரிவர்ஸ் இன்ஞ்ஜீனியரிங் டெக்னாலஜிக்கு ( Reverse Engennering Technology) செல்லவேண்டும். இந்த பின்னோக்கிய அமைப்பியல் நுட்பம் என்பது, மனிதனின் மூலம் என்ன? என்ற கேள்வியாக ஆரம்பிக்கலாம். உயிர்வியல் ஆய்வாளரான, சார்லஸ் டார்வின், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றார். நவீன விஞ்ஞானம், இல்லை, குரங்குக்கு முன்னேயும், குரங்குக்கு பின்னேயும் பல நூறு பிறப்புக்கள் வந்தன. பிறகுதான் நவீன மனிதன் வந்தான் என்று சொல்லுகிறது. இந்த விஞ்ஞானம் எப்போது தொடங்கியது? புவியீர்ப்பு என்பதையே 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்கும் முன் இல்லையா? இருந்தது அதை, பதிவு செய்து விஞ்ஞானமாக்கவில்லை. அவ்வளவுதான்.

இவையெல்லாம், மக்களின் வாழ்வியலில் எல்லாம் கலந்துதான் இருந்தது. Proof என்று சொல்லக்கூடிய சான்று, தனியாக இல்லை. விஞ்ஞானம் என்ற அமைப்பும் உருவாகவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக, செய்யுள் வழியாக, கவி வழியாக வந்து கொண்டுதான் இருந்தது. இதையெல்லாம், பக்தி என்பதாக, சிலர் ஒதுக்கிவைத்தது, வாழும் மக்களுக்கான அநீதி. எனினும் உண்மை மறைவதில்லை.

இறை நிலை, தெய்வீகம், கடவுள், இயற்கை இப்படி எந்தெந்த வார்த்தையில் சொன்னாலும், ஒரே பொருளைக்குறிக்கும், மெய்பொருளை நாம், அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடவும் முடியாது. உயர்வான, மூலமான, என்றும், எங்கும், எப்போதும் இருக்கும் ஒன்றான முழுமை அது. வார்த்தைக்குள் சிக்கிடாதது. ஆனால், உணர்வுக்கும் அறிவுக்கும் கிடைப்பது. நிச்சயமாக அது கற்றறிவும், படிப்படிவும், அனுபவ அறிவும் அல்ல. சிந்தனையும், எண்ணமும் அற்ற ஓர் ஒப்பற்ற நிலை. இதை, வேதாத்திரி மகரிஷிதான், உள்ளது உள்ளபடி, விஞ்ஞானிகளுக்கும் புரியவைத்தார்.

அறிவும், விரைவுமாக, வேகமும் விவேகமுமாக, பேராற்றலும் பேரறிவுமாக, தன்னியல்பாக அதிர்ந்துகொண்டே இருப்பதும், தன்னிருக்க சூழ்ந்தழுத்தமாக இருப்பதும் எதுவோ அதுவே மெய்பொருள் என்கிறார். இதை உங்கள் வார்த்தை படி எப்படி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், ஒதுக்கித்தள்ளினாலும்கூட ‘அது இருக்கும், அதற்குள் நாம் இருப்போம், நமக்குளும் அது இருக்கும்’.

பரிணாமத்தில் எழுச்சியில், தன்மாற்றமாக உண்டான, பரமாணு முதல், மனிதன் வரையில் வந்த பயணம், மனிதன், நான் யார்? என்று தன்னை அறிந்த பொழுது முழுமை அடைந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஓர் மனிதனில் அது திருப்தி அடையவில்லை. ஒவ்வொரு மனிதனும், அந்த பயணத்தை முடிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவரை, பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக. உங்களிடம் எப்படி உங்கள் தாத்தா பாட்டியின் குணாதசியம் இருக்கிறதோ, அதுபோல உங்கள் குணாதசியம், உங்கள் பரம்பரைக்கு, வாரீசுகளுக்கு கடத்தப்படும். இல்லை என்று மறுப்பீர்களா?

இதையே கர்ம வினை என்று அமைகிறது. கர்மா என்ற வார்த்தை, உங்களை ஏதோ செய்கிற்து என்றால், செயல் விளைவு தத்துவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இயற்கையின், வினை விளைவு நீதி உள்ளடக்கமாக இருக்கிறது. யாரும், எதுவும், இதிலிருந்து தப்பமுடிவதில்லை. அதை புரிந்து கொண்டு, உங்களுக்கும், பிறருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பதிவுகளை நாம் விலக்கி, தூய்மை செய்துகொள்வது அவசியம். பிறப்பின் நோக்கமும் அதுதான். இறைநிலையின் தீர்ப்பும் அதுதான். அதை புரிந்து கொள்ளாதவரை, உங்கள் வாழ்க்கைப்பாடு திண்டாட்டம் தான். அதை தனியாக, இங்கே வார்த்தைகளால் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில், உங்கள் கேள்விக்கு விடை, புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-