February 2025 | CJ

February 2025

It is only when you sit in meditation that the mind is more aroused than before. There is no way to prevent it or change it. I couldn't understand. Why does the mind work this way?


வாழ்க வளமுடன் ஐயா. தியானத்தில் உட்காரும் பொழுதுதான் முன்னைவிட மனம் அதிகமாக எண்ணங்களை கிளப்பி விடுகிறது. அதை தடுக்கவோ, மாற்றவோ வழியில்லை. வேதாத்திரியத்தில் சொல்லுவது போல அறிந்துகொள்ளவும் முடியவில்லை. ஏன் மனம் இப்படி செயல்படுகிறது? விளக்கம் தருக.



இந்த வாழ்வில், நாம் மனதைக் கொண்டுதான் வாழ்கிறோம். மனதின் வழியாகவே, இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்வுகளை பெறுவதற்கு பதிலாக, பலவித உணர்ச்சி போராட்டமான பேராசை, சினம், கவலை, வஞ்சம் இப்படியான அலைக்கழிப்புக்களை பெறுகிறோம். இதற்கிடையில், மனம் என்பது என்ன? என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுகிறோம் என்பதும் உண்மை.

மனம் என்பது இயற்கையின் தன்மைகளை தன்னகத்தே கொண்டது. ‘மனதின் அடித்தளமாக இருப்பது இறையே’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவரே ‘மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன்’ என்றும் சொல்லுகிறார். ஆனால், நமக்கோ மனம் போராட்டமாக இருக்கிறது.

பொதுவாகவே தினசரி நடவடிக்கைகளில், நாம் உணர்ச்சி வசப்பட்டே செயல்படுகிறோம். ஒரு ஆர்வமாக, எதிர்பார்ப்போடு ஒன்றை செய்கிறோம். பேசுகிறோம், எண்ணுகிறோம். இது எல்லாமே மனமும் கற்றுக்கொள்கிறது. அது பழக்கமாகவும் மாறிவிடுகிறது. பிறகு, நாம் போட்டுக்கொடுத்த பாதையில், நம்முடைய மனம் பயணிக்கிறது. ஆனால், அது நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. அதனால்தான், மனம் வேறு, நாம் வேறு என்று போராடிக்கொண்டு இருக்கிறோம்.

மனதிற்கு ஒரு வேலையை கொடுத்தால் அது, இருக்குமிடம் தெரியாது. ஆனால் சும்மா இருந்தால், அது, நீங்கள் சொல்லுவது போல, முன்னைவிட மனம் அதிகமாக எண்ணங்களை கிளப்பி விடுகிறது. உண்மைதான். ஆனால், நீங்கள், மனதை அறியமுயற்சித்தேன் என்றும் சொல்லுகிறீர்கள். அது நல்ல முயற்சி. எனினும் அதற்கு முன்பாக, ஆராய்ச்சிக்கு முன்பாக, மனம் என்பதை, இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த காணொளி உதவும்.

தியானம் செய்யும்பொழுது மனம் செயல்பாடு என்ன? உண்மை தெரியுமா? Mind status when we meditate.


வாழ்க வளமுடன்.
-

Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.



இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.

ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’

‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’

‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக,  உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’

‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப,  மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.

இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.

இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்.

We who live on this earth become attached to everything and are trapped in material life. Is there any way to change this? How can we bring about that change?


வாழ்க வளமுடன் ஐயா, இந்த பூவியில் வாழும் நமக்கு எல்லாவற்றின் மீதும் பற்று வந்து, பொருளியல் வாழ்வில் சிக்கித்தவிக்கிறோமே? இதில் ஏதேனும் மாற்றம் காண வழியுண்டா? எப்படி அந்த மாற்றத்தைக் கொண்டுவரலாம்?




நல்ல கேள்வி. ஆனால், இந்த கேள்வியும், அதற்கான ‘வழக்கமான பதிலும்’ பலருக்கு கோபத்தை, சினத்தை உண்டு செய்யும். அதனால், சில விளக்கங்களை மட்டும் இங்கே அறிந்துகொள்ளலாம். அதற்கான பதிலை நீங்களே அறிந்து கொள்ளலாம். நான் தனியாக பதில் சொல்ல தேவையில்லை. முதலில் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் தரவேண்டும். 

உங்கள் வாழ்வு எத்தகையது? கூட்டுக் குடும்பமா? தனிக்குடும்பமா? தனியாளாக இருக்கிறீர்களா? அரசாங்க வேலையா? தனியார் நிறுவன வேலையா? சொந்த தொழிலா? வியாபாரமா? நல்ல படிப்பும், அனுபவமும் உள்ளவரா? வேலைகளோடு நீங்கள் பொருந்தி இருக்கிறீர்களா? போதுமான வருமானம் உள்ளதா? சேமிப்பு செய்கிறீர்களா? கடன் தொல்லை இருக்கிறதா? வசிப்பது கிராமமா? நகரமா? தலை நகரா?

இந்த கேள்விக்கான பதிலும், விளக்கத்தை தர துணையாக இருக்கும். எப்படி தெரியுமா? இந்த உலகில் வாழும் எல்லா மனிதருக்கும், பொருளியல் நிலை என்றவகையில், முழுமை அல்லது நிறைவு இருக்கவேண்டும். அந்த நிலை வராமல், பொருள் பற்று குறையாது. எல்லாம் இருந்தும்கூட, இன்னமும் வேண்டும் என்று வாழ்வது அவரின் அறியாமை.

பசியை அடக்கிட, உணவு உண்கிறோம், பசி தீர்ந்தால்தான், அடுத்து உணவு குறித்த எண்ணம் எழாமல் இருக்கும். அதுபோலவே, பொருளியலில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல், அதில் திருப்தியையும், போதும் என்ற மனநிலையை உருவாக்கிட முடியாது. மேலும், இந்த உலகில் வாழும் வரை, பொருள் ஈட்டுதலை, பொருள் சேமிப்பை. பொருளின் பயன்படுத்துதலை உதாசீனம் செய்திடவும் முடியாது. அந்த பொருள் இன்றி, நாம் உலகில் வாழவும் முடியாது.

ஆனால், விழிப்புணர்வு எங்கே வேண்டும் என்றால்? இந்த அளவில் போதும் என்று நிறைவான மனம் கொள்ள வேண்டும். அதுவரை நாம் முயன்று நேர்வழியில், பொருள் ஈட்டியே ஆகவேண்டும். பரம்பரை வழியாக எல்லாம் இருந்தாலும், உங்கள் அளவிலும் அதை நிறைவு செய்து கொள்வதுதான் நல்லது ஆகும்.

இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கடைசி மூச்சுவரை, பொருளை தேடிக்கொண்டே இருந்தால், இருப்பதையும், பெற்றதையும், கிடைத்ததையும் உதாசீனம் செய்கிறோம் என்று அர்த்தமாகிறது. அந்த நிலைமைக்கு நாம் செல்லக்கூடாது. என்வாழ்வில், எனக்கு, இந்த அளவு போதும் என்ற நிலைக்கு, உயரவேண்டும்.

பொதுவாகவே மனிதனுக்கு அறியாமை உண்டு. சிறிய சங்கிலி, யானையின் காலில், சுற்றப்பட்டு ஒரு சிறிய கல்லோடு இணைத்து இருந்தால், அந்த யானை, தன்னால் எங்கும் ஓட முடியாது, இந்த சங்கிலியை தன்னால், கழற்றிட முடியாது. அந்த கல்லை எடுத்து வீச முடியாது என நினைக்குமாம். அதுபோல பொருளிலும் பொருளியல் வாழ்விலும் மனிதன் சிக்கிவிடக்கூடாது. பார்ப்பதெல்லாம் பெரிது, கடினம், என்னால் முடியாது, எனக்கு அவசியமில்லை என்பது, மாற்றத்தை எதிர்நோக்கி வாழாத, வாழ முடியாத தன்மையாகும்.

என் பிறப்பைவிட வாழ்வு பெரிது, வாழ்வை விட பணமும் பொருளும் பெரிது என்று நினைப்பது முற்றிலும் அறியாமை. பிறப்பின் உண்மையும், நோக்கமும் மறந்த செயல்பாடாகும். இப்படி அறியாமையில் இருப்பவர், அதே தன்மையிலேயே வாழ்ந்து, மடிந்தும் போகிறார்கள் என்பது சோகம். இதை, வரும்போது எதுவும் கொண்டுவந்ததில்லை, போகும்பொழுது ஏதும் கொண்டுபோவதுமில்லை என்ற மூத்தோர் மொழிவழக்கில் திருத்துவார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

பொன்னும், பணமும், பொருளும் பெரிதென மதிப்போர்க்கு, வாழ்வும் பூமி பெரிதென தோன்றலாம். ஆனால் அந்த பூமி எவ்வளவு சிறிது என்பதை, வெளியே இருந்து பார்த்தால்தான் தெரியும். இதோ இந்த ஒளிப்படம் காணுங்கள். சனி கிரத்தின் ஓரத்தில் இருந்து பூமி எப்படி தெரிகிறது? பூமி உண்மையிலேயே பெரிதா? பூமியே இத்தனை சிறிதாக இருந்தால், மற்றதெல்லாம்?

Source: Hashem Al-Ghaili

இப்படியாக, இந்த சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலம், அதுபோல பலப்பல அண்டங்கள், இவை எல்லாம் அடங்கிய பிரபஞ்சம் என்று இங்கிருந்தவாறே மனதை விரித்தால், பூமி எத்தனை சிறியது என்பது நமக்கு புரியவரும். அப்படியானால்? நாம் மதித்து போற்றி வாழும், பொன்னும், பொருளும், பணமும் எத்தகையது? சிந்தனை செய்துபார்க்கலாம். அதன் வழியாக ஏதேனும் புது சிந்தனை உங்களுக்கு எழுந்தால், என்னிடம் தெரிவியுங்கள்.


வாழ்க வளமுடன்.

-