October 2024 | CJ

October 2024

Will you explain briefly but clearly the real truth of Brahma Gnana?


பிரம்ம ஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை, சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கித் தருவீர்களா?


பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்களே, மிக எளிமையாக, தன் எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை வழியாக, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை விளக்கித் தருகிறார். இதை யாவரும், வார்த்தையால் விளங்கி கொள்ளுதல் சிறப்பு எனினும், அதை அனுபவபூர்வமாக, தனக்குள்ளாக, உணர்தலாக அறிந்து கொள்வதுதான், முழுமையான பலனைத் தரும். மனிதனாகப் பிறந்த, நோக்கமும் நிறைவேறிடும். வாழும் இவ்வுலக வாழ்வின் சிறப்பு அனுபவிக்க முடியும். அந்த பலனையும், அனுபவத்தையும் விளக்கிடுதல் எளிதன்று. உதாரணமாக சொல்லப்போனால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை ஆகிவிடும். ஒரு யோக சாதகரின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி என்ற வகையிலும், உண்மைகள் அவரை ஊக்குவிக்கும். இதோ, வேதாத்திரி மகரிஷியின் உண்மை விளக்கம் காண்போம்.
சுத்தவெளிதான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும்.
முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தின்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும் போது எழுகின்ற நுண் அலைகள் தான் காந்தம் எனும் நிழல் விண்கள்.
நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல்விண், நிழல்விண், காந்தம், காந்தத் தன் மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். 
பரமாணு முதல் கொண்டு, எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.
இந்த ஒவ்வொரு நிலைகளையும், நமக்குள்ளாக, கடந்து உள்ளே அறிவதின் வழியாகவே அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். இந்த உண்மையை அறிவதற்காகவே, தன் மாற்றமாக, பரிணாமத்தின் எழுச்சியாக, மனிதன் வந்தான். இந்த பிரம்மத்தை இறைவன் என்ற மதிப்பில் எளியமக்களுக்கு அறியத்தருவதுதான் பக்தியாக, யோகத்திலிருந்து மலர்ந்தது. ஆனால், பக்தி பலரிடம் சிக்குண்டு, பிரம்மம் இறைவனாகி, மனிதன் படைப்புத்தத்துவமாகி, தூரத்தையும், பிறப்பையும், வாழ்க்கையையும், காலத்தையும் அதிகமாக்கிவிட்டது. என்றாலும்கூட, இயற்கையே, அவ்வப்பொழுது அத்தகைய, பக்தி வழியில் ஆழ்ந்து, நிறைந்து, அடுத்த நிலை என்ன? என்று தேடும் மனிதர்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், வான்காந்தம் என்ற பேராற்றலில் தன்னை இணைத்துக்கொண்டு வழித் துணையாகவும் இருக்கிறார்.
வாழ்க வையகம்,  வாழ்க வளமுடன்.

What is the meaning of அ and உ in the spiritual by Tamil? Truth Explanation


அ நாவும் உ நாவும் சொல்லுவதென்ன? இதை எப்படி ஆன்மீகத்தில் நுழைந்தது? உண்மை விளக்கம்.


தமிழ் மொழிக்கென்று பலதரப்ப சிறப்பியல்புகள் அக்காலம் முதலாகவே உண்டு. தமிழில் இருந்து பிரிந்த மொழி பேசும், ஆய்வாளர்களும், தமிழை சிறப்பித்து போற்றுவதை நாம் காண்கிறோம். சங்க கால இலக்கியங்கள் தமிழிலே கிடைப்பதும், அதை இன்றும் கூட அந்த வடிவத்திலேயே படித்து, விளங்கிக் கொள்வதும் மிக சிறப்பானது ஆகும். தமிழ் மொழியின் காலம், அதன் எழுத்துக்களில் சொல்லப்படுவதுபோல, சந்திர சூரியர் இருக்கும் வரை, என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதியானது.

மனித வாழ்வியலுக்கு தமிழின் பங்கு அளப்பரியது. மெய்யியல் எனப்படும் இறையறிதலுக்கும், இயற்கை உணர்தலுக்கும், பக்தி வழியிலான வழிபாடுகளுக்கும் தமிழ் என்றும் உயர்வு என்பதில் ஐயமில்லை. தற்கான விஞ்ஞான உண்மைகளுக்கு, சமமான நிறைய உண்மைகள் இருந்தபொழுதும், அவை எல்லாம், பக்தி இலக்கியங்கள் என்று, நாம் தான் ஒதுக்கி வைத்திருக்கோம் என்று சிலர் சொல்லுவதையும் மறுப்பதற்கில்லை. சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் தமிழில் பெரும் பங்கை வழங்கினர். அதுபோலவே சைவ, வைணவ என்று பிரிந்திருந்தாலும், தமிழில் இறை உண்மையையும், விளக்கங்களையும் தருவதில் குறைஏதும் வைக்கவில்லை.

அப்படியாக, மெய்யியலில், மெய்ப்பொருள் இறை விளக்கத்தில் வந்து, கலந்து, சராசரி மக்களின் வாழ்வியலில் நின்றதுதான், இந்த அ நாவும் உ நாவும். அ என்பது அருவம் என்ற மாயமான ஒன்றை சொல்லும் குறிப்பாகும். உ என்பது உருவம் என்ற உணர்தல் வகையில் தரப்படும் குறிப்பாகும். அது ஏன் உணர்தலாக? என்றால், அதற்கு வடிவம் இல்லை என்பது விளக்கமாகிறது. இந்த அருவம், உருவம் என்பது எப்படி அர்த்தமாகிறது என்றால், ஒன்றுமில்லாதது, ஒன்றானது என்று சொல்லப்படுகிறது. அருவமே வெட்டவெளியாக, பாழ் ஆக குறிப்பிடப்படுகிறது. ஆதியாக இருந்தது பகவன் என்றாகி முதலாகவும் ஆனது என்ற திருவள்ளுவரை இங்கே நினைவு கூறலாம். விஞ்ஞானத்தில் மேட்டர் என்ற ஒன்றுமில்லாது, எனர்ஜி என்று ஆற்றலாக சொல்லப்படுவது போல. விஞ்ஞானத்திலும், இந்த மேட்டர், எனர்ஜி பிரிக்கமுடியாது என்கிறார்கள். அதுபோலவே அருவமும், உருவமும் பிரிக்கமுடியாது. 

இந்த உண்மையை, மெய்ப்பொருள் உண்மையை, குறிப்பாக அறிந்துணரும்படி,  அ, உ என்று சொன்னதுபோக, அதை மேலும் குறிப்பாக 8, 2 என்றும் குறிப்பிட்டனர். அதாவது தமிழ் எண்களாக. இப்போது அவை, தமிழ் எண்கள் வழக்கொழிந்து போய்விட்டது. உலகில் எல்லோரும் அரேபிய எண்களைத்தான், பயன்படுத்துகிறோம். எனினும் 0 என்பது இந்தியாவின் பங்கு என்று நிலைத்துவிட்டது.

அ என்பது தமிழ் எண்களில் 2 என்றும், உ என்பது தமிழ் எண்களில் 8 என்றும் எழுதப்படுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, குறிப்பிடும் பொழுது, ‘எட்டும் ரெண்டும் அறியா மூடருக்கு, எதைச் சொன்னாலும் விளங்கிவிடுவதில்லை’ என்ற சொல்வழக்கு இருந்தது என்கிறார். அந்த அளவிற்கு இது, சாராரி மக்களின் பேச்சு வழக்கிலும் கலந்துதான் இருந்திருக்கிறது. இன்றோ அப்படியில்லை.

இன்றும் கூட சில வயதான, அக்கால வாழ்வியலில் இருந்து மாறாத பெரியவர்கள். ஏதேனும் காகிதத்தில் எழுதும் பொழுது, உ என்று எழுதி தொடங்குவதை காணலாம். சிறுவயதில் நானும், இது என்ன உ? என்று கேட்டிருக்கிறேன். ‘இது பிள்ளையார் சுழி, இப்படி எழுதுவது, கடவுள் வணக்கம் போல’ என்று பதில் தருவார்கள். தமிழ் எழுத்தில் ஆரம்பம் என்றால், அ அல்லவா எழுதவேண்டும், இது என்ன உ? என்று அப்போதே குழம்பியதும் உண்டு. மனவளக்கலையில் இணைந்துகொண்ட பிறகுதான் உண்மை தெரியவந்தது. உ என்பது உருவம். இந்த உருவம், அருவத்தில் இருந்து ஆரம்பித்தது. ஐம்பூத தோற்றங்களால் மலர்ந்தது என்பதும் உண்மையாகிறது. இந்த ஐம்பூத தன்மையின் வெளிப்பாடாகவே, பிள்ளையார் (ஐந்து கரம்) என்றும் நின்றது உண்மைதானே? அருவம், உருவாமாகி, ஐம்பூதங்களாக மாறியது, பிரபஞ்சமாக, சூரியனாக, பூமியாக, சந்திரனாக, இயற்கையாக, தோற்றங்களாக, புல், செடி, மரமாக, ஜீவனாக, மனிதனாக எழுந்து நின்ற எழுச்சியும், பரிணாமமும் இங்கே காட்சியாக நிற்கிறது அல்லவா?

இதுதான் அந்த அ நாவும் உ நாவும் உணர்த்தும் உண்மைகளாகும். இவ்வளவு எளிமையாக, விளக்கமாக, அறிந்து, உணர்தலாக இருந்த வாழ்க்கை, திசை மாறி, எங்கெங்கோ சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறது எனினும், அவ்வப்பொழுது, இதுதான் உன்பாதை என்று இழுத்து வந்து நிறுத்தும் உண்மைகள்தான், நம்மை காக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work?


வேதாந்தம் என்பதற்கும், சித்தாந்தம் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எதை பயனுள்ளதாக கருதலாம்? எப்படி பயனாகிறது?

அந்தம் என்ற வடமொழி, முடிவான உண்மையை குறிக்கும் ஒரு சொல்லாகும். வேதம் என்பது உயர்வான உண்மை, மாற்றுக் கருத்தில்லாதது என்றும் பொருள் தரும் சொல்லாகும். அது மதிப்பானது என்ற தகுதியையும் பெற்றிருக்கும். பொதுவாகவே, வாழ்ந்த முன்னோர்களின் வழியாக, மனித வாழ்வை உயர்த்தக்கூடிய அருளுரைகள் இதில் அடங்கி இருக்கும். ஓவ்வொரு நிகழ்விலும், இயற்கையோடும், இறையாற்றலோடும் ஒருங்கிணைந்து, அறிந்து உணரப்பெற்ற உண்மைகளின் தொகுப்பு வேதம், அதை சொல்லும் வழிமுறையே வேதாந்தம் என்றாகிறது. உலகில் பல்வேறு, பாரம்பரியமான வேதங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் இருக்கின்ற வேதம் மிகச் சிறப்பானது. முழுமையானது என்பதை ஐயமில்லை. உலகுக்கே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.

சித் என்றால் உயிர் ஆகும். இந்த உயிரை ஆராய்ந்து, அதன் பஞ்ச பூதத்தின் முதன்மையான நிலையையும் அறிந்து கொண்டு, அந்த உயிரின் மூலமான, வெட்டவெளி என்ற மெய்ப்பொருள் நிலையையும் உணர்ந்து அறிந்தவர்கள் சித்தர் என்றாயினர். சித் என்ற உயிர் உண்மை வழியாக, மூலமும், முடிவான உண்மையையும் சொல்லும் பொழுது, அது சித்தாந்தம் என்றாகிறது. சித்தாந்தம் என்பது, சித்தர்கள் வழியாக, தமிழ்நாட்டில் தான் உருவானது. அக்காலம் முதல், உலகெங்கும் பரவி உள்ளது. எனினும் அதன் அடையாளம் பல்வேறு வகைகளில் சிதறிவிட்டது. வேறு வேறு பெயர்களில் மாற்றம் பெற்றுவிட்டது. ஆனால், சித்தாந்தத்தின் ‘மூலம்’ அதிலிருந்து விலகவில்லை.

வேதாந்தம் என்பது அறிவுக்கு விளக்கம் அளிப்பது என்றால். சித்தாந்தம் அந்த அறிவையே அறிந்துணரத் தருவதாகும். வேதாந்தம் கேட்டு, படித்து, சிந்தித்து ஏற்றுக்கொள்வதாகும். சித்தாந்தமோ உடல், மன, உயிருக்கான பயிற்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை, வார்த்தைகளால் விளக்குவதை விடவும், அனுபவமாக பெறுவதுதான் சிறந்தவழி. வெற்று வார்த்தைகளில் வித்தியாசப்படுத்தினால், அதன் தரத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே கவனம்.

இந்த இடத்தில், மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், விளக்கமான கருத்துக்களையும் அறிவோம். ‘தானே அவனாகவும் அவனே தானாகவும், சிவனே சீவனாகவும்,  சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான் தெளிவோடு திருப்தியும் வரும்.  இதை நமது மனவளக்கலை (Simplified  Kundalini Yoga - SKY) மூலம் சாதிக்க முடிகிறது.  தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும் பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும்.'

மேலும், ‘தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது.  முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும்.  அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அனுபோக பூர்வமாக பெற்றாக வேண்டும்’ என்கிறார்.

கூடுதலாக, ‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டு தான் உண்டு. அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே. ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும் இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும் எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். 

துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல் இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்க்கை முறையே பக்திமார்க்கம்.’என்று தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

Why is it exalted as divine power? How does it relate to us? What is the need to respect it?


இறையாற்றல் என்று உயர்வாக சொல்லப்படுவது ஏன்? நம்மோடு எப்படி தொடர்புகொண்டதாகிறது? அதற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?


பொதுவாகவே, நாம் வாழும் காலத்தில், இறை என்பது குறித்த சந்தேகங்கள் நிறைய உண்டு. காரணம் பன்னெடுங்காலமாக, அதை நாம் ஆராயாமல், உண்மை அறியாமல், பக்தியில் மட்டுமே திளைத்து இருந்ததுதான். பக்தி என்பது, மெய்ப்பொருளை விளக்கும் சிறு முயற்சி, அடிப்படை தத்துவம் மட்டுமே. அந்த பக்தியின் வழியாக, இறை என்று சொல்லப்படுவது எது? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யோகத்தின் வழியாக உணர்வேண்டியது அவசியம்.

ஆனால், உண்மை அறிகிறேன், அறிந்துவிட்டேன் என்று, தான் சொல்லும் விளக்கங்களிலேயே, நிலைத்து நிற்கமுடியாது தடுமாறும் விஞ்ஞான அறிவின் துணை கொண்டு, இறை என்பதே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடும் நிலைதான் நம்மோடு இருக்கிறது. ஆனால் உண்மை நிலைத்து இருக்கிறது. உங்களுடைய  இந்த மூன்று கேள்விக்கும், பதிலாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி விளக்கம் தருகிறார் என்று பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களான பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது. 

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. 

  வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

மகரிஷியின் இத்தகைய விளக்கம், உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒன்றையும் நுணுகி, ஆராய்ந்து பார்க்கவே, மனிதனுக்கான, மனிதனுக்கு மட்டுமான ஆறாம் அறிவு அவனுக்கு கிடைத்திருக்கிறது. எந்த உண்மையையும், இயற்கையையும் அவன் ஒதுக்கித் தள்ளுகிறானோ, அந்த இயற்கையே அந்த ஆறாம் அறிவையும் அவனுக்கு வழங்கி இருக்கிறது. உண்மை விளக்கம் பெறவும், அறிவின் முழுமையை பெறவும், யோகமே துணையாகிறது.

வாழ்க வளமுடன்.

-

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

What about the soul attachment and how to avoid it? Notes by Vethathiri Maharishi


ஆவி இறங்குதல், உடல்விட்ட ஆன்மாக்கள் நம் உடலில் பீடிக்காது இருக்க வழிகள் என்ன? எப்படி தடுத்துக் கொள்ளலாம்?


கேள்வி:

சுவாமிஜி! உடலைவிட்ட ஆன்மாக்கள் நம் உடலில் புகாது இருக்க (Immunity against Soul attachment) என்ன செய்ய வேண்டும்?


வேதாத்திரி மகரிஷியின் பதில்: 

Soul attachment என்று சொல்லக்கூடிய உடலை விட்ட ஆவியின் தொடர்பெல்லாம் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே உள்ளவர்களிடந்தான் வந்து சேர முடியும். தவத்தின் மூலம் நம் உயிர் இயக்கத்தை, உயிரிலிருந்து எழக்கூடிய மன இயக்கத்தை, நுண்மையான அலையியக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். 

எனவே, மனிதன் உணர்ச்சிவயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்குக் குண்டலினியோகம் அல்லது வேறுவிதமான உளப்பயிற்சியின் மூலம் மன அலையை ஓரளவு குறைத்து நுண்மையிலேயே வைத்துக் கொண்டோமேயானால் எவ்விதமான உயிர்த் தொடர்பு வந்தாலும், இணையவிடாது அதைத் தடுத்து விட முடியும். பிற உயிர் இணைய முடியாதிருக்க இதுதான் ஒரே வழி.

அதனுடன் மனதிலே பயம் இருக்கக் கூடாது. பயமிருந்தால் நமது சூக்கும சரீரம் நமக்குத் தெரியாமலே வெளிப்படும். அப்போது வேறு ஆவி வந்து நம்மோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

நாம் இரவிலே கண்ணாடி பார்த்துக்கொண்டே இருப்போமானால் நம்முடைய சூக்கும சரீரம் வெளிப்பட்டு, உடல் விட்ட ஆவியுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அப்படி நமக்குத் தெரியாமலே தொடர்பு ஏற்பட்ட பின், நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், எந்த உயிர் நம்மோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ அதனின்று பிரதிபலிக்கக் கூடியதொரு விகாரமான உருவம் நமக்குக் கண்ணாடியில் தோன்றக் காண்போம். அதனால் தான் இரவிலே நீண்ட நேரம் கண்ணாடி பார்க்கக் கூடாது என்பார்கள்.

அதிகமான வாசனைத் திரவியங்களை இரவிலே நாம் பூசிக் கொண்டால் அதன் மூலமாக நமது சூக்கும சரீரம் வெளியேறுவதற்கு வழியுண்டு.

இது போன்ற காரணத்தால்தான், இரவில் பூ வைத்துக் கொண்டு வெளியே போகக் கூடாது என்பார்கள். இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடித்து வந்தால் உடல் விட்ட வேறு ஆவிகள் நம்முடன் இணைவதைத் தவிர்க்கலாம்.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு ஆவிகள் இணைந்தாலும் அந்த ஆவிகளுக்குரியவர்கள் நல்ல எண்ணமும், தவ ஆற்றலும் உடையவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே உயிர் விட்டவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே மேம்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் நம்முடன் இணைந்து, நமக்கு நன்மை தருவார்கள். அவர்களும் பூரணம் அடைவார்கள்.

ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு இவற்றையெல்லாம் அறிந்து, ஆய்ந்து உணர்ச்சிவயப்படாத நிலையில் இருந்தால் பிற ஆவிகளின் தொடர்பை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-


Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi


கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?


கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?

பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.

பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.

இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.

மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.

எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.

விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.

இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.

கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,

   கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!

கட -  உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,

   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;

கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக் 

   கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!

கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.

   கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.

மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

Is God man Correct? What is the truth on it? What is the connection between the God and Human?


நான் கடவுள் என்பது சரிதானா? அதன் உண்மை என்ன? மனிதனுக்கும் மெய்ப்பொருளுக்கும் உள்ள தொடர்பு என்ன?



மெஞ்ஞானத்தின் வழியாக, சித்தர்கள், ஞானிகள், மகான்கள், இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து உணர்ந்தார்கள். அந்த விளக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கு, பக்தி வழியாக, கருத்தாக வடிவமைத்தார்கள். விருப்பமுள்ளோர் கற்றுத்தேர யோகம் என்ற மனதின் வழியாக உண்மையறியும் பயிற்சிகளையும் கொடுத்தார்கள். ஒரு மனிதனின் ‘பிறவி நோக்கமும், கடமையும், நான் யார்? என்ற உண்மை அறிதலே’ என்பதையும் அறிவுறுத்தினார்கள். அந்த வகையில்தான், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்று சொன்னார்கள். விஞ்ஞானமும், எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்தி வழியிலான கருத்துக்களை, படைப்புத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை, தெய்வம் என்பதையும் நம்புவதில்லை. வழிபாடு, மந்திரம் இவற்றையும் புறந்தள்ளுகிறது. ஆனால், சில உண்மைகளுக்கு, விடை தெரியாமல் தடுமாறுகிறது என்பதும் உண்மையே. 

உதாரணமாக, ‘உலகில் இருப்பதெல்லாம், காட்சியும், பொருளும் ஆனவை. அவை மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியானால், மாறாதிருப்பது எது? என்ற கேள்விக்கு ‘என்றும், எப்போதும், எவ்விடத்திலும் இருப்பது எதுவோ அதுவே முதன்மையானது. அதை மெய்ப்பொருள் என்று உயர்வாக அழைக்கிறோம்’ என்கிறார். இதை வெட்டவெளி, சுத்தவெளி, இறை, தெய்வீகம், சிவம், ஈசன் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, இதனில் நான்கு தன்மைகள் கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவை, 1) பூரணம் என்ற வற்றாயிருப்பு 2) வேகம் என்ற பேராற்றல் 3) விவேகம் என்ற பேரறிவு 4) காலம் என்று வகைப்படுத்துகிறார். இந்த விளக்கத்தை, அந்த உண்மை நிலையை, யோகத்தின் வழியாக, அறிந்து உணர்ந்தவர் மட்டுமே, தெளிவு செய்திட முடியும். சும்மா, வெறுமனே, மேம்போக்காக சொல்லுவதும், புரிந்து கொள்வதும் உண்மை விளக்கம் ஆகாது. மேலும் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த உணர்தலை, ‘அதுவாகி நின்று அந்நிலையில் உணர்வதாகும்’ என்றும் வேதாத்திரி மகரிஷி தெளிவு செய்கிறார். மாணிக்க வாசகரும், திருவாசகத்தில் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற ஒருமையை குறிப்பிடுகின்றார். இங்கே தான், அத்துவைதம் இரண்டற்ற நிலை தெளிவாகிறது. ஆனால், உலகவாழ்வில் மயங்கி, அன்றாடம் இன்பம் தேடி, துய்த்து வாழும், சராசரி மனிதனுக்கு இது புரியுமா? தெரியுமா? என்றால் மிகக் கடினமே. இந்த நிலையில்தான், அந்த சராசரி மனிதர்களிடம், சித்தர்கள் சொன்ன ‘நான் கடவுள்’ விளக்கம் தொக்கி நிற்கிறது. இந்த வார்த்தையை, சாராசரி மக்களுக்கு ஏற்றபடி, இன்னொருவிதமாக சொன்னால், ‘கடவுளே நானாகவும் இருக்கிறது’ என்பதே சரியாகும்.

மேற்கண்ட நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, வேதாத்திரி மகரிஷி தரும், விளக்கத்தையும் இங்கே அறிந்து கொள்வோம். இதோ, 

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்_ என்ற தலைப்பிலான ஞானக்களஞ்சிய கவிதையில்...
கடவுள் எனப் படுபவனே மனிதனானான், 
கருத்தியங்கி, கருத்தறிந்தான்; 
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான் 
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான் 
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக் 
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான் 
கடவுள் ரகசியமதனைவெளியாய்க் காட்டும்  
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி. 
 
  இந்த கவிதையில் பொதிந்துள்ள, உண்மையையும், அவரே விளக்குகிறார். எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
 
  மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான். 

  இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.
 
  மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் – அறிய வேண்டிய நிலையில் – உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாகக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை. 

  அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான். இந்தவகையில், விளக்கமும் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
-

Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation.


உங்களுக்குத் தெரியுமா? குண்டலினி சக்தியாற்றலும் யோக சாதனையும் உண்மை விளக்கம். 

    
        குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், பல்லாண்டு காலமாக, கடின முறைகளால் சிக்கி இருந்த, குண்டலினி யோகத்தை, தான் கற்றுத் தேர்ந்து, உண்மை உணர்ந்து, அதை விஞ்ஞானத்தோடு உதாரணங்களால், விளக்கி, புரியவைக்கும் வழியில், திருத்தி அமைத்தார், எளியமுறை குண்டலினி யோகமாக, இல்லறத்தை விட்டு விலகிடாமல், பருவம் வந்த அனைவருமே, ஆண், பெண் பேதமின்றி கற்று, நான் யார்? என்ற கேள்விக்கான பதிலைப் பெற்று, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தை பெற வழிவகை செய்தவர். குண்டலினி சக்தியாற்றல் குறித்தும், யோகசாதனை குறித்தும் சொல்லும் விளக்கம், இதோ, 

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல், கீழ்நோக்கி போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.  

  மனிதன் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம்.  

  இந்த உயிர்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும். 

  ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும்.  

  இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும். 

        இந்த குண்டலினி உயர்த்துதல், தேர்ந்த குருவின் வழியாக, தீட்சையாக மட்டுமே பெற வேண்டியது அவசியம். சுயமாகவோ, தானாகவோ, அனுபவம் இல்லாதோரிடமோ, குறுக்குவழியிலோ, மந்திட உச்சாடன பூஜை வழியாகவோ செய்துவிடக்கூடாது. இதைக்குறித்த விளக்கம் அறிய, இந்த காணொளி தொகுப்பு உங்களுக்கு உதவலாம்.

-

குண்டலினி உயர்த்துதலும் ஆபத்து காரணிகளும் - Kundalini Raising and Risk Factors

https://www.youtube.com/playlist?list=PLQQJZk6S322lsF-zw6W4w-dLqJeJx2pyb

வாழ்க வளமுடன்.

-

மூலவடிவம்: அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.

-


Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?


உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?


சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும்.  இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.  

இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.  

சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை  உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.

பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.  இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல்  செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.  

களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.  

இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில்  ஏழ்மை என்பது இருக்காது.  பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது.  அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.  

எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும்.  வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம்.  அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.

இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்

இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,

ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?

குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?

கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க. 

முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.

மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?

சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!  

சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.


வாழ்க வளமுடன்.

-

Did you know Vethathiri Maharshi's explanation of natural consciousness and knowledge?


இயற்கை உணர்வும், அறிவும் குறித்து வேதாத்திரி மகரிஷி விளக்கம், உங்களுக்குத் தெரியுமா?

        இயற்கை உணர்வும், அறிவும் உலகில் வாழும், எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. அது இயற்கையின் கொடையாகவும் அமைந்துள்ளது. வாழும் அந்த வாழ்நாள் முழுவதும், அந்த உணர்வையும், அறிவும் பயன்படுத்திக் கொள்கிறது. நாமும் பயன்படுத்துகிறோம். அதுபோலவே புதிதாக, தன் அனுபவத்தால், மனிதனைத் தவிர மற்ற ஜீவன்கள், கற்றுக் கொள்கிறது.  ஆனால் மனிதனோ தன் ஆறாம் அறிவால், சிந்தித்து தன்னை மேம்படுத்தியும் கொள்கிறான். இதை வேதாத்திரி மகரிஷி எப்படி விளக்குகிறார்? 

உலகில் வாழ்கின்ற காலத்தில், இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு 'Instinct' என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த 'Instinct' என்பதற்கு மேலே 'Intelligence' அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் 'Intelligence' என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த “Intelligence” வந்த பிறகு தான் “அறிவு”, 'Knowledge' வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது 'Intelligence'. அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' 'Knowledge' என்று சொல்லலாம்.

இந்த 'Collective Knowledge' வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் 'Intuition' உண்டாகிறது, அதில் இருந்து தான் எல்லாம் வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. என்றவகையில், பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

What is wave motion? Where does it start? We know the true explanation.


அலை இயக்கம் என்பது என்ன? அது எங்கிருந்து தொடங்குகிறது? உண்மை விளக்கம் அறிவோம்.

அலை இயக்கம் என்பது, விஞ்ஞானம் சொல்லுகின்ற டார்க் மேட்டர் (Dark Matter)என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் இன்னமும் அந்த விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் என்பதையே ஒன்றுமில்லாதது என்கிறபொழுது, அதனையும் கடந்த டார்க் மேட்டரை என்ன சொல்லும்? இப்படித்தான் சொல்லுகிறது. ‘ hypothetical form of matter that is believed to make up 90 percent of the universe; it is invisible (does not absorb or emit light) and does not collide with atomic particles but exerts gravitational force. 

    இதன் விளக்கம், ‘பிரபஞ்சத்தின் 90 சதவிகிதம் என்று நம்பப்படும் பொருளின் கற்பனையான, அனுமானமாக வடிவம்தான் இந்த கருமைப் பொருள். இது பார்வைக்கு அகப்படுவதில்லை. ஒளியை ஏற்காது, பிரதிபலிக்காது. எந்த அணுக்களோடும், அணுக்கூட்டங்களோடும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஈர்ப்பு ஆற்றலை செலுத்துகிறது’. 

இந்த கருமைப்பொருள்தான், அலை இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அது அணுக்களின் சுழற்சியில் இருந்துதான் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் எங்கோ தொடங்கும் அலை, இங்கே வரலாம். இங்கே உருவாகும் அலை, அங்கேயும் போகலாம். இனி, அலை இயக்கம் ( Wave Theory) குறித்த உண்மைகளை காணலாம்.  

எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது.இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல்தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம். 

அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்துவரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection). அதனால் அது திரும்பிவருகிறது. 

ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை. அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது. 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், அதோடு மற்றொரு அலை மோதும்பொழுது ஊடுருவியும் (Penetration) போகிறது. 

அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக் கொண்டேயும் (Interaction) இருக்கும். 

ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக்கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.

நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுருவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக்கொண்டுமிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக அது கருமையத்தில் (Genetic Center) ஒரு பதிவு ஏற்படும். 

அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்ட இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக (Imprints) மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். 

ஆகவே நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில், அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இது தான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. 

இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் (Wave Theory) என்ற ஒரு நியதியை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடல் அலைபோல ஒயாது, எழும்பி, இறங்கி முடிந்து, மீண்டும் வந்து கொண்டே இருக்கக்கூடிய, இந்த அலை இயக்கம் வழியாக, மெய்ப்பொருள் உண்மையை, நாம் மிக எளிதில் புரிந்து கொள்ள வழி இருக்கிறது. அந்த வழி, மனவளக்கலை மன்றத்தில் தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் அந்த வழியாக, ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

கட்டுரையின் மூல வடிவம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

-

Do you know the importance of simple exercise and the completion of human life?


எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவமும், மனிதனின் வாழ்க்கை உயர்வும் உங்களுக்குத் தெரியுமா?



மனிதனாக பிறந்தால், மற்ற எந்த உயிரினங்களையும் விட, உயர்ந்த நோக்கமும், கடமையும் அவனுக்கு உண்டு, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், போகப்போகிறோம் என்று இல்லை. மனிதனாக ஏன் பிறந்தோம்? எதற்காக? நான் யார்? என்னுடைய மூலம் என்ன? என்று சிந்தித்து விடை அறியவும் வேண்டும். இயற்கை என்பது என்ன? பிரபஞ்சமும் என்ன? பிரபஞ்சத்திற்கு அப்பாலும் என்ன? என்று முன்னோர்கள் சொன்னதையும் ஏற்று, நாமும் உண்மை அறிய முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அதற்கு விடையும் கிடைத்துவிடும். மனிதனின் வாழ்வும் முழுமை பெறும். இந்த நோக்கமும், கடமையும் நிறைவேற வேண்டும் என்றால், வாழும் வரை உடல் வேண்டும் அல்லவா? உடலின்றி மனிதனுக்கு வாழ்வும், உலகமும் ஏது? சிந்திப்பீர்.

இத்தகைய உண்மையை கருத்தில் கொண்டு, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி, விளக்கமளிக்கிறார். ‘உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம். இந்த வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான்  இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். 

உடற்பயற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லவை.

        உயிர் தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குழப்பத்தைச் சரிசெய்ய, மருந்து முதலியவை உயிருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊக்கமும் உதவியுமே. யோக முறையாகிய நமது 'மனவளக்கலை' (Simplified Kundalini Yoga - SKY) பயிற்சியால் உயிராற்றல் சேமிப்பு அதிகமாவதால் நோய் எதிர்ப்பாற்றலும், நோய் நீக்குகின்ற ஆற்றலும் நமக்கு எளிதாகக் கிட்டுகிறதென்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

உடலும் உயிரும் இணைந்த அந்தக் கூட்டுறவிலேயே இந்த வாழ்க்கையானது அமைந்துள்ளது. உடலுக்கும் உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அந்தப் பிணக்குதான் நோய். 

உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம். உடலுக்கும் உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம் என்கிறோம்.

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கின்ற வரையில்தான் உடல் நலமும், மனநலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியாக்கம் (நட்பு, உறவு) சீராக இருக்கும்.

ஆசனங்கள், உடற்பயிற்சிகள் எல்லாவற்றையும் நான் பழகி ஆராய்ந்து இந்திய வைத்திய சாஸ்திரங்களில் கிடைத்த அறிவையும் பயன்படுத்தி ஒரு முழுமையான உடற்பயிற்சித் தொகுதியை வகுத்துள்ளேன். அவைகள்:

1.  கைப்பயிற்சி (Hand Exercise)

2.  கால் பயிற்சி (Foot Reflexology)

3.  மூச்சுப் பயிற்சி (Neuro Muscular Breathing Exercise)

4.  கண்பயிற்சி (Eye Exercise)

5.  மகராசனம் (Maharasanam) 

6.  உடல் வருடல் (Massage)

7.  ஓய்வு தரும் பயிற்சி (Acu Pressure & Relaxation)

அறிவின் முழுமைப்பேறு அடைய நாம் பிறவி எடுத்துள்ளோம். அதற்கு அறிவு சுதந்திரமாக இயங்க வேண்டும். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை.  ஆகவே அறிவு சரிவர இயங்கவும் உடலை நோய் நொடியின்றி, வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமை. எப்போதும் சமநிலை உணர்வோடு பழகி, உடல் நலம் கெடாதபடி விழிப்போடு செயலாற்றி நலமடைவோமாக.’

மனிதன், தன் உடல் குறித்து, திருமூலரின் திருமந்திரம் என்ன சொல்லுகிறது, கவனிப்போம்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’ 

என்றும், உடலை காத்திட வேண்டிய அவசித்தையும், இந்த கவி வழியாக விளக்குகிறார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞ்ஞானம் தேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டா னென்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே’

என்றும், திருமூலர் கூறியுள்ளார். எனவே ‘இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக நாம் முயற்சிகள் மேற்கொள்ளவும் வேண்டும்’ என்று உறுதிபட வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்

-

Is Blackhole as a Dark matter in the DNA? What is result of the bio-chemical research?


கருந்துளை எனும் கருப்பொருள், உயிர்களின் மரபணுக்களிலும் உள்ளதா? உயிர் வள விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது?

Source from Hashem Al-Ghaili
  

        நாம் வாழும் காலத்தில், விஞ்ஞானம் என்ற Science (அறிவு இயல் அல்ல, விண் அறிவு அல்லது விண் ஞானம் என்பதுதான் சரியானது), பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்திய நாட்டின் ஆதாரமாக, திகழும் மெய்யியலுக்கு காட்சி வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது எனலாம். சிலர் இந்தியாவை, அவர்கள் வணிக ரீதியாக அணுகி, இங்குள்ள பல உண்மை தத்துவங்களை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுவார்கள். அதில் எதோ சில வகையில், உண்மை இருக்கலாம். மதிப்பு வாய்ந்தது என்று எதையேனும் நினைத்தால், எனக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்வது, மனிதனின் இயல்பு. மேலும், அது நம்மிடம் இருக்கும் பொழுது, அவற்றை மதிப்பில்லாததாக வைத்துக் கொண்டதும், நம்முடைய தவறுதானே?

ஆனால், எப்படி ஒரு மனிதனுக்கு, தன்னளவில், அறிவு பல நிலைகளில் இருக்கிறதோ, அதுபோல, பிரபஞ்ச அறிவு என்ற ஒன்று நிலைபெற்றிருக்கிறது. எங்கே? இந்த பிரபஞ்சத்தில்! இந்த பிரபஞ்ச அறிவு, மனித உயிர்களின் அறிவை, தன்னோடு இணைத்துக் கொள்கிறது.  இதனால்தான், ‘நான் நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய்’ என்றும், ‘நான் இதைத்தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், நீ செய்துவிட்டாய்’, என்றும், ‘இதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது, அதை நீ நிறைவேற்றி விட்டாய்’ என்றும் அதிசயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அதனால், இங்கிருந்து, திருடித்தான், அதை இன்னொருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நுணுகி ஆராய்ந்து கொண்டே இருந்தால், சிந்தித்துக்கொண்டே இருந்தால், பிரபஞ்ச அறிவானது, அதற்கான விளக்கத்தை, தூண்டுதலை கொடுத்துக் கொண்டே இருக்கும். மிகச் சரியாக, அதைபற்றிக் கொண்டு உயர்ந்தால், நம் கேள்விக்கான பதிலை, சந்தேகத்துக்கான விளக்கத்தை பெறமுடியும் என்பது உறுதியே. இதெல்லாம் நம்புறமாதிரியாய்யா இருக்கு?! என்று கேள்வி எழுப்புவோருக்கு, இதில் எந்த புனைவும், மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எல்லாம் பொய், கட்டுக்கதை, ஏமாற்றுவித்தை என்போருக்கு, தனியே எந்த விளக்கமும் இல்லை.

இனி, இன்றைய, விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு விளக்கத்தை இங்கே காண்போம். விஞ்ஞானம், மெய்யியலை விரும்புவதும், அணுகுவதும் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே, கருத்துக்கு நிகரான காட்சி, உருவம், வடிவம்  வேண்டும். அப்போதுதான் நம்பும். மெய்யியலை பொய்யியல் என்றுதான் நம்மில் பெரும்பாலோரும் சொல்லுகிறோம் அல்லவா? இந்த விஞ்ஞானம், தனக்கு புரியாத இரண்டு உண்மைகளை, விளக்க முயற்சித்து, தோற்றுக்கொண்டே இருக்கிறது, அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு விருப்பமில்லை, தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்கிறது, இன்னும் நகரும். சரி, அது என்னாய்யா அந்த இரண்டு? அது பொருள் மற்றும் ஆற்றல் (Matter and Power). இரண்டும் இருக்கிறது. ஆனால் அதன் மூலம் நாம் அறியோம் என்று கைவிரிக்கிறது. இன்றைய பதிவு, அந்த விஞ்ஞானம், கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்சிக்கிறது. காண்போம்.

உயிரியல் கருப்பொருள் (Dark Matter) - ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக் குறியீட்டிலும் இருண்ட பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எந்த அளவுகளில் என்றால், நமது முழு மரபணுவிலும், புரதங்களுக்கான டிஎன்ஏ குறியீடுகளில் 1 முதல் 2% மட்டுமே நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 98% மரபணு எதற்கும் குறியிடாது, இடமாக மட்டும் இருக்கிறது. இதை வெறுமை (Emptiness) என்று சொல்லுவார்கள். நான் அறிந்த, அன்பர் ஒருவர், இடமாக இருக்கிறது (Spaceness) என்கிறார்.

இந்த பெரிய அளவிலான, காலி இடமான, மரபணு குறியீடு, டிஎன்ஏவின் டார்க் மேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உயிரியல் இருண்ட பொருளில், குறியீட்டு அல்லாத டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பகுதிகள் அடங்கும். இந்த DNA வரிசைகளின் சரியான செயல்பாடு அல்லது அவை ஏன் நமது மரபணுவில் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. 

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த, இந்த குறியீட்டு அல்லாத டிஎன்ஏ உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அருகிலுள்ள மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன? மற்றும் எந்த வகையான உயிரணுக்களில் இது பாதிக்கிறது? என்பது ஆய்வில் இருக்கிறது.

இந்த இருண்ட பொருளில், ஆயிரக்கணக்கான புரோட்டீன் அல்லாத குறியீட்டு மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவற்றின் செயல்பாடுகள் அல்லது நோய் தாக்கத்தில், அவற்றின் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதர்கள், எலிகள் மற்றும் கோழிகள் போன்ற பல்வேறு உயிரினங்களில், இந்த இருண்ட பொருளின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உருவாகி வருகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மரபணு வரிசைகள் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறியிடப்படாத பகுதியிலிருந்து, இந்த நான்கு மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் நீக்கியபோது, ​​ எலிகளின் மூளையில் அசாதாரணங்களை அவர்கள் கண்டறிந்தனர், டிஎன்ஏவின் இந்த குறியீட்டு அல்லாத, டார்க் மேட்டர் பிரிவில் உள்ள பிறழ்வுகள், அல்சைமர் போன்ற மூளை நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இன்னொரு ஆராய்ச்சியின் முடிவாக, நமது இரைப்பைக் குழாயில் காணப்படும் சுமார் 40% முதல் 50% வரையிலான மரபணு தகவல்கள், எந்த விலங்கு, தாவரம், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது மனிதர்களுக்கு முன்னர் வகைப்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட எந்த வகையான உயிரினங்களுடனும் பொருந்தவில்லை என்று அறியப்படுகிறது.

அன்பர்களே, இந்த ஆராய்ச்சியின் மூலக்கட்டுரை உதவி, Hashem Al-Ghaili. இணையத்தில் கிடைப்பதால், நீங்களும் நேரடியாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி விளக்கங்கள், நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைதானே?

வாழ்க வளமுடன்.

-


Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?


உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள் உள்ளதா?

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா. உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள், வழிமுறைகள் சொல்லியிருக்கிறாரா? 


பதில்

தன்னுடைய வாழ்நாளில், தன் இறையுணர்தல் பயணத்தோடு, அதை மற்றவர்களுக்கும், அறித்தரும் வேளையில், அன்பர்களின் உடல்நலம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிறருக்கு அப்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதன் வழியாக கிடைத்த, அந்த மாற்றங்களையும், விளைவுகளையும் கூட ஆராய்ந்து, திருத்தி, முழுமை செய்திருக்கிறார்.  பல்வேறு வகையான ஆசனம், மூச்சுப்பயிற்சி, உடலியக்கம், அக்குபிரஷர் என்று எல்லாம் கலந்த ஒன்றாகவே, எளியமுறை உடற்பயிற்சியை அமைத்துத் தந்திருக்கிறார். 

    முக்கியமாக, கிட்டதட்ட உண்மையை இழந்திருந்த, சித்தர்களின், அற்புதமான காயகல்ப யோக கலையை, முழுமை செய்தும் தந்தார். எளிமையான குண்டலினி யோகத்தையும் கற்றுத்தந்தார். தன்னைப்போலவே நாமும், மெய்ப்பொருள் விளக்கம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அந்த வகையில், அவர் சொன்ன, உடல் நலம் பெறுவதற்கான அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளை இங்கே காணலாம். வாழும் வாழ்க்கையில், உடல் நலம் மீது அக்கறை கொண்டோர் யாவரும், கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று கூட சொல்லமுடியும். தங்களின் உடலின் மீதும், உயிரின் மீதும், வாழ்நாளின் மீதும் விருப்பம் கொண்டோர், இந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். மற்றவர்கள், வழக்கம்போல, ஒதுக்கி, தள்ளி வைத்துவிடலாம்.

இனி, 

  அடிப்படை: அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.  அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

        அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

ஐந்தில் அளவுமுறை: உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

உணவில் எளிமை: வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

சமநிலை தாக்கங்கள்: கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.  விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

மரு உந்து சக்தி: நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

ஆர்வமும் மாற்றமும்: நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

அகத்தாய்வு: மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை: உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது. 

தூய்மை பெறல்: உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

தன்னில் அக்கறை: எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின், இந்த விளக்கத்தை, நன்கு அறிந்து, நினைவில் கொண்டு, அதன்படி, நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால். தனிமனிதனாகவும் இன்புறலாம். குடும்பமாகவும், சமூகமாகவும் இன்புறலாம். உலக மக்கள் யாவருமே இன்புறலாம். இனிமை நிறைந்த வாழ்வை, எல்லோரும் வாழவும் வழியுண்டாகும்.

வாழ்க வளமுடன்.

-

How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?


வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.


பதில்: 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.

இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.

‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும்.  உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே.  அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்.  சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும்.  சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது.  அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’

‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு.  நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’

‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும். 

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.  தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’

வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Is it necessary to worship God? Can anyone get away from it? What happens if you don't? Give an explanation.


இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

பதில்:

ஒவ்வொரு மனிதனின், வாழ்க்கைச் சூழலிலும் இப்படியான கேள்வி எழுவதுண்டு. காரணம் என்னவென்றால், அவர்கள் இறையை, கடவுளை வேண்டிக் கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம், எதுவுமே உடனடியாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் கூட, பற்றாக்குறை ஆகிவிட்டது என்று கருதினார்கள். இதனால், அவர்களுக்கு ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் கிடைத்தது. அந்த அனுபவத்தின் வழியிலே, ‘அது’ இல்லையோ? என்ற கருத்துக்கு உடன்பட்டார்கள். இது இயல்புதான். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம்.

சமீபத்தில் ஒரு மீம்ஸ், நல்லவங்களை, கடவுள் சோதிப்பாரு, ஆனா கைவிட மாட்டாரு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர், அதான் நல்லவங்கன்னு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் சோதிக்கிறாரு? என்று கேள்வி கேட்கிறார். மேம்போக்காக, இது கிண்டல் கேலி என்று இருந்தாலும், நல்லவனாக இருந்தவன், ஏன் தவறு செய்தான்? எப்போது செய்தான்? என்ற கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய உண்மை விளக்கமாகலாம்.

முதலில், நாம் ஏதேனும் கேட்பதற்காகத்தான், இறை வழிபாடு என்ற எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். கேட்டால் கொடுக்கவும், உடனே கொடுக்கவும் எதிர்பார்ப்பதும் தவறு. பிறந்த பொழுது, நீ அழுதாய், உனக்கான உணவை, தாயின் பாலாக்கித் தந்தது யார்? பதிலாக ‘இயற்கை’ என்பார்கள். அந்த இயற்கைக்கு மதிப்பளித்து, உயர்வாக, இறைநிலை, அதை அறியும் வழி கட உள் (கடவுள்) என்பதாகத்தான் உண்மை இருக்கிறது. ஆனால், இதை நாம், கைவிட்டு விட்டோம். கேட்கும் பொழுதெல்லாம் கொடுக்கவும், கேட்பதெல்லாம் கொடுக்கவும் இறைநிலை எப்படி அசைந்து கொடுக்கும்? உனக்கானது எல்லாமே, உன் வாழ்க்கையோடு, செயல்களோடு, விளைவுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அது கண்ணுக்கும், வெளிப்படையாகவும் தெரிவதில்லை. ஒரு விதைக்குள் அந்த மரத்தைத் தரும் விதை இணைக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறதா? ஆனால், கருத்தாக உணர முடியும் தானே?

நம் வாழ்வோடும், செயல்களோடும், விளைவுகளோடும் நமக்கானது எல்லாம் கிடைப்பதை அறியாமல், அதையெல்லாம் மறந்துவிட்டு, கேட்டால் கொடுக்க வேண்டும், அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இறைநிலையை, நம் அளவிற்கு ஓர் சாராசரி மனிதராகவா நினைக்க முடியும்?

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, தரும் நேரடியான விளக்கத்திற்கு, மேற்கண்ட முன்னோட்டம் உதவலாம் என்று கருதுகிறேன். இனி, அவர் தரும் விளக்கத்தை காண்போமா? 

‘எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம் பொருள், இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது, நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?’

‘செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. 

உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.’

‘ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும், அங்கே விளைவு, கடவுள் செயல்தான். (That is the cause and effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு, உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ, அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை, உன்னுடைய செயலின் விளைவாக, காலையிலிருந்து மாலை வரையில் பார்த்தும் மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம். வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும்,

அந்நோக்கத்திற்கேற்ப, வாழும் முறை என்ன என்பதை அறிந்து கொள்வது ஞானம்.’

என்றவகையில், நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். நமக்குள்ளாக, அமைதியான நிலையில், சிந்தித்தாலும், அந்த சிந்தனையின் வழியில் ஆராய்ந்தாலும், உங்களுக்கு உண்மை விளக்கம் கிடைத்துவிடும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையும், எந்த வகையிலும் முரண்படாத செயல்முறைகளும் உண்டாகும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

-

What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-