2025 | CJ for You

2025

Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje


தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது தெரியுமா?

வாழ்க வளமுடன் ஐயா, தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? என்று விளக்குவீர்களா? என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். தன்னையறியும் யோக பயணத்தில், நாம் ஏதேனும் சொன்னால், சொல்லுபவரையே எடைபோட்டு, நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று கேட்டு காலை வாறிவிடும் அன்பர்கள் மத்தியில், இப்படியான கேள்விகளை கேட்டு தன்னைப்போல பிறரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதுபோலவே, என்ன சொல்லியிருக்கிறேன் என்றே அறியாமல், மேலோட்டமாக படித்துவிட்டு, ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?!’ என்று ஏளனம் செய்து, தன் தகுதியை வெளிப்படுத்திக்கொண்ட அன்பர்களையும் வாழ்த்துகிறேன். இத்தகைய அன்பர்கள்தான், என்னைப்போன்ற சாதகர்களுக்கு, படிகற்கள். நாம் சரியாக அடுத்தபடியில் நடக்கிறோமா? இல்லையா? என்று சோதனை செய்து, உறுதி செய்து கொள்வதற்கு உதவுகிறார்கள். இப்படி சொல்லுகிறாரே? என்று நானும் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் சொன்னால், அவருக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படியாக உணர்ச்சி வசப்பட்டால்கூட அது எனக்கு தளைதான்.

தளைகள் என்பது நமக்கு வேண்டாத சுமைகள் என்று சொல்லலாம். நம்மை தடுக்கும் கண்ணாடி சுவர்கள் அது. நம் கைகளை, கால்களை சுற்றி சிக்கலாகிக் கிடக்கும் கயிறு என்றும் சொல்லலாம். நம்முடைய முதுகில் ஏற்றி இருக்கும் பாரம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யோக வழித்துணையில் சுமை தேவையில்லை தானே? அத்தகைய சுமைகள் தான் தளை என்று சொல்லப்படுகிறது.

ஒரு பாறையில் ஒளிந்திருக்கும் சிலைக்கு, அதன் தேவையற்ற பாறைகள் தான் தளையும், சுமையும் ஆகும். அந்த பாறை சிற்பமாக மாறுவதற்கு, சிற்பி என்ற குரு தேவைப்படுகிறார். உளி என்ற யோக வழி தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாறைக்கு ஒன்றும் வேலையில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது தானே? ஆம். பாறைக்கு வேலை இருக்கிறது. அது, தான் சிற்பமாக மாற்றப்படும் வரை, பொறுமையாக குருவின் துணையையும், உளியின் செதுக்குதலையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, யோக பயிற்சியில், அதை சாதனையாக்கிட, மனம் ஒன்றி செயல்பட வேண்டும். இப்போது, இந்த தளை என்பதில் விடுதலையானது, எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருக்கும் அல்லவா?!

தளைகளை விடுவிப்பதிலும், யோக பயணத்தில் முன்னேறுவதிலும் அவசியமாக தேவைப்படுகின்ற ‘பொறுமை’ எல்லாவிதங்களிலும் நிலைபெற்று, உங்கள் வாழ்க்கையை, செயல்முறைகளை, வழக்கம் பழக்கங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லலாம். அப்படி இருந்த மனிதரா இப்படி மாறிவிட்டார்? என்று உங்கள் காதுபடவே பேசி அதிசயிக்கும் மனிதர்களை நீங்கள் காணமுடியும். ஆம். ஒரு புது மனிதராக நீங்கள் மாறிட முடியும் என்பதே உண்மை.

எனினும், தளைகளை களைதல், உடனடியாக நிகழக்கூடியதல்ல. இதற்கு பல காலங்கள் ஆகலாம். உதாரணமாக சொன்னால், பல பிறவிகள் கூட ஆகலாம் என்பதே உண்மை. அந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. இந்த தளைகள், நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக நம்மை வந்தடைந்தது. வந்துகொண்டும் இருக்கிறது. கூடுதலாக, பரம்பரை வழியாக, கருமூலமாகவும் நமக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை முற்றுணர்ந்த குரு, நமக்கு உதவியாக இருந்து, இந்த தளைகளில் இருந்து, நம்மை விடுவிக்க துணையாகவும் இருக்கிறார். அவர் காட்டுகிற வழியில், அந்த அறிவுரைகள்படி நாம் நம்மை திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் போதும். தளைகள் தானாகவே நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்த உண்மையை உங்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்தில்கூட, புதிதான தளைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளலாம். நம்மையறியாமல் சில தளைகள் நம்மீது படர்ந்துவிடும். அதை லாவகமாக, விட்டு விலகிட, விலக்கிவிட நாம் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. தளை என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்கள் யோக பயணத்தில் சிறக்க, உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.

Time is wasted in the economy to satisfy its own needs. Where do I join yoga, get Kundalini initiation and get true explanation? Very confusing. Is this why they ask me that I am not interested in yoga? What is your response to them?


வாழ்க வளமுடன் ஐயா, பொருளாதாரத்தில் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்திடவே காலம் வீணாகி விடுகிறது. இதில் நான் எங்கே யோகத்தில் இணைந்து, குண்டலினி தீட்சை பெற்று, உண்மை விளக்கம் பெறுவது? மிகவும் குழப்பமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கு யோகத்தில் ஆர்வம் இல்லை என்று கேட்கிறார்களே? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?


அவர் சொல்லுவது உண்மைதான். பக்தியில் இருக்கும் மனிதர், அதிலிருக்கும் உண்மை தத்துவங்களை அறிந்திட நினைத்தால், அவர் யோகத்திற்கு வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒரு சிலருக்கு, யோகத்தில் தானாகவே ஆர்வம் வந்துவிடும். அதற்கு காரணமாக இருப்பது, அவருடைய மூதாதையர்கள், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையின் ஊக்குவிப்பு. இவர்களுக்கு, தங்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொருளாதார வாழ்க்கையோடு போராடிக்கொண்டே யோகத்திலும் இணைந்து உயர்வார்கள்.

எனினும் ஒருவர், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பிறகுதான் யோகத்திற்கு வரவேண்டும் அல்லது வரமுடியும் என்பது தவறான கருத்து. அப்படிப்பார்த்தால், உலகில் உள்ள எல்லா பணக்காரர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் யோகத்திற்கு வந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்துவிட்டதா என்ன? இல்லைதானே?

ஆனால், ‘அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய பாமரனுக்கு யோகம் தேவையில்லை’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆமாம். அவனுக்கு ஒவ்வொருநாளும் மிகுந்த போராட்டமாகவே இருக்கும் அல்லவா? எப்படி வாழ்வது? எப்படி உணவு கிடைக்கும்? எதை சாப்பிடுவது? என்ன வேலை கிடைக்கும்? எப்போது தூங்குவேன்? என்ற சிந்தனை ஓட்டத்திலேயே இருக்கும் மனிதனுக்கு, யோகம் கற்க வாய்ப்பிருக்காது. அவன் பக்தியிலும் இருக்கமாட்டான். ஆனால், கடவுளே, என் நிலமை ஏன் இப்படி இருக்கிறது? என்று புலம்பிக்கொண்டுதான் இருப்பான். சரிதானே?

பொதுவாகவே, உலகில் வாழும் மனிதனுக்கு, பொருளாதாரம் அவசியம். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருள் பலம், அதன் உபயோகம் இல்லாமல் வாழமுடியாது. அந்த பொருளுக்காக, இன்னொரு மனிதரை சார்ந்தும் வாழமுடியாது. அப்படி சார்ந்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அது உண்மைதான், அதற்காக, தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை, சம்பாதித்துக் கொண்டே இருக்கமுடியுமா? அதுமட்டுமேதான் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? நாம், இந்த உலகில் பார்க்கின்றோமே? பலகாலம் ஓடிஓடி சம்பாதித்த பணத்தையெல்லாம், தீடீரென்று ஒருநாள், தன்னுடைய உடலில் ஏற்பட்ட நோய் தொந்தரவுகள் தீர்க்கும் மருத்துவமனைக்குத்தானே செலுத்துகிறார்?. உண்மைதானே? சிலர், தன்னுடைய சொத்துக்களையும் கரைத்துவிடுகிறார்கள். இதுபோலவே சில வழக்கு விசாரனைக்கும் தன் சம்பாத்தியத்தை வழங்கிவிடுகிறார்கள் அல்லவா?

சாரசரியான பொருளாதர உலகின் பார்வையில், பொருளாதார உயர்வை விட்டுவிட்டு, யோகத்திற்கு எப்படி வருவது? என்று உங்கள் நண்பரோ, வேறு சிலரோ கேட்பது உண்மையாகவே தோன்றும். யாருமே, பொருளாதரத்தை விட்டுவிட்டு யோகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை. நிச்சயமாக, வேதாத்திரியம் அப்படி சொன்னதே இல்லை. பொருளாதாரத்தில் நன்கு உயருங்கள். இந்த அளவில் போதும், நான் நிறைவாக இருக்கிறேன் என்ற நிலைக்கு வாருங்கள். உங்களுடைய பொருளாதாரம் பலமாக இருக்கட்டும்.  உங்கள் வாழ்நாளுக்கும் போதுமானதாகவே இருக்கட்டும். அதில் ஒருவகையான மன நிறைவை கொண்டுவாருங்கள். பொருளாதாரத்தில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இருப்பது வேறு. போதும் என்ற மன நிறைவை அடைவது வேறு.

இந்நிலையில், எனக்கு இருப்பது போதும் என்ற நிலையிலும், இந்த நிலையில் இருந்து என்னை நிறைவு செய்துகொண்டு, ‘என் பிறப்பின் நோக்கத்தை அறிவதையும், பிறப்பின் கடமையை தீர்த்திடவும் யோகத்தில் இணைகிறேன்’ என்று மாற்றம் கொள்ள வேண்டும். பொதுவாகவே, யோகத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொல்லுவார்கள். அதில் 1) வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு, 2) வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவு. இந்த இரண்டில் எது அவருக்கானது என்பதை சிந்தனை செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், ஒருபோதும், சம்பாத்தியத்தை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதையும் அவருக்கு விளக்குங்கள். அவர் அதில் நிறைவு பெறும் வரை, போதும் என்ற மனநிலை வரும்வரை பொருளாதாரத்திலும், சம்பாத்தியத்திலும் தொடரட்டும். அதுதான் அவருக்கு நன்மையுமாகும்.

இந்த உலகில் வாழும், ஓவ்வொரு மனிதனும், தன்னுடைய வேலை, வியாபாரம், தொழில் என்ற வகையில், பொருளாதார உயர்வை பெற்றே ஆகவேண்டும். தானும் உயர்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் வகையிலும் மாற்றத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். பிறரை உடலாலும், மனதாலும் வருத்தம் செய்யாத அளவில் தன்னளவில், பொருளாதார உயர்வை பெறவும் வேண்டும். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, இந்த அளவிலான பொருளாதார உயர்வு எனக்கு போதும் என்ற நிறைவை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விளக்கம் பெறாமல் யோகத்தில் இணைவதை தவிர்க்கலாம்.

என்ன இப்படி சொல்லுகிறீர்கள்? ஒரு யோகி இப்படி சொல்லலாமா? என்று கேட்பீர்கள். வேதாத்திரி மகரிஷியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். இதில் என் கருத்தாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒருவேளை, இயல்பாகவே, தானகவே, யோகத்தில் இணைந்திட வாய்ப்பு கிடைத்தால், கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. எதுவும் குழப்பம் அடையப்போவதும் இல்லை. வழக்கமான உங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகிடாமல், யோகத்தையும் தொடரலாம். நன்மையும் அடையலாம். இதனால் அதுவும், அதனால் இதுவும் கைவிட்டு போய்விடுவதில்லை. நிச்சயமாக, பொருளாதார நிறைவு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், யோகத்திலும் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள் என்பது உண்மையே. இதற்குச் சான்றாக நிறைய அன்பர்களும் இருக்கிறார்கள். சரிதானே?

மறுபடியும் நினைவுறுத்துகிறேன், பொருளாதார நிலையை, வாய்ப்புக்களை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை. அதுபோலவே பொருளாதார நிலையும், வாய்ப்பும் மட்டுமே அவசியம் என்று யோகத்தை கைவிட வேண்டியதும் இல்லை.

இந்த விளக்கத்தை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். நேரடியாக அவரை, இந்த பதிவை படிக்கச்செய்யுங்கள். தானாக உண்மை விளங்கிக் கொள்வார். சில நாட்கள் சிந்தனை செய்தார் எனில், நல்ல விளக்கமும் அவருக்கு கிடைக்கும். அதன்வழியில், அவருக்கு விருப்பமானதை தொடர ஆயத்தமாவார். உங்களுக்கும் ஒருவரை நன்வழிக்கு கொண்டுவந்த திருப்தியும் கிடைத்துவிடும் அல்லவா?

வாழ்க வளமுடன்.

-

At the end of the Vethathiriya meditation, instead of saying Om Shanti three times, it is a bit difficult to say Amaiti or peace. I don't think there's really peace there. Is it right to change it like this without saying Om Shanti? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவத்தின் முடிவில், ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்லுவதற்குப் பதிலாக, அமைதி என்று சொல்லுவது, சற்று நெருடலாக இருக்கிறது. உண்மையிலேயே அங்கே அமைதி வரவில்லை என்று கருதுகிறேன். ஓம் சாந்தி என்று சொல்லாமல் இப்படி மாற்றுவது சரிதானா? விளக்குக.


நீங்கள் வேதாத்திரி மகரிசியின் காலத்து வேதாத்திரிய அன்பர் என்று கருதுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்து கொண்டது 2006ம் ஆண்டில் தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே, ஓம் ஷாந்தி, அமைதியாக மாறிட்டது. இந்த மாற்றத்தற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்று நமக்குத் தெரியாது. எனினும், இந்திய அரசும், அரசியலமைப்பும், மக்களும், மதம் சார்ந்த அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே, தனித்த நிலையில் ‘அமைதி’ என்று மற்றம் செய்யப்பட்டது.

இதில் வேதாத்திரி மகரிஷிக்கு ஏற்பு உண்டா? என்றால் இல்லை என்றுதான் கருத இடமிருக்கிறது. காரணம், வேதாத்திரியம் என்பதே எந்த எல்லைக்குள்ளும் சிக்கிடாத தன்மை கொண்டது. ஆண் பெண் என்ற பேதம் கூட அதற்கு இல்லை என்பதுதான் நிச்சயமான உண்மை. அப்படி இருக்கும் நிலையில், ஓம் ஷாந்தி என்பது மதரீதியாக இருக்கிறது என்பது, புரிந்து கொள்ளாத தன்மை. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் உருவாகாமல இருக்க, மாற்றித்தானே ஆகவேண்டும்? அதனால் மாற்றப்பட்டுவிட்டது.

உங்களுக்கும் எனக்கும் ‘அமைதி’ என்று சொன்னால், அந்த வார்த்தை அமைதியை தருவதில்லை என்பது நிஜமே. ஏனென்றால், ஓம் ஷாந்தி என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால் கடந்த இரு தசாம்ச ஆண்டுகளாக, வேதாத்திரியம் பழகுவோரும், கற்பிக்கும் ஆசிரியரும், ‘அமைதி’ என்று சொல்லித்தான் அமைதியை நிலை நாட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. ஒரே நல்லது என்னவென்றால், இனிமேல் யாரும் ‘ஓம் ஷாந்தி’ என்று சொல்லி தவத்தை முடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தவில்லை. அந்த வகையில் விரும்புவோர் ‘ஓம் ஷாந்தி’ என்றும் சொல்லலாம். ‘அமைதி’ என்றும் சொல்லலாம். நீங்கள் கேட்ட இதே கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே ஒரு அன்பர் கேட்டுள்ளார். அந்த பதிவை இப்பொழுது உங்களுக்காக பகிர்கின்றேன்.  இந்த பதில் வழியாக, நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவரும் என்பது உண்மை. இதோ!

-

கேள்வி: சுவாமிஜி! உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

மகரிஷியின் பதில்: “ஓம்” என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கேத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று. அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க மௌனம் என்ற குணத்தை வைத்து மாத்திரைக் குறைவான “ம்” என்ற மகர மெய்யைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம். அதனுடன் சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலாதாரத்தில் எழுந்து, துரியத்தில் முடியும் உயிர் எழுத்தாக வருவது “ஓ” என்ற சப்தம் தான். “ஓ” என்ற சப்தத்துடன் “ம்” என்ற மகர ஒற்றை இணைத்து “ஓம்” என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது. இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். “ஓம் சாந்தி” என்று தவ முடிவில் கூறுவது நாம் எல்லோரும் இறையருளான அமைதி பெறுவோம் என்பதேயாகும். விருப்பப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தைகளைக் கூறாமல் விட்டு விடட்டுமே.

அப்படி விட்டுவிட்டால் அதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் ஏற்பட்டு உலக சமுதாயம் என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது தவமுறையில் ஒரே சீரானமுறை (Uniformity) போய்விடும்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

-

வாழ்க வளமுடன்!

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

Kundalini Yoga is meant to be practiced for many years, but it's funny that it is available immediately and a lifetime is enough. Is it also a deception that you can learn without Vasiyogam? Can you explain how mindfulness works?


குண்டலினி யோகம் பல்லாண்டுகாலம் கற்க வேண்டும் என்பதுதான் முறை, ஆனால் உடனே கிடைக்கும் என்பதும், வாழ்நாள் போதும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வாசியோகம் இல்லாமல் கற்கலாம் என்பதும் ஏமாற்றுவேலையோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. மனவளக்கலை எப்படி என்பதை விளக்குவீர்களா?

நீங்கள் இன்னமும் அந்தக்காலத்து மனிதராகவே இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உண்மையாகவே நீங்கள் உங்களை, இந்த நவீன காலத்திற்கு மாற்றிக் கொண்டீர்களா? இல்லையா? மற்றவர்களை பார்த்தாவது அந்த வாழ்வியல் மாற்றத்திற்கு வரவில்லையா? இன்னமும் பழமையில்தான் வாழ்கின்றீர்களா? என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? 

சித்தர்கள் வழங்கிய குண்டலினி யோகத்திலும், அவர்கள் வழியாகவே மாற்றமும், எளிய பயிற்சிகளும் வந்துவிட்டது. தீடீரென வேறு யாரும் குறுக்குவழியை, குண்டலினி யோகத்தில் தரவும் முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லை, உங்கள் வந்தடையவில்லை. அதனால் நீங்கள் இன்னமும் பழைய முறையைல், கடினமான வழியில், வீட்டை, நாட்டை, வேலையை, கடமையை, அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு, சந்நியாசி கோலம் கொண்டு, காட்டிற்கு போய்விட வேண்டும் என்ற காலத்திலேயே இருக்கிறீர்கள்! 

உண்மையை புரிந்து கொள்ள தயாராகுங்கள். குண்டலினி யோகம் என்ற  வார்த்தைதான், வேதாத்திரி மகரிஷியால், எளிய உண்மை அர்த்தம் தரும் ‘மனவளக்கலை’ என்றானது. இந்த, மனவளக்கலை என்பது பயிற்சி மட்டுமல்ல, அள்ள அள்ள குறையாத இயற்கை செல்வத்தை பெற்றிருக்கும் ஒரு பெட்டகம் ஆகும். அந்த செல்வத்தின் வழியாக, உங்களின் அன்றாட வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளலாம். உங்களுடைய பொருள்வளத்தையும் உயர்த்திக்கொள்ள தகுதியாக்கிக் கொள்ளலாம்.  எனவே, யோகத்தின் இணைவதால் என்னபயன்? என்ற கேள்விக்கு இடமில்லை.

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இதை நீங்கள் அடிப்படை பயிற்சியிலேயே தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடலை வளமாக்கும், எளியமுறை உடற்பயிற்சியை கற்றுத்தேரலாம். உயிரை வளப்படுத்தி, வாழும் நாளை சிறப்பாக்கிட, காயகல்பயோக பயிற்சி கற்றுக்கொள்ளலாம். குருவின் அருளாசியோடு தீட்சை பெற்று, தவம் கற்றுக் கொள்ளலாம். இத்தகைய மூன்று முக்கிய அம்சங்களும், உங்களுக்கு கிடைத்துவிடுகிறது.

இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும்.

சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே ‘மனவளக்கலை’ ஆகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்று விட்டால், அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய மாற்றம், எத்தகையோ பிறவிவழியாக நாம் கைவிட்டுவிட்டோம் என்பதே உண்மை. இன்று, இப்பொழுது கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? உடனே கைக்கொண்டு, நமக்கு பயனாக்கிக் கொண்டு, நம் பிறவியின் நோக்கத்தையும், கடமையையும் நிறைவேற்றிட வேண்டும். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Can we get everything we ask for through this Law of Attraction? Everyone says they won. But nothing happened to me? How long do you have to be confident? I came to know that Guru Vethathiri Maharshi has said a similar concept and method in Vethathriya also. Is that really the truth?


வாழ்க வளமுடன் ஐயா. இந்த Law of Attraction என்பதை சொல்லும் சீக்ரெட் நூல் வழியாக, நாம் கேட்பதை எல்லாமே பெறமுடியுமா? எல்லோருமே வெற்றி பெற்றதாக சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லையே? எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்? வேதாத்திரியாவிலும் இதுபோன்ற ஒரு கருத்தை, வழிமுறையை, குரு வேதாத்திரி மகரிஷி சொல்லி இருப்பதாக அறிந்தேன். அது உண்மைதானா? அதுகுறித்து விளக்குவீர்களா?

The Secret என்ற நூல் சமீபமாக, (14 ஆண்டுகளாக) உலக மக்களிடையே பிரபலமாகிவிட்டது. பலருக்கும் இது குறித்த விசயங்கள், பேசு பொருளாகி பகிரப்படுகிறது. இது திரைப்படமாகவும், நூலாகவும், கட்டுரையாகவும், ஒலி நூலாகவும் இணையத்திலும் கிடைக்கிறது. நானும் கூட அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாமே! என்று கவனித்தேன். ஆனால் முழுமையாக பார்க்க, படிக்க வாய்ப்பு அமையவில்லை. என்னுடைய சில நண்பர்கள்கூட, அதில் சில உண்மைகள் இருக்கிறது, உதவும், என்று சொல்லி படிக்க சொன்னார்கள். ஏனோ அது ஆர்வத்தை தூண்டவில்லை.


வேதாத்திரிய யோகத்தின் நல்விளக்கம், ஒருவர் பெற்றபின்பு, அவருக்கு வித்தியாசப்பார்வை இருக்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லாவகையான வேதாத்திரியம் அல்லாத கருத்துக்களிலும், அக்கருத்து சொல்லவருவது எது? என்ற உண்மை, அவருக்கு புலப்பட்டுவிடும். இதற்கு உதாரணமாக, இனிப்பு பண்டங்கள் பலப்பல வகையான பெயர்களில், வடிவங்களில், நறுமணங்களில் இருந்தாலும், அவை எல்லாமே, சர்க்கரை இனிப்பு என்ற ரசாயன தன்மையை மட்டுமேதான் பெற்றிருக்கின்ற என்ற அடிப்படை கருத்தில், ஒன்றிணைப்பதைப் போலவே ஆகும்.

எனினும், உங்களுக்காக, உங்கள் கேள்விக்காக, The secret, The power என்ற அந்த நூலை படித்தேன். ரூண்டா பைரன் என்ற பெண்மணி, தன் அனுபவங்களின் அடிப்படையில், அதுபோலவே சிந்தித்து அனுபவம் பெற்ற நபர்களை சந்தித்து, அவற்றை தொகுத்து, திரைப்படமாகவும், நூலாகவும் தந்திருக்கிறார். அதில் சில உண்மைகள் பொதிந்திருக்கிறது. எனினும், அது உலகாதாய விசாரணையாகவே இருக்கிறது. பொருள்முதல்வாத உலகியலில், மனிதனின் தேவைகள் மற்றும் மனம் குறித்து விளக்கினாலும், அங்கே அதற்கான பொது தன்மையில் மட்டுமே விபரம் கிடைக்கிறது. சில ஆன்மீகம் கலப்பு இருந்தாலும், யோகமாகவில்லை. எனினும், சாராசரி மனிதருக்கு தேவையான கருத்துகள் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கேள் கிடைக்கும் என்ற ரீதியில் இருப்பதும், நீங்களே மகத்துவமானவர், ஈர்ப்பு விதி உங்களிடமே இருக்கிறது, செயல்படுகிறது என்பதும், நன்றியுணர்வோடு இருப்பதும், நேர்மறை எண்ணங்களோடு இருப்பதும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தனியாக எதிர்க்கருத்து எனக்கில்லை. எனவே, என்னிடம் விளக்கம் எதிர்பார்ப்பதைவிடவும், நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு கலந்துரையாடி, உண்மை அனுபவத்தை தெரிந்து கொண்டு, உங்களுக்கான வழியை பெற்றுக்கொள்ளுங்கள். பொதுவாகவே, எதுவும் நடக்கவில்லையே? என்ற கருத்துக்கு உடனடியாக வந்துவிடவும் கூடாது. நம்பிக்கை இழக்கவும் கூடாது.

வேதாத்திரியத்தில், இறை என்ற பேராற்றலிடம், கேட்டுப்பெற மனிதனுக்கு தகுதி உண்டு என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இந்த பேராற்றலே, பிரபஞ்ச சக்தி, டோட்டாலிட்டி என்று சீக்ரெட் நூலில் குறிப்பிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் ஆனால், ஏற்கனவே கேட்டுவைத்த வரிசைப்படியேதான் நடக்கும் என்பதையும் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும், உன்னை தகுதியாக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறார். அதையேதான், Fraction demand Totality supplied என்றும் சொல்லுகிறார். தன் வாழ்க்கை அனுபவத்தின் வழியாகவே, அருட்காப்பும், சங்கல்பமும் தந்திருக்கிறார். அதன் விளக்கத்தை, தன் சொற்பொழிவிலும், கட்டுரைகளிலும், கவிகளிலும், என் வாழ்க்கை விளக்கத்திலும் தந்திருக்கிறார்.

இதனோடு, சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் என்பதையும், நமக்கு தந்திருக்கிறார். அதன் உண்மைகளையும் நமக்கு விளக்கியிருக்கிறார். யோகத்தில் நம்மை, நான் யார்? என்று உணர்ந்தறிவது, நம்முடைய பிறப்பின், நோக்கமும் கடமையும் ஆகும். அதனோடு, அந்த ஆராய்ச்சி பயணத்தோடு, உலக வாழ்க்கையும் முக்கியம், குடும்ப கடமையும், சமூக கடமையும் முக்கியம் அல்லவா? வேதாத்திரியம் இதை வலியுறுத்துகிறது. அந்தக்காலம் போல விட்டுவிட்டு செல்வது பொருந்தாது என்றும் சொல்லுகிறது. எனினும் வேதாத்திரிய கருத்துக்கள் தனித்துவமானவை. இவற்றை, The secret, The power, law of attraction என்பதை விளக்கும் நூலின் கருத்தோடு ஒப்பிட முடியாது.

மேலும் சில உண்மை விளக்கமறிய, இந்த காணொளி உதவிடும்.

பிரபஞ்ச அறிவு என்பது என்ன? அதனோடு இணைந்து கொள்வது எப்படி ? உண்மை விளக்கம் Universal Conscious, Human

வாழ்க வளமுடன்

Do we need these planets and stars when we try to know God in the form of meditation and penance in yoga? So Astrology and horoscopes are not necessary. Our yogic journey is beyond all that. Vedathri Maharshi would have risen accordingly. If that is the case, is your karmic astrological analysis wrong? What is your response to this?


வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் தவம் என்ற வகையில், இறைவனை அறியமுயற்சிக்கும், நமக்கு இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அவசியமா? ஜோதிடம், ஜாதகம் என்பதும் தேவையில்லை தானே? அதையெல்லாம் கடந்த ஒரு நிலையில்தான் நம்முடைய யோக பயணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியும் அதன்படிதானே உயர்ந்திருப்பார். அப்படி இருக்கும்பொழுது, உங்கள் கர்ம வினை ஜோதிட ஆய்வு தவறுதானே? இதற்கு உங்கள் பதில் என்ன?




உண்மை அறியாத நிலையில் இருந்து பார்த்தால், உங்கள் கேள்வி, மிகச்சரியான பார்வையாகவே தோன்றும். ஒருகாலத்தில், அதாவது நானும் என்னுடைய பருவ வயதில், வேதாத்திரிய தீட்சை பெற்ற காலங்களில், இப்படியாக நினைத்தது உண்டு. வேதாத்திரியத்தில் நுழைவதற்கு முன்பாகவே, ஜோதிடம் குறித்த அனுபவத்தையும், எப்படி பலன் அறிவது என்பதையும் கற்றுக்கொண்டிருந்தேன் என்பதும் உண்மை.

அதனால், நீங்கள் சொல்லுவது போலவே, நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள், மொத்தமான இந்த பிரபஞ்சம் என்ற எல்லை கடந்து, வெட்டவெளி என்ற இறைத்தன்மையை அறிந்து கொண்டிருக்கிறோமே?! இனி இந்த கிரகங்கள், ஜோதிடம், ஜாதகம் நம்பனுமா? என்று சிந்தித்திருக்கிறேன். அதுகுறித்து பேசியும் இருக்கிறேன். என்னுடைய மூத்த, மனவளக்கலை அன்பர் ஒருவரோடும் கலந்து பேசியிருக்கிறேன். அப்போதே அவர், ‘அப்படி இல்லை’என்று மறுதலித்தார். அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால், தொடர்ந்த என் ஆராய்ச்சியில், வேதாத்திரி மகரிஷின் பிரபஞ்ப பரிணாமும், உயிரின பரிணாமும் தலைப்பிலான, தத்துவ விளக்கத்தைக் கேட்டு, எனக்குள் அதை உணர்ந்தபொழுது, உண்மை அறிந்தேன். அதன்வழியே கிடைத்த விளக்கத்தை, என்பார்வையில் சுருக்கமாக தருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் தருவது கடினமே. எனென்றால், இதை பாடமாக தந்தால் கூட, அவ்வளவு எளிதில் புரியாது. எனினும் முயற்சிக்கிறேன்.

நீங்களும், நானும், தீடீரென்று வந்துவிடவில்லை. மாயாஜாலம் போல, யாரோ உருவாக்கி, இவ்வுலகில் விட்டுவிடவும் இல்லை. வெட்டவெளி என்ற இறைதன்மையில் இருந்து, பரமாணு உருவாகி, அது கூடி விண் என்ற பஞ்சபூத முதல் தோற்றமாகி, அதன்வழியே, மற்ற நான்கு தோற்றமாகி, கூடிக்கலந்து பிரிந்து, தோற்றங்களாக பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்களாகி, அதிலே ஒரு பூமியாகி வந்து நின்றது. இதுவரை நடந்த பிரபஞ்ச பரிணாமம் கடந்து, அந்த பூமியில் உயிரின பரிணாமம் நிகழ்ந்து, அந்த வழியில் ஆறாம் அறிவுநிறைந்த மனிதனாக நாம் மலர்ந்தோம்.

இத்தனை வரிசைகளை விட்டுவிட்டு, புறவழிச் சாலை (ByBass) வழியாக, நேரடியாக இறைநிலை அடைய வழியில்லை. மனிதனும், கோள்களும் அடிப்படையில் அணுக்களே. எனில், கோள்களின் அதிர்வுகள், மனிதனை வந்தடையும் என்ற உண்மையும் இருக்கிறதே?! மேலும் மனிதனின் ஆயுள் அற்பம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் வாழ்வது, புவி என்ற சூரியனை சுற்றிவரும் மூன்றாவது கோளில் தானே? புவிக்கு துணையாக சந்திரன் என்ற கோளும் உண்டு. மூலமான சூரியனும் உண்டு. சூரியன் சந்திரன் ஒளியலைகளும் நம்மை வந்தடைகிறதே? இதை கணக்கில் கொண்டு கணிக்கும், ஜோதிடம் பொய்யாகுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரம், கோள்களின் நிலை அறிவதே ஜாதகம். அதுஒரு குறிப்பேடு. அதை மறுக்கமுடியாது. விதைக்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் போலவே நமக்குள் சில ரகசியங்கள் உண்டு. அதை விளக்கிடும் ஒரு முயற்சியே ஜோதிடக்கலை. உண்மை திரிந்து போனது காலத்தின் கோலம்.

எனவே ஜோதிடம், ஜாதகம், என்பது தொடங்கி, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லாம் உண்மையும், சரியானதும் ஆகும். வேதாத்திரி மகரிஷி ஜோதிடத்தை மறுக்கவில்லை. அதை மற்றவர்களின் பார்வைபோல, ஆதரிக்கவும் இல்லை. ஆனால், உண்மையை விளக்கி இருக்கிறார். அதனால்தான், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்பதையும் நமக்கு வடிவமைத்தார். அந்த வழியில்தான், நானும், ஜோதிடம் வழியாக கர்ம வினை அறியும் ஆய்வையும் நடத்தி வருகிறேன். அதன் வழியாக பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மேலும் நேரடியான உண்மைகளை, உங்களுக்கு தரவேண்டும் என்ற ஆர்வத்தால், வேதாத்திரி மகரிஷியே விளக்கும் உண்மைகளை காணொளியாக தருகிறேன். உண்மை அறிந்து கொள்ளுங்கள்.

வேதாத்திரிய வானியலும் சோதிடமும் - Cosmology and Astrology by Vethathiriya ( 3 Videos on this Playlist)
வாழ்க வளமுடன்.
-

I am suffering from debt. But yoga has nothing to do with money, has nothing to do with it, even if it is opposite, can there be any explanation through you? I am asking this question in anticipation. It doesn't matter if some others make fun of me. Tell me the way to get rid of debt.


வாழ்க வளமுடன் ஐயா. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஆனால் யோகத்திற்கும் பணத்திற்கும் தொடர்பில்லை, சம்பந்தமில்லை, எதிர் எதிரானது என்றாலும், உங்கள் வழியாக ஏதேனும் விளக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே இந்த கேள்வியை கேட்கிறேன். வேறு சிலர் என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. கடன் தொல்லை தீர வழி சொல்லுங்கள்.

உங்கள் கேள்வியில் எந்த தவறுமே இல்லை. யோகத்திற்கு எதிரானது இந்த உலக இன்ப வாழ்வும், அதுதொடர்பான பணமும், பொருளும் என்ற கருத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார் வாழ்ந்தாலும், பணமும், பொருளும் அவசியமானது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்.

ஒரு ஞானியும், மகானும் கூட பணமும் பொருளும் இல்லாமல் வாழமுடியாது. அவர்கள் மக்களை அருள் துறையில் உயர்த்திட பாடுபடுவார்கள். மற்றவர்கள், அதாவது பொருள் துறையில் இருப்பவர்கள், அந்த ஞானிகளை, மகான்களை ஏற்று பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் காலத்தில், அதற்கு பணம், பொருள் ஈட்ட முடியாது. எனினும் அதன் தேவை இல்லாமல் இருக்கமுடியுமா? அந்த தேவையை, அக்குழந்தையின் பெற்றோரும், சமூகமும் ஏற்கும் அல்லவா? அதுபோலவே, வயதான நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. உண்மைதானே?

இந்நிலையில், யோகம் இதற்கெல்லாம் எதிரானது என்று நினைத்துக் கொள்வது, அறியாமை ஆகும். எல்லாவற்றையும் விட்டு விட்டு யோகத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அடுத்த வேளை பசியாற என்ன வழி? யோசித்தீர்களா? அப்படி ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா’என்று யார் உங்களை அழைத்தார்கள்? எனவே, யோகம், உலகில் வாழ்வுக்கு எதிரானது அல்ல. உண்மையாகவே பொருந்தி, உங்கள் உலக வாழ்வை, அனுபவமாக்கி உயர்த்தக்கூடியதே ஆகும்.

கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. அது அளவில் சிறிதாக, பெரிதாக இருக்கலாம் என்பதுதான் உண்மை. பல்வேறு சூழ்நிலைகளில், திட்டமிடாத பல வேலைகள், செயல்கள் வழியாக இழப்பு நேரிடலாம். இயற்கை சீரழிவு வழியாகவும் நாம் பாதிக்கப்படலாம். கோவிட்19 தொற்று போல இருக்கலாம். எனினும் கடனை தீர்த்திட வழிதேடி பயணிக்க வேண்டும். அது எப்படி என்பதை குருமகான் வேதாத்திரி மகரிஷியே விளக்கமும் தருகிறார்.

உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி, தான் வாழும் காலத்தில், பெரும் தொழில் அதிபர். பல்வேறு மக்களுக்கு வேலை கொடுத்து, நிர்வாகம் செய்தவர். அவருக்கும் கடன் தொல்லைகள் இருந்தது. அந்த அனுபவத்தை, தன் வாழ்க்கைப்பயணம் எனும் நூலிலும் தருகிறார். அவருக்கு நேர்ந்திட்ட அந்த சூழ்நிலை, நிச்சயமாக நாம் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அதை நான் இங்கே விளக்கவில்லை. அதை அவருடைய நூலில், அவருடைய கருத்தாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான, தன்னம்பிக்கை கூடும். வேதாத்திரி மகரிஷியின் அனுபவ கருத்தை  இதோ, இந்த காணொளி, உங்களுக்கான விளக்கமாக அளிக்கும்.

உங்களை வருத்தும் கடன் பிரச்சனை தீர வேதாத்திரி மகரிஷி சொன்ன வழிமுறை! How to solve the credit and loan

வாழ்க வளமுடன்.

-

In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer?


உங்களுடைய இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? இதெல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலை அல்லவா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா?


வேதாத்திரிய அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விளக்கம் அளிக்கவே எமது வேதாத்திரியா சேவை வழங்கப்படுகிறது. எனினும், உங்களைபோன்றோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவ்வப்பொழுது பொதுவான தலைப்புக்களில் பதிவும், விளக்கமும் தருவது உண்டு. எனினும் யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை.

யோகத்திற்கு தன்னை இணைத்துகொள்ள ஒரு மனிதன்  வரவேண்டுமானால், ஒரு மாங்காய், இயல்பாக மாம்பழமாக பழுப்பதைப் போல நிகழவேண்டும். கால்சியம் கார்பைட் (Calcium carbide) இரசாயனத்தை  மாங்காய்களோடு கலந்து, இயற்கைக்கு மாறாக பழுக்கவைப்பதில் பிரயோஜனம் இல்லை. எனினும் விளக்கிச் சொல்லுவதிலும், புரியவைப்பதிலும் தவறில்லை. முடிவு உங்கள் வசமே என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் பிறந்த இவ்வுலகில், ஏதேனும் கடமை, நோக்கம், காரணம் இருக்கிறதா? என்று சிந்தித்திருக்கிறீர்களா? உங்களோடு பிறந்தவர்கள் வாழ்வதுபோலவே, இதற்கு முன்னே வாழ்ந்தது போலவும், பல்வேறு வகையில் வாழ்ந்து, எல்லாம் அனுபவித்து, இவ்வுலகைவிட்டு நீங்கினால் போதுமானதா? அப்படியானால் ஏன்? எதற்காக? சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், இறை தூதர்களும் தோன்றினார்கள்? அவர்களுக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல, வேறு வேலை ஏதும் இல்லையோ?

இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? என்று கேட்பது, உங்களின் அறியாமையையும், இந்த உலகில் எந்த வகையில் நீங்கள் சிக்கி இருக்கிறீர்கள் என்பதையுமே, எடுத்துக் காட்டுகிறது.

நீங்கள் இன்னமும் அந்தக்கால, வாழ்க்கையை விட்டு ஓடும், யோகத்திலேயே நின்றுவிட்டீர்கள். யோகம் குறித்த உண்மையை நீங்கள் அறியவில்லை, மேலும் உண்மையை மறுக்கிறீர்கள். யோகம் உங்கள் பிறப்பின் ரகசியத்தை அறியும் வழி. இயற்கையோடு உங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி. நான் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பி பதில் தேடும் பாடம். மனித பிறவியின் நோக்கமும், கடமையும் அறிவதற்கான, தீர்ப்பதற்கான செயல்முறை. மேலும் கடவுள் என்றால்,  கட உள், கடந்து உள்ளே போய் கவனி என்பதுதான் அர்த்தமாகும். யாரையாவது சுட்டிக்காட்டி, இதுதான் கடவுள் என்று காட்டுவதல்ல. அது எங்களைப்போன்ற யோகியர்களின் வேலையும் அல்ல.

இப்போது, கேள்வியின் முக்கிய நிலைக்கு வரலாமா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா? தருகிறேன். இதோ, இந்த பதிவின் வழியாக, உண்மை விளக்கத்தை அறிந்து கொள்க.

உங்களுக்கு பணம், பொருள், செல்வ வளம் பிரபஞ்ச இயற்கையாற்றல் தருமா? முழு பதிவு!

வாழ்க வளமுடன்.

-


They say there is a planetary dosha in my horoscope. As a remedy for this, they say that a puja should be performed, which will cost so much money. I don't have that much money. While there is hope in that, is there any simple solution?


வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய ஜாதத்தில் கிரக தோஷம் இருப்பதாக சொல்லுகிறார்கள். இதற்கு பரிகாரமாக, பூஜை செய்யவேண்டும், அதற்கு இவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணமும் இல்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், ஏதேனும் எளிய தீர்வு இருக்கிறதா? இருந்தால் எனக்கு சொல்லுவீர்களா?

கிரக தோஷம் என்பது, நாம் பிறந்த பொழுது இருக்கிற கிரக நிலைகளின் அடிப்படையில் அமையும் நிலைகளாகும். இது என்றும் மாறாதது. எனினும் பரிகாரம் செய்வதால், நம்முடைய உடலும், மனமும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் பக்குவதை பெற்றுவிடும். பொதுவாக, நம்முடைய உடலில் ஒவ்வாத பிரச்சனையும், நோய்க்கான அறிகுறியும் வந்தால், மருந்து எடுத்துக் கொள்கிறோம். ஒருபக்கம் நோயை தீர்க்கவில்லை என்றாலும், அந்த நோய் தாக்கத்தை, தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அளிக்கிறது அல்லவா, அதுபோல பரிகாரமும் செயல்படும்.

பரிகாரமே இல்லை என்பதுதான் உண்மையான கருத்து. ஆனால், இதை வியாபாரமாக செய்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஜாதகத்தின் வழியாக, பரிகாரம் வேண்டுவோருக்கு நன்மைகள் செய்துதரும், உண்மையான ஜோதிடர்களும் இருக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடவும், அங்கே சில பூஜைகளை செய்யவும் உதவுவார்கள். சிலருக்கு, காசி, ராமேஸ்வரம் என்றும் போய்வர சொல்லுவார்கள். நதி, கடல் நீர் நிலைகளிலும் பூஜை செய்ய வழிகாட்டுவார்கள். இவை எல்லாமே, நமக்கு ஓரளவில் திருப்தி அளிக்கும். மன உறுதியை தந்து, பரிகாரமாக செயல்பட்டு, வழக்கமான நம் வேலைகளை பார்த்திட உதவும்.

இத்தகைய பரிகாரம், உண்மையிலேயே நம்முடைய நேரத்தையும், பணத்தையும் எடுத்துகொள்ளும் என்பதுதான் நிஜம். ஆனால் இது வியாபாரமாக செய்யும் ஏமாற்றுவேலை அல்ல. அந்த அளவில் திருப்தி பெற்றுக் கொள்ளலாம்.

எனினும், பக்தி கடந்த, பக்தியின் உண்மை நிலையாகிய, யோகத்தில், நாமே நமக்கான பரிகாரத்தை செய்துகொள்ள முடியும். நம்முடைய கர்ம வினைகளையும், அதன் பாவப்பதிவுகளையும் நாம் போக்கிக் கொள்ளமுடியும். இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தியானம், தவம் செய்து தீர்க்கலாம். வேறு ஏதேனும் பெரும் செலவு இதில் இல்லை. மேலும் இருக்கும் இடத்திலேயே செய்துகொள்ளலாம். வேதாத்திரிய மனவளக்கலையில் வழங்கப்படும், பஞ்ச பூத நவக்கிரக தவம், மிகச்சிறந்த தேர்வு ஆகும்.

இதை யார்வேண்டுமானாலும் இயற்றலாம் என்பது அதன் மற்றொரு சிறப்பு. தனிப்பட்ட தீட்சை அவசியமில்லை. வயது வித்தியாசமும் இல்லை. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறியலாம். கூடுதலாக, பஞ்ச பூத நவக்கிரக தவம் காணொளியும் உள்ளது.

இந்த தவம் எப்படி செய்வது? அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கண்கள் மூடி இறைவணக்கம் செய்வது போன்று பாவனை செய்யலாம். கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து, மடியில் வைத்துக்கொள்ளலாம். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும் வேண்டும். சுகாசனம் என்ற நிலை போதும், அதாவது சம்மணம் இட்டு உட்கார்வது போல.

ஒரு ஒலிபெருக்கி வழியாக, இந்த கானொளியை ஒலிக்கச்செய்து, அதன் வார்த்தைகளை கேட்டு, வேறெந்த கற்பனையும் எழுப்பிக் கொள்ளாமல், வெளியே என்ன நடக்கிறது? என்று சிந்திக்காமல் இருந்தால் போதுமானது. அரைமணி நேரத்திற்குள் தவம் முடிந்துவிடும். இப்படியாக தினமும் காலையும், மாலையும் செய்துவரலாம். இதுவே மிகப்பெரிய பரிகாரமாக வாழ்வில் செயல்படுவதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு கணக்கு ஏதும் இல்லை. தினமும் இதை செய்வதால், எண்ணற்ற நன்மைகளை பெற, உங்களை தகுதியாக்கிக் கொள்கிறீர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

உங்கள் ஜாதகம் வழியாக பரிகாரம் என்னவென்று தேடுகிறீர்களா? உண்மை விளக்கம் அறிக! Human Astrology Planets

பஞ்சபூத நவக்கிர தவம் நடத்தும் வேதாத்திரி மகரிஷி / Panchabhutha Navagraha Thavam Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

Whenever we start meditating and doing penance at home, we fall asleep within a few seconds. Sometimes I fall asleep like that. This is why I do not meditate or do penance. How to avoid this?


வீட்டில் எப்போது தியானம்,  தவம் செய்ய ஆரம்பித்தாலும் சில நொடிகளில் தூக்கம் வந்துவிடுகிறது. சில நேரம் தவ மையங்களிலும் அப்படி தூங்கிவிடுகிறேன். இதனாலேயே தியானமோ, தவமோ செய்வதில்லை. இதை தவிர்ப்பது எப்படி? விளக்கம் தருக.

உங்களுக்கு பொதுவான தூக்கம், பற்றாக்குறை இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு நிறைவாக எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். உடல் நிலை குறையோடு இருந்தால், இந்த நேரம் இன்னும் அதிகமாகலாம். ஆனாலும், சராசரியான திடமான உடல்நலம் கொண்ட மனிதனுக்கு, ஆறு மணி நேர தூக்கம் போதுமானது என்றுதான் ஆய்வுகள் சொல்லுகின்றன. அது நம்மிடையே இருக்கும் நண்பர்கள் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும்.

இந்த எட்டு அல்லது ஆறு மணி நேர தூக்கம் மாறும்பொழுதுதான், சிக்கல் உண்டாகிறது. தூக்கம் என்பது, உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் சக்தி ஊட்டம் தருகின்ற மாபெரும் சக்தியாகும். முக்கியமாக மனம், புத்துணர்வு இந்த தூக்கத்தால்தான் கிடைக்கிறது. மனதோடு இணைந்த மூளையும் அமைதி அடைகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன. உங்களுக்கு தூக்கம் பற்றாக்குறை என்றால், முதலில் கண்கள், மூளை, மனம், உடலுறுப்புக்கள் பிறகு உடல் என்று வரிசையாக பாதிப்படைகிறது. எனவே முதலில் உங்கள் தூக்கத்தை கவனியுங்கள்.

எந்தெந்த வகையில், தூக்கம் இழப்பாகிறது என்று ஆராயுங்கள். சிலர் இரவு முழுவதும் விழித்திருப்பதும், காலையில் தூங்குவதும் உண்டு. இது இயற்கைக்கு விரோதமான செயல்பாடாகும். மனிதன் இரவு செயல்படுவன் அல்ல. எனவே இரவு பத்து மணிக்கு தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழுவது, மிகச்சரியானதும், இயல்பானதும் ஆகும். என்றாலும், தியானம் என்ற தவம் செய்வதற்கு, அதிகாலை நான்கு முப்பதுக்கு விழிக்கலாம் நல்லதே. ஒருவேளை தூக்கம் வருமானால், பயிற்சிகளை முடித்துவிட்டு சிறிது நேரம் உறங்கலாம் தவறில்லை.

உங்கள் உடல், தானாகவே, இயல்பாகவே தூக்கத்தை கேட்கும். அந்த நேரத்தில் அக்கறை கொண்டு, உடனே தூங்கச் செல்வது சிறப்பு, நல்ல பழக்கமும் கூட. அதற்கு மாறாக, தூக்கத்தை கெடுத்துக்கொண்டு, சினிமாபார்ப்பதும், நிகழ்ச்சிகளை பார்ப்பதும், விழா கூட்டங்களில் இருப்பதும் தவறு. எனினும் எதிர்பாராத நிகழ்வுகளில், தூக்கம் தொலைப்பது வாழ்வில் இயல்புதான். அது எப்போதாவது என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எனக்கு பிடித்திருக்கிறது என்ற கருத்தில், இயற்கைக்கு விரோதமாக செயல்படக்கூடாது.

இதோ, இந்த காணொளிகள் வழியாக மேலும் பல உண்மைகளை அறிக.

தியானம் தவம் செய்யும் பொழுது தூக்கம் வருவது ஏன்? அதை தவிர்ப்பது எப்படி? உண்மை அறிவோம்.

தவம் செய்யும் பொழுது தூக்கம் வருகிறதா? ஏன்? வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் அறிவோமா?

வாழ்க வளமுடன்.

How to compose Pancha Bhuta Navagraha Penance? What is the method? Can you explain how it works?


வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் எப்படி இயற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? எப்படி பயன் தருகிறது என்ற விளக்கம் சொல்லுவீர்களா?

இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான, சிறு பெரு ஆலயங்களிலும், கோவிகளிலும், நவக்கிரகங்களுக்கு தனிப்பட்ட சந்நிதியும், ஒன்பது கிரங்கள் இணைந்து இருக்கும் வழிபாட்டு அமைப்பும் இருக்கும். ஆலயம் மற்றும் கோவிலில், முக்கியமான மூலவரை வணங்குவிட்டு, நவக்கிரகங்களை வழிபடுவது வழக்கம். இது இன்னமும் தொடருகின்ற பழக்கமும் ஆகும். எங்கோ இருக்கும் கிரகங்களை, இங்கே, இந்த இடத்தில் இருந்து வழிபடுவது தகுமா? என்றுதான் கேள்வி எழும். ஆனால், மனிதனின் மனதிற்கு எங்கே? ஏது எல்லை? பிரபஞ்சமும் நொடியும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும். பிரபஞ்சத்திற்கு அப்பாலும் மனம் செல்லும் அல்லவா?

அதுதான் இங்கே நிகழ்கிறது. கண்மூடி வணங்கும் நேரத்தில் மனம், அந்தந்த நவக்கிரங்களோடு தொடர்பு கொள்கிறது. அருள் கிடைக்கிறது. இதே தத்துவம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றிய, பஞ்ச பூத நவக்கிரக தவத்திலும் இருக்கிறது. நவக்கிரகங்களுக்கு முன்னதாக, பஞ்ச பூத தன்மைகளையும் இங்கே வணங்கிக் கொள்கிறோம். இத்தவம் செய்வதற்கு தனியே எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே, வீட்டிலேயே செய்துவரலாம். குருவின் வழிகாட்டுதல் போதுமானது. யோகத்தில் இணைவதும், குண்டலினி தீட்சையும் தேவையில்லை.

எல்லோரும், எவ்வயதிலும் செய்துவரலாம். எளிமையானது, பாதுகாப்பானது, மிகவும் நன்மையானது. ஜோதிட பரிகாரம் என்பதாக, எங்கெங்கோ கோவில், குளம், காடு, மலை, குளம், நதி, கடல் என்று தேடிப்போகாமல், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தே, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து அதற்கான நன்மையை பெறலாம். வாழ்விலும் மாற்றத்தை உணரலாம்.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்ற வேண்டுமானால், அதற்கென்று நேரம் ஒதுக்குக. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் விளக்கத்தை, காதால் கேட்டுக்கொண்டே, வார்த்தைகளில் கவனம் வைத்துக்கொண்டே, தவம் செய்யலாம். பொதுவாக அதிகாலை நேரம் முதலாக மாலை வரை செய்யலாம். இரவு 7, 8 மணிக்கு மேலாக செய்யவேண்டியதில்லை. இத்தவத்தை நீங்களாகவே வார்த்தைகளை சொல்லி செய்யலாம் எனினும், எல்லாவற்றையும் கவனம் வைத்துக்கொள்வது கடினம். எனவே யாராவது சொல்லக்கேட்டு, நீங்கள் தவம் செய்வது சிறப்பாகும். இதோ உங்களுக்காக, தவ செய்முறை பதிவு.

வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவக்கிரக தவம் - Panchabootha Navakraha Thavam by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்

-

Pancha Bhootha Navagraha Penance has never been heard of. Will all this new penance help? And they say that everyone can do this? Do you know that penance has its own rule? If everyone could do it, it would be just a ritual.


பஞ்ச பூத நவக்கிரக தவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்படியெல்லாம் புதிது புதிதான தவம் எல்லாம் உதவுமா? மேலும் இதை எல்லோரும் செய்யலாம் என்றும் சொல்லுகிறார்களே? தவம் என்றால் அதற்கென்று ஒரு விதி இருக்கிறது தெரியுமா? எல்லோரும் செய்யமுடியும் என்றால் அது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். சரிதானே? விளக்கம் தருக.

நீங்கள் வேதாத்திரியத்தில் இல்லை என்று கருத இடமிருக்கிறது. கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே, அல்லது உங்கள் வயதிற்கு மேலாகவே, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம், வேதாத்திரியத்தின் வழியாக அன்பர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தவமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அன்பர்களுக்கு உதவும் வகையில், முழுமையான பலன்களை பெறுவதற்கும், தன் மனதை பிரபஞ்ச அளவில் விரித்துப்பழகிடவும் இத்தவம் உதவுகிறது. இதன் எளிமை கருதியே, வேதாத்திரியத்தில் அல்லாத மற்றவர்களும் இத்தவத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ளோர் இந்த, பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றி பயன் பெறுகின்றனர். உங்களைப் போல கேள்வி கேட்போர் தவிர்த்து விடுகின்றனர்.

பொதுவாக, இறையை வணங்கு, உனக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து எல்லோருக்கும் பொருந்தும் தானே? இதற்கு ஏதேனும் தனிப்பட விதி இருக்கிறதா? இல்லையே. வணங்குபவரின் மனம் ஒன்றிப்போனால் போதுமானது.

நீங்கள் சொல்லும் விதி, குண்டலினி யோகம் என்ற தியானத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதில் எட்டுவிதமான படிநிலைகளும் உண்டு. அதில் தியானம் என்பது ஏழாவது நிலையாகும். ஆனால், பஞ்ச பூத நவக்கிரக தவம் மிக எளிமையானது. இதில் எந்தவித தடையோ, பிரச்சனையோ, குழப்பமோ ஏற்பட வழியும் இல்லை. குண்டலினி என்ற உயிராற்றல் எழுப்பும், தீட்சைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குருவின் வழிகாட்டுதல், இதை எப்படி செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி, பஞ்ச பூத நவக்கிரக தவம், வீட்டிலே இருந்தபடி செய்யவும் முடியும்.

நீங்கள் சொல்வதுபோல, சடங்கும் சாதாரணமானது அல்ல. விதிகளை உள்ளடக்கியதுதான் சடங்கு என்றும் மாறிவிடுகிறது. ஆனால், இது தவம். இதில் சடங்கு என்பது இல்லை. மனம் ஒன்றிச்செய்யும் தவம், சடங்குகளைவிட மேலானது என்பதை அறிவீர்களா? இப்போது உங்களுக்கான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கூடுதல் விபரம் அறிய, இந்த காணொளி உதவும்.

பஞ்சபூத நவக்கிரதவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றமுடியுமா? எப்படி? ஏன்? #Vethathiriya

வாழ்க வளமுடன்

Happiness is what we get in this worldly life. It is truly blissful to be in the union of twos. But, you are confusing people by calling it erotic. It's been like this for a long time. It is foolish to call a godman who has nothing as bliss. How many people have felt such bliss? It's all a lie. If you have other good work, go check it out. Don't cheat.


உலக வாழ்க்கையில் நமக்கு கிடைப்பதுதான் இன்பம். அதில் ஆண் பெண் கலப்பில் கிடைப்பதுதான் உண்மையிலேயே பேரின்பம். ஆனால், நீங்கள் அதை சிற்றின்பம் என்று சொல்லி, மக்களை குழப்புகிறீர்கள். நீண்டகாலமாக இப்படித்தான். ஒன்றுமே இல்லாத சாமியார்தனத்தை பேரின்பம் என்று சொல்லுவது முட்டாள்தனம். அப்படியான பேரின்பத்தை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எல்லாமே பொய். வேறு நல்ல வேலை இருந்தால் போய்பாருங்கள். ஏமாற்றாதீர்கள்.




இப்படியாக, மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் அன்பர்களும், நாம் தரும் தத்துவ விளக்களை காண்பது மகிழ்ச்சி. இப்போது அவருக்கு புரியாவிட்டாலும்கூட, ஏதேனும் ஒருநாள், அவருக்கான விளக்கம் நிச்சயமாக கிடைத்துவிடும். இந்த இயற்கை அதற்கான வாய்ப்பை வழங்கவும் செய்யும். அது அப்படித்தான்.

இதை அந்த அன்பர், படிப்பாரா? என்பது தெரியாது எனினும், இதைப்போன்ற கருத்து கொண்டு, வெளியே சொல்லாமல், இதேபோலவே பார்க்கும், வேறு சில அன்பர்களுக்கு உதவும் அல்லவா? அதனாலேயே இந்த பதிவை தருகிறேன்.

மனிதன் தனக்குள்ளாகவே முழுமையானவன். முழு வட்டம் கொண்டவன். குழந்தைகள் விளையாடும் ஜிக் ஜாக் போல, இன்னொன்றை இணைத்து முழுமையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லாதவன். அதனாலேயே அவன், தன்னளவில் சிந்திக்கவும், செயல்படவும், விளைவை பெறவும் முடியும். குடும்பமாக, சமூகமாக, உலகமாக இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகமாக இருப்பது இதனால்தான்.

இந்த உலகில், பொதுவாகவே இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை முறையாக அனுபவித்தாலே பேரின்பமும், அதைத்தொடர்ந்து அமைதியும் கிடைத்துவிடும். இதில் சிக்கல் என்னவென்றால், இன்பம் நீடிக்கவேண்டும். ஆனால் நமக்கு கிடைக்கிற இன்பமெல்லாம், சில நொடிகள்தானே நீடிக்கிறது? உண்மைதானே?

அப்படி குறைவுபட்ட இன்பத்தை சிற்றின்பம் என்று சித்தர்கள்தான் சொன்னார்கள். நிலையாக நீடிக்கும் இன்பத்தை பேரின்பம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அறியாதோ ஏற்க மறுக்கின்றனர். தன்னை அறிவதையும், பிறவிக்கடமை தீர்ப்பதையும், மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்வதையும் மறந்துவிட்டு, அதை சாமியார்தனம் என்று சொல்வது சரிதானா? 

இத்தகைய பேரின்பத்தை உணர்ந்து அறிந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும்தான், நமக்கும் அது கிடைக்கவேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார்கள். ஆனால், நாம் சிற்றின்பத்திலேயே மூழ்கி கிடக்கிறோம். இந்த விளக்கங்களோடு, இந்த இணைப்பில் உள்ள காணொளி பதிவையும் கண்டு உண்மை அறிக!

சிற்றின்பம், பேரின்பம் என்றால் என்ன? What is Pleasure and Bliss? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்

Anyone can do the practice of biomagnetic gazing? will it give you immense power? Someone saying that we can make our lives better and get what we want. Is that really the truth? Explain


வாழ்க வளமுடன் ஐயா, ஜீவகாந்த பெருக்கம் பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற் சொல்லப்படுகிறது. அதனால் அபரிதமான சக்தி கிடைக்கும். நம் வாழ்க்கையை மிகசிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்றும், நினைத்ததை பெறலாம் என்றும் சொல்லுகிறார்களே? அது உண்மைதானா? விளக்கம் தருக.



வேதாத்திரிய அன்பர்கள் கூட, இப்படியான கேள்வியை கேட்பது வியப்பாக இருக்கிறது. எனினும் நீங்கள் ஆரம்ப சாதகராக இருந்தால், அதற்குரிய விபரங்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவின் வழியாக உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

இணைய உலகில், தடுக்கிவிழுந்தால் தகவல்கள் என்று, எல்லோருமே அள்ளிப்போடுகின்றனர். அது உண்மையா?, பொய்யா? தனக்கு அனுபவம் உண்டா? என்றெல்லாம் சொல்லுவதில்லை. ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களின் பதில் என்ன? எங்கேயோ படித்தேன், யாரோ சொன்னார்கள், இப்படியெல்லாம் பெயர் தெரியாத சித்தர் சொன்னார் என்று மழுப்புவார்கள். அதை இவர்களே, செய்து பலன்கண்டார்களா? என்றும் தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்து, நீங்களும் குழப்பிக்கொள்ள வேண்டாமே? அதுவும், வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு, உண்மை விளக்கம் பெறாமல் இருக்கலாமா?

ஜீவகாந்தம் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி செய்ய, உடலை, மனதை தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று நேரம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முறையான வழிமுறைகளை, ஆசிரியரின் வழியாக கற்றுத்தேர வேண்டும். சும்மா, வெறுமனே எனோ தானோ என்று, ஜீவகாந்த பெருக்க பயிற்சியை செய்யமுடியாது. அப்படி செய்யவும் கூடாது. அதனால் ஏற்படும் தவறான விளைவுகள், உங்கள் உடலையும், மனதையும் பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிருக்கும் கூட பிரச்சனை தருவதாக அமைந்துவிடலாம். எனவே, கவனமாக இருங்கள்.

உங்களுக்கென்று, பயிற்சி வழங்கப்படும் வரை பொறுமையாக காத்திருங்கள். தெளிவாக, ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு பிறகு, பயிற்சி செய்யுங்கள். சரிதானே? இந்த காணொளி தரும் விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஜீவகாந்த பெருக்கம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா? செய்தால் என்ன பலன் கிடைக்கும்? உண்மை விளக்கம்
வாழ்க வளமுடன்
-

Everyone in the world worships a different God. But who or who is the true God? How to understand the truth? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா,  உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர். ஆனால், எது அல்லது யார் உண்மையான இறை? எப்படி உண்மை விளங்கிக் கொள்வது? விளக்கம் தருக.


    உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர் என்ற கருத்து சரிதான். பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் இருந்து வருகின்றனர். நிச்சயமாக அதை குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. சொன்னால் மதம் முன்னே வந்து நிற்கும். அப்போது உண்மை மறைந்துவிடும்.

கடவுள் என்பது ‘கடந்து உள்ளே’ என்ற வினைச்சொல்லின் விளக்கமாகும். ஒரு மனிதன் தனக்குள்ளே கடந்து உள்ளே கவனித்தால், தன்னை விட மதிப்பு வாய்ந்த, எல்லாவற்றிக்கும் மூலமான, தெய்வீகத்தை உணர்ந்து அறியலாம் என்பதுதான், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முன்னோர்களின் வாக்கும், வழிமுறைகளும் ஆகும்.

ஒரு பொருள் என்பதைக் கடந்து, எப்போதும் இருக்கும் பொருள், என்பதை மெய்ப்பொருள் என்று சொல்லுவது வழக்கு. ஏனென்றால், நாம் இந்த உலகில் காணும் எல்லாமே, பொருள் நிலையில் இருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் கூட, சிறு அணுவாக இருந்து சிசுவாக, குழந்தையாக, சிறுவராக, இளைஞராக, மனிதராக மாறிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா? இந்த வளர்ச்சியில், ஒருகட்டத்தில் இல்லாமலும் போகிறோம். ஆனால், இந்த உண்மை உணரா மயக்கத்தில், நாமும், மற்ற எல்லாமும், எப்போதும் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். 

ஆனால், மெய்ப்பொருள் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தன்மையை கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம், நிலை, முடிவு அறியாதும் இருக்கிறோம். அதனால்தான் அத்தன்மையை, இறை என்று உயர்ந்த மதிப்பு கொடுத்து வணங்குகிறோம். அந்த உண்மைதான், பல்வேறு மனிதர்களிடத்தில், சிக்கிவிட்டது.

சிவம் என்பது உலக உயிர்களுக்கு பொதுவான வார்த்தையாகும். இதில் எந்தவிட பாகுபாடும் வருவதற்கில்லை. சிவம் என்பதுதான் பின்னாளில் பல்வேறு மாற்றங்களை கொண்டது. அந்த மாற்றங்களின் வழியாக, உண்மை மறைந்து அதில் பொய்யும் கலந்துவிட்டது. சிவத்திற்கு பதிலாக வேறு என்னென்னமோ வந்து மக்களை குழப்பியும்விட்டது, பிரித்தும்விட்டது.

உலகில் உள்ள எல்லா மனிதர்களும், யோகத்தின் வழியாக, தன்னையறிந்தால், இந்த உண்மை விளங்கிவிடும். வேறெதையும் எங்கே? எங்கே? என்று தேடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை ஏதோ தடுக்கிறது.

மெய்பொருள் என்பது என்ன? என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள், இங்கே விளக்குகிறார். அறிந்து கொள்வோம்.
மெய்ப்பொருளே சிவம் என்பதை உணர்வோம்! Let's Perceive the Absolute Matter is Shivam!
வாழ்க வளமுடன்
-

I am afraid that whatever happens to others will happen to my family as well. For example, untimely death. This adds to my confusion. This was not easily overcome. I fear for my spouse and children and their future. What to do about it?


வாழ்க வளமுடன் ஐயா, அடுத்தவருக்கு நிகழும் எந்த ஒரு துன்பமும், என் குடும்பத்திலும் நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உதாரணமாக அகால மரணம். இதனால் என் மனம் குழப்பம் அதிகரிக்கிறது. இதை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. என் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை நினைத்தும், அவர்கள் எதிர்காலம் குறித்தும் பயம் வருகிறது. இதற்கு என்ன செய்வது? விளக்கம் தருக.


‘துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக்கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை.’

இப்படியாக வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சொல்லுவதைக் கொண்டு கவனிக்கும் பொழுது, ஒருவரின் உடல் பிரச்சனை, நோய், அகால மரணம் என்பதெல்லாம் இயற்கையின் நிகழ்வு. விபத்து என்பது கூட, நம்முடைய தவறுதானே தவிர, இயற்கை நிகழ்த்துவதில்லை.

ஏதேனும் ஒரு வகையில், நாம் எல்லோருமே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிவு நோக்கி நகர்பவர்கள்தாம். எனவே, வாழும் காலத்தில், நம்முடைய கடமைகளை நிறைவேற்றி, நல்வாழ்வு வாழ்ந்து, நம் வாரீசுகளை நிலைக்கசெய்யவேண்டும். அதன்படி அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள். அதுபோதும். எனவே, பிறருக்கு நடப்பதை எண்ணி, நம்மை வருத்திக்கொள்ள தேவையில்லை. உங்களுடைய இப்போதைய தேவை, எதிர்கால தேவை என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். நம் பெற்றோர் இல்லாமல் நாம் எப்படி மன உறுதி கொண்டோமோ, அதுபோல குழந்தைகளுக்கும் தனித்து செயல்பட பழக்குங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை கற்றுக் கொடுங்கள்.

எதிர்கால பயம் இருந்தால், இருக்கும் நாள் கெட்டுவிடும். செயல்படவும் முடியாது. அதை இறைவசம் விட்டுவிட்டு, அருட்காப்பு செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கும், கணவருக்கும், குழந்தைகளுக்கும் காப்பாக இருக்கும்.

துரிய தவம் அடிக்கடி செய்யுங்கள், மனம் தெளிவு பெறும். முக்கியமாக, இந்த கைபேசி, அதன்வழியான தகவல்கள் இவையெல்லாம், சிறுது நாளைக்கு மூட்டை கட்டுங்கள். அடுத்தவருடைய பிரச்சனை, துன்பம், உலகின் போக்கு, குழப்பம், அரசியல் அடிதடி, தடுமாற்றம், விரோதபோக்கு இதெல்லாம் இப்போது வேண்டாம். விலகிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, கிடைக்கும் நேரங்களில்,  நீங்கள், உங்கள் குடும்பம் என்று மகிழ என்னென்ன வழிகள் உண்டோ அதை கவனியுங்கள். அது போதும், மகிழ்ச்சி உங்கள் இல்லத்தை நிறைக்கும். வாழ்க வளமுடன். மேலும் சில உண்மைகள் அறிய இந்த காணொளி உதவும்.

துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ விருப்பமா? அதற்கான வழி என்ன?

வாழ்க வளமுடன்

-

I suffer in every way of my life. Why does nature give me so much suffering? What is God's role in this? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்வில் எல்லாவகையிலும் துன்பங்களை அனுபவிக்கிறேன். இத்தனை துன்பங்களை இயற்கை ஏன் எனக்கு தருகிறது? இதில் கடவுளின் பங்கு என்ன? விளக்கம் தருக.

கட உள் என்று நமக்குள்ளாக இருக்கிற தன்மையே கடவுளாக மாறிவிட்டது. இத்தன்மையை இறை என்றும் நாம் வணங்குகிறோம். நம்பிக்கையற்றவர்கள் இயற்கை என்று சொல்லுகிறார்கள். எப்படியே, இறை வழியாகவும், இயற்கை வழியாகவும் துன்பம் வருகிறது என்று நம்புகிறோம். ஆனால் உண்மை என்ன?

இறைத்தன்மையும்,  இயற்கையும் மூன்று துன்பங்களை மட்டுமேதான் தருகிறது. அது என்னென்ன என்பதை இந்த காணொளி வழியாக காணலாம். ஆனாலும், இயற்கையில் கூடுதலாக சில நிகழ்ச்சிகள் எழுவதுண்டு. அது இயற்கை நிகழ்வு. தன்னை சரி செய்துகொள்ளும் ஓர் நிலைபாடும், காலத்திற்கு கேற்றபடி தன்னில் மாற்றம் பெறுவதும் ஆகும். அந்த இயற்கையின் நிகழ்வுகளில், அதைச் சார்ந்து வாழும் மனிதன் சிக்கிக் கொள்கிறான். அதனால் மட்டுமே துன்பப்படுகிறான். அதுதான் உண்மையே தவிர, மனிதனுக்கு துன்பம் தரவேண்டும் என்று இயற்கை திட்டமிட்டு செயல்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுபோலவே, கடவுள் தன்மையும், இந்த மனிதனுக்கு பாதிப்பு, துன்பத்தை தரவேண்டும் என்று செயல்படுவதில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கங்களின் மொத்த விளக்கமும், இந்த காணொளியில் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அதற்கான பதிவு.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்

வாழ்க வளமுடன்

-

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?


தன்முனைப்பு என்பதுதான் நம்மை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்முனைப்பு கூடாது என்றுதானே சொல்லுகிறார்கள். நான் நன்றாக இருக்கவேண்டும், வளரவேண்டும், உயரவேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்? விளக்கம் தருக.

தமிழில் தன்முனைப்பு என்ற வார்த்தை, ஏதோ குறிப்பிட்ட காலங்களில் உட்புகுந்தது போல தோன்றுகிறது. சில வார்த்தைகளை, ஆங்கிலத்தில் இருந்து மொழி (முழி) பெயர்க்கும் பொழுது இப்படியான தமிழ் வார்த்தைகள் வந்துவிடுவதுண்டு. இந்த தன்முனைப்பை, motivation என்று கூட சொல்லுகிறார்கள். ஆனால் பொதுவான சமமான வார்த்தை Ego என்பதாகும்.

எனக்குத்தெரிந்தவரை, தன்முனைப்பு என்ற வார்த்தை, பழந்தமிழில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நல்ல தமிழறிஞர் யாரேனும் இருந்தால், என் சந்தேகம் தீர்க்கலாம். ஆனால், தன்முனைப்பு என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்களோ, அதற்குச் சமமான வார்த்தைகள் இப்படியாக இருக்கிறது. அவை, அகங்காரம்,. தான் என்ற எண்ணம்; செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். செருக்கு, இறுமாப்பு, முனைப்பு ஆகும்.

தான், தனது என்று வாழும் பொழுது, தான் என்ற அதிகார பற்றிலும், தனது என்ற பொருள்பற்றிலும் மனிதன் சிக்கிவிடுகிறான். இதைத்தான் தன்முனைப்பு என்று சொல்லுகிறார்கள்.  தான் என்றும், தனது என்றும் வாழ்வதில் சிக்கலில்லை, ஆனால் தான் மட்டுமே, தனது மட்டுமே என்று குறுகிக் கொள்வதுதான் சிக்கலாகிறது. அதனால்தான், தன்முனைப்பு கூடாது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த குறுகிய மனப்பான்மை அறியமுடிவதில்லை. அதனால்தான், மனிதனுக்கு மனிதனே துன்பம் செய்விக்கிறான். தன்னைப்போலவே இன்னொருவரும் மனிதரே என்று அவன் நினைப்பதில்லை.

மிருகங்களிலும், பறவைகளிலும் இந்த தொல்லை இல்லை. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை பழிவாங்குமா? கீழாக நினைக்குமா? அதன் வாழ்நிலையை சிதைக்குமா? இதைப்போல, ஒரு புலி இன்னொரு புலியை, ஒரு யானை இன்னொரு யானையை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவேளை இவைகளுக்கு ஐந்தறிவு என்பதால், இப்படி இருக்கின்றதோ? நமக்கெல்லாம் ஆறறிவு ஆகிற்றே?

தன்முனைப்பு பெரும்பாலும் சுயநலம் கொண்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு தேவையானது வேண்டும், நான் விரும்பியது வேண்டும். எனக்கானது வேண்டும் என்ற வகையில், தன்னளவில் வாழும்பொழுது, அவன் மனித தன்மையையே இழந்தவனாகிறான். இயற்கையின் இயல்பை கெடுக்கவும் செய்கிறான். ஆனால் அதை அவன் அறிவதும் இல்லை. எனவே நீங்கள் தன்முனைப்பு என்ற வார்த்தைக்கான உண்மையை அறிதல் அவசியமாகும்.

இந்த காணொளி கூடுதலாக சில விளக்கங்களை தரலாம்.

தன்முனைப்பு, சுயமரியாதை புரிந்துகொள்வது எப்படி? தவிர்க்க என்ன செய்யலாம்?

வாழ்க வளமுடன்


Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடு அவசியம் தானா? அது எப்படி இருக்கவேண்டும்? வேதாத்திரி மகரிஷி அதுகுறித்து சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.


இறைவழிபாடு என்பது மனிதனுக்கு அவசியம். அதை புறம்தள்ளுவதும், விட்டுவிலகுவதும், அவசியமில்லை என்று கருதுவதும் அவனுடைய அறியாமை. அது தன்முனைப்புக்கும் வழிவகுக்கும். அவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றும். பிறப்பின் நோக்கமும், கடமையையும் அறிந்துகொள்ளும் வழியில் இருந்து தள்ளிவைக்கும். ஆனால், பெரும்பாலோர் இதை ஏற்கவும் மாட்டார்கள். இறையும், இறைவழிபாடும் தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவர்கள் கண்ணோட்டம்.

இறைவழிபாடு என்பது ஆதி மனிதனின் உள்ளுணர்வு ஆகும். தன்னைவிடவும் வலிமையானது, தன்னிலும் பிரமாண்டமானது, தன்னையே காப்பது என்ற, தான் அறிந்த உண்மையின், வியப்பின், மரியாதையின் உச்சமே ‘இறைவழிபாடாக’ வாழ்வியலில் கலந்தது. மேலும் அந்த இறைவழிபாடுதான், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது,

நான் யார்? என்று ஆராய்வதின் வழியில் நமக்கு கிடைக்கும் விடை, தனக்கும், இந்த இறைக்கும் உள்ள தொடர்புதான். எனினும் அது எளிமையானதல்ல. குண்டலினி யோகம் வழியாக, மனதை அறிந்து, மனதின் மூலமாக உயிரை அறிந்து, உயிருக்குள் அறிவாக இருந்து இயங்கும், இறையை அறிந்து உணரவேண்டியது அவசியம். இதற்கு கால நீடிப்பு ஆகலாம், என்றாலும் மனிதன் வாழ்நாளுக்குள் அறியமுடியும். அதுவரை நமக்கு இறைவழிபாடு தேவை. அது மனதிற்கான ஒரு பயிற்சியும் கூட. குழந்தைகளுக்கு பக்தி வழியாகவும், பெரியவர்களுக்கு யோகம் வழியாகவும் இந்த இறைவழிபாடு பயன்பாட்டில் நம்மிடையே கலந்திருக்கிறது.

உங்கள் கேள்விக்கான பதிலை, எளியவகையில், வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இதோ இந்த காணொளி வழியாக அறியலாம்.

இறைவழிபாடு எப்படி இருக்கவேண்டும்? How should worship be performed? by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-

Why do we have to suffer so much in this life? There is no change. They say that God is omnipotent. Why doesn't He solve my misery right away?


வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டி உள்ளது. ஒரு மாற்றமும் இல்லையே. கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறார்கள். என் துன்பத்தை ஏன் உடனே தீர்க்காமல் இருக்கிறார்? என்னதான் தவம் செய்தாலும் தீரவில்லை. வெறுப்பாக எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. விளக்கம் தருக.



அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-